SN 6 12991 Advertisement சுடும் நிலவு அத்தியாயம் – 6 மாலை எழுந்து வந்த திலகாவுக்குப் பவித்ரா அவளே காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்க…. அவர் அவளைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே காபியை கையில் வாங்கினார். “நல்லாயிருக்கியா பவித்ரா…” “நல்லாயிருக்கேன் அத்தை.” “டாக்டர் கொடுத்த மாத்திரை மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா….” “ம்ம்.. சாப்பிடுறேன்.” “எனக்கு எங்கேயும் தனியா போய்ப் பழக்கம் இல்லையா…. அதுதான் உன்னைப் பார்க்க முன்னாடியே வரலை… நானும் இவனுங்களை மாத்தி மாத்தி கூப்பிட்டு ஓய்ஞ்சு போயிட்டேன்.” அவர் சொன்னதற்குப் பவித்ரா கடமைக்காகப் புன்னகைத்தாள். பிறகு திலகாவும் கனகாவும் பேச ஆரம்பித்தனர். மாலை பிரபாகர் எழுந்ததும், கனகா சென்று வடை போட்டுக் கொண்டு வந்தார். இரவும் சாப்பிட்டு விட்டே கிளம்ப வேண்டும் என முன்பே திலகாவிடம் சொல்லி இருந்தார். பிரபாகர் டிவி பார்த்துக் கொண்டிருக்க…. பவித்ரா சென்று வெந்நீரில் குளித்துவிட்டு வந்தாள். இப்போதும் நைட்டி தன அணிந்து இருந்தாள். அவள் தங்களுடன் வர மாட்டாள் எனப் பிரபாகருக்குப் புரிந்தது. அவனும் அவளிடம் மேலும் எதைபற்றியும் பேசவில்லை… அமைதியாக அவள் செய்வதைப் பார்த்துக்கொண்டு இருந்தான். இரவுக்குச் சிறிய விருந்தே கனகா தயார் செய்திருந்தார். சாப்பிட்டு முடித்து, சிறிது நேரம் சென்று “கிளம்புவோமா…” எனத் திலகா கேட்க…. அதைக் கேட்டு பவித்ரா முகம் வாடினாள். அதைப் பார்த்த பிரபாகர் “காலையில போவோம் மா…” என்றான். திலகாவும் ஒன்றும் சொல்லவில்லை… அவர் டிவி பார்க்க ஆரம்பித்தார். பிரபாகர் அங்கே தங்குகிறான் என்றதும், பக்கத்து வீட்டுப் பையன்களை அழைத்து, ஹாலில் இருந்த கட்டிலை அறைக்குள் கனகா போட சொன்னார். தன்னிடம் இருந்த சின்ன மெத்தையை அவர் ஹாலில் விரிக்க… அதில் திலகா படுத்துக்கொள்ள… அவர் பக்கத்தில் பாய் விரித்து அவரும் படுத்துக் கொண்டார். பவித்ரா அறையின் கதவை மூடி விட்டு வந்த போது… பிரபாகர் கட்டிலில் உட்கார்ந்து இருந்தான். அவள் அவனைக் கண்டுகொள்ளாமல் படுக்கத் தயாரானாள். இன்னும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தான் இருந்தாள். அவள் கைப்பற்றித் தன் முன்னே அவளை நிற்க வைத்தவன், அவனின் இரண்டு கைகளால் அவளின் பெரிய வயிற்றைத் தடவி பார்க்க… பவித்ரா அவனை முறைத்தாள். அவன் அதைக் கண்டுகொண்டால் தானே…. அதே நேரம் அவளின் வலது பக்க மேல் வயிற்றில் அசைவு தெரிய….. “ஹே… குழந்தை அசையுது பவி…” பிரபாகர் ஆச்சர்யமாகச் சொல்ல…. அது ஒன்றும் பவித்ராவுக்குப் புதிய விஷயம் இல்லையே… அவள் அமைதியாக நின்றாள். இப்போது அவளது இடது பக்கம் கீழ் வயிற்றில் அசைவு தெரிய…. பிரபாகர் அங்கே கை வைத்துப் பார்த்தான். “இது என்னது பவி?” “தலை….” அதே நேரம் பவித்ராவின் மேல் வயிற்றில் குழந்தையின் கால் அசைவது நன்றாகத் தெரிய…. பிரபாகர் அங்கே