Advertisement

 
நட்சத்திர விழிகள் – 13
உதயா வந்த கோலத்தை பார்த்த நாச்சியும், பாக்கியமும் பதறிவிட்டனர். வேணிக்கோ ஒன்றுமே புரியவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறே அவர்களை பின் தொடர்ந்து மாடிக்கு சென்றார்.
மேலே தன் அறைக்கு சென்று படுக்கையில் நந்தினியை கிடத்தியவன் பெருமாளுக்கு வழிவிட்டு தன்னவளின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டான்.
“பிரபா நந்தினிக்கு என்னாச்சு?…” ஏன் இப்படி மயக்கமாக இருக்கா?..” என எத்தனை விதமாக கேட்டும் அவனிடமிருந்து பதிலில்லை. அசைவின்றி நந்தினியின் முகத்தையே வெறித்த வண்ணம் கல்லென சமைந்திருந்தான்.
உதயாவின் நிலையை பார்த்த வேணியின் மனமோ சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தாலும் வழக்கம் போல அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்  நடந்ததை தெரிந்துகொள்ள குறுகுறுத்தது.
“பெருமாளு என்னைய்யா நீயாவது சொல்லுவியா, மாட்டியா?…” என்று சற்று அழுத்தமாக கேட்டார் நாச்சி.
“பொறுங்க அத்தையம்மா. முதல்ல புள்ளையை கவனிச்சுக்கறேன். அப்றமா வந்து விளக்கமா சொல்றேன்..” என்று கூறிவிட்டு கையோடு அழைத்து வந்திருந்த நர்ஸிடம் தேவையானதை வாங்கி நந்தினிக்கு ட்ரிப்ஸ் போடவும் இன்னும் கலவரமாகிவிட்டனர் நாச்சியும், பாக்கியமும்.
போன இடத்தில் பிரசாத்தால் என்ன பிரச்சனையோ அதனால் தான் நந்தினிக்கு இப்படி ஆகினதோ, இல்லை வேறு எதுவுமா என குழம்பி தவித்தார் பாக்கியம்.
என்ன ஆட்டம் ஆடி நம்மை படுத்திவச்சதுக ரெண்டும். இத்தனை நாள் கவலைப்பட்டதுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்த்தாகிவிட்டது, நடந்ததை பின்னால் கேட்டு அறிந்துகொள்ளலாம்,  இப்போதைக்கு இது போதுமென்று அறையை விட்டு வெளியேறிவிட்டார் வேணி.
போனவர் நேராக வள்ளியிடம் கண்ஜாடை காட்டி பின்னால் அழைத்தவுடன் அவளும் வந்துவிட்டாள்.
“என்னங்கம்மா, கூப்பிட்டீங்க?…”  என்று இயல்பாகவே கேட்டாள்.
“உன்னை எதுக்கு கூப்பிடுவாங்க, நான் சொல்றதை கேட்கத்தான் கூப்பிட்டேன். இப்போ நான் சொல்றதை போல நீ செய்யணும்…” என்று மிடுக்காக அதிகாரத்துடன் கூறினார்.
அவரது அதிகாரம் கலந்த அலட்சியமான பேச்சில் வள்ளியின் கோவம் தூண்டப்பட, “என்னது நீங்க சொல்றதை கேட்கணுமா?, நான் அதுக்காக வரலை. பிரசாத் தம்பி சொல்றதை செய்யத்தான் வந்தேன்…” என்று கண்டிப்போடு கூறவும் கொதித்துவிட்டார் வேணி.
“உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும்? வீட்டு வேலைக்கு வந்துட்டு என்னையே எடுத்தெறிஞ்சு பேசறியா?. நீ இங்க வேலை செய்யனும்னா நான் சொல்றதை கேட்டுத்தான் ஆகணும்…” என்று திமிராக சொன்னவரை இளப்பமாக பார்த்த வள்ளி,
“நீங்க எனக்கு எந்த ஆடரும் போட தேவையில்லை. என்னை இங்கே வேலைக்கு அனுப்பினது பிரசாத் தம்பி அவர்கிட்ட பேசிக்கோங்க. என் கிட்ட இந்த மிரட்டல் வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. அப்பறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்…” என்று சொன்னவள் திரும்பியும் பாராமல் விடுவிடுன சென்றுவிட்டாள்.
வள்ளியின் துணிச்சலில் விக்கித்துப்போய் நின்றிருந்த வேணி பின் சுதாரித்துக்கொண்டு, “ எவ்வளோ தைரியம் இருந்தா என் கிட்டே இப்படி பேசுவா?, இன்னைக்கு இவளுக்கு ஒரு முடிவு கட்டி இந்த வேணி யாருன்னு காண்பிக்கறேன்…” என சூளுரைத்துகொண்டே உடனடியாக பிரசாத்திற்கு போன் செய்தார். ரிங் போய் சிறிது நேரத்தில்,
“ம்ம் சொல்லுங்க என்ன விஷயம்…” என பிரசாத் கேட்டதும் தான் தாமதம் படபடவென கொட்டித்தீர்த்தார்.
“தம்பி பிரசாத்து, இந்த வேலைக்காரி வள்ளி இருக்காளே. இவ சரியில்லை. சொன்னதை எதுவுமே கேட்கிறதில்லை. உன் அத்தையையே மரியாதை இல்லாமல் எதிர்த்து பேசிட்டாப்பா….” என்று வள்ளி கூறாததையும் எடுத்துக்கூட்டி சொல்லி மூட்டிவிட்டார்.
வேணியை அறியாதவனா பிரசாத்?
