Advertisement

 
நட்சத்திர விழிகள் – 8
வேணி என்னதான் அரும்பெரும்பாடுபட்டு கோவத்தை அடக்கிய குரலில் சொன்னாலும் அனைவருக்குமே அதிர்ச்சியாகிவிட்டது அவரது செய்கை.
பாக்கியம் உடனே சுதாரித்து கோவமாக ஏதோ சொல்ல வாயெடுத்த உதயாவை ஒரே பார்வையில் அடக்கிவிட்டு நாச்சியை பார்க்க அவரது  இறுகிய முகமே கடுமையாக ஏதோ பேசப்போகிறார் என்பதை காட்டியது.
அவரை அமைதியாக இருக்கும் படி இறைஞ்சியது பாக்கியத்தின் கண்கள். அவருக்காக பொறுமையை இழுத்துப்பிடித்த நாச்சி அமைதியாக அதன் பின் பாக்கியம் நந்தினியின் புறம் திரும்பினார்.
“நந்தினி, தப்பா நினைக்காதம்மா. நீ பேசாம சித்தினே கூப்பிடு. எல்லோரையும் அம்மான்னு கூப்பிட்டா குழப்பம் தான் உண்டாகும். என்னையும் அம்மான்னு சொல்றல?…”என எடுத்து கூறவும்,
“சரிங்கம்மா, சித்தி சரியா சாப்பிடாம எழுந்துட்டாங்க. அதான் கூப்பிட்டேன்….” என்றாள் கம்மிய குரலில்.
பாக்கியம் அவளை தாங்குவதை தாங்கமாட்டாமல் அவ்விடம் நிற்காமல் நகர எத்தனித்தவரை, 
“என்னாச்சு வேணி? சரியா சாப்பிடாம எழுந்துட்ட…” என்ற பாக்கியத்திடம், “தனக்கு போதும் அசதியாக இருக்கிறது…” என சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி விடுவிடுவென சென்று விட்டார்.
அவர் செல்வதையே யோசனையோடு மனம் வலிக்க பார்த்தபடி அமர்ந்திருந்தார் சுதர்சனன். அதற்கு மேல் அவருக்கு சாப்பாடு இறங்கவில்லை. சாப்பிட்டேன் என்று பேர் பண்ணிகொண்டார்.
அனைவரும் சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் அமர்ந்து அன்றைய விருந்தை பற்றி பேசிவிட்டு உறங்க சென்றனர்.
கெளரி, “அண்ணி இன்னைக்கெல்லாம் நீங்களாதான் உங்க ரூமுக்கு போகணும், யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க….” என சொல்லி சிட்டாக பறந்துவிட்டாள்.
திகைத்து நின்றவளை நெருங்கிய உதயா, “என்ன மேடம் இங்கயே தூங்க போறீங்கள? இல்லை மேலே நான் தூக்கிட்டு போகனுமா?…” என்று கேட்டதும் அவனை முறைத்துவிட்டு படியேற ஆரம்பிக்கவும் அவளை பின் தொடர்ந்து சென்றான்.
அறைக்குள் நுழைந்ததும் நேராக போய் படுத்துவிட்டவளை கண்டு,
“யாரோ யாருக்கோ போன் பண்ணனும்னு சொன்னாங்க. ம்ம் நமக்கென்ன…” என சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் சென்று மறைந்தான்.
சட்டென எழுந்தமர்ந்தவள், “ஐயோ இதை எப்படி மறந்தேன்?…”என அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
நேரம் செல்ல செல்ல பொறுமை பறக்க அங்குமிங்கும் நடை பயிலளானாள்.
அவளோ பாத்ரூம் கதவையே பார்த்துகொண்டிருக்க அவனோ வந்தபாடுதான் இல்லை.
இதுக்கு மேலயும் தாங்க முடியாது என்று துணிந்து பாத்ரூம் கதவை தட்டினாள்.
“எஸ் கமின்…” என அலட்டலாக குரல் கொடுத்தவனை என்ன செய்தால் தகும் என பொருமியபடி,
“என்னங்க வெளில வாங்க ப்ளீஸ்…”
“ஏன்?…”
“போன், போன் பண்ணனும்ங்க…”
“பண்ணு…” என்றான்.
“என் கிட்டதான் போன் இல்லையே?…” என்றவளிடம்,
“நான் கூப்பிட்டப்போ நீ வரலையே?…” என திருப்பி கேட்டுவைத்தான்.
“அது, அது நீங்க அப்படி கூப்பிட்டா நான் எப்படி வர?…”
“வேற, வேற எப்படி கூப்பிடனும்னு சொல்லு. நானும் அப்படியே கூப்பிடறேன்….” என்று அவளை போல பேசிக்காட்ட.
