Advertisement

நட்சத்திர விழிகள் – 21 (1)

 ஏழுமலையின் மிரட்டலில் அதிர்ந்தது நந்தினி மட்டுமல்ல, அவளது குடும்பமும் தான்.

பெற்ற மகளின் இக்கட்டான நிலைமையை கண்டு சந்திரா மனதிற்குள்ளேயே அரற்றினார். கணவரது செயலில் அவருக்கு உடன்பாடில்லைதான். அதை அவரது முகத்தில் கூட காண்பிக்க முடியாத தன் துயரநிலையை வெளியே யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அமிழ்த்திக்கொண்டார்.

“அப்பா, ஏன்ப்பா இப்படியெல்லாம் பேசறீங்க? நான் என்ன சொல்ல வரேன்னு…” என நந்தினி முடிக்கும் முன்னாலே,

“ஓ எனக்கே நீ புத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டியா? அந்த அளவுக்கு உனக்கு திமிர் கூடிருச்சு அப்படித்தானே?…” என கூறியவருக்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தவளிடம்,

“வளவளன்னு பேசாத. என்னோட முடிவை மாத்த மாட்டேன். நான் சொன்னதை செய்ய முடியுமா முடியாதா?…” என்ற மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றார்.

“அப்பா நீங்களாவது சொல்லகூடாதா? பாவம்ப்பா நம்ம மித்ரா…” என்று தன்னிடம் இறைஞ்சிய தன் மகனை பார்த்த நேசமணி தன்னால் இதில் செய்யக்கூடியது ஒன்றுமில்லை என்பது போல மறுப்பாக வேதனையோடு தலையசைத்து தன்னோடு அணைத்துக்கொண்டார். 

தன் மகளின் மனதை தன் கூரிய வார்த்தைகளாலும், பிடிவாதத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று அவளின் உணர்வுகளுக்கு சமாதி எழுப்பிக்கொண்டு இருக்கிறோம் என்பதை உணராமல் இறுக்கமாக நின்றார் ஏழுமலை.

அவரது விழிகளில் ஒரு துளி அன்பாவது இருக்குமா என்று தேடி தேடி சோர்ந்துபோனாள் நந்தினி. மறுத்து மேலும் பேச எத்தனிக்க ஏழுமலை தன் கண்களை நன்கு அகற்றி விரித்து பயங்கரமாக முறைத்தார்.

அதில் வார்த்தைகள் தடைபட்டு போகவும் தன் இயலாமையால் செய்வதறியாது கைகளால் முகத்தை மூடிகொண்டு ஓவென கதறி தீர்த்தாள். கோசலை நந்தினியின் ஆற்றாது அழுத ஓலத்தை காண முடியாமல் இழுத்து மார்போடு அணைத்துகொண்டவர்,

“இரக்கமில்லாத அப்பனுக்கு மகளா பிறந்து தொலைச்சிட்டியே?… நீ என்ன அழுதாலும் அவன் கல்லு மாதிரிதாண்டா கண்ணு இருப்பான். இந்த மனசாட்சி இல்லாதவனுக்காக உன் கண்ணீரை ஏண்டாம்மா வீணடிக்கிற?…” என்று நந்தினியின் கண்களிலிருந்து வழிந்த நீரை துடைத்துக்கொண்டே கூறினார்.

கோசலையின் பேச்சில் அவர் மேல் இருந்த கோவம் இன்னமும் அதிகமாகியது ஏழுமலைக்கு. ஆனாலும் இப்போது எதுவும் பேசவேண்டாமென அமைதியாக நந்தினியையே பார்த்து கொண்டிருந்தார்.

ஒட்டுமொத்த வேதனையையும் தன் ஒளியிழந்த விழிகளில் நிறுத்தியவள், “இதுக்கு பதிலா என்னை கொன்னு போட்டுடலாம்ப்பா நீங்க…” என கூறிக்கொண்டே நடுங்கும் கரங்களால் தன் கழுத்தில் தவழ்ந்த மாங்கல்யத்தை ரணவலியோடு கழட்டியவள் கோசலையின் கையில் கொடுத்து விட்டாள்.