“நீங்க பேசினதுக்குத்தான் பதில் பேசியிருப்பா. அதை விடுங்க. பிரபா, நந்தினி விஷயத்துல இனி உங்களுக்கு எதுவும் வேலை இல்லை. அதுவுமில்லாமல் கொஞ்சநாள் அங்க வள்ளி நல்லவிதமா இருக்கட்டும். கெளரி கல்யாணம் முடியவும் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்…” என்று சாவாகாசமாக கூறியவனை இழுத்துவைத்து நாலு அப்பு அப்பினால் என்னவென்றுதான் தோன்றியது. அதை செய்துவிடத்தான் முடியுமா வேணியால்?
ஆனாலும் இதை அப்படியே விட மனவில்லாமல் பிரசாத்தை தன் வழிக்கு கொண்டுவர முயன்றார். “இப்படி சொன்னா நல்லாவா இருக்கு பிரசாத்து. அத்தை என்ன சொல்றேனா?…” என்றவரை இடைமறித்தவன்,
“நீங்க ஒண்ணும் சொல்லவேண்டாம். நான் நினைக்கிறதும், சொல்றதும் தான் இனி அங்க நடக்கும். நடக்கணும். உங்க வேலையை மட்டும் நீங்க பாருங்க. மீறி நீங்களா எதுவும் செய்யனும்னோ, வள்ளிக்கிட்ட நீங்க பேசி அவளை உங்களுக்கு அடிபணிய வைக்கனும்னோ நினைச்சீங்கன்னா விளைவு விபரீதமா போய்டும். இதுக்கும் மேல என்னை பேசவைக்காதீங்க. புரியும்னு நினைக்கேன்…” என சற்று கடுமையாக கூறியவன் வேணியின் அமைதியில் பின் தானாகவே,
“இங்க பாருங்க, ஏற்கனவே கவலையில இருக்கும் போது அவனுக்கு பிரச்சனை குடுத்தா பத்தோட பதினொன்னா அதுக்கும் சேர்த்து கவலைப்பட்டு முடிச்சிடுவாங்க. அப்படி நடக்கக்கூடாது. ஒன்னு முடிஞ்சா அடுத்து என்னனு நினச்சு பயப்படனும். அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் சரி. அதை நான் பார்த்துப்பேன். நான் சொன்னது போல கெளரி கல்யாணம் நல்லபடியா முடியட்டும். நீங்க வள்ளியை தொந்தரவு செய்யாதீங்க…” என கட்டளையான குரலில் கூறி முடித்து உடனே தொலைபேசி தொடர்பையும் துண்டித்துவிட்டான்.
உடனே வள்ளிக்கு தொடர்பு கொண்டவன் மறுமுனை எடுக்கப்பட்டதும், “நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு தானே?…” என்ற கேள்விக்கு,
“இருக்கு…” என்றாள் வள்ளி.
“பத்திரம், முக்கியமா அந்த வேணிக்கிட்ட கொஞ்சம் அதிகமான எச்சரிக்கையோடே இரு. இன்னைக்கு பேசினதை போலவே பேசு. கிட்ட நெருங்க விடாம எட்டவே வச்சிரு. அதுதான் நமக்கு நல்லது…” எனவும்,
“ம்ம் சரிங்க தம்பி…” என்றாள்.
“அங்க என்ன நடந்தாலும் எனக்கு தெரியனும். அந்த பிரபா சரியான கூர்புத்திக்காரன். கவனம். இப்போ வைக்கிறேன்…” என எச்சரிக்கை செய்துவிட்டு தன் வேலையில் மூழ்கிபோனான்.
பிரசாத்தின் பேச்சை அசைபோட்டவரே அடுக்களை பக்கம் வந்த வேணி வள்ளியை பார்க்க அவளோ இவரை கண்டு காணாதவாறு வேலையில் ஆழ்ந்துவிட்டாள். வள்ளியை மனதுக்குள் வசைபாடியபடியே மாடியை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்துகொண்டார் வேணி.
நந்தினியை ஆராய்ந்து கொண்டிருந்த டாக்டர் பெருமாள்,
“பிரபா, நந்தினிக்கு காய்ச்சல் வேற இருக்குப்பா. நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்…”  என கூறியவரிடம் எதுவும் வேண்டாம் என்று தலையை மட்டும் அசைத்தவனது பார்வை மட்டும் நந்தினியை விட்டு விலகவே இல்லை. பிடிவாதமான அவனது செய்கையில் நாச்சியும் பாக்கியமும் திகைத்துத்தான் போயினர்.
என்னவென கேட்கலாமென்றால் அவனது முகம் இறுகிப்போய் இருந்தது. செய்வதறியாது பெருமாளோ பார்க்க அவரோ வெளியேற சமிஞ்சை காட்டினார்.
உதயாவின் தோளை தட்டிகொடுத்தவர், “பிரபா காய்ச்சல் அதிகமான எந்நேரமானாலும் என்னை கூப்பிடு, உடனே வரேன். நர்ஸ் வேணும்னா இங்கே இருக்க சொல்லவா?..” என கேட்க மறுப்பாக தலையசைத்தவன்,
“அதெல்லாம் வேண்டாம் அங்கிள், நான் பார்த்துப்பேன். தேவைனா உங்களை கூப்பிடறேன். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் வந்துட்டு போங்க ப்ளீஸ்…” என்று இறைஞ்சும் குரலில் கேட்க,
“இதெல்லாம் நீ சொல்லனுமா பிரபா. கண்டிப்பா வரேன். ஹாஸ்பிட்டல் வரணும்னு உனக்கே தோணுச்சுனா நீ அங்க கிளம்பிட்டு எனக்கும் தகவல் சொல்லிடு. இப்போ நான் கிளம்பறேன்..” என்று விடைபெற்று வெளியே வந்தவரை எதிர்க்கொண்ட நாச்சி,
“என்னைய்யா பெருமாளு? என்னவாச்சு நந்தினிக்கு, ஏன் இப்டி இருக்கு?…” என்று படபடப்பாக கேட்டார்.
