சங்கீத சக்தி – 15

“வளர்மதியோடு மருமகன் தானே நீங்க?” பொது இடத்தில் எதிர்பாராத சந்திப்பில் மருத்துவர் வஞ்சுளா சக்திவரதனை அடையாளம் கண்டு பேச, பேச்சு தடைப்பட்ட உணர்வு அவனுக்கு.

“ஆ… ஆமாம்… டாக்டர்” என்றான் திணறலாக.

“உங்க மனைவிக்கு இப்ப ஆறு மாசம் கிட்ட ஆகியிருக்கும் இல்லை… எப்படி இருக்காங்க? நான் அவ்வளவு தூரம் சொல்லி விட்டும் மூணாம் மாசம் எடுக்க வேண்டிய என்.டி., ஸ்கேனும் எடுக்க வரலை. அஞ்சாம் மாசம் எடுக்க வேண்டிய முக்கியமான அனாமலி ஸ்கேனும் எடுக்க வரலை. குழந்தை விஷயத்துல இத்தனை அலட்சியம் எதுக்கு? குழந்தைக்கு எதுவும் பாதிப்பு வந்தா என்ன செய்வீங்க? ஒருவேளை வேற ஹாஸ்பிட்டல்ல எதுவும் காட்டிட்டு இருக்கீங்களா? உள்ளூரில் தானே இருக்கீங்க?” என அவர் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக,

மூச்சடைத்தது போன்ற உணர்வில், எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு, “அபூர்வா வேற ஊரில் இருக்கா மேடம்” என்றான் சின்ன குரலில்.

டிடெக்டிவ் மூலம் கிடைத்த தகவலின்படி அபூர்வா இதோடு இரண்டு, மூன்று ஊர் மாற்றியிருந்தாள். அவள் அடிக்கடி ஊர் மாற்றுவதன் பிரதான நோக்கம் என்னவாக இருக்கும் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. தப்பித்தவறிக்கூடத் தான் அவளை தேடிப் போய்விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பவளின் முன் சென்று நின்று அவளைக் கஷ்டப்படுத்துவதா என்ற எண்ணத்தில் வேறு வழியில்லாமல் ஒதுங்கி இருக்கிறான்.

கருவுற்றிருக்கும் இந்த நேரத்தில், இத்தனை வெறுப்பை ஏற்படுத்தி விட்டாயிற்று! இனி இந்த சூழலில் சென்று மேலும் அவளை துன்பப்படுத்துவதா என்று ஒரு மனம் யோசித்தாலும், இன்னொரு மனம் அவளை சமாதானம் செய்து அழைத்து வந்துவிடு எனத் தவித்துக் கொண்டிருந்தது.

எங்கே தான் அவள் முன் சென்று அவளுக்கு வெறுப்பும் கோபமும் அதிகமாகி இதுபோன்ற சூழலில் அது அவளின் உடல்நிலையைப் பாதித்து விடுமோ என்னும் அச்சம் அவனை கட்டுப்படுத்த, வேறு வழியின்றி விலகி, ஒதுங்கி இருக்கிறான். ஆனால், எதுவும் அறியாத மருத்துவரின் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்லிச் சமாளிக்க முடியும் சன்னமான பெருமூச்சொன்றுடன் தவிப்புடன் நின்றிருந்தான்.

“ஓ… அதுதானா? அப்ப சரி. ஆமாம் குழந்தை ஆரோக்கியமா இருக்கு தானே? ஏன்னா சொந்தத்துல கல்யாணம் செய்துக்கும் போது இது மாதிரி விஷயத்தில் எல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும்” என்று அந்த மருத்துவர் சொல்ல,

கசப்பான ஒரு முறுவல் எழ அதை வெளிக்காட்டாது, “இரத்த சொந்தம் இல்லை டாக்டர். எங்க அத்தை அவங்க அப்பாவோட முதல் மனைவி தான்!” என்று சொன்னவனைக் கருணையோடு நோக்கினார் மருத்துவர் வஞ்சுளா.

