Advertisement
ஸ்மிரிதியின் மனு – 23
சிவகாமி அங்கிருந்து சென்றவுடன் அவரின் செய்கையில், பேச்சில் மனம் உடைந்துப் போயிருந்த மனுவின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டார் நாதன்.
“ஸ்மிரிதி விஷயத்திலே அம்மாக்குள்ள என்ன பா நடக்குது? ஒருபுறம் அவளுக்கு ஏதாவது ஆயிடிச்சான்னு கவலைப்படறாங்க…அதே சமயம் கல்யாணத்துக்கு முன்னே வீட்டுக்கு அழைச்சுகிட்டு வரவேணாம்னு சொல்றாங்க..கல்யாணம் ஆனபிறகு மாமியார், மருமகளா பேசினாதான் மரியாதைங்கறாங்க, அப்பறம் நீ எப்படி வேணும்னா கல்யாணம் செய்துக்கோன்னு விட்டேத்தியா பேசறாங்க.” என்று சிவகாமியின் மன உளைச்சலைப் புரிந்து கொள்ள முடியாமல் மனு அவரைக் கேட்க,
“நீ ஸ்மிரிதியைக் கல்யாணம் செய்துக்க விரும்பறேன்னு சொன்னதுலேர்ந்து அவ இப்படிதான் முன்னே பின்னே பேசிகிட்டு இருக்கா…அவ மனசுலே இருக்கறது எல்லாம் வெளியே வரட்டும் டா அதுதான் உனக்கும், ஸ்மிரிதிக்கும் நல்லது..உங்கம்மா இப்படிதான் முதல்லே பரபரப்பா பறப்பா அப்பறம் தானா தரையிறங்கிடுவா..
அவ சம நிலைக்கு வந்ததும் கண்டிப்பா ஸுவீட் செய்வா..அவளுக்கு அவ பசங்களோட சந்தோஷம்தான் முக்கியம்..நீ பார்த்துகிட்டே இரு இன்னைக்கு இராத்திரி சாப்பாடு பாயசத்தோடதான்.” என்று அவர் மனைவியின் மனதைப் புரிந்து கொண்ட கணவராக, சிவகாமி நாதனாக தொய்ந்து போயிருந்த அவர் மகனிற்குத் தைரியம் கொடுத்தார் அந்த தந்தை.
“ஸ்மிரிதியை நான் கல்யாணம் செய்துக்கறதுலே உங்களுக்குத்தான் பிராப்ளமிருக்கும்னு நினைச்சேன் பா..அம்மாவும், பிரேமா ஆன் ட்டியும் பிரண்ட்ஸ் பா.” என்றான் நடப்பதை நம்ப முடியாத மனு.
“மனு, ஒரு கல்யாணத்திலே கணவன், மனைவிங்கற புது உறவைத் தவிர இரண்டு குடும்பத்துக்கு நடுவுலேயும் புது உறவுகள் ஏற்படுது..மனைவியோட சொந்தங்களை கணவன் தள்ளி நிறுத்தினாலோ இல்லை கணவனோட சொந்தங்களை மனைவி கிட்ட சேர்க்காம இருந்தாலோ அது அவங்க இரண்டு பேர்குள்ளையும் இடைவெளி ஏற்படுத்திடும்..உன் விஷயத்திலே உன் மாமனார் சாதாரணப்பட்டவரில்லே..கார்மேகத்தை நீ விட்டுக் கொடுக்க முடியாது..கொடுக்கவும் கூடாது..ஸ்மிரிதியை நீ எப்படி ஏத்துகிட்டியோ அதே போல அவரையும் நீ ஏத்துக்கணும்..
உனக்கு ஸ்மிரிதி மேலே இருக்கற விருப்பத்தை எங்கிட்ட சொன்னவுடனையே நான் எனக்குத் தெரிஞ்ச விதத்திலே உனக்கு இதை விளக்கினேன்..இந்த இரண்டு வாரத்துலே நான் சொன்னதைப் பற்றி நீ எவ்வளவு யோசனை செய்தேன்னு எனக்குத் தெரியலே ஆனா நீ சொன்னதையேதான் நான் யோசிச்சுகிட்டிருந்தேன்..இன்னைக்கு நீ ஸ்மிரிதிதான் உனக்கு முக்கியம்னு சொன்ன பிறகு எனக்கும் வேற எதுவும் முக்கியமா படலை டா..ஆனா என்னால உடனே மாற முடியாது..முயற்சி செய்யாமவும் இருக்க மாட்டேன்..
