Advertisement

நட்சத்திர விழிகள் -20 (1)

சிவாவின் போனில் கோசலைக்கு அழைத்து அனைவரையும் கூடிக்கொண்டு கோவிலின் வெளியே வருமாறு கூறினான் விஜி.

கோசலையும், “நந்தினியோடு தான் விஜி வருகிறான், இனி தைரியமாக ஏழுமலையிடம் செல்லலாம், ஆனால் ஏன் வெளியே வர சொல்கிறான்…” என எண்ணிக்கொண்டு லேசான நிம்மதியாக பூரணியோடு கோவிலை அடைந்தார்.

ஏழுமலையிடம் விஷயத்தை கூறவும் நந்தினிக்கு அடியேதும் பட்டுவிட்டதோ அதனால் தான் தங்களை அழைக்கிறானோ என்று நினைத்து அனைவரும் கவலை கொண்டனர்.

வெளியே எங்கே சென்றாலும் எங்காவது விழுந்து வைத்து காயம் உண்டாக்கி கொள்வதே நந்தினிக்கு வாடிக்கை என்பதால் அனைவருமே அப்படிதான் நடந்திருக்கும் என்று நினைத்தனர்.

சிவாவோடு நந்தினி இல்லாமல் விஜி மட்டுமே தனித்து வந்து நின்ற கோலம் அனைவரது மனதிலும் பீதியை உண்டாக்கியது. கலக்கத்தோடு அவனை பார்த்தார்கள்.

“விஜி, என்னடா ஆச்சு? ஏன் இப்படி உனக்கு அடிபட்டிருக்கு? நந்தினி எங்கடா?…”என்று பரிதவிப்போடு கேட்ட பூரணியிடம் பதில் கூறாமல் அவரை கட்டிகொண்டு அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கத்தில் வெடித்து அழுதான்.

அவனது அழுகையில் அனைவரது பயமும் அதிகரிக்க ஏழுமலை விஜியை பூரணியிடமிருந்து பிரித்து தன் புறமாக இழுத்து அவனை உலுக்கினார்.

“எங்கடா என் பொண்ணு, அழாம சொல்லித்தொலையேன்…” என்று மிரட்டும் தொனியில் கூறவும் இன்னும் பயந்து விட்டான்.

ஏழுமலையின் முன்னால் வந்த சிவா, “சார் நடந்ததை நான் சொல்றேன். அவனால இப்போ எதுவுமே பேச முடியலை. அந்த அளவிற்கு உடைந்து போய் இருக்கிறான்…” என்றவனை கேள்வியாக பார்த்த ஏழுமலை,

“நீங்க யார்? என்ன ஆச்சு என் பொண்ணுக்கு?… என்று கண்ணீரோடு சிவாவிடம் ஏழுமலை கேட்கவும் சிவா அனைத்தையும் கூறினான். அவன் பேச பேச அவர்களை உயிரோடு தீவைத்து கொளுத்துவது போன்ற ஒரு வேதனை அனைவரின் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது.

“ஐயோ மித்ரா… என்று கதறிய சந்திராவை அனைத்த ஏழுமலை, “என் பொண்ணு போகும் போதே என் பொண்டாட்டி முகத்துல ஒரு சஞ்சலம் இருந்துச்சு. நான்தான் அதை கண்டுக்காம விட்டுட்டேன். நான் மட்டும் அனுப்பாம என்னோடவே வச்சிருந்தா இந்த நிலை அவளுக்கு வந்திருக்குமா?…” என்று கண்ணீர் வடித்தார்.

“நீங்க பதட்டப்படாதீங்க சார். என்னோட ப்ரெண்ட்ஸ் உங்க பொண்ணை எப்படியாவது காப்பாத்திடுவாங்க. கண்டிப்பா உங்க பொண்ணு நல்லபடியா உங்களை வந்து சேருவாங்க…” என்று அவர்களை ஆறுதல் படுத்த முயல,

“மாப்ள, இப்போ பேச நேரமில்லை. வாங்க நம்ம மித்துக்குட்டியை தேடுவோம். தம்பி எங்களுக்கு கொஞ்சம் வழிகாட்டுங்களேன்…” என்று சிவாவையும் கூட அழைத்துகொண்டு ஏழுமலையோடு வேகமாக தோப்பு இருந்த பக்கமாக சென்றார்.

