Advertisement

நட்சத்திர விழிகள் – 9
நந்தினியிடம் பேசிவிட்டு போனை வைத்த விஜி வந்து நின்றதோ ஏழுமலையின் முன்னால் தான்.
“என்ன மாமா? நான் பேசினதை கேட்டேங்க தானே? மித்து அங்க அழுதுட்டு இருக்கா, உங்களை நினச்சு.  நீங்க பேசாம இருக்கிறதால….” என குற்றம் சாட்டவும் பதிலின்றி அவனது முகம் காண்பதை தவிர்த்தவாறே துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு அவ்விடத்தை விட்டு நகர முயல,
“நில்லுங்க மாமா, எப்படி உங்களால இப்படி இருக்க முடியுது?, மித்ரா வாழ போயிருக்கிற ஊர்ல தான் அந்த பிரசாத் இருக்கான். அவன் நம்ம மித்ரா மேல இருக்கிற கோவத்தால பழிவாங்க முயற்சி பண்ணினானா என்ன செய்வீங்க? அது பத்தின கவலை இல்லையா?. அவகிட்ட தைரியமா இருக்க சொல்லி ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசலாமே?…” என அப்படியாவது நந்தினியிடம் பேசமாட்டாரா என்றெண்ணி கேட்கவும் முதலில் பதறத்தான் செய்தார்.
“உதயா அண்ணா சொன்னதை மறந்துட்டீங்களா? அந்த பிரசாத் நம்ம வீட்டு பொண்ணை பழிவாங்க ஒரு பொறுக்கியை மாப்பிள்ளையா ஏற்பாடு பண்ணி அனுப்புற அளவுக்கு யோசிச்சு இருக்கான். இன்னும் என்னலாம் செய்வான்…” என்று உதயாவின் பேரை சொல்லவும் ஏழுமலையின் கலக்கம் சற்று மட்டுப்பட்டது.
விஜியை திரும்பி பார்த்தவர், “அவளை காப்பாத்த அவளோட புருஷன் இருக்கும் போது அதை பத்தி நாம ஏன் கவலை படனும். நம்மகிட்ட இருந்து பிரச்சனை பண்ணி கூட்டிட்டு போக தெரிஞ்சவருக்கு அவளை காப்பாத்தவும் தெரியும். அவ புருஷனை மீறி மித்ராவுக்கு எதுவும் நடக்காது…” எனவும் அனைவருமே வாயடைத்துத்தான் போயினர்.
உதயாவின் மீது ஏழுமலைக்கு இப்படி ஒரு நம்பிக்கையும் அபிமானமும் இருக்குமென்பது அனைவருக்கும் திகைப்பை தந்தது. அதையும் தாண்டி உதயாவை அவர் என்று மரியாதையாக விழித்ததும் அனைவரின் கருத்திலும் பட்டது.
அனைவரையும் ஒரு முறை பார்த்தவர் நந்தினி பற்றி அதற்கு மேல் பேசுவதை தவிர்த்துவிட்டு கணத்த உள்ளத்தோடு நகர்ந்துவிட்டார்.
அவர் செல்லும்போதே அவரது கண்ணீர் கசியும் விழிகளை கவனித்தவன் நந்தினியிடம் பேச சொல்ல வாய் வரை வந்த வார்த்தையை மென்று முழுங்கிவிட்டு இனி தான் செய்ய ஒன்றும் இல்லையென நொந்தவாறே தன் அறைக்குள் சென்று விட்டான்.
இதற்கு என்றுதான் விடிவுகாலமோ? ஏழுமலையில் வீம்பு எப்போது மாறுமோ? என தங்களின் பாரத்தை கடவுளின் கையில் ஒப்படைத்துவிட்டு சந்திராவும்,பூரணியும் கண்ணீரோடு கலங்கி நின்றனர்.
…………
விடியலின் பின் முன் இரவில் நடந்ததனைத்தையும் மறந்தவாறு எதுவுமே நடவாதது போல இருவருமே நடந்துகொண்டனர்.
வந்து இரண்டு நாள் ஆகியும் நந்தினி வீட்டை இன்னும் முழுமையாக பார்க்கவில்லையே என நினைத்தவாறே அவளை கிளப்பி கீழே அழைத்து சென்றவன் முன் வந்து நின்ற கௌரியை கண்டு புன்னகைத்தவன்,
“என்னடா இன்னைக்கு இவ்வளோ சீக்கிரமா எழுந்துட்ட?…” என வினவியபடியே அவளோடு சோபாவில் அமர்ந்தான்.
“அண்ணி, அண்ணா உங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்.  அதுல இன்னைக்கு யாரெல்லாம் சிக்க போறீங்களோ?…” அதில் சிக்கபோவது யாரென தெரியாமலேயே குதூகலமாக கூறியவளை கண்டு,
“ஹே வாலு என்ன பண்ணிவைக்கபோற?… எங்க கிட்ட முதல்லையே சொல்லிடு. சஸ்பென்ஸ் வைக்காதடா….” என்றான்.
“ம்ஹூம், சொல்லமாட்டேனே….” என்று சொல்லிவிட்டு, “ ப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு வரேன் அண்ணா. இன்னைக்கு அவளுக்கு பர்த்டே. அதனால் ஈவ்னிங் லேட்டாதான் வருவேன். மதியண்ணா கூப்பிட வருவாங்க. சோ ஈவ்னிங் வந்து தான் அது என்னன்னு சொல்லுவேன்…” என்று சொல்லிவிட்டு பறந்துவிட்டாள்.
“இவளை இனி பிடிக்கமுடியதே. சரி நீ வா முதல்ல உனக்கு வீட்டையெல்லாம் சுத்திகாமிக்கறேன்…” எனவும் அதை ஆமோதித்தவாறே தன் துணைவனை பின்பற்றி சென்றாள்.
