சங்கீத சக்தி – 13

அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு கருணாகரனின் வீட்டில் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் எல்லாம் கூடி விட்டிருந்தனர். எதையும் கவனிக்கும் நிலையில் அபூர்வா இல்லை. ஆட்டோவிலிருந்து இறங்கியவளைச் சிலர் சூழ்ந்து கொண்டு அழ, அவர்களோடு நடுவீட்டில் அமர்ந்தது மட்டுமே அவள் அறிவாள்.

யார் இருக்கிறார்கள், யார் வந்தார்கள் என எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லாமல் பெற்றோரை மட்டும் பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். சக்திவரதன், அவனின் பெற்றோர்கள் எல்லாரும் கூட அங்குதான் இருந்தார்கள். மூத்தவர்களுக்கு இவளருகே வர விருப்பம் இல்லை. கணவனுக்கோ துணிவில்லை.

ஸ்ரீவத்சன் வேண்டுமென்றே தாமதித்து வந்தான். எனக்கென்ன என்பது போல எங்கோ ஒரு மூலையில் அமர்ந்திருந்தான். அவன் மனைவி நந்தினியையும், கருணாகரன் அதிக ஆசை வைத்திருக்கும் அவரின் பேரன் சித்தார்த்தையும் அழைத்து வந்திருக்கவில்லை.

அது அங்கு பேசு பொருளாக ஸ்ரீவத்சன் அழுத்தமாய் அமர்ந்திருந்தானே தவிர, எதையும் பொருட்படுத்தவில்லை. யார் சொல்வதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

மாலை நெருங்கியது. இறுதிச் சடங்குகளைத் தொடங்கினார்கள். அபூர்வா கைப்பாவை போல பெற்றோருக்கான அனைத்து கடமைகளையும் செய்தாள். கண்ணிலிருந்து வற்றாமல் நீர் பொழிந்து கொண்டே இருந்தது. இந்த துக்கத்தைத் தாங்கும் வலிமை அவளிடம் இல்லை. ஒரே நேரத்தில் காலனிடம் பெற்றவர்களைப் பறிகொடுத்தது, கணவனின் சுயரூபம் அறிந்து, அவர்களின் காதலும் திருமணமும் பொய்த்துப் போனது, மருத்துவர் மூலம் அறிய வந்த உண்மை என அவளும் ஒற்றை நாளில் எத்தனை தான் தாங்குவாள்?

இறப்பிலும் இணைபிரியா தம்பதிகளுக்கு ஸ்ரீவத்சன் மகன் என்ற முறையில் கொல்லி வைக்கட்டும் என்ற பேச்சு எழுந்தது. பெரியவர்கள் சிலர் அவனிடம் பேசியும் பார்த்தார்கள். அவனோ நா கூசாமல், “என் மனைவி கர்ப்பம். என்னால் இதைச் செய்ய முடியாது” என பொய்யுரைத்தான். இத்தனை நேரத்தில் இப்பொழுது தான் அபூர்வா அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஸ்ரீவத்சனை வெறிக்க வெறிக்கப் பார்த்தவளுக்கு, எதுவும் வாயைத் திறந்து சொல்லும் தெம்பு கூட இல்லை. இதழ்கள் ஏளனமாய் வளைந்திட துடித்தது.

ஸ்ரீவத்சனுக்கு தன் நிலைப்பாட்டில் சிறிதும் மாறுதல் இல்லை. இவர்கள் வேண்டாதவர்கள் என்பதில் தெளிவாய் இருந்தான்.

