Advertisement

நட்சத்திர விழிகளிலே வானவில்

நட்சத்திர விழிகள்  1

“என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்த நீ யார்?…..” என்று கேட்டுவிட்டு அவசரப்பட்டு சீண்டிட்டோமே என்ன சொல்ல போறானோ? என்று அவனையே பார்த்தபடி பரிதவித்து நின்றார் ஏழுமலை.

“சாரி மிஸ்டர் ஏழுமலை உங்க பொண்ணுக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்கிறதை நான் தவறென்று சொல்லவே மாட்டேன். ஆனா என்னோட பொண்டாட்டிக்கு நீங்க எப்படி கல்யாணம் பண்ணி வைக்கனும்னு முடிவெடுத்தீங்க?”

“தம்பி நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன்!” என்ற சந்திராவின் குரல் அவனிடம் இறைஞ்சியது. அவனோ மணக்கோலத்தில் நிற்பவளை விழிகளில் நிரப்பிக்கொண்டே தீவிரமான தலையசைப்போடு முடியாதென்றான்.

அவளோ “இவனா?..இவன் ச்சே ச்சே இவர் எப்படி இங்கே?..” திடீரென உருவான உணர்வு என்னவென்று அறிவதற்கு, ஆராய்ச்சி நடத்த ஆயத்தமானாள்.

அவசரமாக ஆராய்ந்ததின் விடையோ, விடுதலை உணர்வென்று சொல்லியது. ஆனாலும் வெளிக்காட்டமுடியாத துயரத்தில் கண் முன் நடக்கும் விவாதத்தை ஜீரணிக்க முடியாமல் நின்றாள். வார்த்தைகள் தடித்ததில் செய்வதறியாது திகைத்தாள். இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? என்று அஞ்சியபடி உடல் நடுங்க நின்றாள்.

“இதுக்கு நான் ஒத்துக்க முடியாது, என் பொண்ணுக்கு நான் நினச்சது போலதான் கல்யாணம் செய்து வைப்பேன்!” என்றார் ஏழுமலை.

“நீங்க ஒத்துக்கறதுக்கும், ஒத்துக்காம போறதுக்கும் நான் ஒன்னும் உங்க கிட்ட பொண்ணு கேட்டு வரலை மிஸ்டர், என் பொண்டாட்டியை நான் எல்லோர் முன்னாடியும் தொட்டு தாலிகட்டின என் பொண்டாட்டியை தான் கேட்டு வந்திருக்கேன்!”…. என் என்பதில் இன்னும் அதிகளவு அவனால் முடிந்த அளவுக்கு அழுத்தத்தை ஏற்றி.

“அதுக்கு உங்களோட அனுமதி எனக்கு தேவையில்லை, மைன்ட் இட். இதுக்கு மேலயும் என்னை பேச வைக்காதீங்க, நல்லதுக்கில்லை!”…. என்றான் எரிச்சலோடு.

ஆதாரங்களோடு அக்கினி பிழம்பாய் நின்றவனின் முன்னால் தன் வாதம் எடுபடாதது மட்டுமில்லாமல் அதை விட தான் அத்தனை தூரம் மன்றாடியும் அதை மறுத்து மணமேடையின் அருகில் நிற்பவனை என்ன செய்வதென்று தெரியாமல் வெறுப்பை உமிழும் கண்களோடும்  கலக்கத்தோடும் சுற்றி குழுமி நின்ற உற்றார் உறவினரை காண முடியாமல் இயலாமையோடு தலை கவிழ்ந்தார்.

கூட்டத்தில் குழுமியிருந்தவர்களில் ஒருவர் எழுந்து, “தம்பி என்ன சொல்றீங்க மணமேடை வந்த பொண்ணை பொண்டாட்டின்னு சொல்றீங்களே?” என்றார்.

“வேற எப்டி சார் சொல்ல சொல்றீங்க?” என்று அவரையே திருப்பி கேட்டுவைத்தான்.

“இவ்வளோ பேர் இருக்குற கூட்டத்துல வந்து அபாண்டமா பேசறியே, உனக்கு எவ்வளோ துணிச்சல் இருக்கணும்” என்றான் இன்னொருவன்.

