Advertisement

நட்சத்திர விழிகள் – 26 (2)

ஹாஸ்பிட்டலில் நந்தினிக்கும் பாக்கியத்திற்கும் சிகிச்சைகள் துரிதகதியில் நடந்துகொண்டிருந்தது. அடைபட்ட அரங்கு அறையில் மூச்சிற்கு தவித்து மயங்கி விழுந்ததால், நேரத்தில் கொண்டுவந்து சேர்த்ததாலும் விரைவில் மயக்கம் தெளியவும் அவள் சரியாகிவிடுவாள் என்று சொன்ன பின் தான் அனைவருக்குமே நிம்மதியானது.

ஆனால் அந்த நிம்மதி கூட சில நிமிடங்களே. பாக்கியத்திற்கு வந்திருந்தது ஹார்ட் அட்டாக் என்று சொல்லவும் அனைவருமே உடைந்தே விட்டனர். ஆபத்துக்கட்டத்தை தாண்டினாலும் இனிமேல் அவரை கவனமாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு இன்னும் ஒருவாரம் ஹாஸ்பிட்டலில் இருக்குமாறு சொல்லி சென்றார் டாக்டர் பெருமாள்.

அனைவரும் ஐசியுவின் வாயிலில் நிற்க நந்தினி கண் விழித்த தகவல் நர்ஸ் மூலமாக வந்து சேர்ந்தது. உதயாவை போய் பார்க்க சொல்லி அவனை முதலில் அனுப்பியவர்கள் பின்னால் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வருவதாக கூறினார்கள்.

நந்தினியின் அறைக்குள் சென்று படுக்கையை நெருங்கி வேகமாக அவளை இழுத்து அணைத்து கொண்டான். அவளும் வாகாய் அவனுக்குள் சந்தோஷ கண்ணீரோடு அடைபட்டவள் இனிமே பிரியவே கூடாது என்பது போல அவனோடு ஒட்டிகொண்டாள்.

“எனக்கு மொத்த உசுரும் காத்தோட கரைஞ்சு போயிடுச்சுடா நந்து. நான் உன்னை கவனிக்காம போனதால்தானே? நான் உன்னை விட்டுட்டு போயிருக்கக்கூடாது…” என குற்றஉணர்வில் துடிக்க அதை தாங்கமுடியாமல் நந்தினி இல்லை என்பது போல அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.

இன்று தன்னால் நந்தினிக்கு உண்டான ஆபத்தையும் அவள் பட்ட இன்னல்களையும் தன் முத்தங்களால் கொஞ்சம் கொஞ்சமாக துடைக்க முயன்றான். அதன் மூலம் தனக்குமான ஆறுதல் கிட்டுமா என்று தேடினான். அவனின் மனதையும், சஞ்சலத்தையும் உணர்ந்தவள் மறுக்காமல் அனுமதித்தாள். நீண்ட நேரம் தொடர்ந்த இவர்களின் முத்த போராட்டம் வெகுநேரம் கழித்தே முடிவுக்கு வந்தது.

அதன் பின் கொஞ்சம் சுய உணர்வுக்கு வந்ததும் நந்தினி என்ன நடந்தது, எப்படி தெரிந்து தான் காப்பாற்றப்பட்டேன் என கேள்வி எழுப்ப, தனக்கு கௌரியின் மூலமாக தெரிந்த, வீட்டில் நடந்தது அனைத்து விஷயங்களையும் நந்தினியோடு பகிர்ந்துகொண்டான்.

அவனால் தன் உடன்பிறந்த தங்கையின் இறப்பிற்கு காரணமே வேணி தான் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. நந்தினியாலும் இதை நம்பமுடியவில்லை. எப்படி இவ்வாறு வேணியால் நடந்துகொள்ள முடிந்தது. அதற்கு காரணமும் சொல்லி தன்னை குற்றமற்றவளாக காட்ட துணிந்தார் என நினைக்க நினைக்க அசிங்கமாக இருந்தது.

