“ஒரு அண்ணன் மாதிரியா பேசுறீங்க நீங்க? கொஞ்சமாவது ஆஷா மேல உங்களுக்கு அக்கறை இருக்கா?”
“அக்கறை எல்லாம் இங்க இருக்கு ஓகே. என்னோட தங்கச்சி வாழ்க்கையை என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்? நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்”
“ஐயோ டா, அப்படியா? சரி உங்க தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பாத்து உங்களால கட்டி வைக்க முடியுமா?”
“அது அது…”
“என்ன இழுக்குறீங்க? நீங்க நல்ல மாப்பிள்ளையை பாப்பீங்க தான். ஆனா அவனை உங்க தங்கச்சி கட்டிக்கணுமே? இந்த ஜென்மத்துல ஆஷா எங்க அண்ணனைத் தவிர வேற யாரை ஏறெடுத்து பாக்க மாட்டா”
“அதெல்லாம் அவ மனசை மாத்திருவோம். அவளே உங்க அண்ணன் மேல கோபமா தான் இருக்கா. கண்டிப்பா மனோஜை மறந்துருவா?”, என்று வீம்புக்காக சொன்னான் நிர்மல். 
“அப்படியா? அது கோபம் தான் நிர்மல். வெறுப்பு கிடையாது. வெறுப்பு இருந்தா கூட காதல்ல அது விருப்பமா மாறிரும்? சாதாரண கோபம் எத்தனை நாள் நிலைச்சு இருக்குமாம்? நான் எதுக்கும் உங்களை கட்டாயப் படுத்தலை. உங்க தங்கை கிட்ட வேற மாப்பிள்ளை பாக்குறேன்னு சொல்லி பேசுங்க. பத்து வருஷம் கழிச்சு கூட கல்யாணத்தை வச்சிக்கலாம்னு உங்க தங்கை கிட்ட சொல்லுங்க. அவ என் அண்ணனை மறந்து மனசு மாறினா அடுத்து என்னன்னு பாப்போம்”
“நான் அவ கிட்ட பேசுறது இருக்கட்டும்? முதல்ல உங்க அண்ணனே அவளை விரும்பலைன்னு சொல்லிட்டான். அதை விடு.  நீ எதுக்கு அப்படிச் சொன்ன? அவங்க கல்யாணத்துக்கும் நம்ம கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்?”
“அது.. அது.. வந்து நாம கல்யாணம் பண்ணினா அவங்க அடிக்கடி சந்திச்சிக்குவாங்க. அப்ப ஆஷா மனசை எங்க அண்ணன் புரிஞ்சிக்குவான்ல? அது மட்டுமில்லாம எங்க அண்ணனுக்கும் ஆஷாவை பிடிக்கும்னு தான் தோணுது. உங்க ஸ்டேட்டஸ் பாத்து தான் அவன் ஒதுங்குரானோ என்னவோ? நம்ம கல்யாணம் முடிஞ்சா உங்க வீட்லயும் எங்க அண்ணனை ஏத்துக்குவாங்க”
“ஏன் நீ மட்டும் ஸ்டேட்டஸ் பத்தி யோசிக்கலை? ஆஷாவோட விருப்பமே எங்க வீட்ல நிறை வேறாது. அப்ப நம்ம கல்யாணம் மட்டும் எப்படி நடக்குமாம்?”
“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? என்னை தூக்கிட்டு போய் தாலி கட்டாம வீட்டுக்கு பயந்துட்டு இருப்பீங்களா? ஆஷா மாதிரி தைரியமா இருப்பீங்கன்னு நினைச்சேனே? இப்படி பயப்படுறீங்க?”
“பயமெல்லாம் இல்லை. இது வரை இப்படி யோசிச்சது இல்லை. உங்க அண்ணன் வாழ்க்கைக்கு உன்னோட வாழ்க்கையை நீ அடகு வைப்பியா?”
