Advertisement

நட்சத்திர விழிகள் – 26 (1)

உதயாவின் முகத்தை பார்த்த விஷ்ணு ஏதோ சரியில்லை என நினைத்து அருகில் வந்து, “டேய் பிரபா…” என அவனை உலுக்கினான். அப்போதுதான் உள்ளே நுழைந்தார் சுதர்சனம்.

விஷ்ணுவின் தொடுகையில் உணர்வுபெற்ற உதயா, “ஐயோ விஷ்ணு நந்தினிக்கு பிரசாத்தால் ஏதோ ஆபத்து. நான் அவளை காப்பாத்தனும். வீட்டுக்கு போகனும்…” என பிதற்றலோடு வாசலை நோக்கி ஓட,

“என்னடா சொல்ற? நந்தினிக்கு என்ன? புரியிறது போல பேசு. யார் போன் பண்ணினா? என்ன சொன்னாங்க?…” என உதயாவை பிடித்து நிறுத்தி கேட்கவும் பிரசாத் போனில் சொன்ன விஷயத்தை தடுமாற்றத்தோடு கூறி முடித்தான்.

விஷ்ணுவின் அதட்டல் குரலில் அனைவரும் என்னவென வந்து பார்க்க அந்நேரம் உதயா அவனிடம் கூறியதை கேட்டு அதிர்ந்து போயினர்.

அதற்குமேல் ஒருநிமிடம் கூட தாமதிக்காமல் வெளியில் ஓடியவன் தன் காரை எடுக்க நினைத்தால் கைகள் எல்லாம் அவனுக்கு ஒத்துழைக்காமல் நடுங்கியது.

ஓவென அவன் கத்த அவனை தொடர்ந்து வந்த விஷ்ணு அவனது நிலையறிந்து துடித்தவன் மறுபுறம் உதயாவை தள்ளிவிட்டு வேகமாக காரை கிளப்பினான். அவர்களோடு சுதர்சனமும் சேர்ந்துகொண்டார்.

அவன் பின்னாலேயே உதயாவின் பெற்றோரும், கெளரி, நாச்சியும் விஷ்ணுவின் பெற்றோரும் என அனைவரும் கிளம்பினார்கள்.

காரில், “ஐயோ பெருமாளே என் பேத்திக்கு ஒண்ணும் ஆகக்கூடாது. அவளை எப்படியாவது காப்பாத்தி எங்கக்கிட்ட குடுத்துருப்பா…” என இறைவனிடம் வேண்டியபடி நாச்சி பதறி தவிக்க அவரை தாங்கிக்கொண்ட பாக்கியம் என்ன செய்வதென புரியாமல் கண்ணீர் வடித்தார்.

விஷ்ணுவின் கைகளில் சீறிப்பாய்ந்த கார் உதயா வீட்டினுள் நுழைய அதற்கு சில நொடிகளுக்கு முன் பிரசாத்தின் காரும் நுழைந்தது. அவனை பார்த்த உதயா கார் நிற்கும் முன்னாலே வேகமாக வெளியில் குதித்தவன் பிரசாத்தை நோக்கி வெறிபிடித்தவன் போல ஓடினான்.

காரிலிருந்து இறங்கிய பிரசாத் வீட்டிற்குள் செல்ல அவனை பிடித்து பின்னால் தள்ளி தடுத்த உதயா, “ஏண்டா எங்க உயிரை வாங்குற? நந்தினியை விட்டுடு. ஒழுங்கா வீடு போய் சேரு பிரசாத்…” என உறும பிரசாத்தின் காரின் மறுபுறத்திலிருந்து தனம் இறங்கினார்.

அவரை பார்த்த உதயா, “சித்தி நீங்க…” என அதிர்ச்சியில் உறைந்து நிற்க அதே நேரம் மூர்த்தி குடும்பமும் வந்து சேர்ந்தது. அவர்களும் திகைத்துத்தான் போயினர்.