சிறு சிரிப்போடு இடவலமாக தலையசைத்து, “உங்க மனைவி உங்ககிட்ட எல்லாமே சொல்லி இருப்பாங்கன்னு நினைச்சேன். இல்லை போலவே…” என்றவர் அந்த பேச்சை அந்தரத்தில் விட்டுவிட்டு நகரப்பார்க்க,

புரியாத பாவனையில், உள்ளத்திற்குள் எதுவோ பெரும் பாரமாக அடைபட்ட உணர்வில் தவித்துப் போனான் சக்தி. அபூர்வா எதைச் சொல்லாமல் விட்டாளாம் என்ற தவிப்பும் தடுமாற்றமுமாக, “டாக்டர் பிளீஸ் என்னன்னு சொல்லுங்க. அவ ஹெல்த் விஷயம்ன்னா கண்டிப்பா எனக்கு தெரிஞ்சே ஆகணும். அவ அவ்வளவு சீக்கிரம் இதெல்லாம் சொல்லமாட்டா… பிளீஸ் டாக்டர்… எங்க குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை தானே?” என்று கேட்டவனின் கண்களின் கலக்கம் அந்த மருத்துவரைச் சொல்லத் தூண்டியது போலும்.

ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன், “இதெல்லாம் உங்க மனைவி தான் உங்ககிட்ட சொல்லியிருக்கணும். சரி உங்க குழந்தைக்காக நானே சொல்லறேன். முதல்ல சொல்லுங்க என்.டி ஸ்கேன், அனாமலி ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்கு?” என மீண்டும் வினவ, அவனுக்குப் பதில் தெரிந்தால் தானே சொல்வதற்கு.

அவன் முகத்தை கவனித்தவர், அபூர்வா தன் உடல்நிலை குறித்து எதுவும் இவனிடம் சொல்லவில்லை என புரிந்து கொண்டார். என்ன இந்த பெண் இப்படி இருக்கிறாள் என அவள்மீது கோபம் கூட அவருக்கு வந்தது. உண்மை என்ன என்று அறியாதவர் ஆயிற்றே! கூடவே அபூர்வா வெளியூரில் தங்கியிருப்பதும் தன் உடல்நிலை குறித்து கணவனுக்கு தெரிவிக்காமல் இருப்பதற்காக இருக்கும் என்று தானாக எதையோ ஊகித்தவரோ இவனிடம் எல்லாம் சொல்லி விடலாம் இந்த நேரத்தில் கணவன் உடன் இருப்பதும் அவசியம் என எண்ணி. “அபூர்வாவை கொஞ்சம் கவனிச்சு பார்த்துக்கங்க… நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அவ உங்களுக்கு ரத்த சொந்தம் தான். நான் என்ன சொல்ல வரேன்னா அபூர்வா வளர்மதியோட பொண்ணு இல்லை. உங்க சொந்த அத்தை மகாலட்சுமியோட பொண்ணு” என்று அவர் சொன்னதும், அவரின் வார்த்தைகள் அவனுள் மின்னலை போலத் தாக்கியதில், நிலைகுலைந்து போனான்.

‘என்ன சொல்கிறார் இவர்?’ சுற்றி உள்ள அனைத்தும் இருட்டடிப்பு செய்தது போலக் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது சக்திக்கு.

வஞ்சுளா தொடர்ந்து, “அதுவும் உங்க அத்தைக்கு ஐ.கியூ ரொம்ப கம்மின்னு கேள்வி பட்டிருக்கேன். ஏற்கனவே குறைகள் இருக்கும் வம்சாவளின்னா ரத்த சொந்தத்துல கல்யாணம்ன்னு வரும்போது, குழந்தை விஷயத்துல இன்னும் கொஞ்சம் அதிகமா கவனம் எடுத்துக்கணும்” என்று சொன்னதும் அவனது முகம் வெளிறி இருந்தது.

