Advertisement
சுடும் நிலவு
அத்தியாயம் – 10
பவித்ரா சுதாகரிடம் சொல்லி, நட்ட நடு ஹாலில் தொட்டிலை கட்டிவிட்டாள். அடுப்படியில் அவள் இருக்கும் போது, அறைக்குள் இருக்கும் மகன் அழுதால் கேட்கவில்லை எனக் காரணமும் சொன்னாள். மருமகள் எதோ காரணமாகத்தான் இதைச் செய்கிறாள் எனத் திலகா புரிந்து கொண்டார்.
ஒருவாரம் அமைதியாகச் செல்ல… யாழினியின் புகுந்த வீட்டுக் கூட்டம் மீண்டும் வந்தது. ஹாலில் உட்கார்ந்து திலகா டிவி பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்ரீராம் தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தான்.
பவித்ரா வந்து எட்டி பார்த்தவள் குழந்தையைத் தூக்கவில்லை… வேலை இருப்பது போல் உள்ளே சென்றுவிட… திலகாவும் அங்கேயே டிவி பார்ப்பது போல் அமர்ந்து கொண்டார்.
வந்தவர்களுக்குக் குடிக்கக் குளிர்பானம் கொண்டு வந்த தேவி முகத்தில் இதைப் பார்த்து எள்ளும் கொள்ளும் வெடித்தது. வேறுவழியில்லாமல் அவர் சம்பந்தி வீட்டினரை மாடிக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.
அன்று சீக்கிரமாகச் சமைக்க வந்த சித்ராவை பவித்ரா விடவில்லை… “நாம எப்பவும் போலவே சமைப்போம். இன்னைக்கு எல்லோரும் வீட்டுக்குத்தான் வந்து சாப்பிடனும்.” எனப் பவித்ரா சொல்லிவிட…. அவள் ஒரு முடிவோடு இருக்கிறாள் எனச் சித்ராவும் புரிந்து கொண்டார்.
“அம்மா தாயே ! நீ உன் புருஷனை வேணா வந்து சாப்பிட சொல்லு… என் புருஷன் இன்னைக்கு வந்தா ரொம்ப டென்ஷன் ஆவார். நான் அவருக்கு மட்டும் சாப்பாடு கட்டிக்கிறேன்.” என்றார்.
“இப்ப என்ன பண்றது?” எனக் கவலையாகக் கேட்ட திலகாவை, “இப்படியே இருக்க முடியாது இல்லையா.. இதுக்கு ஒரு முடிவு வரணும். பவித்ராவால வரணும்ன்னு இருந்தா வரட்டும்.” என்றார்.
தேவி சமைக்கலாம் என்று வந்த போது, கீழே சமையல் நடந்து கொண்டிருந்தது. இன்னும் இவங்க பண்ணி முடிக்கலையா என அவருக்கு ஆத்திரமாக வர… கோபமாகத் திரும்பி சென்றார்.
நிதானமாகச் சமையல் முடித்த பவித்ரா, எல்லாவற்றையும் எடுத்து சென்று டைனிங் ஹாலில் வைத்துவிட்டு வந்தவள், பிரபாகருக்கு அழைத்தாள்.
“எப்பவும் போல ஒழுங்கா வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க.” அவள் சொல்ல… பிரபாகர் மறுக்க…. “அவங்களைப் பார்த்து உங்களுக்குப் பயமா…” என அவள் அவனை உசுப்பி விட….
“ஆமாம் அந்த மூஞ்சிகளைப் பார்த்து பயப்படுறாங்க. அதுங்களைப் பார்க்கவே பிடிக்கலை….”
“ஆனா அவங்க அப்படித்தான் நினைச்சுபாங்க. நீங்க வீட்டுக்கு வந்தாத்தான் நான் சாப்பிடுவேன்.” எனச் சொல்லிவிட்டு வைத்து விட்டாள்.
ஏற்கனவே ரொம்பத் தாமதம் ஆனதால்… தேவி வேகவேகமாகச் சமைத்தார். பவித்ரா ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தாள். ஏற்கனவே அவள் கொண்டு வந்து வைத்ததை ஓரமாகத் தள்ளி வைத்துவிட்டு, அவர் சமைத்ததைக் கொண்டு வந்து உணவு மேஜையில் வைத்தார்.
தேவி தன் சம்பந்தி வீட்டினரை அழைக்க மாடிக்கு சென்ற நேரத்தில், சுதாகர் முதலில் சாப்பிட வந்துவிட…. அவனை உணவு மேஜையில் உட்கார வைத்துப் பவித்ரா பரிமாறினாள்.
