Advertisement

நட்சத்திர விழிகள் – 25 (1)

பத்திரகாளியாக நின்றவளை எப்படி சமாளிக்க என்று பேந்த பேந்த விழித்தான் உதயா. சமாதனம் செய்ய வாயெடுத்தவனை,

“என்னால ஊருக்கு வரவே முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ. பெருமையா மறுவீட்டுக்கு அழைச்சிட்டு போய் அங்க உள்ளவங்களுக்கு நம்மை காமிக்கறதோட எல்லாம் முடிஞ்சதா?. என்ன நினச்சிட்டு இருக்க நீ?…” என்று பொரிந்து தள்ளினாள்.

“மறுவீடுன்னா என்ன? ஊருக்கு போய்ட்டு மாப்பிள்ளை கெத்து காமிச்சு வயிறுமுட்ட விருந்து சாப்பிடறது மட்டும்னு நினைச்சியா?.. அந்த ஊர்க்காரங்க எல்லோரும் ஒவ்வொருத்தரா நமக்கு முதல் எப்போ கல்யாணம் ஆச்சு, எப்படி, என்னனு, அவங்க நாக்குன்ற தேள்கொடுக்கால வளைச்சு வளைச்சு நம்மை கேள்வி கேட்டு கொட்டுவாங்க பாரு. அந்த கேள்வி ஒண்ணொண்ணும் எப்படிப்பட்ட வலியை கொடுக்கும்னு உனக்கு தெரியுமா?…”

“அவங்க கிட்ட பதில் சொல்லமுடியாம நான் தவிச்சுப்போய் நிக்கிறதை பார்க்கிறதுதான் உன்னோட ஆசையா?…” என ஆத்திரமாக பேசியவளை பார்த்தவன் இப்போதைக்கு எது பேசினாலும் அது சண்டையில் தான் முடியும் என்பதால்,

“நந்து இப்போ எதுவும் பேச வேண்டாம்டா. நைட் பேசிக்கலாம்…” என்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து நந்தினி தடுப்பதற்குள் தப்பித்தோம் பிழைத்தோமென அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

அடுத்த இரண்டுநாட்களுக்குள் நந்தினியை பேசி பேசியே கரையாய் கரைத்து மீனாட்சிபுரத்திற்கு அழைத்துவந்து விட்டான்.

காரில் வந்து இறங்கிய உதயா நந்தினியை அந்த ஊரே வியப்பாக பார்த்தது. பார்த்ததோடு இல்லாமல் தங்களுக்குள் ஏதோ முணுமுணுக்க அதை பார்த்த நந்தினி தன் கணவனை முடிந்தமட்டும் முறைத்தாள்.

ஆரத்தி தட்டோடு வாசலுக்கு வந்த தன் குடும்பத்தார் அனைவரையும் பார்த்தவுடன் சடுதியில் மென்மையான சின்ன சிரிப்பை முகத்தில் பூசிக்கொண்டு தன்னை நெருங்கி நின்றவளை விசித்திரமாக பார்த்தான் உதயா.

“இவளால் எப்படி இப்படியெல்லாம் இருக்கமுடியுது?…” என ஆச்சர்யப்பட்டு போய் நின்றவனை விஜிதான் நனவுலகத்திற்கு திருப்பினான்.

நந்தினி தன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த அந்த நிமிடம் அங்கே தான் பட்ட வேதனைகளும், வலிகளும் வரிசையாக படையெடுத்து மனதில் உள்ள ரணத்தை மேலும் கீறிவிட்டு வலியை அதிகப்படுத்தியது. ஆனால் அதை வெளிகாண்பித்துக்கொள்ளாமல் சிரித்தமுகமாகவே இருந்தாள்.

அங்கே ஏகபோக கவனிப்புதான் உதயாவிற்கு. தன்னை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியவர்களை பார்த்து அகமகிழ்ந்து போயிருந்தவனை பார்த்தவள், “ஓவரா பாசத்தை பொழியாதீங்க. இவங்கதான் இரண்டரை வருஷமா உன்னை கரிச்சுக்கொட்டினாங்க. ஞாபகம் இருக்கட்டும்…” என்று வார்த்தைகளை கடித்து துப்பினாள். அதை அவன் சட்டைபண்ணாமல் இருந்தது மேலும் கோபத்தை தூண்டியது.