பின்னே இத்தனை வருடங்களாக வராத தனம் இன்றைக்கு வந்திருக்கிறார் என்றால் என்னவாக இருக்கும் என்று குழம்பினார்கள். பிரசாத் அவர்களை எல்லாம் சட்டை செய்யாமல் மீண்டும் வீட்டிற்குள் செல்ல உதயா தடுக்க வர,

“பிரபா, என்னை மிருகமாக்காத…” என விஷ்ணுவின் புறம் உதயாவை தள்ளியவன் வேக எட்டுக்களோடு உள்ளே நுழைந்தேவிட்டான்.

அவன் பின்னால் அனைவரும் உள்ளே வர பிரசாத், “வள்ளி, வள்ளி!!!…” என கூக்குரலிட அவனது செய்கைகள் புரியாமல் மற்றவர்கள் பார்த்தனர். உதயா நந்தினியை தேடி தன் அறைநோக்கி செல்ல அடியெடுத்து வைக்கவும் அவனை பிரசாத்தின் குரல் தடுத்தது.

“பிரபா, உன் பொண்டாட்டி உன்னோட ரூம்ல இல்லை. வா இங்க…” என்று அதிகாரமாக அழைக்க, “டேய் என் நந்தினியை என்னடா பண்ண?…” என்று அவன் மீது பாய்ந்து  சட்டையை பிடித்து உலுக்கினான் உதயா.

அவன் கைகளை விலக்கிய பிரசாத், “கொஞ்சம் பொறுடா…” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே பின் வாசலில் இருந்து கையில் தடிமனான கம்பியோடு வேகமாக ஓடிவந்த வள்ளி,

“பிரசாத் தம்பி அந்த ரூம்ல இருக்காங்க. கதவை உடைக்கத்தான் இதை எடுத்துட்டு வந்தேன்…” என்று பக்கவாட்டில் இருந்த அறையை காண்பிக்க ரௌத்திரமாக அந்த அறையின் வெளியே போட்டிருந்த தாழ்ப்பாளை நீக்க அது உட்புறமாகவும் பூட்டியிருந்தது. வேகமாக கதவை தட்டினான் பிரசாத்.

“வேணி அத்தை,  இப்போ நீங்க கதவை திறக்க போறீங்களா இல்லையா?…” என்று அந்த வீடே அதிரும்படி குரல் கொடுக்க அனைவருக்குமே தலைசுற்றியது. வேணி எப்போ, எப்படி இங்கே வந்தார்? என்று யாருக்குமே தெரியவில்லை.

பிரசாத் கதவை உடைக்கும் நிலைக்கு செல்ல அவனது உக்கிரத்தை பார்த்து திகைத்த உதயா, விஷ்ணு பிரசாத்தை பிடித்து இழுக்க அது முடியாமல் போனது.

“இப்போ வெளில நீங்க வரலைனா நான் கதவை உடைச்சிட்டு உள்ளே வருவேன்…” என கர்ஜிக்கவும் அதற்கு மேல் தப்பிக்க வழியின்றி மெல்ல கதவை திறந்தார் வேணி.

நொடியில் அவரை பிடித்து வெளியே இழுத்த பிரசாத் சுவற்றோடு சாய்த்து கழுத்தை நெறித்தான். “சாவி எங்க? சொல்லுங்க…” என தன் கைகளுக்குள் சிக்கிய வேணியின் குரல்வளைவில் அழுத்தம் கொடுத்தவாறு கேட்கவும்,

அவனது செய்கையில் கோபம் கொப்பளிக்க, “உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு பிரசாத்?. விடு அவங்களை…” என அவனிடமிருந்து வேணியை காக்க முயன்றான் உதயா.

அனைவரும் பிரசாத்தின் ருத்ரதாண்டவத்தில் செய்வதறியாது விக்கித்துப்போய் நின்றிருந்தனர். பிரசாத் கோவம் கொள்பவன் தான் ஆனால் இது போல அக்னி பிழம்பாக நிற்பவன் அல்ல. அவனை நெருங்கவே அனைவரும் அஞ்சினார்கள்.

