Advertisement
அவன் சொன்னதும் வசுந்தரா வாயெல்லாம் பல்லாக, மேலும் அவனிடம் மற்ற விவரங்களைத் துளைத்து கேட்டு நிம்மதி அடைந்தவர், “பாரு யாழினி, உனக்கும்தான் பிரபாகர் இப்படிப் பெரிய இடம் கொண்டு வந்தான். ஆனா நீதான் அதை விட்டுட்டு வேற ஒன்னை தேடி போன…. இல்லைனா நீயும் இன்னைக்குப் பெரிய இடத்தில வாக்கப்பட்டிருப்ப…” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு யாழினி முகம் கருக்க… “இப்போ ஏன் இவர் இதை நியாபகப்படுத்துகிறார்?” எனத் தேவிக்குக் கடுப்பாக வந்தது.
“விடுங்க அண்ணி, யாருக்கு எங்க நடக்கணுமோ அங்கதான் நடக்கும். ஏன் பிரபாவுக்கும் தான் எத்தனையோ பெரிய இடம் வந்தது.” என அவர் பேச்சை லாவகமாகத் திருப்பி விட…
“அண்ணனோட கல்யாணத்தையும் இவ கல்யாணத்தையும் சேர்த்து பேசாதீங்க சித்தி. ஏன் அவ்வளவு யோக்கியமான குடும்பத்து ஆள விரும்பி இருந்தா… அவனைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு தைரியமா சொல்லி இருப்பாளே…. அதை விட்டுட்டு எதுக்கு ஓடிப்போனா?” எனச் சுதாகர் நறுக்கென்று கேட்டுவிட…
தேவி என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவர் “நீ எதுக்கு இப்ப பழசு எல்லாம் பேசுற? அவ பிரபா குழந்தையைப் பார்க்கத்தான் வந்திருக்கா….” என்றார்.
பவித்ரா அதுவரை யாழினி என்று ஒருத்தி வந்திருப்பதாகக் கூடக் காட்டிக்கொள்ளவில்லை… இப்போது தேவி திடிரென்று அவள் குழந்தையைப் பார்க்க வந்ததாகச் சொல்லவும், பவித்ராவின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியாது.
தாய் சொன்னதை நிருபிக்கும் வகையில் அங்கிருந்த தொட்டிலின் அருகே சென்ற யாழினி, தூளியைக் விளக்கி பார்க்க “என் குழந்தையைத் தொடாத…” என வீடே அதிரும்படி பவித்ரா கத்தினாள்.
ஒரு நொடி எல்லோருக்குமே இதயம் நின்றுதான் துடித்தது. அப்படி ஒரு கத்துப் பவித்ரா கத்த… மேலே படுத்திருந்த சோமசேகர் கூடக் கீழே இறங்கி வந்து விட்டார்.
கத்திவிட்டு பவித்ராவுக்கே அடுத்த வார்த்தை பேச வரவில்லை…. “அவளை என் குழந்தையைத் தொடக் கூடாது சொல்லுங்க.” பவித்ரா சிரமப்பட்டுப் பேச….
“சரி அவ தொட மாட்டா… நீ முதல்ல தண்ணியைக் குடி.” என்றவன், அவள் நெஞ்சை நீவி விட்டபடியே “அம்மா குழந்தையைத் தூக்கிட்டு உள்ள போங்க.” என்றான்.
திலகா குழந்தையைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றதும்தான் பவித்ரா அமைதியானாள்.
“இப்ப சொல்லு அன்னைக்கு என்ன நடந்தது?” பிரபாகர் கேட்க….
“இப்ப எதுக்கு அதெல்லாம்?” எனத் தேவி அவனைத் தடுக்கப் பார்க்க…
“என்னவோ நடந்திருக்கு? இல்லைனா யாழினி மேல இவ்வளவு கோபம் பவிக்கு ஏன் வருது? ஒருத்தி ஒண்ணுமே இல்லாம உயிர் போற மாதிரி கத்துவாளா…” என்ற பிரபாகர்,
“நீ சொல்லு பவித்ரா. அன்னைக்கு இவ உன்னை என்ன சொல்லி ஏமாத்தினா?” என யாழினி பக்கம் அவன் கைகாட்டி கேட்க…. அவள் தலைகவிழ்ந்தாள்.
பிரபாகருக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. யாழினி எதோ பொய் சொல்லி பவித்ராவை ஏமாற்றி இருக்கிறாள் என்று.