இவர்களின் ஆர்ப்பரிப்பு எதிலும் கலந்துகொள்ளாமல் அமைதியாகவே இருந்த நந்தினியின் மௌனம் இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது பூதாகாரமாக தெரிந்தது அவளின் குடும்பத்தாருக்கு.

எப்போதும் சலசலத்துக்கொண்டும் வம்பு வளர்த்துகொண்டும் உலா வரும் தங்களின் பழைய மித்ராவை பார்க்கமாட்டோமா என்று ஏங்கத்தான் செய்தது அவர்களின் உள்ளம். ஆனால் அதை வெளிப்படையாக நந்தினியிடம் கூற குற்றவுணர்வு தடுத்தது.

ஏழுமலையின் ஏக்கம் தேங்கிய முகத்தை பார்த்த கோசலை கூட மறைமுகமாக சொல்லிப்பார்த்தார். “ஏண்டா மித்தும்மா உனக்கு இந்த அமைதி? எப்போவும் போல நீ இருடா…” என கெஞ்சலாக கேட்க அவளோ புன்னகை மாறா முகத்தோடு,

“நான் எப்பவும் போலதான் அத்தை இருக்கேன். இரண்டரை வருஷமா நான் எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கேன். அதுல என்ன தப்பு? இத்தனை நாள் உறுத்தாத விஷயம் இப்போ மட்டும் தெரியுதோ?… விடுங்கத்தை…” என அசால்டாக சொல்லிவிட்டு உதயாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றுவிட்டாள்.

அங்கிருந்த அனைவருக்குமே அந்த பதில் சாட்டையடியாக இருந்தது. எந்த அளவிற்கு அவளது மனம் வருந்தியிருந்தால் இப்படி பேசுவாள். தாங்களாக உருவாக்கிகொண்டதுதானே?.. எப்படியும் நந்தினியின் மனம் மாறும். அதுவரை பொறுத்திருக்கலாம் என நினைத்துகொண்டனர்.

கோவிலுக்கு வந்து சாமிக்கும்பிட்டு முடித்ததும் பிரகாரத்தின் ஒரு மூலையில் அமர உதயாதான் பேச்சை ஆரம்பித்தான்.

“உங்க வீட்ல எல்லோரும் எவ்வளோ வருத்தப்படறாங்க. இன்னும் ஏன் அவங்களை தள்ளியே வச்சிருக்க நந்து?… நீ பேசற தான். அதுல பாசம் இருக்கே தவிர ஒரு உரிமை, அந்நியோனியம் இல்லை. அவங்க கூட பழையமாதிரி பேசறதுல என்னடா கஷ்டம் உனக்கு?. எனக்கே தெரியுது உன்னோட ஒட்டாத பேச்சு…” என்று தன்மையாக கேட்டவனை முறைத்தாள் நந்தினி.

“என்ன முறைக்க?.. அன்னைக்கு நம்ம வீட்டுக்கு எல்லோரும் வந்தப்போ மட்டும் உன் அப்பாவை கட்டிப்பிடிச்சிட்டு அழுதியே?…”

“ஆமா, அழுதேன். புதுசா புகுந்த வீட்டுக்கு வந்த ஒரு பொண்ணு ரொம்ப நாள் கழிச்சி பிறந்த வீட்டு மனுஷங்க வந்ததும் பாசத்தில அழத்தான் செய்வா. அதுவும் நான் இந்த ஊரை விட்டு வந்த விதம் வேற. எங்க என்னை பெத்தவங்களை பார்க்காமலே இருந்திருவேனோன்னு அழுதேன். போன்ல விஜிக்கிட்ட பேசினதும் அப்படித்தான். மண்டபத்தில் என்னால எங்கப்பாக்கு அவமரியாதை ஆகிடுச்சேன்னு தான் பேசனும்னு சொல்லி அழுதேன்….”

“அதுக்காக நான் பட்ட எல்லா கஷ்டங்களும், வேதனைகளும்  இல்லைன்னு ஆகிடாதே? என்னை அவங்க பேசினது எல்லாம் மறைஞ்சிடாதே. உடனே என்னால எதையுமே மறக்கமுடியாது. கொஞ்சம் அவகாசம் வேணுமே? முயற்சி பன்றேன். ப்ச் அதை விடு. இது என்னனு பாரேன்…” என உதயாவின் கையில் திணித்த மஞ்சள் கிழங்கு கட்டிய மங்கலநாணை பார்த்தவனுக்கு முதல் நொடி புரியவில்லை என்றாலும் அடுத்த ஷணம் உணர்ந்தான்.