“பிரபா நீ தள்ளி போடா, நந்தினி உயிருக்கு போராடிட்டு இருப்பா. இவங்க சாவியை குடுத்தாதான் காப்பாத்த முடியும். யாராச்சும் இவங்களை காப்பத்த என் பக்கத்துல வந்தீங்க ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு இவங்க கழுத்தை திருகி போட்டுடுவேன்…” என பிரசாத் சொன்ன நிமிடம் அனைவருமே உறைந்துவிட்டனர்.

“தான் கேட்டது உண்மையா? வேணி அத்தையா என் நந்தினியை கொல்லத்துணிந்தது?…” என பிரம்மை பிடித்தவன் உதயா போல நிற்க அந்த நேரத்தில் வேணி வலி பொறுக்கமாட்டாமல் எங்கே நிஜமாக கொன்றுவிடுவானோ என அஞ்சி, “பிரசாத்…. பிரசாத்… என்னை… விடு… தரேன்…” என திணறி திணறி சொல்லவும் தான் அவரை விட்டான்.

அறைக்குள் சென்றவர் பின்னாலேயே வள்ளியும் சென்று சாவியை வாங்கிக்கொண்டு வர அதை அவசரமாக வாங்கிய பிரசாத் உதயாவை இழுத்துக்கொண்டு அரங்கு அறை நோக்கி செல்லவுமே என்ன நடந்திருக்கும் என அனைவருக்கும் புரிந்துவிட்டது.

உதயாவின் கால்கள் அறையை நோக்கி முன்னேற மறுத்தது. அவனது மொத்த நிம்மதியும் சந்தோஷமும் தொலைந்துவிட்டதோ என எண்ணி கலங்கினான்.

அவனின் நிலையறிந்த பிரசாத், “வா பிரபா, எனக்கு இதை திறக்க தெரியாது. நீதான் உன் மனைவியை காப்பாத்தனும். நீ தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் நந்தினி நம்மை விட்டு போய்ட்டே இருப்பா…” என கூறியதும் இத்தனை நாள் இந்த அறைப்பக்கமே வரக்கூடாது என்று எடுத்த முடிவை தன்னவளுக்காக மாற்றிக்கொண்டு அறைக்கதவை திறந்தான்.

அங்கே அறையின் ஓரத்தில் கௌரியின் படத்தின் முன்பு விளக்கு ஏற்றப்பட்டிருக்க அதன் கீழே நந்தினி மயங்கிய நிலையில் கிடந்தாள்.

புழுக்கத்திலும் பயத்திலும் வேர்வையில் முழுவதுமாக நனைந்து கிடந்த அவளை வேகமாக நெருங்கி அள்ளி தன்மீது போட்டுகொண்ட உதயா ஒரு நொடி கௌரியின் படத்தை விழிகளில் நிறைந்த கண்ணீரோடு பார்த்தவன் அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

ஹாலில் இருந்த சோபாவில் கிடத்தியவன் நந்தினியை எழுப்பினான். அனைவரும் வேகமாக அவர்களை சூழ்ந்துகொள்ள வேணி மெல்ல அங்கிருந்து வெளியேற முயன்றார். அதை கண்ட வள்ளி அவரது கையை பின்பக்கமாக பிடித்து முறுக்கி நகராமல் தன் அருகில் நிறுத்திகொண்டு நடப்பதை துக்கத்தோடு வேடிக்கை பார்த்தாள்.

எத்தனை எழுப்பியும் மூர்ச்சையாகி இருந்தவளை பார்த்த மூர்த்தி, “அய்யோ நந்தினி கண்ணு திறக்காம இருக்காளே? பிரபா நீ முதல்ல ஹாஸ்பிடல்க்கு போய் நந்தினிக்கு என்னன்னு பாரு. இதுக்கு காரணமானவங்களை நான் இங்க கவனிச்சுக்கறேன்…” என பரிதவிப்பும் பதட்டமுமாக உதயாவிடம் கூறினார்.