உண்மையை முதல்முறை அறியும் அதிர்ச்சி மற்றும் குழப்பம் என நினைத்தவர், ஆரம்பத்திலிருந்து சொன்னால் தான் புரியும் என யோசித்து, “உங்க அத்தைக்கு முதல் குழந்தை பிறந்தப்ப டிப்ரெஷன் அதிகமாகியிருக்கு. அபூர்வா அவங்க வயித்துல வந்தப்ப, நிலைமை இன்னும் மோசம் ஆகவும் தான் உங்க மாமா ஆயுர்வேத மருத்துவம் பார்க்க கூட்டிட்டு போயிருக்காங்க. கடைசி ஸ்டேஜ்ஜில் வந்ததாலயும், அவங்க கர்ப்பமா இருந்ததாலயும் மகாலட்சுமிக்கு அங்கே தந்த எந்த டிரீட்மெண்ட்டும் பலன் இல்லாம குழந்தையை பெத்து கொடுத்துட்டு இறந்துட்டாங்க.

வளர்மதி குழந்தை இல்லாத குறைக்காக அவங்க அம்மா, அப்பாவோட அங்கே ட்ரீட்மெண்ட் போனவங்க தான் உங்க அத்தைக்கு உதவியா இருந்திருக்காங்க. இதெல்லாம் நான் இவ்வளவு விளக்கமா சொல்லக் காரணம், உங்க அத்தை மகாலட்சுமி பிறந்ததே உங்க பாட்டிக்கு பிடிக்கலையாம். பெண் குழந்தை மேல வெறுப்போட இருந்திருக்காங்க. அதுவும் புத்தி ரொம்ப மந்தமா பிறக்கவும் ஒண்ணுக்கும் உதவாத குழந்தைன்னு ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க போல…

கொஞ்சம் வசதி குறைவா இருந்த உங்க மாமாவுக்கு கட்டி கொடுத்திருக்காங்க. உங்க மாமா நல்லா கவனிச்சதால உங்க அத்தை நிலைமை பரவாயில்லை. ஆனா ஒரு சூழலில் புத்தி பேதலிக்கும் அளவு போகவும், ஊரார் பேச்சுக்கும், அவங்க அம்மா, அண்ணா பேச்சுக்கும் பயந்து தான் யாருக்கும் தெரியாம குணப்படுத்திடணும்ன்னு கருணாகரன் வெளியூர் கூட்டிட்டு போயிருக்காரு.

அவர் நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலை பாவம்! எங்கே அவர் மனைவிக்கு அவங்க புத்தி சரியில்லாதப்ப மகள் பிறந்த விஷயம் ஊரில் தெரிஞ்சு, மனைவி அனுபவிச்ச வேதனையை மகளும் அனுபவிக்க வேண்டி வருமோன்னு பயந்து தான், அங்கே அவங்களுக்கு உதவி செஞ்ச வளர்மதி கிட்ட மகளை ஒப்படைச்சிட்டு இங்கே வந்திருக்காரு.

ஒரு கட்டத்தில் மனைவி மரணத்தோட முழு விவரமும் சொல்லாம, எல்லாத்தையும் சரிக்கட்டி மகளை அழைச்சிட்டு வர போனவர், பெத்தவங்களை விபத்துல பரிகொடுத்துட்டு, கணவனால குழந்தை இல்லைன்னு ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த வளர்மதிகிட்ட இருக்க குழந்தையை பிரிச்சு கொண்டுவர மனசு இல்லாம, அவரை கோயில்ல வெச்சு கல்யாணம் பண்ணி தன்னோட மனைவியா இங்கே அழைச்சிட்டு வந்திருக்காரு.

இதெல்லாம் எனக்கு தெரிஞ்சது வளர்மதியோட கருப்பை தொடர்பான சிகிச்சை அப்பதான். அவங்களை சோதிச்சப்பவே புரிஞ்சுக்கிட்டேன் அவங்க இதுவரைக்கும் தாயாகவே இல்லைன்னு. அதுதான் அன்னைக்கு அபூர்வாவை மகள்ன்னு சொல்லி அவங்க அறிமுகப்படுத்தவும் புரியாம குழம்பினேன்.

