Advertisement

நட்சத்திர விழிகள் – 11  
நந்தினியால் தானே உதயா தன்னை அவமதித்து பேசினான் என்ற எண்ணம் மேலோங்க அவள் மேல் கொண்ட வன்மம் இன்னும் அதிகரித்தது.
தனது செயலால் தான் இந்நிலைக்கு ஆட்பட்டிருக்கிறோம் என்பதை உணராமலேயே உணரவிரும்பாமலேயே தான் என்ற அகம்பாவத்தால் தன் சொந்தங்களை இழந்துகொண்டிருப்பதை அறியாமல் தன்னை தனிமைக்கு தாரைவார்க்க தயாரானார்.
நந்தினியை பகையாளியாக ஜென்ம விரோதியாக தானே உருவகப்படுத்திகொண்டு அதனால் உண்டான காழ்ப்புணர்ச்சியால் அவளை ஜெயிக்கும் மார்க்கத்தை தேடித்திரிந்தார்.
தன்னால் இனி எதுவும் செய்யமுடியாமல் போனாலும் அவருக்கு நந்தினியை எப்படியாவது தண்டித்தே ஆகவேண்டும் என்ற வெறி அவரை ஆட்டிபடைத்தது. அதற்கான வழி பிரசாத். அவனை சந்தித்து தனக்கு உதவுமாறு கேட்கவேண்டும் என்று நினைத்தவரால் உதயாவிற்கு தெரியாமல் எப்படி அவனை அணுகுவது என்ற வழி மட்டும் புலப்படவே இல்லை.
உதயா பேசிவிட்டு என்ற பின் இந்த ஒரு வாரமும் அனலாக தகித்துகொண்டிருந்த இதயத்தில் மேலும் நெருப்பை வளர்க்கும் விதமாய் தன் மகளின்  எதிர்காலத்தை முடிவெடுக்கும் பொறுப்பையும் தட்டிப்பறித்ததுபோல் விஷ்ணுவை கொண்டுவந்து நிறுத்தியது இன்னமும் அவரை வெகுவாக சீண்டியது.
விஷ்ணுவை ஒருவாறாக மனம் ஏற்றாலும் அது நந்தினியின் கணவனது ஏற்பாடு என்று அவரது இதயம் மணிக்கொருதரம் உரைத்துகொண்டே இருந்தது. 
இப்படியே பலவாறாக சிந்தித்து சிந்தித்து தலைவலியை உண்டாக்கி கொண்டவர் தன்னையறியாமல் தூங்க, அங்கே கோவிலில் உதயாவோ அடுத்து நடப்பவை அனைத்து நல்லதாகவே நடக்க வேண்டுமென்றும் தனது அத்தை நல்லவிதமாக மனம் திருந்தவேண்டுமென்றும் வேண்டிகொண்டான். அவனது வேண்டுதல் நிறைவேறுமா?
அனைவரும் பூஜை முடிந்து கிளம்ப ஆயத்தமானார்கள். விஷ்ணுவோ கௌரியிடம் பேச ஆனானப்பட்ட முயற்சிகள் எடுத்து அந்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகரமாக தோல்வியை தழுவினான். கெளரியிடம் பேச அவளை நெருங்கும் போதெல்லாம் அவளோ இவனை விட்டு விலகுவதிலேயே குறியாய் இருந்தாள்.
அவனது ஏமாற்றத்தை கண்டு சிரித்த உதயாவிடம் வந்து புகார் பட்டியல் வாசித்தான் விஷ்ணு.
“என்னடா நினச்சிட்டு இருக்கா உன் தங்கச்சி?… சொல்லி வை அவகிட்ட. என் லட்சியத்தை விட்டு அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்கேன். இவ என்னடான்னா மனுஷன் என்ன பேச வரான்னு கூட தெரியாம பேயை கண்டதுபோல ஓட்டம் பிடிக்கிறதிலேயே குறியா இருக்கா!….” என சகட்டுமேனிக்கு பொரிந்து தள்ள,
“நீயும் உன் லட்சியமும். வேற வேலை இல்லை உனக்கு….” என்ற உதயாவின் அலட்சியத்தில் கடுப்பான விஷ்ணு,
“பேசுவடா, நீயேன் பேசமாட்ட?… நான் பாட்டுக்கு காதலிச்சு கல்யாணம் பண்ணனும், இல்லைனா விரும்புற பெண்ணை தூக்கிட்டு போய் தாலிகட்டனும்னு ஒரு இலக்கை வச்சு சுத்திட்டு இருந்தேன். அது இல்லாம போயி இப்போ உன் தங்கச்சி தான் எனக்குன்னு முடிவாகிருச்சு…” என பெருமூச்சு விட்டவன்,
“லவ் லுக் தான் இல்லை, அட்லீஸ்ட் சின்னதா நார்மல் லுக்காவது விடலாம்ல உன் தங்கச்சி. நான் என்ன கடத்திட்டா போயிடுவேன். ஒரு நிமிஷம் நின்னு பேசினா என்னவாம்?…” என முதலில் உதயாவை வசைபாடியவன் பின் புலம்ப ஆரம்பித்தான்.
