Advertisement

நட்சத்திர விழிகள் – 18 (2)

“ஐயோ அத்தைங்களா, கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு பேசுங்க. உட்காருங்க இப்படி. ஜூஸ் வாங்கிட்டு இப்போ வந்திருவான். நான் தான் முன்னால ஓடி வந்துட்டேன்…” என பெரும் சாதனை செய்தது போல பேசியவளை பரிதாபமாக பார்த்தனர் இருவரும்.

“அறிவிருக்கா உனக்கு. எத்தனை தடவை சொல்றேன். நிதானமா இரு. மெதுவா நடன்னு. சொல்ற பேச்சை கேட்கிறதே இல்லை. உன்னை உங்கப்பா பூட்டி வைக்கிறது சரிதான்…” என வந்த வேகத்திலேயே சகட்டுமேனிக்கு கத்தினான் விஜி.

“எதுக்குடா புள்ளையை போட்டு இப்டி திட்டுற?…” என பூரணி விஜியை பிடித்து இழுக்க,

“சும்மா இருங்கம்மா வேகமா ஒடி வந்து எதிரே வந்த ஒருத்தன் மேல இடிச்சுட்டா. அதோடு நகர்ந்தாளா? அதுவும் இல்லை. என்னமோ பேசிட்டு ஓடிட்டா, அவன் பேயறைஞ்ச மாதிரி நின்னுட்டு இருக்கான். என்ன சொல்லிட்டு வந்தாளோ?…” என்று விஜி சொல்ல இவளை என்னதான் செய்வது, பேசாமல் கோவிலுக்கு போய்விடலாமா என்று கோசலையும் பூரணியும் சிந்தனை வயப்பட அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்,

“விஜி அந்த ஜூஸை குடேன், பாப்கார்ன் சாப்ட்டதுல தொண்டைல சிக்குது. சீக்கிரமா தா…” என்று அவனை அவசரபடுத்த விஜிக்கு சத்தியமாக கோவத்தை எப்படி அடக்கவென்றே தெரியவில்லை.

“கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடா உனக்கு? கேட்டும் குடுக்காம நிக்கிற?. எனக்கு ஒண்ணுனா அந்த ஹிட்லர்க்கு நீதான் பதில் சொல்லணும். அதனால தான் உன்னை காப்பாத்த இந்த ஜூஸை கேட்கிறேன்…” என்று அவனின் கையில் இருந்த ஜூஸை பிடுங்காத குறையாக வாங்கி குடித்துவிட்டு,

“அத்தை வாங்க ஆத்துக்கு போவோம். கொஞ்சம் நேரம் கால் நனைச்சிட்டு வரலாம்…” என்று கேட்டதுதான் தாமதம் மூவருக்கும் கிலியாகிவிட்டது. இதுக்கு மேலையுமா? என்று உள்ளுக்குள்ளே கதறினர்.

“வாங்கத்தை போகலாம்…” என்று பூரணியை இழுத்துக்கொண்டே சென்று விட்டாள். அவளை கடிந்துகொள்ளவும் முடியாமல் அவளோடு செல்லவும் முடியாமல் தத்தளித்தனர். ஒன்று மட்டும் தெரிந்தது. நந்தினியால் ஏழுமலையிடம் மூவரும் இன்றைக்கு சேர்ந்து வாங்கி கட்டிக்கொள்ள போவது உறுதியாகிவிட்டது.

ஆற்றில் கரைபுரண்டு ஓடிய தண்ணீரை பார்த்ததும் தலைகீழாகத்தான் நடந்தாள் என்று சொன்னாலும் மிகையில்லை.

ஒரு இடத்தில் நிற்காமல் இங்குமங்கும் ஓடி விஜியின் பொறுமைக்கு பெரும் வேட்டு வைத்தாள்.