“எனக்கும் தெரியலைங்க அத்தையம்மா. க்ளினிக்ல இருக்கும் போது போன் பண்ணினான் பிரபா. அவசரமா வீட்டுக்கு வாங்க. நந்தினி திடீர்னு மயக்கமாகிட்டா. பேச்சுமூச்சே இல்லை. நீங்க உடனே வீட்டுக்கு வாங்க. நானும் தனம் சித்தி வீட்ல இருந்து வந்துட்டு இருக்கேன்னு சொன்னான். அதான் நானும் கிளம்பிட்டேன்…” என்று முடிக்க,
“ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ருக்கலாமே, ஏன் அண்ணா? என கேட்ட பாக்கியத்திடம்,
“நானும் அதை சொன்னேன்மா, எங்க கேட்டான் உன் பிள்ளை. ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வரமுடியவே முடியாதுன்னு மறுத்துட்டான். அதுமில்லாம வீட்டுக்கு உங்களால வரமுடியுமா? முடியாதான்னு கேட்கிறான். நான் என்ன பண்ண சொல்லு?…” என்று சொன்னவரிடம் பதில் சொல்ல முடியாமல் மேலும் குழம்பினர் இருவரும்.
பின் யோசனையாக, “அவன் ஏதோ ஒரு சொல்ல முடியாத அழுத்தத்துல இருக்கான்னு தோணுது அத்தையம்மா. இப்போ பிரபா கிட்ட எதுவுமே கேட்காதீங்க. நந்தினிக்கு முதல்ல குணமாகட்டும். பின்னால மெதுவா பேசிக்கலாம். நான் அப்பறமா வந்து பார்க்கிறேன்…” என்ற டாக்டர் பெருமாள் விடைபெற்று கிளம்பிவிட்டார்.
மீண்டுமொருமுறை உதயாவின் அறையை எட்டி பார்த்துவிட்டு வெளியேறி இருவரும் கீழே வந்தனர்.
“சந்தோஷமா போனவுக இப்படியா திரும்பி வரணும்?. அங்கே என்ன நடந்துச்சோ?…” என்று அங்கலாய்த்துக்கொண்டே இருக்கையில் அமரவும் பாக்கியம் வேகமாக தொலைபேசியின் அருகே சென்றவர் தனத்தின் எண்களை அழுத்திவிட்டு காத்திருந்தார். மறுமுனையில் தொலைபேசியை எடுத்ததும் தனம் என்ற பாக்கியத்தின் குரலை கேட்டதும்,
“நந்தினி எப்படி இருக்கா பாக்கியா?…” என்று பதட்டமான குரலில் கேட்டார். அவருக்குத்தான் தெரியுமே இந்த தொலைபேசி எண்ணிற்கு நாச்சியார் குடும்பத்தவர்கள் மட்டுமே அழைப்பார்கள் என்று. அதனால் தான் பிரசாத் அதை எடுக்கவோ உபயோகிக்கவோ கூட மாட்டான்.
“அங்க என்ன நடந்தது தனம்?…” என்ற கேள்வியில் சுதாரித்த தனம்,
“பாக்கியா நந்தினி இங்க அவனது நல்லாத்தான் பேசிட்டு இருந்தா. ஏதோ மேலே பூச்சியோ பல்லியோ என்னமோ விழுந்தது போல இருக்கவும் அலறி மயங்கி கீழே விழுந்துட்டா. கொஞ்சம் பயந்த சுபாவம். பிரபாவுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. ஹாஸ்பிட்டல்ல என்ன சொன்னாங்க?…” என்று பாக்கியத்தின் பதட்டத்திற்கு குறையாத பதட்டத்தோடு அடுக்கியவரிடம்,
“ஹாஸ்பிட்டலா? அவன் அங்கே போகமாட்டேன்னு வீட்டுக்கு வந்துட்டான் தனம்… பெருமாள் அண்ணா வந்து பார்த்துட்டு காய்ச்சல் இருக்குன்னு ட்ரிப்ஸ் போட்டுட்டு போய்ருக்காங்க. அவங்களும் சொல்லிப்பார்த்தாங்க. இவன் கேட்கலையே?…” என்று கவலையோடு குமுற தனத்திற்கு இன்னும் சந்தேகம் வலுத்துக்கொண்டே போனது. யோசனையில் இருந்தவரிடம்,
“பிரசாத் அங்க இல்லையா?…” என்று சற்று தயக்கத்தோடு பாக்கியம் கேட்கவும்,
“அவன் இல்லை பாக்கியம். எனக்கு தெரியாதா பிரபா பத்தி? நான் அவனை பிரபா, நந்தினி வரதுக்கு முன்னமே வெளியே அனுப்பிட்டேன்…” என கூறி அவருக்கு ஆறுதலாக சிறிதுநேரம் பேசிவிட்டு தொடர்பை துண்டித்தார்.
பாக்கியம் பேசி முடிக்கட்டுமென காத்திருந்த நாச்சி, “என்னம்மா பாக்கியா, தனம் என்ன சொன்னா?. பிரசாத்தால தான் எதுவும் பிரச்சினையா?…” என்று கேட்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க அத்தை. நந்தினி மேல ஏதோ பூச்சி போல விழுந்திருக்கு. அதான் பயத்துல மயங்கிட்டா போல…” என்று தனம் கூறியவை அனைத்தையும் சொல்லி முடித்தவர் வேலையாக உள்ளே சென்று விட்டார்.
நாச்சிக்கோ நம்பவே முடியவில்லை. “பூச்சி விழுந்ததுக்கு எல்லாமா  பேச்சு மூச்சில்லாம காய்ச்சல் வர அளவுக்கு ஆகிருக்கும்? இதுல நிச்சயமா வேற ஏதோ ஒன்னு இருக்கு…” என்று எண்ணிக்கொண்டே மீண்டும் மேலே சென்றவர் உதயாவின் அறைக்குள் நுழைய போகையில் அங்கே கேட்ட பேச்சுக்குரலில் அப்படியே நின்றுவிட்டார்.
