Advertisement

நட்சத்திர விழிகள் – 25 (2)

“பாவிப்பயளுங்க நான் என்ன அடுத்தவன் பொண்ணையா தூக்கிட்டுப்போறேன், நாளைக்கு கட்டிக்கபோற என் பொண்டாட்டியை இன்னைக்கு தூக்கிட்டு போறேன். அதுக்கு ஏண்டா இந்த அக்கப்போரு? இப்படி வளைச்சு வளைச்சு தேடுறதை பார்த்தா என்னை களி திங்க வைக்காம விடமாட்டாங்க போல?…” என்றவன் அடுத்த தெருவில் இருந்த உதயாவின் வீட்டிற்கு பின்பக்கமாக உள்ளே நுழைந்துவிட்டான்.

“ஐயோ இவ அண்ணன் கண்ணுல படாம உள்ள போகனுமே? பார்த்தா டின்னு கட்டிடுவானே?…” என பத பதைத்துக்கொண்டே பின்பக்க தோட்டம் வழியாக உள்ளே சென்றுவிட்டான். அவனுக்கு தெரியாத வழியா உதயாவின் வீட்டில்.

மெல்ல உள்ளே நுழைந்தவன் ஸ்டோர் ரூமில் நுழைந்து கீழே மூட்டையை இறக்கி வைத்துவிட்டு கையை உதறிக்கொண்டவன், “யம்மா, என்னா வெய்ட்டு?…” என நினைத்துக்கொண்டே மூட்டையை அவிழ்க்க மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் மயங்கிய நிலையிலேயே இருந்த கௌரியின் அழகு அவனை மயக்கியது.

“சும்மா சொல்லக்கூடாதுடா விஷ்ணு. உன் சவுரி கூட கொஞ்சம் அழகாதான் இருக்கா. ஆனா வாய் கொஞ்சம் நீளம்…” என்று அவளின் கன்னத்தில் மெல்ல கௌரிக்கு இடித்தவன்,

“ஏய், யார்க்கிட்ட, உன்னை சொன்னது போலவே தூக்கிட்டேன்ல. இப்போ என்னா செய்யுவ? இப்போ என்னா செய்யுவ?…” என ராகம் போட்டு மெல்லிய குரலில் பாட அந்த அறையின் விளக்குகள் போடப்பட்டதும் திரும்பி பார்க்காமலேயே, “நான் இல்லை, நான் இல்லை…” என்று அலறிவிட்டான்.

வேகமாக அவனது வாயை அடைத்த உதயாவின் கரங்களை விலக்கிய விஷ்ணு, முதலில், “மச்சான்…” என அழைத்துவிட்டு பின் நாக்கை கடித்தவன் குரலை லேசாக கனைத்துக்கொண்டு, “ஏய் என்னை யாருன்னு நினச்ச?…” என்று மிரட்டும் தொனியில் மீசையை தடவிக்கொண்டே கேட்டான்.

அவனை கூர்ந்து ஒரு நிமிடம் பார்த்த உதயா பளாரென்று கன்னத்தில் அறையவும் தலை கிறுகிறுத்துப்போய் ஒரு சுத்து சுத்தி அவன் மேலேயே மோதி நின்றான்.

ரௌத்திரமாக நின்ற உதயாவை பார்த்து சர்வமும் நடுங்கியது விஷ்ணுவிற்கு. ஒரு கையால் கன்னத்தை பிடித்துகொண்டு நின்றவனுக்கு மூக்கின் மேல் ஒட்டியிருந்த நீளமான பெரிய மீசை பிய்ந்து தொங்கியதை பார்த்து உதயாவின் பின்னால் நின்றுகொண்டிருந்த நந்தினிக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.

ஆனாலும் அவளுக்கு கோவம். விடிந்தால் நாளைக்கு இந்த வீட்டு மாப்பிள்ளையாக வரப்போகிறவனை இப்படி அடிப்பது சரியில்லை என்பது அவளது எண்ணம்.