தன் சம்பந்தி வீட்டினரை அழைத்துக்கொண்டு வந்த தேவி வேறுவழியில்லாமல் அவர்களை ஹாலில் உட்கார வைத்தார்.
“நீங்களும் வந்து சாப்டிட்டுக் கொஞ்சம் நேரம் போய்ப் படுங்க அத்தை.” என்று திலகாவை பார்த்து சொன்ன பவித்ரா, சித்ராவையும் அழைத்தாள்.
அவர்கள் மூவரும் சாப்பிட்டு முடித்ததும், மீண்டும் எல்லாவற்றையும் ஓரமாக வைத்துவிட்டுத் தங்கள் அறைக்குள் சென்றுவிட்டாள்.
எப்போது வந்தாலும் அதிகாரமாக உட்கார்ந்து கொண்டு ரகளைச் செய்யும் யாழினி வீட்டினர், இன்று தங்களை யாரும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்பதால்… வேறுவழியில்லாமல் அடக்கியே வாசித்தனர்.
சாப்பிட்டு முடித்து ஹாலில் வந்து உட்கார்ந்தவர்கள், பிரபாகர் வருவதைப் பார்த்ததும், உடனே கிளம்பி விட்டனர்.
மறுநாள் சோமசேகர் மதுரைக்கு வசூலுக்குச் சென்றவர், பவித்ராவுக்கு நிறையப் பால் ரஸ்க்கு வாங்கிக் கொண்டு வந்தார். அங்கு ஒரு கடையில் அந்த ரஸ்க் மிகவும் பிரபலம்.
எல்லோரும் இருக்கும் போதே “பவித்ரா, உங்க மாமா உனக்காக வாங்கிட்டு வந்திருக்கார். தினமும் சாயங்காலம் பால்ல ஊறப்போட்டு சாப்பிடு. குழந்தைக்குப் பால் நல்லா இருக்கும்.” எனச் சொல்லியே சித்ரா கொடுத்தார்.
தேவி அதைக் கடுகடுவென்று பார்த்துக் கொண்டு இருந்தவர், எழுந்து மாடிக்கு சென்று, தன் மகளைச் செல்லில் அழைத்துப் பேசினார்.
“யாழினி நீ ஏன் டி இங்க வராம இருக்க?”
“நான் அங்க வந்தாதான் எல்லோரும் எதோ என்னைக் குற்றவாளி போலவே பார்க்கிறாங்களே…”
“அவங்க பார்த்தா உனக்கு என்ன? ஒன்னும் இல்லாம வந்த உங்க அண்ணியவே எல்லாம் தலையில தூக்கி வச்சு கொண்டாடுறாங்க. நீ உன் மாமன் மகனை தான கட்டியிருக்க… அப்புறம் என்ன? நீ பாட்டுக்கு நம்ம வீட்டுக்கு வா…”
“சரிமா இந்த வாரம் வரோம்.” மகள் வருகிறாள் என்றதும்தான், தேவியின் ஆத்திரம் கொஞ்சம் அடங்கியது. யாழினி அவள் மாமியார் வீட்டோடு இல்லை… தன் கணவனோடு சென்னையில் இருக்கிறாள்.
காமினி தேவிக்குத் தெரியாமல் அவர் மதியம் உறங்கும் போது வந்து ஸ்ரீராமை வைத்துக்கொண்டு இருப்பாள்.
தேவியிடம் சொன்னது போல…. யாழினி தன் கணவனுடன் அந்த வார இறுதியில் சிவகாசி வந்தாள். முதலில் நேராகத் தன் மாமியார் வீட்டிற்குச் சென்றுவிட்டு மதியம் போல இங்கே வந்தாள்.
தேவி மகள் வருகிறாள் என்று முதலிலேயே சமையல் அறையைப் பிடித்துக்கொண்டார். விதவிதமாக நின்று சமைத்தவர், எல்லாவற்றையும் கொண்டு சென்று டைனிங் ஹாலில் வைத்தார்.
யாழினி வந்த போது… சித்ராவும் பவித்ராவும் சமையல் அறையில் இருந்து எட்டி கூடப் பார்க்கவில்லை…. திலகா மட்டும் அவளை நலம் விசாரித்தார். இல்லயென்றால் தேவி அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்.
யாழினியின் கணவன் சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீட்டிற்க்கு சென்று விட… தந்தையும், தாயும் அவர்கள் அறையில் மகளுடன் பேசிக்கொண்டு இருந்தனர்.
“இன்னும் கொஞ்ச நாள்ல அவங்களே சொத்தை பிரிச்சுக்கலாம்னு சொல்வங்கன்னு பார்த்தா… அதுக்குள்ள இந்தப் பவித்தரா வந்து குழப்புறா….” தேவி சொல்ல….
