Advertisement
“எனக்கு இதுதான் கவலையா இருக்கு… இவ அழகுல மயங்கி பிரபா இவ பின்னாடி போயிட்டு.. எங்கே என்னையும் அவன் தம்பியையும் கைவிட்டுடுவானோ…” திலகா கவலையாகச் சொல்ல…
அது ஒரு தாயிக்கே வரும் இயல்பான பயம். அதுவும் கணவர் இல்லாத நிலையில்… பிரபாகரையே திலகா சார்ந்து இருக்கும் நிலையில்… அவருக்கு இந்தக் கவலை வருவது இயல்புதான். ஆனால் அதைப் போக்காமல் அதை இன்னும் பெரிதாக்கினார் வசுந்தரா.
“என்ன போயிடுவானோ? அதுதான் போயிட்டானே…. நாம சம்பந்தம் செய்யிற இடம் பெரிய இடமா இருந்ததான் கௌரவமா இருக்கும்ன்னு சொன்னா கேட்டானா…”
வசுந்தரா சொன்னதற்குத் தேவி ஒத்து ஊதினார். “பிரபா வேற எந்த விஷயத்திலேயும் இவ்வளவு பிடிவாதம் பிடிச்சதே இல்லை….எனக்கும் கொஞ்சம் சந்தேகமா தான் இருக்கு.”
“திலகா அக்கா, நீங்க வீணா கவலைப்படாதீங்க. நம்ம பிரபா அப்படியெல்லாம் கிடையாது. ஏன் இன்னைக்குக் கூட ரூம் அலங்காரம் வேண்டாம்ன்னு சொல்லிட்டானே… அவனோட தம்பி தங்கைகளை மனசுல வச்சுத்தானே அப்படிச் சொன்னான். அவனுக்கு எப்படி நடந்துகிறதுன்னு தெரியும்.” என்ற சித்ரா தொடர்ந்து,
“பிரபா என்ன இவளைத்தான் லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைங்கன்னா சொல்லுச்சு. இந்தப் பெண்ணைப் பார்த்தேன் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைங்கன்னு தான சொல்லுச்சு. இதுல என்ன தப்பு? மனசுல எதையும் நினைக்காம போய்ப் படுங்க.” என்றார்.
பவித்ரா வரும்வரை அவளுக்காகக் காத்திருந்த பிரபாகர், கதவை மூடி தாழிட… அங்கிருந்த மேஜையில் பால் சொம்பை பவித்ரா வைத்தாள்.
“நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு… நான் இப்ப வந்திடுறேன்.” எனப் பிரபாகர் கையில் துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றவன், வேகமாகத் திரும்பி வந்து “தூங்கிட மாட்ட இல்ல…” எனக் கேட்டதும், பவித்ராவின் துடுக்குத்தனம் தலைதூக்க…
“அதெல்லாம் சொல்ல முடியாது. தூங்கினாலும் தூங்கிடுவேன். எதுக்கும் இப்பவே குட் நைட் சொல்லிடுறேன்.” என்றவள், வசதியாகக் கட்டிலில் படுத்துக்கொள்ள…
“சரி நீ தூங்கு. நான் வந்து எழுப்புவேன்.” என்றான் பிரபாகர் கண்சிமிட்டி…
“சரி முடிஞ்சா எழுப்புங்க.”
“எனக்குத் தெரியும் எப்படி எழுப்பணும்னு…” பிரபாகர் புன்னகைத்தபடி குளிக்கச் செல்ல… பவித்ரா வேண்டுமென்றே தூங்குவது போல் படுத்திருந்தாள்.
குளித்துப் பிரெஷாக வந்தவன், கட்டிலில் ஏறி பவித்ராவின் அருகே படுத்து, அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு அவன் வந்தது தெரிந்துதான் இருந்தது. இருந்தாலும், கண்களைத் திறக்கவில்லை…
அவள் நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கியவன், அவள் கன்னத்தை மிருதுவாக வருடி… அப்படியே கழுத்துக்குக் கொண்டு செல்ல.. பவித்ரா அவன் கையை மேலும் நகர விடாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.
“ஏன்?” பிரபாகார் கேட்டதற்குப் பவித்ரா பதில் சொல்லாமல் இருக்க…
“சரி ஒன்னும் பண்ணலை… கண்ணைத் திற கொஞ்ச நேரம் பேசலாம்.” என்றான். அவளும் எழுந்து அமர்ந்தாள்.