“இதுக்கு என்ன சொல்லவென?…” கடுப்போடு அமைதியாகிவிட்டாள்.
“என்ன சத்தத்தையே காணோம்?…” என சீண்டவும்,
“உள்ள என்னதான் செய்யறீங்க? போய் எவ்வளோ நேரமாச்சு?…” என கடுகடுத்தவளிடம்,
“கேம்ஸ் விளையாடுறேன்…” என்றான் கூலாக.
“என்ன?…. கேம்ஸா?… அதுவும் பாத்ரூம்க்குள்ள ச்சீ ச்சீ….” என்றவள்,
“இப்போ வெளிய வரபோறீங்களா? இல்லையா?…”
“என்னால வரமுடியாது, நீ வேணும்னா உள்ள வாயேன். சேர்ந்தே விளையாடுவோம்….” என வார்த்தைகளில் கேலிச்சாயத்தை பூசி அழைக்கவும் வாயடைத்துவிட்டாள். சத்தமே வராமல் இருக்கவும்,
“மேடம் பயந்துட்டீங்களோ?.. கேம்ஸ் விளையாடுவோம்னு சொன்னேன், மொபைல்ல. நீ என்ன நினைச்ச?…” என விடாமல் வம்பு செய்ய,
“ஒரு போனுக்கு என்ன ஆட்டம் காட்டுறான். இதுக்கு மேல எதுவும் கேட்கவேண்டாம். இனி அவனா வந்து போனை குடுத்தாலும் பேசக்கூடாது…” என தனக்குள் சொல்லிகொண்டே வந்து படுத்துவிட்டாள்.
அதன் பின் சத்தமில்லாமல் போகவும் மெதுவாக வெளியே வந்தவன் நந்தினி படுத்துவிட்டதை கண்டு சிரிப்போடு நெருங்கினான். அவளது முதுகு அழுகையில் குலுங்குவதை கண்டு,
“ஹேய்ய். ஆரம்பிச்சுட்டியா?… எதுக்கு இப்போ அழற?….” என கை பிடித்து எழுப்பி அமரவைத்தான்.
“விடுங்க என்னை தொடாதீங்க…” என்றாள் ரோஷமாக.
“ஓ மேடம்க்கு கோவம்லாம் வருமோ?…” என்றவனை கண்டு மூக்கை உறிஞ்சியபடி,
“என் கிட்ட போன் இல்லைன்னு தானே உங்களை நான் கெஞ்சனும்னு தானே இப்படி என்னை அழவச்சீங்க?….” என சிலிர்த்துக்கொண்டு பேச,
“என்னாது????????நான் உன்னை அழவச்சேனா?…”
“ஆமாம், பின்ன இல்லையா?….”
“நீ அங்க எல்லோர் முன்னாலையும் வரமாட்டேன்னு சொன்னல்ல அதான் கொஞ்சம் விளையாடி பார்க்கலாம்னு நினச்சேன். நீ இப்படி அழுவன்னு எனக்கெப்படி தெரியும்?…”
“நீங்க ஏன் அப்டி கூப்ட்டீங்க? அதான் எனக்கு பயமாகிருச்சு…” என்றாள் அவனை நிமிர்ந்து பார்க்காமல்.
“இங்க என்னை பாரு நந்து. உன்னை நான் என்ன செஞ்சிடுவேன்னு நீ பயப்படற?…”
தலையை குனிந்தவாறே பதிலில்லாமல் அமர்ந்திருந்தவளை கண்டு, “இங்க நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் இவ இப்படி செஞ்சு வச்ச சிலையாட்டம் அப்படியே இருக்கா…..” கோவம் சுறுசுறுவென ஏற அவளது நாடியை பிடித்து தன்னை நோக்கி நிமிர்த்தியவன்,
“இங்க பாரு நீயும், நானும் புருஷன் பொண்டாட்டி. அப்படியே நான் உன்னை ஏதும் செஞ்சா, எதாச்சும் நடந்தா என்ன தப்பு?…” என்றவனை விழியே தெறித்துவிடும் அளவிற்கு பார்த்தாள்.
“சும்மா இப்படி முழிக்காத, இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு கொஞ்சம் சீண்டலும் விளையாட்டும் நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்க உதவும் அதோடு உன்னை என் கிட்டயும் என்னை உன் கிட்டயும் நெருங்க வைக்கும். நம்மோட எதிர்கால வாழ்க்கைக்கு நமக்குள்ள கொஞ்சமாச்சும் புரிதல் அவசியம்னு நான் நினைக்கிறேன்….”