தங்களுக்குள் இருவரும் சுழன்றுகொண்டிருக்க புயல்போல அந்த அறைக்குள் நுழைந்த பிரசாத் உதயாவை இழுத்து நிறுத்தி கன்னத்தில் பளாரென அறைந்தான். அருவியூரில் பார்த்ததற்கு பின் இரண்டரை வருடங்கள் கழித்து பிரசாத்தை பார்க்கவும் நந்தினிக்கு பழைய ஞாபகங்கள், அதனால் தனக்கு உண்டான அவமானம், தான் அனுபவித்த வலி, வேதனை, கோவம், ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர்ந்தது. “இவனால் தானே, எல்லாம் இவனால் தானே…” என தனக்குள்ளேயே தணலாக தகித்தாள்.

பிரசாத் விட்ட அறையில் பொறிகலங்கி நின்ற உதயாவை பார்த்த நந்தினி, “உனக்கு எவ்வளோ துணிச்சல் இருந்தா என் புருஷனை நீ அடிப்ப?… உன்னை நான் சும்மா விடமாட்டேன்டா…” என தன்னால் எழுந்துகொள்ள முடியாத சூழலிலும் தீனமான குரலில் திக்கி திணறி கர்ஜித்தாள்.

அவளை அலட்சியபடுத்திய பிரசாத், “நீயெல்லாம் என்ன மனுஷன்டா?, வெட்கமா இல்லை. உனக்கெல்லாம் எதுக்குடா மீசை?. கட்டின பொண்டாட்டியை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்க தெரியாத உனக்கு  கல்யாணம் ஒரு கேடா?..” என கோவமாக பேசியவனை புரியாமல் பார்த்தான் உதயா.

“பெரிய ஹீரோவாட்டம் இவளை காப்பாத்த தாலி கட்டினியே? அதுக்கான கடமையில இருந்து மட்டும் தப்பிக்கனும்னு நினைக்கிற உனக்கு எதுக்குடா கல்யாணம்? எப்படிப்பட்ட சூழ்நிலையில கல்யாணம் முடிஞ்சிருந்தாலும் நீ இவளை கைவிடாம காப்பாத்திருந்தா அப்போ ஒத்துக்கறேன் நீ நல்ல ஆம்பளைன்னு. வாக்கு குடுத்துட்டேன்னு சாக்கு சொல்லிக்கிட்டு ஓடி ஒளிஞ்ச உன்னை என்னனுடா சொல்ல?…” என பிரசாத் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனியானான் உதயா.

“டேய் என் புருஷனை கேள்வி கேட்க நீ யாருடா? பெருசா பேச வந்துட்ட? நீ ரொம்ப ஒழுக்கமோ? உன்னால தாண்டா இவ்வளவு பிரச்சனையும்…” என தன் தைரியங்களை ஓன்று திரட்டி அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து பிரசாத்தை நோக்கி வீசினாள்.

அதை அழகாக கேட்ச் பிடித்தவன் மூடியை திறந்து தண்ணீரை குடித்துவிட்டு உதயாவிடம் நீட்டினான்.

“வச்சிரு. குடிச்சு தொலைஞ்சிடாத. உன் பொண்டாட்டிக்கிட்ட பேசணும்னா இது மாதிரி பத்து பாட்டில் வேணும்…” என வம்பிழுக்க அவனை முறைத்தாள் நந்தினி.

அதுவரை இல்லாத ஒரு அமைதியும், இறுக்கமும் முகத்தில் வந்து ஒட்டிக்கொண்டது பிரசாத்திடம். “அன்னைக்கு நான் நடந்துக்கிட்டது தப்புதான் நந்தினி. என்னால நீயும் இவனும் ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிட்டீங்க. அதுக்கு…” என அவன் முடிக்க கூட இல்லை நந்தினி பொங்கிவிட்டாள்.

