சங்கீத சக்தி – 16

இந்த சில ஆண்டுகளாக அபூர்வா பட்ட கஷ்டம் மிகமிக அதிகம். தனது ஊரிலிருந்து பிரீத்தி வேலை செய்யும் நகரமான ஓசூருக்குப் பயணப்பட்டவள், தோழியின் கம்பெனியிலேயே அவள் சிபாரிசில் வேலையைத் தொடங்க, சாதாரண வேலை தான். ஆனால், அதுவே அவளுக்கு அத்தனை சிரமமாக இருந்தது.

தோழியையும் அதிகம் சார்ந்திருக்கக் கஷ்டமாக இருந்தது. உண்மையைச் சொல்வதென்றால் பிரீத்தியின் வேலை நேரத்தில் இவளை அவ்வப்பொழுது கவனித்து இவளுக்கு உதவுவதென்பது அவளுக்கும் பெரும் இடையூறாகவே இருந்தது.

யாராக இருந்தாலும் ஒரு அளவிற்கு தானே உதவியும் செய்ய முடியும். அவரவருக்கு அவரவர் வாழ்க்கையும், அதற்குரிய பொறுப்பும் இருக்கிறதே!

பிரீத்திக்கு தொல்லை தர விருப்பமில்லாமல், இவளே வேலையிலிருந்து நின்று விட்டாள். சற்று எளிதாக இருக்கும் என நினைத்து இன்னொரு வேலையில், வேறு ஒரு நகரத்தில் சேர, அங்கும் அவளால் வேலையைச் சரிவரத் தொடர முடியவில்லை. உடல் உழைப்பைப் போடுவதற்கு கர்ப்பிணிப் பெண்ணான அவளால் முடியவில்லை. சரி அறிவு உழைப்பையாவது போடலாம் என்றால் அப்படிப் போடுவதற்கும் அவளின் அறிவு ஒத்துழைக்கவில்லை.

பிரீத்தி, கமலேஷ், ஹரிராம், உத்ரா என நான்கு பேரும் அவளுக்கு உதவத் தயாராகத் தான் இருந்தார்கள். ஆனால் யாரின் உதவியாலும் அவளால் ஒரு வேலையில் நிலைக்க முடியவில்லை. நான்கு பேரும் இவளை பாரமாக நினைக்கவில்லை என்றபோதும் அவரவருக்குக் கல்வி பயின்ற கடன், பெற்றோர்கள் கட்டிய வீட்டின் மீதிருந்த கடன், தனது வருங்காலத்திற்கான சேமிப்பு எனத் தனிப்பட்ட பொறுப்புகள் இருக்கும்போது, தன் பொறுப்பை அவர்கள் மீது சுமத்திவிட்டு அவளால் எப்படி உலாவ முடியும்?

அதுவும் எத்தனை நாட்களுக்குத் தான் நண்பர்கள் அவளைத் தாங்க முடியும்? அவளுடைய சுயம் தானே அவளைக் காக்கும்.

ஒரு வேலையிலும் நிலைக்க முடியாத வேதனையில் அவள் இருந்தபோது தான், ஹரிராமின் யோசனையின்படி அவனுக்குத் தெரிந்த இசைக்குழுவில் அவள் இணைந்தது. இந்த வேலையிலும் சிரமங்கள் இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால், அவளால் சமாளிக்குமளவு இருந்தது.

ஏதோ ஒருசில பாடல் வரிகள் மட்டும் நினைவில் வைத்திருந்தவள், இப்பொழுது பல பாடல்களை நினைவில் வைக்க வேண்டியதாய் இருந்தது. பாடல் வரிகளைத் தொடர்ந்து நினைவு வைக்க அவளால் இயலவில்லை தான். அதிலும் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பாடல்களை மாற்றி கொண்டேயிருக்க வேண்டும் என்பதால் இவள் பல பாடல்களை மனனம் செய்ய வேண்டியதாய் வேறு இருந்தது.