அது தான் நந்தினிக்கு கட்டிய தாலி என்று. இன்று வரை இதை பத்திரமாக வைத்திருக்கிறாள் என்றால் இது என்ன மாதிரியான அன்பு, எதிர்பார்ப்பு? அவனுக்கு பேச்சே எழவில்லை. அமைதியாகவே இருந்தான் ஏனோ கண்கள் கலங்குவதை தடுக்கமுடியவில்லை. அவனது விழிகளில் நிறைந்த கண்ணீர் துளிகள் அந்த மஞ்சளில் பட்டு மினுமினுத்தது. அவனது உணர்வை புரிந்தவள் போல கரங்களை அழுத்திக்கொடுத்தாள்.

“என்ன நந்தினி, உன் வீட்டுக்காரர் கூட கோவிலுக்கு வந்திருக்க போல?. என்னையெல்லாம் அறிமுகப்படுத்தி வைக்க மாட்டியா?…” என நக்கலுடன் ஒலித்த நிர்மலாவின் குரலில் இருவரது மோனநிலை கலைந்தது.

அவளது கேலி புரிந்தாலும் அப்போதிருந்த மனநிலையில் பதில் பேச தோன்றாமல், “இவங்க நம்ம வீட்டுக்கு பக்கத்து வீடு, பேர் நிர்மலா…” என்று உதயாவிடம் கூறவுமே அவனுக்கு புரிந்தது மகிமா சொன்ன நிர்மலா இவள் தான் என்று.

“ஓ!!…” என்று மட்டும் சொன்னவன், “வா நாம கிளம்பலாம். வந்து ரொம்ப நேரம் ஆச்சு…” என நந்தினியை அழைத்துக்கொண்டு நிர்மலாவை சட்டைசெய்யாமல் போக அது நிர்மலாவிற்கு பெருத்த அவமானமாக போயிற்று. அதற்கு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என எண்ணி,

“ம்க்கும், நான் கூட உன்னை என்னவோ நினச்சேன் நீ ரொம்ப சின்னப்பிள்ளைன்னு. யாருக்கிட்டயும் சொல்லாம செலவே இல்லாம இந்த மனஷனை கல்யாணம் செய்து அங்க எப்ப என்ன பிரச்சனை நடந்ததோ? இவரை கழட்டி விட்டுட்டு நல்லா வசதியான புது மாப்பிள்ளை தேடிக்கிட்ட. உன் சாமர்த்தியம் சுட்டுப்போட்டாலும் யாருக்குமே வராதும்மா…” என்று குத்தலாக பேசினாள்.

“ஏய்…” என்று விரலை நீட்டி அவளை உதயா எச்சரித்த நேரம் நந்தினி தன் வலது கரத்தை நிர்மலாவின் கன்னத்தில் இறக்கியிருந்தாள்.

“ஏய் என்னையே அடிச்சிட்டியா நீ?…” என கோவமாக பார்த்தவளை, “ஆமாம் நிர்மலா, உன்னைத்தான் அடிச்சேன். அதுல சந்தேகம்னா சொல்லு இன்னொரு கன்னத்திலும் அறைஞ்சு புரியவைக்கிறேன்…” என்ற நந்தினியை பார்த்து பயந்தவள் இரண்டடி பின்வாங்கி நின்றாள்.

“என்ன நிர்மலா அப்படி பார்க்கற? உன் பேரை சொல்லிட்டேன்னு இந்த முறை முறைக்கிற? என்னைப்பத்தி தெரிஞ்சும் இந்த கேள்வியை கேட்க உனக்கு எவ்வளோ தைரியம்? கன்னம் பழுத்துடும் ஜாக்கிரதை. என்னை பத்தியும் என் ஒழுக்கத்தை பத்தியும் பேச உனக்கு கொஞ்சம் கூட அருகதை கிடையாது. மீறி பேசின அசிங்கப்பட்டு போவ சொல்லிட்டேன்…” என்று கண்களில் அனல் பறக்க பேசியவளை பார்த்து மிரண்டாள் நிர்மலா.