பூரணியும் கோசலையும் தான் மிகவும் துடித்துப்போயினர். தாங்கள் தானே ஏழுமலை மறுக்க மறுக்க மித்ராவை அழைத்துசென்றோம் என்ற குற்ற உணர்வில் குமைந்தவர்களை மேலும் குன்ற செய்தது ஏழுமலை நேசமணியின் பாராமுகமும் ஒதுக்கமும்.

தங்களுக்கு முன்னால் நந்தினியை தேடி சென்றவர்களை பின்தொடர்ந்து தாங்களும் சென்றனர் நந்தினிக்கு எந்த ஒரு துன்பமும் நேர்ந்துவிட்ட கூடாதென்று கடவுளை வேண்டியபடி.

அவர்கள் ஆற்றங்கரைக்கு அருகில் செல்லும் போதே சிவாவின் மொபைலில் விஷ்ணுவின் அழைப்பு வந்து விட்டது. அந்த அழைப்பிற்கு காது கொடுத்தவன் மறுபுறம் உதயாவின் ஆவேசமான பேச்சை கேட்டு ஸ்பீக்கரில் போட்டான். திருவிழாவிற்கென அங்கே போடபட்டிருந்த கடைகளை கடந்து விட்டதால் உதயாவின் பேச்சு சுத்தமாக தெளிவாக கேட்டது.

உதயாவின் குரலில் இருந்த கோவத்தை எந்த அளவிற்கு கவனித்தனரோ அவன் பேசியதன் சாராம்சத்தையும் புரிந்துகொண்டனர். எல்லாம் முடிந்தது. தன் பெண்ணின் வாழ்க்கை அவ்வளவு தானா என்று மனம் வெறுத்தே விட்டனர்.

ஏழுமலை மனமோ நந்தினியை எண்ணி உலைகளமாக கொதித்தது. “அனைத்து தன் பெண்ணால் விளைந்தது தானே, அவள் மட்டும் அமைதியாக தன வேலையை பார்த்துகொண்டு இருந்திருந்தால் இத்தனை வேதனை தங்களை அடைந்திருக்காதே?…” என்று நினைக்க நினைக்க தன் மகளின் மேல் உள்ள பாசத்தில் வெறுப்பு என்ற நெருப்பு சூழ்ந்துகொண்டு உள்ளத்தில் நிறைந்திருந்த அன்பை வெளியேற விடாமல் அடக்கியாண்டது.

இனி நந்தினியை மன்னிக்க ஏழுமலை தயாராக இல்லை. அதோடு இந்த விவகாரத்தை அப்படியே விடவும் மனமில்லை. கோவிலை நோக்கி வேகநடையில் கோவமாக சென்றவரை பார்த்து அஞ்சிய குடும்பத்தினர் அவரை பின் தொடர்ந்து சென்றனர்.

பாதி வழியில் பூசாரியின் அழைப்பு ஏழுமலையின் மொபைலில் வர அதை யோசனையோடு எடுத்தவர் அவர் சொன்ன தகவலில் இன்னமும் இறுகிவிட்டார். பூசாரியை எதுவும் பேசவேண்டாம் என்றும், தாங்கள் அனைவரும் அங்கே வந்து கொண்டிருப்பதாகவும் அதுவரை அமைதியாக இருக்கும் படி கூறிவிட்டார்.

————————————————-

நந்தினியின் கழுத்தில் தாலி கட்டி முடிக்கும் வரைக்கும் தோன்றாத ஒரு விதமான புரியாத உணர்வும், வரையறுக்க இயலாத சிறு பயமும் உருவாகியது உதயாவின் உள்ளத்தில்.