“போதும் மித்ரா. நாம வந்து ஒரு மணிநேரம் ஆச்சு. மாமாவும், அப்பாவும் தேடுவாங்க. உன் ஆசைக்கு வந்தாச்சுல. இப்போவாச்சும் போகலாமா?…” என்று கெஞ்சுதலாக கேட்டவனிடம் மறுக்காமல் சரியென்றாள்.

“ஹப்பாடா…” என்று மூச்சை இழுத்து விட்டவன் அனைவரோடு கோவிலை நோக்கி சென்றான். அவர்கள் செல்லும் போதே நேசமணி போனில் அழைத்துவிட்டார் விஜியை. அவரோடு பேசிக்கொண்டே நடந்தவன் நந்தினியை கவனிக்க தவறினான்.

கோசலையும், பூரணியும் விஜயோடு நந்தினி வருகிறாள் என்று அவர்களுக்கு முன்னால் நடந்துகொண்டே பேச்சு சுவாரஸ்யத்தில் அசட்டையாக விட்டுவிட்டனர்.

நடக்கும் போது தான் காலில் வித்யாசமாக உணரவும் பாவடையை லேசாக உயர்த்தி பார்க்க ஒரு காலில் கொலுசு இல்லாததை கண்ட  நந்தினி பதறிவிட்டாள்.

“அச்சோ கொலுசை காணோமே? புதுசு வேற?. போச்சு தொலைஞ்சேன். அப்பா பிச்சிட்டாங்க இன்னைக்கு…” என நினைத்தவள் அம்மா கொலுசை போடும் போதே பத்திரம் பத்திரம் என்று ஒரு தடவைக்கு பலதடவை சொன்னது அப்போதுதான் மூளையில் உரைத்தது.

நந்தினி நின்றதை கூட உணராமல் கோவிலை நோக்கி விஜியோடு சென்றுகொண்டிருந்தனர் கோசலையும் பூரணியும்.

பதட்டத்தில் அவர்களை அழைக்காமல் கூட வேகமாக திரும்பி ஆற்றங்கரை பக்கம் ஓடினாள்.

சுற்றும் முற்றும் தேடி தேடி கொஞ்சம் நகர்ந்து சென்றுவிட்டாள். தண்ணீரில் எங்கே விழுந்தது என தெரியாமல் அழுதுகொண்டே தேட சிறிது நேரத்திலேயே கொலுசு கிடைக்கவும் தான் நிம்மதியானவள் கரையை விட்டு மேலே ஏறி அங்கிருந்த கடையின் அருகில் இருந்த கல்லில் வந்தமர்ந்து காலுக்கு கொலுசை மாட்டினாள்.

யாரோ சிரிக்கும் சப்தம் கேட்டதும் பின்னால் திரும்பி பார்த்தால் யாரோ மூன்று பேர் அமர்ந்து பேசி சிரிப்பது தெரிந்தது. முதலில் கண்டுகொள்ளாமல் எழ இருந்தவள்,

“அங்கே பாருடா, இன்னைக்கு எப்படியும் அவளை தூக்கிடனும்…” என்ற குரலில் விதிர்த்துப்போனவள் யாரை சொல்கிறார்கள் என்று கூர்ந்து கேட்கலானாள்.

“நான் பார்த்துக்கறேண்டா மாப்ள. நீ ஸ்கெட்ச் போட்டு குடு. பக்காவா நான் கடத்திடறேன்…” என்று சொல்லிகொண்டு சப்தமாக சிரித்தனர்.

“இந்த ஊர்ல இப்படி ஒரு பொண்ணா? படிச்சவ போல இருக்காளே? அவளை பார்த்தாலே தெரியுது. அவ கலருக்கு இந்த பச்சை கலர் சேலை எடுப்பா இருக்கு…” என்ற இது போன்ற வசனங்களை கேட்டதும்  யாரை பேசுகிறார்கள் என்று தன் பார்வை வட்டத்தில் துழாவ ஆரம்பித்தாள்.

அங்கே பச்சை நிற புடவை கட்டி அழகிய இளம்பெண் நின்று கொண்டிருந்தாள்.