அவன் சொல்வது பொய் எனப் புரிந்து சக்திவரதனும் அவனைத் தான் பார்த்து கொண்டிருந்தான். என்ன மனஸ்தாபம் என்றாலும் இப்பொழுது அதைக் காட்டும் நேரம் இல்லையே! இறுதி காரியங்களில் கூடப் பெற்ற தகப்பன் மீது வெறுப்பைச் சுமந்து கொண்டு இவன் என்ன சாதிக்கப் போகிறான்? இவன் ஏன் தான் இப்படி இருக்கிறானோ என கவலையாக நினைத்தான். தான் சென்று பேசி, அதை ஏற்றுக்கொள்ளாமல் கோபத்தில் அவன் பதிலுக்கு எதுவும் எடுத்தெறிந்து பேசிவிட்டால், துக்கவீட்டில் எதற்கு சச்சரவு என சக்தி அமைதி காக்க வேண்டிய சூழ்நிலை!

சக்திவரதனின் பெற்றவர்களும் இதில் தாங்கள் தலையிட என்ன இருக்கிறது என்பதுபோல ஒதுங்கி இருந்தனர். சக்தியின் அன்னை சாவித்திரி மீது ஸ்ரீவத்சனுக்கு வளர்த்த பாசம் அதிகம். அவர் எடுத்துச் சொன்னால், அவன் கேட்டுக் கொள்ளும் வாய்ப்புகளும் நிறையவே இருந்தது. ஆனால், அவர் இதில் நான் என்ன செய்ய எனத் தலையிட மறுத்து விட்டார்.

அபூர்வா முயன்று தன் தொண்டையை செருமி, “நானே அப்பா, அம்மாவுக்குக் காரியம் செய்யறேன்” என்றாள். ஒருவகையில் ஸ்ரீவத்சன் நிராகரித்தது அவளுக்கு நல்லதாகவே தோன்றியது. இல்லையேல் இந்த பாக்கியம் அவள் அடைவதேது?

அவள் அவ்வாறு சொன்னதும் சக்திக்குத் திக்கென்றது. இவள் கருவுற்றிருக்கிறாளே! இவள் செய்யக் கூடாதே என்று பதறினான். அவள் தன்னை ஒருமுறை பார்த்தால் கூட வேண்டாம் என்று சொல்லி விடலாம் என்று அவளையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் பார்வை எங்கும் நகரவில்லை. அவனை அவள் கண்கொண்டு பார்ப்பதாய் இல்லை. அவன் தவியாய் தவித்தான்.

மனைவியை நெருங்கவே முடியாத இயலாமையில், ஸ்ரீ கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று அவனிடம் சென்று பேச முயற்சி எடுத்தான். அவனோ இவனை மதிக்காமல் அலட்சியம் காட்டினான். ஏற்கனவே பேசிக்கொண்டிருந்த, பொறுமையாக எடுத்து சொல்லிக் கொண்டிருந்த உறவினர்களுக்கும் அதே மறுப்பு தான்!

உறவினர்கள் சிலர் அபூர்வாவிடம் வேறு ஏற்பாடு செய்யலாம் என கேட்டுப் பார்த்தனர். பங்காளி பையன்களை முன்னிறுத்தலாம் என்று சொன்னார்கள். ஆனால் அபூர்வாவிற்கு அதில் உடன்பாடில்லை. மறுப்பாகத் தலையசைத்தாள்.

அவளின் பார்வை பெற்றவர்களிலிருந்து மீளவில்லை. அதிலும் வளர்மதியிடம் அதிகம் நிலைத்தது. ‘என்கூடவே நீங்க இருந்திருக்கலாம் இல்லை. நான் இனி என்ன பண்ணுவேன்?’ என கண்ணீரோடு தாயிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘அப்படின்னா என்னை விட உங்களுக்கு அப்பாவை தான் பிடிச்சிருக்கா?’ என அவளின் மனம் சிறு குழந்தை போலத் தாயிடம் சண்டையிட்டது. ‘இப்படி நீங்க செய்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் தோத்து போயி வந்ததை உங்ககிட்ட சொல்லியிருப்பேன். என்னை அனாதையா விட்டுட்டு போக முடியாம நீங்களும் எனக்குத் துணையா இருந்திருப்பீங்க இல்லை…’ என்று எண்ணியவளுக்குத் துக்கம் தொண்டையை அடைக்க, பெரிதாகக் கேவல் வெடித்தது.

