Advertisement

                        நான் இனி நீ – 29

அனுராகாவிற்கு தான் ஏன் இங்கு வந்தோம் என்பதே விளங்கவில்லை. ஆனால் வீட்டிலிருந்து கிளம்பியதுமே அவளின் மனதில் தோன்றியது D- வில்லேஜ் மட்டும்தான். வேறெங்கு செல்லவும் அவள் மனம் இடம்கொடவில்லை..!!

அவள் எண்ணியிருந்தால் வெளிநாடுகளுக்கு கூட செல்லலாம். எதையுமே அவளின் மனம் நாடவில்லை. ஒன்று தீபனிடம் செல்லவேண்டும் இல்லை அவனது இடம் செல்லவேண்டும்.

தீபனிடம் செல்ல, எதுவோ தடுத்தது, அதையும் தாண்டி அவனுக்கு இருக்கும் பிரச்னைகள்.. இதில் தானும் ஒன்றாய் மாறி அவனை மிகவும் படுத்திவிடக் கூடாது என்று கொஞ்சம் நிதானமாகவே யோசித்தாள். ஆக, அவளுக்கு மனதிற்கும் கொஞ்சம் இதம் கொடுக்குமிடம் என்றால் அது அங்கேதான்..

அங்கே மட்டும் தான்..!! 

லோகேஸ்வரன் எப்படியும் அவளை தொடர்ந்து வர, யாரையேனும் அனுப்பியிருப்பார் என்பது தெரியும். யார் என்னை கவனித்தாலும் சரி, என்னை மீறி என்னை எதுவும் செய்திட முடியாது என்ற துணிவில் தான் அனுராகா அங்கே சென்றது.

D- வில்லேஜ் வந்த பின்னும் கூட, அவளால் ஒரு இயல்பில் இருக்க முடியவில்லை..

அவளை அடையாளம் கண்ட ரிசப்ஷன் பெண், முன்னே இவள் செய்த கலாட்டாவை எண்ணி “ரூம் இல்லை மேம்..” என,

“எனக்கு ரூம் இல்லைன்னு, உங்க பாஸ்கிட்ட சொல்லுங்க.. தென் என்கிட்டே சொல்லுங்க..” என்றவள் இடம் விட்டு நகரவில்லை.

அங்கிருந்த சோபாவில் அமர்ந்துகொள்ள, மனது கொதித்தது.. “என்ன ரிசப்சன் செட் பண்ணிருக்கான் இந்த தீப்ஸ்.. எனக்கு ரூம் இல்லைன்னு சொல்வாங்களா..” என்று கடிய, 

ரிஷப்ஷன் பெண்ணோ, மேனேஜரை அழைக்க, அவர் வந்தவரோ “மேம் கலாட்டா செய்யாம கிளம்பிடுங்க..” என,

‘தோடா…’ என்று பார்த்தவள், “உங்க பாஸ்கிட்ட கேட்டிட்டு சொல்லுங்க..” என்றாள் அப்போதும்.

“மேம்.. அப்படியெல்லாம் ஈசியா நாங்க பேசிட முடியாது.. ப்ளீஸ் இஸ்யூ பண்ணாம கிளம்பிடுங்க..” என்று மேனேஜர் தன்மையாகவே பேச,

“அப்போ இஸ்யூ பண்ணா என்ன செய்வீங்க??!!” என்றாள் கொஞ்சம் திமிராகவே.

அவர் திகைத்துப் பார்க்க, “சொல்லுங்க இஸ்யூ பண்ணா, உங்க பாஸ இங்க வர சொல்லிடுவீங்களா… ம்ம்..” என்று அனுராகா கேட்க, 

அவள் இங்கே இருக்கக் கூடாது என்று சொல்வதற்கு தீபனுக்கு மட்டுமே உரிமையுண்டு என்பது அவளது எண்ணம். இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்னைகள் எல்லாம் வேறு. ஆனால் இது வேறு..

“மேம்..!!!” என்றார் மேனேஜர், என்னடா இவள் இப்படி பேசுகிறாள் என்று.

“ம்ம் கேளுங்க.. நீங்க கேட்கறீங்களா இல்லை நான் கேட்கவா..” என்று அனுராகா குரலை உயர்த்த,

“மேம்.. ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட்..” என்று மேனேஜர் சொல்லும்போதே, அவள் தன் அலைபேசியை எடுக்க,

“மேம்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. கிவ் மீ சம் டைம்..” என்றவர், ரிஷப்சன் பெண்ணிடம் சென்று எதுவோ பேச, இருவர் வெகு தீவிரமாய் எதையோ கலந்தாலோசிக்க, அனுராகாவின் பொறுமை காலியாகத் தொடங்கியது.