ஒவ்வொரு பெண்ணிற்குமே புகுந்த வீடென்பது பரவசத்தையும் பயத்தினையும் ஒரே நேரத்தில் தரவல்லது. பிறந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி புகுந்த வீட்டில் நடப்படும் செடியாக முதலில் தடுமாறினாலும் பின் நிலையாகி வேரூன்றி அவ்வீட்டின் அங்கத்தினருக்கே விருச்சமாகிறாள்.
நந்தினி புகுந்த வீட்டிற்கு தான் வந்த சூழ்நிலையையும், அவர்கள் புரிதலுடன் தன்னை ஏற்றுகொண்டதையும் நினைத்து பூரிப்போடு அசைபோட்டவாறே உதயா சொல்ல சொல்ல கேட்டுகொண்டே தன் வீட்டினை வலம் வந்தாள்.
தான் வாழ்ந்த வீட்டையும் வளர்ந்த இடத்தினையும் தான் செய்த குறும்புகளையும், சுட்டித்தனங்களையும் மனைவியிடம் பகிரும் போது உண்டாகும் சுகமே அலாதியானது.
உதயா ஒவ்வொன்றையும் விளக்கி விரிவாக நகைச்சுவையோடு சொல்லும் விதத்தை சுவாரஸ்யத்தோடு ரசித்து கவனிக்கலானாள் நந்தினி. தன் கணவன் தன்னோடு பகிர்ந்துகொண்ட பால்யகாலத்தை தன் மனதின் நினைவு பெட்டகத்தில் பொக்கிஷமாக சேமித்துக்கொண்டவாறே வந்தாள்.
அனைத்தையும் பார்த்துக்கொண்டே வந்தவள் கடைசியில் ஒரு அங்கே ஒரு மூலையில் திரைபோட்டு மறைத்திருந்த இடத்தை உதயா தடுப்பதற்குள் விலக்கி பார்த்தாள். சிறிய அளவிலான கதவில் பழமையான வேலைப்பாடுகள் செய்திருந்ததை கண்டு,
“இது என்னங்க ரொம்ப வித்யாசமான கதவா இருக்கு, குட்டியா?…” என வினவினாள்.
சட்டென இருள் படிந்துவிட்டது உதயாவின் முகத்தில். மனமுழுவதும் ரணமாக பற்றி எரிய தொடங்கியது. அவனது முகமாற்றத்தை கண்டுகொண்டவள் எதனால் என குழம்பிவிட்டாள்.
“என்னாச்சுங்க?..” என கேட்கவும் தன்னை உடனடியாக சமாளித்துக்கொண்டு முகத்தில் இயல்பை பூசியபடி,
“இதுவா?… இதுக்கு பேர் அரங்கு அறை. இது எங்க தாத்தாக்கு தாத்தா காலத்திலிருந்து இருக்கு. இங்க யாராச்சும் ஒளிஞ்சா கூட தெரியாது. ஜன்னல் எதுவுமே இருக்காது. உள்ள யாராவது மாட்டிக்கிட்டு வெளில கூப்பிட்டா கூட யாருக்குமே கேட்காது. உள்ள யாராச்சும் போய் தெரியாத்தனமா கதவு பூட்டிகிட்டா மூச்சு கூட விடமுடியாம போய்டும். அதனால இந்த அறை எப்போவுமே பூட்டியே இருக்கும்…” என மனதில் இன்னும் தீயாய் தகித்துக்கொண்டிருந்த வெம்மையை மறைத்து குரலில் சாதாரணத்தை வரவழைத்து கொண்டு ஒருவழியாக சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு விலகிவிட்டான்.
அனைத்தையும் காண்பித்துவிட்டு மாடிப்படியின் கீழே பெரிதும் இல்லாமல் மிக சிறிதுமில்லாமல் இருக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட மீன்தொட்டியினை கண்டு அதனருகில் அழைத்து சென்றான்.
அழகான வண்ணங்களில் மீன்கள் துள்ளி விளையாண்டபடி நீந்திகொண்டிருந்த தொட்டியை பார்த்ததுமே நந்தினிக்கும் உற்சாகம் தாளவில்லை. அதை தொட்டு பார்த்தவள் அதை தூக்கும் ஆவல் கொண்டாள்.
“ஹைய்யோ!!! எவ்வளோ அழகா இருக்குதுங்க?..” என்றவளின் குரலில் குற்றால ஊற்று.
அவளின் சந்தோஷத்தை காண காண தெவிட்டவில்லை உதயாவிற்கு. புன்னைகையோடே, “இது என் ப்ரெண்ட் என்னோட பிறந்தநாள் பரிசா குடுத்தது. ரொம்ப ஸ்பெஷல் கிப்ட்….” என்றான் பெருமையாக.
“ஓ விஷ்ணு அண்ணாவா?…”
“அவன் இல்லை நந்தும்மா. இவன் இன்னொரு ப்ரெண்ட் நரேஷ்.  எனக்கு மட்டுமில்லை விஷ்ணுக்கும் தான். இப்போ ஒரு முக்கியமான வேலையா வெளிநாடு போயிருக்கான். சீக்கிரமே வருவான்…. அப்போ உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்…” எனவும்,
“ம்ம். சரி. என்னங்க கொஞ்ச நேரம் கைல வச்சுபார்க்கனும்னு ஆசையா இருக்கு…” கெஞ்சலாக கேட்கவும்,
“என்னது கைலயா?..” என்று சிரித்தவன், “இல்லைடா. பார்க்கத்தான் சிறியது. ஆனா கண்ணாடி ரொம்ப வெய்ட்டா இருக்கும், உன்னால தூக்க முடியாது. கீழே போட்ருவ…” மறுக்கும் குரலில்,
“அப்போ தூக்க வேணாமா?…”
“ம்ஹூம், வேண்டாம். நான் வேணும்னா உனக்கு சின்னதா ஒரு கண்ணாடி பவுல் வாங்கி அதுல மீன் போட்டு தரேன் நீ கைலையே வச்சுப்பியாம். இதை விட்ருமா…” அப்போதும் விடாமல் மீன்தொட்டியையே பார்த்தவாறு நின்றவளிடம்,
“அம்மா தாயே, நான் இல்லாத நேரம் இதை தூக்கறேன்னு எதாச்சும் பண்ணிடாத. இது ரொம்பவே முக்கியமான கிப்ட். முதல்ல சாப்பிடலாம். அப்றமா உன்னை நம்ம தோட்டத்துக்கும், கார்மண்ட்ஸ்க்கும் அழைச்சுட்டு போறேன். சரியா?…”என்று சின்ன சிரிப்போடே சமாளித்து அவளையும் நகர்த்தி அழைத்து வந்துவிட்டான்.