முதல் முதலாக தான் செய்த ஒரு செயலுக்காக தடுமாறி நின்றான். அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற குழப்பத்தில் நிற்கும் போதே கூட்டத்தில் இருந்த மக்களும், ஊர்த்தலைவரும் நொடியில் உதயாவையும் நந்தினியையும் சுற்றி வளைத்து கொண்டனர்.

“ஏய் யார் நீ? எங்க ஊர் கோவில் திருவிழால இத்தனை பேர் கூடி இருக்குற இடத்துல இந்த புள்ளை கழுத்துல பொசுக்குன்னு தாலி கட்டிட்ட?…” என்று மீசையை முறுக்கிக்கொண்டு கேட்டார் ஊர்த்தலைவர்.

முதலில் நந்தினியை சேர்ந்தவர்களோ என்று நினைக்கும் பொழுதில்  அவர் சொன்ன எங்க ஊர் என்ற அடையாளத்தில் அவரை அந்த ஊர்க்காரன் என்று மட்டும் நினைத்த உதயா,

“உங்க ஊர்னா என்ன பெரிய இதுவா? போயா உன் வேலையை பார்த்துட்டு…” என பட்டென பேச அதில் அவமானம் அடைந்தவர் பேச ஆரம்பிக்கும் முன் அங்கிருந்த மற்றொருவன்,

“இந்தாப்பா, இந்த ஊர் பெரிய மனுஷன் இவர். எங்களுக்கெல்லாம் நல்லது கேட்டது எடுத்து சொல்லி தீர்ப்பு வழங்குற தலைவரைப்போய் வாய்க்கு வந்த படி பேசாத…” என கண்டித்து சொன்னான்.

விஜி சொன்ன தலைவர் இவர்தான் என்று நொடியில் புரிந்து போனது. உதயாவிற்குள் அதுவரை மட்டுப்படிருந்த கோவம் சுறுசுறுவென ஏற கண்டித்தவனை விடுத்து ஊர்த்தலைவரை கூர்மையாக பார்த்தவன்,

“வாய்யா பெரிய மனுஷா, இந்த லட்சணத்துலதான் நீ இந்த ஊருக்கு தீர்ப்பு சொல்லிட்டு இருக்கியா?…” என கோவமாக கேட்டான். அதில் திடுக்கிட்ட அவர்,

“தம்பி, மரியாதையாக பேசுப்பா. நான் இந்த ஊர்த்தலைவர். ஞாபகத்தில வச்சு பேசு…” என்று இறுமாப்பு குறையாமல் திமிராக தன்னை அறிமுகபடுத்திக்கொண்டார்.

“அடச்சீ, நீயெல்லாம் ஒரு மனுஷன், உனக்கு ஊர்த்தலைவர் பதவி ஒரு கேடா?…” என ஆங்காரமாக உருமிய உதயாவை எங்கே கோவத்தில் அடித்துவிடுவானோ என்ற அச்சத்தோடு மெல்ல பின்னால் தள்ளி நின்று பார்த்தார் அவர்.

மீண்டும் கூட்டத்தில் இருந்து ஒருவன், “இதோ பாருப்பா, நீ ஒரு பொண்ணை இழுத்துட்டு வந்து தாலிகட்டுவ?… அதை தட்டிக்கேட்ட எங்க ஊர்த்தலைவரை கண்டபடி பேசுவ?… அதை பார்த்திட்டு நாங்க அமைதியா இருக்கனுமா?… இதுபோல அடாவடித்தனம் செஞ்சுட்டு நீ முழுசா ஊர்போய் சேரமுடியாது பார்த்துக்கோ?…” என்று எச்சரிக்கை குரலில் கூறினான்.