தொட்டுப் பார்த்தான். “குட்டி நான் அப்பா டா… என்ன டா பண்றீங்க? எனக் கொஞ்சியவன், அவள் வயிற்றில் அழுத்தமாக முத்தமிட…. “ஆமாம், உங்க அப்பா இப்ப தான் வெளிநாட்டில இருந்து வந்திருக்கார்.” என்றாள் பவித்ரா நக்கலாக. மனைவி சொன்னதைக் கேட்டு புன்னகைத்தவன், அப்போதும் தன் குழந்தையைக் கொஞ்சுவதை மட்டும் நிறுத்தவில்லை. “நான் என்ன நைட் முழுசும் இப்படியே நின்னுட்டு இருக்கிறதா….” பவித்ரா சிடுசிடுக்க…. பிரபாகர் எழுந்து நின்றவன், பவித்ராவை அனைத்து முத்தமிட செல்ல…. அவள் விலகி நின்றாள். “போதும், உங்க குழந்தையைக் கொஞ்சியாச்சு இல்லை… போய்ப் படுங்க.” என்றாள். கட்டிலில் அவன் தள்ளிப் படுத்துக்கொள்ள…. பவித்ரா ஓரத்தில் படுத்தாள். பவித்ரா முதலில் அவனுக்கு முதுகு காட்டித்தான் படுத்திருந்தாள். பிறகு எழுந்து அமர்ந்து திரும்பி படுத்தாள். பிரபாகர் மதியம் உறங்கி எழுந்திருந்தால்…. விழித்துக்கொண்டுதான் இருந்தான். உறக்கத்தில் கூட அப்படியே திரும்பாமல்… கவனத்துடன் அவள் எழுந்து திரும்பி படுத்ததைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் மீண்டும் உறங்கிவிட்டாள் எனத் தெரிந்ததும், அவள் அருகில் நெருங்கி படுத்து, அவள் மீது கைபோட்டபடி உறங்கினான். மறுநாள் விடியற்காலையிலேயே பிரபாகரும், திலகாவும் கிளம்ப… கனகா அவர்களுக்குக் காபி போட்டுக் கொடுத்தார். அவர்கள் சென்றதும், உள்ளே வந்து மீண்டும் படுத்த பவித்ராவின் கண்களில் கண்ணீர். காரில் செல்லும் போது.. திலகா மகனிடம் பேச்சு கொடுத்தார். “பவித்ராவும் அவங்க அம்மாவும் மட்டும் இருக்காங்க. பிரசவ வலி எப்ப வேணா வரும். நடுராத்திரியில வந்தா எப்படிச் சமாளிப்பாங்க? அதுக்குத்தான் நம்ம வீட்டுக்கு போயிடலாம்ன்னு நினைச்சேன்.” “இருக்கட்டும்மா… இவ்வளவுநாள் காட்டின ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்கிறதுதான் நல்லது. நான் தினமும் நைட் மம்சாபுரம் வந்திட்டு, திரும்பக் காலையில சிவகாசி வந்திடுறேன்.” பிரபாகர் சொல்வது திலகாவுக்குச் சரியாகவே பட்டது “அப்படியே பண்ணு பிரபா. வலி வந்ததும், நானும் வந்து ஆஸ்பத்திரியில் இருக்கேன்.” என்றார். அன்று இரவு பத்து மணிக்கு வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டு கனகாவும், பவித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள்? கதவை திறக்கவே இருவருக்கும் யோசனையாக இருந்தது. “பவித்ரா….” எனப் பிரபாகரின் குரல் கேட்டதும், கதவு திறக்க அவளே எழுந்து சென்றாள். எதிர்பாராத நேரத்தில் தன் கணவனைப் பார்த்ததும், பவித்ராவுக்கு மனம் துள்ளவே செய்தது. ஆனால் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் “வாங்க…” என்றாள். மருமகனை பார்த்ததும் சாப்பிட சொன்னார் கனகா….. சாப்பிட்டு வந்ததாகச் சொல்லி பிரபாகர் அறைக்குள் செல்ல…. கனகா பவித்ராவிடம் பாலை கொடுத்து விட்டார். அறையில் உடை மாற்றிக்கொண்டிருந்த பிரபாகர் பவித்ராவை பார்த்ததும் புன்னகைக்க… அவள் அவனை ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தாள். “என்ன டி ரொம்ப ஆராய்ச்சி பண்ற?” “நிஜமாவே சாப்டீங்களா? நீங்க எப்பவும் நைட் லேட்டாதான சாப்பிடுவீங்க?”