சங்கீத சக்தி – 14

சக்திவரதன் கண்டிப்பு காட்டவும் ஷர்மிளாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. அத்தனை எளிதில் தன்னை ஏமாற்ற விட்டுவிடுவதா என்று தோன்றக் கண்ணில் நீரை தேக்கிக் கொண்டு, “ஏன் நான் என்ன தப்பா கேட்டுட்டேன். உன்னை நம்பி நான் காத்துட்டு இருக்கேன். நீ என்னடான்னா… இங்கே?” என்று சொன்னவள் மேற்கொண்டு பேச முடியாதவள் போல வாயை மூடிக்கொண்டு அழுதாள்.

“ஷ்ஷ்… முதல்ல அழறத நிறுத்து. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. தப்பு என்மேல தான் உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும். ஆனா, நீயும் இந்த நாலு வருஷத்துல பெருசா எதுவும் என்னை காண்ட்டேக்ட் பண்ணலையே… நீயே விலகிட்ட போலன்னு தான் நான் நினைச்சேன்”

அவனுக்கு உண்மை தெரிந்திருந்தும் அவளை நேரடியாகக் குற்றம் சொல்ல மனம் விழையவில்லை. தவறு அவன் புறமும் இருந்ததால் நன்கு நிதானித்தான். சற்று சுமூகமாகவே இவ்விஷயத்தை முடித்துவிட நினைத்தான்.

ஆனால், ஷர்மி வேறு ரகம் ஆயிற்றே! அவனது நிதானத்தைச் சீண்டினாள். “ச்சீ இப்படிப்பேச உனக்கு வெட்கமா இல்லை. உன்னையே நம்பி இருக்கும் என்கிட்ட இப்படித்தான் பேசுவியா? நீ என்ன தான் முடிவு பண்ணியிருக்க. என்னோட வாழ்க்கைக்கு இப்ப என்னதான் வழி?”

சக்திவரதனுக்கு எரிச்சலாக வந்தது. என்னவோ உருகி வழிந்து காதலித்தது போல என்னமாய் பசப்புகிறாள். அதோடு இவள் செய்த காரியங்கள் தெரியாது என்ற எண்ணத்தில் நா கூசாமல் எத்தனை பொய்கள் வேறு என்ற கடுப்பில், “இதுல முடிவு பண்ண என்ன இருக்கு ஷர்மிளா? நான் அபூர்வாவை கல்யாணம் செய்துட்டேன். இனி அவள் தான் என்னோட வாழ்க்கை. உன்கிட்ட மன்னிப்பை கேட்கிறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியலை” என்றான் விட்டேற்றியாக. அவளை பார்க்கக் கூட பிரியப் படாதவன் போல எங்கோ பார்வையை அலையவிட்டபடி சொன்னவனின் அலட்சியம் அவளை இன்னும் இன்னும் சீண்டியது.

“ஓ… அவ அப்பா, அம்மாவை இழந்து அனாதையா நிக்கிறாளேன்னு அனுதாபத்துல இந்த கல்யாண உறவை நீட்டிக்க நினைக்கிறியா நீ? இல்லாட்டி அவ குடும்பத்து மேல உனக்கு இருக்கும் கோபத்துக்கும் வெறுப்புக்கும் இந்த கல்யாணம் எப்படி நிலைக்கும்? உண்மையாவே உன் மனசாட்சி உறுத்தாம அவளோட உன்னால குடும்பம் நடத்த முடியுமா?” சாட்டையாய் விழுந்தது அவளின் கேள்வி.

உள்ளுக்குள் ஒருகணம் ஆடிப் போய்விட்டான். அவனா? அவனா அவனுடைய அபூர்வாவை அப்படி நினைப்பவன்? முதலில் அவள்மீது அனுதாபம் எங்கிருந்து வரும்? அவளை நோகடித்த தன்மீது ஆத்திரம் தானே தவிர… அனுதாபம் கொள்ளும் நிலையிலா அவள் இருக்கிறாள்? ஒருவேளை அப்படி அவளை நான் நிறுத்தி விட்டேனோ? இல்லை… இல்லை… முதலில் அவன் இருக்கும்போது அவள் எப்படி அனாதை ஆக முடியும்? அவளுக்கு முழு ஆதரவாய் அவன் ஏற்கனவே இருக்கையில் இதென்ன அபத்தமான பேச்சு…