“இவங்களை தான் சொல்றாங்களோ? ஐயோ அப்போ இன்னைக்கு இவங்களை நிஜமாவே கடத்த போறாங்களா?…” என்று வேகவேகமா சிந்தித்தது நந்தினியின் அவசரக்குடுக்கை மூளை.

“இன்னைக்கு நைட் உன் மேல சத்தியமா இந்த புள்ளையை நாம தூக்கறோம்…” என்று திரும்ப திரும்ப குளரலான குரலில் கூறியவனை நன்றாக பார்த்தான். சற்று நெருங்கி சென்று அவர்கள் மூவரையும் அடையாளம் பார்த்துகொண்டவள் மனம் அவசரமாக திட்டம் தீட்டியது.

“வாடா மச்சான். சாயங்காலம் வந்து பார்த்துக்கலாம், இங்க தான் இருப்பா அவ…” என பேசிக்கொண்டே அவர்கள் ஒதுக்கமாக இருந்த ஆற்றங்கரையின் அருகில் இருந்த சவுக்கு தோப்பை நோக்கி சென்றனர்.

“அடப்பாவிங்களா? இன்னைக்கு நைட் தான் கடத்துறதா ப்ளான் போட்ருக்கானுங்க. நிஜமாவே கடத்த போறாங்க போல? விடக்கூடாது. இந்த அக்காவை காப்பாத்தியே ஆகணும்…” என்று எண்ணிய நந்தினியின் உள்ளே தூங்கிகொண்டிருந்த பெண் சிங்கம் திடுமென உயிர்த்தெழுந்தது.

வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றவள் அந்த பெண்ணை நோக்கி ஓடினாள்.

கொஞ்சமும் யோசிக்காமல் அப்பெண்ணை நெருங்கி, “அக்கா, நீங்க இந்த ஊரா?…” என கேட்டவளை புரியாமல் பார்த்த அந்த பெண்,

“ஆமாம். நீ யாருமா? ஏன் கேட்கிற?…” எனவும்,

“அதை விடுங்க அக்கா, உங்க அப்பாம்மா, கூட பிறந்தவங்க யாராச்சு இருந்தா கூப்பிடுங்களேன். அப்டியே இந்த ஊர் தலைவர் எங்க இருக்கார்? அவரையும் கூப்பிடுங்க…” என்று படபடவென பேசிய நந்தினியை புரியாமல் பார்த்த பெண்,

“உனக்கு என்னமா ஆச்சு? எதுக்காக இப்படி சம்பந்தம் இல்லாமல் பேசற? உன் கூட யாரும் வரலையா?…” என விசாரித்தாள்.

“ஐயோ அக்கா, உங்களை கடத்த போறதா மூணு ரவுடிங்க பேசிட்டு இருந்தாங்க. நான் அவனுங்களை பார்த்தேன். நீங்க நின்ன இடம், உங்க ட்ரெஸ் கலர் எல்லாமே சொன்னாங்க. நான் நல்லா பார்த்துட்டுதான் வந்தேன்…” என கோவமாக சொன்ன நந்தினியின் தகவலில் அப்பெண் பயந்துவிட்டாள்.

“யார்மா நீ என்னென்னமோ சொல்றியே?…” என படபடப்பாக கேட்டாள். அப்போதாவது இவள் யார், யாரோடு வந்திருக்கிறாள் என்ற தகவலை சொல்லியிருக்கலாமோ?

“ஐயோ அக்கா. இப்போ அதுவா முக்கியம். அந்த பொறுக்கியை பிடிச்சு குடுக்கணும். அதனால எல்லோரையும் கூட்டிட்டு வாங்க. அவங்க அந்த பக்கமாகத்தான் போனாங்க. சீக்கிரம்…” என்று  அவசரபடுத்தியவளை நம்பாமல் பார்த்தாள்.