சாப்பாட்டு அறையில் அமர்ந்திருந்த “என்ன ஆத்தா, உன்ற வீடு எப்டி இருக்கு? உனக்கு புடிச்சிருக்கா?…” என இருவருக்கும் பரிமாரியவாறே  வினவவும்,
“ஏன் கிழவி பிடிக்கலைனா தனிக்குடித்தனமா வைக்க போற? பேசாம சாப்பிடு….” என்றான் கிண்டலாக.
“ராசா உனக்கு போவணும்னு எண்ணம் இருந்தா என்னட்ட சொல்லு, நான் உன்ற அப்பாட்ட பேசறேன். அதுக்கேன் என் தலையை உருட்டுற?…” என்று ஒரே போடாக போட்டார்.
சட்டென நந்தினி சிரித்துவிடவும் கடுப்பான உதயா, “இந்த கிழவி எந்தப்பக்கம் போனாலும் கேட் போடுதே? இதை வச்சுகிட்டு என்னனுதான் காலத்தை தள்ளபோறேனோ? பொண்டாட்டி முன்னால மண்ணை கவ்வ வைக்குதே?…” என மனதிற்குள் புலம்பியவாறே,
“நாச்சி எங்க அப்பாவும் அம்மாவும் காணோமே??…” என்று பேச்சை மாற்றினான்.
“தப்பிக்க பார்க்கறான் பாரேன்….” என நந்தினியிடம் உதயாவை வாரிவிட்டு அவனது முறைப்பை கண்டு அஞ்சாமல்,
“அவங்க பக்கத்து ஊர்ல ஒரு விசேஷ வீட்டுக்கு போயிருக்காங்க. வர சாயங்காலம் ஆவும். விடியக்காலையிலேயே போனதால உங்ககிட்ட சொல்லிட்டு போவ முடியல. அதான் என் கிட்ட மட்டும் சொன்னாவ….” இந்த தகவல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்பது போல பார்த்தவரை கண்டு பல்லை கடித்தவன்,
“மாமாவும் அத்தையும் எங்க?…” என அடுத்த கேள்வியை தொடுத்தான்.
“உன்னோட மாமா பருத்திக்காட்டுக்கு போயிருக்காப்ள, உனக்கு போன்  பண்ணுறேன்னு சொல்லியிருக்காங்க. வேணி பின்பக்கமா போனதை பார்த்தேன். உன் தங்கச்சி இப்போதானே தவ்விக்கிட்டு ஓடினா? நீயே பார்த்திருப்ப…..” என அனைத்து தகவலையும் சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்தவர் தன்னையே வாய் பார்த்தவாறு அமர்ந்திருந்த நந்தினியை,  
“சாப்ட்டாச்சுல. நீ வா தாயி…” என்று அழைத்தார்.
நந்தினி போகட்டுமா என்பது போல உதயாவை பார்க்க அவனோ நாச்சியை முறைத்தான்.
“இப்போ எதுக்கு அவ, என் கூட இருக்கட்டும். நாங்க வெளியில போகணும்…” என நாச்சியிடம் மல்லுக்கு நின்றான்.
“இப்போவேவா கிளம்புவ?… போற வரைக்கும் என் கூட இருக்கட்டும்…” என்று இழுத்துகொண்டு உள்ளே செல்ல,
அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தவனை திரும்பி பார்த்து கண்ணை சுருக்கிய கெஞ்சும் பாவத்தில் லேசாக தலையசைத்து விட்டு பாட்டியின் பின்னே சென்று விட்டாள்.
ஒரு நொடிதான் உதயாவை அசைத்து பார்த்த அந்த பார்வை ஒரு நொடிதான்.
“என்ன பார்வைடா சாமி?….”என சமைந்துவிட்டான். இதைத்தான் சொல்லுவாங்களோ ஒரே பார்வை வீச்சில் ஆளை சாய்க்கிறதுன்னு?  “
“என்னை சாய்ச்சுட்டாளே?… இந்த தடிமாடு தாண்டவராயன் இருந்திருந்தா கூட மச்சான் சாச்சுப்புட்டா மச்சான்னு சொல்லி ஒரு வழி பண்ணியிருக்கலாமே?…” என்று அந்த நேரத்திலும் விஷ்ணுவை வம்பிழுக்க தேடினான்.
“ஆளே இல்லாத நேரத்துல இப்டி புலம்ப வச்சுட்டாளே?…” என தனக்குள் பேசியபடி இருந்தவன் மொபைலின் அழைப்பு மணியோசையில் தன்னை மீட்டுகொண்டு அதற்கு காது கொடுத்தான்.
சுதர்சனம் தான் அழைத்திருந்தது. அவரிடம் பேசியவாறே வீட்டிற்கு வெளியே சென்றுவிட்டான்.
சமையலறையில் உதவ முயன்றவளை, “நந்தினி கண்ணு நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். பேசாமல் பார்த்துட்டே மட்டும் இரு, இதை எல்லாம் செய்ய இன்னும் நாள் இருக்கு…” என சொல்லி அமைதியாக உட்கார சொல்லிவிட்டார் நாச்சி.
சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் நாச்சியை திருப்பி, “ப்ளீஸ் பாட்டி நானும் ஏதாச்சும் செய்யறேனே? ஒரு சின்ன வேலையாச்சும் குடுங்களேன்?…” என்றாள் கெஞ்சலான குரலில் கொஞ்சியபடி.
அந்நேரம் உதவிப்பெண் ஒருத்தி கை நிறைய பூக்களுடன் வந்துகொண்டிருந்தாள்.
“வேலைதானே? தரேன். அதுக்கு பின்னால கேட்ககூடாது…” என்ற  கட்டளையோடு நந்தினியின் கைகளில் பூக்களை கொடுத்து,
“இதை மாடிப்படி கீழ, சோபா பக்கத்துலன்னு எல்லாத்தையும் சுத்தி சின்ன சின்னதா பூஜாடிகள் இருக்கும் அதுல இந்த பூக்களையெல்லாம் அடுக்கி வை….” என அனுப்பிவைத்தார்.
மணம் பரப்பும் மலர்கொத்தோடு சென்றவள் அனைத்தையும் பிரித்தெடுத்து பொருத்தமான வண்ணங்களை ஒன்றாக்கி பூஜாடிகளில் அழகாக அடுக்கி வைத்துவிட்டாள்.
வெளியே போனில் பேசிக்கொண்டிருந்தவன் சிலீரென சப்தம் கேட்டு என்னவோ ஏதோவென உள்ளே ஓடி வர அவனது கண்களில் விழுந்தது உடைந்து கிடந்த மீன்தொட்டியும் அதனருகில் கைகளை கீறும் கண்ணாடி சில்களையும் பொருட்படுத்தாமல் சுவாசத்திற்காக துள்ளி துடித்துகொண்டிருந்த மீன்களை அள்ளி பதட்டத்தோடு தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் போட்டுகொண்டிருந்த தன் மனைவியும் மட்டுமே.
செய்வதறியாது ஒரு நிமிடம் திகைத்து நின்றவன் அவளிடம் விரைந்தான். பாட்டியும் அதற்குள் வந்து சேர கோவத்தோடு பாத்திரத்தை பிடுங்கி வைத்துவிட்டு அவளை தூக்கி நிறுத்தினான்.
கண்கள் சொருக தள்ளாடியவாறே நின்றவளை தாங்கி கொண்டவன், “ஏய்,… என்ன நந்து இதெல்லாம்?…” என பதட்டத்துடன்            கேட்டவனிடத்தில்,
“மீன் எல்லாமே நல்லா இருக்குங்க. எல்லாத்தையும் தண்ணில போட்டுட்டேன்…” என்றவள் அவன் மீதே மயங்கி சரிந்தாள்.
“ஐயோ ராசா கையெல்லாம் ரத்தமா கொட்டுதே…” என அலறிய நாச்சியிடம் மதியிடம் விவரம் சொல்லி டாக்டருக்கு அழைக்குமாறு சொல்லிவிட்டு தனது அறை நோக்கி நந்தினியை தூக்கி சென்றான்.
மதியை அழைத்து டாக்டரை கூட்டிவர விவரம் சொல்லிவிட்டு முதலுதவி பெட்டியையும் எடுத்துகொண்டு மாடியை நோக்கி பதட்டத்தோடு சென்ற நாச்சிக்கு உள்ளமெல்லாம் கலக்கம் வியாப்பித்திருந்தது.
சற்று முன்னாள் தானே தன்னிடம் பேசிவிட்டு சென்றாள். அதற்குள் எப்படி இந்த அசம்பாவிதம் நடந்தேறியது? என யோசித்தவர் உதயாவின் அறையை அடைந்து அவனிடம் பெட்டியை கொடுத்துவிட்டு நந்தினியின் அருகிலேயே அமர்ந்துவிட்டார்.
முகம் களையிழந்து வாடிவதங்கிய கொடியாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்தவளை கவலையோடு பார்த்தவரை கண்டவன்,
“எப்படி ஆச்சு பாட்டி. நீ பக்கத்தில இல்லையா? உன் கூடத்தானே வந்தா?…” என்றவாறே அவளது இரு கைகளிலும் இரக்கமின்றி இறங்கியிருந்த கண்ணாடி துண்டுகளை ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல வலிக்கும் இதயத்தோடு வெளியே எடுத்து எறிந்தான்.
மயக்கத்திலும் அவளது முகம் வலியில் சுருங்குவதை பொறுக்கமாட்டாமல் இப்படி ஆகிவிட்டதே என மீண்டும் புலம்ப  ஆரம்பித்தான்.
“நான் காய்கறி பறிக்க பின்னால தோட்டத்து பக்கம் போயிருந்தேன்ய்யா, நானும் சத்தம் கேட்டுதான் ஓடிவந்தேன்….” என்றவருக்கோ இருவரது நிலையையும் பார்க்க சகிக்க வில்லை. கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தானே ஆகியிருக்கு. கடவுளே அதுக்குள்ளே இப்படி ஒரு அசம்பாவிதம் என மனம் குமைந்தார். 
முகத்தில் தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியாமல் இருக்க பயம் தொற்றிகொண்டது இருவருக்குமே.
ஹாஸ்பிட்டல் போய்விடலாமென நினைக்கையில் டாக்டரோடு வந்து சேர்ந்தான் மதிவாணன்.
“என்னாச்சு பிரபா? ஏன் இப்படி ரெண்டு கைளையும் கண்ணாடி சில் குத்தியிருக்கு?…” என கேட்டவாறே நந்தினியின் கைகளை  சுத்தபடுத்தினார் டாக்டர் பெருமாள்சாமி.
“மீன்தொட்டி உடஞ்சிடுச்சு அங்கிள், அந்த மீனையெல்லாம் காப்பாத்துறேன்னு அப்டியே அள்ளி அள்ளி பாத்திரத்துல போட்டுட்டா. அது கையெல்லாம் கிழிச்சிருச்சு…” என்றவனது குரலோ கோவத்திலும் ஆதங்கத்திலும் உடைந்து போயிருந்தது..