அங்கே குழுமியிருந்த ஊர்க்காரர்கள் அனைவரும் உதயாவின் மீது கடும் கோவத்தில் பாய இருந்தனர். அனைவரையும் அஞ்சாமல் பார்த்த உதயா ஒரு நிமிடம் என்ன பேச வேண்டும் என யோசித்து பார்த்து  விஷ்ணுவிற்கு கண் சமிஞ்சை செய்துவிட்டு சட்டென ஆரம்பித்தான்.

“உங்க ஊர்த்தலைவர் செஞ்ச காரியம் இங்க யாருக்காவது தெரியுமா?. எங்க வீட்டு பொண்ணை கடத்த உதவி செஞ்சு எங்க குடும்பத்தையே நிர்மூலமாக்க பார்த்த அவரை வேற எப்படி பேசனும்னு சொல்றீங்க?…” என ஆத்திரமாக கேட்டவன் நந்தினியையும் கைத்தாங்கலாக வைத்துக்கொண்டே தான் பேசினான்.

மற்றவர்கள் பிரச்சனை என்னவாக இருக்கும் என யோசிக்கும் போது, “என்னது உங்க வீட்டு பொண்ணா?. இதை நம்ப சொல்றியா? எத்தனை பேருடா இதையே சொல்லுவீங்க?. நீ இந்த பொண்ணை இழுத்துட்டு வந்து தாலிகட்டிட்டு அதிலிருந்து தப்பிக்க பார்க்கிறாயா?….”என்று கேலியாக கேட்டவரை பார்த்தவன் தன் கட்டுபாட்டை இழந்து,

“யோவ்!!… இன்னும் ஒரு வார்த்தை நீ பேசின அடிச்சு மூஞ்சியை பேத்துருவேன் பார்த்துக்கோ. செய்றதையும் செஞ்சுட்டு எகத்தாளமாவா பேசற? பேச வாயில்லாம பண்ணிடுவேன். ஜாக்கிரதை…” என கைநீட்டி எச்சரிக்கவும் அவமானத்தில் தலைகுனிந்து கப்பென வாயை மூடிக்கொண்டார்.

“யார் என்னனு கூட விசாரிக்காம கண்ணீர் விட்டு கதறின இந்த பொண்ணையும், பையனையும் துள்ளத்துடிக்க அந்த அயோக்கியன் கிட்ட ஒப்படைக்கிறதுக்கு முன்னால அவங்களோட பக்க நியாயத்தை அவங்க என்ன சொல்ல வராங்கன்றதை காது குடுத்து கேட்டீங்களா?…” என்றவனின் கேள்விக்கு உதயா எதை பற்றி பேசுகிறான் என்று அங்கே அறிந்தவர்கள் சிலரில் ஒருவரிடத்தும் பதில் இல்லை.

மற்றவர்கள் புரியாமல் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அங்கிருந்த ஒருவன் மட்டும் மெல்ல, “அவங்க எங்க குலசாமி மேல…” என்று இழுக்கவும் முழு அக்னி பிழம்பாக மாறிவிட்டான்.

“இப்படி சொல்ல உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?…. இப்படி சாமி மேல பழியை போட்டு செஞ்ச பாவத்தில இருந்து தப்பிக்கலாம்னா நினைக்கிறீங்க?… நீங்க எத்தனை திருவிழா எடுத்தாலும் இன்னைக்கு நீங்க பண்ணின பாவத்தால உங்க சாமி கூட இனிமே உங்களை மன்னிக்காது…” என பொரிந்து தள்ளினான்.

அவனது ஆவேசத்தில் விஷ்ணு கூட பயந்துவிட்டான். “பிரபா என்னடா இது? அமைதியா பேசுடா…” என அவனை அமைதியாக்க முயற்சித்தும் அதற்கு பயனில்லை.