“என்ன இப்படி போட்டு அடிக்கறீங்க? அவங்க நாளைக்கு நம்ம வீட்டு மாப்பிள்ளை, மறந்திடாதீங்க?…” என கோவமாக பேசியவளை பார்த்தவன்,

“நாளைக்கு மணமேடை ஏறப்போகிறவன் செய்யற காரியமா? யாராவது பார்த்தா என்ன ஆகிருக்கும்?. தண்ணி குடிக்கலாம்னு எழுந்து கிட்சன் போக வெளில வந்தா ஒரே கூச்சல் யாரோ மூட்டையை தூக்கிட்டு ஓடுறாங்கன்னு. என்னனு பார்ப்போம்னு கீழே இறங்கி வந்தா இவன் இப்படி ஸ்டோர் ரூம்க்குள்ள போறதை பார்த்தேன்…”

“என்னது? என்னை பார்த்தியா? நான் தான் என் கெட்டப்பை சேஞ்ச் பண்ணிருக்கேனே? அப்டியும் எப்படி என்னை அடையாளம் தெரிஞ்சது?…” என்ற தன் அதி முக்கியமான சந்தேகத்தை கேட்டுவைத்து மீண்டும் தனக்கு பாதுகாப்பாக கன்னத்தில் கைகளை வைத்துக்கொண்டான்.

“நீயும் உன் கன்றாவி கெட்டப் சேஞ்சும். சிலுக்கு ஜிப்பாவும், உன் மீசைக்குமேல இன்னொரு பெரிய மீசையும் ஒட்டி இருந்தா கண்டுபிடிக்க முடியாதா? கையில நான் கிப்ட் பண்ணின வாட்சை மறந்துட்டியே? அதை விடு. அதென்னடா மீசைக்கு மேல கன்னத்துல கருப்பா?…” என உதயா கேட்க,

“அதுவா மச்சான். அம்மாவோட ஸ்டிக்கர் பொட்டு. மரு இருக்கறதுக்கு பதிலா பொட்டு வச்சேன். கொஞ்சம் பெரிய சைஸ்தான். அடையாளம் தெரியாம இருக்கனுமே?…” என்று பரிதாபமாக கேட்டவனை மீண்டும் அடிக்க கையை ஓங்கிக்கொண்டு நெருங்க,

“வேணாம் மச்சான், நீ ஏற்கனவே அடிச்ச அடியில இந்த பச்சப்பிள்ளையோட பிஞ்சு நெஞ்சு பாதிக்கு மேல பஞ்சு பஞ்சா பறந்து போய்டுச்சு. இருக்கிற கொஞ்ச நஞ்ச ஹார்ட்டையும் நீ அடிச்சு துரத்திட்டா அங்க குடியிருக்கிற உன் தங்கச்சியை நான் வேற எங்கன்னு குடிவைப்பேன்?…” என்று அப்பாவியாக கேட்கவும் உதயாவால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

விஷ்ணுவை நெருங்கி கட்டிக்கொண்டவன், “ஏண்டா உனக்கு இந்த கோமாளி வேஷம் எல்லாம்?…” என கேட்க,

“ஆமா உன் தங்கச்சியை போல ஒரு டெரர் பொண்ணை கல்யாணம் கட்டிக்கனும்னா இப்படித்தான் செய்யணும். மனுஷனை கேலி செய்தே  கொலைவெறியாக்குறா. லவ் பண்ண சொன்னதுக்கு மாட்டேன்னா. சும்மா பந்தாவுக்காக தூக்கிட்டு போய்டுவேன்னு  மிரட்டினேன். அதையே சொல்லி சொல்லிக்காட்டி என்னை காலி பன்றா. அதான் பொறுக்கமாட்டாம தூக்கிட்டேன்…” என்றவன்,

“கொஞ்சம் பொறு…” என்று உதயாவை விடுத்து கௌரியின் அருகில் வந்து வேகமாக பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தவன் தன்னையும் கௌரியையும் சேர்த்து செல்பி எடுத்தான். அவனின் அட்டகாசம் பொறுக்காமல்,

“ஏண்டா இந்த அநியாயம் செய்யற? அவ மட்டும் முழிச்சா செத்த நீ…”

“அதுக்குதாண்டா மச்சான் இப்போவே செல்பி. நான் தூக்கிட்டு வந்தேன்னு உன் தங்கச்சி நம்பித்தொலைய மாட்டாளே?. நாளைப்பின்ன என் பிள்ளைகள்க்கிட்ட இதை ஆதாரமா காட்டி இந்த வீரதீர சாகசத்தை சொன்னா எனக்கு பெருமைதானே?…” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே நந்தினி தண்ணீர் எடுத்து வந்து கௌரியின் முகத்தில் தெளிக்கவும் கெளரி கண்விழித்தாள்.