அது அவளால் முடியாமல் சில நேரங்களில் பாடல் வரிகளைப் பார்த்துப் பாடலானாள். ஆரம்பத்தில் குழு நிர்வாகி ஜெயந்த் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், இவள் இதையே தொடர்ந்து செய்யவும், அவனிடத்தில் சற்று இளக்காரம் வந்திருந்தது. இதெல்லாம் உனக்கு முடியாது என்பது போலப் பார்வையில், செய்கையில் அலட்சியம் காண்பிக்கத் தொடங்கினான். மதிப்பில்லாத வேலையிடமாக இருந்தும் அவனின் அலட்சியத்தைக் கடந்து போனாள். இந்த வேலையை விட்டால் அவளுக்கு வாழ்வாதாரத்திற்கு வேறு வழி தெரியவில்லை. ஆக, பொறுத்துப் போனாள். கூடவே இயன்றவரைப் பாடல் வரிகளை நினைவில் வைக்கவும் தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டாள்.

அப்படி இதையே பிடித்துத் தொங்குமளவும் இந்த வேலை ஒன்றும் அவளுக்கு வாரியும் வழங்கிடவில்லை. ஆர்கெஸ்ட்ரா நடக்கும்போது சொற்பமாய் பணம் கிடைக்கும். அதுவும் திருமண சீசன் இல்லாதபோது கொஞ்சம் மந்தமாகத் தான் இருக்கும்.

ஒன்றுமே இல்லாததற்கு இது பரவாயில்லை என்னும் நிலை அவளுக்கு. அதிகம் அலட்டிக்கொள்ளவும் தேவையில்லையே!

தனியாக வந்தது முதல் அபூர்வா சிக்கனத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருந்தாள். சிறு பணத்தைச் செலவழிக்கவும் அத்தனை யோசனை. முடிந்தவரைப் பணத்தை சேமித்து வைத்துக் கொண்டிருந்தாள். பிரசவம், அதன் பிறகு ஓய்விற்கான பணம் என அவளுக்குத் தேவைகள் நிறைய நிறைய இருந்தது.

உத்ராவின் அம்மா தான் பிரசவத்தின் போது கொஞ்சம் உதவினார்கள். தனியாக இருக்கிறாள் என்ற அனுதாபம். ஆக, இரண்டு மாதங்கள் இவளை தங்கள் வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டனர். உண்மையில் அதுவே இவளுக்குப் பெரிய உதவி! அவர்கள் இல்லாவிட்டால் அவளின் நிலைமை நிச்சயம் பரிதாபகரமாகத்தான் இருந்திருக்கும்.

இதோ யாழிசை பிறந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலே ஆகியிருந்தது. அதற்குள் இவளிடம் இருந்த தங்க நகைகள் பலவற்றை விற்றாயிற்று! மகள் யாழிசை பிறவி குறைபாடுகளுடன் தான் பிறந்தாள். கால் சற்று வளைந்தும், உதடு ஒட்டாமல் மேலே சிறு வெட்டுடனும் (cleft lip) தான் பிறந்தாள்.

இந்த குறைகளை ஸ்கேன் செய்யும்போதே கண்டறிந்து விட்டதால், மனதளவில் பிள்ளையின் குறைக்கு தன்னை தயார்ப் படுத்திக் கொண்டாள். என்ன அவள் வரையறுத்து வைத்திருந்த செலவுகளில் பிள்ளையின் மருத்துவச் செலவு திடீரென உதயமாகி அவளைத் திணறடித்து விட, பணத்தின் இன்றியமையாமையை அதன் தேவையை இத்தனை வலிகளோடு அறிந்துகொள்ள நேரும் என அவள் நினைக்கவில்லை. பெற்றோர்கள் தன்னை கைக்குள்ளேயே அடைகாத்து வைத்திருக்காமல் இன்னமும் கொஞ்சம் தைரியம் தந்து உலவ விட்டிருக்கலாம் என இப்பொழுது தோன்றிற்று.

பிள்ளைக்குக் குறை இருக்கிறதே என்று வருந்துவதற்குக் கூட நேரமில்லாமல், பிள்ளையின் குறையை நிவர்த்தி செய்யப் பணம் வேண்டுமே என ஓய்வின்றி பணத்தின் பின்னே ஓடும் நிலையில் தான் அவள் இருந்தாள். இசைக்குழுவில் வேலை பார்த்தது போக, எம்பிராய்டரி போடும் வேலையும் வீட்டிலிருந்தே செய்து வந்தாள்.