“இவ என்னோட மாமா பொண்ணுன்னு, ஊர்ல போறவன் வரவன் எல்லாம் உங்க ஊர் சாமி மேல சத்தியம் செஞ்சா உடனே அந்த பொண்ணை அந்த அயோக்கியன் கிட்ட ஒப்படைச்சிடுவீங்களா?… உங்க ஊர் பொண்ணை நாங்க யாராவது இப்படி சொன்னா கேள்வியே கேட்காம இப்படிதான் அனுப்பிவைப்பீங்களோ?… விசாரிச்சு தெரிஞ்சிருப்பீங்க தானே?…” என்றவனிடம்,

“தம்பி தப்பா பேசாதீங்க. எங்க ஊர் பொண்ணுங்களை பத்தி பேச உங்களுக்கு உரிமை இல்லை. கவனமா பேசுங்க…” என எகிறினான் ஒருவன்.

அவனை துச்சமாக பார்த்து, “ஓ!!! கோவம் வேற வருதாக்கும் உங்களுக்கெல்லாம்?… உங்க ஊர் பொண்ணை சொல்லவும் இவ்வளோ ரோஷம் வருதே?…. அப்போ அடுத்த வீட்டு பொண்ணுனா மட்டும் சாமி சாத்தியம்னு சொல்லிக்கிட்டு கண்மூடித்தனமா நடந்துப்பீங்க?…”

“ஒரு சத்தியத்தை வச்சு அவனை நம்பி இவளை அனுப்பிட்டீங்க. ஆனா பொண்ணை பறிகொடுத்த பெத்தவங்க படும் அவஸ்தையையும் கடத்தினவன் கிட்ட அந்த பொண்ணு அனுபவிக்கிற சித்ரவதையும் எப்படி பட்டதுன்னு உங்க யாருக்காவது தெரியுமா?…” என உதயாவின் நாவிலிருந்த வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அங்கிருந்தவர்களை குத்திக்கிழித்தது.

“இந்த லட்சணத்துல தான் இருந்திருக்கு இந்த ஊரோட நியாயமும் தர்மமும், இந்த ஆள் தரும் தீர்ப்பும். இந்த ஊரை தேடி வந்த எங்களை சொல்லணும்?… என தலையில் அடித்துகொண்டான்.

அவன் பேச பேச அந்த ஊர் ஜனங்கள் அனைவருமே கூனி குறுகி நின்றனர். ஊர்த்தலைவரை ஒட்டி நின்றவர்கள் கூட அவரை விட்டு இரண்டடி நகர்ந்துகொண்டனர்.

உள்ளே வேறு வேலையாய் இருந்த பூசாரிக்கு வெளியே திடீரென ஏற்பட்ட சலசலப்பில் ஏதோ கலவரம் என்று தெரியவும் என்னவோ ஏதோ என்று வந்து பார்த்தார்.

வேக வேகமாக பார்வையை கூட்டத்தில் சுழலவிட்டவர் கண்களுக்குள் விழுந்ததோ அக்கூட்டத்தின் நடுவே உதயாவின் தோளில் சாய்ந்திருந்த நந்தினி தான். அதை பார்த்ததும் திக் என்று ஆகிவிட்டது.

பெரிய பிரச்சனை என்று எண்ணியவர் ஏழுமலைக்கு தொடர்புகொண்டு தகவலை கூறவும் மறுமுனையில் ஏழுமலையின் பதிலில் குழம்பி போனார் பூசாரி. நடப்பதை பார்த்துகொண்டு அமைதியாக நிற்க மட்டும் தான் முடிந்தது அவரால்.

அக்கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் முன்வந்து, “தம்பி ஏதோ தப்பு நடந்திருக்குன்னு தெரியுது, என்ன விஷயம்னே தெரியாம நாங்க என்ன முடிவெடுக்க?… இவ்வளோ கோவமா பேசறீங்களே?… என்ன நடந்ததுன்னு சொன்னா தானே எங்களுக்கும் தெரியும்?…” என்று அமைதியாக கேட்டவரிடம் தன்னை நந்தினியின் உறவினன் என்று அறிமுகப்படுத்திகொண்டான்.