எங்கேயும் எப்போதும் யாருக்காகவேனும் அவள் இப்படி காத்திருந்தது இல்லை. காத்திருக்கும் அவசியமும் இல்லை.. பல்லைக் கடித்துக்கொண்டு அவள் அமர்ந்திருக்க, மேனேஜர் D – வில்லேஜ் அட்மினை அழைக்க,   அனுராகா எழுந்தே விட்டாள்.

“வாட்ஸ் கோயிங் ஆன்…” என,

“மேம்.. சார்க்கு லைன் கிடைக்கல..” என்று அவர்கள் சொல்ல, “நான் போடட்டுமா கால்.. பட் அடுத்து உங்க யாருக்கும் இங்க இல்லை ஓகே வா..” என, அவளின் பேச்சிலும், தோரணையிலும், பேசிய பேச்சில் இருந்த தெளிவிலும், கடந்த முறை தீபன் அவளைக் கவனித்த விதமும் கூட நினைவு வர,

“ஓகே ஓகே கூல் மேம்..” என்றவர் “ரூம் அலாட் பண்ணிடுங்க..” என்று அட்மின் சொல்லிவிட்டு போக,

“சார்..” என்றனர் மற்ற இருவரும் தயங்கி..

“பண்ணிடுங்க… பார்த்துக்கலாம்..” என்றுவிட்டு போனார் அவர்.

வேறு வழியே இல்லாது, ரிஷப்சன் பெண், ஒரு குடில் சாவியை எடுத்துக்கொடுக்க, மேனேஜர் சர்வீஸ் பாய் அழைத்து அவளைக் கூட்டிக்கொண்டு செல்லச் செல்ல, அனுராகாவிற்கு அப்போதும் அவளின் அந்த கோபம் தணியவில்லை.

‘எல்லாம் அவனால வந்தது ராஸ்கல்..’ என்று முனுமுனுத்துக்கொண்டாள்.

அங்கே சென்னையிலோ, தாரா, நீரஜாவிற்கு அழைத்து “அனுராகா எதுவும் பேசினாளா..” என்று கேட்க,

“என்னாச்சு ஆன்ட்டி..” என்றாள் திகைத்து.

தாரா பின் விசயத்தினை சொல்ல, “ஒருவேளை தீப்ஸ் பார்க்க போயிருப்பாளா..” என்று நீரஜா கேட்க,

“இல்லை… எனக்கு அப்படித் தோணலை நீரஜா.. நீ கொஞ்சம் பிரண்ட்ஸ் சர்கிள்ல விசாரி நீரஜா.. லோகேஸ் பாலோ பண்ண சொல்லிருக்க பெர்சன்ஸ் மிஸ் பண்ணிட்டாங்க.. எனக்கு டென்சனா இருக்கு நீரு..” என்றார் நிஜமாகவே வருந்தி.

“டென்சன் வேணாம் ஆன்ட்டி நான் நான் பேசுறேன்..” என்றவள் தேவ்விற்கு அழைக்கலாம் என்றால் அவன் இந்த நாட்டிலேயே இல்லை. அடுத்து புனீத்திற்கு அழைக்க, அவனோ தீபனோடு இருந்தான்.                         

ஒருவழியாய் தீபனை பிடித்து அவன் சேகரித்த தகவல்களையும் சொல்லிட, அனைத்தையும் கேட்டவன் கேட்ட முதல் கேள்வியே “இதெல்லாம் அனுக்கு தெரியுமா??!” என்பதுதான்.

“ம்ம் தெரியும்டா..” என,

“ஷிட்…!! ஏன்டா.. என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிருக்க வேண்டியதுதானே..” என்று சாய்ந்து நின்றிருந்த காரினை, கை முட்டியால் குத்த,

“எத்தனை டைம்தான்டா உனக்கு ட்ரை பண்றது..” என்றவன், பின் தயங்கி “இன்னொரு விஷயம் தீப்ஸ்..” என,

“என்ன மிதுன் ஆ!!!!” என்றான் தீபன் அழுத்தம் திருத்தமாய்.