“சும்மா தொட்டதுக்கெல்லாம் இதை ஏன் செய்யறீங்க அதை ஏன் செய்யறீங்கன்னு சொன்னன்னு வச்சிக்கோ? ம்ஹூம் சொல்ல மாட்டேன் செய்வேன்….” என்றவன் அவளது அதிர்ந்த முகத்தை கண்டு தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டுவந்தவன்,
“நீ இப்படியே என்னை விட்டு தள்ளியே இருந்தா ஒன்னொண்ணுக்கும் விளக்கம் சொல்லியே லைப் போய்டும்டா…” என சொல்லிவிட்டு அவளது கையை தன கையினுள் அடக்கி,
“நான் நினைக்கிறதை நீயும் நீ நினைக்கிறதை நானும் புரிஞ்சுக்கணும்னு நினைக்கேன். நாம மனசால வாழணும்னு ஆசைப்படறேன்….”
“நான் சொல்றது உனக்கு புரியுதா?…” அவள் புரிந்துகொள்ள வேண்டுமே என்ற பிராயாசையோடு.
சிறிது நேரம் மௌனத்தை குத்தகைக்கு எடுத்தவள் அதை விடுத்து வாய்மொழியால் உறுதியளித்தாள்.
“புரியுதுங்க, இனிமே நீங்க சொல்றதை கேட்கறேன்….” என்றதும்,
“என் மேல கோவமில்லையே…”
“ம்ஹூம் இல்லை…” என்றாள் புன்னகையோடு, அவனும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு,
“ஹப்பா நல்ல வேலை புரிஞ்சுடுச்சு. ம்ம் இப்போ பேசலாமா?…” என கேட்கவும் வேகமாக தலையாட்டினாள்.
அவளை முறைத்து, “நான் உன் கிட்ட என்ன சொன்னேன்?….”
“என்ன சொன்னீங்க?…”
“சுத்தம் உன் கிட்ட கேட்டேன் பாரு என்னை சொல்லணும், எப்போவும் தலையாட்ட கூடாது வாயை திறந்து பதில் சொல்லனும்னு சொல்லியிருக்கேன்ல?…”
அதற்கும் தலையசைக்க போனவள், “ஆமா ஆமா இனிமே பதில் சொல்றேன், தலையாட்டி பழகிருச்சு….”என்றாள் அசடுவழிய.
“இன்னைக்கு நாம ரெண்டு பெரும் மாத்தி மாத்தி வழிஞ்சிட்டு இருக்கோம்ல? என்ன ஒரு வேவ்லென்த்?…”என சில்லாகித்தபடி விஜியின் எண்ணை அழுத்திவிட்டு நந்தினியிடம் கொடுத்தான்.
ரிங் போய்க்கொண்டே இருந்தது.
மீண்டும் அழைக்கவும் அழைப்பு எடுக்கப்பட்டது.
மறுபறம் பேசிய குரலை கேட்டவள் கேவி கேவி அழ ஆரம்பித்தாள்.
உதயாவோ, “போச்சுடா…” என்றபடி கையில் வைத்திருந்த டவலை தலையில் போட்டு ஓரமாக அமர்ந்துவிட்டான்.
உதயாவிற்கு ஒன்று மட்டும் நன்றாக விளங்கிவிட்டது.
“இவளுக்கு ஒண்ணு நல்லா தலையாட்ட தெரியுது, இன்னொண்ணு நல்லா அழ தெரியுது. இவளை சொல்லி என்ன செய்ய? பெத்து வளர்ந்திருக்காங்களே?…” என அவர்கள் மீது கோவப்பட்டான்.
“பின்னே கொஞ்சமாவது பொண்ணோட மனசை புரிஞ்சுக்காம அவளை கண்டிப்பா வளர்க்கிறேன்னு இப்டி ஒரு பொம்மையாட்டம் வளர்த்து வச்சிருகாங்களே?….”
“தலையாட்டியே பழகிருச்சுன்னு சொல்றாளே? அப்போ எல்லாத்துக்கும் இப்படிதானே செய்திருப்பாங்க?…” என மனையாளை எண்ணி மனம் வெதும்பினான்.
“அத்தை, அப்பா எப்டி இருக்காங்க?… அவங்க கிட்ட பேசணுமே, குடுங்க அத்தை ப்ளீஸ்…” என கெஞ்சியவளை பார்த்து இரக்கம் சுரந்தது.
அவளின் அழுகுரலில் தன்னை மீட்டுகொண்டு அவளது பேச்சை கவனிக்க ஆரம்பித்தான்.
“அன்னைக்கும் சரி, நேற்றும் சரி நடந்த சம்பவத்துல இவளோட தவறு என்ன இருக்கு? ஏன் தான் கடவுள் இவளை சோதிக்கிறாரோ?…” என பெருமூச்சை வெளியேற்றியபடியே அவளை மீண்டும் கவனிக்கலானான்.