உங்கம்மா விஷயம் வேற..உன் கல்யாணத்தைப் பற்றி நிறைய கனவு வைச்சுகிட்டு இருந்தா..அதெல்லாம் இப்ப கனவாவே போயிடுச்சு..ஆனா அவளுக்கு என்னைக்கும் நீ முக்கியம்..அதனால உன்னைப் பற்றி கவலைப்படறா..உன் விருப்பம் ஸ்மிரிதின்னு தெரிஞ்சவுடனே அவ உனக்கு ஒத்து வருவாளான்னு அவளுக்கு யோசனையாயிருக்கு..இதுக்கு மேலே அவகிட்ட ஒண்ணும் பேசாத..உனக்கு முக்கியமானது அவளுக்கும் முக்கியமானதுன்னு புரிஞ்சிகிட்டு அவளே ஒரு முடிவுக்கு வரட்டும்..…அப்படி அவ ஒரு முடிவுக்கு வர முடியலேன்னா நாங்க கோயமுத்தூர் போயிடறோம்.” என்றார் நாதன்.
அப்போது அவன் சாவியைப் போட்டு கதவைத் திறந்து உள்ளே வந்தான் மாறன். நாதனும், மனுவும் அந்த நேரத்தில் வரவேற்பறையில் அருகருகே அமர்ந்திருந்ததைப் பார்த்து,
“என்ன?” என்று கேட்க,
அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று நாதன் யோசனையுடன் பார்க்க,
“என் கல்யாணத்தைப் பற்றி பேசிக்கிட்டிருந்தோம்..எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு..அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு..இன்னைக்கு தான் அவளோட அப்பா சரின்னு சொன்னாரு..அதான் நம்ம வீட்லே அதைப் பற்றி சொன்னேன்.” என்று சிவகாமி கேட்டுக் கொண்டது போல் மாறனிடம் மனுவே அவன் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தான்.
“உன்னை கல்யாணம் செய்துக்க போற அந்த தைரியசாலி யாரு?” என்று அவன் பையைத் தூக்கி எறிந்துவிட்டு அவர்கள் அருகில் ஆவலுடன் வந்து கேட்டான் மாறன்.
“ஏன் டா அதிர்ஷடசாலின்னு சொன்னா அர்த்தமிருக்கு தைரியசாலின்னு எதுக்கு சொல்ற?” என்று அவர் அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சிவகாமி கேட்டார்.
“நீங்க அவனோட அம்மாங்கறதுனால அதிர்ஷடமா..இல்ல முன்னால் கலெக்டர் அவனோட அப்பாங்கறதுனால அதிர்ஷடமா..மனு வளவனை தெரிஞ்சவங்க..இந்த வக்கீலோட வாழ விருப்பம் தெரிவிச்சவங்க தைரியசாலிதான்.. இவன் ஒண்ணு வாய்தா கேட்பான் இல்லே வழக்காடுவான்..அப்ப அவன் வாழ்க்கைத் துணை தைரியசாலிதானே..அது யாருன்னு எனக்கு மண்டை வெடிக்குது.”
மாறனின் விளக்கத்தில் மூன்று பேரின் முகத்திலும் புன்சிரிப்பு குடியேறியது.
“நாந்தான் தைரியசாலியா இருக்கணும் அவளை மருமகளா ஏத்துக்கறதுக்கு.” என்று சொன்னார் சிவகாமி.
சிவகாமி பயப்படும் பெண் யாரென்று மாறனுக்கு சுரீரென்று உறைத்தது. உடனே, “மனு” என்று பயத்துடன் அலறினான் மாறன்.