உள்ளே சுறுசுறுவென்று ஓடிய கோபத்தினோடே, “ஸ்டாப் இட் ஷர்மி… அவ புருஷன் நான் இருக்கும்போது அவ எப்படி அனாதை ஆவா? இன்னொரு முறை இதுபோல பேசின நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். நான் உன்னை காதலிச்சேன் இல்லைன்னு சொல்லலை. அது என்னோட பாஸ்ட். நான் அதைத்தாண்டி ரொம்ப தூரம் வந்துட்டேன். முதல்ல நம்மளோடது காதல் தானா? உன்னோட பணத்தேவைக்கு மட்டும் தானே என்னை தேடற? உண்மையை சொல்லு இப்ப என்ன தேவை உனக்கு? என்ன பணப்பற்றாக்குறைன்னு என்னை தேடி வந்திருக்க? சும்மா காதல்ன்னு பினாத்தாதே அதை நம்ப நான் முட்டாள் இல்லை” ஆத்திரமாகக் கத்தியவனை மிரண்டு போய் பார்த்தாள் அவள்.

இவன் இத்தனை ஆத்திரப்படுபவன் இல்லையே! அவள் அதிர்ந்து விழிக்கையிலேயே, “நான் அபூர்வாவைக் கல்யாணம் பண்ணிக்கும் முன்ன, உன்கிட்ட மன்னிப்பு கேட்க யோசிச்சிட்டு இருந்த சமயத்தில் தான், நம்ம கூட வேலை செஞ்ச ராஜேஷ் உனக்கு ரொம்ப வருஷமா வரன் பார்த்துட்டு இருக்கிறதைப் பத்தி எனக்கு சொன்னான். சரி நீயும் என்னை மறந்து உன்னோட வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்னு தான் நான் நம்ம விஷயத்தை அமைதியா விட்டுட்டேன்.

இப்ப வந்து நீ நின்னதே எனக்கு ஆச்சரியம். அதுலயும் இத்தனை பேச்சு. பணம் பிடுங்க வந்த போலன்னு நான் நினைச்சா… ஆனா நீ ச்சீ ச்சீ… இப்ப சொல்லறேன் தெளிவா கேட்டுக்க உனக்கு இதுவரை நான் அழுதது போதும். இனியும் இங்கே நின்ன, அப்பறம் நான் உன் பேரண்ட்ஸ் கிட்ட பேச வேண்டி வரும். கூடவே, உனக்கு நான் வாங்கித்தந்த பரிசை எல்லாம் நான் திரும்பக் கேட்க வேண்டியும் வரும்” என அவன் மிரட்ட, அவள் அரண்டு போனாள். நகை, பணம் என்று கொஞ்சம் கறந்திருக்கிறாளே! அதோடு பெற்றவர்களிடம் அவளின் பிம்பம் தோற்றால் அவளால் அதை யோசிக்கக் கூட முடியவில்லை!

“தயவு செஞ்சு வெளிய போயிடு…” என அவன் அடிக்குரலில் சீற, தான் எண்ணியது நடக்காது எனப் புரிந்ததும், வாலை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து நழுவியிருந்தாள் ஷர்மிளா.

இதனை ஏற்பாடு செய்தது ஸ்ரீவத்சன் எனத் தெரிந்ததும் சக்தி அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. இப்படி இவன் அலட்சியத்தோடும், அதீத ஒதுக்கத்தோடும் இருப்பதால் தானோ என்னவோ, நான் வந்து காதல் என்று நின்றதும், ஏதோ காக்க வந்த இரட்சகனைப் போல நினைத்து எனக்கு சங்கீதாவை மணமுடித்துக் கொடுத்தார்களோ என்னவோ மூத்தவர்களின் நினைவில் மனம் கனத்து போனது. கூடவே, தான் அவர்களுக்குச் செய்த துரோகம் நெஞ்சை வாள் கொண்டு அறுத்தது.

முதலில் துரோகத்திற்குத் துரோகம் எப்படி சமனாகும்? மனிதனுக்குரிய பண்புகள் இல்லாமல் மிருகத்தை விட மோசமாய் அல்லவா நடந்து கொண்டிருக்கிறான். முன்பு ஏதோ ஒரு வேகத்தில் சரி என செய்ய நினைத்த செயல், இப்பொழுது எண்ணிப்பார்க்கக் கூட அவனுக்கு அவமானமாய் இருந்தது. விதைத்ததை தானே அறுவடை செய்ய முடியும். சக்திவரதன் விதைத்து விட்டு அறுவடையை எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கிறான்.