“என்னாச்சு அத்தை?…”
“ஒண்ணுமில்லைடா மித்து. அண்ணன் நாளைக்கு கண்டிப்பா பேசுவாங்கடா. நீ வருத்தப்படாத…” என்றார் நந்தினியின் அத்தையான பூரணி.
“அம்மாகிட்டையாச்சும் பேசட்டுமா அத்தை?..” என்றாள் அனுமதி கேட்கும் தொனியில்.
பதில் சொல்ல திணறிய பூரணியிடமிருந்து போனை வாங்கி,
“மித்து..” என்றான் விஜி.
பூரணி, நேசமணி தம்பதிகளின் புதல்வனான விஜயேஷ்வர். B.com  முதல் வருடம் படிக்கும் விஜி நந்தினியின் வெல்விஷர் மட்டுமல்லாது உயிர்த்தோழனும் கூட.
சிறுவனானாலும் சிந்தனைகள் அனைத்தும் சிறந்தவையாகவே இருக்கும்.
நந்தினியை விட வயதில் குறைந்தவனானாலும் வயதிற்கு மீறிய பக்குவமும் நிறைந்தவன்.
“இப்போ எதுக்கு போன்ல இவ்வளோ அழுகை?…” என்றான் அதட்டலான குரலில்.
“விஜி அப்பாம்மாகிட்ட பேசணுமே?…” இறைஞ்சும் குரலில் கேட்டவளிடம் பதில் சொல்லாமல் தன பின்னால் திரும்பி பார்த்தான்.
ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து கொண்டு விட்டத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தனர் நந்தினி வீட்டினர். பின்பக்க வாசலில் அமர்ந்திருந்தார் நந்தினியின் தந்தை ஏழுமலை. அவரின் சிந்தனை முழுவதும் நந்தினியை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது.
நந்தினி சென்றதிலிருந்து வீட்டை விட்டு வெளியிலும் செல்லாமல் வீட்டிலும் யாரின் முகத்தையும் பாராமல் யார் பேசினாலும் பேசாமல் மௌனத்தையே பதிலளித்து வாழணுமே என்பதற்காக ஏதோ சாப்பிட்டு தனக்குள்ளே முடங்கி போயிருந்தார். இப்போது நந்தினி பேசுவதை அறிந்து அவள் எப்படி இருக்கிறாள் என தெரிந்துகொள்ள உள்ளம் துடித்தார். 
என்னதான் மற்றவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதாக காட்டிகொண்டாலும் பூரணி நந்தினியிடம் தான் பேசுகிறார் என உணர்ந்தவர் உடனே தன் காதை மட்டும் கூர்மையாக்கி விஜி நந்தினி உரையாடல்களை கவனித்துகொண்டிருகிறார் என்பதை அவரது உடல்மொழியே உரைத்துவிட்டது.
தாய் தகப்பனிடம் பேசமுடியாமல் தவிப்பவளிடம் அவளது தந்தையின் மனவருத்ததை எவ்வாறு சொல்லவென பேச்சை மாற்ற முயன்றான்.
“இன்னொரு நாள் பேசலாம். அவங்களால இப்போ பேச முடியாது மித்து…”
“நான் என்னடா பண்ணினேன்?…” என்றவள்,
“இவங்க தானே தேடி வந்து அப்பாகிட்ட சண்டை போட்டு என்னை கூட்டிட்டு வந்தாங்க. அவங்க பண்ணின தப்புக்கு என் கிட்ட பேசமாட்டாங்களா?…” என்றாள் கோவமாக.
அவள் நியாயம் கேட்ட விதத்தில் உதயா, விஜி இருவருக்குமே அதிர்ச்சியாகிவிட்டது.
உதயாவோ கொதிநிலைக்கே சென்றுவிட்டான்.
“என்னாது??? நான் தப்பு பண்ணினேனா?…”
“எங்க பண்ணினேன்? எப்போ பண்ணினேன்?…”
“இவ என்ன நினச்சிட்டு இருக்கா?…” என கொந்தளித்த உள்ளத்தோடு பார்த்துகொண்டிருந்தான்.
“மவளே பேசி முடி அப்புறம் வச்சிருக்கேன் உனக்கு கச்சேரியை….” என கடிகாரத்தை கண்டுவிட்டு அவளை பார்த்தவாறே பேச்சுவார்த்தையை முடிக்கட்டுமென காத்துகொண்டிருந்தான்.
இவன் இப்படியென்றால் விஜியின் நிலையோ வேறு.
கோவத்தில் ஆத்திரத்தில் யோசிக்காமல் சிதறவிடும் வார்த்தைகள் இருபுறமும் தீட்டிய கூரிய கத்தியை போன்றது. எப்போது வேண்டுமானாலும் பேசுபவரை தாக்கும். கேட்பவரையும் சாய்க்கும் வல்லமை படைத்தது.