பிரபாகர் கேட்டதும் பவித்ரா முன்பு நடந்ததை நினைத்து பார்த்தாள்.
யாழினிக்கு பிரபாகர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் ஒன்று கொண்டு வந்தான். பெரிய இடம் என்பதால் தேவி கூட மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார்.
“நான் இவ்வளவு ஷாப்பிங் பண்ணதுக்கு, நீங்க எதுவுமே சொல்லலையேன்னு நினைச்சேன். உங்க தங்கையைப் பொண்ணு பார்க்க வராங்கன்னு தானே…” பவித்ரா சரியாகக் கண்டுபிடித்துக் கேட்க, பிரபாகர் சிரித்தான்.
யாழினியை பெண் பார்க்க வந்தவர்கள், அவளைப் பிடித்திருப்பதாகச் சொல்லி, மகன் வெளிநாட்டில் இருந்து வந்ததும் திருமணத்தை வைத்துக்கொள்வோம் என்றதும், எல்லோருக்குமே மிகுந்த மகிழ்ச்சி.
அதுவும் வந்தவர்கள் நீங்க வீட்டை ரொம்ப நல்லா வச்சிருக்கீங்க என்றதும், பவித்ராவை கையில் பிடிக்க முடியவில்லை… பிரபாகர் மனைவியைப் பெருமையாகப் பார்த்தான்.
யாழினி முகேஷை விரும்புவது தர்ஷினிக்கு தெரியும். அவள்தான் பவித்ராவை யாழினிக்குக் கைகாட்டியது. ஆனால் அதோடு அவள் நலுவிக் கொண்டாள்.
“உன்னோட பிரபா அண்ணன் மட்டும்தான் ஒத்துகிறது கஷ்ட்டம். நீ எதுக்கும் உங்க அண்ணியைப் பிடி… அப்பத்தான் நாளைக்கு எதாவது பிரச்சனை வந்தா… நீ தப்பிக்க முடியும்.” என யோசனை சொன்னது அவள்தான்.
அன்றிலிருந்து யாழினி பவித்ராவோடு நன்றாகப் பேச ஆரம்பித்தாள். பவித்ரா திருமணதிற்கு அதை இதைத் திட்டமிடும் போது… அமைதியாகச் சிரித்தபடி உட்கார்ந்து கொண்டு இருப்பாள்.
முகேஷ் வீட்டில் இருந்து பெண் கேட்டு வந்த போது பிரபாகர் மறுத்துவிட… சோமசேகரும் அங்கே செய்ய வேண்டாம் என்றார்.
அதோடு அப்போது தேவிக்குமே மகள் திருமணம் ஆகி வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர் அண்ணன் குடும்பம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை… எதோ முகேஷ் மட்டும் தான் நன்றாகப் படித்து இருந்தான்.
யாழினி நேரடியாகத் திருமணதிற்கு மறுப்பு சொல்லவில்லை… ஆனால் ஒருமுறை பிரபாகரிடம் “என்னை உங்களுக்குப் பிடிக்காது இல்லை அண்ணா… அதனால்தான என்னை வெளிநாட்டுக்கு அனுப்புறீங்க?” என அவள் துடுக்குத்தனமாகக் கேட்டு விட….
“அப்படி ஏன் நினைக்கிற? நாங்கதான் இங்க கடை, வியாபாரம்ன்னு வெளிய கூடப் போக முடியாம இருக்கோம். நீ நம்ம வீட்லயே சொகுசா இருந்தவ…. நீயாவது வெளிநாடெல்லாம் போய்ச் சந்தோஷமா இரு. உன்னைச் சாக்கு வச்சு நாங்களும் என்னைக்காவது அங்க சுத்தி பார்க்க வரமாட்டோமா…”
பிரபாகர் சொன்னதைக் கேட்டு வீட்டினர் அனைவருமே உருகிவிட்டனர். “ஆமாம் நாங்களும் எப்ப வெளிநாடெல்லாம் பார்க்கிறது.” என்றார் தேவி.
“அண்ணா, அவளுக்கு ஓகே… ஆனா எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். அடுத்தத் தெருவுலேயே பாருங்க. என்னால உங்களையெல்லாம் விட்டுட்டு இருக்க முடியாது.” காமினி சொல்ல….