நான் இந்த விஷயத்தை அவங்ககிட்ட விசாரிக்க போயி, அவங்க எனக்கு இந்த விபரமெல்லாம் தயங்கி தயங்கி சொன்னாங்க. நான் உங்ககிட்ட சொல்லக் காரணம், உங்க மனைவி உங்க அத்தையளவு இல்லைன்னாலும், நான் கவனிச்சா வரை அவளுக்கும் புத்தி மந்தம் இருக்கு தான். நிறைய அழுத்தமும், அதிர்ச்சியும் தரது அவங்க மனநிலைக்கு நல்லது இல்லை. ஒருவேளை அவங்களுக்கு முடியாட்டியும் நீங்க அவங்களை நல்லா பாத்துக்கங்க. உங்க அத்தை மக… உங்க மனைவி… உங்க குழந்தையோட அம்மா… நான் சொல்லத் தேவை இல்லை தான்… இருந்தும் என் கடமைக்கு நான் சொலிடறேன்.

எந்த சூழ்நிலையிலும் விட்டு தந்துடாதீங்க. நல்லா பார்த்துக்கங்க” என மிக நீளமாகப் பேசி முடித்தவர் அனைத்தையும் அவனுக்கு தெரியப்படுத்திவிட்ட திருப்தியில் அவனிடமிருந்து விடைபெற்றார்.

தொடர் இடிகளால் சக்திவரதன் நிலைகுலைந்து போனான். அவன் உயிர் மொத்தமும் சிதறிய உணர்வு… எவ்வளவு பெரிய பிழை செய்துவிட்டான். அவனுக்கு மன்னிப்பு என்பது இருக்கிறதா? இதையெல்லாம் தெரிந்திருந்தும் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் சென்ற மனைவியின் மனநிலையை அவனால் துல்லியமாகக் கணிக்க முடிந்தது.

மருத்துவர் அன்று அபூர்வாவை அதிர்வாய் பார்த்தது, வளர்மதியின் சாயல் அபூர்வாவிடம் இல்லாதிருந்தது, அபூர்வாவின் மந்த புத்தி, வளர்மதியை மணந்து கொண்டு கருணாகரன் ஊருக்கு வந்தபோதே அவர்கள் கையில் குழந்தை இருக்கக் காரணம் எல்லாம் எல்லாம் மொத்தமாக இப்பொழுது விளங்கியது. ஆனால், அதற்குப் பயன் தான் என்ன? நெஞ்சம் விம்மித் தவித்தது. முள் கிரீடம் சுமந்தது போல வலி உயிரை எடுத்தது.

எத்தனை கொடுமை செய்திருந்தால், நீ வேண்டாம் என்று அபூர்வா சென்றிருப்பாள். அதுவும் உண்மை அனைத்தும் அறிந்த பிறகும் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் செல்வதென்றால், தான் எத்தனை கீழ்த்தரமாக அவளிடம் நடந்து கொண்டிருக்க வேண்டும்? தன் முகத்தில் கூட விழிக்கப் பிரியப்படாமல் கண்காணாத இடம் சென்று விட்டவளைத் தேடிச் செல்லும் தகுதி கூட தனக்கில்லை என நினைத்து மறுகினான்.

மனைவியை தேடிச் செல்லும் தைரியமும் இல்லாமல், தான் செய்த பிழைகளை தன்னாலேயே மன்னிக்கவும் முடியாமல், சக்திவரதன் தடுமாறித் தவித்துக் கடந்த ஒவ்வொரு தினமும் அவனுக்கு நரகம் தான்!

ஒரு கட்டத்திற்கும் மேல் முடியாமல், மனைவியைத் தேடியும் அலைந்தான். அவனுக்குக் கிடைத்த தகவல்களின்படி சென்றால், அவளைக் காண முடியவில்லை. அவள் அங்கில்லை என்ற தகவல் தான் கிடைத்ததேயன்றி அவள் எங்கிருக்கிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை. அவள் சென்றாள் என்று கூறிய இடங்களுக்கெல்லாம் சென்று தேடிப்பார்த்த பிறகும் தோல்வி மட்டுமே கிடைக்க, வேறு வழியின்றி அவளின் தோழி பிரீத்தியை அணுகினான்.