கொட்டிவிட்டால் அள்ளமுடியாத வார்த்தைகளின் வீரியம் பேசுபவர்களுக்கு அப்போது தெரிவதில்லை. ஒன்றுமற்ற பிரச்சனைகளை கூட தெரியாமல் பேசும் வார்த்தைகளானது பெரிதாக்கிவிடகூடிய அபாயமும் உண்டே.
நந்தினி பேசிய வார்த்தைகள் அவ்வாறு எந்த விதமான விளைவுகளையும் ஏற்படுத்தி விடக்கூடாதே என எண்ணி அஞ்சினான் விஜி.
நேத்துதான் அந்த வீட்டுக்கு மருமகளா போயிருக்கா. இப்போ இப்டி பேசிவைக்கிறாளே? பக்கத்துல யாரும் கேட்டுட்டா என்ன நினைப்பாங்க? என நொந்துகொண்டே…
“ஏய் லூஸு மாதிரி பேசாத…” என கத்திவிட்டான் விஜி.
“என்னை லூசுன்னு சொல்லாதடா….” என மிச்சமிருந்த அழுகையோடு மூக்கை உறிஞ்சினாள்.
“பின்ன நீ பேசறதுக்கு உன்னை லூஸுன்னு சொல்லாம பாராட்டுவாங்களா?…”
“எப்போ பாரு தேவையில்லாம எதையாவது பண்ணி சிக்கல்ல மாட்டிக்கிறதே உன் வேலையா போச்சு….”
“விஜி, நீயா இப்படி சொல்ற?…” என கண்ணீரோடு கேட்டவளை பார்த்ததும் அவன் அந்த பக்கம் என்ன பேசியிருப்பானென யோசனைக்குள்ளானான் உதயா.
“நான் தான் பேசறேன். நீதான் என்னை பேச வைக்கிற…” என பொரிந்தவனிடம் அவன் எதை சொல்கிறான் என தெரிந்து இறுகிவிட்டாள்.
நந்தினியின் வேதனையான முகமும் அமைதியும் உதயாவிற்கு எதையோ உணர்த்தியது.
அவன் எண்ணமோ மறுபுறம் விஜி பேசுவது அதை பற்றி இருக்கக்கூடாதென மனம் பதை பதைத்தது. அந்த நிகழ்வை சொல்லிகாட்டினால் இவளால் நிச்சயம் தாங்கமாட்டாள் என பதறினான்.
“நந்து, போனை என் கிட்ட தா, நான் விஜிகிட்ட பேசறேன்…” என்றவனிடம் போனை தராமல் கற்ச்சிலையென சமைந்திருந்தாள்.
போனை பறிக்க நினைத்தவனால் அதை செயல்படுத்த முடியவில்லை. காரணம் அதை இறுக்கமாக பற்றியிருந்த அவளது கரங்களை மீறி வாங்க இயலவில்லை.
விஜியோ நந்தினியின் அமைதியை கவனியாமலும், அதை பொருட்படுத்தாமலும் மடைதிறந்த வெள்ளமென வார்த்தைகளை கொட்டித்தீர்த்தான்.
“யார் என்ன பேசினாலும் அவங்க பேசறதுக்கான அர்த்தத்தை முழுசா புரிஞ்சுக்கிறதும் இல்லை…., பேசறதையும் பேசிட்டு நடந்த எதுக்குமே நீ காரணமில்லைன்ற மாதிரி நீ பேசறதுமில்லாம அண்ணா மேல வேற நீ பழி சொல்றியா?…”
“நான் வேணுமின்னே சொல்லலைடா விஜி….” என மன்றாடினாள்.
“இந்த பிரச்சனைகேல்லாம் மூலக்காரணம் யாருன்னு உனக்கு தெரியாதா?….., அன்னைக்கு நடந்ததை அவ்வளோ சீக்கிரமா நீ மறந்திருக்க மாட்ட. எனக்கு நல்லா தெரியும்….”
“அன்றைய சம்பவம் மறக்ககூடியதா?…” அவன் சொல்லிக்காட்டியதும் விக்கித்து போனாள்.
“உங்கப்பா உன்னை என் பொண்ணை நான் கண்டிப்பா கட்டுகோப்பா வளர்த்திருக்கேன்னு பெருமை பட்டுக்குவாறே? அவர் உன்னை யோசிக்கத்தெரியாம வளர்த்திருக்கோம்னு என்னைக்கும் நினச்சதில்லை. வளர்க்க தெரியாம வளர்த்துட்டு அடுத்தவங்க மேல கோபப்பட அவருக்கு என்ன உரிமை இருக்கு….” அவனது கோவம் இப்போது ஏழுமலையையும் தாக்கியது.