“யார் கிட்ட அடகு வைக்கிறேன், உங்க கிட்ட தானே? என் அண்ணனோட ஃபிரண்ட் நீங்க. நீங்களும் நல்லவரா தான் இருப்பீங்க. பாக்கவும் அழகா இருக்கீங்க? என்னையும் நம்ம பிள்ளைகளையும் காப்பாத்துற அளவுக்கு சம்பாதிக்கிறீங்க? இதுக்கு மேல எனக்கு என்ன வேணுமாம்?”, என்று அவள் சாதாரணமாக கேட்க அவனுக்குள்ளே இடியுடன் கூடிய புயல் மழை. 
அவள் சொல்லி முடிப்பதற்குள் சிவானியுடன் திருமணம், அதன் பின்னான வாழ்க்கை, அவள் சொல்லிய பிள்ளைகள் முதல் கொண்டு அனைத்தும் அவன் மனக்கண்ணில் காட்சியாக விரிந்தது. 
தன் உடலை ஒரு முறை குலுக்கி கொண்டவன் அமைதியாக இருந்தான். “நான் பேசுறது ஓவர்னு தெரியும் நிர்மல். தப்புன்னும் புரியுது. ஆனா அண்ணனும் ஆஷாவும் ஹேப்பியா இருக்கணும். அண்ணன் மேல எவ்வளவு அன்பு இருந்தா இப்படி வீட்டுக்கு வந்து அவ அசிங்க படுவா. அவ காதலை நாம சேத்து வைப்போமே? எங்க அண்ணனும் சந்தோஷமா இருப்பான். இல்லை உங்களுக்கு வேற ஏதாவது ஆப்சன் இருந்தா யோசிச்சு சொல்லுங்க. நான் உங்க கூட பக்க பலமா இருக்கேன். நம்ம கல்யாணம் நடக்காமலே நம்ம ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருந்து அவங்களை சேத்து வைப்போம். யோசிச்சு சொல்லுங்க. ஏதாவது யோசனை வந்தா பொசுக்குன்னு கால் பண்ணிறாதீங்க? மெஸ்ஸேஜ் பண்ணுங்க”
“ஏன் கால் பண்ணக் கூடாது?”

“அம்மா அப்பா பாத்தா சிக்கல் சார்?”
“மெஸ்ஸேஜ் அனுப்பினாலும் என்னோட பேர் வருமே?”
“நிம்மின்னு தானே சேவ் பண்ணிருக்கேன். சமாளிச்சிருவேன்”, என்று சிரித்த படியே போனை வைத்தாள் சிவானி. 
“நிம்மியா?”, என்று வாயை பிளந்த படி இருந்தான் நிர்மல். 
“டேய் அண்ணா, என்ன டா வானத்தை பாத்துட்டு உக்காந்துருக்க?”, என்று கேட்ட படி அவன் அருகில் வந்து அமர்ந்தாள் ஆஷா . 
அவள் மனது அவனுக்கு தெளிவாக தெரிந்தும் மீண்டும் முயற்சி செய்வோமே என்று எண்ணி “ஆஷா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”, என்றான். 
“என்ன சொல்லு”
“என்னோட பாரின் ஃபிரண்ட்க்கு நேத்து நம்ம குடும்ப போட்டோவை அனுப்பி வச்சேன்”
“நீ எதுக்கு அனுப்பின?”
“அவன் உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கீங்கன்னு கேட்டான். அதான் அனுப்புனேன். விஷயத்தை கேளு டி”
“சரி சொல்லு”
“அவனுக்கு உன்னைப் பாத்ததுல இருந்து உன்னை ரொம்ப பிடிச்சுருச்சாம். கல்யாணம் பண்ணினா உன்னைத் தான் கட்டுவேன்னு சொல்றான்”
“என்ன? என்னையா? என்ன லூசு மாதிரி உளறிட்டு இருக்க? நான் மனோஜை தவிர வேற யாரையும் கட்டிக்க மாட்டேன். உனக்கு தான் தெரியுமே?”