அவனது முகத்தை பார்த்தவர் மெலிதாக புன்னகைத்து விட்டு நந்தினியின் கைகளில் ஆயின்மெண்டை தடவி கட்டுப்போட்டுவிட்டார்.
எதற்கும் இருக்கட்டும் என ஒரு டிடி இன்ஜெக்ஷனையும் போட்டுவிட்டு நிமிர்ந்தவர்,
உதயாவின் தோளை தட்டிகொடுத்து, “ஒன்னும் பயப்படாத பிரபா, சரியாகிடும். நாளைக்கு கட்டை அவிழ்த்து விட்டு இந்த மருந்தை காயம் ஆறும் வரை போட்டுவிடு. தூக்கத்துக்கும், செப்டிக் ஆகாமல் இருக்கவும் இன்ஜெக்ஷன் போட்ருக்கேன். வலி அதிகமா இருந்தா இந்த டேப்லெட் குடு. நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்….” என்றவர் தொடர்ந்து,
“பயத்துல தான் மயக்கம். கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடும். எதுனாலும் எனக்கு உடனே கால் பண்ணு….” என்று தைரியம் சொல்லிவிட்டு வெளியேறியவரை பின்தொடர்ந்த நாச்சி,
“பெருமாளு…” என டாக்டரை அழைத்தவர், “ என் பேத்திக்கு ஒண்ணுமில்லையே. நிறைய ரத்தம் போயிருச்சுய்யா…” என கண் கலங்கி கேட்கவும்,
“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க அத்தையம்மா.  இதுக்கெல்லாமா பதறுவாங்க?… ரெண்டு நாள்ல சரியாகிடும். நான் வரேன்….” என்று விடைபெற்று சென்று விட்டார்.
நாச்சியோ வேலைக்கார பெண்ணை வரவழைத்து உடைந்த இடத்தினை சுத்தம் செய்ய சொல்லிவிட்டு மீன்களை எடுத்து வேறு பக்கெட்டில் மாற்றி வைக்குமாறு பணித்துவிட்டு சமையலறைக்குள் சென்று விட்டார்.
நந்தினிக்கு குடிக்க ஏதாவது எடுத்து வரலாமென கீழே வந்தவனை வழிமறித்த வேணி,
“என்னப்பா பிரபா? உன் நண்பன் ஆசையா வாங்கி தந்த பரிசை உன் பொண்டாட்டி இப்படி கூறு இல்லாம கீழே தள்ளி உடச்சுட்டாளே? கொஞ்சமாச்சு கவனம் வேண்டாமா?…” என அவனுக்கு தூபம் போட்டு ஏற்றி விட பார்க்க அவனோ,
“அவ உடச்சதை நீங்க பார்த்தீங்களா அத்தை? அது தவறுதலா கூட கீழே விழுந்திருக்கலாம். ஏன் இப்படி பேசறீங்க? விடுங்க இந்த பிரச்சனையை….” என விலகி சென்றுவிட்டான்.
நாச்சி இருவருக்கும்  சேர்த்து கொடுக்க மறுக்காமல் தனக்கும் நந்தினிக்குமாக பழச்சாறை வாங்கிகொண்டு மேலே சென்றவனை எரிச்சலோடு பார்த்துகொண்டிருந்தார் வேணி.
“வந்தே ரெண்டே நாள்ல எப்படி மயக்கிவச்சிருக்கா?. என்னைக்கு இவ கழுத்துல தாலிக்கட்டிட்டு வந்தானோ அப்போதிருந்தே இப்டிதானே இருக்கான்… எவ்வளோ சொன்னாலும் நம்புதானா?…” என பொருமியபடி நின்றவரை கண்ட நாச்சி,
“வேணி, இவ்வளோ நேரம் எங்க போயிருந்த? நம்ம நந்துக்கு என்னாச்சு தெரியுமா?…” என்றவாறே வரவும்,
“ம்ம் ம்ம் எல்லாம் தெரியும். செய்யுற வேலையை ஒழுங்கா செய்ய துப்பில்லை அவளுக்கு. இதுல நீங்க அவளுக்கு அடிபட்டு போச்சுன்னு வருத்தப்படறீங்க?…. பேசாம வேலையை பாருங்கம்மா…” என்று நாச்சி எதுவும் சொல்லும் முன் அவரை தவிர்த்துவிட்டு விருட்டென வெளியே பாய்ந்துவிட்டார்.
வேணி நந்தினியை ஏசியத்தில் கோவமான நாச்சி, “இவளுக்கு என்ன திமிரு?. வரட்டும் பார்த்துக்கறேன்…” என்று உள்ளே சென்றுவிட்டார்.
நந்தினியிடம் அசைவு தெரியவும் அருகே சென்றவன், “நந்து, குட்டிம்மா. இங்க பாருடா, ஒண்ணுமில்லை பயப்படாத, ப்ளீஸ்டா முழிச்சு பாரு…” என புலம்பியவாறே இருந்தவனை கண்மலர்ந்து கண்டவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
எதையோ சொல்ல நினைத்தவளால் சொல்லமுடியாமல் தொண்டை அடைத்தது கைகள் இரண்டும் வின்னுவின்னென வலியில் எரிந்தது.
அவளை தூக்கி சாய்ந்தவாறு அமரவைத்தவன் பழச்சாறை பருக கொடுத்தான். கொஞ்சம் கொஞ்சமாக குடித்தவள் வலியின் தாக்கமோ, மருந்தின் வீரியமோ மீண்டும் துயில் கொள்ள தொடங்கினாள்.
அவளின் அருகிலேயே அமர்ந்தவாறு அவளது கைகளை  நீவிவிட்டுக்கொண்டே இருந்தான். மதிய உணவையும் அறைக்கே எடுத்துவந்து கொடுத்த நாச்சி அப்போதும் உறக்கத்தில் இருந்த நந்தினியை பார்த்துவிட்டு உதயாவை சாப்பிட வைத்த பின் தான் அங்கிருந்து அகன்றார்.
