Advertisement

நட்சத்திர விழிகள் – 15

குழப்பத்தில் உழன்று கொண்டிருந்த நந்தினியை பார்த்தவன் போதும் அவளை குழப்பியது என்று நினைத்தான்.

“என்னோட நான்கு வயதில் தான் கௌரியை என் அம்மா கர்ப்பமா இருந்தாங்க. அப்போ இருந்தே அவளை நல்லா பார்த்துக்கணும். பிறக்கப்போற பாப்பாதான் நம்ம வீட்டோட இளவரசி அப்டின்னு சொல்லி சொல்லியே என் மனசுல பதியவச்சுட்டாங்க…”

“அப்போவே 5 மாதத்திலிருந்தே வயிற்றுக்குள் இருக்கும் பாப்பாகூட அம்மாவும் நானும் பேசிட்டே இருப்போம். குழந்தை பெண்ணாக தான் இருக்கும்னு உறுதியா நம்பினோம்…” என்றவனை விழியகலாமல் பார்த்தவாறு இருந்தவளை மெலிதாக அசைத்தவன் என்னவென கண்களாலே வினவ அதில் சுயம் பெற்றவள் மேலே சொல்லுமாறு அதேபோல  கண்களாலே கூறினாள்.

“ம்ம் தேறிட்ட போ…” எனவும் அவனை முறைத்து விட்டு திரும்பி படுக்க எத்தனிக்கவும் அவளை இழுத்து பிடித்தவன்,

“கோவம் மட்டும் எங்க இருந்துதான் வருமோ, சொல்றேன் தாயே சொல்றேன்…” என சரண்டர் ஆகவும் தன்னையே மெச்சிக்கொண்டு அவன் சொல்லபோகும் விஷயத்திற்காக ஆவாலாக காத்திருந்தாள்.

“ரொம்ப குட்டியா தேவதையாட்டம் கெளரி பிறந்தப்போ நான் தான் அவ பிறந்ததுமே கைல வாங்கினேன். என்னால சந்தோஷத்தை எப்டி வெளிக்காட்டுறதுன்னு கூட அப்போ எனக்கு தெரியலை. அவ வீட்டுக்கு வரவும் எங்க மொத்த நேரமும் கௌரியோடதான். கௌரிக்கு ஐந்து மாதம் இருக்கும் போது வேணி அத்தைக்கு கல்யாணம் ஆகிடுச்சு…” ஒவ்வொரு நிகழ்வுகளாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனது முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக்கொண்டே போனது.

“அவ முதல் பிறந்தநாளை பெரிய விழா மாதிரி விருந்து வச்சு கொண்டாடினோம். எப்போவுமே எதுக்குமே அழாம சமத்தா இருக்கும் கௌரியை எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும். ஒரு இடத்துல நிக்காம குடுகுடுன்னு ஓடிட்டே இருப்பா. இங்க சொந்தக்காரங்க வீட்ல விசேஷம்னு வேணி அத்தையும் சுதர்சனம் மாமாவும் இங்கே வந்திருந்தாங்க. நெருங்கின சொந்தம்ன்றதால வீட்ல எல்லோருமே போய்ருந்தோம். அப்போ கௌரிக்கு ஒன்னே முக்கால் வயசு இருக்கும்….” என்றவனுக்கு தொண்டை அடைத்தது. இருந்தும் சமாளித்தவன்,

“விடியலிலேயே விசேஷ வீட்டுக்கு போய்ட்டதால அத்தை தலைவலிக்குதுன்னு வீட்டுக்கு கிளம்பினதும் நானும் அத்தையோட கிளம்பிட்டேன். என்னோடவே வரணும்னு அடம்பிடிச்ச கௌரியை அத்தை பார்த்துகொள்வதாக சொல்லி என்னையும் கூட்டிக்கிட்டு பாப்பாவையும் தூக்கிட்டு வந்துட்டாங்க…”

“வீட்டுக்கு வந்ததுமே ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் விளையாடிட்டு தூங்கிட்டோம். அங்கதான் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் தூங்கிருக்க கூடாது, நான் மட்டும் முழிச்சிருந்தா என் தங்கச்சியை, என் செல்ல கௌரியை நான் இழந்திருக்க மாட்டேன்…” என்று சொல்லிக்கொண்டே தலையில் அடித்துகொண்டு அழுதான்.