நெருப்பின்றி பெரும் கனலொன்று என்னுள்ளே சுட,

என்னுள் எதுவெல்லாம் தீயில் உருக்குலைகிறது என எனக்கே தெரியவில்லை.

இல்லாத கடலுக்குள் அடி ஆழம் வரை மூழ்குவது போலத் தவித்துப் போனேன்.

என் துயர் அவன் அறிவானா?

அன்றிரவு சங்கீதாவால் வெகுநேரம் உறக்கம் கொள்ள முடியவில்லை. பெற்றோர்கள் தவறிய பிறகு இத்தனை நாட்களும் அரைகுறை உறக்கத்தில் தான் கழித்தாள் என்றபோதிலும், இன்று மனசஞ்சலம் மிகவும் அதிகம்! காரணமற்ற ஒருவித அலைப்புறுதலும், பரிதவிப்பும் அவளைப் படுத்தியது. இனி அடுத்து என்ன என்று யோசிக்கும்போதே அடிவயிற்றில் பயம் கவ்விப் பிடித்தது.

ஆசைப்பட்டதெல்லாம் ஒரு நாள் அந்நியமாகப் போகும் என்று கூறுவார்கள்… அபூர்வா வாழ்க்கையில் அது எத்தனை பொருத்தம்! அவளால் இன்று வரையிலும் நம்ப முடியாமல் தவிக்கும் நிஜமும் கூட! அவளின் காதல், திருமணம், அவள் நேசித்து மணந்த கணவன் எல்லாமே அவளின் வாழ்க்கையில பொய்யாகிப் போனது.

அதை ஏற்று, முழுமனதாக விலகிட இன்னமும் அவளுக்குத் துணிவு எழவில்லை. ஒவ்வொரு நொடியும் முள் கிரீடம் சுமக்கும் வலியையும் வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.

அதிலும் இன்று அவள் காண நேர்ந்ததும், கேட்க நேர்ந்ததும் கொடுமையின் உச்சம்! அவள் மனம் பொய்த்துப் போன உறவை எண்ணி, மனம் அழுது அரற்றுவது விந்தை தான்!

ஏற்கனவே சக்தியிடம் முழு ஒதுக்கம் வந்திருந்த போதும், இதுவரை அடுத்து என்ன என்று அவள் யோசித்ததே இல்லை! ஆனால், இப்பொழுது ஒரு முடிவில் திடமாக இருந்தாள். இருந்தாக வேண்டிய சூழல்!

காயம் பட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் கல்லடி பெறுவதைப் போல, தனது காதல் மீண்டும் மீண்டும் பொய்த்துப் போவதை, கையைக் கட்டிக்கொண்டு கையாலாகா தனத்துடன் வேடிக்கை பார்ப்பதைக் காட்டிலும், இந்த கூட்டத்திலிருந்து விலகியிருப்பது எத்தனையோ மேலானது என்று அவளின் உள்ளம் சொன்னது.

இந்த தெளிவான முடிவின் பின்னர், அவளிடம் பெரும் நிசப்தம்! முன்பு உறவினர்கள் தான் அவளைக் கவனிக்கும்படி இருந்தது. ஆனால், சமீப நாட்களாய் வீட்டு வேலைகளையும், தன் வேலைகளையும் யார் தூண்டுதலும் இன்றி தானே செய்து கொண்டாள்.

மூத்த தம்பதியரின் காரியம் எல்லாம் முடிந்த பிறகு, ஸ்ரீவத்சன் அந்த வீட்டிற்கு வருவதை நிறுத்தி விட்டான். ஆனால், பொதுவான உறவு பெரியவர்கள் மூலம், வீட்டைவிற்றுப் பாதி பணத்தை விரைவில் தன்னிடம் சேர்க்குமாறு அபூர்வாவிற்குத் தகவலைச் சேர்த்திருந்தான்.