அவள் முழித்து சுற்றிலும் கண்களை சுழட்ட விஷ்ணு உதயாவின் பின் ஒளிந்தான்.

“நீயேண்டா ஒளியிற? நீதான் கெட்டப் சேஞ்ச் பண்ணிருக்கியே?…” என்று நக்கலாக கூற அவனை நம்பி விஷ்ணுவும்,

“ஆமால…” என்று கேட்டுவிட்டு கௌரியின் முன்னால் தில்லாக வந்து நின்றான்.

மயக்கத்திலிருந்து விழித்தவள் விஷ்ணுவை பார்த்து, “யோவ், உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நாளைக்கு கல்யாணத்தை வச்சிக்கிட்டு இன்னைக்கு என்னை தூக்கிட்டு வந்திருக்கீங்களே? எங்கம்மாக்கும் உங்க வீட்டுக்கும் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?…” என்று சகட்டுமேனிக்கு வார்த்தைகளால் வாட்டி எடுத்தாள் கெளரி.

“யோவ், ஆஆ? ஆஹா விஷ்ணு, இவ பிரபாவோட தங்கச்சின்றதை ஒரு நிமிஷம் மறந்துட்டியே. இப்படி இவங்க ஈஸியா கண்டுபிடிக்கிற மாதிரி ஒரு கெட்டப்பை போட்டுட்டியே? உன்னை சொல்லியும் குத்தமில்லை. உன் வெள்ளை மனசு அந்த மாதிரி. சிக்கவச்சிட்டு தங்கச்சி பேசறதை பார்த்து ரசிக்கிறானே. இவனெல்லாம் ஒரு ப்ரெண்ட். துரோகி…” என மனதினுள் நினைத்து கண்ணீர் வராமல் அழுதவன்,

“போதும் கெளரி. பாவம் அண்ணன். ஏற்கனவே உன் அண்ணா வேற அடிச்சிட்டாங்க…” என்று நந்தினி கடிந்துகொள்ள,

“தங்கச்சி தேங்க்ஸ். தங்கச்சி நான் இதை இப்ப இங்க சொல்லியே ஆகணும். அருவியூர்ல இருந்தே நான் உங்களோட பெரிய ஃபேன். ஆனா அந்த ஃபேனை சுதந்திரமா சுத்தவிடாம சுவிட்சை ஆப் பண்ணி ப்யூஸ் புடுங்கி வச்சுட்டான் உங்க வீட்டுக்காரன்…” என்று நந்தினிக்கு ஐஸ் மழை பொழிந்தான்.

“ஐயோ, இன்னைக்கு இது போதும் அண்ணா, விடுங்க…” என்று சிரித்தபடி விஷ்ணுவிடம் கூறியவள்,

“இங்க பாருங்க, இதுவே கடைசியா இருக்கட்டும். அண்ணாவை கைநீட்டி அடிக்கிற வேலை வச்சுக்காதீங்க. புரியுதா?…” என்று சுட்டுவிரலை நீட்டி உதயாவிடம் மிரட்டலாக நந்தினி கேட்ட தோரணையை பார்த்த கெளரி வாயை பிளந்தாள். இதுவரை சாந்தமாக இருக்கும் நந்தினியையே பார்த்து பழக்கப்பட்ட கௌரிக்கு அவளது இந்த பேச்சும் அழுத்தமான குரலும் புதியதாக இருந்தது.

தன் அண்ணாவை பார்த்தால் அவனோ அதை ரசனையோடு கேட்டுக்கொண்டு தலையாட்டினான்.