சக்தி அவளின் கண்ணீரை கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் செய்தது மாபெரும் பிழை! அதற்குத் தண்டனையே கிடையாது. அவன் இறக்கும் வரையிலும் இந்த பாவத்தை அவன் சுமந்து தான் ஆக வேண்டும்! அப்பேற்பட்ட பெரும் இன்னலை தன்னை நம்பி வந்த மனைவிக்குத் தந்திருக்கிறான். அவனாலேயே அவனை மன்னிக்க முடியவில்லை. இப்படி அவளை மனம் நோக விட்டுவிடக் கூடாது என்று திருமணம் ஆனதிலிருந்து தனக்குள் உருப்போட்டுக் கொண்டே இருந்தவன், ஏன் இன்று காலையில் அதை மீறினான்? அவனையும் மீறி நடந்துவிட்ட சம்பவத்தை மீண்டும் ஒருமுறை அசைபோடும் தைரியம் கூட அவனுக்கில்லை. இனி என்ன சொல்லி அவன் மனையாளைச் சமாதானம் செய்ய அவனால் முடியும்? நெஞ்சில் அவன் செய்த பாவம் பெரும் பாரமாக அவனை அழுத்திக் கொண்டிருந்தது.

மீண்டும் மீண்டும் பெரியவர்கள் அபூர்வாவிடம் எடுத்துச் சொல்ல, அவள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ‘யார் என்ன சொன்னாலும் உங்க மகள் எனக்குத் தான் இந்த உரிமை. இந்த கடைசி கடமையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று எண்ணியவளுக்கு மீண்டும் கேவல் வெடித்தது.

ஸ்ரீவத்சன் கண்மூடித்தனமாக மறுக்க, அபூர்வாவும் பிடிவாதம் பிடிக்க, சக்திக்கு தானே சென்று இறுதி காரியத்தைச் செய்து விடலாமா என்ற எண்ணம் கூட எழுந்து விட்டிருந்தது. ஆனால், என்னவோ அபூர்வாவை ஏற்றுக்கொள்ள முடிந்தவனால், கருணாகரனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வளர்மதி விஷயம் முற்றிலும் வேறு அவர்மீது காரணமேயின்றி எழுந்த அபிமானத்தின் விளைவாய் அவனால் எக்காரணம் கொண்டும் அவரை வெறுக்க முடியாது. ஆனால், கருணாகரன் பெரும் துரோகம் இழைத்தவர். அவரை மன்னித்து அவன் இறுதி காரியங்களைச் செய்தால், தன் தந்தை என்ன பாடுபடுவார் என்று அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஏற்கனவே அவரின் மகளை திருமணம் முடித்ததற்கே அவர் உள்ளுக்குள் என்ன பாடு படுகிறாரோ என எண்ணியவனுக்கு அந்த சிந்தனையை உதற முடியாமல், அபூர்வா அவனது மனக்கண்ணில் தோன்றி அவனை தடுமாற வைத்தாள்.

தந்தையின் பிடித்தமின்மையை யோசித்தாலும், தன் கோபத்தை முன்னிறுத்தினாலும், இறுதியில் வென்றதென்னவோ அபூர்வாவின் நிலை தான்! இந்த சூழலில் அவனால் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு மட்டும் இருக்க முடியவில்லை. தன் எல்லா யோசனைகளையும் கடந்து, மனைவியை முன்னிறுத்தி, மனைவிக்காகத் தான் எடுத்துச் செய்யலாம் என யோசித்தவன், தொண்டையை செருமி, “நான் செய்யறேன்” என்று சபையில் சொல்லியும் விட்டிருந்தான்.

பெரியவர்கள் ஆசுவாசப்பட, சங்கீதா சலனமேயின்றி, அவனை ஏறிட்டுப் பார்க்கக் கூட மறுத்து, “நானே செய்யறேன் பெரியப்பா…” என்றிருந்தாள்.