“என்ன மன்னிப்பு கேட்க போறியா? நீ கேட்டுட்டா நாங்க பட்ட வேதனையும் கஷ்டங்களும் இல்லாம போய்டுமா? மன்னிப்புன்ற உன் ஒரு வார்த்தையால நடந்தது எதையுமே இல்லாம பண்ணிடுவியா?…” என பொரிந்து தள்ள,

“இல்லை நந்தினி நான் அன்னிக்கு கொஞ்சம் குடிச்சிருந்தேன், அதுவும் இல்லாம நீ வேற என்னை கோவப்படுத்தியும், அவமானப்படுத்தியும் பேசின. குடிகாரன்னு வார்த்தைக்கு வார்த்தை என்னை மட்டம் தட்டினதும் தான் உன்னை தண்டிக்க நினச்சேன்…”

“ஓ சார் குடிச்சிருந்ததால தானா இவ்வளவு பிரச்சனையும்?, ஏண்டா குடிச்சவனை குடிகாரன்னு சொல்லாம குலசாமின்னா சொல்லுவாங்க. அப்டித்தாண்டா சொல்லுவேன். ஆயிரம் தடவை சொல்லுவேன். சொல்லிக்கிட்டே இருப்பேன். நீ குடிகாரன் தான் குடிகாரனே தான். உன்னால என்னடா பண்ணமுடியும்?…” என  புஸுபுஸுவென மூச்சுவாங்க கத்தினாள்.

அதை பார்த்த உதயா இவ மறுபடியும் தேரை இழுத்து தெருவுல நிறுத்திருவா போல என பயந்து, “நந்தும்மா இது ஹாஸ்பிட்டல், நீ வேற இப்போதான் கண் முழிச்சிருக்க, அலட்டிக்காதடா. அமைதியா இரு…” என சொல்லியதுதான் தாமதம் கோவமனைத்துமே உதயாவின் புறம் திரும்பியது.

“ஏண்டா நீ உன் தம்பிக்கு சப்போர்ட்டா, உன்னை தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ. வாயை மூடிட்டு இரு. இன்னைக்கு இவனை ஒரு வழி பன்றேன். குடிச்சதால நிதானமில்லாம இவன் என்ன வேணும்னாலும் செய்யலாம், அதை நான் கேட்க கூடாதா?…” என தன்னவனை தாளிக்கவும் அதைப்பார்த்து சிரித்த பிரசாத்,

“ஏய் அரைக்காப்படி, இன்னும் உன் வாய் மட்டும் குறையவே இல்லைல. பாவம் எங்க லக்ஷ்மிம்மா. உன் கிட்ட என்னவெல்லாம் பாடுபடப்போறாங்களோ?…” என்று எரிகிற தீயில் எண்ணையை ஊற்றினான்.

நந்தினியை சீண்டியதில் கலவரமான உதயா பிரசாத்தின் லக்ஷ்மிம்மா என்ற அழைப்பில் நெகிழ்ந்தான். “இவனுள் எப்போது நிகழ்ந்தது இந்த மாற்றம்? எத்தனை வருடங்கள் கழித்து இப்படி உரிமையாக அதட்டி பேசுகிறான்…” என மனம் மகிழ்ந்தது.

அவனது முகமாற்றத்தை கண்ட நந்தினி, “அடடா, ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க சார், இவன் தான நமக்கு தொடர்ந்து தொல்லை குடுத்தான். இப்போ இவன் பேச்சுல மயங்கி அப்டியே பாசத்துல ஐஸா உருகற?…” என்று உதயாவை வார,

“போதும் நந்தினி நான் தான் போதையில தெரியாம செய்துட்டேன்னு சொல்றேன்ல. திரும்ப திரும்ப அதையே பேசற?…” என்று சலிப்பான குரலில் கூற,

“எவ்வளோ ஈஸியா சொல்ற? குடிச்சா உங்களுக்கெல்லாம் புத்தி என்ன புண்ணாக்கு விக்கவா போகும்? குடி குடின்னு அந்த குடியால எத்தனை குடும்பங்கள் சீரழிஞ்சு போயிருக்கு. அந்த குடியால எத்தனை பேர் வாழ்க்கையே திசை மாறி போயிருக்கு. அன்னைக்கு நான் கதற கதற என்னை தூக்கிட்டு போனியே? தப்பா ஏதாவது நடந்திருந்தா?…” என்றவள் அதற்குமேல் பேச வார்த்தை வராமல் அவனை முறைத்தவாறே இருந்தாள்.