“ரொம்ப நன்றி சித்தி. நான் சொன்னதை போல வீட்ல சொன்னதுக்கு….”
“பிரசாத்தை நந்தினிக்கு முன்னாலேயே தெரியுமா பிரபா?…” என்ற  கூர்மையான கேள்வியில் சற்று ஆடித்தான் போய்விட்டான். இனி தன்னால் எதையும் மறைக்க முடியாதென்று உணர்ந்துகொண்டான்.
“சித்தி ப்ளீஸ். நானே அதை உங்ககிட்ட சொல்றேன். ஆனா இப்போ வேண்டாம் எனக்கு நந்தினி முக்கியம் அவ குணமாகட்டும்…”
“இல்லை. இப்போவே நீ சொல்லியாகனும்…”
“கண்டிப்பா சித்தி. உங்கக்கிட்ட நிச்சயம் மறைக்க மாட்டேன். ஆனா அதுக்கான நேரம் இது இல்லை. அப்பறம் நந்தினி அங்க ஏன் மயங்கி விழுந்தான்னு இங்க நம்ம வீட்ல மட்டுமில்லை, பிரசாத் ஊர்ல இருந்து வந்தாலும் நீங்க அவன்கிட்டயும் அதே பொய்யை சொல்லுங்க…” என்று கூறவும் பயம் கலந்த குழப்பத்தில்,
“பிரபா எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு. பிரசாத் ஏதோ பெருசா பண்ணியிருக்கான்னு மட்டும் நல்லா தெரியுது. என்னன்னு சொல்லிடு…” என்று குரல் நடுங்க கேட்டவரிடம் உங்கள் மகன் படுபாதகம் செய்யவிருந்தான் என்பதை எப்படி சொல்லுவான்?
“காரணமில்லாம நான் சொல்லலை சித்தி, ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. இப்போ எதையும் சொல்லகூடிய நிலையில நான் இல்லை. என் மனைவி சரியாகட்டும். அதற்கு பின்னால் வந்து நடந்ததை சொல்றேன். இப்போ வச்சுடறேன்…” என்று அவரது பதிலுக்கு காத்திராமல் மொபைலை அணைத்துவிட்டான்.
யாரிடம் சொல்லகூடாது என்று தனத்திடம் அத்தனை முறை சொன்னானோ அவனுக்கு உதயாவும், நந்தினியும் வந்ததிலிருந்து நந்தினி மயங்கி சரிந்தது வரைக்கும் விலாவரியாக விஷயம் தெரிவிக்கபட்டாகிவிட்டது.
வந்திருப்பது தன் வீடு என்றறிந்தால் நந்தினிக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்குமென்பதில் பிரசாத்திற்கும் ஓரளவு அனுமானம் தான். அதுமில்லாமல் தொலைபேசியில் உதயாவிடம் தனத்தின் பேச்சுவார்த்தையும் மிகுந்த அச்சத்தை குடுத்தது பிரசாத்திற்கு. தன் தாய் தன்னை பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்? என்று மட்டுமே இப்போது கவலை கொண்டான்.
நாச்சியும் சப்தமில்லாமல் அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டார். அவருக்கு ஓன்று மட்டும் புரிந்தது. பிரசாத்தால் நந்தினி ஏதோ ஒரு வகையில் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறாள் என்று. அது என்னவென்று உதயா நந்தினியே சொன்னால் தான் உண்டு. எதுவாக இருப்பின் அது அவர்களின் வாயிலிருந்தே வரட்டும். நாமாக கேட்டு இன்னும் துன்பம் தரவேண்டாமென்று கீழே சென்றுவிட்டார்.
கிருஷ்ணமூர்த்தியும், சுதர்சனமும் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் வந்தபின் சொல்லிக்கொள்ளலாமென்று விட்டுவிட்டனர்.
நேரம் ஆக ஆக நந்தினிக்கு காய்ச்சல் வெகுவாக கூட ஆரம்பித்தது. அவளது உடல் அனலாக கொதிக்க ஆரம்பிக்கவும் பயந்துவிட்டான். பெருமாளுக்கு அழைக்கவும் உடனே வந்து அதற்கு தகுந்த சிகிச்சை அளித்துவிட்டு சென்றார்.
பசிக்க ஆரம்பிக்கவும் கீழே சென்று சாப்பிட மனமில்லாமல் நாச்சியை அழைத்து மேலே குடுத்துவிட்ட சொல்லவும் அவர்களுக்கே ஆச்சர்யம். சாப்பிட வைக்க போராடவேண்டுமோ என நினைத்தவர்களுக்கு இப்படி அதிர்ச்சி கொடுத்தால் பாவம் என்ன செய்வார்கள்?
வள்ளியிடம் சாப்பாட்டை கொடுத்தனுப்பிவிட்டு தாங்களும் சிறிது இடைவெளிவிட்டு சென்றனர். கதவை தட்டும் ஓசை கேட்டதும் உள்ளே வரசொன்னவன் யாரும் உள்ளே வராமல் போனதும் தானே எழுந்து சென்றான்.
புதிதாக ஒரு ஆளை பார்த்ததும் கேள்வியாய் புருவம் சுருக்கியவன்,
“யார் நீங்க?…” என்று கேட்டான். இதுதான் உதயா. வீட்டில் வேலைபார்ப்பவர்களாக இருந்தாலும் அவர்களை மரியாதையாகவே அழைப்பான், அப்படியே நடத்துவான்.