கழட்டி கொடுத்தவுடன் உண்டான உயிர்வலியில் கண்களை நிறைத்த கண்ணீரை சிந்தாமல் மீண்டும் கண்களுக்கும் சேமித்தவள் நெஞ்சை அடைத்து கொண்டு வந்த அழுகையை மென்று முழுங்கினாள்.

நந்தினியின் முகத்தை பார்க்கும் திராணியற்று பூரணியின் தோள்களில்  சாய்ந்து கொண்டு சத்தம் வராமல் கேவினார் சந்திரா.

நினைத்ததை சாதித்து விட்ட பெருமிதத்தில் இருந்தவர் கோசலையின் கண்டனப்பார்வையை கண்டுகொள்ளாமல் அவருக்கு தண்டனை தரவேண்டுமே என நினைத்தார்.

“அக்கா அதான் அவ அந்த கயறை கழட்டி குடுத்துட்டால்ல, அதை போய் கோவில் உண்டியல்லையாவது, இல்லை அங்க வேற எங்கையாவது போட்டுட்டு வா. அதை பார்க்க பார்க்க எனக்கு பத்திக்கிட்டு வருது…” என்றார் ஏழுமலை.

இறுமாப்பில் அதிகாரம் செய்த தன் தம்பியை, “நீயெல்லாம் ஒரு மனுஷனா?…” என்பது போல பார்த்தார் கோசலை.

சட்டென அவரது மனம் ஒரு யோசனைக்குள் தாவியது. உடனே வேனை விட்டு கீழே இறங்கி கோவிலுக்குள் சென்றவர் போன வேகத்தில் திரும்பியும் விட்டார்.

தன் அக்கா கோவிலுக்கு நுழையும் போதிலிருந்து பார்த்துகொண்டிருந்த ஏழுமலை கோசலை மஞ்சள் கயிறை உண்டியலில் போட்டதை கண்ணால் கண்ட பின் தான் நிம்மதியுற்றார்.

கோசலை திரும்பி வரும் போது தன்னையே பார்த்துகொண்டிருந்த ஏழுமலையின் மீதான அவரது கோவம் முகத்தில் தாண்டவமாடியது. அதை ஒருவிதமான திருப்தியோடு பார்த்தார் ஏழுமலை.

“போதும் அழுது கரைஞ்சது. ட்ரைவரை கூப்பிட போறேன். அமைதியா இருங்க எல்லோரும்…” என்று எச்சரித்துவிட்டு போனில் ட்ரைவரை அழைத்தார். ட்ரைவர் வரவும் தங்கள் ஊரை நோக்கி சென்றனர் அனைவரும்.

நந்தினியின் கண்கள் மட்டும் அந்த கோவிலை நிராசையோடு பார்த்தது. தான் என்ன உணர்கிறோம் என்று கூட புரியாமல் தவித்தாள். ஆனால் அவளது தவிப்பும் வேதனையும் முகத்தில் பிரதிபலிக்காதபடி உணர்வற்ற கடினத்தன்மையை ஒட்டவைத்துகொண்டாள்.

இருள் கவிழ்ந்த நேரத்தில் வீடு வந்ததுமே நேராக தன் அறைக்குள் செல்ல இருந்தவளை நிறுத்தி, “எங்க போற? முதல்ல பின்பக்கமா போய் தலைமுழுகிட்டு வா. நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்…” என கடுமையாக கூறிவிட்டு சென்றார்.

அவர் போனதுமே அனைவரும் நந்தினியை கட்டிகொண்டு அழுதனர். அனைவரது கண்ணீரில் கரைய துடித்த உள்ளத்தை கடிவாளமிட்டு நிறுத்தியவள் அவர்களது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பின்பக்கமாக சென்றாள்.