அவளோ எந்த தகவலையும் சொல்ல மறுத்ததோடு, “அவளை இனியாவது நிம்மதியா விடுங்க… எலும்புக்கூடா வந்தவளோட உயிரையும் எடுத்தபிறகு தான் உங்களுக்குத் திருப்தி ஆகுமா?” என சீற, குற்றவுணர்வோடு திரும்பியிருந்தவனின் வாழ்வு அதன்பிறகு பாலைவனம் தான்.

முன்பெல்லாம் சுற்று வட்டார ஊரில் மட்டுமே காண்ட்ராக்ட் எடுத்துக் கொண்டிருந்தவன், இப்பொழுதெல்லாம் எங்கு என்றாலும் செல்கிறான் மனைவியை மீண்டும் ஒருமுறை கண்ணால் பார்த்து விடமாட்டோமா என்று அவனின் தேடல் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழிந்திருந்தது. நாகப்பட்டினத்திலிருக்கும் திருமண மண்டபம் ஒன்றில், திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.

வரவேற்பைச் சிறப்பிக்க ஏற்பாடாகியிருந்த ஆர்க்கெஸ்ட்ராவில் மூன்று வயதே நிரம்பிய சின்னஞ்சிறு பிஞ்சொன்று இனிய குரலால் பாடல் பாடி அசத்திக் கொண்டிருந்தது. குழந்தையின் தோற்றம் வெகுவாக ஈர்க்கும்படி எல்லாம் இல்லை. மெலிந்த தேகம். ஒட்டிப்போன கன்னங்கள். மாநிற வண்ணம். கூடவே உதடுகளில் ஏதோ குறைபாடு இருந்தது. இரண்டு இதழ்களும் சரியாக ஒட்டவில்லை. அதோடு மூக்கிற்கும் மேல் உதட்டிற்கும் இடையே பிளவு போல என்னவோ காணப்பட்டது. அது தெரிந்து விடக்கூடாது என்று அவளின் அன்னை அந்த பிள்ளைக்கு கொஞ்சம் மேக்கப் செய்து கவர் செய்திருந்தாள்.

காண்பவர் கண்களுக்கு அந்த பிள்ளையின் குறை எதுவும் பெரிதாகத் தெரியாது என அவளின் அன்னைக்கு நினைப்பு. ஒருவித மறைமுக வேண்டுதலும் கூட! ஏனெனில் அப்படியொரு சுந்தர குரல் அந்த பிள்ளைக்கு.

ஆனால், பார்ப்பவர் அனைவரின் பார்வையும் ஒன்றுபோல இருக்குமா? சிலர் குழந்தை யாழிசையின் குரலை ரசித்தனர். சிலர் யாழிசையின் குறைக்காகப் பரிதாபம் கொண்டனர். இன்னும் சிலரோ முற்றிலும் வேறு ரகமாக வம்பு பேசி ரசித்தனர். யாழிசையின் குறையை, தோற்றத்தை விமர்சித்தது போதாமல், வாய்க்கு வந்தபடி எல்லாம் வரைமுறையின்றி பேசினார்.

அபூர்வா மகளுக்கு மட்டும் மேக்கப் செய்தால் தனியாகத் தெரிவாளோ என்பதற்காக அவளுக்கு ஏற்ப தனக்கும் கொஞ்சம் மேக்கப் செய்வது வழக்கம். பிள்ளையின் குறையை யாரும் கவனித்து விடக்கூடாது என்பது தான் அவளது பிரதான நோக்கமே! சின்னவளுக்கு ஏற்கனவே தன் குறையைக் குறித்து மிகுந்த வருத்தம் அது மேலும் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் வேறு! பிறகு பிள்ளை அழுதே ஒருவழியாகி விடுவாளே என்ற கலக்கத்தில் இப்படிச் செய்ய ஆரம்பித்தாள். மேக்கப்பின் உதவியால் உன்னிப்பாக பார்ப்பவர்கள் தவிர மற்ற யாருக்கும் எளிதில் அகப்படாத குறை தான் யாழிசைக்கு.

ஆனால், வம்பு பேசுபவர்களுக்கு எல்லாமே உறுத்தும் தானே!