“இங்க புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கேனுங்க. பேரு வள்ளி. பாட்டியம்மாதான் சேர்த்தாங்க…” என்ற வள்ளியை பார்த்தவன்,
“ஓ!! அப்படியா?..” என்றவன் மேலும் ஏதோ கேட்க நினைக்க பாக்கியம் மேலே வந்துவிட்டார்.
“என்னப்பா பிரபா?…” எனவும்,
“இல்லைம்மா இவங்க புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிறதா சொன்னாங்க, அதான் விசாரிச்சிட்டு இருந்தேன்…” என்று கூறவும்,
“ஆமாம் பிரபா. நம்ம வேணி வீட்ல வேலை பார்க்கிறவங்களோட சொந்தம் போல. வேலை கேட்டிருக்காங்க. அதான் நமக்கும் இப்போதைக்கு ஒத்தாசைக்கு ஆள் வேணும்னு வேணிதான் வர சொல்லிருக்கா….” எனவும் உதயாவிற்கு மெலிதாக சந்தேகம் கூட முளைவிட்டது. அதை மேலும் சிந்திக்க விடாமல் பாக்கியத்தின் குரல் இடையிட்டது.
“நீ போய் சாப்பிடு பிரபா. நான் வேற ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?…” என்று கேட்டவரிடம் போதுமென மறுத்துவிட்டு அவரை அனுப்பிவிட்டு உள்ளே வந்துவிட்டான்.
நந்தினிக்கு எதிர்ப்புறமாக நாற்காலியை இழுத்துபோட்டு அமர்ந்தவன்,
“ஹேய் வாயாடி, என்னடா இது நாம இப்படி காய்ச்சல்ல படுத்திருக்கிறோம். இவன் நல்லா கொட்டிக்கறானேன்னு பார்க்கிறியா?…” என்று அசைவில்லாமல் படுத்திருந்த நந்தினியிடம் பேசியவன்,
“நான் நினைக்கிறது சரினா நீ திரும்ப எழுந்துகொள்ளும் போது நான் உன்னை முதன் முதலா பார்த்தபோது இருந்த நந்தினியை திரும்ப பார்ப்பேன்னு நினைக்கிறேன். அப்படி நீ வந்தா உன்னை நான் சமாளிக்கனுமே?, அதுக்கு தெம்பு வேண்டாமா?, அதான் கொட்டிக்கறேன்….” என்று அவளை பார்த்துக்கொண்டே ருசியறியாமல் பசிக்காக மட்டுமே வேகமாக சாப்பிட்டு முடித்தான்.
சாப்பிட்ட பாத்திரம் அனைத்தையும் எடுத்து வெளியே வள்ளியை அழைத்து கொடுத்துவிட்டு தன்னை தொந்தரவு செய்யவேண்டாமென்று சொல்லியனுப்பியவன்  இன்னொரு நாற்காலியை எடுத்துப்போட்டு  அதில் காலை நீட்டியவாறு அமர்ந்தவன் மனமோ தனம் வீட்டில் நடந்த நிகழ்வை அசைபோட தொடங்கியது.
கோவிலுக்கு போய்விட்டு தனத்தின் வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் அவனோடு சலசலத்தபடியே வந்தாள் நந்தினி.
வீட்டை நெருங்க நெருங்க இன்னும் உதயாவை பயம் கொஞ்சம் கொஞ்சமாக கவ்வ தொடங்கியது. எங்கே பிரசாத் வெளியில் செல்வதுபோல போய்விட்டு வேணுமென்றே திரும்பி வந்து நந்தினி முன்னால் நின்றுவிடுவானோ என எண்ணி கலங்கினான்.
வந்தாகிற்று பிரசாத்தின் வீட்டிற்கு. தோப்பின் நடுவிலிருந்த அந்த வீட்டை பார்த்ததுமே நந்தினி குதூகலித்து விட்டாள்.
“எவ்வளோ அழகா இருக்குதுல இந்த வீடு…” என்றவாறே அங்குமிங்கும் பார்வையை ஓட்டியபடி உதயாவோடு இணைந்து நடந்தாள்.
ரம்யமான அந்த சூழலை ரசித்தபடி அவனவள் வந்தால், தன்னை இந்நிலைக்கு நிறுத்திய அந்த சூழலை சபித்தபடி அவளவன் வந்தான்.
இருவரது வருகையை பார்த்த தனத்திற்கோ சந்தோஷம் தாளவில்லை.
“வாங்க, வாங்க. வாப்பா பிரபா, வாம்மா நந்தினி…” என அழைத்துக்கொண்டே வந்தவர்,
வேலையாளை அழைத்து ஆரத்தி கரைத்து எடுத்துவர சொல்லிவிட்டு நந்தினியை நெருங்கி அவளது முகத்தை வழித்து நெட்டிமுறித்தார்.
“எப்டி இருக்கீங்க சித்தி?..” என்று குரலில் சுரத்தே இல்லாமல் முகத்தில் புன்னகையை வழிய ஒட்டிவைத்து கேட்டவனை பார்த்து,
“எனக்கென்ன பிரபா இருக்கேன். நீ எப்டி இருக்க? நந்தினி நல்லா இருக்கியாம்மா?…” என்றார்.
“ம்ம் நான் நல்ல இருக்கேன் அத்தை…” என்று கூறிவிட்டு, “சரிதானா?..” என்பது போல தன்னவனின் முகத்தை பார்க்க அவன் மெலிதாக முறுவலித்தான். அவன் கவலை அவனுக்கு. “இதெல்லாம் நல்லா தான் இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன நடக்கபோகுதோ?…” என்று ஆயாசமாக நினைத்துக்கொண்டான்.
நந்தினி பாக்கியம் கொடுத்துவிட்டதாக சொல்லி பலகாரங்களை கொடுக்கவும் மகிழ்வோடு அதை வாங்கிக்கொண்டார்.
ஆரத்தி வரவும் இருவருக்கும் எடுத்து முடித்து உள்ளே அழைத்துசென்றார். வீட்டினுள் நுழைய நுழைய உதயாவின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது.