“அதான் ஒண்ணும் நடக்கலைல. அதை விடு…” என பிரசாத் கூற,

“அப்படி நடந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? அதை சொல்லுடா நீ முதல்ல…”

“நிறுத்தறியா, முதல்ல அன்னைக்கு நீ எப்படி நடந்துக்கிட்டன்னு யோசிச்சு பாரு. கொஞ்சம் கூட புத்தியில்லாம முன் யோசனை இல்லாம நடந்துக்கிட்டது நீ. பொண்ணுங்களுக்கு முதல்ல வேகத்தை விட விவேகம் வேணும், சமயோசித புத்தி வேணும். எப்போ எப்படி நடந்துக்கணும் அப்டின்ற புத்திசாலித்தனம் வேணும். அன்னைக்கு நீ அப்படி ஆராய்ந்து நடந்திருந்தா கொஞ்சம் புத்தியோட யோசிச்சிருந்தா எதுவுமே நடந்திருக்காது…” 

“என் மேல பழியை போட்டு நீ செஞ்ச தப்புல இருந்து தப்பிக்க பார்க்காத. எதாச்சும் நடந்திருந்தா?…” என அப்போதும் விடாமல் கேட்க இப்படியே மாற்றி மாற்றி இருவரும் சண்டை போட பொறுத்தது போதும் என்று,

“ஐயோ போதும், ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்தறீங்களா? எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்கீங்க? நடக்காததை ஏன் பேசறீங்க?…” என்றவனிடம் கோவமாக பேச நந்தினி வாயை திறக்க எத்தனிக்க,

“நந்தினி அன்னைக்கு நடந்த சம்பவத்தால தான் இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்திருக்கீங்க. அதை நினச்சுப்பாரு…”

“சரி அன்னைக்கு இவங்க மட்டும் வராம இருந்திருந்தா, என்னோட  நிலைமை என்னாகிருக்கும்ன்னு நீ யோசிச்சு பாரு…” என விதண்டாவாதம் செய்ய உதயாவிற்கு தலைவலியே வந்துவிட்டது.

“இதை இப்படியே விடமாட்டாளா? இப்படி பேசி பேசி என் வாயை கிளருறாளே? பெருசா என்னாகியிருக்கும்? தப்பா நடந்திருந்தா என் மனைவியாக்கியிருப்பா. எனக்கு கிடச்ச வரமா யாருக்குமே விட்டுக்குடுக்காம நான் பத்திரமா பார்த்திருப்பேன். ஆனா எனக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்க்கலையே?…” என தனக்குள் சொல்லிக்கொண்டவன் இரண்டரை வருடமாக மனதிற்குள் வலுக்கட்டாயமாக புதைத்து வைத்திருந்த எண்ணங்கள் மேலேறி வரத்தவித்தது.

தன் வாழ்க்கையின் வசந்தமாக வரவேண்டியவள் தான் செய்த அதிகபிரசங்கித்தனமாக செய்த செயலின் வீரியத்தால் தனக்கே சாபம் கொடுத்துவிட்டு அந்த சாபத்திற்கும் மொத்த உருவமாகி போனவளை என்ன சொல்லி தேற்ற என விழிபிதுங்கி நின்றான்.

அதுநாள் வரை தனக்குள் மட்டும் வைத்திருந்த ரகசியம் நந்தினியின் சிறுபிள்ளைத்தனமான பேச்சால் வெளிப்பட்டுவிடுமோ என பயந்தான். தன் மனதில் தோன்றிய எண்ணம் வார்த்தைகளாக வெளிவராமல் இருக்க படாத பாடுபட்டுப்போனான் பிரசாத். அமைதியாக நின்றவனை நெருங்கிய உதயா,

“என்னால இப்போ கூட நம்ப முடியலை பிரசாத். நீ இப்படி மனசு மாறிடுவன்னு…” என்று கூற அவனை பார்த்து மெல்ல மென்மையாக முறுவலித்தவன்,

“உனக்கொன்னு தெரியுமாடா பிரபா. எங்கப்பா இறக்கும் போது உங்க மேல உண்டான கோபம் காலப்போக்கில் மறஞ்சு போச்சு. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள எனக்கு தயக்கமா இருந்துச்சு. உன்னையும் மூர்த்தி அப்பாவையும், அவ்வளவு மோசமா பேசிட்டோமேன்னு எனக்குள்ளே எத்தனையோ நாள் வருத்தப்பட்டு வேதனைப்பட்டிருக்கேன்…”