நந்தினியை எழுப்பி சிறிது ரசம் சாதம் கொடுத்து மாத்திரையையும் கொடுத்து தூங்க வைத்தவன் தானும் உறங்கிவிட்டான். மூன்று மணியளவில் கௌரியின் சத்தம் மேலே வரைக்கும் கேட்டது.
தடதடவென மாடியேறி வந்தவள்,” அண்ணா, என்னங்கண்ணா ஆச்சு அண்ணிக்கு?…” என கரிசனமாக கேட்டவள் நந்தினியை பார்த்து, “ஐயோ எவ்வளோ பெரிய காயம்?… ஏன் அண்ணா, எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல?…” என்று பதட்டமாக விசாரித்தவளிடம்,
“ஒண்ணுமில்லைடா, சரியாகிடும், நீ என்ன சீக்கிரமே வந்துட்ட?…” என்றான்.
“நீங்க எனக்கு கிப்ட் வாங்கி குடுத்ததை என் ப்ரெண்ட் கிட்ட சொன்னேன். அவ பிறந்தநாள் பங்க்ஷனை ரெக்கார்ட் பண்ணலாம்னு கேமரா எடுத்து வர சொன்னா. அதான் உங்க கிட்ட கேட்டுட்டு எடுத்து போக வந்தேன் அண்ணா…..” என்றவளின் கைகளில் இருந்த கேமராவை பார்த்துவிட்டு,
“பத்திரமா போயிட்டு வா, கேமராவும் தான்…” என்றவனின் கைகளில் கேமராவில் இருந்த மெமரியை திணித்து,
“இதத்தான் சர்ப்ரைஸ்ன்னு சொன்னேன். இந்த மெமரி உங்ககிட்ட இருக்கட்டும். நான் வேற எடுத்துக்கறேன். நீங்க அண்ணி எழுந்ததும் இதை பாருங்க. நான் போய்ட்டு வரேன்….” என்றவளை நிறுத்தி,
“அதான் நான் இருக்கேன்ல, நீ போயிட்டு வாடா, அண்ணி எழுந்துக்க நேரமாகும்…” என்று அவளை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தான்.
“ஓகே அண்ணா. நான் சீக்கிரமா வந்திடறேன்….” என்று சொல்லிவிட்டு சென்றதும் சிறிது நேரம் கழித்து அந்த மெமரியை லேப்டாப்பில் போட்டு அப்படி என்னதான் சர்ப்ரைஸ் இருக்கு என்று பார்க்க ஆரம்பித்தான்.  
அதில் ரெக்கார்ட் ஆகியிருந்த வீடியோ ஓட ஆரம்பித்தது. அன்றைய நாள் நடந்த அனைத்தும் அதில் பதிவாகியிருந்தது.
“இதுதான் வாலு சொன்ன சப்ரைஸாக்கும்…  இவளுக்கு வேற வேலையே இல்லை…” என நினைத்தபடியே அதை வேக வேகமா சலிப்போடு பார்வேர்ட் செய்தவனது விழிகள் நிலைகுத்தி நின்றன.
அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. தன் மனைவியின் இந்நிலைக்கு காரணம் தன் அத்தை வேணியா?
கைமுஷ்ட்டி இறுக அந்த வீடியோவில் பதிந்திருந்த சம்பாஷணையை உற்று கவனிக்கலானான்.
கேட்க கேட்க கொலைவெறியே உண்டாகிவிட்டது. இதை இப்படியே விடகூடாது என முடிவெடுத்தவன் மனமோ அமைதியிழந்து தவித்தது.
உதயாவின் பெற்றோர் வந்து பார்த்துவிட்டு பதறியே விட்டனர். வந்து இரு நாட்களுக்குள் இதென்ன அசம்பாவிதம் என மனம் பதை பதைத்தனர்.
சுதர்சனமும், விஷ்ணுவும் வந்து பார்த்துவிட்டு நந்தினியின் அருகில் இருந்து உதயாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கார்மண்ட்ஸ் மற்ற வேலைகளையும் தாங்கள் பார்த்துக்கொள்வதாக வாக்களித்துவிட்டு சென்றனர்.
கார்மெண்ட்ஸில் உடனடியாக முடித்துக்கொடுக்க வேண்டிய முக்கியமான ப்ராஜெக்ட் நடந்துகொண்டிருந்தது. விஷ்ணுவிற்கு உதவியாக சுதர்சனமும் சேர்ந்து பொறுப்பை பார்த்துக்கொள்வதாக சொல்லவும் உதயாவிற்கு பெரும் பாரம் இறங்கியது போல ஆகிற்று.
பாக்கியலட்சுமி மருமகளின் அருகில் இருந்து கவனித்து கொள்வதாக சொல்லியும் உதயா விடவில்லை. தானே பார்த்துகொள்வதாக சொல்லிவிட்டு ஒருவரையும் நெருங்க விடவில்லை.
நாச்சியும் இது நல்ல வாய்ப்பாகவே கருதினார். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள இருவருக்குமான நெருக்கத்தை அவர்களே உருவாக்கிக்கொள்ளும் சரியான தருணமாக எண்ணினார். எனவே இருவரையும் தனித்துவிட பணித்துவிட்டார். அவருக்கு தெரியாததா? எந்த மனநிலையில் பேரன் திருமணம் நடந்தது என்று. தாம்பத்திய வாழ்வில் இருவரும் தாமரை இல்லை தண்ணீர் போல் ஒட்டாமல் தான் இருக்கின்றனர் என்று.  அவரது எண்ணமும் வீண் போகவில்லை.
இருவருக்குமான தனிமை மனதளவில் ஒருவரை ஒருவர் தயக்கமின்றி அணுகும் அளவிற்கு பிணைத்தது. அவளுக்கு தேவையான ஒவ்வொன்றையும் தானே பார்த்து பார்த்து செய்தான். காதலை வார்த்தையால் சொல்லிக்கொள்ளவில்லை. பார்வையிலும், அழகான மௌனத்திலும் உணர்ந்தார்கள்.