அவளிடம் ஓரளவு பணம் சேர்ந்ததும், யாழிசையின் கால் குறைபாட்டை மாவு கட்டு சிகிச்சையுடன் சமீபத்தில் தான் சரி பார்த்திருந்தாள். அடுத்து மகளின் உதட்டையும் சிகிச்சையால் சரி செய்து விட்டால் போதும். மகள் வேறு உதட்டைச் சரி செய்யாமல் பள்ளிக்குப் போக மாட்டேன் என ஒரே பிடிவாதம்! ஆனால், ஒன்றிரண்டு லட்சங்களை விழுங்கக்கூடிய சிகிச்சைக்கு அவள் எங்கே போவாள்?

இப்படி அவள் வாழ்க்கை கஷ்ட ஜீவனத்தில் ஓடிக்கொண்டிருக்க, ஒருமுறை யாழிசையின் மழலை குரலில் ஒலித்த பாடலை கேட்ட ஜெயந்த், அவளைப் பாட வைக்கலாம் என அபூர்வாவிடம் சொல்லி சின்னவளையும் தங்கள் குழுவில் இணைத்துக் கொண்டான். முதலாளி கேட்கும்போது அவளால் மறுக்கவா முடியும்? அதோடு யாழிசையும் இதை சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்ள அப்படித் தொடங்கியது தான் இளையவளின் கச்சேரி!

ஆனால் இதுபோன்ற குறுகிய மனமுடையவர்களின் பேச்சுக்களைக் கேட்டபோது அவளின் நெஞ்சம் புண்ணானது. வலியும் வேதனையும் புதிதா… கடந்து போவோம் எனச் சிரமப்பட்டு தன்னை அதிலிருந்து மீட்கப் போராடினாள்.

அடுத்த ஒன்றிரண்டு பாடல்கள் பாடியபிறகு, தன்போல அபூர்வாவின் கவனம் நிகழ்ச்சியில் பதிந்துவிட அவளால் மெல்ல மீள முடிந்தது. ஆனால், அபூர்வாவை எதிர்பாராதவிதமாகப் பார்த்த சக்திவரதனின் செவிகளிலும் இந்த சொற்கள் விழுந்திருக்க, அவனால் இதனைத் தாங்கவே முடியவில்லை. மனதில் பெரும் பாரம் அவனை அழுத்தியது.

அதுவும் மனைவி, மகளின் தோற்றம்… உணவிற்கே வழியில்லாதவர்கள் போல ஒடிந்து, ஓய்ந்த தோற்றத்தைப் பார்த்தபிறகு அவன் அடைந்த வேதனை சொல்லில் அடங்காதது. மகளை முதல் முறையில் பார்த்த உணர்வு குவியலில் சற்று நெருங்கி நின்றும் கவனித்திருக்க, அவளின் குறையும் கண்ணில் பட்டுவிட அவன் உயிரே சிதறியிருந்தது.

இப்படி இவர்களை வறுமையில் வாட விட்டா நாம் ஒதுங்கி இருந்தோம். எங்கோ நிம்மதியாக இருப்பார்கள் என்றுதானே எண்ணி இருந்தேன். இவர்களை இந்த நிலையில் பார்ப்பதற்கா நான் உயிரோடு இருக்கிறேன். தான் விதைத்ததைப் பல மடங்கு அறுவடை செய்து கொண்டிருந்தவனின் இப்போதைய வேதனை இமயம் தொடும் உச்சம்.

அன்றைய இசைக்கச்சேரி முடிந்திருந்தது. அனைவருக்கும் இன்னும் இரண்டு நாட்களில் சம்பள பட்டுவாடா செய்து விடுவதாக ஜெயந்த் சொல்லி விட்டான். அபூர்வா மட்டும் அவனிடம் பேசத் தேங்கினாள்.

“என்ன?” என்றான் அவளிடம். அவனது மரியாதையற்ற தோரணை சக்தியை முகம் சுளிக்க வைத்தது.

“கொஞ்சம் கடனா பணம் தேவைப்படுது” என்றாள் அபூர்வா தயங்கியவாறு. கடன் வாங்கி மகளின் சிகிச்சையை முடித்துவிட்டால் அவள் பள்ளி செல்ல இலகுவாக இருக்கும் என நினைத்து, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்த இடத்திலேயே கேட்போம் என பெரும் மனப்போராட்டத்தின் பிறகு கேட்டு நின்றாள்.