அவனது கண்ணீர் சொல்லியது கௌரியின் மேல் கொண்ட அன்பானது எத்தகைய விலைமதிப்பில்லாதது என்று. அவனின் இன்னொரு பரிமாணத்தை கண்டவள் திகைப்பின் உச்சத்தில் இருந்தாள். அவனது கண்ணீரும், பாதியில் நிறுத்திய விஷயமும், அவன் சொல்ல வந்ததன் பொருளும் நந்தினியை உலுக்கியது.

அவனாக ஓயும் வரை அவனுக்கு ஆறுதலாக அவனது கரத்தினுள் தன் கரத்தை நுழைத்தவள் மெல்ல மெல்ல இன்னொரு கரத்தால் வருடிவிட்டாள். சிறிதுநேரத்தில் தானே அமைதியாகி பேச ஆரம்பித்தவனது குரலில் வெறுமை மட்டுமே குடியிருந்தது.

“தூக்கத்தில் கட்டிலிலிருந்து உருண்டு விழுந்துவிடுவாள் என்று தரையில் மெத்தையை விரித்து தான் படுப்போம். தூங்கி எழுந்த நான் நந்தினியை காணாமல் அத்தையிடம் போய் கேட்டால் அவருக்கும் தெரியவில்லை. விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்த அம்மாவும் அப்பாவும் உடைந்தேவிட்டனர். கௌரியை காணாமல் அத்தனை பேரும் தேடி தேடி களைத்து போனோம்…”

“யாரேனும் கடத்தியிருப்பார்களோ என்ற அனுமானத்திற்கு கூட வரமுடியவில்லை. ஏனா இங்க யாருமே உள்ளே அவ்வளவு சுலபமா வந்திட முடியாது. காலை பன்னிரெண்டு மணியிலிருந்து சாயங்காலம் வரைக்கும் தேடி தேடி களைச்சுப்போய் போலீசில் புகார் கொடுக்க நினைக்கும் போதுதான் முதல் நாள் வாங்கிப்போன முக்கியமான பத்திரத்தை கொடுக்க கணக்குப்பிள்ளை வீட்டுக்கு வந்திருந்தாங்க…” என்று நிறுத்தியவன்,

“அந்த சின்ன அறையை எதற்காக பூட்டி வச்சிருக்கீங்கன்னு கேட்டியே?…” விட்டத்தை வெறித்துக்கொண்டு நந்தினியை பார்க்காமல் கேட்டதும் அவளுக்கு எதுவோ புரியத்தொடங்கியது.

ஐயோவென அவளது உள்ளம் அலறித்துடித்தது. “சின்னஞ்சிறு பிஞ்சு அந்த அறையில்…” அதற்கு மேல் யோசிக்க கூட முடியவில்லை. நினைக்க நினைக்க கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. இதுக்கு மேல் சொல்லவேண்டாமென கூற வாய் எழும்பவே இல்லை. அவன் சொல்ல போவதை கேட்கும் திராணியற்று அதை தடுக்கும் வகையறியாது விக்கித்துபோய் அமர்ந்திருந்தாள்.

தன் மனைவியை முகத்தை கூட பார்க்காமல் அவளது மன போராட்டாத்தை உணராமல் தொடங்கினான்.

“அந்த அறையில் அப்போது பணம், பத்திரம், நகைகளை எல்லாம் பரம்பரை பரம்பரையாக பராமரிக்கும் அறையாக உபயோகித்து கொண்டிருந்தோம். பத்திரத்தை வாங்கி வைக்க பாட்டிதான் அந்த அறையை திறந்து உள்ளே போனாங்க. அங்க……. அங்க…… என்னோட  கெளரி…………” என்றவனுக்கு மேல பேச வார்த்தை வரவில்லை. அவனது துக்கத்தை பொறுக்காமல் தன்னோடு சாய்த்துகொண்டவள் அன்னையென மாறி அவனை மடிதாங்கினாள்.