எந்த நேரத்தில் கடத்திக்கொண்டு போய்விடுவேனா என்று கேட்டுவைத்தானோ அதுபோல அவளை கடத்தும் நிலை பின்னாளில் ஏற்படும் என்பது அறியவில்லை.
“அதெல்லாம் உன் சாமர்த்தியம் மச்சி. என் தங்கச்சியை பேச வைக்கிறதுக்கெல்லாம் நீ ரெக்கமன்ட் பண்ண சொல்ற உன்னையெல்லாம் என்னதான் செய்ய?. கிளம்பலாம் டைம் ஆச்சு….” என்று கழண்டுகொள்ள விஷ்ணு கௌரியிடம் எப்படி நெருங்குவது என யோசிக்க ஆரம்பித்தான்.
ட்ரைவரிடம் காரை எடுத்துவர கூறிவிட்டு பூஜை தட்டுகளில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துவைக்க உதவிகொண்டிருந்தான்.
காரை எடுக்க சென்ற ட்ரைவர் போனவேகத்திலேயே திரும்பி வர என்னவென விசாரித்தவனின் முகமோ இறுகிவிட்டது. ட்ரைவரை வீட்டிற்கு கிளம்புமாறு அனுப்பிவிட்டு, அனைவரையும் கிளம்பி தான் சொன்ன பின் கோவிலின் வாசலுக்கு வந்து நிற்குமாறு சொல்லி பின் தானே கார் எடுத்துவர சென்றான்.
காரை நெருங்கியவன் காரின் முன் இருந்த பைக்கை பார்த்ததுமே பதற்றம் தொற்றிகொண்டது. அவன் நினைத்தது போல அது பிரசாத் பைக். அதுவும் பைக் நிறுத்தியிருந்த விதத்திலேயே வேண்டுமென்றே பைக்கை நிறுத்திருப்பது தெளிவாக புரிந்தது.
சுற்றி பார்த்தவனது பார்வை வட்டத்தில் பிரசாத் படாததால் பைக்கை நகர்த்திவைக்க முயல, “டேய் பிரபா, எவ்வளோ தைரியம் இருந்தா என் பைக் மேல கை வைக்க போவ?…” என்று ஓங்கி குரல் கொடுத்தவாறே அவன் முன் தோன்றினான் பிரசாத் உதயாவை முறைத்துக்கொண்டே.
பிரசாத்தை பார்த்த உதயாவுக்கோ தூக்கிவாரிப்போட்டது. எங்கே நந்தினி பிரசாத்தை பார்த்துவிடுவாளோ என அஞ்சி தவிக்க ஆரம்பித்தான்.
அவனோடு சண்டையிட இது நேரமில்லை என புரிந்தவன், “பிரசாத்  உன் பைக்கை எடு. எல்லோரும் காத்திட்டு இருப்பாங்க. நாம அப்பறமா பேசலாம்… என சமாதானமாக பேச,
“இதோ பாருடா புலி பதுங்குது?…”என உதயாவை சீண்டியவன்,
“என்ன பொண்டாட்டியோட வந்திருக்கியா? எங்க கூப்பிட்டு அறிமுகப்படுத்தேன். நானும் பார்த்துட்டு நாலு நல்ல வார்த்தை பேசிட்டு போயிடறேன்…” என வம்பிழுக்க உதயாவின் ரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறியது. பல்லை கடித்துக்கொண்டு பொறுமை காக்க,
அப்போதும் பிரசாத் விடாமல், “என்ன சார் ரொம்ப டென்ஷன் ஆகுறது போல தெரியுது? இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேண்டா. இன்னைக்கு அவளை பார்த்துட்டு நான் யாருன்னும் உனக்கு என்ன முறையாகனும்னும் சொல்லிட்டுத்தான் போவேன்…” என எள்ளலாக பேச உதயா பாய்ந்து அவனது சட்டைக்காலரை கொத்தாக பற்றினான்.
“யாருக்குடா பயம்னு சொன்ன? நந்தினிக்காக பார்க்கிறேன். உன்னால அவ அனுபவிச்சதெல்லாம் போதும். அவ உன்னை பார்க்க வேண்டாம்னு நினைச்சுதான் அமைதியா போறேன். இல்லைனா இந்த இடத்திலேயே உன்னை….” என அவனை அடித்து துவம்சம் செய்துவிட நினைக்க கிருஷ்ணமூர்த்தி உதயா சென்று நேரமாகிவிட்டதே என அவனை தேடி வர உதயா பிரசாத் இருவரும் இருந்த நிலையை பார்த்து அதிர்ந்துவிட்டார்.
வேகமாக அவர்களை நெருங்கியவர், “பிரபா விடு அவனை. என்ன காரியம் செய்யற?…” என உதயாவின் பிடியிலிருந்து பிரசாத்தை விடுவித்தவர்,
“என்னப்பா பிரசாத்?…” என்று அவனை நெருங்க முயல அதுவரை உதயாவோடு கோவமாக சண்டையிட்டு கொண்டிருந்தவனது முகத்தில் கிருஷ்ணமூர்த்தியை கண்டதும் சொல்லொண்ணா வலி வந்து ஒட்டிக்கொள்ள அவரை விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்தான்.