சக்தியோ பெரும் தயக்கத்தினூடே, “நம்ம வீட்டுக்கு போலாம் அபூ…” என யாசிக்கும் பாவனையில் கேட்டிருந்தான். தான் வீசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு என்ற ஒரு சொல் ஈடாகாது என்று அறிந்திருந்தவனுக்கு, என்ன செய்து அவளின் மன்னிப்பை பெறுவது என்பது குறித்தும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், தான் செய்த பிழை குறித்து மீண்டுமொரு முறை பேசக்கூட அவனுக்குத் தைரியம் இருக்கவில்லை.

அபூர்வாவிடம் அதே நிசப்தம். சக்திக்கு அவள் இன்றி வீட்டிற்குச் செல்வதிலும் மனம் இல்லை. மீண்டுமொரு முறை அவளை அழைக்கவும் தைரியம் இருக்கவில்லை. நெஞ்சுக்கூடு காலியான உணர்வில் சுற்றித் திரிந்தான். அவனுடைய வேலைக்கும் அபூர்வாவின் வீட்டில் இருந்தபடியே போய் வந்தான்.

அபூர்வா ஒருநாள் டவுனிற்கு சென்று வந்தாள். அவளுக்கு ஓரளவு பரிச்சயம் இருக்கும் மருத்துவர் வஞ்சுளாவின் உதவியோடு ஒரு வக்கீலை அணுகினாள். வக்கீல் அருணாசலத்தின் மூலம் வீட்டில் எனக்கு எந்த பங்கும் வேண்டாம் என்று அவன் அண்ணனுக்கும், விவாகரத்துக்கு முழுமனதோடு சம்மதம் என்று கணவனுக்கும் இருவேறு ஆவணங்களை தயார் செய்து, வக்கீலையே அவர்களிடம் சேர்த்து விடும்படி கூறியிருந்தாள். வக்கீலிடம் கணவரின் தொலைப்பேசி எண்களைப் பகிர்ந்து இன்னும் ஒரு மாதம் கழித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாள்.

அதோடு, தன் தோழி பிரீத்திக்கு கைப்பேசியில் அழைத்து தனக்குத் தேவைப்படும் உதவியைக் கேட்டாள். உண்மையில் இப்பொழுது அவளுக்கு அடுத்து என்ன எனத் தெரியாத நிலை! ஏதோ ஓர் ஊரில் சென்று தத்தளிப்பதைக் காட்டிலும் தெரிந்தவர்கள் இருக்கும் ஊர் சென்றால் கொஞ்சம் சமாளித்துக் கொள்ள முடியும் என நினைத்தாள்.

பிரீத்திக்கு இவள் கணவனைப் பிரிகிறேன் என்று சொன்னது பெரும் அதிர்ச்சி! அவள் என்ன விசாரித்தும் பிரிவுக்கான காரணத்தைச் சொல்ல மறுத்ததோடு, தன் முடிவிலும் பிடிவாதமாக இருந்தாள். அவளும் வேறு பேச வழியின்றி இவளுக்கு வேண்டியதை தான் கவனித்துக் கொள்வதாக உறுதி தந்தாள்.

பிறகு அபூர்வா ஒரு புதிய கைப்பேசியும், சிம் கார்டும் வாங்கிக் கொண்டு, வீடு வந்து சேர்ந்து விட்டாள். பேருந்துக்கும் புக் செய்திருக்கலாம், யாரும் தேடுவார் இல்லை. நூற்றில் ஒரு வாய்ப்பாக யாரும் நூல் பிடித்துத் தேடி வந்து விட்டால் என்ற யோசனையில் டிக்கெட் புக்கிங் செய்யாமல் வந்திருந்தாள். கிளம்பும் போது கிடைக்கும் பேருந்தில் ஏறிக்கொள்ளலாம் என்று!

ஓரிரு நாட்களில் பெற்றவர்கள் சேமிப்பில் மீதமிருந்த பணத்தில் ஒரு சிறு பகுதியோடும், அத்தியாவசிய உடைகள் மற்றும் சில பொருட்களோடும் யார் கவனத்தையும் கவராமல் அவள் பெற்றோர்களோடு வாழ்ந்த வீட்டை விட்டு, பிறந்து வளர்ந்த ஊரை விட்டு, அனாதையாக அவளின் தோழி பிரீத்தி வேலை பார்க்கும் ஊரான ஓசூருக்கு தன் பயணத்தை தொடங்கியிருந்தாள்.