அன்றும் யாழிசையைப் பார்த்து, “இதென்ன காசுக்காக இப்படி சின்ன குழந்தைங்களை கூடவா பாட வைப்பாங்க. பணத்தாசை யாரை விட்டது” என அபூர்வா தன் மகள் யாழிசையோடு பாடி முடித்து மேடையை விட்டு கீழே இறங்கி வரும்போது அவள் காதில் விழும்படி பேசினார்கள்.

ஒருநொடி நடை நின்று போனது. பணத்தாசையா? ஓசையின்றி ஒரு பெருமூச்சோடும், கண்ணில் கரைகட்டத் தொடங்கிய நீருடனும் மேடைக்குப் பின்னால் சென்று நின்ற போதிலும் அவர்களின் பேச்சு தொடர்ந்து கேட்டு அவளை இம்சித்தது.

“பின்ன பணம் வருதே! அதோடு அந்த பிள்ளைக்கு சம்பாரிக்கிற காசுல கொஞ்சம் சாப்பிடவாச்சும் வாங்கி தராங்களா பாரு. எலும்பும் தோலுமா இருக்கு… வாயைப் பாத்தியா எப்படி பிளந்துட்டு இருக்குதுன்னு… ஆனா மேக்கப் மட்டும் குறைவே இல்லாம… இப்ப மேக்கப் தான் முக்கியமா… அதுவும் இத்தனை சின்னகுழந்தைக்கு?”

“ஆமாம் பாருங்க. எதுக்கு இத்தனை மேக்கப். அதுசரி இவங்க வீட்டுல பெரியவங்க கூடவா யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க…”

“யாரும் இல்லாத அனாதை போலக்கா… அம்மா, அப்பா, அண்ணன், தம்பின்னு ஒருத்தர் வந்து நான் கேள்விப்பட்டதில்லை. ஏதோ கூட படிச்ச பிள்ளைங்க கொஞ்சம் ஒத்தாசை பண்ணுதுங்க. எவன்கிட்ட போயி வயித்தை நிரப்பிட்டு வந்தாளோ, கழுத்துல வெறும் தாலி மட்டும் தான் இருக்கு. புருஷனை நான் கண்ணுல பாத்ததில்லை. அப்படின்னா என்ன அர்த்தம் ஊரு தப்பா பேச கூடாதுன்னு இவளே தாலி கட்டியிருப்பா… எங்கே எவனுக்கு வயித்தை நிரப்பிக்கிட்டாளோ” என்று அவளின் ஒழுக்கத்தை எளிதாக விமர்ச்சித்துக் கொண்டிருந்த பெண்களை முறைக்கும் எண்ணம் கூட இல்லாமல், மழையில் கரையும் களிமண் சிலை போலச் செய்வதறியாது நின்றிருந்தாள்.

மரத்து போன மனதை இந்த கடவுள் தனக்கு வைத்திருக்கக் கூடாதா என எண்ணியவளின் உள்ளம் வேதனையில் துவண்டு கொண்டிருந்தது. இந்த பேச்சுக்களை எல்லாம் காது கொடுத்து கேட்க முடியாது புழுவாய் துடிப்பவளின் காதாவது மந்தமாகப் போய்விடக் கூடாதா?

விசும்ப முடியவில்லை. விம்மி அழ முடியவில்லை. வேதனையைத் தொண்டையிலேயே அமிழ்த்து விட்டு, அடுத்து ஒரு சந்தோஷமான பாடலை பாட அவள் மேடையேறியாக வேண்டும்.

மங்கை மேடை ஏறினாள். இனிய குரலில் பாடலையும் அழகாகப் பாடினாள். அவளின் குரலால் சுற்றத்தாரை மகிழ்வித்தாள்.

அபூர்வாவை விமர்சிப்பது எளிது! ஆனால், அபூர்வாவாக வாழ்வது மிகவும் கடினம்!

இங்கே நாம் எவரையும் விமர்சிக்கத் தயங்குவதே இல்லை… அவர்களின் சூழலை யோசிக்கும் எண்ணம் இல்லாத நமக்கு விமர்சனம் செய்யும் தகுதி மட்டும் எங்கிருந்து வந்ததோ!?!