அவளது இந்த அமைதியும், நடவடிக்கையும், இறுக்கமும்  அனைவருக்குமே அதிர்ச்சியை தந்தது. நந்தினியை பின்தொடர்ந்து சென்ற கோசலை,

“மித்ராக்கண்ணு. கொஞ்சம் பொறுடா…” என்று அவளை நிறுத்தியவர் பின்பக்க கதவை அடைத்துவிட்டு வந்தார்.

“எதற்கு இப்படி செய்கிறார்?…” என யோசித்துக்கொண்டே அவரது போக்கு புரியாமல் பார்த்துகொண்டிருந்தாள் நந்தனி.

யாருக்கும் தெரியாமல் முந்தானையில் முடிந்து வைத்திருந்த தாலியை கையில் கொடுத்த கோசலை, “இந்தா மித்தும்மா, பத்தரமா வச்சுக்கோ. உனக்கு சொந்தமானதை உன் கிட்டயே ஒப்படைச்சிட்டேன். நம்பிக்கையை மட்டும் கை விட்டுடாத. இந்த ஜென்மத்துல அந்த தம்பிதான் உன்னோட புருஷன். கண்டிப்பா உன் வாழ்க்கை உன் கையில வந்து சேரும். இது உன்னோட அப்பன் கண்ணுல படாம பார்த்துக்க கண்ணு…” என கூறவும் அவரை கட்டிகொண்டாள் நந்தினி.

“அத்தை…” என கதறியவள் தன் மாங்கல்யத்தை தடவியவள்,

“நான் என்ன தப்பு பண்ணினேன் அத்தை?… தாலியை பத்தியும் அதோட புனிதத்தை பத்தியும் எனக்கு சொல்லிக்குடுத்துட்டு இப்போ இப்படி ஒரு பாவத்தை பண்ணவச்சுட்டாங்களே அத்தை?…” என அழுதுகொண்டே பேசியவள்,

“இதை நான் என் உயிருக்குள்ள வச்சு பார்த்துப்பேன். சத்தியமா அவங்க மேல எனக்கு எந்த விதமான நோக்கமும், எண்ணமும் இல்லைங்க அத்தை. நீங்களாவது புரிஞ்சுக்கோங்க. கல்யாணம் வாழ்க்கையில ஒருமுறைதான்னு நம்பறேன். நான் நம்பறேன் அத்தை. நிச்சயமா அவங்க என்னை தேடி வருவாங்க. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நான் எதுக்காக அழனும்? என்மேல எந்த தப்புமில்லையே? அதனால அழமாட்டேன்…” என கூறிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்துகொண்டாள்.

ஏழுமலை எண்ணியது போல கோசலை உண்டியலில் போட்ட மஞ்சள் கயிறு உதயா நந்தினிக்கு அணிவித்த மாங்கல்யம் அல்ல.

குலதெய்வம் கோவிலில் பூஜை முடிந்து பெண்களுக்கு மஞ்சள் கயிறை கொடுத்த பூசாரியிடம் வேண்டாம் என்று மறுக்க, அவரோ கோவிலில் கொடுப்பதை வேண்டாம் என சொல்லகூடாது என்று கூற பூரணியும், சந்திராவும் சொல்லி வாங்க வைத்துவிட்டனர்.

அதுதான் நந்தினியின் மாங்கல்யத்தை காப்பாற்றிக்கொடுத்தது. ஏழுமலை தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவர் சட்டென இடுப்பில் முடிந்து வைத்திருந்த கயிறை மாற்றி ஏழுமலை பார்க்கும் படி உண்டியலில் போட்டுவிட்டு வந்தார்.

அங்கேயே நின்று சிறிதுநேரம் பார்த்துகொண்டிருந்தவர் ஒரு பெருமூச்சோடு வீட்டினுள் நுழைந்தார் கோசலை. அவரை பார்த்ததுமே வேகமாக எழுந்துவந்த சந்திரா,

“அண்ணி, மித்ரா என்ன சொல்றா அண்ணி? உங்க தம்பி செய்யற அக்கிரமத்தை என்னால தடுக்க முடியலையே? கையாலாகதவளுக்கு பொண்ணா பிறந்ததால என் பொண்ணு என்னவெல்லாம் கஷ்டப்படறா?…” என தன் துக்கத்தை கொட்டியவரை பூரணியும் கோசலையும் அணைத்துக்கொண்டனர்.