தன்னவளில் இடுப்பை கட்டிக்கொண்டு கண்ணீர் உகுத்தவன் தன் மனபாரம் தீருமட்டும் அழுது முடித்தவன் அவள் மடியிலிருந்தே மீண்டும் தொடங்கியவனை தடுத்தவள்,

“வேண்டாம், நீங்க தூங்குங்க. இன்னொரு நாளைக்கு பேசிக்கலாமே?…” என்று கெஞ்சலுடன் கூற அதை மறுத்து,

“இன்னைக்கே பேசிடறேன் நந்து. இன்னொருநாள் என்னால இதை சொல்லமுடியாது. முடிச்சிடலாம். எல்லா பிரச்சனைகளையும் இன்னைக்கே பேசி தீர்த்திடலாம்…”

“எப்படி அந்த அறைக்குள்ள அவ போனா? எப்போ போனான்னே தெரியலை. அம்மாக்கு அவளை பார்த்ததுமே அவங்களுக்கு தெரிஞ்சுபோச்சு. கெளரி எங்களை விட்டு போய்விட்டாள் என்று. என்ன ஆச்சுன்னு என்னோட அந்த வயசுல எனக்கு ஓரளவுக்கு புரிந்தது…” எனும் போதே சிறுவனாக அவனது வேதனை எப்படி பட்டதாக இருக்குமென அவளால் உணர முடிந்தது.

“உன் கெளரி நம்மை விட்டு போய்ட்டாடான்னு பாட்டி சொன்னதும் என்னால பேச முடியலை. கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்த என்னால ஒரு வார்த்தை கூட பேச முடியலை. கௌரின்னு கத்தனும்னு நினைச்சா குரல்வளை எல்லாம் ரொம்ப வலிக்கும்….” என்றவனது குரலில் அன்றைய தாக்கம் சிறிதளவும் குறைவில்லாமல் இன்றைக்கும் இருந்தது.

அவளை விட்டு விலகி எழுந்தமர்ந்தவனை ஏனென்று கேள்வியாக பார்க்க கண்களாலே சமாதானம் செய்தவன் மீண்டும் கட்டிலில் சாய்ந்தமர்ந்துகொண்டான்.

“எல்லாம் முடிஞ்சது. யாரலையுமே அவ்வளோ சீக்கிரமா துக்கத்தில இருந்து வெளிவர முடியலை. கௌரியோட இழப்பால அம்மா பித்து பிடிச்சவங்க மாதிரி ஆகிட்டாங்க. பாட்டிதான் எல்லோரையும் தேத்தி கொண்டுவந்தாங்க. அப்போதான் எனக்கு பேச்சு வரலைன்ற விஷயத்தை எல்லோருமே கொஞ்சம் கொஞ்சமா உணர ஆரம்பிச்சாங்க. அடுத்த இடியா? என்று எல்லோருமே நொருங்கி போய்ட்டாங்க. டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் கூட எடுத்துக்கிட்டேன். ஆனா பேசவே முடியலை என்னால…”

“என்னால பேச முடியலையேன்ற வேதனையை விட கெளரி என்னோட இல்லைன்ற நிதர்சனம் என்னை ரொம்பவே பாதிச்சது. கெளரி எப்படி அந்த அறைக்குள்ள போனான்னு விசாரிச்சும் அதுக்காண விடை மட்டும் கிடைக்கவே இல்லை. நாச்சி பாட்டியோ நான் முதல் நாள் பத்திரம் எடுக்க அந்த அறையை திறந்துட்டு சரியாக மூடலையோன்னு ஒரே புலம்பல்…”

“அதனால யாரையுமே குற்றம் சொல்ல முடியாத சூழ்நிலை. வேணி அத்தை தான் நடந்தது நடந்து போச்சு இனியும் அதை பத்தி பேசினா மட்டும் நம்ம கெளரி கிடச்சிடுவாளா இதோட இதை முடிங்க. இல்லைனா அண்ணிக்கும் நம்மளுக்கும் நினச்சு நினச்சு வருத்தமும் வேதனையும் தான் மிஞ்சும்னு சொல்லி தைரியம் சொன்னாங்க…”