“நீ ஏன் டா பயந்து அலர்ற…நீங்கெல்லாம் ஒண்ணா பழகினவங்கதானே.” என்றார் சிவகாமி.
அவர் அப்படி சொன்னவுடன், “ஸ்மிரிதியா? என்று கேட்க அவசியமில்லாமல் போனது அதே சமயம் மாறனின் ஆரவாரமும் அடங்கிப் போனது.
“எனக்கும் முதல்லே அதிர்ச்சியாதான் இருந்திச்சு..இப்ப சரியாயிட்டேன்.” என்று மாறனைச் சமாதானம் செய்வது போல் அவரையே சமாதானம் செய்து கொண்டார் சிவகாமி.
“அம்மா, இனி நம்ம வீட்ல தைரியத்துக்கு குறைச்சல் இருக்காது.” என்று அவன் இயல்புக்குத் திரும்ப முயன்றான் மாறன்.
“அதை நினைச்சாதான் எனக்குப் பயமா இருக்கு.” என்றார் சிவகாமி.
ஆனால் சிவகாமியின் பயத்தைப் போக்காமல் அவரை மேலும் பயமுறுத்தினான் மாறன்.
“அம்மா..உங்களோட ஒரு கவலை தீர்ந்திடுச்சு..தமிழ் பொண்ணு மருமகளா வர போறாங்க..இனி அந்தக் கண்டிஷன் எனக்கு செல்லாது.” என்று அவன் வாழ்க்கைத் துணையைப் பற்றித் தெளிவுப்படுத்திக் கொண்டான்.
“டேய்..அதுக்குள்ள உனக்கு என்னடா அவசரம்? நீயும் யாரையாவது பார்த்து வைச்சிருக்கியா?.அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்.’ என்று கோபமாக மாறனின் ஆசையை முளையிலேயேக் கிள்ளி எறிந்தார் சிவகாமி.
“தமிழ் பொண்ணுங்கற உங்களோட விருப்பத்தை மனு நிறைவேத்திட்டான்….இன்னொரு மருமக வேற பாஷை பேசினாத்தான் உங்களுக்கு லைஃப் இண்டரெஸ்டிங்கா இருக்கும்…அதான் அப்படி சொன்னேன்.” என்று தடுமாற்றத்துடன் பதில் அளித்தான் மாறன்
“ஸ்மிரிதி தமிழாடா? அன்னைக்கு அவ பாடின பாட்டும், ஆடின டான்ஸூம் பஞ்சாபிக்காரியைத் தோற்கடிச்சிடும்..பிரேமா பொண்ணுன்னு பெயருக்குதான்.. பத்து வருஷமா அவ என்னென்னவோ கத்துகிட்டிருக்கா..நம்ம வீட்டுக்கு வந்த அப்பறம்தான் அவளைக் கொஞ்சம் கொஞ்சமா என் வழிக்குக் கொண்டு வரணும்.” என்று சற்றுமுன் அவர் மனதில் இருந்த சஞ்சலம், பயம், சந்தேகம் என்று சகலத்தையும் உதறிவிட்டு ஸ்மிரிதியை அவரின் மருமகளாக மாற்றும் முயற்சியை ஆரம்பித்தார் மாமியார் சிவகாமி.
“வேணாம் சிவகாமி..மாமியார் வேலையை ஆரம்பிக்காத..அவ இஷ்டப்படி இருக்கட்டும்..நம்ம மகளாட்டம் பார்த்துக்குவோம்.” என்றார் நாதன்.
“நீங்க சும்மா இருங்க..பிரேமாவுக்குதான் அவ பொண்ணுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க கொடுத்து வைக்கலே..ஸ்மிரிதி நம்ம வீட்டு மருமகளானப் பிறகு நானும், பிரேமாவும் அவளுக்கு எல்லாத்தையும் சொல்லி கொடுப்போம்.” என்று அவர் சினேகிதியையும் மாமியார் அணியில் சேர்த்து கொண்டார் சிவகாமி.