“ஆமா பிரபா, நீ கிளம்பு முதல்ல, இவளுக்கு ட்ரீட்மென்ட் குடுக்க சொல்லு. அங்க போய்ட்டு போன் பண்ணு. நாங்க எல்லோருமே பின்னால வரோம். இவங்களை நான் பார்த்துக்கறேன்…” என கூறிய பிரசாத் வேணியை பார்த்த பார்வையில் அவருக்கு பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டது.

“இவன் எப்போ நல்லவனா மாறினான்?…” என்ற குழப்பமும் அவரை ஆட்டிப்படைத்தது.

டாக்டர் பெருமாளுக்கு போன் செய்த விஷ்ணு விஷயத்தை கூறி விட்டு நந்தினி, உதயாவோடு தன் பெற்றோரையும் துணைக்கு   அனுப்பிவைத்தான். விஷயம் பெரிதென்று தெரிந்துதான் தன் பெற்றோர் இங்கே இருப்பது சரிவராது என எண்ணி அனுப்பிவிட்டான்.

அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வர வேணி பயத்தில் நடுங்கி கொண்டிருந்தார். அவர் மீது அளவில்லாத கோவமிருந்தாலும் இப்போ அனைவருக்கும் தெரியவேண்டியது பிரசாத்தின் செயல்களுக்கான விளக்கங்கள். பிரசாத்தை கேள்வியாக பார்க்க அவனும் சொல்ல தொடங்கினான்.

மூர்த்தியை பார்த்தவன், “எல்லோருக்கும் குழப்பமா இருக்கும். எனக்கு இங்க நடந்த விஷயம் எப்படி தெரிந்ததுன்னு. எல்லாத்தையும் சொல்றேன். பிரபா நந்தினி கல்யாணம் முடிஞ்சு இங்கே வந்த சில நாட்களில் வேணி அத்தை எனக்கு போன் பண்ணிருந்தாங்க. உங்க மேலையும், பிரபா மேலையும் எனக்கிருந்த கோபத்தை கருவியாக்கிக்க பார்த்தாங்க. அவங்களுக்கு நந்தினியை பிடிக்கலை…”

“அவளை பழிவாங்கனும்னு சொன்னாங்க. எனக்கு முதல்ல அதிர்ச்சியா தான் இருந்தது. அவங்களோட திட்டம் என்னனு தெரிஞ்சுக்க நானும் அவங்களுக்கு துணை போறது போல வேணி அத்தையை நம்ப வச்சேன். அதுக்காக நான் அனுப்பின ஆள் தான் வள்ளி…” எனவும் அனைவருமே திகைத்து வள்ளியை பார்த்தார்கள்.

“வேணி அத்தைக்கு தெரியாத ஒண்ணு வள்ளியை அவங்களுக்கு சாதகமா நடத்திக்கத்தான் நான் அனுப்பினதா நினச்சாங்க. ஆனா நந்தினியை வேணி அத்தைக்கிட்ட இருந்து காப்பாத்தத்தான் நான் வள்ளியை அனுப்பிருக்கேன்னு தெரியாம போச்சு. இப்போ மட்டுமில்லை இதுக்கு முன்னாலையும் நிறைய தடவை முயற்சி பண்ணிருக்காங்க…” என வேணியை பார்த்துக்கொண்டே கூறியவன்,

“இங்க மீன்தொட்டி உடைஞ்சு நந்தினி கைல அடிபட்டதே அன்னைக்கு என்ன நடந்ததுன்னு உங்க யாருக்காவது தெரியுமா? அதையும் அவங்க வாயாலையே என்கிட்டே சொன்னாங்க…” என்றவன் தன் மொபைலில் இருந்த வாய்ஸ் ரெக்காடரை ஓடவிட்டான். அதில் வேணியின் இறுமாப்பான குரலில் அவர் செய்த சதிவேலையை அம்பலமானது. சுதர்சனத்திற்கு இப்போதே அவரை கொன்றுவிடும் வேகம் எழுந்தது.