“உள்ளே வாம்மா, இங்கே உட்கார். குடுக்க ஏதாவது எடுத்திட்டு வரேன்…” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் தனம்.
“என்னாச்சுங்க? ஏதோ போல இருக்கீங்க?…” என்ற மனைவியின் கேள்வியில் தன்னை மீட்டவன்,
“ஒண்ணுமில்லைடா, ஒரு வேலை அப்டியே பெண்டிங்ல இருக்கு. அதை பத்திதான் யோசிச்சுட்டு இருக்கேன்…” என்று சமாளித்தான்.
“ஓ, அப்போ நாம சீக்கிரம் கிளம்பிடலாம் தானே. வீட்டுக்கு போனதும்  நீங்க அதை பாருங்க. சரியா?…” என்று வழி கூறியவளை கண்ணகலாமல் பார்த்தவன் தனம் வரும் அரவம் கேட்டு வேறு திசை பார்த்தான்.
குடிக்க மோர் எடுத்து வந்தவர் இருவரது கைகளிலும் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு எதிர் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
வாயிலை தீண்டி தீண்டி மீண்டு வந்துகொண்டிருந்தன உதயாவின் விழிகள். அதன் தவிப்பை அறிய முடியாதவர் இல்லை தனம். பிரசாத்தை எண்ணி தான் அந்த வாட்டம் என்று புரிந்தாலும் அதற்கு அவசியமில்லாத போது ஏன் இந்த தவிப்பு? என்பது தான் தனத்திற்கு புரியாத புதிராக இருந்தது. மலர்ச்சியில்லாத உதயாவின் முகம் அவருக்கு குழப்பத்தையே விளைவித்தது.
தனத்தின் எண்ணம் பிரசாத் தான் இங்கே இல்லையே? பின் எதற்காக இந்த கவலை? என்று நினைத்தார்.
பிரசாத் இல்லாமல் போனால் மட்டுமா போதுமா? நிஜம் இல்லை என்றால் என்ன? நிழல்(புகைப்படம்) கூடவா இருக்காது அவனது வீட்டில்? அதை நந்தினி பார்த்துவிட்டால் என்ன செய்வது? என்று தான் பரிதவித்துக்கொண்டிருந்தான் உதயா. அவன் நல்ல நேரம் ஹாலில் புகைப்படங்கள் ஏதுமின்றி சில ஓவியங்கள் மட்டுமே சுவரை அலங்கரித்து கொண்டிருந்தன.
அவனை வெளியேற்றவே தயக்கம் காட்டிய உதயாவால் இதை தனத்திடம் சொல்லமுடியவில்லை. அதன் பின் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தன்னால் முடியாது. சொல்லவும் தனக்கு துளியும் விருப்பமில்லை என்பது தான் உண்மை. தங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த விஷயம் அம்பலமாவதை தவிர்க்கவே எண்ணினான். நந்தினிக்காக மட்டுமில்லை, பிரசாத்திற்காகவும்.
பிரசாத்தின் செயல் தனத்திற்கு தெரிந்தால் தாங்கமாட்டார். அதுமட்டுமில்லாமல் தனத்தின் முன்னால் பிரசாத் குற்றவாளியாக நிற்கவேண்டுமென்ற எண்ணமெல்லாம் உதயாவிடம் இல்லை. ஆனால் தங்களை விட்டு விலகி முக்கியமாக நந்தினியின் மீதுள்ள வன்மத்தை மறந்து தங்கள் வாழ்க்கையில் இருந்து விலகினாலே அவனுக்கு போதுமேன்று தான் இருந்தது. ஆனால் அந்த வம்பன் அப்படியே விட்டுவிடுவானா? என்று நினைக்க நினைக்க உதயாவிற்கு மலைப்பாக இருந்தது. இவ்வாறே தனக்குள்ளேயே யோசனையில் உழன்று கொண்டிருந்தான்.
அவனின் மனப்போராட்டங்களை முகத்தின் சோர்வு காட்டிகொடுக்க அதை பார்த்த தனம் நந்தினியிடம் அவளிடம் பேச்சு கொடுத்தவாறே உதயாவின் பக்கம் திரும்பியவர் தங்களின் பேச்சில் அவனையும் உள்ளே இழுக்க ஆரம்பித்தார்.
“பிரபா இன்னும் கொஞ்ச நேரத்தில் சமையல் தயாராகிடும், நீ நந்தினியை கூட்டிட்டு போய் வீட்டை சுத்தி காண்பி…” என்றார். அப்படியாவது அவனது மனநிலை மாறிவிடும் என்று நினைத்து. அவரது எண்ணத்திற்கு நேர்மாறாக,
அதை அவசரமாக மறுத்து, “இல்லை சித்தி, கொஞ்சம் டயர்டா இருக்கு. இன்னொரு முறை காண்பிக்கறேன்…” என்று வரவழைத்துகொண்ட அலுப்பான குரலில் கூறினான்.
“சரி நீ இரு நான் காண்பிக்கறேன்…” என்றவர்,
“நீ வாடாம்மா…” என்று அழைத்துகொண்டார். அவரோடு எழுந்தவளை கை பிடித்து நிறுத்தியவனை ஏனென்று கேள்வியாய் பார்க்க,
“இல்லை!! இரு அப்பறமா சாப்பிட்டதும் பார்க்கலாம். நானே அழைச்சிட்டு போறேன்…” என்று கூறி கைகளில் அழுத்தம் கொடுத்து கண்களால் அமரச்சொல்லவும் சரியென்று அவளும் சம்மதித்து அவ்விடமே அமர்ந்துவிட்டாள்.