“என்னங்கய்யா இது? என் பொண்டாட்டியை என் பொண்டாட்டின்னுதானே நான் சொல்ல முடியும், வேற எப்படி சொல்ல?” என்றான் கடுப்பாக.

“வார்த்தையை அடக்கி பேசுங்க. என்ன சொன்னாலும் நாங்க நம்பிருவோமா? மரியாதையா போய்டுங்க, தேவையில்லாம கலாட்டா வேண்டாம்!” என்றார் ஊர் தலைவர். 

“ஏனப்பா பார்க்க படிச்சவனா பதவிசா இருக்க, நீ ஏன் இப்படி பேசற? தப்புப்பா பொம்பள புள்ள மேல பழி போடாத, பெரிய பாவம்யா. வாழவேண்டிய பொண்ணுப்பா அது, உனக்கு புண்ணியமா போவும் கிளம்பிரு, இல்லைனா ஊர்க்காரங்கலாம் உன்னை உண்டில்லைன்னு ஆக்கிபுடுவாங்கயா!” என்று அவனை அங்கிருந்து அப்புறப்படுத்த பெண்களில் சிலரும் முயன்றனர்.

அனைவருக்கும் விளக்கம் சொல்லவேண்டி இருக்கிறதே என்று ஆயாசமடைந்தவன் முகத்தை இரு கையாலும் அழுந்த துடைத்தபடி அனைவரையும் நோக்கி,

“சரிங்க நீங்க சொல்றது போல நான் கிளம்பறேன்!” என்று தனது பதிலில் அனைவரின் முகத்திலும் பிரகாசத்தை வரவழைத்து வம்பர்களின் முகத்தில் மண்ணை வாரி கொட்டினான்.

அனைவரும் ஆசுவாசமடைந்து அரைநொடியாகும் முன்னரே அடுத்த அம்பை அனாயசமாக எறிந்தான்.

“இதோ இவங்க கிட்ட கேளுங்க. அந்த ஊர் மக்கள் அத்தனை பேர் மத்தியில நான் என் பொண்டாட்டி கழுத்தில தாலி காட்டினப்போ அந்த இடத்துல விஷயம் தெரிந்து அடுத்த நிமிஷம் அங்க வந்தவங்க ஏன் அதை தடுக்கலைன்னு. ஏன் மறுத்து பேசாம அமைதியா இருந்தாங்கன்னு கேளுங்க. நான் சொல்றது உண்மையா இல்லையான்னு” என்றான்.

அப்போதும் அவள் என் மனைவிதான் என்று உரிமையை வார்த்தையிலேயே அழுத்தமாக சொல்லிவிட்டு கேள்விக்கனையிலிருந்து தப்பி அவர்களை சிக்கவைத்து விட்டு பார்வையாளனாக மாறி அவர்களின் பதிலை அறிய ஒதுங்கி (ஒதுங்குவது போல ஒதுங்காமல்) நின்றான்

அவன் கை காட்டியது வேறு யாருக்காயிருக்கும்? எல்லாம் ஏழுமலைக்கும், சந்திராவிற்கும் தான்.

என்னவென்று பதிலை சொல்வார்கள்? அவனும் விடாமல் கேட்டான் விடாகண்டனாக.

“சொல்லுங்க மிஸ்டர் ஏழுமலை.  ஏன் அமைதியா இருக்கீங்க?”

“தடுத்து பேசினீங்களா அதை? இல்லைதானே!”

“இப்போ சொல்லுங்க, இல்லை இன்னும் அங்க யார் வந்திருந்தாங்கன்ற விவரத்தை சொல்லனுமா?” என்று எள்ளலாக சொன்னவனை பார்த்து அடிக்குரலில் “அங்க அந்த சம்பவத்தப்போ நீங்க என்ன சொன்னீங்க? இப்போ என்ன செய்றீங்க? உன்னை போய் மலைபோல நம்பினேன்ல என்னை சொல்லனும்யா!” என்று சீறிய ஏழுமலையை அமைதியாக பார்த்தான்.