வெறுப்பு மொத்தத்தையும் கண்களில் தேக்கி, “டேய் பிரபா, சொல்லிவை உன் அப்பாக்கிட்ட என் பக்கம் வரவேண்டாம்னு. அவரால்தான், அவரால்தான் நான் இப்படி ஆகிட்டேன். மீறி என் பக்கம் வந்தார்ன்னா அப்புறம் நடக்கிறதே வேற…” என்று மூர்க்கமாக சீறிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு அசுரவேகத்தில் பறந்தான்.
அவன் செல்லவும் தான் உதயாவால் சீராக மூச்சுவிட முடிந்தது. நல்லவேளை நந்தினியின் கண்களில் பிரசாத் படவில்லை என நிம்மதி கொண்டான்.
பிரசாத்தின் உதாசீனத்தில் கிருஷ்ணமூர்த்தியின் மனம் நத்தையாக சுருங்கியது. தந்தையின் வேதனை பொறுக்காமல் அவரை தன்னோடு அனைத்து சமாதனபடுத்தினான்.
“விடுங்கப்பா, அவன் இன்னைக்கு நேத்தா இப்டி இருக்கான். பிரசாத் இப்படி நம்மை அசிங்கபடுத்தி வம்பிளுக்கிறது நமக்கென்ன புதுசா? அவனா எப்போ நம்மை புரிஞ்சிக்கிட்டு வரணுமோ அப்போ வரட்டும். நாம கிளம்பலாம். எல்லோரும் காத்திட்டு இருப்பாங்க…” என்று அவரை அழைத்துகொண்டு காரை கிளப்பினான். அவனுக்கு முன்னாலே விஷ்ணு காரில் காத்துகொண்டிருந்தான்.
கோவில் வாசலுக்கு அனைவரும் வரவும் விஷ்ணு வண்டியில் அவனது பெற்றோரும் சுதர்சனமும் ஏறிகொண்டனர். விஷ்ணுவோ கெளரி தன்னோடு வருவாள் என நினைக்க அவளோ இவன் இருப்பதையே சட்டைசெய்யாமல் தங்கள் வண்டியில் ஏற முனைப்பாக இருந்தாள்.
விஷ்ணு முகம் போன போக்கை கண்ட உதயா நாச்சியிடம் காதில் ஏதோ கிசுகிசுக்க, நாச்சி புரிந்துகொண்டவராக புன்னகைத்து தான் பார்த்துகொள்வதாக சொன்னவர்,
“இந்தா புள்ள கெளரி, நீ விஷ்ணு தம்பி வண்டியில முன்னால போ….” எனவும் விஷ்ணுவுக்கோ கொண்டாட்டமாக போனது.
நாச்சியின் பேச்சை கேட்டு அதிர்ந்த கெளரி மாட்டேன் என்று தலையசைத்து விட்டு உதயாவின் அருகில் ஏறி அமர்ந்துவிட்டதும் விஷ்ணுவின் முகம் வாடிவிட்டது. அவனை கண்ட உதயா விஷ்ணுவிடம் அமைதியாக இருக்குமாறு சைகை காண்பித்து கிளம்ப சொன்னான்.
நாச்சியோ கௌரியை திட்டிக்கொண்டே விஷ்ணுவோடு சென்றுவிட்டார்.
கிருஷ்ணமூர்த்தி காரை எடுக்க அவரருகில் முன்னிருக்கையில் பாக்கியம் அமர்ந்திருந்தார். பின்னால் உதயா நடுவில் இருக்க கௌரியும் நந்தினியும் இருபுறமும் அமர்ந்திருந்தனர்.
கார் கிளம்பவும் கௌரிக்கு மெலிதான உறக்கம் பிடித்துக்கொள்ள உதயாவின் தோள்களில் தலைசாய்ந்து கொண்டாள். அவளது தலையை வாஞ்சையாக வருடியவனின் மனம் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுத்த திருப்தியில் நிறைந்திருந்தது.
வீடு வந்து சேர்ந்தவர்கள் திருமணம் முடிவு செய்திருப்பதால் அன்றைக்கு மதிய விருந்து தயார் செய்ய ஆரம்பித்தனர். வேணி அனைவரும் வரும் அரவம் கேட்டும் வெளியே எட்டிபார்க்கவே இல்லை. சுதர்சனம் வந்து பார்க்கும் போது தூங்குவது போல பாவனை செய்யவும் அவரும் எதுவும் சொல்லாமல் ஒரு பெருமூச்சோடு வெளியேறிவிட்டார்.
பெண்கள் அனைவரும் சமையலறையை குத்தகைக்கு எடுக்க, ஆண்கள் பேச்சு சுவாரசியத்தில் ஈடுபட்டனர். நந்தினியை பார்க்க அங்கும் இங்குமாக நடைபயின்று கொண்டிருந்தவனை இழுத்துபிடித்து தன்னருகில் அமர்த்திகொண்டான் விஷ்ணு.
“மவனே நானே இங்க மண்டை காஞ்சுபோய் இருக்கேன், நீ பன்ற ரொமான்ஸை பார்த்து தீஞ்சுவேற போகனுமாக்கும். எங்கயும் நகராத. உன்னை விடமாட்டேன்…” என பிடித்துவைத்துகொண்டான்.