விஜியின் பேச்சில் திருமணமாகி புகுந்த வீட்டில் வாழ போகும் பெண்கள் எதையும் ஒரு முறைக்கு நூறு முறை யோசித்து பேசி சிந்தித்து செயல்படவேண்டுமென்ற ஆதங்கம் மட்டுமே. 
நந்தினியின் ஒவ்வொரு வார்த்தையும் செயலும் மற்றவர்களை எவ்விதத்திலும் பாதிக்காமல், மதிப்பிழக்காமல் இருக்கவேண்டுமென்று புரியவைக்கவே பேசினான்.
அவன் பேச பேச கண்ணீர் மட்டும் நிற்காமல் நந்தினியின் கண்களில் வற்றாத நதியாய் கரைபுரண்டோடியது.
“அப்படி யோசிக்காம நீ பண்ணின காரியத்தால உன்னோட அவசரபுத்தியால அநியாயமா பாதிக்கப்பட்டது அண்ணாதான். அவரையே குற்றம் சொல்லுவியா நீ?…” என்று வார்த்தைகளால் வாட்டியெடுத்தான்.
எப்போதுமே ஆதரவாய் ஆறுதலாய் பேசுபவன் அவளின் சிறு சுணக்கத்தை கூட பொறுக்காதவன் பொருமித்தள்ளியத்தில் இடிந்துபோனாள். 
“ஏண்டா விஜி சின்னபுள்ளைகிட்ட இப்படி பேசி வைக்கிற?… அவளை  அழ வைக்காதே… போனை என் கிட்ட குடுடா…” என மறுமுனையில் பூரணி விஜியிடம் சத்தம் போடுவது தெளிவாக கேட்டது.
“போங்கம்மா உங்க வேலையை நீங்க பாருங்க…இப்டியே சொல்லி சொல்லியே அவளை யோசிக்கவே விடாம கைக்குள்ள வைச்சு பொத்தி பொத்தி பாதுகாக்க போய் தானே இவ்வளோ ப்ராப்ளமும்? என்னையும் சேர்த்துதான் சொல்றேன்… நீங்க இதுல தலையிடாதீங்க…” என மிரட்டிவிட்டு மீண்டும் நந்தினியிடம்,
“உனக்கு நல்லது பண்ணத்தானே அண்ணா உன்னை தேடி வந்தாங்க… எல்லாமே நீ நல்லா இருக்கணும்னு தானே?… ஆனா இப்போ உன்னை பெத்தவங்க உன் கிட்ட பேசலைனதும் உனக்கு இவ்வளோ கோவம் வருதோ?…”
“ப்ளீஸ் விஜி நான் தெரியாம சொல்லிட்டேன். இனிமே சொல்லமாட்டேன்.  இதுக்கு மேல பேசாத விஜி என்னால தாங்க முடியலை…” என கதறியே விட்டாள்.
அவளது அழுகுரலில் தன்னையே சாடிகொண்டான்.
“தைரியமாய் இருக்க சொல்லி ஆறுதலாய் பேசவந்தவனை அவள்  வாய்தவறி சொன்ன வார்த்தையால் வாட்டிவதைக்கும் படி செய்துவிட்டாளே?..” என தனக்குள் கசந்துபோனான்.
உதயாவிற்கோ விஜியிடம் தன்னால்தான் எல்லாம் என தன்னை சுட்டிகாட்டியவளின் மீது முதலில் கனன்ற கோவம் அவளின் அறியாமையினால் அவள் விட்ட கண்ணீரோடு கரைந்துவிட்டது. கோவத்தோடு வேகமாக போனை பிடுங்கியவன்,
“என்ன விஜி நீ? எப்போ என்ன பேசறதுன்னு ஒரு நேரம் காலம் வேண்டாமா?…” என எரிந்துவிளுந்தான்.
“அண்ணா???…” அதற்கு மேல பேச விஜிக்கு நா எழும்பவில்லை. உதியாவையும் வைத்துக்கொண்டா தான் பேசிவிட்டோம் என்று குன்றினான்.
“என்னை மன்னிச்சிடுங்க அண்ணா…”
“மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா? உன்கிட்ட எவ்வளோ ஆர்வமா ஆசையா பேச வந்தா?…”
“தெரியும் அண்ணா, ஆனாலும் அவ சொன்னது தப்புதானே?…”
“யாரு இப்போ இல்லைனது?…. அப்பாகிட்ட பேசனும்ன்ற அவசரத்துல பேசிட்டா?…. அவ தெரிஞ்சு செய்யாதப்போ நீ எப்படி அவளை திட்டலாம்?…” என மனைவிக்கு வக்காலத்து வாங்கினான்.
