Advertisement
அத்தியாயம் – 4
அந்த மாத வரவு செலவு கணக்குளை பார்த்துக்கொண்டிருந்த பிரபாகர், அந்த மாதத்தின் மின்சாரக் கட்டணத்தைப் பார்த்ததும், பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளானான்.
“இது என்ன இவ்வளவு தொகை வந்திருக்கு? எல்லோரும் வீட்ல அப்படி என்னதான் பண்றீங்க?” அவன் எல்லோரையுமே பார்த்து கேட்க….
“ஆறு ரூம்ல ஏசி இருக்கு… பிறகு வரத்தான செய்யும்?” என்றார் தேவி.
“அதுக்காக இவ்வளவா? எல்லா ரூம்லயும் நைட் புல்லாவா ஏசி ஓடுது?”
“இல்லைப்பா… நாங்க எல்லாம் ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் போட்டுட்டு, அப்புறம் அணைச்சிட்டு பேன் தான் போடுவோம்.” திலகா சொல்ல… மற்றவர்களும் ஆமோதித்தனர்.
“அம்மா, இந்த மாச பில்லு கட்ற பணத்தை வச்சு ஒரு ஏழைக் குடும்பத்தில கல்யாணமே பண்ணிடுவாங்க. அவ்வளவு வந்திருக்கு… என்னதான் நாம வசதியானவங்களா இருந்தாலும், இது ரொம்ப அதிகம்.”
“அடுத்த மாசம் இதே மாதிரி பில் வந்தா… எல்லா ரூம்லயும் ஏசி எடுத்திடுவேன்.” பிரபாகர் கண்டிப்பாகச் சொல்ல…
“எல்லா ரூம்லயும் வேண்டாம், இவ ஒருத்தி ரூம்ல எடுங்க அண்ணா போதும். காலையில, சாயங்கலாம் எப்ப இவ ரூம்குள்ள போனாலும், ஏசி ஓடிட்டேதான் இருக்கும். அதுவும் அவ்வளவு சில்லுன்னு வச்சிருப்பா…” காமினி யாழினியை பார்த்து சொல்ல…
“பொய் சொல்லாத டி….” யாழினி கோபமாகக் கத்த….
“இப்ப கூட இவ ரூமை யாரவது போய்ப் பார்த்திட்டு வாங்க. ஏசி ஓடிட்டு தான் இருக்கும். கொஞ்சம் கம்மி பண்ணுன்னா கேட்கவே மாட்டா… நான் அதனால அம்மா ரூம்ல தான் தூங்குறேன்.”
காமினி சொன்னதும், சுதாகரும், வினீத்தும் போட்டி போட்டுக்கொண்டு மாடிக்கு சென்றனர். திரும்பக் கீழே வந்து, காமினி சொல்வது உண்மைதான் என்றனர்.
“எதுவுமே கஷ்ட்டபடாம கிடைக்கும் போது அதோட அருமை தெரியாது. ஒரு நாலு நாள் ஏசி இல்லாம இருந்து பார்க்கிறியா.. அப்ப தெரியும், அது இல்லாம இருக்கிறவங்களோட கஷ்ட்டம்.” பிரபாகர் சொல்ல….
“அதை நீங்க சொல்ல வேண்டாம், எங்க அப்பா சொல்லட்டும். என்னவோ நீங்க மட்டும்தான் இந்தக் குடும்பத்துக்காக உழைக்கிற மாதிரி பேசுறீங்க? எங்க அப்பாவும் தான் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறார்.”
யாழினி எடுத்தெறிந்து பேச… அதைக் கேட்டு எல்லோருக்குமே ஒருமாதிரி ஆகிவிட்டது என்றால்… பவித்ராவுக்குப் படபடப்பே வந்துவிட்டது. இவர் ஏன் இதெல்லாம் கேட்கிறார் என நினைத்தவள், பிரபாகரையே பயத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“யாழினி பேசாம வாயை மூடு?” தேவி தன் மகளை அதட்ட….
“இருங்க சித்தி…நாங்க பேசிக்கிறோம்.” என்றவன்,
“கரண்ட் பில் பொதுவுல இருந்து கட்றோம். அதனால நான் கேட்பேன். இனி அடுத்த மாசத்தில இருந்து மாடிக்கு தனி மீட்டர் போட்டுடலாம். நீ உங்க அப்பாவையே பில் கட்ட சொல்லு…” என்றான் பிரபாகர் அவளையும் விடத் திமிராக.