நந்தினிக்கு அது புரிந்ததோ என்னவோ, “அக்கா நான் சொல்றதை நம்பலையா நீங்க? நான் உங்களை ஏமாத்தலை. அவங்க பேசினதை வச்சுதான் உங்களை அடையாளம் தெரிஞ்சது. நான் உங்களை தனியாவா கூப்பிடறேன். உங்க ஊர்க்காரங்க எல்லோரயுமே தானே கூப்பிடறேன்…” என தவிப்புடன் பேசியவளை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

உடனே தன் தாயிடம் விவரத்தை சொன்னதுமே ஊரில் முக்கிய தலைகள் ஓன்று கூடி நந்தினியிடம் விசாரணையை ஆரம்பித்தனர். அவளது வாக்குமூலத்தின் படி அந்த மூவர் இருக்குமிடம் நோக்கி சென்றனர்.

ஊர்த்தலைவர், “டேய் பசங்களா நான் அங்க போய்ட்டு என்னனு பார்த்துட்டு பூசைக்குள்ள வந்திடறேன். எல்லாரும் அங்கன வந்து கூட்டம் போடவேணாம். நாங்க கண்டுக்கறோம். நீங்க போய் பூசைக்கு ஆவறதை பாருங்க…” என்று சிலரை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை அனுப்பிவிட்டார்.

“பாப்பா அந்த பயலுவ எந்தால போனானுவ. நீ கண்டையா?…” எனவும் முதலில் புரியாமல் விழித்தவள் பின் புரிந்தவுடன்,

“அந்த பக்கம் போனாங்க தாத்தா. வாங்க நான் காட்டுறேன்…” என்று தோப்புப்பக்கமாக அழைத்து சென்றாள்.

நேசமணியுடன் பேசியவன் கோவிலை நெருங்கிவிட்டதாக கூறி விட்டு தொடர்பை துண்டித்து திரும்பி பார்த்தவன் தன்னோடு வந்து கொண்டிருந்த நந்தினியை காணாது நொந்துவிட்டான்.

“இந்த அறுந்தவாலு இப்போ எந்த கடைக்குள்ள போய் நுழைஞ்சாளோ?…” என ஆயாசமடைந்தவன் பூரணியையும் கோசலையையும் முன்னால் போக சொல்லி நந்தினியை கூட்டி வருவதாக கூறினான்.

அவளை காணவில்லை என்றதுமே கலவரமாகிவிட்டது இருவருக்கும். தாங்களாவது சற்று கவனமாக இருந்திருக்கலாம் என இப்போது எண்ணி வருந்தினர்.

“அவள் இல்லாமல் தாங்கள் மட்டும் போனால் ஏழுமலை சும்மா விட்டுவிடுவாரா?…” என அஞ்சி அவர்கள் நின்ற கடைக்கு முன்னாலே அமர்ந்திருப்பதாக கூறி நந்தினியை அழைத்துவர விஜியை அனுப்பினர். மொபைலை அவர்களின் கையில் கொடுத்துவிட்டு சென்றான்.

அவளை கடைகடையாக தேடியவன் முகத்தில் இப்போது பயமும், கவலையும் அதிகரித்தது. “அவளோட வாய்க்கும், புத்திசாலித்தனத்துக்கு வழி தெரியாம போகமாட்டா. அந்த அளவுக்கு அவ ஒண்ணும் தெரியாத பெண் இல்லை. நிச்சயம் ஏதோ பிரச்சனை போல….” என எண்ணிய அவனது மனம் அவள் எந்த சிக்கலிலும் மாட்டக்கூடாது என பிராத்தனை செய்துகொண்டே இருந்தது.

அவனது வேண்டுதலுக்கு முன்பாகவே சிக்கலை தானே உருவாக்கி அதிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு வாகாக போய் அமர்ந்துவிட்டாள் என்பது தெரியாமல் போனது விஜிக்கு.

கொஞ்சம் தூரத்தில் ஒரு கூட்டத்தில் நந்தினியின் உருவம் இவனது கண்களில் பட்டு விலகி மீண்டும் பார்வை வட்டத்தில் தெரிய அதை கூர்ந்து கவனித்தான்.