விஜிக்கு இந்த வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலையும் நிம்மதியையும் தந்ததென உதயாவிற்கு தெரிய வாய்ப்பில்லை. விஜியோ வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அளவிற்கு அளப்பறியா சந்தோஷத்தால் உணர்ச்சிவசபட்டிருந்தான்.
“இன்னொரு தடவை நீ அவளை எதாச்சும் சொல்லி அவ அழட்டும் அப்றமா உன்னை கவனிச்சுக்கறேன்…” என எச்சரித்தவனை இடைமறித்து கலகலவென சிரித்தான் விஜி.
“டேய் என்னை பார்த்தா எப்படி தெரியுது?…”
“இல்லைங்கண்ணா, எங்க வீட்லயும் இப்படிதான் உங்க மாமனார் கோவப்பட்டு மித்து வாண்டை எதுவும் திட்ட நினச்சா கூட மத்தவங்க ஒண்ணுமே சொல்லவிடமாட்டாங்க….”
“ஆனா தனியா சிக்கிட்டானா அவ்வளோதான்….. இவ பயப்படற ஒரே ஆளு எங்க மாமாதான். அதான் உங்க மாமனாரு…” என அந்த ‘ரு’ வை  கிண்டலாக அழுத்தி சொன்னான்.
“ம்ம் அதுசரி, அவ இன்னும் அழுதுட்டே இருக்கா, அவக்கிட்ட குடுக்குறேன் ஒழுங்கா திட்டாம சமாதானமா பேசு….” என கட்டளையிட்டவாறே போனை நந்தினியிடம் தந்தவன் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு,
“அழாம பேசணும், அவன் திட்டினா நீயும் நல்லா திட்டு. இல்லைனா என் கிட்ட சொல்லு நான் சொல்லித்தாரேன். என்ன?…” என அவளுக்கும் சொல்லிகொடுத்து அவளை தேற்றினான்.
நடுக்கத்தோடு போனை வாங்கியவள், “சாரி விஜி…” என்றாள் மெலிதான விசும்பலோடு.
“நானும் சாரிடா, நீ இனிமே இப்படி யோசிக்காம பேசகூடாது சரியா?…” என்றான் தன்மையாக.
“ம்ம்… நீயும் இனிமே என்னை இப்டிலாம் திட்டக்கூடாது…சரியா?…” என கறாராக மொழிந்தவளை  கண்டு விஜி, உதயா இருவருக்குமே சிரிப்பு  பொங்கியது.
நந்தினி உதயாவை காரணமாக காட்டியதை அவன் தவறாக புரிந்துகொள்வானோ என்ற விஜியின் பயத்தினை அவளது கணவன் அதற்கு அவசியமே இல்லையென தகர்த்தான்.
இனியும் நந்தினியின் வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் வந்துவிடகூடாதென விஜி நினைத்தான்.
தனது குடும்பமோ இனி எதையும் தாங்கும் நிலையில் இல்லை. அதை அவள் புரிந்து நடந்துகொள்ள வேண்டுமென விரும்பினான்.
உதயாவை பற்றி தான் பார்த்தது மட்டுமில்லாமல், தனது தந்தையும்  சொல்லி அறிந்தவனாயிற்றே. அவன் பார்த்துகொள்வான் என நம்பினான்.
அதுமட்டுமன்றி பிரசாத்?????????
அவனை நினைத்தாலே நடுங்கியது. இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கோ? அவனை சந்திச்சதால தானே இத்தனை பிரச்சனையும் என தோன்றினாலும் அவனால் தானே நந்தினிக்கு உதயா கிடைத்தான் என்ற எண்ணமும்  தோன்றாமலில்லை.
பிரசாத்தால் எப்படி உதயாவின் வரவு நிகழ்ந்ததோ, அதேபோல அதே பிரசாத்தால் மூலமாக தான் உதயாவின் உறவும் நந்தினியோடு ஏற்பட சூழ்நிலை நிர்பந்தித்தது. அனைத்தும் பிரசாத்தால்.
இனி நந்தினியை பிரசாத் நெருங்காமல் இருந்தாலே போதும். என அவனின் நினைப்பிலிருந்து வெளியே வந்த விஜி நந்தினியின் குரலுக்கு செவிமடுத்து பதில் கொடுத்தான்.
“அதுசரி எதுவுமே நீ நடந்துக்கிறதை பொறுத்துதான் இருக்கு மித்து. எப்போவும் ஒரு வார்த்தை பேசும்போது ஒருமுறைக்கு நாலுமுறை யோசிச்சு பேசணும். சரியா?….” என அறிவுரையோடு இன்னும் சில விஷயங்களை பேசிவிட்டு தன் தாயிடம் தந்தான்.
“அம்மாடி மித்ரா, நீ வருத்தபடாதடா… அவன் ஒரு லூஸு… நீ மனசுல எதையும் போட்டு குழப்பிக்காத…” என்றார் நந்தினி வருந்துவது பிடிக்காத பூரணி.