உதயாவின் போன் ஒலித்ததும் அவர்களிடமிருந்து அகன்றவன் புதிய நம்பராக இருப்பதை கண்டவன் யோசனையோடே மொபைலை ஆன்செய்து காதுக்கு கொடுத்தான்.
“ஹலோ அண்ணா, நான் விஜி பேசறேன்…” எனவும்,
“என்ன விஜி இது புது நம்பரா இருக்கு?..”
“அதை ஏன் அண்ணா கேட்கறீங்க?. உங்க மாமனார் எல்லோர் போனையும் ஆப் பண்ணி வாங்கி வச்சிட்டார். நான் இப்போ டெலிபோன் பூத்ல இருந்து பேசறேன்….” என சலிப்பு கலந்த எரிச்சலோடு கூறவும்,
“உன் போனை வச்சு என்ன செய்ய போறாராம்?…அவர் எதுக்காக வாங்கணும்?…” என புரியாமல் கேட்க,
“இப்போ நாங்க எல்லோரும் உங்க வீட்டுக்கு இன்னும் ஒன்றரைமணி நேரத்தில வந்து சேர்ந்திடுவோம் அண்ணா….” என விஜி கூறவும் அதிர்ச்சியிலும் சந்தோஷத்திலும் உதயாவுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.
“எவ்வளோ சந்தோஷமான விஷயம்?….இதை ஏண்டா முன்னகூடியே சொல்லலை….” என கடிந்துகொள்ளவும்,
“ரொம்ப சந்தோஷம் தான் போங்க. காலாங்கத்தால எழுப்பி ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்னு கிளம்ப சொன்னாரு. என்னனு கேட்டா ஒரு விவரமும் சொல்லலை. அதுக்குமேலையும் கேட்டு அவரை டென்ஷன் பண்ண வேண்டாம்னு கிளம்பி வந்தோம். வாடகைக்கு கார் அரேஞ் பண்ணினது கூட தெரியலை எங்களுக்கு…” என சொல்லிகொண்டிருக்க அவன் பேசி முடிக்கட்டுமென அமைதிகாத்தான் உதயா. விஜி சொல்லவருவது என்னவென ஓரளவிற்கு யூகித்துதான் இருந்தான்.
“எல்லோரோட போனையும் ஆப் பண்ணி வாங்கி வச்சுட்டு அப்பறமா சொல்றாரு மித்ராவை பார்க்க போறோம்னு. அவ அங்க எப்டி இருக்கான்னு நேர்ல போய் தெரிஞ்சுக்கணும். அவங்க கிட்ட தகவல் சொல்லாம போகணும். முன்னாலே சொல்லிட்டா என் பொண்ணு அங்க எப்டி இருக்கா என்ற உண்மையை என்னால தெரிஞ்சுக்க முடியாது. நீங்க யாரும் சொல்லிடகூடாதுன்னுதான் போனை வாங்கி வச்சிட்டேன்னு சொல்றாரு….” என சொல்லி முடிக்கவும் உதயாவிடம் இருந்து வெடிச்சிரிப்பு கிளம்பியது.
எவ்வளவுதான் கட்டுபடுத்த நினைத்தாலும் அவனால் சிரிப்பை கண்ட்ரோல் செய்யவே முடியவில்லை. இவன் சிரிப்பதை கேட்ட விஜிக்கோ சுவத்தில் முட்டிகொள்ளலாம் போல இருந்தது.
“அண்ணா போதும் சிரிச்சது, அப்பாதான் ஒரு டீ குடிச்சிட்டு போவோம்னு சொல்லி இங்க வழில ஒரு கடையில நிப்பாட்டிட்டு உங்க கிட்ட தகவல் சொல்ல சொன்னாங்க. அதுக்கும் சும்மா இருந்தாரா அந்த மனுஷன் யாருக்கு போன் எதுக்கு போன் அப்டின்னு உயிரை எடுத்திட்டு இருக்கார்…” என்று விஜி சொல்ல சொல்ல உதயாவிற்கு சிரிப்பு அதிகமாகிக்கொண்டே இருந்தது.
“நான் என் ப்ரெண்ட் கிட்ட இன்னைக்கு க்ளாஸ்க்கு வரலைன்ற விஷயத்தை சொல்லிட்டு வரேன்னு பொய் சொல்லி உங்களுக்கு கால் பண்ணியிருக்கேன். அப்பா மாமாவை ஏதேதோ பேசி சமாளிச்சிட்டு அந்த பக்கம் கூட்டிட்டு போயிருக்காங்க….” என ஏழுமலையை எண்ணி உதயாவிடம் புகைந்தான்.
“ஹா ஹா ஹா ஹா, போதும் விஜி என்னால முடியலை…” என வயிற்றை பிடித்துகொண்டு சிரிக்க,
“அண்ணா!!! அவர் உங்க மேல சந்தேகப்படறார்னு சொல்றேன், உங்களுக்கு சிரிப்பா?…” என கடுப்பானான்.