“எல்லாம் சீக்கிரமே சரியாகிடும் சந்திரா, அழாதே…” என ஆறுதல் கூற மட்டுமே முடிந்தது கோசலையால்.

வந்ததுமே விஜியை அழைத்துகொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்ட நேசமணி சிறிதுநேரத்திலேயே வந்துவிட்டார். அவரை பின்தொடுத்து,

“என்ன சந்திராக்கா, வந்துட்டீகளா?…” என குரல் கொடுத்துக்கொண்டே வந்தாள் பக்கத்துவீட்டு பெண் நிர்மலா.

அவளது குரலை கேட்டு, “அய்யயோ, ஊர்வம்பு நிர்மலா வராளே? இப்போ என்ன செய்ய?…” என பதறியபடி அவள் நெருங்கி வரும் முன் தங்களின் முகத்தை அழுத்தித்துடைத்துகொண்டு அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போல பாவனை செய்தனர்.

வேகமாக வீட்டின் அடுக்களை பக்கத்தில் வந்துகொண்டிருந்தவளை, “இந்தாம்மா நிர்மலா, இங்க வா, இந்நேரம் என்ன வேணும் உனக்கு?…” என ஏழுமலையின் குரலில் ப்ரேக் அடித்தது போல நின்றுவிட்டாள்.

அவரை பார்த்து வாசலுக்கு வந்தவள் மனதில் பொருமிக்கொண்டே, “ஒன்னுமில்லைங்க அண்ணே, கோவிலுக்கு போய்ட்டு வந்தாச்சான்னு பார்க்க வந்தேன்…” என வழிந்தபடி கூறவும்,

ஒரு கண்டனப்பார்வையை அவள்மீது வீசி, “வந்தாச்சுன்னு தெரியுதுல? அப்புறம் என்ன பார்வை? எல்லோருமே சோர்வா இருக்காங்க. நாளைக்கு பார்க்கலாம். நீ கிளம்பு…” என அவளை விரட்டாத குறையாக விரட்டியடித்தார்.

எப்போவுமே ஏழுமலைக்கும் நிர்மலாவுக்கும் ஆகவே ஆகாது. வீட்டினுள் ஒன்று பேசுவதும் அதை அப்படியே பத்தாக்கி வெளியில் பரப்புவதும் என பண்பான வேலையை செய்யும் நிர்மலாவை அங்கே யாருக்குமே பிடிப்பதில்லை.

பக்கத்துவீட்டு பெண், தானே வந்து பேசுவதால் பட்டும் படாமலும் தான் பேசுவார்கள் ஏழுமலை வீட்டுப்பெண்கள். அதற்கே ஏழுமலையிடம் அவ்வப்போது மண்டகப்படியை பெற்றுகொள்வதும் சந்திரா கோசலைக்கு வாடிக்கையான ஒன்றுதான்.

இன்றும் அதுபோல் வம்பு கிடைக்குமா என துழாவியபடி வந்தவளை வாசலோடு விரட்டிவிட்டார் ஏழுமலை. இரவு உணவை வாங்கி வந்துகொண்டிருந்தவர் கண்ணில் தன் வீட்டின் புறம் நிர்மலா செல்வதை தெருமுனையிலேயே பார்த்து பயந்துவிட்டார்.

அவளை உள்ளே விட்டால் அனைவரது அழுது சிவந்த கண்களையும், வாடிய முகத்தையும் வைத்தே ஒரு கதை புனைந்துவிடுவாள் என்று எண்ணி அவளை தடுத்து அனுப்பவும் தான் அவருக்கு மூச்சே வந்தது.

அவர் எப்போது நிர்மலாவிடம் கோவமாகவே நடந்துகொள்வதால் அவளுக்கும் இவரது பேச்சில் எந்த வித்யாசமும் தெரியவில்லை. அதனால் அமைதியாக சென்றுவிட்டாள். செல்லாமல் அங்கேயே நின்றால் இன்னும் கத்துவார் என பயந்து.