“இல்லைங்கத்தை ஒன்னும் நினைக்கலை, நீங்க விஜியை எதுவும் திட்டிடாதீங்க…” என்றாள் சுரத்தே இல்லாத குரலில்.
“இப்போவும் நீ அவனுக்கு ஏந்துக்கிட்டு பேசாத… அவனுக்கு உன் மாமா வரட்டும் அப்பறம் இருக்கு…” என அவனை தாளித்தவாறே,
“நீ நல்லா இருக்கியா? உன் வீட்ல உன் கிட்ட நல்லா பழகுதாகளா?…” என்றார் அது அவளது வீடு என அவளுக்கு புரியும்படி உரைத்தவாறே.
“எல்லோருமே என்னை நல்லா பார்த்துக்கறாங்க அத்தை… இங்க எந்த குறையுமே இல்லை…. நீங்க அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் சொல்லிடுங்க…. என்னை நினச்சு வருத்தப்பட்டுட்டே இருப்பாங்க… என்னாலதான் இப்போ பேச முடியலையே…” என்று அவர்களிடம் பேசமுடியாத ஏக்கத்தை குரலில் காட்டியபடி.
“நீ விசனபடாத மித்துமா… இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாமே சரியாகிடும்… உன்னை பார்க்க எல்லோரும் வருவோம்…”என்று அவளிடம் உறுதியளித்துவிட்டு,
“அப்பப்போ நீ பேசு. அங்க உன் வீட்ல அனுசரிச்சு நடக்கனும்… பொறுமையோடு எதையுமே பேசனும்… மாப்பிள்ளை தம்பி ரொம்ப நல்லமாதிரி… நீ அவர்கிட்ட நல்லவிதமா பழகனும்….” என்றவர் மேலும்,
“பொண்ணை நல்லா வளர்த்திருக்காங்கன்ற நல்லபேரை நீதான் உன் வீட்ல எங்களுக்கு வாங்கி தரனும்… நீ நடந்துக்கிற முறையில்தான் நாங்க பெருமைப்பட்டுக்க முடியும்டா தங்கம்…” என பல பல அறிவுரைகளை வழங்கிவிட்டு பேச்சை முடித்துகொண்டார்.
அவரிடம் பேசிவிட்டு போனை வெறித்தவாறே அமர்ந்திருந்தவளை கண்டவன், “இனி இவளை புடிச்சு உண்டியலை குலுக்கிறது போல குலுக்கனுமே?… சத்திய சோதனைடா உதயா உனக்கு…” என புலம்பியபடி நந்தினியை உலுக்கினான்.
உணர்வில்லாமல் அமர்ந்திருந்தவள் அவனின் ஸ்பரிசம் பட்டதுமே, “என்னால தானே உங்களுக்கு இவ்வளோ கஷ்டம்…” என கேட்டுகொண்டே அணையுடந்த வெள்ளமென கண்ணீரை பாயவிட்டாள்.
இப்போது அவளது அழுகையில் ஆயாசம் ஏற்படவில்லை. மாறாக ஆறுதலளித்து அவளை தேற்றத்தான் தோன்றியது.
இப்போதைக்கு எது சொன்னாலும் அவளுக்கு மூளையில ஒன்னும் பதியபோறது இல்லை என முடிவுக்கு வந்தான்.
அருகில் நெருங்கி அமர்ந்தவன், “அழுகாதே…” என்ற வார்த்தையை சொல்லவே இல்லை.
பதில் சொல்லாமல் தனது மடியில் சாய்த்துக்கொண்டு, “இன்னையோட அழுது முடிச்சிடனும். இனி உன் கண்ணுல இருந்து கண்ணீரை நான் பார்க்ககூடாது. புரியுதா?…தூங்கு…” என்றவன் ஒரு கையால் தலையை கோதிவிட்டு மறு கையால் முதுகை தட்டிக்கொடுத்தவாறே தானும் சாய்ந்து அமர்ந்திருந்தான்.
அழுகை குறைந்து உறக்கத்தின் பிடிக்குள் தன்னை கொடுத்தவளை விட்டு விசும்பல் மட்டும் விலகவே இல்லை.
இந்த வேதனையில் இருந்து சீக்கிரம் தங்களுக்கு ஒரு விடிவு வராதா என்று எண்ணி தன் மடியில் துஞ்சியிருந்தவளை கண்களுக்குள் நிரப்பியவாறே அமர்ந்திருந்தவன் தன்னை மறந்து துயிலுலகம் சென்றான் தன் மனையாளோடு.
மறுநாள் விடியும் விடியல் அவளை துடிக்க வைக்க காத்திருப்பதை அறியாமலேயே…..

Advertisement