“அம்மா..இப்பதான் என் இஷ்டபடி நடக்குதுன்னு குறைப்பட்டுகிட்டீங்க இப்ப உங்க இஷ்டப்படி எல்லாத்தையும் நடத்த போறீங்களா?” என்று மனு கேட்க,
“ஆமாம்..பத்து நிமிஷம்தான் தேவைப்படிச்சு பத்து வருஷத்து தப்பை சரி செய்ய எனக்கு கிடைச்ச வாய்ப்பு இதுன்னு புரியறத்துக்கு…பிரேமாவும், நானும் இனி உறவு..உன் கல்யாணம் என்னோட பொறுப்பு..முதல்லே ஒரு பாயசம் செய்து இதைக் கொண்டாடலாம்.” என்று சற்றுமுன் அவரைப் பற்றி நாதன் சொன்னதை உண்மையாக்கினார் சிவகாமி.
“முதல்லே கார்மேகம் அங்கிள் உங்ககிட்ட பேசுவாரு…அதுக்கு அப்பறம் தான் எல்லாம்.” என்று சிவகாமிக்கு வேகத்தடையானான் மனு.
“சீக்கிரம் அவரை வீட்டுக்கு வரச் சொல்லு…இனி லேட்டாக்க வேணாம்.. கல்யாணத்தை முடிச்சிடலாம்..அவளோட வீட்லேர்ந்து ஒண்ணும் வேணாம்..அவ மட்டும் நம்ம வீட்டுக்கு வந்தா போதும்..கார்மேகம் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும்..உங்க கல்யாணத்திலேப் பிரேமாவுக்கு ஒரு சங்கடமும் இருக்கக்கூடாது.” என்று திட்டமிட ஆரம்பித்தார் சிவகாமி.
“அம்மா..ப்ளீஸ்..வெயிட்..ஸ்மிரிதி தில்லி வரணும்..அவளுக்குச் உடம்பு சரியாகணும்..அப்பறம் அங்கிள் நம்ம வீட்டுக்கு வரணும்..இதெல்லாம் நடந்த அப்பறம் நாம மற்றதைப் பற்றி பேசலாம்.”
என்று முட்டுகட்டையானான் மனு.
“ஸ்மிரிதி உடம்புக்கு என்ன? என்று மாறன் கேட்க,
“உதய்பூர்ல தீ விபத்துலே மாட்டிக்கிட்டா..ஸ்மோக் இன்ஹலேஷன்..நாளைக்கு அவளைத் தில்லிக்கு அழைச்சுகிட்டு வரான் கபீர்.” என்றான் மனு.
“ஓ..இப்ப எப்படி இருக்கா?”
“பேச கஷ்டப்படறா..அதர்வைஸ் ஷீ இஸ் ஃபைன்..இருந்தாலும் அவ இங்க வந்த அப்பறம் தான் என்னென்னு தெரியும்..அதுக்கு அப்பறம் தான் கல்யாணப் பேச்சு.” என்றான் மனு.
மனு சொன்னது காதில் விழாதது போல் கல்யாண ஏற்பாடைப் பற்றி பேச ஆரம்பித்தார் சிவகாமி.
“கல்யாணத்தைப் பாலாஜி மந்திர்ல முடிச்சிட்டு ஒரு ஹோட்டல்லே ரிசெப்ஷனை வைக்கச் சொல்லணும்..கார்மேகத்தோட காசு கண்டிப்பா வேணாம்..அப்பறம் பிரேமாவை நம்ம வீட்லதான் தங்க வைக்கணும்” என்றார் சிவகாமி.
“நீ சொல்ற எல்லாத்துக்கும் அவர் ஒத்துப்பாரு..ஒத்துழைப்பாரு.. ஆனா காசு விஷயம் சந்தேகம்தான்..ஸ்மிரிதி அவரோட ஒரே பொண்ணு..அவளுக்குதான் எல்லாம் அதனால அதை அவதான் முடிவு செய்யணும்….என்னைப் பொறுத்தவரைக்கும் ரிசெப்ஷன் தேவையில்லைன்னு நினைக்கறேன்..நம்ம சொந்தகாரங்களுக்கு கோயம்முத்தூர்ல ஒரு ரிசெப்ஷன் வைக்கலாம்….பிரேமா நம்ம வீட்ல தங்கறதைப் பற்றி நீதான் அவகிட்ட பேசணும்.” என்றார் தில்லை நாதன்.