அவளுக்குள் திகுதிகுவென எரிந்தது. நா கூசாமல் அத்தனை கீழ்த்தரமாகப் பெற்றவர்களை பேசியவன், அதே நாளில் அவர்களுக்கு இறுதி காரியம் செய்யவும் முன் நிற்பானா? என்ன மனிதன் இவன் என அவளால் முகம் சுளிக்காமல் இருக்க முடியவில்லை.

அவளின் பாசத்தையும் பிடிவாதத்தையும் கண்டு, “அவளே செய்யட்டும் அது தான் அவளுக்கு நிம்மதியைத் தரும் போல” என பெரியவர்களும் சொல்லி விட்டார்கள். அவள் எண்ணியதுபோலவே பெற்றவர்களுக்கு மகளாகவும், மகனாகவும் இருந்து அனைத்து கடமையையும் அவளே செய்தாள்.

மூத்த தம்பதிகள் மறைந்து இன்றோடு இரண்டு வாரங்கள் ஆயிற்று! அபூர்வாவிடம் உயிர் மட்டுமே எஞ்சி இருந்தது. அவளை கலாவும், சில உறவினர்களும் தான் மாற்றி மாற்றிக் கவனித்துக் கொண்டனர். ஓரளவு சுற்றம் உரைத்து தன்னைத்தானே கவனித்துக் கொள்ளுமளவு தேறியிருந்தாள். இனி அவளின் வாழ்வு இப்படித்தானே!

பெற்றோருக்காக மொட்டையும் அவளே அடித்திருக்க, உடல் நலிவடைந்து, கண்கள் எல்லாம் உள்ளே போய், கன்னம் எல்லாம் வற்றி, எலும்பு துருத்திக் கொண்டு நிற்கப் பார்க்கவே பரிதாபமாக தோன்றினாள். நிச்சயம் ஒரு கர்ப்பிணியின் தோற்றமல்ல!

சக்திவரதன் கூட அந்த வீட்டில் தான் இருந்தான். அபூர்வா கவனித்தாலும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. திருமணம் என்ற நாடகத்தை ஊரார் முன்பு சரியாக நடத்திக் கொண்டிருக்கிறான் போலும் என்பது தான் அவளின் எண்ணம். அவன் நாடகத்தில் தலையிடும் எண்ணம் அவளுக்கில்லை.

ஸ்ரீவத்சனும் பேருக்கு வந்து தலையைக் காட்டிவிட்டுப் போய்க் கொண்டிருந்தான். அப்படி அவன் தொடர்ந்து வந்ததில் சக்திக்கும், அபூர்வாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை சுத்தமாக இல்லை என்பதை அவனால் எளிதாகக் கண்டறிய முடிந்தது. என்னவோ அது ஒருவித ஆசுவாசம் அவனுக்குள். அவன் அம்மாவிற்கு நடந்த துரோகத்திற்கு, இந்த பெண்ணின் இப்படிப்பட்ட நிலை தேவைதான் என்று அவனின் மனம் சொல்லியது. என்ன இவளின் அன்னையும் உயிரோடு இருந்து துன்பப்பட்டிருக்கலாம் என எண்ணாமல் அவனால் இருக்க முடியவில்லை.

கொக்கு எந்நேரம் ஆனாலும் ஒற்றைக்காலில் நின்று மீனுக்காகக் காத்திருப்பது போல, ஷர்மிளாவும் சக்தியின் வாழ்க்கையில் நுழைய சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே வாழ்வில் சந்தித்த பல சறுக்கல்கள் அவளுக்குப் பொறுமையை கற்றுத் தந்திருந்தது. அதனால் இந்தமுறை அவசரப்படாமல் காய்களை நகர்த்தத் திட்டமிட்டிருந்தாள்.