“அம்மா, நான் கூட முதல்ல அதுதான் நல்லதுன்னு நினைச்சேன். ஆனா நாம தனியா பிரிச்சிட்டு வந்தா, என் வீட்டு ஆளுங்க உள்ள புகுந்து அதை ஒன்னும் இல்லாம பண்ணிடுவாங்க.”
“ஏற்கனவே நீங்க எனக்குப் போட்ட நகை எல்லாத்தையும் அவங்க பொண்ணுக்கு போட்டுட்டு… எனக்குத் தகடு போலச் செஞ்சு வச்சிருக்காங்க. இதுல சொத்து வந்தா சும்மா இருப்பாங்களா… இப்பவே என்னோட பங்கை கேட்டு வாங்கி அதையும் அவங்க மத்த பசங்களுக்குக் கொடுத்திடுவாங்க.”
“என்னங்க இவ இப்படிச் சொல்றா?”
“அவ சொல்றது சரிதான்.” என்ற சிதம்பரம் மேலும் தொடர்ந்தார், “என்னால இனி அலைஞ்சு எல்லாம் வியாபாரம் பண்ண முடியாது. அதே பிரபாகரோட சேர்ந்து இருந்தா அவனே எல்லாத்தையும் பார்த்துப்பான்.”
“இன்னைக்கே தனியா போனா கூட அவன் ராஜா மாதிரிதான். அவன் பக்கம் தான் வியாபாரிங்க இருப்பாங்க. அவங்க அவனைத்தான் தேடி போவாங்க. ஆனா நாம தனியா போனா… அதோட நம்ம வியாபாரமும் போயிடும்.” என்றார்.
தன் கணவர் சொன்னதைக் கேட்டுத் தேவி யோசிக்க… “ஆமாம் மா அப்பா சொல்றது கரெக்ட் தான்.” என்று யாழினியும் சொல்ல…
“உங்க அம்மாவுக்கு நல்லா புரியிற மாதிரி சொல்லு… வீணா எல்லோரையும் பகைச்சு வச்சிருக்கா…. அன்னைக்குப் பிரபா பையன் பேரு வைக்கக் கூட வரலை… பிரபாவை அனுசரிச்சுப் போனாதான் நாம இன்னும் நிறையச் சம்பாதிக்கலாம்.”
“சரி இப்ப மட்டும் என்ன கெட்டு போச்சு? பிரபா குடும்பம் பிரியக்கூடாதுன்னு தான் நினைப்பான். இவ புகுந்த வீட்டு ஆளுங்களை எட்ட நிக்க வச்சா… அவன் திரும்பப் பழைய மாதிரி ஆகிடுவான்.” தேவி நம்பிக்கையாகச் சொல்ல… யாழினியும் அதுதான் சரியென்றாள்.
மனதில் இப்படி ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டு, தேவியும் யாழினியும் பிரபாகர் வரும் நேரம் கீழே வந்து உட்கார்ந்து இருந்தனர்.
தேவி அவராகத் திலகாவிடமும், சித்ராவிடமும் பேச்சுக் கொடுக்க… திடிர்ன்னு எதுக்கு இப்படிக் குழையுறா என்று இருவரும் புரியாமல் பார்த்தனர்.
யாழினி வந்திருப்பது தெரிந்து வசுந்தராவும், தர்ஷினியும் வந்தனர். இப்போது இருவரும் முன்பு போல் இங்கு வருவது இல்லை…பிரபாகர் திரும்பப் பவித்ராவை அழைத்து வந்துவிட்டானே, அந்தக் கடுப்பு இருவருக்கும். அதோடு தர்ஷினிக்கும் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
பிரபாகர் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தவன், தன் அத்தை வசுந்தராவை மட்டும் பார்த்து வாங்க எனக் கேட்டவன், யாழினியின் பக்கம் திரும்பக் கூட இல்லை.
“நீ சாப்டியா பவி…” பிரபாகர் கேட்க…. அவள் சாப்பிட்டேன் என்றதும், அவள் பரிமாற உட்கார்ந்து சாப்பிட்டவன், “அத்தை, நேத்து ராஜபாளையத்துகு வசூலுக்குப் போயிருந்தேன். அங்க நமக்குத் தெரிஞ்ச பெரிய வியாபாரி, அவங்க வீட்டு பையனுக்குப் பொண்ணு பார்க்கிறதா சொன்னாங்க. நான் தர்ஷினியை பத்தி சொல்லி இருக்கேன். பார்க்கலாம்ன்னு சொல்லி இருக்காங்க.” என்றான்.
Advertisement