“போன குழந்தையை நினைச்சுக்கிட்டு இருந்தா நம்ம பிரபாவை யார் பார்த்துப்பா? இருக்கிற பிள்ளையை நாம நல்லபடியா கவனிக்க வேண்டாமா? அப்டின்னு எல்லோரயும் அந்த வருத்தத்திலிருந்து வெளியேற்ற அவங்க மனசை திசை திருப்பி என்னை கவனிக்க வச்சாங்க. அத்தை சொல்றதும் நியாயமாக தோணவும், முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டுமென என்னை பார்க்க ஆரம்பிச்சாங்க…”

அதுக்கு “பின்னால அந்த ரூம்ல இருந்த திங்க்ஸ் எல்லாத்தையுமே வேற இடத்துக்கு ஷிப்ட் பண்ணிட்டாங்க. யாருமே போகமாட்டாங்க. அந்த ரூம்க்கு. பாட்டி தான் வாரம் ஒருநாள் மட்டும் வேலையாளை வச்சு சுத்தம் செய்து விளக்கு மட்டும் ஏத்தி வச்சிட்டு வருவாங்க. நாங்க யாருமே அந்த பக்கம் போகமாட்டோம். முக்கியமா அம்மா…”

“அடுத்த ஒரு வருஷம் எப்டி போச்சுன்னே தெரியலை. பேசுவாங்க, சாப்பிடுவாங்க, ஆனா எதிலேயும் உயிர்ப்பிருக்காது. அப்போதான் வேணி அத்தை கெளரி திதியன்னைக்கு வந்திருந்தாங்க. என் அத்தைக்கு நானும் கௌரியும்னா உயிர். வந்த மறுநாளே என்ன நினச்சாங்களோ? என்னை கட்டிபிடிச்சுட்டு கெளரி வரபோறாடா பிரபா…”

“நம்ம கெளரி நம்மை விட்டு எங்கயும் போகலைன்னு சொல்லி ரொம்ப சந்தோஷபட்டாங்க. அம்மா முகத்தை அன்னைக்கு பார்க்கணுமே. ஆனாலும் அத்தை வயித்தில பிறக்கிற குழந்தை அவங்களுக்கு எப்டி சொந்தமாக முடியும். அந்த விஷயத்தை அப்டியே விட்டுட்டாங்க. என்னோட கவலையே பாதி உயிரை குடிச்சிருச்சு அம்மாவை. அப்பா வீட்டுக்கு வந்ததுமே ஏதாவது பேச்சுக்குடுத்துட்டே இருப்பாங்க. அப்டியாச்சும் என்னால பேச முடியுதான்னு. மொத்த முடும்பமும் அவ்வளோ பாடுபட்டாங்க…”

அப்போது அவர்கள் அடைந்த வேதனைக்கு இப்போது தன்னால் ஏதும் நிவாரணம் அளிக்க முடியுமா என்ற யோசனைக்குள்ளானாள். தற்போது தன்னால் அவர்களுக்கு தரமுடிந்தது நிம்மதியும் அன்பும் மட்டுமே என்று எண்ணியவள் அதை காலம் முழுவதும் குறையாமல் தரவேண்டுமென்று உடனே உறுதி எடுத்துகொண்டாள்.

“வேணி அத்தைக்கு குழந்தை பிறந்ததும் எல்லோருமே பார்க்க போனோம். அப்டியே அச்சு அசல் கௌரியேதான். எல்லோருக்குமே ஆச்சர்யம். நாங்க போனதுமே குழந்தையை தூக்கி அம்மா கையில குடுக்க சொன்னாங்க அத்தை. எனக்கு உடம்பெல்லாம் ஏதோ பண்ணுச்சு ஆசையா அந்த குழந்தையை அம்மாக்கிட்ட இருந்து வாங்கினேன். அவளோட ஸ்பரிசம் என்னை என் கௌரிக்கிட்ட உணர்ந்தது போலவே ஏதோ ஒரு உள்ளுணர்வு, வாய்விட்டு கதறனும் போல கண்ணீரா வந்துச்சு. நான் பேசினேன் அப்போ. கெளரி அம்மா நம்ம கௌரின்னு…”