அவளுக்குத் தெரியும் சிதம்பரத்தை பில் கட்ட சொன்னால்… என்ன நடக்கும் என்று… அவர் அவளைத்தான் செருப்பால் அடிப்பார். அதனால் பேச்சை மாற்றினாள்.
“உங்க பொண்டாட்டி ஷாப்பிங் பண்ணிட்டு வந்த போது…. அதை மட்டும் நீங்க ஒன்னும் சொல்லாம, பேசாம தான இருந்தீங்க.” யாழினி அடுத்த விவாதத்தைத் தொடங்க….
“பவித்ரா…” பிரபாகர் அழைக்க… அவள் அங்கிருந்தே “என்னங்க?” என்றாள்.
“நீ உனக்கோ எனக்கோ இன்னைக்கு எதாவது வாங்கினியா….” அவன் தன் மனைவியிடம் கேட்க… அவள் இல்லையென்றாள்.
பிரபாகர் திரும்பி யாழினியை பார்க்க…. “இதை விடுங்க, உங்க கல்யாணம் எப்படி நடந்தது? அதுக்குப் பணம் எங்க இருந்து வந்துச்சு? எல்லாச் செலவும் நாம தான செஞ்சோம். உங்க பொண்டாட்டி வெறுங்கையை வீசிட்டு தான வந்தாங்க. அதெல்லாம் மட்டும் பொது இல்லையா….”
யாழினி பேசியதை இப்போது சித்ராவாலேயே பொறுக்க முடியவில்லை…. “இது உனக்குத் தேவை இல்லை…. உங்க அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் எல்லாம் தெரியும்.” என்றார்.
“ஏன் மா இப்படியெல்லாம் பேசுற?” என்றார் திலகா…
அவர்கள் இருவரையும் பொறுங்க என்பது போல் பார்த்த பிரபாகர் “யாழினி உனக்கு விளக்கம் சொல்லனும்ன்னு எனக்கு அவசியம் இல்லை… இருந்தாலும் சொல்றேன்.” என்றவன் தொடர்ந்து,
“மாசம் வருமானத்தில இவ்வளவுன்னு, நான், ரெண்டு சித்தப்பாவும் ஒரு தொகை எடுத்துப்போம். அதைச் சேர்த்து வச்சு, அதுல நகை வாங்கிறதோ…. சொத்து வாங்கிறதோ… அவரவர் விருப்பம். அதுல தான் அவங்கவங்க குடும்பத்தோட தனிப்பட்ட செலவுளை பார்த்துக்கணும்.”
“அதுதவிர வீட்டுச் செலவு எல்லாம் பொதுச் செலவு…. அது நாங்க கையில இருந்து போடுறது இல்லை… மொத்த வருமானத்தில இருந்துதான் எடுப்போம். மிச்சம் இருக்கிறதை சேர்த்து வச்சிகிட்டே வந்து… பொதுவுல விசேஷம் வந்தா செலவு செய்வோம்.”
“இதுதான் எங்க அப்பா இருக்கும் போதே நடந்தது. நான் வந்த பிறகு, என்னுடையதில் சுதாவுக்குப் பாதி எடுத்து அவன் பேர்ல பாங்க்ல போடுறேன்.”
“நம்ம ஒவ்வொரு குடும்பத்துலேயும் கல்யாணம் வந்தா… பொதுவுல இருந்து எவ்வளவு எடுக்கணுமோ… அவ்வளவுதான் நான் என் கல்யாணத்துக்கும் எடுத்தேன். மிச்சத்துக்கு என் சொந்த பணத்தில இருந்துதான் செலவு செஞ்சேனே தவிர… பொதுவுல இருந்து எடுக்கலை… நீ வேணா உங்க அப்பாகிட்டையே கேட்டுக்கோ….”
“இன்னொன்னு நீ என்னைப் பத்தி பேச உனக்கு உரிமை இருக்கு. ஆனா என் பொண்டாட்டி பத்தி இனியொரு தடவை நீ பேசின… விளைவு ரொம்ப மோசமா இருக்கும், பார்த்துக்கோ…” என்று அவன் கடுமையாக எச்சரிக்க…. யாழினி கோபமாக அங்கிருந்து சென்றாள்.
“அண்ணா… அவதான் எதோ லூசு மாதிரி பேசுறான்னு பார்த்தா… நீங்க வேற டென்ஷன் ஆகிட்டு….இதெல்லாம் இவ யார் சொல்லி கொடுத்து பேசுறான்னு தெரியலை….” என்றபடி சுதாகர் ஜாடையாக வசுந்தராவை பார்க்க….