தனம் உள்ளே வேலையெல்லாம் ஆகிவிட்டதா என பார்க்க சென்றுவிட்டதும் தனது மொபைலை எடுத்தவன் அதில் உள்ள சிலவற்றை காட்டிக்கொண்டே வேறெங்கும் அவளது கவனம் போகாத வண்ணம் பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தான்.
சில நிமிடத்தில் திரும்பி வந்த  தனம் இருவரையும் பூஜையறைக்கு வருமாறு கூறவும் வேறு வழியின்றி நந்தினியை அழைத்துகொண்டு அவரை பின்தொடர்ந்து சென்றான்.
வீட்டில் கொஞ்சம் உள்ளடங்கி இருந்த பூஜையறைக்கு சென்றதும்,
“நந்தினி விளக்கேத்தும்மா…” என்றதும் இவர்கள் வீட்டில் தான் ஏன் விளக்கேற்ற வேண்டும்? என்று குழப்பமாக உதயாவை பார்த்தாள். அவன் தலையசைத்ததும் மறுக்காமல் விளக்கை ஏற்றி தெய்வங்களை வணங்கி முடித்ததும் குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளுமாறு கொடுத்தார் தனம்.
அதை மறுத்த உதயா, “சித்தி நீங்களே வச்சுவிடுங்க. இதுல என்ன தயக்கம் உங்களுக்கு?…” என்று அவரையே நந்தினியின் நெற்றியில் குங்குமமிட செய்தான்.
இருவரும் காலில் விழுந்து ஆசி வாங்கியதும் அவர்கள் இருவருக்குமான துணிகளும் நகைபெட்டியும் அடங்கிய தாம்பாளத்தை கையில் ஏந்தியவர் அதை வாங்கிக்கொள்ளுமாறு பணித்தார். என்ன சொல்வானோ என்று உதயாவை பார்க்க விளைந்த நந்தினியிடம்,
“இதுக்கும் உன் புருஷன் கிட்ட பர்மிஷன் கேட்ட அப்பறமா இருக்கு உனக்கு?…” என்று செல்லமாக மிரட்டி தாம்பாளத்தை வாங்க சொல்லவும் சிரித்தபடி வாங்க எத்தனித்தவளின் கரங்கள் அப்படியே நின்றது.
எதிர் அறையிலிருந்து ஒரு பக்கமாக சாற்றி வைக்கபட்டிருந்த கதவின் வழியாக யாரோ ஒரு உருவம் தன்னை பார்ப்பது போல இருக்கவும் தனத்தை தாண்டி எட்டி பார்த்தவளின் உடல் லேசாக நடுங்க ஆரம்பித்தது.
அருகே போய் அது உண்மைதானா என்று ஊர்ஜிதபடுத்த மனதின்  ஆழத்தில் ஏதோ ஒரு உணர்வு உந்தி அவளை தள்ளியது அந்த அறைக்குள். தனம் கொடுத்த தட்டை வாங்காமல் அவரை தாண்டிக்கொண்டு அந்த அறையை நோக்கி போகவும் தான் உறைத்தது உதயாவிற்கு.
நந்தினியின் பார்வை போன திசையை பார்த்தவனுக்கு சர்வமும் அடங்கிவிட்டது.
மேலும் அவளை அங்கே செல்லவிடாமல், “நந்து நில்லுடா, எங்க போற? வா வீட்டுக்கு போகலாம்…” என்று அழைத்து அவளை அங்கிருந்து இழுக்க அவனின் கையை உருவிக்கொண்டு வேகமான எட்டுக்களோடு அறையை அடைந்து முழுவதுமாக கதவை திறந்தாள். அங்கிருந்த கொஞ்சம் பெரிதான புகைப்படத்தில் பிரசாத் மிதப்பாக பார்த்துக்கொண்டிருந்தான்.
அது நந்தினியை எள்ளலாக பார்ப்பது போலவே இருந்தது அவளுக்கு. தனதிற்கோ ஒன்றுமே புரியவில்லை. தாம்பாளத்தை அங்கேயே வைத்தவர் நந்தினியை பின் தொடர்ந்து சென்றார்.
பிரசாத்தின் அறைக்குள் நந்தினி நுழைந்ததும் அவனது புகைப்படத்தின் அருகே வந்ததும் அவளின் பின்னால் வந்து நின்றவர், “என்னம்மா நந்தினி, இது என் பிள்ளை பிரசாத். பிரபாவுக்கு தம்பி வேணும். உனக்கு தெரியாதில்லை. இன்னொரு முறை அறிமுகபடுத்தறேன்….” என்று சம்பர்தாயமாக கூறியவர் நந்தினியிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும் முன்னால் வந்து அவளை பார்த்தவரின் முகம் அதிர்ச்சியாகிவிட்டது.
உதயாவோ நந்தினியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான். “வாடா போகலாம், நம்ம வீட்டுக்கு போகலாம்…” என்று மன்றாடியவனின் குரல் அவளது செவிகளை எட்டினால் தானே?
நேரம் ஆக ஆக கண்களில் சிவப்பேற திடீரென ஆவேசம் வந்தவளை போல அந்த புகைப்படத்தை படு வேகமாக கழட்டியவள் ஆவேசம் தணியுமட்டும் சுவற்றில் அடி அடியென அடித்தாள். கண்ணாடியால் ஆனா புகைபடம் சில்லுசில்லாக நொறுங்கி உள்ளிருந்த பிரசாத் உருவம் நிறைந்த காகிதம் வெளியில் வந்து விழுந்தது. அதை சுக்குநூறாக வெறி வந்தவள் போல கிழித்தெறிந்தவள் காலில் போட்டு மிதித்தாள்.
தனம் மிரண்டே போய்விட்டார். இவ்வளவு நேரம் சாதுவாக அன்பாக பேசிகொண்டிருந்த பெண்ணிற்கு என்னவாகிற்று? அவள் ஏன் பிரசாத்தை பார்த்ததும் இவ்வாறு நடந்துகொள்ளவேணும் என்று தனக்கும் மறுகியவர் உதயாவை கேள்வியாக பார்க்க அவனானால்  நந்தினியை தவிர வேறெதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.