அவளது திகைப்பை பார்த்த விஷ்ணு அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, “சவுரிச்செல்லம், அவசரப்பட்டு ஒரு ஷாக் ரியாக்ஷனை வேஸ்ட் பண்ணாத. உன் அண்ணன் ப்ளாட் ஆனதே இந்த பேச்சில்தான். அவங்களை கண்டுக்காத. அதனால நோ ஷாக், வா போகலாம்…” என கௌரியை அழைக்க,

“எங்க போறீங்க? நீங்க உங்க வீட்டுக்கு கிளம்புங்க. கௌரியை நாங்க நாளைக்கு மண்டபத்திற்கு கூட்டிட்டு வந்திடுவோம். ம்ம் கிளம்புங்க…” என்று அதட்டலாக கூறியவுடன் விஷ்ணு ஓடியேவிட்டான்.

“நீங்க ரூம்ல போய் தூங்குங்க. லக்ஷ்மிம்மாக்கு போன் பண்ணி கெளரி இங்க இருக்கிற விஷயத்தை சொல்லிடுங்க. நான் கௌரிக்கு துணையா அவளோட ரூம்ல தூங்கிடறேன்…” என்று உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு கௌரியோடு அவளது அறைக்கு சென்றுவிட்டாள்.

ஒரு பெருமூச்சோடு தன் அறைக்கு சென்றவன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தான். நந்தினியின் நினைவுகள் அவனை இம்சித்துகொண்டிருந்தன. எப்போதடா விடியும் என்று காத்துக்கொண்டிருந்தான்.

அதிகாலை மூன்று மணிக்கே பாக்கியத்தை போனில் அழைத்து, கௌரிக்கு அங்கே தூக்கம் வரவில்லை என்று தன்னிடம் கூறியதாகவும், அதனால் இரவு தானே வந்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டதாக கூறியவன் அவர்களை மற்றவர்களை கவனிக்கும் படி கூறி பாக்கியத்தை அமைதிப்படுத்திவிட்டு நந்தினியை எழுப்பச்சென்றான்.

அவன் அழைப்பதற்குள் அவர்கள் எழுந்து குளித்து கிளம்ப ஆரம்பித்திருந்தனர். நந்தினி வீட்டினரும் அனைவருமே தயாராகிவிட்டிருந்தனர். அவர்களை முன்னால் அனுப்பிவிட்டு கௌரிக்கான அலங்காரம் எல்லாமே செய்தவள் தானும் தன் அறைக்கு சென்று தயாராக சென்றாள்.

அங்கே அவளுக்கு தேவையான அனைத்தையும் கட்டிலில் பரப்பியிருந்தவன் அவளது வருகைக்காக காத்திருந்தவன் போல பட்டு வேஷ்டி, சட்டையில் அவனே மாப்பிள்ளை போல அமர்ந்திருந்தான்.

முதன்முதலாக அந்த உடையில் அவனை பார்த்ததுமே அசந்துபோய் நின்றாள் நந்தினி. அவளது திகைப்பை பார்த்தவன் சொடுக்குப்போட்டு அழைத்தான்.

“என்ன மேடம், கல்யாணத்திற்கு கிளம்பறதா ஐடியா இல்லையா?, இப்படி இங்கயே மயங்கிப்போய் இருக்க?…” என்று அவளை சீண்ட அதில் சுதாரித்தவள்,

“ஆமாமா நீங்க அப்படியே என்னை மயக்கி, அதில் நான் மயங்கி ம்ஹூம். நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க…” என கூறிக்கொண்டே தனக்கு தேவையானதை சரிபார்த்தாள்.

“என்னது? என்ன சொல்ற நீ? எனக்கு மயக்க தெரியாதுன்னா சொல்ற?…”

“ஹ்ம், சரியான ட்யூப்லைட் நீங்க மாமா. இவ்வளோ லேட்டா புரியுது…” என்றவளின் மாமா என்ற வார்த்தையில் தானே அவளிடத்தில் மயங்கி நின்றான்.