“கோயமுத்தூர்ல நம்ம சொந்தகாரங்க மட்டும் இருக்காங்களா? பிரேமாவோட அம்மாவும், அண்ணனும் இருக்காங்க..அங்க ரிசெப்ஷன் வைச்சோம்னா அவங்களைக் கூப்பிடாம நடத்த மாட்டேன்..அந்த ரிசெப்ஷனுக்குப் பிரேமா வர ஒத்துக்கணுமே.” என்றார் சிவகாமி.
தில்லியில் ஆரம்பித்த கல்யாணப் பேச்சு சில நிமிடங்களில் கோயமுத்தூர் சென்றடைந்ததைக் கவனித்த மாறன் இனி கல்யாணப் பேச்சைத் தொடர விட்டால் அவன் பட்டினியாகத் தான் படுக்க நேரிடும் என்று உணர்ந்து,
“அம்மா ஸ்டாப்..தில்லியா, கோயமுத்தூரான்னு மெதுவா முடிவெடுங்க..அர்ஜெண்ட் இல்லை..இன்னைக்கு எனக்கு இப்ப சாப்பாடு மட்டும் போதும்…பாயசம் உங்க மருமக வந்து வைக்கட்டும்..பஞ்சாபி பாரம்பர்யத்தை பின்பற்றட்டும்.” என்று அவர்கள் விவாதத்திற்கு முடிவு கட்டியனிடம்,
“டேய் அவ எதிர்லே நீ இதை சொன்ன நீதான் கீர் கிளறிகிட்டு இருப்ப.” என்றார் சிவகாமி.
“அதுக்கு வேற ஆளைப் பாருங்க.” என்று புரட்சிக் கொடியைத் தூக்கினான் மாறன். ஆனால் அவன் அறிந்திருக்கவில்லை கீர் மட்டுமில்லை சமையலறையில் அவன் ஷிஃப்ட் டியுடியும் செய்ய போகிறானென்று.
அதற்குமேல் கல்யாணப் பேச்சை வளர்க்காமல் இரவு உணவை முடித்தனர் நால்வரும். சாப்பிட்டு முடித்தபின் பெற்றோர் இருவரும் அவர்கள் படுக்கையறைக்கு சென்று விட, சகோதரர்கள் இருவரும் தனித்து விடப்பட்டனர். அதுவரை மௌனமாக இருந்த மாறன்,
“ஆர் யு ஷுயர்? என்று மனுவிடம் கேட்க,
“இட்ஸ் ஹர்.” என்றான் மனு.
“நான் பிரண்ட்ஸோட ஹோட்டலுக்கு போயிருக்கும் போது அவளைப் பார்த்திருக்கேன்.” என்றான் மாறன். அவன் ஸ்மிரிதியைப் பார்த்தது கபீரின் ஹோட்டல் பார் என்று மாறனும் விளக்கவில்லை மனுவுக்கும் விளக்கம் தேவையிருக்கவில்லை.
“கல்யாணத்துக்கு பிறகு ஸ்மிரிதி விரும்பினா அவ எங்க போறா, என்ன செய்யறாங்கறது நமக்கு தெரிய வரும்..அவ எனக்கு மனைவியா, நம்ம வீட்டுக்கு மருமகளா வர போறா.” என்று மாறனுக்கு ஸ்மிரிதி அண்ணியாகப் போகிறாள் என்பதை சொல்லாமல் சொன்னான் மனு.
“உனக்கு நான் சொல்றது புரியலையா? என்று மாறன் புரியாமல் கேட்க,
அண்ணன், தம்பிக்குள் இனி ஒளிவு மறைவு கூடாதென்றெண்ணி, “உனக்கு அவளைப் பற்றி இப்பதான் தெரியும்..எனக்கு, அம்மாக்கு, அப்பாக்கு பத்து வருஷம் முன்னாடியே தெரியும்..அவ ஸ்கூல்ல பிரபலமானது பிராப்ளமான போது நாந்தான்அவளை தில்லிக்கு கூட்டிக்கிட்டு வந்தேன்னு அன்னைக்கு சொன்னாயில்லே..அது அவ தண்ணி அடிச்சு கார் ஓட்டிக்கிட்டு போயி மரத்திலே மோதினதைதான் அப்படி சாதாரணமா சொன்னா.” என்றான் மனு.