கண்களின் வழியாக இதயத்திற்குள் ஊடுருவி ஒருவரை ஒருவர் தன் துணையிடத்தில் தன்னை நிலையாக இருத்திகொண்டார்கள். நிமிடங்கள் பரவசமான தங்களுக்கே உரித்தான தனி உலகில் சஞ்சரிக்கவே செய்தனர்.
திருமணத்திற்கு பின் ஏற்படும் புரிதலோடான காதல் அழகானது. அந்த காதல் அவர்களுள் அவசரமில்லாமல் மலர்ந்து இதயம் முழுவதும் மணம் பரப்பியது.
அதே நேரத்தில் உதயா மிக கவனமாக வேணியை நந்தினியிடம் நெருங்கவிடவில்லை. அதுவும் யாருக்கும் தான் வேணியை தவிர்ப்பதை தெரியபடுத்தாமல் யாரின் சந்தேகத்திற்கும் ஆற்படாமல் சாமர்த்தியமாக தள்ளி நிறுத்தினான்.
வேணி எவ்வளவோ முயன்றும் நந்தினியை பார்க்கும் வாய்ப்பு சாத்தியப்படவில்லை. கோழி தன் குஞ்சுகளை பாதுகாப்பது போல இப்படி பொத்தி பொத்தி பொண்டாட்டியை காவல் காக்கிறானே என்ற ஆற்றாமை வேணிக்கு. எத்தனை நாளைக்குன்னு பார்த்துக்கறேன்? என தனக்குள் சூளுரைத்துகொண்டார். ஒரு வாரம் சடசடவென ஓடிவிட்டது.
…………………………………………
விடியலும் தினமும் நிகழ்கின்ற ஒன்றுதான். ஆனாலும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எதிர்பாராத திருப்பத்தை தரவல்லது.
அந்த நாள் அதிகாலை ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும் அள்ளிக்கொண்டு விடிந்தது.
எப்போதும் போல் பரபரப்பான அந்த காலைப்பொழுது. காலை உணவிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
விஷ்ணுவின் பெற்றோர் இன்றைக்கு வீட்டிற்கு வரபோவதாக சொன்னதும் பாக்கியம் அவர்களுக்கும் சேர்த்து காலை பலகாரங்கள் தயாராகின. மருமகள் வேறு விடியற்காலையிலேயே உடன் வந்து வேலைகளை பகிர்ந்துகொண்டதும் சந்தோஷம் தாளவில்லை. நாச்சியோடு சேர்ந்து நந்தினியும் தன் பங்கிற்கு தனக்கு தெரிந்தவற்றை செய்துகொண்டிருந்தாள்.
வேணிக்கு ஏனோ படபடப்பாகவே இருந்தது. என்னவென அறியமுடியாமலும், நந்தினியிடம் நெருங்கமுடியாமலும் தவித்துகொண்டிருந்தார். விஷ்ணுவின் பெற்றோர் உதயா நந்தினியை பார்க்க மட்டுமல்ல வேறொரு முக்கிய காரணத்திற்காகவும் வரபோவது வேணி உட்பட யாருமே அறியாத ஓன்று.
அவர்கள் வந்ததற்கான காரணத்தை அறியும் போதும், அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வில் தான் கையாலகாதவளாக இருக்க போவதையும் அறியாதவராக குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.
விஷ்ணுவும் அவனது பெற்றோரான சங்கரனும் தேவகியும் வந்துவிட்டனர். அனைவரும் ஆவலோடு வரவேற்கவும் உள்ளே வந்தமர்ந்தனர். உதயா சங்கரன் இருவரும் நொடிப்பொழுதில் ஒரு அர்த்தப்பார்வையை பரிமாறிகொண்டனர்.
“நந்தினி உனக்கு தெரியாதில்ல, இவங்கதான் விஷ்ணுவின் அப்பாவும் அம்மாவும்…” என நாச்சி நந்தினிக்கு அறிமுகபடுத்தவும் புன்னகையோடு ஆசிர்வாதம் வாங்க முற்பட்டவளை நிறுத்திய தேவகி,
“கொஞ்சம் இருமா…” என்றுவிட்டு,
கொண்டுவந்த பொருட்களை தாம்பூலதட்டில் நிரப்பிவிட்டு உதயாவையும் நந்தினியையும் அழைத்து இருவருக்கும் சங்கரனும் தேவகியும் சேர்ந்து கொடுத்தனர்.
இருவரும் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு பரிசை பெற்றுகொண்டனர்.
“நந்தினி இவங்க எனக்கு மட்டுமில்லை உனக்கும் அப்பா அம்மா போலதான். இனிமே அப்டிதான் கூப்பிடனும். புரிஞ்சதா?..” என விஷ்ணு கேட்கவும் சந்தோஷமாக,
“அதற்கென்ன அண்ணா, கண்டிப்பா அப்டிதான் கூப்பிடுவேன். நீங்க சண்டை போடாம இருந்தா போதும்…” என்றாள் சிரிப்போடு.
“அடேங்கப்பா!! ம்ம் தேறிட்ட. அதுக்குள்ளே பேச கத்துக்கொடுத்துட்டானா?…” என்று கேட்டுவிட்டு சிரித்தான்.
“எல்லோரும் இருக்கீங்க. எங்க அந்த குள்ள கத்தரிக்கா சவுரியை காணும்?…” என்று பார்வையால் வீட்டை அலசியபடி கேட்டவனை பார்த்த நாச்சி,
“எப்போ பாரு அவளை வம்பிளுக்கிறது, உனக்கு வேற வேலையே இல்லையா? அவ மாடில தான் இருக்கா, இப்போ வருவா, நீங்க பேசிட்டு இருங்க நாங்க போய் ஆகிற வேலையை பார்க்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிடனுமில்ல…” என்று சொல்லிவிட்டு வேலையை கவனிக்க உள்ளே சென்று விட்டார்.