“மாமாவா?…” என விழிகள் குறும்பில் மின்ன நந்தினியை நெருங்க,

“ஆமா மாமா. உங்களைத்தான் என்னை மயக்க தெரியலைன்னு சொன்னேன்…” என்று மீண்டும் வம்பிழுக்க,

“யாரு நானா? அப்டியே நான் மயக்கி நீ மயங்கிட்டாலும்? இரண்டு மாசமா என்னை தள்ளிவச்சுட்டு குறை வேற சொல்ற?…” என்று சலிப்பாக கூற அவனை பார்த்து சிரித்தவள் பேசிக்கொண்டே மெல்ல மெல்ல அறையின் வாசலுக்கு அவனை கொண்டுவந்து நிறுத்தி,

“உங்களுக்கு தெரியலைன்னு சொல்லுங்க. நான் மயங்க தயாரா தான் இருக்கேன், என்னை புரிஞ்சுக்க உங்களுக்கு சாமர்த்தியம் பத்தலை மாமா…” என்றவள் அவன் சுதாரிக்கும் முன்னே அவனை வெளியே தள்ளி கதவை அடைத்துகொண்டாள்.

“ராட்சசி. படுத்தறாளே?…” என புலம்பியவன் அவள் மீதான நேசம் நிறைந்த நெஞ்சத்தை நீவிவிட்டவன் கதவை ஒரு முறை ஓங்கி ஒரு  குத்துவிட்டு, “சிக்காம எங்க போய்டுவ, நைட் பேசிக்கறேன்…” என கூறி சிரித்தபடி கீழே இறங்கிச்சென்றான்.

நந்தினியும் கிளம்பி வரவும் அனைவருமே சேர்ந்து மண்டபத்தை அடைந்தனர்.

இரவு நடந்த சம்பவத்தை சிலர் கிசுகிசுத்துகொன்டாலும் யாரும் எதுவும் களவுபோனதாக தெரிவிக்கவில்லை என்று அத்தோடு அதை முடித்துகொண்டனர்.

சம்பிரதாயங்கள் ஆரம்பிக்கப்பட்டு அனைத்துமே செவ்வனே நடந்துகொண்டிருக்க நந்தினியோ வேண்டுமென்றே ஒவ்வொரு முறையும் உதயாவை நெருங்கி மாமா மாமா என்று அழைத்து அவனையே சுற்றி சுற்றி வந்து அவனை கிறங்க வைத்தாள்.

அவளின் இந்த செய்கையால் உதயாவின் பார்வை முழுவதும் நந்தினியை சுற்றிக்கொண்டே இருந்தது. திருமண மண்டபத்தில்  மகளும் மருமகனும் அனைவரின் கண்படும் அளவிற்கு ஜோடிப்பொருத்தத்தில் அன்றைய மணமக்களை மிஞ்ச அதை சிலர் வாய்விட்டு புகழ்ந்தும் விட அதை பார்த்து பார்த்து ஏழுமலையும் அவரது குடும்பத்தினரும் பூரிப்பில் திக்குமுக்காடினார்கள்.

மணமேடையில் கௌரிக்கு அண்ணனாக விஷ்ணுவிற்கு செய்யவேண்டிய அனைத்து சடங்கையும் உதயாவே செய்தான். அதேபோல விஷ்ணுவின் தங்கையாக இருந்து கெளரியின் கழுத்தில் மங்களநாணை விஷ்ணு அணிவிக்க அதற்கு நாத்தனார் முடிச்சிட்டு தன் உரிமையையும் விட்டுகொடுக்காமல் நடந்தாள் நந்தினி.

அதன்பின் நடந்ததுதான் விஷ்ணுவின் பொறுமையை மிகவும் சோதித்தது. மந்திரங்கள் ஓதி அதன் பின் சில சடங்குகள் நடைபெற போட்டோகிராபர் கவனத்தை தன் பக்கம் பக்கம் வேண்டுமென்றே திருப்பிய உதயா மேடையிலேயே நந்தினியோடு விதவிதமாக போஸ் கொடுக்க கேமராவால் அதை உள்வாங்கிக்கொண்டார் அவர்.