“நந்தினி…” என்று முடிந்தளவிற்கு குரலை உயர்த்தி சப்தமிட்டு அவளை பிடித்து உலுக்க சுயத்திற்கு வந்தவள் கிழிந்து கிடந்த பிரசாத்தின் படத்தை கண்டுவிட்டு உதயாவின் மீது எரிக்கும் பார்வையொன்றை பார்த்தவள், 
“ஏண்டா!!! அப்போ உனக்கு இவன் சொந்தக்காரனா?…” என்று அழுத்தமாக ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என்ற வலியோடு கேட்டதும் மொத்தமாக உடைந்துவிட்டான். மனைவி தன்னை மரியாதை இல்லாமல் பேசினதையெல்லாம் ஒருபுறம் தள்ளியவன் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு,
“இல்லைடா நந்து, நான் சொல்றதை கொஞ்சம் கேளு. ப்ளீஸ்…” என்று அவளை நெருங்க,
“கிட்ட வந்த உன்னை கொன்னுடுவேண்டா ராஸ்கல். உன்னை எவ்வளவு நம்பினேன். எல்லாத்துக்கும் சேர்த்து என்னை மொத்தமா சாகடிச்சிட்டியே….” என்று காளியாய் மாறி காட்டுத்தனமாக கத்தினாள். தலையில் அடித்துகொண்டு அழுதவள் வார்த்தையால் தன் கணவனை துடிக்க வைத்தாள்.
உதயாவின் சட்டையை பிடித்து உலுக்கிக்கொண்டே, “அவன் உன்னோட தம்பி தானே? அவனை காப்பாத்ததான் நீ என்னை பலிகடாவாக்கினையா?, சொல்லுடா?, எல்லோரும் சேர்ந்து எனக்கு குழி பறிச்சுட்டீங்கள்ள? முன்னாடியே ஏண்டா என் கிட்ட சொல்லலை நீ?…” என்று ஏகவசனத்தில் குற்றம் சாட்டியபடி தன்னவனை தன் பூங்கரங்களால் முடிந்தமட்டும் தாக்கியவள் அவன் மீதே மயங்கிச்சரிந்தாள்.
அவள் அவ்வளவு அடித்தும் கண்ணீரோடு அனைத்தையும் அமைதியாக வாங்கிக்கொண்ட உதயாவை பார்த்த தனத்தின் இதயத்துடிப்போ  இயல்புக்கு மேலாக தப்பி துடித்தது. என்ன நடந்திருக்கும், என்ன நடந்திருக்கும் என்று மூளையோ கேள்விக்கான விடையை தேடி அலைபாய்ந்தது.
நந்தினி மயங்கியதுமே அவளை ஹாலிற்கு தூக்கி வந்தவன், “சித்தி தண்ணி கொண்டுவாங்க…” என்று கூறிவிட்டு அவளை எழுப்பினான். அதற்குள் அவள் மூர்ச்சையாகிவிட்டிருந்தாள்.
உடனடியாக தண்ணீரை  தெளித்தும் மயக்கம் தெளியாமல் போகவும் இன்னும் பயந்துவிட்டான். தனம் அருகில் இருக்கிறாரே என்று கிஞ்சித்தும் கவலையின்றி தன் இதழ்களை அவளது இதழ்களில் பொருத்தி மூச்சினை அவளுக்குள் செலுத்தி முதலுதவி அளித்ததற்கு சிறிதும் பலனின்றி போனது.
நேரத்தை கடத்தாமல் உடனே அவளை அள்ளிக்கொண்டவன் காரை நோக்கி செல்லும் போதே, “சித்தி வீட்ல கேட்டாங்கன்னா நந்தினி பூச்சி எதையோ பார்த்து பயந்துட்டான்னு மட்டும் சொல்லுங்க. ஏதாவது சொல்லி சமாளிங்க. ப்ளீஸ் தயவு செய்து வேறு எதுவுமே சொல்லிடாதீங்க. உங்களுக்கு புண்ணியமாக போகும் சித்தி…” என்று கண்ணீரோடு வேண்டிகொண்டவன் நந்தினியை உள்ளே கிடத்தி தானும் கிளம்பிவிட்டான்.
வந்ததிலிருந்து உதயா தவித்ததற்கான காரணம் இப்போது தெளிவாக விளங்கிவிட்டது தனத்திற்கு.
உடனடியாக பெருமாளை அழைத்தவன், “அங்கிள் நீங்க உடனே வீட்டிற்கு வரணும். முடியுமா?…” இவனது பேச்சில் இருந்த பதட்டத்தை உணர்ந்த பெருமாள்,
“என்னவாகிற்று பிரபா? யாருக்கு என்ன பிரச்சனை?…” என்றார்.
“நந்தினிக்குதான் அங்கிள். மயக்கமாகிட்டா. பேச்சுமூச்சில்லாம இருக்கா. நாங்க தனம் சித்தி வீட்ல இருந்து புறப்படறோம். நீங்க அதுக்குள்ளே வீட்டுக்கு வந்திடுங்க…” எனவும்,
“நீ ஹாஸ்பிட்டலுக்கு வாயேன், அதை தாண்டித்தானே போகணும்…” என்று அழைக்க அதை மறுத்தவன்,
“நீங்க வீட்டுக்கு வரமுடியுமா? முடியாதா? …” என்றவனது தீவிரத்தில் யோசனைக்குள்ளான டாக்டர் பெருமாள் உடனடியாக வர சம்மதமும் தெரிவித்தார்.
இனி நந்தினி கண் விழித்தால் உதயாவின் நிலை?

Advertisement