அவளின் நிலையைப் பரிகாசமாகப் பார்த்து, “ஆமாம் நம்ம தொண்டை தண்ணி வத்த வத்த பாடி கிழிக்கிறோம். சம்பளம் போக கடன் வேற கேட்க. அதை எப்ப நீங்க அடைப்பீங்கன்னு நான் தேவுடு காக்கிறதாம்” என அலட்சியமாகக் கேட்டான்.

கையேந்துவதே கொடுமை. முயன்று ஏந்தி நின்றால் கிடைக்கும் நிராகரிப்பு பெரும் அவமானத்தை தந்தது. ஒருவார்த்தை பதில் சொல்ல முடியவில்லை. முயன்று எச்சில் கூட்டி விழுங்கிவிட்டு, “ஆமாம் நீங்க யோசிக்கிறதும் சரிதான்” என்று சொல்லியவள், மகளோடு சோர்ந்து போய் நடந்தாள்.

மகளை இதற்கும் பால்வாடியில் தான் விட வேண்டும். அப்படி விட்டால் வீட்டிலிருந்தபடியே எம்பிராய்டரி போடும் வேலையையும் பார்த்துக் கொண்டிருப்பவளுக்கு மகளைக் குறித்து கவலை இல்லாமல் சற்று நேரம் வேலை ஓடும்.

ஆனால், அங்கு இருக்கும் சிறு பிள்ளைகளின் ஒதுக்கத்தால், யாழிசை பால்வாடி செல்லவே அத்தனை அடம். சரி மீதம் இருக்கும் சிறு சிறு தங்கங்களையும் விற்றுவிட்டு போதாமைக்குக் கொஞ்சம் கடன் வாங்கி சிகிச்சை செய்வோம் என யோசித்துத் தான் ஜெயந்த்திடம் கடன் கேட்டாள். அதற்கு அவனின் எதிர்வினை மிகுந்த வருத்தத்தைத் தந்தது.

இப்படி என்ன செய்வதென்று தெரியாமல் சில தினங்கள் கடந்த நிலையில் தான், யாழிசைக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவரிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

சுபாஷ் மருத்துவர், யாழிசையின் சிகிச்சைக்கு உதவ ஒருவர் முன்வந்திருப்பதாக அபூர்வாவிடம் தெரிவித்தார்.

அதிர்வுடன், “என்ன சொல்லறீங்க டாக்டர்? உதவி தேவைன்னு நான் எங்கேயும் கேட்கவே இல்லை” மகளுக்குச் சரியாகிவிடும் என்ற நப்பாசை ஒருபுறமும், ஒருவரிடம் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டோமே இது சரியா என்ற தன்மானம் மறுபுறமும் அவளை சமவிகிதத்தில் சூறையாட என்ன முடிவெடுக்க என்று தெரியாத நிலையில் குழப்பமாக கேட்டாள்.

“இல்லை… அவங்க இந்த மாதிரி உதவி தேவைப்படறவங்க இருந்தா சொல்லுங்கன்னு என்கிட்ட பர்சனலா ரிக்வஸ்ட் பண்ணாங்க. எனக்கு யாழிசையோட சேர்ந்து இன்னும் ரெண்டு குழந்தைகள் ஞாபகம் வரவும் அவர்கிட்ட சொன்னேன். அவர் முழு செலவையும் அவரே ஏத்துக்கிறதா சொன்னார். யாழிசை இப்பவே வீட்டை விட்டு வெளிய போக தயங்கறா… அவ விளையாடக் கூட போக மாட்டீங்கறா. நீங்களும் நிறைய கஷ்டப்படறீங்க. கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க” என முடிவெடுக்கும் உரிமையை அவளிடமே நகர்த்திவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

அன்று இரவெல்லாம் அபூர்வா சரியாக உறங்கவில்லை. இதைப்பற்றியே தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள். என்ன முடிவெடுக்க என அவளுக்குத் தெரியவில்லை. இறுதியில் தன்மானத்தைக் காட்டிலும் மகளின் நலனே பெரிதாகத் தோன்ற, சுபாஷ் மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சம்மதம் எனத் தெரிவித்திருந்தாள்.