அதை பார்த்து விஷ்ணுவின் காதில் புகை வராத குறைதான். போட்டோகிராபரை அழைத்த விஷ்ணு, “இங்க நான் மாப்பிள்ளையா இல்லை அவன் மாப்பிள்ளையா?…” என சிலிர்த்துக்கொள்ள,

“சார் அவங்களை பார்த்தாதான் அப்படி தெரியுது. அவங்க கூப்பிட்டு எடுக்க சொன்னாங்க, நான் என்ன செய்ய?…” என்றவரை முறைத்துக்கொண்டு உதயாவின் புறம் திரும்பியவன்,

“மச்சான். உன் காலை காமியேன். இன்னைக்காவது எனக்கு கொஞ்சம் சான்ஸ் குடுடா…” என கேட்ட நிமிடம்,

“அப்கோர்ஸ்டா மாப்ள. நீ கேட்டு இல்லைன்னு சொல்லுவேனா?, இந்தா. தாமதிக்காம என் கால்ல விழுந்திடு…” என லேசாக காலை நீட்ட விழி பிதுங்கியது விஷ்ணுவிற்கு.

“உங்களுக்கு இது தேவையா?…” என கெளரி முணுமுணுக்க, “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் சவுரி…” என்று விஷ்ணுவும் தன் கெத்தை விடாமல் சமாளித்தான்.

“ஏன் மாமா இந்த அலும்பு? இன்னைக்காவது விஷ்ணு அண்ணாவுக்கு லீவ் குடுங்க…” என கேட்டவளிடம்,

“கண்டிப்பாடா, ஆனா ஒண்ணு, நீ ஏன் நேத்துல இருந்து என்னை மாமா மாமான்னு கூப்பிடற? அதை சொல்லிட்டேன்?…” என ஆசையாக, ஆர்வமாக கேட்க,

“அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை மாமா. மரமண்டைன்னு உங்களை நீட்டிமுழக்கி கூப்பிட கஷ்டமா இருந்துச்சு. அதான் ஷாட்டா கூப்பிடனும்னு நினச்சு அந்த லெட்டர்ஸ்ல ரெண்டே லெட்டர் நானே கண்டுபிடிச்சேன். அதான் மாமா. எப்டி?…” என்ற பதிலில் உதயாவின் முகம் விளக்கெண்ணெய் குடித்ததுபோல ஆகிவிட்டது.

“உன்னை…” என்று அவள் காதை பிடித்து திருக, அதை பார்த்து குடும்பத்தில் அனைவரும் சிரிக்க என அந்த அழகான தருணம் எப்போதும் அழியாமல் இருக்க தனக்குள் பத்திரப்படுத்திக்கொண்டது கேமரா.

வேணிக்குத்தான் உதயா, நந்தினியின் சந்தோஷத்தை பார்த்து பொறுக்க முடியவில்லை. எனினும் தன் மகளது திருமணம் சிறப்பாக நடந்ததில் உண்டான திருப்தியில் அப்போதைக்கு அமைதியாக இருந்துவிட்டார்.

கல்யாண கலாட்டாக்கள் அனைத்தும் ஓய்ந்து மண்டபத்தை காலிசெய்துவிட்டு அனைவரும் வீடு வந்து சேர மாலை நெருங்கிவிட்டது. நந்தினி குடும்பத்தார் மண்டபத்திலிருந்தே  அனைவரிடமும் சொல்லிக்கொண்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர்.

சாந்திமுகூர்த்ததிற்க்கான அனைத்து ஏற்பாடுமே விஷ்ணுவின் வீட்டிலேயே நடைபெறுவதால் அங்கேயே இருந்து கௌரியை தயார்செய்து அனுப்பிவிட்டே வீடு வந்து சேர்ந்தனர் நந்தினியும் உதயாவும்.

சுதர்சனம், மூர்த்தி ஹாலில் உதயாவின் வரவிற்காக காத்திருந்தார். அவரை பார்த்ததும் நந்தினியை மேலே அனுப்பிவிட்டு அவரோடு பேசிக்கொண்டிருந்தவன் வெகுநேரம் கழித்தே அறைக்குள் வந்தான். அவன் வரும் போது அசதியில் நந்தினி நன்றாக உறங்கியிருந்தாள். அவளது தூக்கத்தை கலைக்காமல் தானும் அவளின் அருகே படுத்து உறங்க ஆரம்பித்தான்.