அவனிடம் பாலைக் கொடுத்துக்கொண்டே அவள் கேட்க….அதை வாங்கிப் பருகியபடி பிரபாகர் அவளுக்குப் பதில் அளித்தான். “ஒன்பது மணிக்கு அங்க இருந்து கிளம்பினேன். திடிர்ன்னு வந்து நின்னா உங்க அம்மா என்ன பண்ணுவாங்க? அதுதான் வர்ற வழியில சாப்பிட்டேன்.” “இன்னைக்கு என்ன திடிர்ன்னு இந்த நேரத்தில வந்திருக்கீங்க?” “உனக்கு எப்ப வேணா வலி வரலாம். பகல்ன்னா எதாவது வண்டி பிடிச்சு ஆஸ்பத்திரி போய்டுவீங்க. நைட் நேரம் என்ன பண்ணுவீங்க? அதுதான் வந்தேன். ஏன் நான் வரக் கூடாதா?” பிரபாகர் அவளைக் கூர்மையாகப் பார்க்க… “அதுக்கில்லை… திடிர்ன்னு என்ன அக்கறை? அதுதான் யோசிச்சேன்.” பவித்ரா இழுக்க…. “நான் எப்பவும் உன்மேல அக்கரையாத்தான் இருந்தேன். அதை நீதான் கெடுத்துகிட்ட….” என்றான். பவித்ரா தன் கணவனை முறைக்க… “நீதான் தேவையில்லாம ஆரம்பிச்ச… சரி விடு, இப்ப நாம குழந்தையைப் பத்தி மட்டும் பேசுவோம்.” என்றவன், “இன்னைக்கு என்ன செஞ்சுச்சு குட்டி?” எனக் கேட்க…. அவள் பதில் சொல்லாமல் நின்றாள். பவித்ரா இன்று புடவை கட்டி இருந்தாள். நேற்று போல் இன்றும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அவள் வயிற்றைத் தடவி பார்த்தவன், அதில் முகம் புதைத்து தன் குழந்தையைக் கொஞ்சினான். சிறிது நேரம் சென்று விலகியவன் “உட்காரு பவி கால் வலிக்கப் போகுது.” என்றதும், பவித்ரா கட்டிலில் உட்கார…. தன் சட்டை பையில் இருந்து இரண்டு வளையல்களை எடுத்து, அவள் கைகளில் அவனே போட்டு விட்டான். “எனக்கு ஒன்னும் வேண்டாம்.” எனப் பவித்ரா அதைக் கழட்ட செல்ல.. அவள் கைபிடித்துத் தடுத்தவன், “வளைகாப்பு தான் கிராண்டா பண்ண முடியலை… இதாவது இருக்கட்டும். உனக்கு உங்க அம்மா கல்யாணத்துக்கு வாங்கின வளையல்ல இருந்து ரெண்டை எடுத்து நீ அவங்ககிட்ட கொடுத்திடு.” என்றான். “எப்படினாலும் முதல் குழந்தை செலவு அவங்க தானே பண்ணனும். இருக்கட்டும் அவங்க ஒன்னும் நினைச்சுக்க மாட்டாங்க.” பவித்ரா சொல்ல…. “சொல்றது செய் பவித்ரா…” பிரபாகர் சற்று அழுத்தமாகச் சொல்ல…. அவளும் மேற்கொண்டு பேச்சை வளர்க்கவில்லை. மறுநாள் காலை பிரபாகர் கிளம்பியபோது “அம்மா தெரிஞ்சவங்ககிட்ட வண்டிக்குச் சொல்லித்தான் வச்சிருக்காங்க. அவங்களும் நைட் எந்நேரம்னாலும் வர்றேன்னு சொல்லி இருக்காங்க.” பவித்ரா சொன்னதும், பிரபாகர் அவளை முறைத்த முறைப்பில் ஒரு நிமிடம் அரண்டு போய் நின்றவள் “இல்லை நைட் அங்க இருந்து வர உங்களுக்குக் கஷ்ட்டமா இருக்குமேன்னு சொன்னேன். இங்கேயே வந்து நைட் சாப்பிடுங்க.” என்றாள். அதன்பிறகே சிறிது சமாதானம் ஆனவன், அவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான். அன்று இரவு அவன் வந்த போது, பவித்ரா கொஞ்சம் வாடிப்போய்த் தெரிந்தாள். என்ன