“இப்போவும் ஒன்னும் பெருசா நடக்கலை மிஸ்டர் ஏழுமலை, நான் சொன்னதை செய்ங்க நான் பேசினது தப்புன்னு சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு கிளம்பிடறேன்!” என்றான் குரலிலும் அந்த அமைதியை கொண்டுவந்து.

“நீங்க அதை செய்யாத வரைக்கும் என்னாலையும் பின்வாங்க முடியாது, அப்படி செஞ்சா எனக்கு நானே தினம் தினம் மரணதண்டனை கொடுத்துகிட்டதுக்கு சமம்!” என்றான் வார்த்தைகளில் வலியோடு.

ஊர் தலைவர் ஏழுமலை அருகில், “என்னப்பா இதெல்லாம்? அந்த புள்ள என்னனமோ சொல்லுதே? உண்மை என்னனு சொல்லுப்பா? நாங்க இருக்கோம்ல!” என்று ஊக்கினார்.

“இப்டி அமைதியா ஏழுமலை நிக்கிறதா பார்த்தா தம்பி சொல்றதுதான் உண்மை போலயே?” என்றார் மற்றொருவர்.

“யாரை நம்பறதுன்னே தெரியாலையே இந்த காலத்துல?” என்று அவரவர் இஷ்டத்திற்கு பேச ஆரம்பித்து விட்டனர். 

அந்த திருமண மண்டபத்தின் உள்ள அனைவரும் வாய்க்கு வந்தபடி தங்களின் கற்பனை குதிரைக்கு தீவனமிட்டு கொண்டிருந்தனர்.

ஏழுமலையின் முகத்திலிருந்த அப்பட்டமான வேதனையை கண்டவன் “போதும் தயவு செய்து இதுக்கு மேலயும் யாரும் அவங்கவங்க வாய்க்கு வந்தபடி பேசாதீங்க?” இது எங்க குடும்ப விஷயம் தவிர்க்கமுடியாமதான் சபைக்கு வந்துச்சு!” என்று அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டான்.

மணமகளாய் நடந்து கொண்டிருக்கும் மோசமான சூழலை அறிந்து அதிர்ந்து நின்றவளை உறுத்து விழித்தபடி நெருங்கியவன் கைபிடித்து அழைத்து சென்று மணமேடையில் அமர வைத்து தானும் அவள் அருகில் அமர்ந்தான்.

“அய்யரே மந்திரத்தை சொல்லுங்க!”

“இல்லை பெண்ணோட தோப்பனார்????????????” என்று இழுத்தவர் அவனது முறைப்பிற்கு அஞ்சி மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தார்.

அதிர்ச்சியுடன் பார்த்துகொண்டிருந்த பார்வையாளர்களை நோக்கி “ முதல்ல நடந்த எங்களோட கல்யாணம் நீங்க யாருமில்லாம நடந்துச்சு, இப்போ எல்லோரோட ஆசிர்வாதத்தோட நடக்கனும்னு விரும்பறேன். சோ ப்ளீஸ் எல்லோரும் எங்களை முழுமனசோட வாழ்த்திட்டுதான் போகனும்!” என்று அழுத்தமான வேண்டுகோளை விடுத்தபடி காரியத்தில் கண்ணாகினான்.

சலசலத்த கூட்டத்தார் அனைவரும் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்தனர்.

“கெட்டிமேளம் கெட்டிமேளம்!”

திருமாங்கல்யத்தை வாங்கியவன் அதை அவளது கழுத்தில் அணிவிக்கும் முன் அவள் முகத்தை ஆராய்ந்தான். கலங்கிய கண்களோடு ஏறிட்டு பார்த்தவள் பார்வை கேட்கும் கேள்வியறியாது அவள் கண்களை பார்த்தது பார்த்தபடி மூன்று முடிச்சிட்டு வகிட்டில் திலகமிட்டு அனைவரின் முன்னிலையில் மனைவியாக்கி ஏழுமலையை நோக்கி பார்வையொன்றை வீசினான்.

மகளது திருமணம் அனைவரும் மெச்சும் படி நடத்த நினைத்தவர் அவளது வாழ்வு அனைவரின் வாய்க்கும் அவலாகியதை கண்டு, “எல்லாம் உன்னால்தான்!” என்று உக்கிரமாய் பார்த்தார்.