தாங்கள் ஒரே குடும்பம் எனவும், மொத்த குடும்பமும் குலதெய்வம் கோவிலுக்கு வந்ததாகவும், பக்கத்து ஊரான இந்த கோவில் திருவிழாவை பார்த்துவிட்டு செல்லலாம் என்று அருவியூருக்கு வந்த விஷயத்தையும் கூறி விஜி சொன்ன தகவல்களை அப்படியே சொன்னவன் நந்தினியை பிரசாத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினான்.

முதலில் தான் நந்தினியின் உறவினன் என்று கூறியதை கேட்ட பூசாரி அவர்களோடு இவன் வரவில்லையென்ற குழப்பத்தில் பார்த்துகொண்டிருந்தவர் பின்னால் உதயா கூறியதை கேட்டு அதிர்ந்துவிட்டார். தன்னால் தானோ இந்த அசம்பாவிதம் என்று கவலையடைந்தார்.

அவன் கூறும் அனைத்தையும் கேட்டவர் ஊர்த்தலைவரை கோவமாக பார்த்தார். அவர் மட்டுமல்லாது அங்கே இருந்த சிலரும் கூட கடுமையான கண்டன பார்வையை ஊர்த்தலைவரின் மீது பாராபட்சமில்லாமல் வீசினார்கள்.

“என்னங்க அய்யா, இப்படி ஒரு பாவத்தை பண்ணிட்டீங்க?… எதையுமே நல்லா யோசிச்சு விசாரிச்சு முடிவெடுத்திருந்தா இப்படி ஒரு அவமானமும், அவச்சொல்லும் நம்ம ஊருக்கு வந்திருக்காதே?…” என ஆற்றாமையோடு அவர் கேட்கவும் நொந்தே விட்டார் ஊர்த்தலைவர்.

அந்த பெரியவரோடு சேர்ந்து ஊர் மக்களுமே மாறி மாறி கேள்வி கேட்டு குடைந்தெடுத்து விட்டனர்.

அதுவரைக்கும் தலைவரே தலைவரே என கொண்டாடிய அனைவரும் நொடியில் தன்னை கீழே வீசிவிட்டதை எண்ணி மனம் குமைந்தார். இதற்கெல்லாம் காரணமான பிரசாத்தை ஏதாவது செய்யவேண்டும் என்று உள்ளம் பரபரத்தது.

“தன் ஊரிலேயே மொத்த ஜனங்கள் கூடியிருக்கும் வேளையில் இப்படி அனைவரின் முன்னாலும் தான் குற்றவாளியாக நிற்கும் படி ஆகிவிட்டதே…” என்று தன்னையே நொந்துகொண்டு நின்றார்.

இனி இந்த தலைவர் பதவி தனக்கு நிலைக்காது என்ற எண்ணம் உருவாகி அவரை உலுக்கியது.

அதற்குமேல் அங்கே நிற்க திராணியற்று அங்கிருந்து வேகமாக  அவரது அடிபொடிகளோடு வெளியேறிவிட்டார். யாரும் அவரை போக வேண்டாம் என்று தடுக்கவும் இல்லை. திரும்ப அழைக்கவும் இல்லை.

“சரி, சரி விடுங்கப்பா, இனிமே ஆகவேண்டியதை பாருங்க. தம்பி உங்க வீட்டாளுங்க வரவரைக்கும் இங்கயே இருங்க. அவங்க வந்து கூட்டிட்டு போகட்டும் உங்களை. அந்த பொண்ணு வேற மயக்கமா இருக்கு பாருங்க…” என்று அவர்களிடம் கூறிக்கொண்டு இருக்கையிலே ஏழுமலை தன் குடும்பத்தோடு வந்துவிட்டார். கூடவே விஜியோடு சிவாவும்.

சந்திராவும் பூரணியும் ஓடி வந்து நந்தினியை அணைத்துக்கொள்ள, ஏழுமலை உதயாவை அப்படி ஒரு பார்வை பார்த்தார். அதில் இருந்தது என்னவென்றே யாராலும் கணிக்க இயலவில்லை.