“எல்லோருக்குமே அதே எண்ணம் போல. அவ்வளோ சந்தோஷம். நான் பேசினதுல இரட்டிப்பு சந்தோஷம். வேணி அத்தை என்ன சொல்லுவாங்களோன்னு அவங்க முகத்தை பார்த்தேன். அவங்களும் ஆமாடா கண்ணா உன்னோட கௌரிதான். இவளையும் நீ தான் பத்தரமா பார்த்துக்கணும்ன்னு சொல்லிட்டாங்க. என் கௌரியே  எனக்கு திரும்ப கிடச்சுட்டா. இப்போ வரைக்கும் அவ என் கெளரி, என் தங்கை கௌரியாக தான் இருக்கா…” என்று முடித்து மெலிதாக புன்னகைத்தான்.

வேணியை நினைத்து பிரமிப்பாக இருந்தது. இவ்வளோ நல்லவங்களா? பின்ன ஏன் அப்படியெல்லாம் பேசினாங்க? என்று எண்ணம் வந்து நிற்கவும் அதை தன்னவனிடத்தில் கேட்டும் விட்டாள்.

“எப்படி பேசினாங்க? என்று அவனும் திரும்ப கேட்கவும் தான் உரைத்தது தான் அதை பற்றி தன் கணவனிடத்தில் எதுவுமே சொல்லவில்லை என்று.

அவளது மௌனத்திற்கான காரணத்தை அறிந்தவனோ சிறு மர்மபுன்னகையோடு லேப்டாப்பை எடுத்து வந்து அந்த வீடியோவை ஓடவிட்டான். அதை பார்த்ததுமே நந்தினிக்கு கண்கள் இரண்டும் தெறித்துவிடும் அளவிற்கு உறுத்து விழித்தாள்.

உதயாவின் துளைக்கும் கண்களை உணர்ந்தவள் போல வாயை திறவாமல் லேப்டாப்பையே வெறிக்க பார்த்தாள்.

“இப்போ கூட நீயா என் கிட்ட சொல்லமாட்ட? அப்டித்தானே?…” என்று சற்று காரம் ஏறிய குரலில் கேட்கவும்,

“அதான் உனக்கே தெரிஞ்சிருக்கே. தெரிஞ்சும் இதையும் என் கிட்ட இருந்து நீ தான் மறச்சிருக்க?…” என்று முறைத்துகொண்டு வேதாளம் முருங்கை மரம் ஏற எத்தனிக்க அவளது துணைவன் தான் பாவம் பதறிவிட்டான்.

“நீயா சொல்லுவன்னு நினச்சேண்டா. அன்னைக்கே அத்தையை போய் கண்டிச்சும் வச்சுட்டேன்…” என்று அன்றைய நிகழ்வுகளை சொல்லவும் தான் இத்தனை நாளாக வேணி அமைதியாக இருந்ததன் காரணம் நந்தினிக்கு விளங்கியது.

“எனக்கு ஒரு சந்தேகம்?…” எனவும்,

“கேளுமா. உனக்கு அது வரலைனாதான் எனக்கு நீ என் பொண்டாட்டியானே சந்தேகம் வரும்…” என்றவனது முதுகில் ஒரு அடி விழுந்தது.

“என்ன நீ? சும்மா சும்மா என்னை அடிச்சுட்டே இருக்க? அப்போ என்னடான்னா உதைக்க? இப்போ அடிக்க. இன்னைக்கு நேரமே சரியில்லை. இந்த விஷ்ணு பையன் முகத்தில்தான் முழிச்சேன். விடியவும் வரட்டும் அவன். வச்சுக்கறேன் கச்சேரியை…” என்று இல்லாத விஷ்ணுவை வம்பிழுக்க சூளுரைத்தான் அவனது உயிர் நண்பன்.