“உனக்குத் தெரியுமா??!!!” என்று புனீத் அதிர்ந்து கேட்க,

“இதுகூட ஸ்மெல் பண்ண முடியாதா என்னால. என்னடா எல்லாம் என்னை என்ன நினைச்சீங்க..” என்று தீபன் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே நீரஜா அழைத்து புனீத்திற்கு விஷயம் சொல்ல,

“வாட் அனு இதை என்கிட்டே சொல்லவே இல்லையே..” என்றான் புனீத் திகைத்து.

அனுவின்  பெயரைக் கேட்டதும், தீபனின் பார்வை அப்படியே மாறிட, புனீத் நண்பனின் முக மாறுதல் கண்டு, “ஓகே நீரு நான் விசாரிக்கிறேன்..” என்று வைத்துவிட்டவன்,

“அனு.. அவங்க வீட்ல இருந்து கிளம்பிட்டாளாம் தீப்ஸ்.. அவ அப்பாவோட சண்டை போட்டு..” என,

“என்ன.. என்ன சொன்ன??!!” என்றான் திரும்ப தீபன் சக்ரவர்த்தி.

“டேய்…!!”

“வீட்டை விட்டு கிளம்பிட்டாளா??!!!” என்றவனுக்கு இத்தனை நடந்திருக்கிறது அவள் ஏன் தன்னைத் தேடி வரவில்லை என்ற கோபம் தலைக்கேற,

“கம் லெட்ஸ் கோ..” என்று காரினை எடுத்தான் தீபன் .

“டேய்.. எங்க ??! எங்க போறோம்..” என்று புனீத் கேட்க, “ராகா வீட்டுக்கு.. வா.. இல்லை நான் போகவா..” என,

“வா வா போலாம்..” என்று புனீத்தும் உடன் ஏறிக்கொள்ள, அடுத்த பதினைந்து நிமிடத்தில் இருவரும் அனுராகாவின் வீட்டினில் இருக்க, அங்கேயே தாரா மட்டுமே இருந்தார்.

தீபன் ஆவேசமாய் உள்ளே நுழைந்ததை பார்த்த, செக்கியூரிட்டிகள் வேகமாய் பின்னோடு வர, இவர்களை, அதிலும் முக்கியமாய் தீபனைக் கண்ட தாரா திகைத்து நிற்க “எங்க.. எங்க உங்க ஹஸ்பன்ட்??!! இருக்காரா இல்லை எதுவும் ப்ராஜக்ட் சைன் பண்ண போயிருக்காரா..” என்று ஆரம்பித்ததே ஹை டோனில் தான் ஆரம்பித்தான் தீபன் சக்ரவர்த்தி.

“தீப்ஸ்…” என்று புனீத் அவனை அடக்க,

“ஏய் விட்ரா.. ஒருத்தி வீட்ட விட்டு கிளம்பி போயிருக்கா.. இங்க என்னடான்னா..” என்று தாராவை நேருக்கு நேரே நோக்கி முறைக்க, தாராவிற்கு உள்ளம் கூனிக்குறுகி விட்டது.

நிஜம்தானே…!!!

அவனின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த வேலை ஆட்கள் எல்லாம் எட்டிப்பார்க்க, செக்கியூரிட்டி வந்தவர் ‘என்ன செய்யட்டும்..’ என்று கேட்கும் விதமாய் “மேம்..” என்று தாராவின் முகம் பார்க்க,

அவரோ நீ செல் எனும்விதமாய் கைகளை அசைத்தவர் “எ.. எனக்கு பயமா இருக்கு தீபன்..” என்றார் முதல் முறையாய் மனதை திறந்து.

“பயமா??!! எதுக்கு.. அவ கிளம்பிப் போறப்போ வராத பயம்.. இப்போ ஏன் திடீர்னு..” என்று தீபன் உறும,

“இல்லை அது..” என்று பதில் யோசிக்கும்போதே, 

“அவளே இல்லைன்னா உங்களுக்கு இங்க என்ன வேலை.. முதல்ல அவளை எப்படி நீங்க தனியா கிளம்ப விட்டீங்க.. அப்போ இவ்வளோதானா??!!” என்று கத்தினான்..

“தீபன்..!!”

“ஸ்டாப் இட்… வீட்டை விட்டு போயிருக்கா.. ரெண்டு பேரும் வேடிக்கை பார்த்துட்டு இப்போ கேர் பண்றதுபோல பேசுறீங்களா..??!! அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகாட்டும்.. உங்களை அவளோட பேரன்ட்ஸ்  கூட பார்க்க மாட்டேன்..” என்ற தீபன் யாரோடு பேசுகிறோம் என்பதனைக் கூட மறந்துவிட்டான்.