உதயாவோ தயக்கம் ஏதும் இன்றி மன்னிப்பை கோரும் விதமாக அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்.

“நீங்கதான் இந்த பொண்ணோட அப்பாவா?…” என்று அந்த பெரியவர் கேட்டதும் நந்தினியை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினார்.

“அப்போ இந்த தம்பி உங்க சொந்தம் தானா?…” என்று அவர் கேட்கவும் அதற்கு பதில் கூற விரும்பாமல் அமைதியாகவே இருந்தார் ஏழுமலை.

“ஆமாங்கய்யா, இவன் என்னோட புள்ளை தானுங்க. இது என் தம்பி பொண்ணுங்க…” என்று சற்றும் யோசியாமல் கூறியவர் கோசலையே.

ஏழுமலை குடும்பத்தினருக்கு கோசலையின் இந்த பதில் அதிர்ச்சியளித்தாலும் இப்போது அதை தடுத்து சொல்லும் சூழ்நிலையில் தாங்கள் இல்லை என்பதை உணர்ந்து அமைதிகாத்தனர்.

கோசலையின் பதிலில் திருப்தியுற்ற அந்த பெரியவர், “இதோ பாருங்கம்மா, இந்த கல்யாணம் எதிர்பாராத விதமா நடந்திருந்தாலும் இங்க இப்படிதான் நடக்கனும்னு இருந்திருக்கு. அதுதான் தெய்வ சங்கல்பம். அதனால யாரும் வருத்தபடாம புள்ளைங்களை கூட்டிட்டு போங்க. உங்க ஊர்ல போய் ஆகவேண்டிய காரியத்தை பாருங்க…” என்றவர் கொஞ்சம் தயங்கி,

“எங்க ஊர்ல உங்க வீட்டு புள்ளைங்களுக்கு ஏற்பட்ட அவ மரியாதைக்கும், உங்க எல்லோருக்கும் உண்டான மனஉளைச்சலுக்கும் நாங்க வருத்தம் தெரிவிச்சிக்கறோம். விசாரிக்காம கண்மூடித்தனமா எங்க தலைவர் நடந்துக்கிட்டதுக்கு எங்க ஊர்ல இருக்கிற எல்லோர் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்…” என்று கைக்கூப்பி வணங்கினார்.

அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அடுத்த ஊர்த்தலைவராக இவர்தான் இருக்க வேண்டும் என்று உறுதி செய்யும் விதமாக இருந்தது அந்த பெரியவரின் நடவடிக்கை.

“உங்க பொண்ணு குடுத்து வச்ச புள்ளைங்க. இப்படி ஒரு மாப்பிள்ளை அமைய புண்ணியம் செய்திருக்கணும். எங்க ஊர் சாமி ரொம்ப சக்தி வாய்ந்தது. அதோட நிழல்ல தான் உங்க புள்ளைங்க ஒன்னு சேரணும்னு இருந்திருக்கு. நல்லபடியா புள்ளைங்களை ஆசிர்வாதம் செஞ்சு வாழ வைங்க…” என்று தன் பங்கிற்கு ஏழுமலையின் மனதில் கனன்ற நெருப்பிற்கு எண்ணை வார்த்துவிட்டு போனார்.

நடந்தது, நடப்பது என்று அனைத்தும் அறியமுடியாமல் இன்னமும் மயக்க நிலையிலேயே இருந்தாள் நந்தினி. வந்த உடன் தன் மகளை பார்த்ததோடு சரி. அதன் பின்னால் தவறியும் கூட பார்வையை செலுத்தவில்லை. அந்த அளவிற்கு நந்தினியின் மீது வெறுப்பிலும் கோவத்திலும் இருந்தார்.

பூசாரியையும் அழைத்துகொண்டு அனைவரும் ஏழுமலை வீட்டார் வந்த வாகனத்திற்கு அருகில் உள்ள இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் அங்கே வந்தனர்.