தன் மேலும் தன் குடும்பத்தார் மேலும் சந்தேகப்படும் மாமனாரின் சிறுபிள்ளைத்தனத்தை நினைத்து கோவம் கொள்ளாமல் அவரது இடத்தில் இருந்து யோசித்து பார்த்தான். அவர் நினைப்பதிலும் தவறில்லையே. அதையே விஜியிடம் சொல்லவும் இன்னும் அதிகமாக கடுப்பாகிவிட்டான் விஜி.
“இங்க பாரு விஜி, தன் பெண்ணிற்கு தானே வரன் பார்த்து அமைத்துகொடுக்கும் இடங்களிலேயே ஆயிரத்தெட்டு பிரச்சனைகளை பெண்ணை பெற்றவங்க சந்திக்கிறாங்க. அப்படி இருக்கும் போது எங்க கல்யாணம் நடந்து சூழ்நிலையில உங்க மாமா சந்தேகபடுவதில் எனக்கு எந்த தவறும் இல்லைன்னுதான் தோணுது….” என கூறவும்,
“என்னமோ பண்ணுங்க. ரொம்ப நேரம் என்னால பேசமுடியாது. முதல்ல நாங்க வரும் விஷயத்தை வீட்ல சொல்லிடுங்க. நான், அப்பா, அம்மா, மாமா, அத்தை, அப்புறம் கோசலை பெரியம்மா  ஐந்து பேர் தான் வரோம்….” என்றான் விஜி. கோசலையின் பெயரை கேட்டதுமே உதயாவிற்கு அவர்களை பார்க்கும் ஆவல் இன்னும் அதிகரித்தது.
“எதுக்கு வீட்ல சொல்லணும். அதெல்லாம் வேண்டாம். உன் மாமாவோட நம்பிக்கையை நாம உடைக்க வேண்டாம் விஜி. அவர் விருப்பப்பட்டது போலவே இங்க வந்து நந்தினி எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்கட்டும். என் கிட்ட சொன்னதை நீ மறந்திரு. நானும் வீட்ல யார்கிட்டயும் சொல்லமாட்டேன். சீக்கிரமா வந்து சேருங்க…” என்று சொல்லிட்டு போனை அணைத்துவிட்டான்.
“ஐயோ!!! அண்ணா, அண்ணா போனை வச்சிடாதீங்க !..” என சொல்லிய நேரம் ஏழுமலை விஜியை நோக்கி வருவதை பார்த்தவன் இந்த மனுஷனை நம்ப முடியாது என்று வேறு நம்பரை அழுத்திவிட்டு போனை அந்த இடத்தில் வைத்துவிட்டு நகர்ந்துவிட்டான்.
நேசமணி மகனை பார்த்து என்னவாகிற்று என சைகையில் கேட்க தலையெழுத்து என்று நெற்றியை கோடிட்டு காண்பித்துவிட்டு காரில் ஏறி அமைந்துவிட்டான். அவர்கள் அனைவரையும் தனக்குள் அடக்கிகொண்ட அந்த வாகனம் குறிஞ்சியூரை நோக்கி கிளம்பியது.
விஜியிடம் பேசிவிட்டு வந்த உதயா எதுவுமே நடவாதது போல அமர்ந்துகொண்டான். அவனுக்குமே சிறிது படபடப்பாகத்தான் இருந்தது. எதுவாக இருந்தாலும் நடப்பவை நல்லதாகவே நடக்கட்டும் என்று பிராத்தித்துக்கொள்ள மட்டும் செய்தான்.
நந்தினியை பார்க்கவேண்டுமென்ற உள்ளம் முரண்ட அடுக்களை நோக்கி ஜூஸ் வேண்டுமென்று ஒரு குரல் கொடுத்தான். அவன் எண்ணத்தை பொய்க்கவிடாமல் தானே பழச்சாறு ஏந்திக்கொண்டு வந்தாள் உதயாவின் மனையாள்.
வந்தவளிடம் ஒரு வார்த்தைகூட பேசவிடாமல் விஷ்ணு ஓடிப்போய் அந்த தட்டினை வாங்கிக்கொண்டு,
“நீ போம்மா தங்கச்சி, உனக்கு உள்ள எவ்வளோ வேலை இருக்கும். கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உன் புருஷனுக்கு. வேலை செய்யவிடாம தொந்தரவு பண்ணிட்டு. இதை நான் கொடுத்திடறேன்….” என நல்லபிள்ளையாட்டம் அவளை அனுப்பிவைத்துவிட்டு உதயாவை பார்த்து பழிப்பு காட்டினான்.
அனைவரின் முன்னால் எதுவும் பேசமுடியாமல் முறைக்க மட்டுமே முடிந்தது உதயாவால். அங்கே மேலும் அமரமுடியாமல் எழுந்து பின்னால் இருந்த தோட்டத்தின் பக்கம் சென்றுவிட்டான்.
நந்தினி வீட்டினர் வர இன்னும் அரைமணிநேரமே எஞ்சியிருந்தது. சொல்லமுடியாத சஞ்சலம் அவனை ஆட்டிப்படைத்தது. அன்றைக்கு அவர்களிடத்தில் தான் மரியாதையில்லாமல் நடந்துவிட்டு வந்தது கொஞ்சமே உறுத்தல் உண்டாகியதில் உதயாவின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அவனது தவிப்பின் தாகம் தீர்க்க நந்தினியே தோட்டத்தில் காட்சி தந்தாள்.