“டேய் தீப்ஸ்..” என்று புனீத், அவனின் தோள்களை தட்ட

“பின்ன என்னடா.. அவ கிளம்பி இவ்வளோ நேரம் ஆகிருக்கு.. எப்படியோ போகட்டும்னு விடுவாங்கலாமா… பின்னாடியே போயிருக்க வேணாம்..” என்றவன், தாராவின் முன்னே விரல் நீட்டி ‘நீங்க போயிருக்கனும்..’ என்றான் தோரணையாய்.  

“இல்ல லோகேஷ் அவளை மானிட்டார்….” என்று தாரா சொல்லி முடிக்கவில்லை.

“மண்ணாங்கட்டி…” என்றான் அங்கிருந்த ஒரு மர மேஜையை உதைத்து..

“என்ன மானிட்டர்.. ஹா என்ன மானிட்டர்.. இப்படி ஒவ்வொரு விசயத்துலையும் அவளை  செஞ்சு செஞ்சுதான் அவளை எல்லாத்துலயும் மீறி மீறி போக வச்சீங்க.. இப்போ வீட்ட விட்டே போகவும் வச்சாச்சு..” என, தாராவிற்கு தாங்கள் எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம் என்று தோன்றியது.

லோகேஸ்வரன் சொன்ன வார்த்தைகளை மட்டுமே நம்பி இதில் அமைதி காத்தது தவறு தானே..

“ப்ளீஸ்.. விசாரிக்க முடியுமா..” என, ஒரு அம்மாவை அவரின் முகத்தில் பதற்றம் தெரிந்தாலும்,   

“விசாரிப்பேன்.. ஆனா சொல்ல மாட்டேன்.. உங்கனால என்ன செய்ய முடியும்..” என, தாரா அதிர்ந்து போனார்.

என்ன இப்படி பேசுகிறான் என்று.

“எஸ்.. இனி ராகா எங்க இருந்தாலும்.. என்னோட சொந்தம் அவ.. நீங்க யாரும் அப்பா அம்மான்னு சொல்லிட்டு வந்துட வேணாம். நான் பார்த்துப்பேன்..” என்றவன் அவ ரூம் போயி பார்த்தீங்களா, என்று கேட்டபடி “எது அவ ரூம்..” என, தாரா கை காட்ட,

முதல் முறையாய் அவளின் அறைக்குள் செல்கிறான். அதுவும் அவள் இல்லாத இந்த நேரத்தில். மனதில் அப்படியொரு அழுத்தம் கூடியது.

‘இன்னும் என்ன என்ன என்னை செய்ய வைக்கப் போற நீ ராகா..’ என்று..

அறைக்குள் சென்றாலோ எல்லாம் அப்படி அப்படியே இருந்தது. கொஞ்சம் ஆடைகள் மட்டுமே அவள் கொண்டு சென்றிருப்பது புரிந்தது.  தாராவிற்கோ அழுகை வந்திட,

 “அவ கிளம்புறப்போ கண்ட்ரோல் பண்ணாம, கூட போகாம இப்போ அழுது என்ன செய்ய,  இத்தனை நேரம் எப்படி உங்கனால இங்க   இருக்க முடிஞ்சது….” என, தாராவால் பதிலே பேசிட முடியவில்லை.

மௌனமாய் இருக்க “இனி ராகாவை மறந்திடுங்க..” என்றவன் திரும்ப கிளம்பிவிட்டான்.

அவனுக்கு லோகேஸ்வரன் மீதும் அப்படியொரு கோபம்.. என்ன அப்பா இவர்.. எதிலும் ஒரு கணக்கீடல் இருந்தால் வாழ்க்கை என்னாவது.. அதிலும் அனுராகா.. அவரின் மகள்.. அவள் மீது கூட அக்கறை இல்லை என்றால் என்ன மனிதர் இவர் என்றுதான் நினைத்தான். அவரின் நல்ல நேரம் அவர் இப்போதென பார்த்து வீட்டினில் இல்லை.

கோபம் ஒருப்பக்கம்… அவள் எங்கே என்ற கேள்வி ஒருப்பக்கம்..  தன்னை ஏன் தேடி வரவில்லை என்ற ஆதங்கம் ஒரு பக்கம் என்று எல்லாம் சேர்ந்து அவனைப் போட்டு ஆட்ட, மிதுன் என்ற ஒருவனை அவன் அந்த நொடி மறந்து,

“புனீத்… உன்னோட என்ன பேசினா.. அப்படியே அப்படியே வோர்ட்ஸ் மாறாம சொல்லு..” என்று தீபன் துரிதப் படுத்த,

சிறிது யோசித்தவன் ஓரளவு அவள் சொன்னதை சொல்ல, “ஒ காட்!!!! இவ்வளோ பண்ணிருக்க, ஏன்டா என்கிட்டே ஒரு வார்த்தை பேச முடியாதமா..” என்றான் கடுப்போடு.