அனைவரின் முன்னாலும் வேணியால் தலைகுனிந்து கூனி குறுகிப்போய் அமர்ந்திருந்தார். கௌரியால் இதையெல்லாம் நம்பவே முடியவில்லை. இன்னும் என்னவெல்லாம் தங்களின் தலையில் இடியாக இறங்கபோகிறதோ என நினைத்த மூர்த்தி, பிரசாத் முழுதாக சொல்லிமுடிக்கட்டுமென அமைதியாக இருந்தார்.

“இதுமட்டுமில்லை வள்ளி இங்க வந்த பின்னாலையும் நந்தினிக்கு நிறைய இடஞ்சல் குடுத்திருந்திருக்காங்க. நீங்க வள்ளிக்கிட்டையே கேட்டு தெரிஞ்சுக்கோங்க. எங்களால முடிஞ்ச அளவுக்கு அவங்களை கன்ட்ரோல்ல வச்சுக்க பார்த்தோம். கெளரி கல்யாணம் முடியவுமே சொல்லிடலாம்னு தான் நினச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ளே…” என தொண்டையை செருமிக்கொண்டு,

“இன்னைக்கு காலையில நீங்க எல்லோருமே கௌரி வீட்டுக்கு கிளம்பிட்டதா வள்ளி மூலமா எனக்கு தகவல் வந்திருச்சு. ஆனாலும் மனசுக்குள்ள ஒரு படபடப்பு. வள்ளியை நந்தினிக்கு காவலா இருக்க சொன்னேன். நான் நினச்சது போலவே கொஞ்ச நேரத்துல வேணி அத்தை இங்க வந்துட்டாங்க. இனி அவங்ககிட்ட கேளுங்க…” என கூறியவன் வேணியை இழுத்துகொண்டுவந்து மூர்த்தியின் முன் நிறுத்தினான்.

“ம்ம். சொல்லுங்க. ஏமாத்தலாம்னு நினச்சீங்க, நடக்கிறதே வேற, சொல்லிட்டேன்…” என்றவனது மிரட்டல் நன்கு வேலை செய்தது.

அனைவரையும் பார்த்து அழுதுகொண்டே, “சொல்லிடறேன். இனியும் மறைக்க என்ன இருக்கு? ஆமா, எனக்கு நந்தினியை பிடிக்கலை. என் பொண்ணு வாழவேண்டிய வாழ்க்கையை அவ வாழறத என்னால பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியலை. அதுவும் இல்லாம நான் தூக்கி வளர்த்த பிரபா அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்னை எதிர்த்து பேசினதும் இல்லாம உங்க எல்லோர்க்கிட்டையும் சொல்லி என்னை தனிமரமா நிக்கவைப்பேன்னு சவால் விட்டான்…” என திமிராக சொல்லவும் அனைவருக்கும் இது பலத்த அதிர்ச்சியாக இருந்தது.

வேணியின் பேச்சில் அருவருத்த கெளரி நடுக்கத்தோடு விஷ்ணுவை நெருங்கி நின்றுகொண்டாள். அவளது மனநிலை புரிந்தது போல தன்னோடு மென்மையாக அணைத்துகொண்டான் விஷ்ணு. 

உதயாவிற்கு முதலிலேயே எல்லாம் தெரிந்தும் யாரிடமும் இப்படி சொல்லாமல் மறைத்துவிட்டானே என மனம் கலங்கினார்கள். எப்படி பட்ட பிரச்சனைக்கு நடுவில் தன் மனைவியை பாதுகாத்தான் என எண்ணி பெருமைப்படாமலும் இருக்கமுடியவில்லை.

