SN 11 1 15636 Advertisement சுடும் நிலவு நிறைவுப்பகுதி “நீ ஏன் பவித்ரா இதை அப்பவே எங்ககிட்ட சொல்லலை?” “எல்லோரும் இருக்கும் போது சொல்ல ஒருமாதிரி இருந்துச்சு. அப்புறம் நீங்க எல்லாம் யாழினியை தேடி போனதும், நான் தேவி அத்தைகிட்ட சொன்னேன்.” “என் பொண்ணு அப்படியெல்லாம் பண்ண மாட்டா… அவளைப் பத்தி அபாண்டமா பழி போடுறியான்னு…. அவங்க ஒரே ரகளை… எனக்கே நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டோமான்னு சந்தேகம் வந்துடுச்சு. “அப்புறம் இவ கல்யாணம் ஆகி வந்ததும், உங்க அம்மாகிட்ட நீ கர்ப்பம்ன்னு சொல்லிடுன்னு சொன்னா…. நான் எப்ப அப்படிச் சொன்னேன்னு சொல்றா…. உங்களுக்குதான் நான் முகேஷை லவ் பண்ணது முன்னாடியே தெரியுமே அண்ணின்னு வேற சொல்லிட்டா….” “ஒரு நிமிஷம் எனக்குப் பைத்தியம் பிடிச்ச மாதிரிதான் ஆகிடுச்சு.” அதுவரை பவித்ரா சொன்னதைக் கேட்ட பிரபாகர் திரும்பி யாழினியை முறைக்க….அதை பார்த்து அவள் நடுங்கினாள். “இல்லைணா… அண்ணிக்கும் தெரியும்ன்னு சொன்னா… நீங்க என்னை மன்னிச்சு ஏத்துப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா நீங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டு அனுப்பிடீங்க.” “அன்னைக்குச் சொல்லை சரி… ஆனா உனக்கு அதுக்கு அப்புறம் கூடவா சொல்லனும்ன்னு தோணலை….” “எவ்வளவு நாள் இவளை இவ அம்மா வீட்ல விட்டுட்டு, இங்க நான் தவிச்சேன் தெரியுமா… என்னை விடு, அவ எவ்வளவு கஷ்ட்டபட்டா? குழந்தை உண்டானதை கூட என்கிட்டே சொல்ல முடியலை…” “வீட்ல ஒவ்வொரு பிரச்சனையும் நடக்கும் போது… இதுக்குக் காரணம் நம்ம பொண்டாட்டியும் தானேன்னு எவ்வளவு குற்ற உணர்வு எனக்கு… அந்தக் கோபத்தில அவகிட்ட போன்ல கூடப் பேசலை….” “நானே அவளை விருப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு… தள்ளியும் வச்சிருந்தேனே….அவ எவ்வளவு துடிச்சிருப்பா… தப்பே பண்ணாம தண்டனை அனுபவிக்கிறது எவ்வளவு கொடுமை தெரியுமா?” “நான் நீ நல்லா இருக்கனும்னு தான நினைச்சேன். ஆனா ஏன் என் தலையில இவ்வளவு பெரிய பாவத்தைத் தூக்கி வச்ச?” “அண்ணா, இதெல்லாம் ஒரு ஆளுன்னு இவகிட்ட போய்ப் பேசிட்டு. உண்மையில் நல்ல பொண்ணா இருந்திருந்தா… அண்ணிகிட்ட முதல்ல அப்படிச் சொல்லி இருப்பாளா?” “போதும் சுதா, நீ ஒன்னும் அவளைப் பத்தி பேச வேண்டாம். இவ என்ன சொன்னாளோ? பவித்ரா என்ன புரிஞ்சிகிட்டளோ… இப்ப அதெல்லாம் எதுக்கு? பவித்ராவை நாங்க யாரும் வீட்டை விட்டுப் போகச் சொல்லலையே… பிரபா தான் கொண்டு போய் விட்டான்.” என்றார் தேவி அலட்சியமாக. “பாருங்க சித்தப்பா அன்னைக்கு அண்ணி மேல பழி போட்டாங்க. இப்ப அண்ணனை குறை சொல்றாங்க. இப்ப இவ்வளவு பேசுறவங்க, அப்புறம் ஏன் அண்ணிதான் யாழினி ஓடிப்போகக் காரணம் மாதிரி எப்பவும் திட்டிட்டே இருந்தாங்க?” எனச் சுதாகர் சிதம்பரத்திடம் கேட்க… அவர் மெளனமாக நின்றிருந்தார். “அவர்கிட்ட ஏன் கேட்கிற? அவர் தன் பொண்டாட்டி பிள்ளையை என்னைக்கு விட்டுக் கொடுத்து பேசி இருக்கார்? இவர் கண்டிச்சிருந்தா தான் உருப்படிருக்குமே…..” என்ற சோமசேகரை சித்ரா தடுக்க வர… “நீ பேசாம இரு…” என மனைவியை அதட்டியவர், “பவித்ரா இந்த வீட்டுக்கு வந்தா யாழினி குட்டு