“அவளேதான் இத்தனை பேரோடு எதுக்காக தோப்புக்குள்ளே போறா?…” என பதட்டமாக எண்ணிக்கொண்டே அவளை பிடிக்க ஓடினான்.

அவன் அவளை நெருங்குவதற்குள் அவள் அந்த கிராம மக்களோடு  அந்த மூவரையும் நெருங்கிவிட்டாள்.

“இவனுங்கதான் தாத்தா, இவங்கதான் இந்த அக்காவை கடத்தபோறதா பேசிட்டு இருந்தாங்க…” என கோவம் கொந்தளிக்கும் முகத்தோடு கூறியவளை திடுக்கிட்டு போய் பார்த்தனர் அம்மூவரும். அவர்களிடமிருந்து கிளம்பிய மது நெடி அவர்கள் குடித்திருந்ததற்கு அடையாளமாகியது.

ஊர்த்தலைவர் என்ன ஏதென்று விசாரிக்கும் முன்னே அவர்களோடு வந்திருந்த இளைஞர்கள் சிலர் ஒரே பாய்ச்சலில் மூன்றுபேரையும் அடித்து நொறுக்கினர்.

பெரியவர்கள் தான் அவர்களை விளக்கி விட்டனர். “பொறுங்கப்பா, என்ன எதுன்னு விசாரிக்கிறதுக்குள்ள கை நீட்டுறது தப்பு…” எனவும்,

அடித்தவர்களில் ஒருவன், “நீங்க வேற தலைவரே, நம்ம ஊர் பொண்ணை தூக்கனும்னு சொல்லிருக்கான். அடித்து துவைக்காம அவன் கிட்ட என்ன சமாதானமா பேச போறீங்க?…” என்று கோவத்தோடு மீண்டும் அவர்கள் மீது பாய காத்திருந்தான்.

மூக்கில் ரத்தம் வழிய நின்ற அவர்களை பார்த்த நந்தினி, “ஆமா தத்தா. விடுங்க இன்னும் நல்லா அடிக்கட்டும். குடிச்சிட்டு என்னவெல்லாம் ப்ளான் போடுறாங்க. அண்ணா இன்னும் நல்லா அடிங்க அண்ணா…” என சும்மா இல்லாமல் அவர்களை உசுப்பேத்த அம்மூவருக்கும்  புரிந்துவிட்டது. இந்த பெண் தான் தங்களை சிக்க வைத்தது என்று.

அனைவரின் முன்னால் அடிவாங்கிய மூவரும் அவமானத்தில் கூனி குறுகி நின்றனர். அவர்களது குன்றலை குதூகளிப்போடு பார்த்தாள் நந்தினி. அதை கண்டு இன்னும் கொலைவெறி கிளம்பியது அவள் மேல்.

அவர்களில் ஒருவன் நந்தினியை கடுமையாக முறைத்த நேரம் விஜி வந்துவிட்டான். “மித்ரா கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்கா? உன்னை எங்கல்லாம் தேடுறது? இங்க என்ன பன்ற?…” என எரிந்து விழவும்,

“சும்மா இரு விஜி, இவனுங்க மூணு பெரும் இந்த அக்காவை இன்னைக்கு நைட் கடத்த ப்ளான் பண்ணி பேசிட்டு இருந்தாங்க. கொலுசை காணலைன்னு தேடிட்டு இருந்தேனா? அப்போதான் இவங்க பேசினதை கேட்டேன். அதான் எல்லோரயும் கூட்டிட்டு வந்து இவங்களை மாட்டிவிட்டுட்டேன். இனிமே இந்த தாத்தா பார்த்துப்பாங்க…” என்றவள்,

“தாத்தா இவனை விடாதீங்க. போலீஸ்ல புடிச்சு குடுங்க…” என்று சொல்லிவிட்டு அனைவரும் உடன் இருக்கும் தைரியத்தில் அசட்டு துணிச்சலில் அந்த காரியத்தை செய்துவிட்டாள்.