அனைவரும் வேணியை வெறுப்பாக பார்க்க அவர் இவர்களை தவறியும் பார்த்துவிடாமல் வேறு திக்கில் பார்த்துக்கொண்டே,

“அது என் கோவத்தை  இன்னமும் அதிகமாக்கிருச்சு. என் மகளும் அவளுக்கு மயங்கி என்னை எதிர்த்து பேச ஆரம்பிச்சா. என்னை விட்டு எல்லோருமே விலகறது போல இருந்தது. அதுக்காகத்தான் நான் பிரசாத் மூலமா நந்தினியை பழிவாங்க நினச்சேன். சின்ன சின்ன சங்கடம் குடுத்தும் அவளை ஒண்ணும் செய்யமுடியலை. அவ இருக்கிற வரைக்கும் எனக்கு நிம்மதி இல்லைன்னு நினச்சேன். அதனால…” என ஒரு கணம் நிறுத்தியவர்,

“கெளரி வீட்க்கு எல்லோரும் போனப்போ பெத்தவ நான் இருக்கேன், அவ என்னை கண்டுக்காம உங்க எல்லோரோடையும் பேசினதும் இல்லாமல், என்னை விட்டுட்டு வராத நந்தினியை தேடினது எனக்கு ரொம்ப ஆங்காரத்தை உண்டு பண்ணிருச்சு…”

“நீங்க… நீங்க எல்லோருமே கெளரி வீட்ல பேச்சுல மும்மரமா இருந்தீங்க. அதை பயன்படுத்திக்கிட்டு நான் சம்பந்தியம்மாக்கிட்ட வெளில இருக்கேன்னு சொல்லிட்டு மெதுவா வீட்டுக்கு கிளம்பிட்டேன். அங்க நந்தினி கௌரி வீட்டுக்கு வர கிளம்பிட்டு இருந்தா…” என்றவர் மெல்ல விழியுயர்த்தி அனைவரையும் பார்க்க அவர்களின் வெறுப்பு உமிழும் பார்வையை காணமுடியாமல் தலைகுனிந்துகொண்டார்.

“மேல சொல்லுங்க வீட்டுக்கு வந்து என்ன செய்தீங்க?…” என்று பிரசாத் உறும அதில் பயந்தவர் தயக்கமாக,

“அவளை கூப்பிட்டு இன்னைக்கு அரங்கு ரூம்ல விளக்கேத்தனும், நேத்தே ஏத்திருக்க வேண்டியது. அண்ணி மறந்துட்டாங்களாம், அதான் என்னை அனுப்பிவச்சாங்கன்னு சொன்னேன். முதல்ல அவ நம்பலை. அப்றமா தான் நான் சொல்றதை கேட்டா. அவளை ரூம்க்கு கூட்டிட்டு போய் உள்ள அவ விளக்கேத்தும் போது நான் உடனே வெளில வந்து கதவை சாத்திட்டேன்…”

“அதை பார்த்த வள்ளி என்னன்னு விசாரிச்சு சாவியை கேட்டா. குடுக்கமுடியாதுன்னு சொல்லவும் என்னையே அடிக்க வந்தா. அதான் என்ன செய்யன்னு தெரியாம இந்த ரூம்க்குள்ள வந்து ஒளிஞ்சுட்டேன். இந்த வேலைக்கார நாயி என்னை உள்ள வச்சு கதவை பூட்டிட்டா…” என்று கைகளை பிசைந்துகொண்டே கூறி முடிக்கவும் சுதர்சனம் எழுந்து விட்டார் ஒரு அறை. வேணிக்கு தலை கிறுகிறுத்து போனது.

அடித்து கொன்றுவிடும் வெறியில் இருந்த சுதர்சனத்தை வந்து பிடித்துக்கொண்ட விஷ்ணு, “நீங்கல்லாம் ஒரு பொண்ணா? வாழவந்த பெண்ணை சாவடிக்க பார்த்திருக்கீங்க? அந்த அளவுக்கு உங்களுக்கு என்ன வெறி?…” என வேணியை பார்த்து கேட்கவும்,

“ஆமா வெறிதான். அவ வந்ததிலிருந்து எல்லோரும் அவளுக்கு குடுத்த முக்கியத்துவம், காணாத பொக்கிஷத்தை கண்டது போல தலையில தூக்கிவச்சு கொண்டாடினது எனக்கு பிடிக்கலை. இப்போவும் எனக்கு நான் செஞ்சது தப்பில்லைன்னுதான் தோணுது…” என்று வீம்பாக படபடவென என்ன பேசுகிறோம் என்று உணராமலேயே பேச,