சற்றும் சளைக்காமல் பார்த்தவன் பார்வையில் “நான் அப்போவே சொன்னேனே கேட்டீங்களா?” என்ற செய்தியோடு.

“கிளம்பறோம்!” ஒருவார்த்தையோடு முடித்துகொண்டான்

பதில் பேசாமல் நின்ற தகப்பனை நோக்கி

“அப்பா நான் என்ன செய்யனும்?” என்று வினவிய மகளை பெரும் துயரத்துடன் “கிளம்புமா நீ கிளம்பு எல்லாம் கை மீறி நடக்கும் போது நம்மால ஒன்னும் செய்ய முடியாது நீ கிளம்பு!” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.

“நீ மாறவே இல்லை என்ன? அப்பவும் உங்கப்பா பின்னாடியே ஆட்டுக்குட்டி மாதிரி போன, இப்பவும் உங்கப்பா கிட்ட என்ன செய்யணும் என்று கேட்டுட்டு இருக்க? நீயா சுயமா யோசிக்கவே மாட்டியா?” என்றவனை அயர்ச்சியோடு பார்த்து அவள் கேட்க நினைத்த கேள்வியை அவனது மனசாட்சி கேட்டது.

“நீ தானே அவ அப்பாக்கு ஐடியா குடுத்த இப்போ வந்து நல்லவனாட்டம் குதிக்க? உங்கப்பா பின்னால போகாத என் கூட வான்னு நீ ஏன் கூப்பிடலை? என்று காரி துப்பியது. அதையும் அசராமல் அடக்கி ஆழத்தெரிந்தவனாயிற்றே?

இவ்வளவு களேபரத்திலும் மாப்பிள்ளை வீட்டினர் சத்தமில்லாமல் பொட்டியை கட்டியதை நினைத்து மனதிற்குள் நிம்மதியடைந்தான்.

“அந்த விஷகிருமிகளை பின்னால் கவனித்து கொள்ளலாம். என் கையில் மாட்டாமல் எங்கே தப்பித்து போய்விடுவார்கள்?” என்று தன்னைத்தானே சீராக்கி கொண்டு.

சந்திரா “அம்மாடி கண்ணு , நீ வருத்தபடாதே தாயி எல்லாமே சீக்கிரம் சரியாகிடும். தம்பி கண்டிப்பா உன்னை நல்லா பார்த்துக்குவாங்க. நீ அழுவாத இங்க பிரச்சனைகள் சரியானதும் நான் உங்கப்பாவை கூட்டிட்டு உங்களை பார்க்க வரோம்…….!” என்ற தாயை கட்டிகொண்டு கதறியவள் தாயின் இறுதி வார்த்தையில் ஓரளவு தெளிந்தாள் மித்ரா என்கிற மித்ரா நந்தினி.

 “அம்மா உங்களை  விட்டு நான் எப்படி இருப்பேன்?” இன்னும் கலக்கம் அகலாமல்

“ஏன் இன்னைக்கு உங்கப்பா முடிவு பண்ணிய படி இந்த கல்யாணம் அவனோடு நடந்திருந்தா மட்டும் இவங்களை விட்டுட்டு சந்தோஷமா இருப்பியா என்ன?” என்றவன் சந்திராவை நோக்கி “நாங்க கிளம்பனும், இப்போவே நேரம் ஆச்சு!” என்றபடி மணிக்கட்டை பார்த்தான் உதய் பிரபாகரன். 

“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி நந்து பொண்ணு கொஞ்சம் பயந்த சுபாவம். ஏதாச்சும் தெரியாம தவறு பண்ணிட்டா கொஞ்சம் எடுத்து சொல்லுங்க, கேட்டுக்கும். புரிஞ்சு நடந்துக்கும் தம்பி!”

தாய்க்கே உரிய தவிப்போடு தயங்கி தயங்கி பேசிய சந்திராவை பார்க்கையில் பிரபாகரனின் மனம் பிசைந்தது. கலக்கத்தை போக்கும் வண்ணம்

“உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம். நான் மித்ராவை  நல்லபடியா  பத்திரமா பார்த்துப்பேன்!”  என்ற உத்திரவாதம் கொடுத்து சந்திராவின் வயிற்றில் பாலை வார்த்தான்.

மகளுக்கு மேலும் சில அறிவுரைகளை வழங்கி அவனை மருமகனோடு அனுப்பும் முனைப்பில் கணவனை மறந்தாள். சீரும் சிறப்புமாக புக்ககம் அனுப்பவேண்டிய பெண்ணை வெறும்கையோடு கட்டின புடவையோடு அனுப்பிவைக்க நேரிட்ட நிலையை நிந்தித்தவாறு சீர்வரிசைகளை பேச பற்றிய நேரம் இதுவல்ல என்று மனதிற்கு கடிவாளமிட்டு அமைதியாக ஆண்டவனை வணங்கியபடி அனுப்பிவைத்தார்.

மண்டபத்திற்குள் ஏதோ களேபரம் என்றறிந்த மதிவாணன் (உதய் பிரபாகரனின் கார் ட்ரைவர்) நடப்பவையனைத்தையும் நம்பமுடியா பார்வையுடன் பார்த்துகொண்டிருந்தான். காரின் அருகில் நெருங்கியவனை பார்த்து, “அண்ணே என்ன இது?” என்று கேட்டு அடுத்த வார்த்தைகள் படையெத்து வெளிவரும் முன்னே ஒற்றை பார்வையில் அணைபோட்டு தடுத்து, “ப்ச் முதல்ல காரை எடு மதி!” என்றவனின் வார்த்தைகளில் கட்டளை மட்டுமே.

தனது வாழ்க்கை பயணத்தை உதய் பிரபாகரனுடன் தொடங்கிவைத்த கடவுளுக்கு மானசீகமாக நன்றி செலுத்திவிட்டு நெஞ்சம் முழுவது பயத்தை மட்டுமே சுமந்தபடி காரிலேறி அமர்ந்தவளை “அடுத்து என்ன செய்வது?” என்று குழப்பத்தோடு பார்த்தான்.

நடந்ததனைத்தும் தன்னையும் மீறி நடந்தது, அதற்கு தான் எப்படி பொறுப்பாகமுடியும்? என்று நினைத்தவன்,

தான் வந்த வேலை என்ன? இங்கே நடந்ததென்ன? என்று யோசிக்க யோசிக்க ஒன்றும் பிடிபடாமல் தலை வேதனையை கொடுத்தது. அதற்குமேல் யோசிக்காமல் கண்ணை மூடி அமர்ந்தவன் தனது இருப்பிடம் நோக்கி மனையாளோடு பயணபட்டான்.

இருவரின் மனதினுள்ளும் காதல் இல்லை. அவனுக்கோ அவளை சுற்றி பின்னபட்டிருக்கும் இந்த வலையை விட்டு எப்பாடுபட்டாவது  காப்பாற்றியே ஆகவேண்டுமென்பது மட்டுமே இலக்கு. அப்படியே மனதிற்கு திரும்ப திரும்ப சொல்லிவைத்திருந்தான். அதற்குமேல் ஏன் இப்படி நடந்துகொண்டான் என மனக்கிடங்கை கிளறவோ, பழைய நினைவடுக்கிலிருந்து உருவவோ முற்படவில்லை.

அவளுக்கோ ஏற்கனவே உதயாவின் கையால் தாலி வாங்கிய  தன்னால் இன்னொருவனின் தாலியை ஏற்பது தன் பெண்மைக்கே இழுக்கு, தற்கொலைக்கும் தைரியம் இல்லாமல் போய்விட்டதே தனக்கு, எப்படி  இதிலிருந்து எவ்வாறு தப்பிக்க என்று மறுகியவாறு இருந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாய் வரவும் ஆசுவாசம் அடைந்தாள்.

அவ்வளவே. இருவருமே காதலில்லாமல் ஒரே திசையை நோக்கி பயணம் செய்தனர்.

…………

கண்ணிலிருந்து கார் மறையும் வரை விழியகலாது கண்ணீரோடு பார்த்துகொண்டிருந்த சந்திரா கணவரை தேடி மண்டபத்திற்குள் நுழைந்தார்.