“டேய் பொறுக்கி ராஸ்கல்…” என்று அழைத்த நந்தினியை கொலைவெறியோடு பார்த்தான் அம்மூவரில் ஒருவன்.

அவனை நெருங்கி பளாரென அறைந்தவள், “என்னடா முறைப்பு உனக்கு? பொண்ணுங்கன்னா என்னனுடா நினச்ச? நீதானே வேணும் வேணும்னு கேட்ட? அதான் பளார்னு குடுத்தேன். பார்த்தியா எப்டி சிக்குன நீ? இனி உனக்கு ஜெயில் தாண்டா. போய் களி தின்னுட்டே ப்ளான் பண்ணு உன் கூமுட்டை ப்ரெண்ட்ஸ் கூட…” என்று எகத்தாளமாக பேசிய நந்தினியை பார்த்து அவனது மனம் ஏதோதோ வேகமாக கணக்கிட்டது.

நந்தினியின் அதிகபிரசங்கித்தனமாக செயலில் அதிர்ந்து நின்ற விஜியை பார்த்து, “இப்போ போகலாம் விஜி, இவனை இனி அவங்க பார்த்துப்பாங்க. வா வா நேரமாகுதுல போகலாம்…” என அங்கிருந்து நகர போக,

“மித்ரா…” என பரிதாபமாக அழைத்தான் அவன். விஜியோடு சேர்ந்து  நந்தினியுமே திடுக்கிட்டாள். அங்கிருந்தவர்கள் குழப்பமான பார்த்தனர்.

“ஏன் தம்பி, நீ யாரு? இந்த பொண்ணை உனக்கு தெரியுமா?…” என ஊர்த்தலைவர் அவனிடம் கேட்டதும்,

நந்தினியை கூர்மையோடும், வில்லங்கமாகவும் பார்த்துக்கொண்டே, “ஆமாங்க பெரியவரே, என் பேர் பிரசாத். இது என்னோட அத்தை பொண்ணுதான். என்னை சிக்க வைக்க இவ சொல்ற பொய்யை நம்பாதீங்க. ஏனா மித்ராவுக்கு கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லை…” என கூறி அவளை பார்த்த பார்வையில் நந்தினிக்கும் விஜிக்கும் முதுகுத்தண்டு ஜில்லிட்டது.

விஜிக்கு மீள முடியாத ஏதோ ஒரு குழியில் விழுந்துவிட்டோமோ என மனம் அடித்துகொண்டது. செய்வதறியாது திகைத்த நந்தினி,

“டேய் யாரை பார்த்து பைத்தியம்ன்னு சொல்ற. உன்னை கொன்னுடுவேண்டா…” என்று வெறிகொண்ட மட்டும் அவனை அடி அடியென அடித்து தீர்த்துவிட்டாள். அவளை தடுக்காமல் அவள் கொடுத்த அடிகளை ஒரு விதமான குரூரத்தோடு வாங்கிகொண்டான்.

விஜிக்கோ தலையில் அடித்துகொள்ளலாம் போல ஆனது. ஊர்க்காரர்கள் நந்தினியின் கலைந்த தோற்றத்தையும் இப்போது பிரசாத்திடம் நடந்துகொண்ட முறையையும் பார்த்து அவள் நிஜமாகவே பைத்தியமோ என சந்தேக கண்களோடு பார்த்தனர்.

இதற்கு மேல் இங்கே இருப்பது சரியில்லை என நினைத்த விஜி, “சார் இவன் போய் சொல்றான். இவன் யாருன்னே எங்களுக்கு தெரியாது. நாங்க ஊருக்கு புதுசு…”

“இங்க கோவிலுக்கு குடும்பத்தோட வந்திருக்கோம். இவளோட தாய்மாமா பையன் நான். எங்கப்பாம்மா எல்லோருமே கோவில்ல தான் இருக்காங்க. சந்தேகம்னா வந்து விசாரிங்க…” என்று ஊர் தலைவரிடம் பிரசாத்தை முறைத்துக்கொண்டே கூறினான்.