“வாங்கைய்யா கிளம்பலாமா? என்னாச்சு பாப்பாக்கு?…” என்ற ட்ரைவரின் கேள்விக்கு,

“கூட்டத்துல மயக்கமாகிட்டா. அதை விடு இங்க கொஞ்சம் தள்ளி ஹோட்டல் இருக்கும் நீ போய் சாப்ட்டு வாப்பா…” என்று பணத்தை அவனை கொடுத்து அனுப்பிவிட்டார்.

நந்தினியை வேனில் படுக்கவைத்து அவளுக்கு துணையாக சந்திராவை இருத்திவிட்டு அங்கேயே நின்றனர்.

யார் முதலில் ஆரம்பிப்பது என்ற தயக்கமும் என்ன பேசுவது என்ற குழப்பமுமாக சிறிதுநேரம் எங்கெங்கோ வெறித்து பார்த்தபடி நின்றனர்.

ஆனால் உதயாவின் பார்வை மட்டும் அவ்வப்போது துவண்டு கிடந்த நந்தினியை தீண்டி சென்றது. “ஏன் இப்படி அவளை பார்க்கிறோம்…” என்று அவன் உணரவே இல்லை. உதயாவின் பார்வை அலைபாய்வதை விஷ்ணு கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.

இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் சரியில்லை என்று முதலில் கோசலை தான் அங்கே நிலவிய மௌனத்தை கலைத்தது.

“தம்பி நீங்க யாரு எவருன்னு எங்களுக்கு தெரியாது. நாங்க கொஞ்சம் முன்னால வந்திருந்தா இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்காது. எங்க வீட்டு பொண்ணை காப்பாற்ற போய் நீங்களும் இங்கே சிக்கல்ல மாட்டிக்கிட்டீங்களே?…” என அன்பாக கூறினார்.

அவருக்கு உதயாவின் பேச்சை கேட்டு பாதி பிடித்ததென்றால் உதயாவை பார்த்ததுமே மொத்தமாக பிடித்துவிட்டது. நந்தினிக்கு உதயாவை விட சிறந்தவனாக வேறு எவனும் அமையப்போவதில்லை என்று ஆணித்தரமாக நம்பினார்.

உதயா தான் யார், எந்த ஊர் என்ற தகவலை கூறிவிட்டு பிரசாத்தை பற்றி கூற முயல, சட்டென விஷ்ணு குறுக்கே புகுந்து பிரசாத் தங்கள் ஊர்க்காரன் என்று மட்டும் சொல்லிவிட்டு உதயாவை சொல்லாதே என்று ஒரு பார்வை பார்த்தான். உதயாவும் அதற்கு கட்டுப்பட்டவனாக அமைதியானான்.

“ஏழுமலை என்னப்பா ஒண்ணுமே பேசாம அமைதியா இருக்க?… இனி ஆக வேண்டியதை பார்க்க வேண்டாமா?…” என்று கூறவும்,

“வாயை மூடுக்கா. உன் வேலையை நீ பாரு. புரியுதா?…” என்று கர்ஜித்தவரை பார்த்து அனைவருமே துணுக்குற்றனர்.

அவரது சத்தத்தில் நந்தினியின் மயக்கம் கலைந்தாலும் இப்போது எழுந்து அமரவோ, எதையுமே பேசவோ, அவளால் முடியவில்லை. அவளது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அவர்களது சம்பாஷனைகள் அவளது அனுமதி இல்லாமலேயே காதின் வழியாக மனதின் உள்ளே இறங்கியது.

உதயாவை நெருங்கிய ஏழுமலை, “நீங்க எதுக்காக என் பொண்ணு கழுத்துல தாலி கட்டுனீங்க?…” என்றார் ஆத்திரத்தை உள்ளடக்கிய குரலில்.

“உங்க பொண்ணை காப்பாத்தனும்னு தான் சார்…” என்றான் சிறிதும் பிசிறாத குரலில்.

Advertisement