மண்டபத்தின் மாடியில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த ஏழுமலையை கவலையுடன் கண்ட சந்திரா “என்னங்க!”…..என்றழைத்தும் பதில் இல்லாமல் போகவே அருகில் நெருங்கி தோளில் கைவைத்து திருப்பினார்.

“சந்திரா, மானம் மரியாதையெல்லாம் இப்டி வாங்கிட்டு போயிட்டானே?”….

“கெஞ்சினேன்….வேண்டாம் தம்பி எங்க தலையெழுத்து படியே நடக்கட்டும்னு கெஞ்சி பார்த்தேனே,,,,,,,கேட்டானா? ம்ஹூம்!”…

“அவன் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு கடைசியில அத்தனை பேர் முன்னாலும் இப்படி என்னை தலைகுனிய வச்சிட்டு போயிட்டானே?”…….

“இனி நான் எப்படி தலைநிமிர்ந்து ஊருக்குள்ள நடப்பேன் நாலுபேர் என்னை நாலுவிதமா இல்லை நானூறு  விதமா பேசுவாங்களே!”………

அவர் பேச பேச பதில் சொல்லமுடியாமல் புடவை தலைப்பை வாயில் வைத்தபடி சத்தமில்லாமல் அழுதுகொண்டிருந்தார் சந்திரா.

“அவங்க கல்யாணம் எப்டி நடந்துச்சுன்னு மறந்திட்டு பேசறானா அவன்?”………

“என் பொண்ணுமேல எனக்கில்லாத அக்கறை அவனுக்கு எங்கிருந்து வந்துச்சு?”…..

சந்திராவின் அண்ணனும் அண்ணியும் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர்.

சந்திராவை வேகமாக நெருங்கி தோளில் சாய்த்துகொண்ட அண்ணி பூரணி “விடு சந்திரா நடந்ததை மாத்த முடியாது நம்ம புள்ளைக்கு அந்த பையன் தான்னு ஏற்கனவே முடிச்சு போட்ருக்கு போல. அதை மாத்த நாம நினைச்சோம். ஆனா அது கடவுளுக்கே பிடிக்காம பொண்ணை உரியவங்க கிட்ட சேர்த்திருக்கு!”…..

“நாம அப்படி தான் நினச்சு மனசை தேத்திக்கணும். அழுது புலம்பி என்ன ஆகபோகுது? நடந்ததை மத்திடவா முடியும்?”….

பேசாம அவங்களை ஏத்துகிட்டு நம்ம பொண்ணை வரிசையோட அனுப்பி வைக்கிறதை விட்டுட்டு இப்டி வெறும் கையோட அனுப்பிருக்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு!”………..

“ஆமாங்க மாப்ள, பூரணி சொல்றதுதான் எனக்கும் சரின்னு படுது. இங்க மத்த வேலையை பசங்க கிட்ட சொல்லிட்டேன் அவங்க வந்தவங்களை கவனிச்சு அனுப்பிட்டு இருக்காங்க!”…..

“நாம போய் நந்தும்மாவை போய் பார்த்துட்டு வருவோம்.  புள்ள தனியா தவிக்கும் மாப்ள!” என்றார் நேசமணி தனது தாய்மாமனது  ஸ்தானத்தை விட்டுகொடுக்காமல்.

அதுவரைக்கும் அமைதியாக அவர்களின் சம்பாஷணையை கடனே என்று கேட்டுகொண்டிருந்த ஏழுமலை வெகுண்டெழுந்தார்.

“என்ன மச்சான் பேசறீங்க?”…….

“அவன் அன்னைக்கு பெரிய நல்லவனாட்டம் பேசினான்?”….

“வாக்கெல்லாம் குடுத்தானே? எல்லாம் காத்துல பறந்துருச்சோ?”……

“பார்த்துட்டு தானே இருந்தீங்க?”………

“நல்ல மனசு,…… நல்ல பையன்,…… எப்டி நம்ம நிலைமையை புரிஞ்சுகிட்டு நமக்கே நல்ல ஒரு வழியை  சொல்லுது இந்த தம்பின்னு புகழ்ந்து தள்ளுனீங்களே?”……… என்று தன்னிலையில்லாமல் பொறிந்து தள்ளினார்.