எங்கே சென்று தேடுவது என்றும் தெரியவில்லை.!!!

“கூல்… கூல் தீப்ஸ்…” என்று தனக்கு தானே சொல்லியவன், “நீ அகைன் அவங்கம்மா கிட்ட பேசி அவளோட கார்ட் டீடைல்ஸ் வாங்கு புனீத்.. லாஸ்ட் அக்சஸ் எங்க ஆகிருக்குன்னு செக் பண்ணு.. நானும் விசாரிக்கிறேன்..” என்றவன், புனீத் கார் நின்ற இடத்தினில் இறக்கிவிட்டு,

தீபன் செல்ல, நிஜமாய் அவனுக்கு அந்த நொடி எங்கே செல்வது என்று புரியவில்லை. அனுராகாவை கண்டுகொள்ளாது அவன் வீடு செல்லவும் எண்ணமில்லை.

‘என்ன செய்வது??!!!’ என்று யோசித்துக்கொண்டே இருக்க, தொகுதியில் திருவிழா வேறு நடந்துகொண்டு இருக்க, பெயருக்கேனும் அங்கே சென்று தலைக்காட்ட வேண்டிய நிலைமை..

ஆட்கள் எல்லாம் அங்கேதான் இருந்தனர், நாகாவிற்கு அழைத்து நிலவரம் கேட்டவன் “அனுராகா மிஸ்ஸிங்.. வீட்ல இருந்து கிளம்பி போயிருக்கா.. பட் எங்க போனான்னு யாருக்குமே தெரியலை.. பைன்ட் அவுட் பண்ணனும்..” என,

“நான் கிளம்பனுமா..” என்றான் நாகா..

“இல்ல நீ அங்க பார்த்துக்கோ.. என்னை யாரும் கேட்டா, வந்திடுவார்ன்னு மட்டும் சொல்லு.. வேற எதுவும் வேணாம்.. பணம் எவ்வளோ வேணாலும் அப்பா பி ஏ கிட்ட கேட்டு வாங்கிக்கோ..” என்றவன்,

“நான் இங்க இல்லைன்னாலும் எல்லாம் பக்காவா நடக்கணும்..” என்றுவிட்டு காரினை செலுத்தத் தொடங்கினான்.

எங்கே போகிறான் என்பது தெரியவில்லை. ஆனால் அந்த இரவு நேரம் பயணம் நீண்டுகொண்டே இருந்தது. கண்களோ ராகா ராகா என்று காணும் இடம் ஒவ்வொன்றிலும் அவளைத் தேட, மீண்டும் நாகாவே அழைத்து,

“D வில்லேஜ் அட்மின் கால் பண்ணார்..” என,

“வாட்??!! வொய்??!!” என்றான் தீபன்.

சம்பந்தமே இல்லாது அங்கிருந்து அட்மினின் கால் வராது. முதலில் அது அவனுக்கு சொந்தமான இடம் என்பதே வெளியில் தெரியாதே.. அவனும் அங்கே அவ்வப்போது செல்வான் வருவான். அந்த அளவில் தான் அங்கே பேச்சு..

அடிக்கடி வந்து செல்லும் ஒருவன்.. அதுமட்டுமே.

எதுவும் மிக மிக முக்கியம் என்றால் மட்டுமே அட்மினிடம் இருந்து அழைப்பு வரும்.. அது இப்போது வந்திருக்க, “ஏன்..” என்றான் திரும்ப.

“தெரியலை.. கேட்டதுக்கு சொல்லலை.. பட் உங்களை பேசச் சொன்னார்..” என்றுமட்டும் சொன்னான் நாகா.

“ஓகே நான் பேசிக்கிறேன்..” என்றவன், என்னவாய் இருக்கும் என்று யோசித்தபடி D –வில்லேஜ் அட்மினுக்கு அழைக்க “அனுராகா மேம் இஸ் ஹியர்…” என்ற அட்மினின் வார்த்தைகள் அவனுக்கு செவிகளில் தேன் பாய்ந்தது போலிருந்தது.

Advertisement