என்னதான் சக்தி இவளை வேண்டாம் என்று ஒதுங்கி இத்தனை நாட்கள் பார்க்காமல், பேசாமல் இருந்திருந்தாலும், நேரில் சென்று பேசினால், கொஞ்சம் அவனைக் கவர முடியும் என்று தோன்றியது. அதோடு தவறும் அவன்புறம் தானே! அவளுக்கு அவன் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். ஏற்கனவே காதல் என்று சுத்தி அவனிடம் சாதித்தவளும் கூட… இப்பொழுது மீண்டும் முடியாதா என்ன?

மேலும் சக்தி அவனின் மனைவி அபூர்வா குறித்தும் சொல்லி இருக்கிறானே! காதல் என்று சொல்லி அவளை ஏமாற்றுவது தானே அவனது திட்டமாக இருந்தது. எப்படியோ திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனால், அவனுக்கு இருக்கும் வெறுப்புக்கு, அந்த கல்யாணம் நிலைப்பதும் கடினமே! அப்படியே நூற்றில் ஒரு வாய்ப்பாக இருவரும் பின்னிப் பிணைந்து இப்போது இருந்தாலும், அபூர்வாவிடம் இவனது போலி காதலையும் திட்டத்தையும் குறித்துக் கோடிட்டுக் காட்டுவதோடு, தங்கள் காதலையும் கடை பரப்பினால் போதுமே… தன்னைப்போல அவள் பிரிந்து போய்விடப் போகிறாள் என்று யோசித்தவள், முதல் கட்டமாக ஸ்ரீவத்சனை தான் சில வாரங்களுக்கு முன்பே சந்தித்திருந்தாள். அவனைக் குறித்தும் சக்தியின் பேச்சில் தெரிந்து கொண்டது தான்.

ஸ்ரீயிடம் நானும் சக்தியும் காதலர்கள் என்று அறிமுகமானவள், எதையெல்லாம் அழகாக ஏற்றிச் சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் ஏற்றி சொல்லி, மறைக்க வேண்டியதை மறைத்து, பொருத்தமான பொய்யைச் சேர்த்து மிகைப்படுத்தி ஒரு கதையைச் சொல்லி, எங்களைச் சேர்த்து வையுங்கள் என்றும் கேட்டிருக்க, ஏற்கனவே சக்தியின் திருமணத்தில் ஸ்ரீக்கு இருந்த சந்தேகம் இப்பொழுது உறுதியாகியிருந்தது.

இந்த பொருந்தாத திருமணத்திலிருந்து சக்தி விலகி, அவன் விரும்பும் பெண்ணை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ரீவத்சன் இருந்தான்.

அதற்கு ஏதுவாக, சக்தியும் சங்கீதாவும் பிரிந்திருக்கும் இந்த சூழல், ஷர்மிளா சக்தியிடம் பேசுவதற்குப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணியவன், துக்க வீடு என்று கூட யோசிக்காமல், ஒரு பெண்ணின் வாழ்வு இது என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல், ஷர்மிளாவுக்கு தகவல் கொடுத்து விட்டான்.

ஷர்மிளாவை இப்படிப்பட்ட சூழலில் சக்திவரதன் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே ஏதோ ஒருவித மன அழுத்தத்தில், அபூர்வாவிடம் நடந்து கொண்ட முறைக்காக வருந்திக் கொண்டிருப்பவன், அவளை எந்த வகையிலும் அணுகும் வழி தெரியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்க, இந்த சூழலில் முன்னால் காதலியை அவனால் எப்படி எதிர்கொள்ள முடியும்? இவளிடம் உண்மையைச் சொல்வதற்குக் காலம் கடத்தி இருக்கக்கூடாதோ என்று காலம் கடந்து ஞானோதயம் வந்தது. ஆனால், உண்மையைச் சொல்லும் நிலையையும் ஷர்மிளா அவனுக்குக் கொடுத்திருக்கவில்லை. அவளாக விலகி விட்டாள் என நண்பன் மூலம் தெரிந்துகொண்டு இனி இவளால் தொல்லை இல்லை என எண்ணியிருந்தபோது அவளின் குறுக்கீடு அவனுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

என்னவாகினும், இப்பொழுது வருந்தி என்ன பயன்? எப்படியாவது இவளை சங்கீதா பார்க்கும் முன்பு இங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்ற அவசரம் மட்டுமே அவனுக்குள்!