“அடுத்தவங்க வீட்டு கதை பேசி அதை திரிச்சு ஊர்முழுக்க பரப்பி மத்தவங்க வேதனையிலும், வலியிலும் குளிர்காயிற உன்னை போன்ற ஜென்மங்களுக்கு என்னை பத்தி பேச தகுதியே கிடையாது. உன் பொறுக்கி புருஷனை அடக்கிவைக்க தெரியலை. நீயெல்லாம் என்னை பத்தி பேசவந்துட்ட. ஒழுங்கா இதோட நிறுத்திடு. இல்லை என் அப்பாக்கிட்ட சொல்லவேண்டியது வரும். ஏற்கனவே அவர் உன்மேல கொலைவெறில இருக்காரு…”

எப்போதுமே தன்னை மதிக்காமல் வெட்டிவிடுவது போல பட்டென்று பேசிவிடும் நந்தினியை நிர்மலாவிற்கு பிடிக்கவே செய்யாது. இப்போது நந்தினி நிலை தான் கேலி செய்வதற்கு ஏதுவாக இருப்பதாக எண்ணிக்கொண்டு அவளை சீண்ட அதில் தானே மாட்டவும் தன்னை அறைந்ததோடு நில்லாமல் ஏழுமலையிடம் சொல்லுவேன் என்ற மிரட்டலையும் கேட்டு பயத்தில் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.

“ம்ம். விஷ்ணு சொன்னது சரிதான் ஜான்சிராணி. சரியான லேடி கேடி நீ. என்னா அறை. என் காதுல கொய்ங்ன்னு கேட்குது இன்னமும்…” என கிண்டல் செய்தவனை முறைத்தவள்,

“போதும், போதும். வீட்டுக்கு கிளம்பலாம். ஊர்ல ஆயிரம் வேலை வச்சுக்கிட்டு இங்க வெட்டிப்பேச்சு…” என அவனையும் வாரிவிட்டே வீடு வந்து சேர்ந்தாள்.

இரண்டுநாளாவது தங்கிச்செல்லுமாறு கேட்ட ஏழுமலையிடம் கெளரி திருமணம் முடியவும் ஒரு வாரம் வந்து தங்குவதாக வாக்களித்து விட்டே அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். சந்திராவிற்கு தான் நந்தினியை உடனே அனுப்ப மனசே இல்லை. கெளரி கல்யாணத்திற்கு அவசியம் வரவேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டு தான் கிளம்பினார்கள்.

ரவி, மகிமாவோடு அவளது பெற்றோர் வீட்டில் இருப்பதனால் அவனை பார்க்காமலேயே சென்றுவிட்டனர். கிளம்பும் போது தங்களால் முடிந்த அளவிற்கு நந்தினிக்கு நிறைவாகவே சீர்வரிசை செய்து அனுப்பி வைத்தனர். அதை பார்த்த வேணிக்கு முகத்தில் ஈயாடவில்லை. நாச்சிக்கு பெருமை பிடிபடவில்லை.

குறிஞ்சியூர் வந்ததிலிருந்து உதயா கல்யாண வேலைகளுக்கிடையில் நந்தினியையும் கவனமாக பார்த்துகொண்டான். மேலே படிக்க வைக்கிறேன் என்று சொன்னதற்கு ஒரேடியாக மறுத்தவளின் பிடிவாத குணம் அறிந்து வேறு வகையில் திசைதிருப்பினான்.

தங்களின் கார்மெண்ட்ஸில் வேலை பார்க்கும் டிஸைனர் லேகாவிடம் பழகவிட்டவன் அவளே ஆர்வம் வந்து வரையும் அளவிற்கு அவளை உருவாக்கவேண்டும் என்று லேகாவிடம் கேட்டுக்கொண்டான். லேகாவும் உதயாவின் திட்டத்திற்கிணங்க கொஞ்சம் கொஞ்சமாக நந்தினியின் மனநிலையை மாற்ற ஆரம்பித்தார்.

அந்த அவளது ஓவியத்திறன், எம்ப்ராயிடரிங் என அனைத்தையும் உதயாவின் தொழிலுக்கு பயன்படுத்தும் படி லேகா கூறவும் மறுக்கமுடியாமல் கொஞ்சம் நேர்த்தியாக தனக்கு தோன்றும் டிஸைன்களை வரைந்து கொடுக்க ஆரம்பித்தாள். அதில் பல டிஸைன்கள் தவிர்க்ககூடியதாகவும், சில டிஸைன்ஸ் ஏற்றுக்கொள்ள கூடியாதாகவும் இருந்தது.