“ஆனா சில நேரம் தோணும், மூர்த்தி அப்பா அன்னைக்கு கட்டாயப்படுத்தி எங்கப்பாவை கூட்டிட்டு போகாம இருந்திருந்தா நானும் உன்னை போல இருந்திருப்பேனேன்னு நினைக்கும் போது வர்ற கோவத்தை என்னால கட்டுப்படுத்தவே முடியலை…”

“என்னோட ஆற்றாமை தான் கோவமா அப்பப்ப வெளிவரும். அப்போலாம் உங்களை எதாவது செய்யனும்னு நினைப்பேன். உனக்கே தெரியுமே? இதுவரைக்கும் என்னால உனக்கு பெருசா எந்த ஒரு நஷ்டத்தையும் குடுக்கலைன்னு. ஆனா நான் அதையும் உனக்கு அம்மா மூலமா தெரியப்படுத்திட்டுதான் செய்வேன்…” என்றவனை பிரமிப்பாக பார்த்தான் உதயா.

“என்ன அப்படி முழிக்கிற? அம்மாக்கு தெரியாம ரகசியமா என்னால எதுவும் செய்ய முடியாதுன்னா நினைக்க?, நிச்சயமா முடியும். நான் உனக்கு இடஞ்சல் குடுக்கிறதுக்கு முன்னாலையே உன்னை அலார்ட் பண்ணிடுவேன். அந்த கஷ்டத்தையும் என்னால குடுக்காம இருக்க முடியலை. அதான் கொஞ்சமா உன்னை சீண்டுவேன். இது கூட என்னோட மன ஆறுதலுக்காகத்தான்…”

“அன்னைக்கு அருவியூர்ல விளையாட்டா பசங்க பெட் கட்டினதாலதான் தண்ணியடிச்சேன். குடிக்கிறதுல முதலும் அன்னைக்குதான் முடிவும் அன்னைக்குதான். உன் முன்னாலையே என்னை மட்டம் தட்டி பேசினதாலதான் அந்த அளவுக்கு எல்லை தாண்டினேன். அன்னைக்கு நான் செய்த காரியத்தோட வீரியம் போதை தெளியவும் என்னை எவ்வளவு காயப்படுத்துச்சு தெரியுமா?…” என்றவனை அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள் நந்தினி.

“அன்னைக்கு நாங்க சும்மா பசங்களுக்குள்ள விளையட்டா பேசிட்டு இருந்தோம்டா. அந்த நேரம் இவ ஊரையே திரட்டிட்டு வந்து தாம்தூம்னு குதிச்சதோடு இல்லாம என் கன்னத்துல அத்தனை பேர் முன்னால அடிச்சுட்டா. அம்மா கூட என்னை அடிச்சதில்லைடா. இவ என்னை அறைஞ்சுட்டா. அந்த கோவத்துல தான் புத்தி தடுமாறி வில்லங்கமா வில்லத்தனமா யோசிச்சுட்டேன்…”

“ஆனா, கண்டிப்பா என்னால உறுதியா சொல்ல முடியும், நந்தினியோட மானத்துக்கு எந்த விதமான களங்கத்தையும் நான் ஏற்படுத்தி இருக்க மாட்டேன். சும்மா மிரட்டத்தான் அப்படி செஞ்சேன். அம்மா என்னை அப்படி வளர்க்கலைடா. சத்தியமாடா…” என்றவனை இழுத்து அணைத்து கொண்டான் உதயா. சிறிது நேரத்தில் அவனை விட்டு விலகிய பிரசாத்,

“அன்னைக்கு கோவில்ல நீ இவ கழுத்துல தாலி கட்டவும் தான் நான் நம்ம வீட்டு பொண்ணாகிட்டா இனிமே எந்த பிரச்சனையும் வேண்டாம்னு நான் அமைதியா போய்ட்டேன். ஆனா நீ என்னடான்னா இவ அப்பா சொன்னாருன்னு விட்டுட்டு வந்துட்ட. அதை தாங்கிக்கவே முடியலை. என்னதான் இருந்தாலும் உன்னோட மனைவி இவ.  எப்படியாவது நம்ம குடும்பத்துல சேர்த்துடனும்னு நினச்சேன்…”