கறிவேப்பில்லை பறிக்க வந்தவளின் கண்களில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த உதயா தென்பட்டான். அவனது முகத்திலிருந்த வாட்டத்தை கண்டு அவனருகே சென்றவள்,
“என்னாச்சுங்க? முகமெல்லாம் வாடியிருக்கு?…” என கேட்டது தான் தாமதம். மனைவியின் மதிமுகத்தை கண்ட உதயாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல ஜொலித்தது.
அவளை பார்த்து புன்னகைத்தவன், “ம்ம் பின்ன நீ என்னை கண்டுக்காம போனா வேற எப்படி இருப்பேன்…” என்று தன் கைகளை அவளது தோளில் மாலையாக போட்டபடி கேட்கவும்,
“நான் என்ன பண்ணேன்?…” என்று கேட்டு தெரியாமல் விழிக்க,
“ஜூஸ் கேட்டது நான் தானே?.. நீ என்னடான்னா அதை விஷ்ணு கையில குடுத்துட்டு போய்ட்ட?..” என குற்றம் சாட்ட,
“நான் எங்க குடுத்தேன்?.. அண்ணா தான் கொண்டுவரும் போதே பாதியில வந்து வாங்கிட்டு போய்ட்டாங்க…” தவறு தன் மேல் இல்லை என்று தன்னை நியாயப்படுத்தினாள்.
“அவனுக்கு கெளரி அவன் கூட பேசலையாம். அதனால என்னை உன் கூட பேசவிடாம பழிவாங்குறானாம் அந்த ராஸ்கல்…” என்று சொல்வதை கேட்ட நந்தினி சிரிக்கவும் அந்த புன்னகையில் தன் சஞ்சலங்கள் அனைத்தும் மாயமாவதை உணர்ந்தான். 
பேச்சு சுவாரசியத்தில் வந்த வேலையே மறந்து அவனோடு ஒன்றிவிட்டாள் நந்தினி. இருவரும் சுற்றுபுறம் மறந்து தங்கள் உலகத்திலேயே இருக்க, நந்தினி வந்து வெகுநேரம் ஆகிவிட்டதென தேடிவந்த கெளரி அவர்களது தனிமையை கலைக்க விரும்பாமல் தானே இலையை பறித்துகொண்டு சென்றுவிட்டாள். அவர்களுக்கு கெளரி வந்ததும் தெரியவில்லை. சென்றதும் தெரியவில்லை.
“நந்துமா, நீ சிரிக்கிறப்போ வானத்தில் சிறகில்லாமல் பறப்பது போல ஒரு உணர்வு….” என்று பிதற்றியவன்,
“அப்பப்போ மாமாவை வந்து கவனிச்சுக்கோ, இல்லைனா நான் தான் கவனிப்பேன் காலையில் கவனித்தது போல!…” என்று கன்னம் கிள்ளவும் தான் அவளுக்கு தான் உரைத்தது. தான் வந்து வெகுநேரம் ஆகிவிட்டதை உணர்ந்தவள், “அச்சோ…” என்று வேகமாக திரும்புகையில் கையை பிடித்து இழுத்து நிறுத்தி,
“எங்க ஓடுற? எப்போ பாரு தப்பிச்சுட்டே இருக்க, இன்னைக்கு எப்டி தப்பிக்கிறன்னு நானும் பார்த்திடறேன்…” என்றான் நந்தினியை விடாமல்,
“நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சுங்க, உள்ள எல்லோரும் தேடப்போறாங்க. கையை விடுங்க…” என அவனின் பிடியிலிருந்து விடுபட முயன்றாள்.
“ஓ!!! அப்போ வா சேர்ந்தே போகலாம்…” என்று அவளது தோளில் கை போட்டு அழைத்து செல்ல நந்தினியும் எதுவும் சொல்லாமல் அவனோடு இசைந்து நடந்தாள்,
“தன் தோள் மீது கை போடாமல் தள்ளிவாங்க என்று சொன்னால் மட்டும் கேட்டுவிட போகிறானா? அதற்கும் ஏதாவது சொல்லுவான்…” என மனதிற்குள் அவனை கோவமில்லாமல் கோவித்துக்கொண்டே.
உதயாவோடு பேசி சிரித்தபடி வீட்டினுள் நுழைந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த தன் குடும்பத்தவர்களை கண்டு ஒரு நிமிடம் அசைவற்று நின்றுவிட்டாள்.
நடப்பவற்றை நம்ப இயலாமல் இது பிரம்மையாக இருந்துவிட்டால் என்ற பயத்துடன் வெறித்த கண்களோடு பார்த்தபடி நின்றிருக்க, சந்திராவிற்கு அதற்கு மேல் பொறுமை இல்லாமல், “மித்ரா கண்ணு…” என்றபடி ஓடி சென்று அணைத்துக்கொண்டார்.
நிஜம்தான். தன் தாய் தன்னை அணைத்திருப்பது நிஜம்தான் என்று உணர்ந்தவள் தானும் அவரை இறுக்கி கட்டிக்கொண்டாள்.