ஆரம்பத்தில் அவர்கள் சொன்னதற்காக வரைந்து கொடுக்க ஆரம்பித்தவள் பின் தானே முழுமனதோடு விருப்பத்தோடு செயலில் இறங்கினாள். அவளுக்கே தெரியாமல் அவளை மெருகேற்றி கொண்டிருந்தான் அவள் கணவன்.

அவள் பாதையிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக அவனது தொழிலிலும் அவளை ஒரு அங்கமாக்க அவன் எடுத்த முயற்சிகளில் சிறு வெளிச்சம் பரவ தொடங்கியது.

அவனது ஒவ்வொரு செயலும், தன் மீதான அளப்பறியா காதலும் உதயா மீதிருந்த அவளின் மனக்கிலேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்துகொண்டிருந்தது.

தன்னை மாற்றும் அவனது முயற்சிகள் புரியாமல் இல்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனின் கரம் பிடித்து அவன் கூட்டிசென்ற பாதையில் விருப்பத்தோடு தன் கால் தடங்களை பதித்தாள்.

கௌரியின் திருமணத்திற்கு இன்னும் ஒருவாரமே இருக்கயில் அன்று முகூர்த்தக்கால் ஊற்றிய பின் வீட்டில் செய்த ஸ்வீட்ஸ்களை வாங்கிக்கொண்டு கௌரியை பார்க்க வந்தான் விஷ்ணு. கெளரி வீட்டிலும் அன்றுதான் முகூர்த்தக்கால் ஊன்றியிருந்தனர்.

வயலிலிருந்து வீட்டிற்கு சாப்பாட்டிற்கென அரிசி மூட்டை கொண்டு  வந்து இறக்கினார்கள். வாசலிலேயே விஷ்ணுவை பார்த்துவிட்ட கெளரியின் மூளை வேகவேகமாக சிந்தித்தது. மூட்டையை அங்கேயே வைக்க சொல்லிவிட்டு அவர்களை உடனடியாக அனுப்பிவிட்டவள் விஷ்ணு நெருங்கும் போது வேண்டுமென்றே கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்.

அவள் எதிர்பார்த்தது போல, “என்னடா சவுரி செல்லம்? இப்படி மாமனுக்காக வாசல்லையே காத்திட்டு இருக்க? ஸ்வீட்ஸ் குடுத்திட்டு வர சொன்னாங்க அம்மா. நான் வருவேன்னு உனக்கு தெரியுமா?…” என ஆசையாக கேட்டவனை பார்த்து,

“அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்களேன் ப்ளீஸ். இந்த அரிசி மூட்டையை தூக்கிட்டு வந்து கொஞ்சம் கிட்சன்ல இறக்கி வையுங்களேன்…” என அப்பாவியாக கேட்டாள்.

தன்னை வம்பிழுக்கிறாளோ என அவளை சந்தேகமாக பார்த்தவன் அவளின் முகத்தில் எந்தவிதமான கள்ளத்தனமும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கையில் இருந்ததை கௌரியிடம் கொடுத்துவிட்டு மூட்டையை தூக்கினான்.

அவனால் ஐந்து நிமிடத்திற்கு மேல் அதை தூக்கிகொண்டு வரமுடியவில்லை. இறக்கிவைத்துவிட்டு, “முடியலைடா…” என்று மூச்சிரைக்க பரிதாபமாக சொல்ல,

“உங்களால இந்த இருபத்தைந்து கிலோ அரிசி மூட்டையையே தூக்க முடியலை. இதுல என்னை தூக்கிட்டு போவீங்களாக்கும்? எதுக்கு உங்களுக்கு வீண் ஜம்பமும், வெட்டிப்பேச்சும். போங்க பாஸ் போய் ஒரு பஞ்சுமூட்டையாவது தூக்க முடியுதான்னு பாருங்க. என்னா பார்வை? இந்த முறைப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. போங்க போங்க…” என நக்கலாக கூறி விஷ்ணுவை சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்தாள் கெளரி.

“ஏய் என்ன லந்தா?. தூக்கிக்காட்டறேன் பாரு உன்னை?…” என விஷ்ணு எகிற, “ஆமான்னா என்ன செய்வீங்க?. முடிஞ்சா பார்த்துக்கோங்க…” என்று கேட்டவள் பாக்கியத்தின் குரலில் உள்ளே சென்று மறைந்தாள்.