சக்திவரதனுக்கு கடந்துவிட்ட எட்டு நாட்களின் தாக்கத்தால் பைத்தியம் பிடிக்காத குறை தான்! எங்குத் தேடியும் அவனின் மனையாள் கிடைக்கவில்லை. அவள் விட்டுப்போன கைப்பேசி எந்த தகவல்களும் இன்றி வெறுமையாய் இருந்து அவனைப் பார்த்துப் பரிகசித்துச் சிரித்தது. அவளுடைய கான்டேக்ட்ஸ், கேலரி, மெயில் என எந்த தகவல்களும் அதில் இல்லை. சிம் கார்ட்டையும் நீக்கி விட்டிருந்தாள். அது இருந்திருந்தாலாவது, யாரேனும் அழைத்தால் அவர்கள் மூலம் அவளின் நெருங்கிய நட்புகளைக் கண்டுபிடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இப்பொழுது வழிகள் அடைத்த நிலை!

காவல்துறையை நாடவும் அவனுக்குத் துணிவு வர மறுத்தது. உள்ளுக்குள் ஓயாது ஒருவித நடுக்கம், பரிதவிப்பு! அதோடு அவள் ஒன்றும் தொலைந்து போகவில்லையே அவர்கள் தேடி கண்டுபிடிக்க. அவனுடைய அலட்சியத்தால், அகம்பாவத்தால், திமிரால் தானே அவனை விட்டுத் தூரப் போயிருக்கிறாள்… இந்த நினைவே அவனது நெஞ்சை வாள் கொண்டு அறுத்தது.

அவளின் அறியாமையும் வெகுளித்தனமும் அவன் அறியாததா? எங்குப் போய் என்ன செய்கிறாளோ என அவனின் மனம் ஓயாது கதறி துடித்துக் கொண்டிருந்தது. அவனை நம்பி உதித்த சிசுவுக்கு கூடவா அவனால் நல்லபடியாக நடந்துகொள்ள முடியவில்லை. அந்த பிள்ளையின் வரவை ஒரு நொடி கூட ஏற்கவில்லையே! அதற்கு இந்த தண்டனை தனக்குத் தேவை தான் என அவனின் நியாய மனம் இடித்துரைத்தது!

அவள் அத்தனை புத்திசாலி கிடையாது; மற்றவர்களுக்கு இணையாகச் சிந்திக்கவோ செயலாற்றவோ தெரியாத இளம் பிள்ளை. எல்லாம் தெரிந்திருந்தும், தெளிவாக அவளைப் புரிந்துகொள்ள முடிந்தும், வேண்டும் மட்டும் அவளை நோகடித்த அவனை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை.

பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டியவளைத் தொலைத்துவிட்டு இப்பொழுது புலம்பி என்ன பயன்? கடவுளே அவளைச் சீக்கிரம் கண்ணில் காட்டி விடு என்று மனமுருக வேண்டி, தன்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் செய்து தோற்றவனுக்கு முதல் இடியாய் கிடைத்தது அவளின் விவாகரத்து பத்திரம். அதனோடே ஸ்ரீவத்சனுக்கென்று அவள் தந்துவிட்டுப் போன ஆவணம் அவனுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.

அவளுக்கு யாரைத் தெரியும்? படித்தாள், திருமணம் என்ற பெயரில் கையோடு கூட்டியும் வந்துவிட்டேன். இந்த சுற்று வட்டார ஊரைத் தாண்டாதவளுக்கு உலக ஞானம் நிச்சயம் குறைவே! அப்படி இருப்பவள் எந்த தைரியத்தில் எதுவும் வேண்டாம் என்று உதறி போனாள். ஒருவேளை தவறான முடிவு எதுவும் எடுத்திருப்பாளோ நெஞ்சம் ஒருமுறை அதிர்ந்து போனது. நெற்றியில் வியர்வைத்துளிகள் அரும்ப, இதயம் துடிக்கும் ஓசை இடிக்கு நிகராக இருந்தது.

அச்சோ அப்படி எதுவும் இருக்க கூடாது என்று பரிதவித்தவன், தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றைத் தொடர்பு கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.

ஓய்ந்து, சோர்ந்து, வாழ்வை வெறுத்த நிலையில் திரிந்தவனுக்கு அடுத்த இடி மருத்துவர் வஞ்சுளா மூலம் கிடைத்தது.