மறுநாள் காலையில் மறுவீட்டிற்கான பலகாரங்களும் சீர்வரிசை பொருட்களும் தயாராக இருக்க அனைவரும் கிளம்பி கீழே வந்துவிட்டனர். நாச்சி, மூர்த்தியும், பாக்கியமும் கிளம்பி வந்ததும் உதயா மட்டும் அமர்ந்திருந்ததை பார்த்து, “என்னப்பா பிரபா நந்தினி எங்க?…” என வினவ,

“அவளுக்கு கொஞ்சம் முடியலைம்மா, ஒரே அலைச்சலும் அசதியும் எழுந்துக்கவே முடியலை. அதான் தூங்கசொல்லிட்டேன். நாம போகலாம் இன்னும் கொஞ்சம் அவ நல்லா தூங்கி எழுந்திரிக்கட்டும். மத்யான விருந்துக்கு நானே அவளை கூட்டிட்டு வந்திடறேன். அதுக்குள்ளே சரியாகிடுவா…” என தயக்கமாக கூற,

“இதுல சங்கடப்பட என்னைய்யா ராசா இருக்கு?, பாவம் அவ எவ்வளோ வேலையை ஒருத்தியா இழுத்துப்போட்டு செஞ்சா, சரி சரி வெரசா போகலாம். எல்லோரும் காத்துக்கிட்டு இருப்பாங்க. இந்த வேணி எங்க போனா?…” என கூறிய நாச்சி வள்ளியை அழைத்து நந்தினியை பார்த்துக்கொள்ளும் படி சொல்லிவிட்டு வாசலுக்கு அனைவரோடும் விரைந்தார்.

வாசலில் வேணி மட்டும் காரின் அருகில் நிற்க அதை பார்த்த மூர்த்தி, “எங்க உன் மாமாவை காணும்?… என சுதர்சனத்தை கேட்க,

“அவங்க தோப்புக்கு போயிருக்காங்கப்பா, நேரா விஷ்ணு வீட்டுக்கு வந்திடுவாங்க. நாம கிளம்பலாம்…” என்று கூறியவன் காரை கிளப்பி விஷ்ணுவின் வீடு நோக்கி சென்றான்.

புதுப்பெண்ணுக்கே உரிய பொலிவோடு வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த கெளரி கார் வரும் சத்தத்தில் வேகமாக ஓடினாள்.

அனைவரும் காரை விட்டு இறங்கவுமே பாக்கியத்தை, “பாக்கிம்மா…” என்று கட்டிக்கொண்டாள் கெளரி. “பெத்தவ நான் இங்க இருக்கேன், என்னை விட்டுட்டு இந்த கழுதை அவங்களை கட்டிக்கிட்டு நிக்குது பாரு…” என பொருமியபடி நிற்க அவரது ஆத்திரத்திற்கு தூபம் போடும் விதமாக,

“அண்ணி எங்க காணும்? கூட்டிட்டு வரலையா?…” என கேட்டுவைக்கவும் வேணிக்கு கோபம் இன்னும் கொப்பளித்தது. ஆனாலும் அடக்கிவாசித்தார்.

பெண்கள் அனைவரும் உள்ளே செல்ல ஆண்கள் சீர்வரிசைகளை இறக்கி எங்கே வைக்கவேண்டும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதில் உதயா தன் கவனத்தை சிதறவிட்டான்.

ஒன்றரை மணிநேரம் கடந்திருக்கும் போது உதயாவின் போன் சிணுங்கியது. டிஸ்ப்ளேயில் மின்னிய பெயரை பார்த்ததுமே உதயா துணுக்குற்றான். “இப்போ எதுக்காக பிரசாத் கூப்பிடறான்?…”  என யோசனையோடு போனை காதுக்கு கொடுக்க,

“டேய், பிரபா இன்னும் பத்துநிமிஷத்தில நீ உன் வீட்ல இருக்கனும். நான் உன் வீட்டுக்குத்தான் போய்ட்டு இருக்கேன். உன் பொண்டாட்டி உயிரோட வேணும்னா ஒழுங்கா சீக்கிரமா வந்துசேரு…” என உறுமிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டான்.

“நந்தினி உயிருக்கு ஆபத்தா?…” என உணர்வற்று நின்றான் உதயா.

Advertisement