பூரணியும் கோசலையும் எழுந்து வந்து அவர்களது சந்தோஷக்கண்ணீரில் கலந்து கொண்டனர். ஆனந்தத்தில் பேச வார்த்தை வராமல் தவித்த நந்தினியை அழைத்துகொண்டு ஏழுமலையின் அருகில் சென்றனர்.
“அப்பா!…” என அவரை அணைத்து கொண்டவளுக்கு அதற்குமேல் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகளை தன் அருகிலேயே அமரவைத்துக்கொண்டார் ஏழுமலை.
உதயா வந்து அனைவரையும் வரவேற்றான். திருமணத்தன்று மூணாவது மனிதன் போல மாமியாரை அத்தை என்று அழைக்காமல் அந்த வார்த்தையை தவிர்த்தவன் இன்று அனைவரையும் வார்த்தைக்கு வார்த்தை அத்தை, பெரியம்மா, சித்தி சித்தப்பா என முறை சொல்லி அழைத்தான் ஏழுமலையை தவிர. அனைவரும் இன்முகத்தோடு பேசினாலும் ஏழுமலை அவனை முறைத்த வண்ணமே இருந்தார்.
“வாங்க…” என்று உதயா பேசினாலும் உர்ர்ர்ர்ர் என்ற முகத்தோடு தலையை மட்டும் அசைத்துவிட்டு தன் மகள் புறம் திரும்பிவிட்டார். புன்னகையோடு உதயா நகர்ந்துவிட்டான்.
அதை பார்த்த நாச்சிக்கு சிறிது வருத்தம் கூட உண்டாகியது. பாக்கியத்திடமும் தேவகியிடமும் பொருமினார். பாக்கியம், “அத்தை நம்ம வீட்டு பையன் செய்தது அப்படி. அதனால அவருக்கு கோவம் இருப்பது சகஜம் தான். போக போக சரியாகிடும்…” என்று சமாதானப்படுத்தினார்..
வேணி கூட அவர்களிடத்தில் எந்தவிதமான துவேஷத்தையும் காட்டாமல் கனிவாகவே பேசியது உதயாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மனம் மாறினால் சந்தோஷம் தான் என்று நிம்மதியானான். வேணி இனி மாறிவிடுவார் என்று சிறு நம்பிக்கை கூட எழுந்தது.
வேணியின் சாமர்த்தியம் அது. இனி நந்தினிக்கு என்ன கஷ்டங்கள் வந்தாலும் அது தன்னால் தான் நேர்ந்தது என்று ஒருவருக்கும் சந்தேகம் வராமலிருக்கவே அவ்வாறு நாடகமாடினார் என்பது பாவம் உதயாவிற்கு தெரியவில்லை.
நந்தினி வீட்டினருக்கு சந்தோஷம் தாளவில்லை. தன் மகள் சரியான இடத்தில் தான் வாழ வந்திருக்கிறாள். வசதியான இடம் எப்படி இருக்குமோ? என பயந்தவர்களுக்கு உதயாவின் பெற்றோர் உறவினர்கள் என அனைவரும் தன்மையாக பேசவும் மனதிற்குள் நிம்மதி உண்டாகியது.
அனைத்திற்கும் மேல் உதயா நந்தினியின் நெருக்கத்திலேயும் நந்தினியின் முகத்தில் ஜொலித்த நிறைவையும் பார்த்தே அவர்களுக்கு குளிர்ந்துவிட்டது.
உதயா வரும் முன்னரே தன் குடும்பத்தார் அறிமுகப்படலத்தை நிகழ்த்தியிருந்ததில் தான் அறிமுகபடுத்த வேண்டிய அவசியமில்லையென்று பெருத்த நிம்மதிகொண்டான்.
உதயாவிடம் ஏழுமலையின் ஒதுக்கம் அனைவரின் கருத்திலும் பட்டது. விஷ்ணுவோ,
“ஏண்டா மச்சான், உன் மாமனார் ரொம்ப பாசக்காரர் போல?… உன்னை பார்க்கிற பார்வையிலேயே அன்பு பொங்கு பொங்குன்னு பொங்கி பொழியுதே? அப்டினா கல்யாணத்துல அவர்கிட்ட அவ்வளோ பேசியிருக்க நீ. எல்லாத்துக்கும் சேர்த்து வாங்குவன்னு நினைக்கிறேன்…” என கேலியாக கூறவும் அவனை பார்த்து தெய்வீகமாக சிரித்தான் உதயா. அவனின் சிரிப்பை பார்த்ததுமே மனதிற்குள் அலறினான் விஷ்ணு.
“அய்யயோ அவசரப்பட்டு டெவிலுக்கு டெலகிராம் குடுத்துட்டேனே?, ஆப்பை தேடிப்போய் ஆஜராகிறதே எனக்கு வேலையா போச்சு, இவன் வேற சனியனிக்கு சப்ஸ்டியூட்டா வேலைபார்க்க கிளம்பிருவானே? விஷ்ணு செல்லம் உன் பாடு திண்டாட்டம் தான். சமாளிடா விஷ்ணு…” என தனக்குதானே சொல்லிகொண்டவன் உதயாவை பார்த்து ஈஈஈ என இளித்தான்.