அவரை பார்த்த மூர்த்தி, “நீ செஞ்ச பாவங்கள் இதுமட்டும் தானா? இல்ல இன்னமும் இருக்கா?. போதும். இதோட நிறுத்திருமா. எங்களை, எங்க குடும்பத்தை விட்டுடு…” என்று உடைந்துபோன குரலில் யாரோ ஒருவரிடம் பேசுவது போல ஒட்டாத தன்மையில் தள்ளி வைத்து பேசிய தன் அண்ணனை பார்த்த வேணி நிலைகுலைந்து தன்னிலை மறந்தார். அதிலேயே பித்து பிடித்தவர் போல உளற ஆரம்பித்தார்.

“அண்ணே அவ நம்ம குடும்பத்துக்கு ஒத்துவரமாட்டா அண்ணே. அதான் அப்படி பண்ணினேன். நம்ம பிரபாவை நம்மக்கிட்ட இருந்து பிரிச்சிடுவா. அதான் அப்படி பண்ணினேன். இதைத்தான் நான் எனக்கு தெரிஞ்சு செய்தேன். நான் வேற ஒண்ணுமே பண்ணலை…” என்றவர் விடாமல் தன்னை நியாயப்படுத்த முயன்று வார்த்தைகளை அவரை அறியாமல் சிதறவிட்டார்.

“நம்ம குட்டி கெளரி அரங்கு ரூம்க்குள்ள நுழைஞ்சது கூட எனக்கு தெரியாம தான் நடந்தது. அவ உள்ளே இருக்கான்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா காப்பாத்தியிருப்பேன் அண்ணே. நீங்களாவது என்னை நம்புங்க அண்ணே…” என தன் போக்கில் சொல்லிக்கொண்டே போக அதை கேட்ட பாக்கியம் நெஞ்சை பிடித்துக்கொண்டே மயங்கி விழுந்தார்.

அதை பார்த்த பின்னால் தான் தான் சொன்ன விஷயத்தை உணர்ந்தார். இத்தனை வருடமாக தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இன்று தன் வாய் மூலமாகவே அம்பலப்பட்டுப்போனதை எண்ணி விக்கித்து நின்றுவிட்டார்.

“அடிப்பாவி, நீயெல்லாம் ஒரு மனுஷ ஜென்மமா?. ஒரு பிஞ்சை சாகடிச்சுட்டு இத்தனை வருஷமா எங்களுக்கு தெரியாம மறைச்சதும் இல்லாம இப்போ அதை நியாயப்படுத்தி வேற பேசறியா?…” என அடி நொறுக்கித்தள்ளிவிட்டார் சுதர்சனம்.

“உன்னை போல ஒரு மிருகத்தையா என் வயித்தில சுமந்தேன். ஐயோ உன்னை பெத்த பாவத்தை நான் எங்கே போய் கழுவுவேன். என்ன பாவம் செய்தேன்னு எனக்கு இந்த தண்டனை?…” என்று வயிற்றில் அடித்துகொண்டு கதறினார் நாச்சி.

பிரசாத்துக்கே இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. விஷ்ணு தாமதிக்காமல் பாக்கியத்தை தூக்கிகொண்டு ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான். பிரசாத், தனத்தோடு மூர்த்தியும், நாச்சியும் செல்ல,

போகும் போது வேணியிடம், “நம்பவச்சு கொஞ்சம் கொஞ்சமா எங்களை கொன்னுட்டியே?…”என்றவர், சுதர்சனத்திடம், “என் தங்கச்சி செத்துட்டா. இனிமே இவ இந்த வீட்டு வாசப்படி ஏறக்கூடாது. என் முகத்திலையும் முழிக்கக்கூடாது. மீறி வந்தா நானே இவளை இல்லாம பண்ணிடுவேன்…” என மூர்த்தி கண்ணீரோடு உறுதியாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அவ்வீட்டில் எஞ்சி இருந்தவர்கள் சுதர்சனத்தோடு, வள்ளி, கௌரி மட்டுமே. மூர்த்தியின் பேச்சில் அரண்டுபோன வேணி தன் கணவன் மகள் மனதை மாற்ற நினைத்து,