நிர்மலா சென்றதும் உள்ளே வந்தவர், “இந்தா பூரணி எல்லோருக்கும் சாப்பாட்டை எடுத்துவை. நானும் போய் முகம் அலம்பிட்டு வரேன்…” என கையிலிருந்த கவரை கொடுத்துவிட்டு பின்னால் சென்றார்.

சிறிதுநேரத்தில் திரும்பி வந்தவரிடம் யாருமே பேசவில்லை. அவரும் அதை கண்டுகொள்வதாக இல்லை. நந்தினி குளித்துவிட்டு வந்ததை பார்த்தவர் மனதின் ஓரத்தில் சிறு குளுமை பரவியது. ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல்,

“வா, வந்து சாப்பிடு…” என அதட்டும் தொனியில் அழைத்தார். நந்தினியும் மறுப்பே சொல்லாமல் வந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் சாப்பிடவும் தான் அனைவருமே சாப்பாட்டில் கையை வைத்தனர். அதுவரைக்கும் யாருமே அதை தொடவில்லை, ஏழுமலை உட்பட.

“விஜி காயத்தை பத்தி டாக்டர் என்ன சொன்னாங்க மச்சான்?…”என பேச்சை திசைதிருப்பினாலும்,

“ம்ம், சொன்னாங்க, சொன்னாங்க. அங்கேயே ஏதாவது வைத்தியம் பார்த்திருக்கலாம்னு சொன்னாங்க. எல்லாம் உள்காயமாம். மாத்திரை குடுத்திருக்காங்க. அவ்வளோதான்…” என்று நறுக்குதெறித்தது போல எண்ணி எண்ணி வார்த்தைகளை விடுதலை செய்தார் நேசமணி.

அவரது ஒட்டாத பேச்சிலேயே புரிந்துகொண்ட ஏழுமலை அடுத்து எதுவும் பேசாமலேயே சாப்பிட்டார். அவருக்கு தன் மகள் தன் கட்டுப்பாட்டில் தான் வரைந்த கோட்டுக்குள் வந்துவிட்ட ஒரு சந்தோஷம். மற்றவர்கள் எப்படி இருந்தால் என்ன என்று எண்ண வைத்துவிட்டது.

அமைதியை கலைக்கும் பொருட்டு, “அம்மாடி சந்திரா, நான் எங்க வீட்டுக்கு கிளம்பறேன்மா. நாளைக்கு வந்து பார்க்கறேன்…” எனவும்,

“என்னங்கண்ணே நீங்க விஜிக்கு வேற முடியலை. இந்நேரம் புள்ளையை கூட்டிட்டு கிளம்பறேன்னுட்டு பேசறேங்க?…” என படபடத்தார் சந்திரா.

“பக்கத்து தெருதானே, போய்டுவோம்மா. மித்ராவை பக்குவமா பார்த்துக்கோ. நாங்க காலையில வரோம்…” என்றவர் கோசலையிடமும் நந்தினியிடமும் விடைபெற்று விஜி, பூரணியை அழைத்துகொண்டு கிளம்பினார்.

தன்னிடம் சொல்லாமல் சென்றது ஏழுமலைக்கு பெரிய வருத்தமெல்லாம் இல்லை. கோவம் குறைந்தால் தன்னால் தேடிவருவார் என்று நினைத்துகொண்டார்.

கோசலை தன் கணவன் குழந்தைகளை ஒரு விபத்தில் ஒரேசேர பறிகொடுத்துவிட்டதால் ஏழுமலையின் வற்புறுத்தலில் அங்கேதான் சில வருடங்களாக தங்கி இருக்கிறார்.

கோசலை நந்தினியோடு தங்கிக்கொள்ள போவதாக சொல்ல சந்திராவும் அவரோடு சேர்ந்துகொண்டார். அனைவரும் தன்னை தனிமைப்படுத்துவதை புரிந்துகொண்டாலும் அதை கண்டுகொள்ளாமல் இருக்க தன்னை தயார்படுத்திக்கொண்டார்.