“ஆமாமா வரட்டும் அவங்க. நாளைக்கு நானும் கொஞ்சம் பேசவேண்டியது இருக்கு அவங்கக்கிட்ட. அவங்க கூட அந்த பொறுக்கி ராஸ்கல் பத்தி என் கிட்ட இருந்து மறைச்சுட்டாங்கள்ள…” என்று கோவமாக கூறவும்,

“வேண்டாம்டா. அவனை விட்டுடு. நான் தாங்கிப்பேன். அவன் தாங்கமாட்டான். கொஞ்ச நாள்ல நம்ம வீட்டு மாப்பிள்ளையா வேற ஆக போறான்…”என கெஞ்சியவனை சட்டை செய்யாமல்,

“தன் மகளையே தாரை வார்த்து கொடுக்கும் அளவிற்கு இவ்வளோ நல்ல வேணி சித்தி எதனால கௌரியை…” என்று வாக்கியத்தை முடிக்க முடியாமல் திணறினாள்.

தன்னாலேயே அப்படி நினைக்க முடியவில்லையே. இதை கேட்ட உதயாவிற்கு எவ்வளோ வலித்திருக்கும் என்று எண்ணினாள். அன்றைக்குத்தான் வேணியின் உள்மன எண்ணம் வெளிப்பட்டதாக நந்தினி நினைத்துக்கொண்டிருந்தது. இது தன் கணவனுக்கு ஜீரணிக்கமுடியாத வேதனையை தந்திருக்கும் என்று அவனுக்காக வருந்தினாள்.

அப்போதுதான் இன்னொன்றும் நினைவிற்கு வந்தது. வரவேற்பின்  போதும் தங்கை என்று அறிமுகப்படலத்தில் சொல்லியதற்கு கோவப்பட்டதும் நினைவில் வந்து அப்போ ஏற்கனவே இதை பத்தி வீட்டில் நிச்சயம் பேச்சுவார்த்தை நடந்திருக்கணுமே என்று கண்டுபிடித்தது அவளது துப்பறியும் மூளை.

இரண்டரை வருடங்களாக செயல்படாமல் இருந்த அந்த மூளை இன்றுதான் செயல்பட்டிருக்கிறது. அது எதனால் என்று என்னும் போதே முகம் இருண்டுவிட்டது நந்தினிக்கு.

மனைவியின் கசங்கிய முகத்தை பார்த்தவன்,

“என்னடா ஆச்சு?…” என வினவவும், “ஒன்றுமில்லை…” என்று தலையசைத்தாள். அவளின் உணர்வுகளை புரிந்தவனாக,

“வேணி அத்தையோட மாற்றத்துக்கான காரணம் தானே உனக்கு தெரியனும்?…” எனவும் மறுக்க நினைத்தவளின் தலை தாமாகவே அவனது கேள்விக்கான பதிலை ஆமாமென ஆமோதித்தது.

“சொல்றேன், அதுக்கு முன்னால நீ போய் முகம் கழுவிட்டு வா. மணி மூன்றரை ஆகிடுச்சு. நான் போய் சூடா சாப்பிட எதாச்சும் எடுத்துட்டு வரேன். இவ்வளோ நேரம் நடந்த போராட்டத்துல பசிக்குது…” என கூறிவிட்டு அவளின் மறுப்பை மறுத்துவிட்டு கீழே சென்று மறைந்தான்.

அடுக்களைக்குள் நுழைந்தவன் வேகமாக அடுப்பில் பாலை காய வைத்துவிட்டு, இன்னொரு அடுப்பில் தோசைக்கல்லை வைத்தான். ஒரு வெங்காயத்தை எடுத்து மிக வேகமாக பொடியாக நறுக்கியவன் அதனோடு மல்லித்தழை, பச்சைமிளகாய் அனைத்தையும் நறுக்கி முட்டையில் உப்பு சேர்த்து கலந்து அந்த கலவையில் ரொட்டித்துண்டுகளை தோய்த்தெடுத்து தோசைக்கல்லில் மடமடவென போட்டெடுத்தான்.

அதை அழகாக தட்டில் அடுக்கியவன் அதன் மேலே மிளகுத்தூளை பரவலாக தூவிவிட்டு தங்களுக்கான பாலையும் எடுத்து மேலே சென்றான்.

“இந்நேரம் என்ன சாப்பாடு வேண்டிக்கிடக்கு?. சொல்ல சொல்ல கேட்காம போனான்ல எனக்கொண்ணும் வேண்டாம்…” என்று முறுக்கிக்கொண்டு அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தவளுக்கு அவன் வருமுன்னே எடுத்துவந்த துரித உணவின் வாசனை வந்தடைந்து இல்லாத பசியை கிளப்பியது.