“மாப்ள நான் இப்டி சொல்றேனேன்னு கோவப்படாதீங்க!”… என்று நேசமணியின் வார்த்தையை கேட்டு புரியாமல் என்னவென்பது போல நிமிர்ந்து பார்த்தார் ஏழுமலை.

“அந்த தம்பி பேச வந்தது என்ன? நமக்குதானே நல்லது பண்ண வந்துச்சு!”….

“அதை புரிஞ்சுக்காம நீங்க உங்க பிடிவாதத்தால அவரை இந்த அளவுக்கு நடந்துக்க வச்சுடீங்க, இன்னைக்கு நடந்ததுக்கு காரணமே நாமதான்.!”….

கோவமாக ஏறிட்டு பார்த்தவரை “சும்மா முறைக்காதீங்க மாப்ள, உங்களோட பேச்சுதான் இந்த நிலைமைக்கு கொண்டு வந்துச்சு. இப்போவும் சொல்றேன் அந்த புள்ளைக்கு என்ன கொறச்சல்?”…… என்றார்  நேசமணி அதே கோவத்துடன்.

“அப்போ அவன் சொன்னதுபோல நடந்திருந்தா மட்டும் என்ன ஆகிருக்கும்?”…..என்று பிடிகொடுக்காமல் பேசுபவருக்கு என்ன சொல்லி புரிய வைப்பதென்று தெரியாமல் பேச்சை திசைதிருப்பும் பொருட்டு சட்டென,

“மாப்ள, கொஞ்சமாவது மரியாதை குடுத்து பேசுங்க. இப்போ அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை. உங்களுக்கு மருமகப்பிள்ளை, ஞாபகத்துல வச்சுக்கோங்க!”……

“என்னது மாப்பிள்ளையா?….. அவனா?….. எனக்கா?……இந்த நிலைக்கு ஆளாக்கிய அவனை நான் சும்மா விடமாட்டேன்!”….என்று மார்தட்டியவரை அமைதியாக பார்த்தபடி அருகில் வந்த நேசமணி ,

“சரி வாங்க, போய் உங்க ஆத்திரம் தீருமட்டும் என்ன செய்யணுமோ செய்துட்டு நாமும் புள்ளைய கையோட கூட்டிட்டு வந்துடலாம். வாழ்நாள் முச்சூடும் இனிமே அது நம்ம வீட்லயே தான் இருக்க போகுது!”…… என்றவரை பார்த்து பேந்த பேந்த விழித்தார் ஏழுமலை.

சந்திராவும் பூரணியும் நேசமணியின் பேச்சை ஆமோதிக்கும் விதமாக அமைதி காத்தனர்.

பாவமாக நின்றவரை ஆறுதலாக அணைத்து, ”மாப்ள இப்போதைக்கு ஒன்னும் நீங்க யோசிக்க வேண்டாம். அமைதியா இருங்க. ஒரு ரெண்டு நாள் போகட்டும்.!” என்றார் நேசமணி.

“ஆமாங்க இது நம்ம பொண்ணோட எதிர்காலம், நாமே நம்ம பொண்ணோட வாழ்க்கையை அழிச்சுடக் கூடாது, அவ நல்லா இருக்கணும் கொஞ்சம் பொறுமையா யோசிங்க!”…..என்று நிதர்சனத்தை கூறி “அவரே தெளியட்டும்”.. என்று தனிமையில் விட்டு விட்டு அடுத்து ஆகவேண்டிய வேலையை பார்க்க சென்றனர்.

நடந்த நிகழ்வுகளினால் ஏழுமலையின் மனமோ அமைதியிழந்து மகளின் எதிர்காலத்தை எண்ணி நிலைகொள்ளாமல் தவித்துகொண்டிருந்தது.

அவரது மனமோ உதய் பிரபாகரனை மன்னிக்காதே மன்னிக்காதே என உள்ளுக்குள் கூக்குரல் கொடுத்துக்கொண்டே இருந்தது.

அன்றைய நாள் ஆழிப்பேரலையாக அனைவரின் நிம்மதியையும் வாரிசுருட்டிக்கொண்டு வசதியாக தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது.
ஏழுமலையின் மனம் மாறுமா? மனக்காயம் ஆறுமா?

Advertisement