அதை கேட்டதும் பிரசாத்தின் முகம் இன்னமும் பளிச்சிட்டது. அவனது முகமாறுதலை வைத்தே அவனின் திட்டத்திற்கு அவனோடு சேர்ந்து அவனின் நண்பர்களும் நடிக்க தயாராகினர்.

பிரசாத்தை பார்த்த விஜி தன் கைமீறி எதுவும் நடந்துவிடுமோ என நினைத்து நடுங்கினான். பிரசாத் எதுவும் சூழ்ச்சி செய்கிறானோ என பயந்தான்.

நந்தினியை இதிலிருந்து காப்பாற்ற வேண்டுமே? இப்படி வந்து குழியில் தானே சிக்கிவிடாளே என்று அவள் மீது அளவுகடந்த ஆத்திரத்திலும் ஆதங்கத்திலும் அவன் மனம் அலைபாய்ந்தது.

“பெரியவரே உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே…” என்ற பிரசாத்தின் அழைப்பை ஏற்றவர் அவனோடு பேச சென்றார்.

அவரிடம் என்ன சொன்னானோ அவரும் அவன் சொன்னதற்கு எல்லாம் தலையாட்டிகொண்டிருந்தார்.  பேசி முடித்து இருவரும் நெருங்க நெருங்க விஜிக்கும் நந்தினிக்கும் பயப்பந்து ஓன்று வயிற்றுக்குள் சுழன்றது.

பயத்தில் விஜியின் கைகை இறுக்க பற்றியவளை பார்த்த ஊர்த்தலைவர் பிரசாத்தை ஒரு பார்வை பார்த்தார்.

அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் “வா மித்ரா நாம போகலாம்…” என நந்தினியின் கையை பிடித்து நடந்தவனை மறித்த ஊர் தலைவர்,

“அப்டிலாம் நீங்க உடனே அந்த புள்ளையை கூட்டிட்டு போய்ட முடியாது தம்பி…” எனவும் நந்தினியும் விஜியும் ஸ்தம்பித்து நின்றனர்.

அவர்களை ஒரு வெற்றி பார்வை பார்த்தான் பிரசாத். அவர்களை தாண்டியும் அனைவருக்கும் பின்னால் ஒரு பார்வை பார்த்தவனின் கண்களில் இருந்த செய்தியை நொடியில் அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பினான் பிரசாத்.

விஜிக்கும் ஒரு நம்பிக்கை தன் குடும்பத்தை காண்பித்தால் எப்படியும் தப்பிவிடலாம் என்று. அதையும் தவிடுபொடியாக்க காத்திருந்தான் பிரசாத்.

விஜியும் நந்தினியும் நினைத்தது போல அவர்கள் மூவர் இல்லை ஐந்து பேர். இவர்களது கண்ணுக்கு சிக்காத பிரசாத்தின் நண்பர்கள் இருவரும் வெளியில் தங்களை சுற்றி சக்கர வியுகம் அமைத்ததை உணராமல் ஊர் தலைவரிடம்,

“தாத்தா, நீங்க கோவிலுக்கு வாங்க. எங்க வீட்டாளுங்க அங்கதான் இருக்காங்க. அவங்களை பார்த்தாலே உண்மையை நீங்க புரிஞ்சுப்பீங்க…”என பரிதவிப்புடன் அழைத்தான் விஜி.

அவனின் அழைப்பு அவரால் மறுக்கப்பட்டது. மறுக்கப்பட பிரசாத்தால் தூண்டப்பட்டது. விஜிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பிரசாத்திற்கு வந்த தொலைபேசியால் மொத்தமாக நந்தினியை தொலைக்க போவதை அறியாமல் முழித்துக்கொண்டிருந்தான்.  

Advertisement