“மனு” என்று அதிர்ச்சியானான் மாறன்.
“அவ எப்படின்னு தெரிஞ்சுதான் என் வாழ்க்கையை அவளோட சேர்த்துக்கறேன்.” என்று தெளிப்படுத்தினான மனு.
மனுவின் மனசை மாற்ற இயலாது என்று உணர்ந்த மாறன்,
“சரி..அவளோட விஷயத்தை விடு..மற்ற எல்லாத்திலேயும் அவ தலையிடுவா மனு..சின்ன விஷயம், பெரிய விஷயம்.” என்று மாறனும் “அவன் விஷயம்” என்று சொல்லாமல் சொன்னான்.
“என் மனைவியானப் பிறகு எல்லாம் ஒரே விஷயம்..நம்ம வீட்டு விஷயம்.” என்றான் அவன் சொல்லாததைப் புரிந்து கொண்ட மனு.
அதற்கு மேல் ஸ்மிரிதியைப் பற்றி பேச விரும்பாமல்,“கோயமுத்தூர் ஷிஃப்டுக்கும் உன் கல்யாணத்துக்கும் ஏதாவது சம்மந்தமிருக்கா?” என்று மாறன் கேட்க,
அதற்கு பதில் சொல்லாமல் மனு மௌனம் காக்க, அந்த மௌனமே மாறனுக்குத் தேவையானப் பதிலைக் கொடுக்க,
“நான் சும்மா ஒரு பேச்சுக்கு வேற பாஷை பொண்ணுன்னு சொன்னதை அம்மாவாலே ஒத்துக்க முடியலே ஆனா உனக்காக ஸ்மிரிதியை மருமகளா ஏத்துகிட்டிருக்காங்க..அம்மாக்கும், அப்பாக்கும் நீ எது சொன்னாலும், செய்தாலும் சரியாப் படுது..நான் சரியா செய்தாக்கூட தப்பா படுது.” என்று மனம் வருந்தினான் மாறன்.
அதை கேட்டு முதன்முறையாக மாறனிற்கும், ஸ்மிரிதிக்கும் இடையேயான உறவைப் பற்றி கவலை வந்தது மனுவிற்கு.
“நோ..நீ நினைக்கற மாதிரியெல்லாம் அவங்க உடனே ஒத்துக்கலை…ஸ்மிரிதிக்கு இப்படி ஆன பிறகு அவளைப் பற்றிய என்னோட கவலைக்கு ஒரே தீர்வு எங்க கல்யாணம்ங்கறதுனால ஒத்துக்கிட்டாங்க.” என்று சொன்ன மனுவிற்கு விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் மாறனுள் இத்தனை வேதனையா என்று தோன்றியது.
“இனி ஸ்மிரிதி எனக்கு அண்ணி.” என்ற தவிர்க்க முடியாமல் ஸ்மிரிதியை ஏற்று கொண்டது போல் பேசினான் மாறன்.
மாறன் சொன்னதைக் கேட்ட மனுவிற்கு அவன் குடும்பத்தினர் மூவரும் ஸ்மிரிதியை அவன் மனைவியாக முழுமனதாக ஏற்று கொள்ள முடியாமல் அவரவர் அளவில் அவளை அரவணைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள் என்ற முக்கியமான விஷயத்தைப் புரிந்துக் கொண்டான்.
“என்ன டா பண்ணிட்டு இருக்கீங்க? லைட்டை அணைச்சிட்டு படுக்க போங்க.” என்று சிவகாமி குரல் கொடுக்க, அண்ணன், தம்பி இருவரும் விளக்கை அணைத்துவிட்டு அவரவர் படுக்கையறைக்குச் சென்றனர்.
Advertisement