“உன் மனசு தெரியும் ஆஷா. நான் என்னோட பிரண்ட் கிட்ட கூட உன் லவ் பத்தி சொல்லிட்டேன். நானும் உன் தங்கச்சிக்காக வெயிட் பண்ணுறேன்ன்னு சொல்றான். அது மட்டுமில்லாம அந்த பையன் மனோஜ் கூட கல்யாணம் இல்லைன்னா என் கூட கல்யாணம் நடக்கட்டுமேன்னு சொல்றான்”
“உன் ஃபிரண்ட் எத்தனை வருஷம் காத்திருந்தாலும் அவன் கூட என் கல்யாணம் நடக்காது”
“ஏண்டி? மனோஜ் தான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டானே?”’
“எத்தனை தடவை இதையே கேப்ப? அவன் வேண்டாம்னு சொன்னாலும் நான் அவனை விட மாட்டேன்”
“அவன் கடைசி வரை வேண்டாம்னு சொன்னா?”
“நானும் இப்படியே தனியா இருப்பேன்? உன்னோட பிள்ளைகளை வளத்து நல்ல அத்தைன்னு பேர் வாங்க போறேன்”
“உன் தலை, அவன் அப்படியே இருந்தா சரி. ஒரு வேளை அவன் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன செய்வ?”, என்று கேட்டதும் அவள் அமைதியாக அமர்திருந்தாள். 
“சொல்லு, ஏற்கனவே அவனோட அத்தை பொண்ணை கட்டிக்க அவன் சம்மதம் சொன்னான், உனக்கு தெரியும் தானே? அதே மாதிரி வேற பொண்ணைக் கட்டிக்கிட்டா என்ன செய்வ?”
“கட்டிக்கிட்டா கட்டிக்கட்டும்”
“ஆஷா”
“ஆமாண்ணா அவன் வேற கல்யாணம் பண்ணினா பண்ணிக்கட்டும். அவன் என்னை விட்டுட்டான்னு நான் ஒண்ணும் தப்பான முடிவு எடுக்க மாட்டேன். அதே மாதிரி அவனை விட்டுட்டு வேற ஒருத்தனை நான் கல்யாணம் பண்ண மாட்டேன். நான் இப்படி தான் இருப்பேன். ஆனா எனக்கு என்னமோ அவனும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டானு தான் தோணுது. அவன் மனசுல என்னவோ இருக்கு. அவன் என்னை பாக்குற பார்வைல நான் காதலை பாத்துருக்கேண்ணா. நானே அவனை எப்படி வழிக்கு கொண்டு வரன்னு யோசிக்கிறேன். நீ வேற தேவையில்லாம மொக்கை போட்டுட்டு இருக்க?”
“அடியே மொக்கையா? நான் உன் வாழ்க்கை விஷயம் பேசுறேன்”
“எனக்கு வாழ்க்கைன்னா அது மனோஜ் கூட தான். இல்லைன்னா தனியா இருந்து போறேன். உன்னோட பாரின் பிரண்டுக்கு எனக்காக வெயிட் பண்ணாம வேற கல்யாணம் பண்ண சொல்லி அட்வைஸ் பண்ணு. சரி சாப்பிட வா”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டாள். 
என்ன செய்ய என்று தெரியாமல் நிர்மல் யோசித்துக் கொண்டிருக்க அப்போது அவனுடைய போன் அடித்தது. “அவளா இருக்குமோ?”, என்று எண்ணிக் கொண்டே அதை எடுத்துப் பார்த்தான். புஷ்பா தான் அழைத்திருந்தாள். 
“சொல்லுங்கம்மா”
“அவ என்ன செய்றா டா? வீட்டுக்கு வந்துட்டாளா? ஊரை சுத்த போய்ட்டாளா?”
“அம்மா, நீங்க திருந்தவே மாட்டீங்களா? எப்பவும் இப்படியே பேசிக்கிட்டு. அவ எங்கயும் போறது இல்லை. இப்ப கூட வீட்ல தான் இருக்குறா”
“ஆமா ஆமா, அவளை நம்பிட்டாலும். சரி சரி அந்த பையன் கிட்ட போன் எதுவும் பேசுறாளா? நீ வாட்ச் பண்ணிக்கிட்டு தானே இருக்க?”