இது அவ்வப்போது நடப்பதுதான். விஷ்ணுவை எப்போது பார்த்தாலும் வாரிக்கொண்டே இருந்தாள் கெளரி. இன்றும் அதுபோலவே பேசி வம்பிழுக்கவும்,

“டேய் விஷ்ணு, விடாத கல்யாணத்துக்குள்ள அவளை தூக்கி உன்னால எதுவும் முடியும்ன்னு நிரூபிச்சிடு, இல்லைனா கல்யாணத்துக்கு பின்னால இதை சொல்லியே உன் தலையில மிளகாய் அரைச்சிடுவா…” மனதிற்குள் கௌரியை தூக்குவது என்று உறுதி எடுத்துக்கொண்டான்.

ஏழுமலை வீட்டினருக்கும், நேசமணி குடும்பத்தினருக்கும் கிருஷ்ணமூர்த்தி, பாக்கியம், சுதர்சனம் மூவரும் நேரில் சென்று சம்பந்தி முறைப்படி திருமணப்பத்திரிக்கை வைத்துவிட்டு வந்தனர். குடும்பத்தோடு முன்பே வந்துவிடுமாறு வலியுறுத்திவிட்டே வந்தனர்.

கல்யாணவீடு மூன்று நாளைக்கு முன்பே களைகட்டத்தொடங்கியது. சொந்தபந்தங்கள் அனைத்தும் ஒன்றுகூட அங்கே மகிழ்ச்சியும் ஆராவாரமும் பொங்கி ததும்பியது. நந்தினியின் குடும்பத்தினர் கூட திருமணத்திற்கு முதல்நாளே வந்துவிட்டனர்.

முதல்நாள் பெண் அழைப்பு வரை அனைத்துமே சரியாக போய்க்கொண்டிருந்தது. நந்தினிக்கு உதயாவோடு பேசக்கூட நேரமில்லாமல் அலைச்சல் வாட்டி வதைத்தது. அந்த வீட்டின் மருமகளாக அனைத்து பொறுப்புக்களும் நந்தினியிடம் ஒப்படைத்தனர்.

வேணிக்கு தன் மகள் திருமணம் இவ்வளவு சிறப்பாக நடக்கிறதே என்று சந்தோஷத்தில் பெருமை தாளாமல் வந்தவர்களிடம் கௌரியின் அழகை பற்றி சொல்லிச்சொல்லியே மாய்ந்து போனார்.

ஆனாலும் அவருக்கு தனக்கு ஒரு பொறுப்பையும் கொடுக்காமல் தன்னை பொம்மை போல டம்மி ஆக்கிவிட்டதாகவும் எண்ணம் வலுக்கவே செய்தது. அனைவரிடமும் நந்தினியை புகழ்வதும் அனைத்திற்கும் நந்தினியையே தேடுவதும் அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அந்த குடும்பமே நந்தினியை சார்ந்து இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை நந்தினியும் உதயாவும் சேர்ந்து உருவாக்குவதாகவே அவர் எண்ணி, வேண்டுமென்றே தன்னை ஒதுக்கிவைப்பதாக நினைத்து ஆத்திரம் கொண்டு திருமணம் முடியட்டும் பின் பார்த்துக்கலாம் என நினைத்துகொண்டார்.

பெண்ணழைப்பு முடிந்து அனைவரும் இரவு விருந்து உண்டுமுடித்து மண்டபத்தில் உறங்கத்தொடங்கினர். நந்தினி வீட்டினரை மண்டபத்தில் தங்க வைப்பது மரியாதையாக இருக்காது என எண்ணிய நாச்சியும் அவர்களை வீட்டிலேயே தங்கச்செய்துவிட்டு கௌரிக்கு துணையாக பாக்கியத்தை இருக்க வைத்துவிட்டார்.

மற்றவர்களை கவனிக்க வீட்டு ஆளுங்க இருக்கவேண்டும் என்ற மூர்த்தியின் யோசனைப்படி வேணியும், சுதர்சனமும் கூட மண்டபத்திலேயே தாங்கிக்கொண்டனர்.