“பாருங்க, நான் நம்ம பொண்ணோட நல்லதுக்குதானே எல்லாம் செய்தேன். இதுக்கெல்லாம் காரணம் அந்த நந்தினிதான். எல்லோரையும் மயக்கி கைக்குள்ள போட்டுக்கிட்டு இப்போ என்னையே எங்கண்ணன் வாயால வெளியே போக சொல்ல வச்சுட்டா பாருங்க…” என அவர்களிடம் பரிதாபத்தை சம்பாதிக்க நினைத்தார்.

வேணியை நெருங்கிய கெளரி பதிலேதும் பேசாமல் கூர்ந்து பார்த்து அவரது முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு, “ச்சீ, நீயெல்லாம் என்னை பெத்த தாயா? என்னை பொருத்தவரைக்கும் நீ செத்துட்ட. அப்பா வாங்க போகலாம்…” என கூறிவிட்டு வாசலை நோக்கி செல்ல, சுதர்சனம் வேணியின் கழுத்தைபிடித்து வீட்டிலிருந்து தரதரவென இழுத்து வெளியே தள்ளிவிட்டார்.

“வள்ளி, கதவை பூட்டு. இனி இவ இந்த வீட்டு வாசப்படி மிதிக்க கூடாது. புரிஞ்சதா?…” என வள்ளியிடம் கர்ஜித்துவிட்டு செல்ல வேணியோ அதிர்ந்துவிட்டார். இனி தன் மகளும், கணவனும் கூட தனக்கில்லை என்பது வெகு தாமதமாக தான் புரிந்தது.

அப்போதுமே நடந்தது அனைத்திற்கும் நந்தினியையே காரணம் காட்டி அந்த வட்டத்திற்குள்ளேயே தான் அவர் மனம் சுற்றியது. தான் அவசரப்பட்டு இந்த காரியத்தை செய்யாமல் நந்தினியை இப்போது இல்லாமல் வேறொரு சமயத்தில் தன் மீது சந்கேகம் வராத அளவிற்கு கவனித்திருக்க வேண்டுமென்றும் மனம் முரண்டியது. அவளுக்கு இது போதாது. இன்னும் பெரியதாக தண்டனை கொடுக்கவேண்டுமென்று இன்னும் வெறிகொண்டது.

வள்ளியும் பிரசாத்தும் இப்படி தன் காலை வாருவார்கள் என்று எதிர்பாராத காரணத்தால் அவர்கள் மீதும் துவேஷம் உருவானது. இனி நந்தினியை தன்னால் ஒன்றும் செய்யமுடியாதோ என்ற எண்ணமே அவரை பைத்தியமாக்கியது.

மூடப்பட்ட வீட்டின் கதவை வெறித்து பார்த்தவர் கண்களில் ஜொலித்த கோபத்தீ ஒவ்வொரிடமும் சென்று கடைசியில் இத்தனையையும் யோசிக்காமல் செய்த தன்மீதே திரும்பி முன் தோட்டத்தில் கிடந்த இரும்பு பைப்பால் தன் தலையில் தானே சரமாரியாக அடித்துக்கொண்டு ரத்தம் கொட்ட கொட்ட மயக்கம் வரும் வரைக்கும் வெறியடங்காமல் அடித்துக்கொண்டே இருந்தார்.

கல்யாணத்தால் அங்கே உள்ள வேலைக்கார்களுக்கு விடுமுறை கொடுத்திருந்தபடியால் தோட்டத்தில் யாருமில்லாமல் அனாதையாக மயங்கிக்கிடந்தார் வேணி. வள்ளியுமே வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தால் இது அவளது கவனத்திற்கு கூட செல்லவில்லை.

Advertisement