வந்தவர்களுக்கு காபியும் சிற்றுண்டியும் கொடுத்துவிட்டு தேவகியிடத்தில் சிறிதுநேரம் அமர்ந்து பேசிவிட்டு தானும் அடுக்களைக்குள் புகவும் தேவகியும் பின்தொடர்ந்து சென்றுவிட்டார்.
அவ்விடத்தில் பொருந்தமுடியாமல் மரியாதைக்கு சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு தன் அறைநோக்கி சென்றுவிட்டார் வேணி.
காலையிலிருந்தே தேனியின் சுறுசுறுப்போடு துறுதுறுவென வளையவருபவளை பார்வையாலே இதயத்திற்குள் நிரப்பியபடி வந்தவர்களிடம் பேசிகொண்டிருந்தான்.
உதயாவின் பார்வை தன்னையே தொடர்வதை உணர்ந்தாலும் தன் கணவனின் பார்வைக்கான அர்த்தம் மட்டும் விளங்கவே இல்லை நந்தினிக்கு. இத்தனை நாள் இல்லாமல் இன்று அவன் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம்.
அந்த விழிகள் தனக்கு வசிய வலை விரிப்பதுபோல் ஒரு பிரம்மை. அந்த பார்வையில் மூச்சு முட்டுவதுபோல தோன்ற அவன் பார்வை வட்டத்திலிருந்து விலகி உள்ளே சென்றுவிட்டாள்.
சங்கரனிடம் தன் கல்யாணம் நடந்த சூழ்நிலையினை சொல்லிக்கொண்டிருந்தவனது பார்வை நந்தினியை தேடி அலைபாய்வதை கண்டுகொண்ட விஷ்ணு, “மச்சான் நான் வேணா எதாச்சும் உதவிசெய்யவா?…”
“ஒரு மண்ணும் வேண்டாம், பேசாம இரு. இல்லைனா கேவலமா எதாச்சும் சொல்லிட போறேன்…” என கடுப்படிக்கவும்,
“இன்னைக்கு என்ன ரொம்ப அனல் அடிக்குது?..” என்று கேட்டுவிட்டு உதயாவின் கண்டன பார்வைக்கு ஆளாகியதும் அவசர நிமித்தமாக   அமைதியாகிவிட்டான்.
“பிரபா, அப்பாகிட்ட எப்போ ஆரம்பிக்கிறது?..” என்றார் சங்கரன் ரகசியகுரலில்.
“முதல்ல சாப்பிடுவோம்ப்பா, அப்பறமா பேச்சை ஆரம்பிக்கலாம்…” என்றான் அதே குரலில்.
“முதல்ல நீ வீட்ல கலந்து பேசிட்டு அப்றமா முடிவெடுத்திருக்கலாம். நான் விஷ்ணுகிட்டையும் எதுவுமே சொல்லலை. நாம நினைக்கிறது நடக்குமா?…”
“கண்டிப்பா நல்லபடியா நடக்கும்ப்பா. வீட்ல யாருமே தடை சொல்ல மாட்டாங்க…” என்று உறுதியான நம்பிக்கை கொடுக்கவும் சமாதானமாகிவிட்டார்.
“எல்லோரும் சாப்பிடலாம் வாங்க அண்ணா….” என சங்கரனை அழைத்துவிட்டு, “தம்பி பிரபா எல்லோரையும் கூட்டிட்டு வா, அத்தை எங்க அவங்களையும் வரசொல்லு…” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் பாக்கியம்.
அனைவருக்கும் சேர்ந்து சாப்பிட அமர பரிமாறும் பொறுப்பை நந்தினி ஏற்கவும் அவளுக்கு துணையாக கௌரியும் வந்து சேர்ந்தாள்.
வேண்டா வெறுப்பாக வேணியும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறேன் என்று பேர்பண்ணிகொண்டிருந்தார். எரிச்சலோடு அமர்ந்திருந்தவரின் அருகில் நந்தினி செய்த க்லோப்ஜாமூன் கிண்ணங்களின் குதித்து விளையாடிகொண்டிருந்தது.
“இவ செய்ததை சாப்பிடனுமா…” என எண்ணினாலும் சிறிதுநேரம் தன் வீம்பை ஓரங்கட்டிவிட்டு ஒரு கிண்ணத்தை எடுத்து சுவைக்கலானார்.
உதயா தனக்கு வைத்த கிண்ணத்தை விஷ்ணுவிற்கு நகர்த்தவும்,
“மச்சான், நண்பேண்டா நீ…” என்று சில்லாகித்தபடி உண்டவனை கண்ட உதயா, “நீ சாப்பிடுடா நான் போய் வேற எடுத்துக்கறேன்….” என்று தோளில் தட்டிக்கொடுத்து அவனை ஜாமூன் ஜீராவிலேயே குளிப்பாட்டினான்.
முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு, “நந்தினி எனக்கு வேற எடுத்திட்டு வாயேன்…” எனவும், “இதோ!…” என்று அடுக்களை நோக்கி நகர்ந்தவளை குறும்பு மின்ன கண்டவன் விஷ்ணுவிடம் குனிந்து,
“மச்சான், இப்போ என்னோட பங்கு க்லோப்ஜாமூன் சாப்ட்டியே. அதுக்கு உனக்கு ஒரு வேலை ஒப்படைக்க போறேன்….” என்று நோகாமல் தலையில் இடியை இறக்கினான்.
“அய்யய்யோ இன்னைக்கும் ஆரம்பிச்சுட்டானே?… என்ன சொல்லபோறானோ?…” என்ற அதிர்ச்சியில் க்லோப்ஜாமுன் விஷ்ணுவின் வயிற்றுக்குள் இறங்காமல் சண்டித்தனம் செய்தது.

Advertisement