உள்ளே வந்தவன், “ஹேய் என்னடா? நீ போய் ப்ரெஷ் ஆகிட்டுவா. சூடு ஆறும் முன்னே சாப்பிடலாம்…” என்று கிளப்பியவாறே கொண்டுவந்த தட்டுக்களை சிறிய அளவிலான மேஜையில் அடுக்கி வைத்ததை பார்த்ததுமே வயிற்றுக்குள் இருந்த பசியரக்கி  கயமுயகயமுய வென கத்தத்தொடங்கினாள்.

“ப்ச் பசிக்கலைன்னு சொன்னா கேட்கிறதே இல்லை. சரி உங்களுக்காக வேணும்னா சாப்பிடறேன்…” என்று பந்தாவாக கூறிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவள் சென்ற வேகத்தில் திரும்பி வந்தாள்.

இந்த மூன்று நாட்களும் காய்ச்சலின் வேகத்தில் அரைமயக்கத்தில் இருந்தவளுக்கு வெறும் பாலும், கஞ்சியும், ரசம் சாதம் மட்டுமே அவளுக்குள் அனுப்பபட்டிருந்தது. நாக்கிற்கு ருசியாக சாப்பிட அதுவரைக்கும் நினைக்காதவளுக்கு கண் முன்னே தெரிந்த உணவை கண்டதும் பசிக்க தொடங்கியது.

“காரம் லேசாதாண்டா போட்டிருக்கேன். உனக்கு இப்போ அதிகமா காரம் சேர்க்க கூடாதுல அதான்…” என  தனக்காக  அக்கறையாக செய்து கொண்டு வந்தவனை ஒருகணமே கண்கள் நிரம்ப காதலோடு நோக்கினாள். அது எல்லாம் பொய்யோ என்னும் அளவிற்கு மறுகணம் அவள் முகம் சாதாரணமானது.

இருவரும் வேகமாக சாப்பிட்டு முடிக்கும் வரையிலும் அவ்விடத்தில் மௌனம் மட்டுமே குடிகொண்டிருந்தது. அனைத்தையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு கையலம்பி விட்டு வந்தமர்ந்தான்.

“ம்ம் சொல்லுங்க…” என்று உதயாவை ஊக்கினாள். இவளோ நல்ல மனம் கொண்ட வேணியின் மாற்றத்திற்கான காரணத்தை பற்றி அவசியம் தெரியவேண்டி இருந்தது நந்தினிக்கு.

“என்ன சொல்ல? நல்லவங்க நல்லவங்களா வாழ சிலர் அனுமதிக்கிறதில்லை. ஊருக்குள்ள அடுத்த வீட்டு வம்பிற்கென அலையும் சிலபேரால தான் அத்தை இப்டி ஆகிட்டாங்க. வார்த்தையில் தேன் தடவி பேச்சின் வழியாக அவர்கள் அறியாமலேயே இதயத்தில் நஞ்சை கலப்பது சிலருக்கு பொழுதுபோக்காகவே இருக்கு. சூழ்ச்சி புத்தியோடு சுயநல ஒட்டுண்ணிகளாக உருமாறி அடுத்த வீட்டு நிம்மதியையும் சந்தோஷத்தையும் உறிஞ்சி குடிச்சு வளரும் சில ஜந்துக்களில் ஒருத்திதான் சுந்தரி…”

“அத்தை அவ்வளோ நல்லவங்க. முன்னலாம் தெளிவாதான் இருந்தாங்க. அவங்க வீட்டு பக்கத்துல இருந்த சுந்தரியோட உபயம் தான் இது. சில்லறை உதவிக்காக அத்தைக்கிட்ட அடிக்கடி பேசி ரொம்பவே ராசியாகிட்டாங்க. அந்த பொம்பளை தான் எனக்கும் கௌரிக்கும் கல்யாண பேச்சை ஆரம்பிச்சிருக்காங்க…” என்று சொல்லும் போதே அவனது முகம் அருவருப்பில் சுருங்கியது.

Advertisement