வெளிவந்திடும்னு தான் இவ்வளவு நாடகமும்.” “சம்பந்தி வீட்டை சீராடினதும் அந்தக் காரணத்துக்காகத்தான். அப்பத்தான் பிரபாகருக்கு பவித்ரா மேல இருக்கிற கோபம் குறையாதுன்னு, இல்லேன்னா… இவங்க எதுக்கு அவங்களை விழுந்துவிழுந்து உபசரிக்கப் போறாங்க? அதுவும் மாப்பிள்ளை இவங்க கைக்குள்ள…. வீட்டுக்கு வர்ற விருந்தாளிக்கே காபி போட வலிச்சிட்டு கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்து அனுப்புறவங்க.” சோமசேகர் பேசப்பேச தேவியின் முகம் கடுகடுவென்று இருந்தது. “சரி விடுங்க எதோ தப்பு நடந்துடுச்சு. இனி இது போல நடக்காது. யாழினி வீட்டு ஆளுங்களும் இங்க அடிக்கடி வராம நான் பார்த்துகிறேன்.” எனச் சிதம்பரம் அப்போதுதான் வாய்திறந்து பேசினார். “நீ என்ன சொல்ற பிரபா?” சோமசேகர் பிரபாகரை பார்த்து கேட்க…. “இல்லை சித்தப்பா… இதுல நான் முடிவு சொல்ல முடியாது. பவித்ராதான் முடிவு எடுக்கணும். பாதிக்கப்பட்டது அவதான். நான் அவளை அநியாயமா தண்டிச்சிட்டேன். அவளா இருக்கப்போய் நான் போய்க் கூப்பிட்டதும் வந்தா…. இதே அவ வரமாட்டேன்னு சொல்லிருந்தான்னு வைங்க, என் குடும்பம் தான் சிதைஞ்சு போயிருக்கும்.” “அவ இவ்வளவு பொறுமையா இருந்ததே பெரிசு… அதனால முன்னாடி மாதிரி சேர்ந்து இருக்கிறதோ… இல்லை தனியாப்போறதோ அவள் விருப்பம்தான். அவ முடிவுதான் என் முடிவும்.” பிரபாகர் திட்டவட்டமாகச் சொல்லிவிட எல்லோரும் பவித்ராவை பார்த்தனர். எல்லோரும் அவளையே பார்க்கவும், அவளுக்கு ஒருமாதிரி இருந்தது. இப்ப ஏன் இவர் என்னை மாட்டி விடுறார்? என ஒரு பக்கம் நினைத்தாலும், மறுபக்கம் சற்றுக் கர்வமாகத்தான் இருந்தது. வசதி இல்லாத வீட்டுப்பெண். அதனால் அவர்கள் இஷ்ட்டதிற்கு வளைக்கிறார்கள் என அவள் நினைத்ததுண்டு, இதே அவர்களுக்குச் சமமான இடத்தில் பெண் எடுத்திருந்தால் இப்படி நடந்துகொள்வார்களா என்ன? பிரபாகருக்கு உண்மை காரணம் தெரிந்தால் கூடப் பெரிதாக ஒன்றும் நடந்துவிடாது என நினைத்ததற்கு மாறாக, அவள் அவளையே முடிவு எடுக்கச் சொன்னது, எரிந்து கொண்டிருந்த மனதை சற்றுக் குளிர்வித்தது என்னவோ உண்மை. உங்க இஷ்ட்டம் என அவள் சொல்ல வர… அதை உணர்ந்தது போல் பிரபாகர் அவளைத் தடுத்தான். “இப்ப எதுவும் சொல்லாத பவித்ரா. நல்லா யோசிச்சு முடிவு பண்ணு. எனக்காக நீ யாரையும் பொறுத்துக்கனும்னு அவசியம் இல்லை… உனக்குச் சேர்ந்து இருக்க முடியாதுன்னு தோணுச்சுனா… நீ அதைத் தைரியமா சொல்லலாம்.” என்றவன் வெளியே சென்றுவிட… மற்றவர்களும் களைந்து சென்றனர். தங்கள் அறைக்கு வந்த தேவிக்கு அவ்வளவு குமுறல். “இவ முடிவு பண்ணுவாளா, நான் இந்த வீட்ல இருக்கனுமா இருக்க வேண்டாமான்னு?” என அவர் தன் கணவரிடம் வெடிக்க… “எல்லாம் நீயும் உன் பொண்ணும் பண்ணதுதான். எல்லாப் பழியும் ஏன் பவித்ரா மேல போட்ட? இதுக்குத்தான் கொஞ்சமா ஆடணும். இப்ப பிரபாகருக்குக் கோபம் வந்துடுச்சு. இனி அவன் சும்மா இருப்பான்னு தோணலை… உன் பொண்ணு அவளோட சேர்ந்து நம்மையும் தெருவுல நிக்க வச்சிட்டா….” என்ற சிதம்பரம் கோபமாக அறையில் இருந்து வெளியில் சென்றார். சித்ராவும் திலகாவும் பவித்ராவை அதன்பிறகு வேலையே பார்க்க விடவில்லை…. “உடம்புக்கு ஒன்னும் இல்லையே… நீ எதுக்கும் ரெஸ்ட் எடு.” என இருவரும் நச்சரிக்க… “எனக்கு ஒன்னும் இல்லை.. எதோ டென்ஷன்ல அப்ப கத்திட்டேன்.” என அவள் சொன்னதை இருவருமே கேட்கவில்லை…அவள் சென்று அறையில் படுக்கும் வரை விடவில்லை. சுதாகர் அவளிடம் சென்று மன்னிப்பு கேட்டான். “அண்ணி, நான் கூட நீங்க யாழினி காதலிக்கிறது முன்னாடியே தெரிஞ்சுதான், அவளுக்கு உதவி பண்ணீங்கன்னு, உங்களை தப்பா நினைச்சிட்டேன். சாரி அண்ணி.” “விடு சுதா, எல்லோரும் அப்படி நினைக்கிற மாதிரி ஒரு சூழல் வந்திடுச்சு. நான் அப்பவே உங்க அண்ணன்கிட்ட போன் பண்ணி யாழினி இப்படி சொல்றான்னு சொல்லி இருக்கணும். எனக்கு அப்ப இருந்த அதிர்ச்சியில ஒன்னும் தோணலை…” அத்தனை நாள் மனதிற்குள் இருந்த நெருடல் காணாமல் போக… பவித்ரா மகிழ்ச்சியாக உணர்ந்தாள். பிரபாகர் அழைத்ததும் வந்துவிட்டாலும், அவனோடு மனம் ஒன்றி வாழ முடியாமல் தவித்துக் கொண்டுதான் இருந்தாள். தன்னை இத்தனை நாள் திரும்பியும் பார்க்காதவர்கள் வீட்டிற்கு ஏன் வந்தோம்? எனத் தன்னுடைய செயலை நினைத்து அவளே வெறுத்துக்கொண்டுதான் இருந்தாள். இப்போதுதான் மனம் அமைதியாக இருந்தது. அவளுக்குப் பிரபாகரோடு பேச வேண்டும் போல் இருந்தது. அவன் இனி இரவுதான் வருவான் என்பதால்… படுத்து நன்றாக உறங்கிவிட்டாள். மாலை எழுந்த பவித்ரா மீண்டும் ஒருமுறை குளித்து, புதுப் புடவை அணிந்து, தன் நீண்ட கூந்தலை பின்னி அழகாகப் பூ வைத்திருந்தாள். இங்கே வந்த இத்தனை நாளில் அவள் இன்றுதான் பளிச்சென்று அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். “உங்க வீட்டுக்கார் மேல இருந்த கோபம் போச்சா….” சித்ரா கேலி செய்ய…. பவித்ரா பதில் சொல்லாமல் புன்னகைக்க… அதைப் பார்த்து திலகாவிற்கும் நிறைவாக இருந்தது. இங்கே அவள் இவ்வளவு உற்சாகமாக இருக்க…அங்கே பிரபாகர் மனதிற்குள் தவித்துக்கொண்டு இருந்தான். தப்பே செய்யாத ஒருத்தியை தான் எவ்வளவு தூரம் வருத்தி இருக்கோம் என நினைக்கும் போதே… மனம் வேதனையில் வெம்பியது. பவித்ராவை பார்க்க கூட அவனுக்குத் தைரியம் இல்லை… அதனால் எப்போதையும் விட இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தான். பிரபாகருக்கும் பவித்ராவிற்கும் தனிமை கொடுக்க நினைத்து அன்று மற்றவர்கள் சற்று சீக்கிரமே படுக்கச் சென்றுவிட்டனர். பிரபாகர் வந்ததும் பவித்ராதான் சென்று கதவை திறந்தாள். அவன் அவளை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை… நேராகக் குளிக்கச் சென்றுவிட்டான். அவன் குளித்துவிட்டு வந்ததும், பவித்ரா சூடான இட்லிகளைக் கொண்டு வந்து பரிமாற… சாப்பிட்டு முடித்ததும் அறைக்குள் சென்றுவிட்டான். அவள் அறைக்குள் வந்தபோது, பிரபாகர் மகனை தூக்கி கையில் வைத்திருக்க…. “ஐயோ ! இப்ப எதுக்கு தூங்கிறவனை எழுப்பிட்டு இருக்கீங்க?” எனப் பதட்டமனவள், அவனிடம் இருந்து குழந்தையை வாங்கி மீண்டும் தொட்டிலில் போட்டுவிட்டு, தன் கணவனைப் பார்த்து முறைத்தாள். “சாரி….” பிரபாகர் சொல்ல… “நல்லவேளை அவன் எழுந்துக்கலை….” பவித்ரா சொல்லிவிட்டு கதவை தாளிட…. “நான் அதுக்குச் சொல்லலை…” என்றான் பிரபாகர். அவன் எதற்கு மன்னிப்புக் கேட்கிறான் எனப் புரிந்த பவித்ரா அமைதியாக நின்றாள். Advertisement