“உனக்கு என்ன பிடிச்சிருக்கா?” பிரபாகர் கேட்க… பவித்ரா அவனை முறைத்தாள். இப்போது கேட்கும் கேள்வியா இது?
“இப்போ கேட்க கூடாதுதான், இருந்தாலும் தெரிஞ்சிக்க ஒரு ஆசைதான்.”
“ம்ம்…உங்களுக்கு எப்ப இருந்து என்னைப் பிடிக்கும்? ” பவித்ரா வெட்கத்துடன் கேட்க…
“நீ அன்னைக்கு வேலை கேட்டு வந்தியே.. அப்பதான் தோனுச்சு…”
“ஓ.. அப்பதானா…. என்ன திடிர்ன்னு? என் மேல பரிதாபமா?”
“பரிதாபப்பட்டா வேலைதான் கொடுத்திருப்பேன். கல்யாணம் பண்ணிக்க நினைச்சிருக்க மாட்டேன். ஏன் நீ கண்ணாடி பார்க்கிறது இல்லையா பவித்ரா…”
“நான் பார்ப்பேன் தான்….” பவித்ரா இழுக்க….
“எனக்கு அப்ப வீட்ல பொண்ணு பார்த்திட்டு இருந்தாங்க. நான் யாழினிக்கு பண்ணிட்டு பண்ணிகிறேன்னு சொன்னேன். ஆனா இந்த வருஷம் கல்யாணம் பண்ணலைன்னா, பிறகு நாலு வருஷம் ஆகுமாம் கல்யாணம் ஆக….”
“அப்பத்தான் நீ வேலை கேட்டு வந்த… எனக்கு உங்க அப்பாவை ரொம்ப வருஷமா தெரியும். நல்ல மனுஷர். உங்க அம்மாவும் அமைதியான டைப். வீட்ல சொன்னேன், முதல்ல ஒத்துக்கலை… வேற பொண்ணு பார்த்தாங்க. ஆனா எனக்குப் பிடிக்கலை…. அப்புறம் அவங்களே ஒத்துகிட்டு நம்ம கல்யாணத்தைப் பண்ணி வச்சாங்க.”
“உங்க வீட்லயே ஒரு பொண்ணு இருக்காளே…அவளை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லலையா….”
“சொல்லாம எப்படி இருப்பாங்க? சொன்னாங்கதான். ஆனா தர்ஷினி சின்ன வயசுல இருந்து எங்களோடவே சேர்ந்து வளர்ந்தவ.. அதனால எனக்கு அவகிட்ட அப்படி ஒரு எண்ணம் வரலை…”
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும் பவித்ரா…. எங்க அப்பா இருந்தவரை இந்தக் குடும்பம் உடையாம பார்த்துகிட்டார். இனிமேலும் நம்மால எந்தப் பிரச்சனையும் வந்திட கூடாது. அதனால நான் ரொம்பக் கவனமா இருப்பேன். நீயும் ரொம்பக் கவனமா நடந்துக்கணும்.” என்றான்.
பவித்ராவும் சரி என்றாள். பிரபாகர் நேரம் பார்த்தவன் “ரொம்ப நேரமா பேசிட்டு இருந்திட்டோம். இன்னுமா என்கிட்டே உனக்குத் தயக்கம்.” என ஆவலாக அவள் முகம் பார்க்க… அதற்கு மேல் பவித்ராவும் அவனை மறுக்கவில்லை…. அவர்களின் தாம்பத்தியம் ஆனந்தமாகத் தொடங்கியது.
மறுநாள் பவித்ரா வீட்டிற்குச் சென்றுவிட்டு வந்தனர். இரவே வீடு திரும்பி விட்டனர். அங்கே தங்கவில்லை…. வீட்டில் வசதி குறைவு என்று கனகாவும் அவர்களை வற்புறுத்தவில்லை.
அன்று இரவு பவித்ரா அணிந்திருந்த மெல்லிய கொலுசை கழட்டிவிட்டு, மூன்று அடுக்குகளாக இருந்த பெரிய கொலுசை பிரபாகர் அவனே போட்டுவிட்டான். பவித்ராவின் தந்த பாதத்திற்கு, அந்த வெள்ளி கொலுசு மிகவும் அழகாக இருந்தது.