“அதுக்காக இவளை பின் தொடர்ந்து போகணும்னு நினச்சேன். ஆனா எங்களால முடியலை. இவளோட அட்ரெஸ் கண்டுபிடிக்க படாத பாடு பட்டுட்டேன். ஒருவழியா கண்டுபிடிச்சா இவ அப்பா இவளுக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருந்தாரு. எனக்கு செம கோவம், யார் வீட்டு பொண்ணுக்கு, யார் மாப்பிள்ளை பார்க்கிறதுன்னு…”

“அதான் குணாவை மாப்பிள்ளையா அனுப்பினேன். அவனுக்கே தெரியாது, நான் அவனை பகடையா தான் யூஸ் பண்ணபோறேன்னு. சரியா நீ ஊர்ல இருந்து வரவும் அம்மா இருக்கும் போது அவங்க கேட்கனும்னு வேணும்னே என்னோட ப்ரெண்ட்டுக்கு கால் பண்ணி பேசினேன். நந்தினியோட கல்யாண ஏற்பாட்டை பத்தி சொன்னா எப்படியும் அம்மா உன் கிட்ட சொல்லுவாங்கன்னு எனக்கு தெரியும்…”

“நானும் அப்டி தான் பேசினேன். எனக்கு தெரியும் நீ எப்படியும் நந்தினியை கப்பாத்துவன்னு. ஆனாலும் வராம போயிட்டா அதுக்கும் கல்யாணத்தை நிறுத்த வேறொரு வழியை யோசிச்சிதான் செய்தேன். நான் நினச்சது போலவே நீயும் வந்துட்ட. நல்லவிதமா முடிஞ்சதுன்னு நினச்சா வேணியத்தை ரூபத்துல அடுத்த ஆபத்து நந்தினிக்கு…”

“என்கிடையே பேரம் பேசறாங்க. உன்னோட சம்பந்தப்பட்ட எல்லா டீட்டயில்ஸ், உன் பிஸ்னஸ் ரகசியங்கள்ன்னு எல்லாத்தையும் எனக்கு சொல்றதா. நான் மாட்டேன்னு சொன்னா கண்டிப்பா அவங்களே களத்துல இறங்கிடுவாங்கன்னுதான் யோசிச்சு வள்ளி மூலமா நந்தினியை பாதுகாக்கணும்னு நினச்சேன்…”

“கெளரி கல்யாணம் முடியவும் நந்தினியை பார்த்துக்கலாம்னு சொல்லி சொல்லியே அவங்களை ஆப் பண்ணினேன். ஆனா எங்க கண்ணுல மண்ணை தூவிட்டு ஏதாவது நந்தினியை செய்துட்டா. அதனாலதான் அம்மா மூலமா நந்தினியை உன் கண் பார்வையிலே கொண்டு வந்தாதான் அவளுக்கு பாதுகாப்புன்னு அம்மா இருக்கும் போது கோவமா பேசறது போல நடிச்சேன்…”

“இன்னைக்கு காலையில வள்ளி போன் பண்ணினதும் ஆடிப்போய்ட்டேன். என்ன செய்யறதுன்னு தெரியலை. அதான் உனக்கு போன் பண்ணி உடனே வர சொல்லிட்டு திரும்பினா அம்மா நிக்கிறாங்க. என்னனு சட்டையை பிடிச்சு கேட்கவும் எனக்கு ஒரு யோசனை தோனுச்சு. இதை விட்டா அம்மாவை ஊருக்குள்ள வரவைக்க முடியாதுன்னு. அதான் அம்மாக்கிட்ட கொஞ்சம் மிரட்டலா பேசினேன்…” என்றவன் தான் பேசியதை கூறினான்.