ஷர்மிளா சக்தியைக் கூர்மையாகப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவளின் பார்வை அவனைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது. முதலில் அவனைக் குற்றவுணர்வில் தள்ள வேண்டும் அதன்பிறகே தன் எண்ணங்கள் எளிதாக ஈடேறும் என்று நினைத்தவள், தன் பார்வையின் தீட்சண்யத்தை குறைக்கவில்லை.

சக்திவரதனுக்கு என்ன சொல்லி இவளை எளிதாக அப்புறப்படுத்துவது என்கிற யோசனை தானே தவிர, குற்றவுணர்வெல்லாம் எழவே இல்லை.

“கல்யாணமே செய்துட்டியா சக்தி?” நீ இப்படி செய்வாய் என்று எதிர்பார்க்கவில்லை என்னும் பாவனையில் அதிருப்தியுடன் ஒலித்தது ஷர்மிளாவின் குரல்.

சக்தி ஒருகணம் தடுமாறி நின்றான். அதை அவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் தொடர்ந்து பேசலானாள். “அவளை காதலிச்சு ஏமாத்த போறேன்னு தானே முதல்ல என்கிட்ட சொன்ன… அப்பவே நான் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ன்னு சண்டை போட்டேன் தானே? நான் உன் திட்டத்துக்கு ஒத்துக்க மறுத்ததுக்கு நம்ம உறவே வேண்டாம்ங்கிற அளவு என்னை தேடி கூட வராம நீ இருந்த. என் வார்த்தைக்கு என்னோட கோபத்துக்கு கொஞ்சமும் மரியாதை இல்லாம உன்னால எப்படி அப்படி ஒரு காரியத்தைச் செய்ய முடிஞ்சது? சரி அந்த போலி காதல் ஆச்சும் அந்தரத்துல நின்னதான்னு கேட்டா… அதுவும் இல்லை… எதுக்காகன்னு தெரியலை அவளை கல்யாணம் பண்ணி வெச்சிருக்க. நான் ஒருத்தி இருக்கிறதையே மறந்து அவகூட கூத்தடிச்சுட்டு இருக்க உன்னால எப்படி முடிஞ்சது சக்தி? ஏன் காதல்ன்னு பேரை சொல்லி அவளை உன்னால ஏமாத்த முடியலையா? அதுனால தான் கல்யாணம் செஞ்சு அவளை ஏமாத்தணும் நினைச்சியா? எப்ப டிவோர்ஸ் பண்ண போற?”

ஷர்மிளா அடுக்கிக்கொண்டே செல்ல, “ஷ்ஷ்… ஷர்மிளா என்ன இது?” என்றான் கண்டிப்புடன்.

எதிர்பாராதவிதமாக இவர்கள் பேச்சை எல்லாம் கேட்க நேரிட்ட சங்கீதாவிற்கு அதற்குமேல் அவர்கள் பேசுவதைக் கேட்கும் துணிவில்லை. என்னதான் சக்தி அவன் வாயாலேயே அவனுக்காக ஒருத்தி இருக்கிறாள் எனச் சொல்லிவிட்டபோதும், நேரில் அவளைப் பார்க்கும்போது இதயம் விண் விண்ணென்று வலித்தது. இதயம் துண்டு துண்டாய் சிதறுவதென்பது இதுதான் போலும். தன்னுடைய மொத்த நேசத்தையும் பெற்றிருப்பவன், தனக்கென உலகில் இருக்கும் ஒற்றை உறவு இப்படி பொய்மையால் உருவானது. என்னவொரு விதி?