“நான் வீட்டுக்கு கிளம்புறேன். எங்க இந்த மோகனை இன்னும் காணோம்.” என்றபடி வசுந்தரா எழுந்து செல்ல… அவர் பின்னே தர்ஷினியும் சென்றாள்.
வசுந்தராவின் உண்மையான குணத்தை அறிந்தவர் யாருமே இல்லை… அவர் தன் அண்ணன், தம்பிகள், மற்றும் பிரபாகரிடம் மிகவும் நல்லவராக நடிப்பார். அவர் பற்றிக் கொஞ்சமாகத் தெரிந்தவர்கள் சித்ராவும், சுதாகரும் மட்டுமே….
வசுந்தராவுக்கு சுதாகரை பிடிக்காது. அதனால் அவனை எப்போதும் மட்டும் தட்டியே பேசுவார். தர்ஷினியை பிரபாகர் எப்படியும் திருமணம் செய்து கொள்வான் என நம்பிக்கொண்டு இருந்தார். ஆனால் அவன் முடியாது என மறுத்து விட்டான்.
அவன் சொன்ன காரணமும் ஏற்கும் படி இருந்ததால்…. அவன் வீட்டினர் யாரும் அவனை வற்புறுத்தவில்லை என்பதில், அவருக்கு அந்த வீட்டினர் மீது மிகுந்த கோபம்.
அன்று எல்லோரும் அவரவர் அறைக்குச் சென்ற பிறகு… கீழே ஹாலில் பிரபாகரின் குடும்பம் மட்டுமே இருந்தது.
“அண்ணா, நான் இன்னும் எந்த வேலையும் பார்க்க ஆரம்பிக்கலை… அப்படியிருக்கும் போது.. நீங்க எனக்கு ஏன் பாதிப் பங்கு தர்றீங்க?” சுதர்கர் பிரபாகரிடம் கேட்க….
“அதெல்லாம் நீ பேசாத….உனக்கு செய்யாம வேற யாருக்குச் செய்றது. பேசாம போய்ப் படு….” என்றான் அவன். மகன்கள் இருவரும் பேசுவதைக் கேட்ட திலகாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டது.
“நீங்க யாருக்காக இவ்வளவு உழைக்கிறீங்க? என்னைக்காவது நேரத்திற்குச் சாப்பிட்டு இருப்பீங்களா இல்லை தூங்கி இருப்பீங்களா….. பணம் வசூல் பண்ண பாதி நேரம் வெளியதான் அலையறீங்க. ஆனா இந்த யாழினி என்ன பேச்சு பேசுது?”
“அவ பேசுறது எல்லாம் நீ பெரிசா எடுத்துக்காத… இந்த வயசுல உழைக்காம அப்புறம் வேற எந்த வயசுல உழைக்கிறது?”
“அப்பா இப்படி உழைச்சு உழைச்சு என்னத்தைக் கண்டார்? அவர் ஆசைப்பட்டுக் கட்டின வீட்ல கூட அவர் வாழலை…நீங்களாவது உங்களைப் பார்த்துக்கோங்க அண்ணா…” சுதாகர் கண்கலங்க… பிரபாகர் அவனைத் தட்டி கொடுத்தான்.
அவர்கள் இருவரும் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த பவித்ரா “ஆமாம்ங்க இனியாவது மதியம் ரெண்டு மணிக்குள்ள சாப்பிட வீட்டுக்கு வாங்க. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்திட்டுச் சாயங்காலம் போங்க… சும்மா அலைந்து உடம்பை கெடுத்துக்காதீங்க.” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு பிரபாகரின் முகம் புன்னகையில் விரிய…. “ஆமாம் பவித்ரா சொல்றது சரிதான். எனக்குதான் உங்க அப்பாவை இப்படி எல்லாம் பார்த்துக்கத் தெரியலை….” என்றார் திலகா கவலையாக….
“அம்மா ! இதுல உங்க மேல ஒரு தப்பும் இல்லை…. அப்பா நீங்க சொன்னலும் கேட்க மாட்டார். அது எல்லோருக்குமே தெரியும். நீங்க போய்க் கவலைப்படாம படுங்க.” என்றான் பிரபாகர்.
“இன்னைக்கு என்னன்னமோ வாங்கினியே ஒரு நாலு புடவை வாங்கி இருக்கக் கூடாது. திரும்பத் திரும்பக் கட்டின புடவையே கட்டுற…” திலகா பவித்ராவிடம் சொல்ல….