என்றவனிடம் “ஒன்னும் இல்லை… சாப்பிடுங்க.” என உணவு எடுத்து வைத்தாள். பிரபாகர் சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக்கொண்டு இருந்தான். பவித்ரா அப்போதே சென்று படுத்து விட்டாள். சிறிது நேரம் சென்று அவனும் உறங்க சென்றான். அவன் படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம், எதோ சத்தம் கேட்கவும் எழுந்து பார்த்தான். பவித்ராவுக்கு அப்போது சுளிரென்று அடிவயிற்றில் வலி எடுக்க… அவள் பல்லைக் கடித்து வலியை பொறுத்துக் கொண்டிருந்தாள். “என்ன பவி செய்யுது?” பிரபாகர் கேட்கும் போதே… அவளுக்கு வலி விட்டு விட்டது. அசதியில் அவள் அப்படியே உறங்கிப் போனாள். பிரபாகர் அவளையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான். மீண்டும் நள்ளிரவில் அதே போல ஒரு வலி வந்ததும், அவள் எழுந்து கொள்ள…. “நீ கிளம்பு ஹாஸ்பிடல் போவோம்.” என்றவன், எழுந்து ஹாலுக்குச் சென்றான். இவர்கள் பேச்சுச் சத்தம் கேட்டு கனகாவும் எழுந்து உட்கார்ந்து இருந்தார். பிரபாகர் அவரிடம் விஷயத்தைச் சொல்ல… அவர் சென்று பக்கத்து வீட்டில் இருந்த வயதான பெண்மணியை அழைத்து வந்தார். அவர் வந்து பார்த்து விட்டு “இன்னும் ஒருவாரம் இருக்கே… எதுக்கும் கஷாயம் வச்சு கொடுப்போம். சூட்டு வலின்னா விட்டுடும், பிள்ளை வலின்னா நிக்காம வரும்.” எனக் கஷாயம் வைக்கச் சென்றார். “நாம ஆஸ்பத்திரிக்கே போகலாமே…” பிரபாகர் சொல்ல… “நல்லா வலி வராம அங்க போனாலும், வலி வந்த பிறகு வாங்கன்னு தான் சொல்வாங்க. இதெல்லாம் உடனே ஆகாது. நீங்க போய்ப் படுங்க. நாங்க பார்த்துக்கிறோம்.” என்றார் அந்தப் பெண்மணி. அந்நேரம் பவித்ராவை வெந்நீரில் குளிக்க வைத்து, அவளுக்குக் குடிக்கக் கஷாயம் கொடுக்க…. விடியற்காலையில் அவளுக்குத் தொடர்ந்து வலி வந்தது. அதன் பிறகே ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போதும் உடனே குழந்தை பிறக்கவில்லை… ஏன் அன்று மதியம் வரை கூடப் பிறக்கவில்லை… அவள் வலியில் துடிக்கும் போது எல்லாம் பிரபாகரையே திட்டுவாள். “நான் உங்ககிட்ட வேலைதான கேட்டு வந்தேன். உங்களை யார் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னது? இப்ப எனக்குதான் வலிக்குது.” என அவள் சின்னக் குழந்தை போல் அழ… பிரபாகருக்கு அவளைப் பார்க்கவே கஷ்ட்டமாக இருக்கும். “என்னைக்கு இருந்தாலும் பொம்பளைங்க பிள்ளை பெத்துதான் ஆகணும். நீ கொஞ்சம் அடங்கு.” எனக் கனகா மகளை அதட்ட… சுதாகரோடு நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்ட திலகா “எதோ வலியில பேசுறா விடுங்க.” என்றார். மருத்துவர் வந்து பார்த்த போது “என்ன இன்னும் குழந்தை பிறக்கலை….” எனக் கனகா அவரிடம் கவலையாகக் கேட்க…. “வலி நல்லா இருக்கு. ஆனா… கர்ப்பவாசல் திறக்கலை…. இன்னும் ஒரு மணிநேரம் பார்ப்போம், இல்லைனா ஆப்ரேஷன்தான் பண்ணனும்.” என மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல…. “இந்த ஆப்ரேஷனை காலையிலேயே பண்ணி