ஏழுமலை வீட்டினருக்கு சகல வசதிகளையும் செய்துகொடுத்துவிட்டு நந்தினியும், உதயாவும் அவர்களோடு வீட்டில் தங்க நாச்சியும் உடன் வந்துவிட்டார். அன்றைய அலுப்பிலும் அசதியிலும் போல அனைவரும் ஆழ்ந்து உறங்க, மண்டபத்தில் கெளரி மட்டும் தூக்கம் வராமல் தவித்துகொண்டிருந்தாள்.

விஷ்ணுவின் கோவமான முகமே மனதில் வந்து வந்து போனது. முகூர்த்தக்கால் ஊன்றிய அன்று வந்து வாங்கிக்கட்டிக்கொண்டு போனவன் அதன் பின் வீட்டிற்கே வரவில்லை. இன்று பார்த்தும் பாராமுகத்தோடு இருந்ததோடு இல்லாமல் சிலநேரங்களில் முறைத்துகொண்டும் நின்றான்.

புரண்டு புரண்டு படுத்தவள் பாக்கியத்தை திரும்பி பார்க்க அவரோ அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். மெல்ல உறக்கத்திற்குள் செல்ல ஆரம்பித்தவளை கதவு தட்டும் ஓசை விழிக்கச்செய்தது.

இந்நேரம் யாராக இருக்கும் என்று யோசிக்காமல், நம் மண்டபத்திற்குள் குடும்பத்தினரை தவிர வேறு யார் வரப்போகிறார்கள் என்ற அலச்சியத்தில் கதவை திறந்தவளின் நொடியில் நாசியில் மயக்கமருந்து தெளிக்கப்பட்ட கர்ச்சீப் கொண்டு முரட்டுக்கரங்களால் அழுத்தப்பட்டது.

சடுதியில் மயக்கத்திற்கு சென்றவளை தூக்கி தோளில் போட்டவன் யார் கண்ணிலும் ஒரு ஓரத்தில் கையில் கொண்டுவந்திருந்த சாக்குமூட்டையில் கௌரியை திணித்து அடைத்து மீண்டும் தோளில் போட்டுக்கொண்டு வேகமாக மண்டபத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தான்.

வேக வேகமாக அந்த தெருவை கடக்க முயல அங்கே ஒருவன், “ஏய் யாருப்பா அது?. இந்நேரம் எங்க இருந்து வர?…” என சத்தமாக குரல் எழுப்பிக்கொண்டே அருகில் வர வெலவெலத்துப்போனான்.

அவன் நெருங்குவதற்குள் ஓட்டம் பிடித்தான் விஷ்ணு. விஷ்ணு பதட்டமாக ஓடுவதை பார்த்தவன், “டேய், களவாணிப்பயலா நீயி?…” என கேட்டுக்கொண்டே, “டேய் யாராவது ஓடிவாங்க திருடன் திருடன்…” என கூப்பாடு போட்டபடி ஊரைக்கூட்டிக்கொண்டே விஷ்ணுவை விரட்ட ஆரம்பித்தான்.

“அய்யய்யோ விஷ்ணு இப்படி வசமா சிக்கிட்டியேடா? உசுர காப்பாத்த தப்புச்சு ஓடிடு. நல்ல வேலை மாறுவேஷத்தில வந்த. புத்திச்சலிட்டா நீயி. உன் ப்ரைனை ஒபாமா கடனா கேட்டா கூட குடுத்திடாத…” என தன்னை தானே மெச்சிக்கொண்டு மூச்சிரைக்க ஓட அதற்குள் ஓலமிட்டவனின் குரலில் சிலபேர் ஓன்று கூடி விஷ்ணுவை துரத்த ஆரம்பித்தனர்.

“அப்போவே சொன்னாளே கேட்டியாடா நீ?.. இந்த கனம் கனக்குறாளே, இவ சாப்பிடற அரிசியதானே நானும் சாப்பிடறேன். நான் மட்டும் எப்படி காத்தா இருக்கேன். இப்படி ஒரு பிரச்சனைனா ஆத்திர அவசரத்துக்கு பொசுக்குன்னு தூக்கிட்டு ஓடமுடியுதா நம்மால? இதைத்தான் சொல்லுறாங்க போல பொண்டாட்டி சுமைன்னு. என்னா கனம்?…” என தனக்குள் புலம்பிக்கொண்டே என்னதான் சுத்தினாலும் மாற்றி மாற்றி ஒரே இடத்தில் சுத்திட்டு இருக்கிறதை போலவே தான் இருந்தது.

Advertisement