“ரொம்ப அழகா இருக்கு. நான் எங்க அம்மாகிட்ட இப்படித்தான் கேட்டேன். ஆனா ரொம்ப விலை அதிகம்ன்னு சின்னக் கொலுசு வாங்கிக் கொடுத்துட்டாங்க.” என்றவள், காலை தட்டி பார்க்க…. அதிலிருந்து மெல்லிய சத்தமே வந்தது.
கட்டிலில் இருந்து எழுந்து, இப்படியும் அப்படியும் நடந்து பார்த்தாள். குழந்தை போல் மகிழ்ந்த மனைவியைப் பிரபாகர் அள்ளி அணைத்துக்கொண்டான்.
மறுநாள் காலை பவித்ரா ஹாலில் உட்கார்ந்து இருந்த போது… வசுந்தரா வெளியில் இருந்து வந்தார். பவித்ரா அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
நேராகத் திலகாவிடம் சென்றவர், “நான் வீட்டுக்குள்ள வரேன், உங்க மருமகள் என்னை வாங்கன்னு கூடக் கேட்கலை அண்ணி. இதுக்குத்தான் பொண்ணு எடுக்கும் போது தராதரம் தெரிஞ்சு எடுக்கணும்.” என்றார் கோபமாக….
அதைத் திலகா அப்படியே பிரபாகரிடம் சொல்ல…. சமையல் அறையில் வேலையாக இருந்தவளை பிரபாகர் அழைத்தான்.
இந்த இரண்டு நாட்களில் பவித்ரா பிரபாகரை பற்றி நன்றாகப் புரிந்து வைத்து இருந்தாள். இரவில் அவர்கள் அறையில் அவளை அவன் மகாராணி போலத்தான் நடத்துவான், அதில் குறையே இருக்காது. ஆனால் பகலில் எட்ட நின்று பேசுவதோடு சரி… மதியம் கூட அறைக்குள் வர மாட்டான்.
அப்படி இருப்பவன், காலையில் அறைக்குள் அழைத்துச் சென்று கதவை சாற்றுவது, பவித்ராவுக்குப் புரியாத புதிராக இருந்தது.
“உனக்கு வீட்டுக்கு வர்றவங்களைப் பார்த்து வாங்கன்னு கேட்கனும்னு கூடத் தெரியாதா…” அவன் கோபமாகக் கேட்க….
‘அப்படி யார் வந்து? தான் கேட்காமல் விட்டோம்.’ எனப் பவித்ரா யோசிக்க ஆரம்பித்தாள்.
அதில் கடுப்பானவன், “வசுந்தரா அத்தை வரும் போது… நீ அவங்களை வாங்கன்னு கேட்கலையா…” எனக் கேட்டதும்,
“அவங்க இங்க தான இருக்காங்க. இதே வீட்ல இருக்கிறவங்களை ஏன் வாங்கன்னு கேட்கணும்?” அவள் பதில் கேள்வி கேட்க….
“இப்படிப் போய் வெளிய கேட்டு வச்சிடாத…. அவங்க வீடு ரெண்டு தெருத் தள்ளித்தான் இருக்கு. அதனால நைட் லேட்டா போயிட்டு காலையில சீக்கிரமே இங்க வந்திடுவாங்க.” என்றான்.
வசுந்தரா எப்போதுமே இங்கேதான் இருப்பார். அதிலும் அவர் மகனுக்குக் கல்யாணம் ஆகி மருமகள் வந்ததும், அவளிடம் அவர்கள் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு, அவரும் தர்ஷினியும் இங்கே தான் நாள் முழுவதும் இருப்பார்கள்.
“சரி, இனிமே அவங்களைப் பார்த்தா வாங்கன்னு கேட்கிறேன்.” பவித்ரா சொன்னதும், பிரபாகரும் அதோடு அந்தப் பிரச்சனையை விட்டுவிட்டான்.
பவித்ரா அறையில் இருந்து வெளியே வந்த போது… அவள் முகத்தையே திலகாவும், வசுந்தராவும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
பிரபாகர் அவளைக் கண்டிக்கவே அழைத்துச் செல்கிறான் என்று அவர்களுக்குத் தெரியும். அதோடு வாடி இருந்த பவித்ராவின் முகம் வசுந்தராவுக்குக் கர்வத்தைக் கொடுக்க…
‘ஹப்பா… நம்ம மகன் ஒன்னும் இவகிட்ட மயங்கி போய் விடவில்லை…’ என நினைத்து திலகா நிம்மதி அடைந்தார்.