இருக்கலாம். இவ்வளவு நேரம் வலியாவது மிஞ்சி இருக்கும். இனி அதுவேற வலிக்கும்.” என அறுவைசிகிச்சையை நினைத்து பவித்ரா அழ… அதைப் பார்த்த பிரபாகரும் கண் கலங்கினான். ஒருவழியாக அடுத்த ஒருமணி நேரத்தில் பவித்ராவுக்குச் சுகப்பிரசவத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. “நீ பிறக்கிறதுக்குள்ள என்ன பாடு படுத்திட்ட டா…” என்று சந்தோஷமாய்ச் சொல்லிக்கொண்டே திலகா பேரனை கையில் வாங்கினார். பிரபாகர் குழந்தை பிறந்ததை அவன் இரண்டு சித்தப்பாக்களுக்கும் அழைத்துச் சொன்னான். ஆனால் சித்ரா மட்டுமே வினீத்தை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார். பவித்ராவுக்கு அவர் மீதும் கோபம்தான். இத்தனை நாள் அவரும் தானே அவளைப் பற்றி நினைக்காமல் இருந்தார். ஆனால் சித்ராவை பார்த்ததும், அவளால் கோபத்தை இழுத்து வைக்க முடியவில்லை… ஏனென்றால் சித்ரா மிகவும் இளைத்து போய் இருந்தார். “என்ன ஆச்சு அத்தை? இவ்வளவு மெலிஞ்சு இருக்கீங்க?” பவித்ரா கேட்க…. “சும்மா டயட்…” என்றவர், சிறிது நேரத்தில் கிளம்பியும் விட்டார். மறுநாள் பவித்ராவின் அக்கா தாமரையும் சென்னையில் இருந்து வந்துவிட…. பிரபாகர் அவன் வீட்டிற்குக் கிளம்பினான். திலகா மட்டும் பவித்ராவுடன் மருத்துவமனையில் இருந்தார். அவரும் அடுத்தநாள் பவித்ரா குழந்தையுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்றதும், தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார். மருத்துவமனையில் இருந்து சென்ற பிரபாகர், திரும்பி தன் மனைவி மகனை பார்க்க வர இரண்டு வாரம் ஆகியது. பவித்ராவின் போபம் இன்னும் அதிகமாகி இருந்தது. அன்று இரவு அறைக்குள் வந்த பவித்ரா குழந்தையைப் பிரபாகரின் கையில் கொடுத்தவள் “இவன் நைட் முழுசும் தூங்கவே மாட்டான். இவனை நீங்களே வச்சுக்கோங்க. நான் தூங்கணும்.” எனக் கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு, கட்டிலில் திரும்பி படுத்துக்கொண்டாள். “எனக்கு எங்க ராஜா குட்டியை வச்சுக்கக் கஷ்ட்டமா என்ன? நாம ரெண்டு பேரும் நைட் முழுக்கப் பேசிட்டு இருக்கலாம்.” என அவன் தன் மகனை கொஞ்ச…. “இவர் நினைச்ச நேரம் வருவார், போவார்… மத்தநேரம் இருக்கோமா இல்லையான்னு கூடப் பார்க்க மாட்டார்.” எனப் பவித்ரா முனங்க…. “உனக்கு இதுதான் என் மேல கோபமா? ரொம்ப வேலை பவி, அதுதான் வரமுடியலை….” என்றான் பிரபாகர். “ஏன் நீங்க மட்டும்தான் அந்தக் குடுமபத்தில இருக்கீங்களா? மத்தவங்க எல்லாம் என்ன ஆனாங்க?” பவித்ரா கேட்டதும், பிரபாகர் அவளை முறைத்துப் பார்த்தான். “நான் என் பையனோட நிம்மதியா இருக்கலாம்ன்னு வந்திருக்கேன். உனக்கு என்ன தெரிஞ்சிக்கனுமோ அதை அங்க வந்து தெரிஞ்சிக்கோ…” என்றான் கறாராக. பவித்ரா கண்ணை மூடிக்கொள்ள… தன் மொச்சைக் கொட்டை கண்ணைத் திறந்து கொட்ட கொட்ட விழித்துப் பார்த்துக் கொண்டிருந்த தன் மகனை, வாகாகக் கையில் வைத்து பிரபாகர் ஆசையாகக் கொஞ்ச ஆரம்பித்தான். Advertisement