“அட்ரெஸ் எல்லாம் சொல்றது பார்த்தா… நீ ஏற்கனவே யாரையாவது பிக்ஸ் பண்ணிட்டியா… எதுக்கும் உன்னை நான் இனிமே வாட்ச் பண்றேன்.” சுதாகர் சொல்ல…. காமினி அவனை அடிக்கத் துரத்த…. எல்லோரும் மனம் விட்டு சிரித்தனர்.
அடுத்த மாதம் தன் தோழியின் திருமணத்திற்கு யாழினி போயே தீருவேன் என அடம்பிடிக்க… ‘திருமணம் நிச்சயம் ஆன பெண் வெளி ஊருக்கு செல்ல வேண்டாம்.’ என அவளை அனுப்ப வீட்டினர் மறுக்க… அவள் பவித்ராவை துணைக்கு அழைத்தாள்.
“பாவம் ரொம்ப ஆசைப்படுறா… அதுவும் கல்யாணம் ஆகி வெளிநாடு போற பொண்ணு….நானும் துணைக்குப் போறேன்.” என இவள் தானாகத் தலையைக் கொடுக்க… அவள் சொன்னதால்தான் யாழினி அந்தத் திருமணதிற்குச் செல்லவே மற்றவர்கள் சம்மதித்தனர்.
யாழினி நிறைய நகைகளைப் போட்டுக்கொண்டு வர… பவித்ரா கூடத் தோழியின் திருமணதிற்கு இவ்வளவு நகை தேவையா என நினைத்தாள்.
இருவரும் காரில் டிரைவரின் துணையோடு மதுரைக்குக் கிளம்பினர். சுதாகருக்கு கடைசி வருட பரீட்சை நடந்து கொண்டிருந்ததால்…. அவனால் அவர்களுடன் செல்ல முடியவில்லை.
பாதி வழியில் யாழினி அண்ணி உங்களோட கொஞ்சம் தனியா பேசணும் என்றதும், காரை ஓரமாக நிறுத்த சொல்லிவிட்டு இருவரும் காரில் இருந்தே பேசினர். டிரைவர் காரில் இருந்து இறங்கி சற்று தள்ளி நின்று கொண்டார்.
முதலில் யாழினி, தான் முகேஷை விரும்புவதாகச் சொன்னதைக் கேட்ட பவித்ரா மிகுந்த அதிர்ச்சி அடைந்தாள். இப்போது அவனைத் திருமணம் செய்யவே தான் செல்வதாகச் சொன்னதும், பவித்ரா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை… அவள் எவ்வளவோ போராடினாள்.
கடைசியாக யாழினி சொன்னதைக் கேட்டு இதற்கு மேல் முடியாது என்பதை உணர்ந்தவள், நீ என்னவோ பண்ணிக்கோ என்பது போல் அமைதியாக உட்கார்ந்து இருக்க…. அப்போது வேறு ஒரு கார் அவர்கள் அருகில் வந்து நிற்க, அதில் ஏறி யாழினி சென்று விட்டாள்.
அப்படி யாழினி அவளிடம் என்ன சொன்னாள்? பவித்ரா ஏன் அவளைச் செல்ல அனுமதித்தாள். அதைத்தான் இப்போது பிரபாகர் கேட்டுக்கொண்டு இருக்கிறான்.
“அன்னைக்கு உங்க தங்கச்சி, அண்ணன் பார்த்த மாப்பிள்ளையோட என் கல்யாணம் எப்படியும் நடக்காது. அவங்களே என்னை வேண்டாம்ன்னு சொல்லிடுவாங்க. நீங்க இப்ப என்னை விடலைனா அண்ணி…. நம்ம குடும்பம் தான் ரொம்ப அசிங்கப்படும். இப்படித்தான் சொன்னா…”
“இதுக்கு என்ன அர்த்தம்? நீங்களே அவளைக் கேளுங்க. எனக்கு அப்ப ஒரு விஷயம் தான் தோணுச்சு. ஏன்னா நானும் அப்ப கர்ப்பமா இருந்தேன்.”
“பொண்ணு ஓடிப்போயிடுச்சுன்னு சொல்றது பரவாயில்லையா… இல்லை கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு கர்ப்பம்ன்னு சொல்றது பரவாயில்லையா…”
“நீங்களே சொல்லுங்க. நான் என்ன பண்றது? அதுதான் போகட்டும்ன்னு விட்டுட்டேன்.” பவித்ரா சொன்னதைக் கேட்டு தேவியைத் தவிர மற்ற அனைவரும் யாழினியை நீயா இப்படி என்பது போல் கேவலமாகப் பார்த்தனர்.