தனத்திடம், “உங்க செல்ல மருமக உயிருக்கு போராடிட்டு இருக்கா, காப்பாத்த வரீங்களா?…” என எள்ளலாக பிரசாத் கூற மிரண்டவர்,

“உங்க செல்ல மருமக உயிருக்கு போராடிட்டு இருக்கிற இந்த நேரத்திலையுமா நீங்க அவளை காப்பாத்த ஊருக்குள்ள வரமாட்டீங்க? ம்ம். வைராக்கியம். அப்படியே இருங்க…” என எகத்தாளமாக கூறிய பிரசாத்தை பார்த்த தனத்திற்கு உதறல் எடுத்தது. அதுவும் நந்தினியின் உயிருக்கு ஆபத்து என்றதும் ஸ்தம்பித்து நின்றார்.

இதை கூறி முடித்தவன், “ஷாக்ல இருந்தவங்களை அப்படியே நகர்த்தி காருக்குள்ள தள்ளி நம்ம வீட்டுக்கு வந்துட்டேன். எப்படி?…” என்று சட்டை காலரை தூக்கி விட்டு பெருமையாக பார்த்தவனை,

“உன் மூஞ்சி, திருந்தவே மாட்டியாடா நீ?. எப்போ பாரு எல்லோரையும் மிரட்டிட்டும், பயம் காட்டிட்டும். என்ன பொழப்பு இது. வெக்கமா இல்லை. இதுல உனக்கு தற்பெருமை வேறையா? அதிர்ச்சியில அவங்களுக்கு எதாச்சும் ஆகியிருந்தா?…” என அவனை காய்ச்சு காய்ச்சென காய்ச்ச,

“முதல்ல உன் வாயை அடக்கு. எப்போ பாரு எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசிக்கிட்டு. என்ன இன்னைக்கு தப்பிச்சிட்டோம்னு நினைப்பா? ஓவரா துள்ளற?, அமைதியா இரு சொல்லிட்டேன்…” என விரல் நீட்டி எச்சரித்த பிரசாத் மீது அவனை எரிக்கும் பார்வையொன்ற வீசினாள் நந்தினி.

அதை கண்டுகொள்ளாதவன், “என்ன செஞ்சு என்னடா பலன் பிரபா? வேணி அத்தை இப்படி செய்துட்டாங்க. நல்ல வேலை நான் வள்ளியை லீவ்ல போக வேண்டாம்னு சொல்லிட்டேன். ப்ச். அம்மா தான் என்னை ரொம்ப தப்பா நினைக்கிறாங்க. அதனால என்ன? போக போக புரிஞ்சிப்பாங்க…” என கூறியவனை தலைக்கு மேல தூக்கி சுற்றோ சுற்றென சுற்றினான் உதயா. பின்னே பிரசாத் செய்தது சாதாரண விஷயமா?

நந்தினிக்குதான் இதை பார்த்து பொறுக்கமுடியவில்லை. பிரசாத்தின் மீது கோவம் குறைந்தாலும் மனதின் ஓரத்தில் கொஞ்சம் கனன்று கொண்டே தான் இருந்தது. “இங்க பாரு நீ வேணும்னா உன் தம்பியை தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடு. நான் வேண்டாம்னு சொல்லலை. ஆனா நான் இவனை மன்னிக்கவே மாட்டேன்…” என மிதப்பாக கூற,

பிரசாத், “இவளுக்கு கையில ட்ரிப்ஸ் போட்டதுக்கு பதிலா வாயில போட்ருக்கனும்டா. கொஞ்ச பேச்சா பேசறா?…” என்று சொல்லவும் உதயாவும் சேர்ந்து பிரசாதத்தோடு இணைந்து வெடிச்சிரிப்பு சிரிக்க அதை பார்த்து கோவத்தில் கையில் கிடைத்த அனைத்து பொருட்களையும் தூக்கி வீசி எறிந்தாள் நந்தினி. 

போனவர்களை இன்னமும் காணோமென்று மூர்த்தியை தவிர அனைவரும் அங்கே நந்தினியை பார்க்க வர அந்த அறையே கலவர கோலமாக கிடந்ததை பார்த்தாலும் மூவரின் சந்தோஷ போராட்டத்தில் அனைவரின் நெஞ்சமும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது.

Advertisement