“ஐயையோ ! நான் அப்படியே வாங்கிட்டாலும், இப்பதான் ஒருத்திக்கு கணக்கு சொல்லி முடிச்சிருக்கு.” என நினைத்தவள், வெளியே சிரித்து மட்டும் வைத்தாள்.
“அதுக்கென்ன மா வாங்கிடலாம். நாளைக்கு ஒரு பெரிய ஜவுளிக் கடை திறப்பு விழா இருக்கு… அதுக்கு நீயும் வா பவித்ரா… அங்க உனக்கு வாங்கலாம்.” என்றான் பிரபாகர்.
அவர்கள் அறைக்குள் வந்ததும் பவித்ரா பிரபாகரிடம் சண்டை பிடித்தாள்.
“நான் உங்ககிட்ட வேலை தான கேட்டேன். உங்களை யாரு என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னது? இப்ப உங்களாலதான் நான் எல்லார்கிட்டயும் பேச்சு கேட்கிறேன்.”
அவள் கோபமாகச் சொல்ல… பிரபாகர் சிரித்தான். “ஏன் டி கல்யாணம் ஆகி, முக்கியமான வேலை எல்லாம் முடிஞ்ச பிறகு, இப்படிக் கேட்டா என்ன சொல்றது?” என்றவன், அவளை இழுத்து அணைத்துக்கொள்ள… தன் கணவனின் மார்பில் பவித்ராவும் சுகமாகச் சாய்ந்துக் கொண்டாள்.
மறுநாள் அவன் சொன்னது போல்…. அவளை அழைத்துக்கொண்டு கடை திறப்பு விழாவுக்குச் சென்றான். அவளுக்கு வேண்டும் அளவுக்கு எல்லா விதமான புடவைகளும் வாங்கினர்.
நேற்று நடந்த சண்டையில் பவித்ரா வாங்கவே தயங்க… “இது பொது இல்லை… நம்ம பணம். அதனால பயப்படாம வாங்கு.” என்றான்.
பிறகு அவளை அழைத்துக்கொண்டு அவள் அம்மா வீட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில் நிறையப் பழங்கள், இனிப்பு மற்றும் கார வகைகள் அவன் வாங்க…பவித்ரா அவனை வியப்பாகப் பார்த்தாள்.
“நாம பணம் கொடுத்தா அவங்க வாங்க மாட்டங்க பவி… அதனாலதான். நீ எப்ப உங்க வீட்டுக்கு போனாலும், இது மாதிரி நிறைய வாங்கிப்போய்ப் போடு.” என்றான்.
பவித்ராவுக்கு அழுகை வரும்போல இருந்தது. அம்மா மட்டும் தனியாக இருக்கிறார் என அவள் தவிக்காத நாட்களே இல்லை…. தாமரை அவரைத் தன்னுடன் வரும்படி அழைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். கனகாதான் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறார்.
இவர்கள் சென்ற போது கனகா கைவினைப்பொருட்கள் செய்து கொண்டு இருந்தார். மகளையும் மருமகனையும் பார்த்ததும் மகிழ்ச்சியாக வரவேற்றார்.
“இங்க ராஜபாளையத்துக்கு ஒரு கடை திறப்பு விழாவுக்கு வந்தோம். அதுதான் அப்படியே உங்களையும் பார்த்திட்டு போகலாம்ன்னு.” என்று பிரபாகர் சொன்னதும், அப்போதே விருந்து தயாரிக்கச் சென்றார்.
பிரபாகர் கட்டிலில் ஓய்வாகப் படுத்தபடி டிவி பார்க்க… பவித்ரா தன் அம்மாவுக்கு உதவியபடி அவர்கள் வீட்டு கதை எல்லாம் சொல்லி முடித்து விட்டாள்.
மருமகன் தன் மகளை நன்றாக வைத்துக்கொள்வதை எண்ணி கனகாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மதியம் சாப்பிட்டு மாலை வரை அங்கிருந்து இருந்துவிட்டே, கிளம்பி சென்றனர்.
இப்படி நன்றாகத்தானே இவர்கள் வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. திடிரென்று ஏன் இந்தப் பிரிவு? அதுவும் மனைவி மாசமாக இருக்கும் இந்த நேரத்தில்…
அவருக்குத் தெரியாத ஒன்று… பவித்ரா கர்ப்பமாக இருந்தது பிரபாகருக்கு கூடத் தெரியாதது. அவன் எங்கே அவளை சொல்லவிட்டான்.