“நான் என்ன வாட்ச் மேனா? அதெல்லாம் அவ யார் கிட்டயும் பேசுறது இல்லை. அவ புது நம்பர் யாருக்கும் கொடுக்கலை”
“கொஞ்சம் கவனமா இருந்துக்கோ டா. அந்த மெக்கானிக் பையன் கிட்ட பேசினாலும் பேசுவா. சரியான பிடிவாதக்காரி. எத்தனை வருஷமா நானும் இவ கிட்ட மனசை மாத்த சொல்லி போராடுறேன். திருந்துறாலான்னு பாரு”
“அவளை மாத்துறதுக்கு முயற்சி செய்வோம்மா. வேற என்ன செய்ய?”
“எனக்கு நம்பிக்கை இல்லை டா”
“ஒரு வேளை அவ மனசு மாறலைன்னா பேசாம மனோஜ்க்கே அவளை கட்டி வைக்கலாமா? நம்ம கிட்ட இல்லாத பணமா? அவனை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துறலாமே?, என்று சொல்லி தன்னுடைய அம்மாவிடம் நூல் விட்டுப் பார்த்தான் நிர்மல். 
“வாயை மூடு டா. அறிவில்லாம பேசாத. அவன் யாரு நம்ம யாரு? இவளை கடைசி வரைக்கும் தனியா கூட இருக்க வைப்பேன். ஆனா அவனுக்கு கட்டி வைக்க மாட்டேன். அப்படி உன் தங்கச்சி ஏதாவது கிறுக்கு தனம் பண்ணினா நீங்க என்ன நினைச்சாலும் பரவால்லைன்னு சொல்லி அந்த பையனை உயிரோட விட மாட்டேன். இதைச் சொன்னாலே உன் தங்கச்சி அவனை விட்டுருவா.”, என்று சொன்னதும் “உங்களைப் பத்தி தெரிஞ்சும் கேட்டேன் பாருங்க. என்னைச் சொல்லணும்”, என்று நினைத்துக் கொண்டு “சரிமா, அப்படி எல்லாம் அவ யார் கிட்டயும் பேசலை. சரி ஜெயா வீட்ல என்ன சொன்னீங்க? அத்தை மாமா ஒண்ணும் சொல்லலையா?”, என்று கேட்டான். 
“கொஞ்ச நாள் வேலைக்கு போயிட்டு தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு  அடம் பிடிக்கிறான்னு சொன்னேன். அண்ணனுக்கும் அண்ணிக்கும் வருத்தம் தான். கொஞ்ச வருஷம் போட்டும்னு சொன்ன அப்புறம் தான் சமாதானம் ஆனாங்க”
“சரிம்மா நாங்க சாப்பிட போறோம். வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்து விட்டான். 
கட்டாயம் புஷ்பா அவர்களுக்கு கல்யாணம் செய்து தர மாட்டாள். திருட்டு கல்யாணம் பண்ண மனோஜும் சம்மதிக்க மாட்டான். திருட்டு கல்யாணம் என்ன? அவன் ஆஷாவை கல்யாணம் செய்ய சம்மதித்தாலே அது அதிசயம் தான். 
“சிவானி சொன்ன படி எங்க கல்யாணம் நடந்தா தான் ரெண்டு குடும்பமும் சொந்தக்காரங்களா மாறி அவங்க கல்யாணத்தை நடத்த முடியும்”, என்று முடிவெடுத்தான் நிர்மல். 
ஒரு அண்ணனாக ஆஷாவுக்கும் மனோஜ்க்கும் திருமணம் செய்து வைக்க அவனால் முடியும் தான். ஆனால் மனோஜ் அதற்கு ஒத்துழைக்கணுமே?
சிறிது நேரம் யோசித்தவன் “நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்”, என்று சொல்லி சிவானிக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்து விட்டு சாப்பிட அமர்ந்தான். 
பூக்கள் பூக்கும்…..