எங்கே மனைவி, மகள் பேச்சை கேட்டு அவர்களின் அன்பால் தான் பலவீனமாகிவிடுவோமோ என எண்ணி தன்னையே தனிமைக்கு இரையாக்கினார். விரைவில் அனைத்தும் மாறும் என்ற நம்பிக்கையோடு.

அடுத்துவந்த நாட்களிலும் அனைவரும் இப்படியே தேவைக்கு மட்டும் பேசி மற்றவற்றில் மௌனம் காத்தனர் ஏழுமலையிடம்.

ஆனால் நந்தினி யாரும் தன்னை நெருங்காமல் தனக்குத்தானே வட்டம்போட்டுக்கொண்டு அனைவரை விட்டும் ஒதுங்கியே இருந்தாள். அவளின் ஒதுக்கத்தை கூட இவர்களாகவே இப்போதைக்கு அவளுக்கு தனிமைதான் தேவை என்று அப்படியே விட்டுவிட்டனர்.

நந்தினி ஆசைப்பட்ட கல்லூரியில் இடம் கிடைத்த தகவலை கூறியும் அவளை அங்கே சேர்க்க வேண்டிய நேரம் நெருங்கியும் ஏழுமலையின் அமைதி உறுத்த நேசமணி தன் குடும்பத்துடன் ஏழுமலை வீட்டிற்கு வந்தார்.

இப்போது ஏழுமலையின் மேல் உள்ள கோவமும் வருத்தமும் கொஞ்சம் மட்டுப்பட்ட தொடங்கியிருந்தது நேசமணியிடம். அதனால் நந்தினியின் எதிர்காலத்திற்காக பேச வந்தார்.

திண்ணையில் அமர்ந்து பேப்பர் வாசித்துகொண்டிருந்த ஏழுமலை, “அடடே வாங்க மச்சான். சந்திரா இங்க வா. யார் வந்திருக்காங்கன்னு பாரேன்?…” என மனைவியை அழைத்துக்கொண்டே வந்தவர்களை உள்ளே அழைத்துவந்தார்.

“மித்ரா எங்க?…” என விஜி கேட்கவும்,

“இங்க தான் உள்ள இருக்கா, அக்கா அவளை கூப்பிடு…” என கோசலையிடம் கூறிவிட்டு,

“அப்பறம் சொல்லுங்க மச்சான். என்ன விஷயம்?… ஏதோ ஒரு முக்கியமான விஷயத்துக்காக தான் வந்திருக்கீங்கன்னு உங்க முகமே சொல்லுதே?. அதான் கேட்டேன்…” என நேசமணியை ஆழம் பார்த்துக்கொண்டே கேட்டார் ஏழுமலை.

நந்தினியும் விஜியின் குரலில் வெளிவந்து கோசலையின் அருகில் நின்றுகொண்டாள். விஜி அவளின் பக்கத்தில் வந்து மென்குரலில் ஏதோ பேசிகொண்டிருக்க அவளோ வெறுமையான முகத்தோடு எந்தவிதமான பாவங்களும் இல்லாமல் அதற்கு காது கொடுத்துகொண்டிருந்தாள்.

பூரணிக்கோ கை, காலெல்லாம் வெடவெடத்தது. சந்திரா பூரணியின் வியர்த்த முகத்தையே ஆராய்ச்சியோடு பார்த்தவர் என்னவென்று கண்களால் கேட்டார். பூரணி நேசமணியின் கைகளில் இருந்த கவரை காண்பித்தும் சந்திராவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

“இந்தாங்க மாப்ள…” என கவரை நீட்டிய நேசமணியை பார்த்துக்கொண்டே அதை வாங்கி பிரித்துபடித்த ஏழுமலை முகத்தில் ருத்ரம் குடியேற கோவமாக அதை கிழித்தெறிந்தார்.

Advertisement