“என்னடா? காது வரைக்கும் வாய் நீளுது? சகிக்கலை…”
“அதில்லை மச்சி, உன் மாமனாரை சரிக்கட்ட உனக்கு எந்த ஹெல்ப்பும் வேணும்னாலும் தயங்காம கேளுடா. நான் நண்பேண்டா…” என மார்தட்ட,
“அப்டியா?… அப்போ ஏதாச்சும் கேட்கணுமே?…” என உதயா யோசிக்கும் பாவனைக்கு செல்ல அதை கண்ட விஷ்ணுவின் மனதில் அபாயமணி அடிக்க, “அவசர வேலை, அரைமணி நேரத்தில் வருகிறேன்…” என்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு ஓட்டம் பிடித்தான்.
இவர்களின் பேச்சை ரசித்துகொண்டிருந்த விஜி, “பாவம் அண்ணா உங்க ப்ரெண்ட், ஏன் தான் இப்படி படுத்துறீங்களோ?…” என கேட்கவும்,
“நீ வேற அவன் சரியான எமகாதகன். என்னை இவ்வளோ நாளா ரொம்ப படுத்தினான். அதான் இப்போ நம்ம ரிவீட்..” என்று முறுவலோடு கூறினான்.
“ஏன் அண்ணா, நான் அவ்வளோ சொல்லியும் நீங்க ஏன் வீட்ல யார்கிட்டயும் நாங்க வரும் விவரத்தை சொல்லவில்லை. தப்பா ஏதாச்சும் நடந்திருந்தா?…” என தன்  சந்தேகத்தை கேட்கவும்,
“அப்படி நடக்க வாய்ப்பே இல்லை விஜி. எனக்கு என் குடும்பத்தை பத்தி நல்லா தெரியும். அதனாலதான் வீட்ல சொல்லலை. போலியா எதுக்காக ஒரு விஷயத்தை நாம உருவாக்கணும். நம்மோட இயல்பிலேயே இருப்போமே. அதுமில்லாம உன் மாமா ஆசைபட்டதுபோல மகள் இங்க உண்மையிலேயே எப்படி இருக்கான்னு தெரிஞ்சுகிட்டாங்க. அது போதும்…” என கூறிய உதயாவை பார்த்தவனுக்கு அவன் மேல் இன்னும் பலமடங்கு மதிப்பு உண்டாகியது.
“அவர் எனக்கு மட்டும் தான் மாமாவா?..” என கேலியாக கூற,
“எனக்கொண்ணுமில்லை விஜி, அவரோட கோவம் குறையட்டுமேன்னு பார்த்தேன். நான் அவரை மாமான்னு கூப்பிடறேன். ஏற்கனவே அவருக்கு என்னை பார்த்தாலே காதுல புகை வருது. அப்புறம் மனுஷன் தசுபுசுன்னு மூச்சுவிட்டுட்டு புலம்பி தீர்ப்பார். தேவையா?…” என கூறி சிரிக்க அதில் விஜியும் இணைந்துகொண்டான்.
ஏழுமலைக்கு தன்னைத்தான் இருவரும் கிண்டல் செய்கிறார்களோ என்றொரு சந்தேகம். அவர்களையே குறுகுறுவென பார்க்க உதயா அவரை பார்த்து பளிச்சென சிரித்தான்.
உதயா புன்னகைத்ததும் அதிர்ச்சியாகி, “தனக்கு இது தேவையா?..” என்று சட்டென திரும்பிவிட்டார் ஏழுமலை.
அதை கண்டு இன்னும் பலமாக சிரித்தனர் உதயாவும், விஜியும்.
“சார்,…” என்று ஏழுமலை அழைக்கவும், யாரை என்று தெரியாமல் பார்த்தனர் கிருஷ்ணமூர்த்தி, சுதர்சனம், சங்கரன் மூவரும்.
ஏழுமலை அழைத்தது கிருஷ்ணமூர்த்தியை என்று பின் புரிந்ததும், “சம்பந்தி என்ன இது சார் அது இதுன்னு கூப்பிடறீங்க? சம்பந்தின்னு கூப்பிடுங்க. நாமதான் இப்போ ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிட்டோமே. அப்பறமும் ஏன் அந்நியமா நினைக்கறீங்க?, என்ன விஷயம் சம்பந்தி சொல்லுங்க?…” என்று சாந்தமாக பேசவும் ஏழுமலைக்கு பிரமிப்பாக இருந்தது. எப்படி பட்ட மனிதர்கள் இவர்கள் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்.  
“அது வந்து சம்பந்தி. என் பொண்ணுக்கு நாங்க சீர்வரிசை செய்யணும்ல. உங்க அளவுக்கு இல்லாவிட்டாலும் எங்களால முடிஞ்சதை செய்யனும்னு நினைக்கிறோம். அதான்…” என்று ஏழுமலை இழுக்க,
“அதுக்கென்ன சம்பந்தி தாராளமா நீங்க விருப்பப்பட்டதை செய்யுங்க. நாங்க தடுக்கவே மாட்டோம். சீர் வாங்கிக்கறது உங்க பொண்ணோட உரிமை. அந்த உரிமையை யாரும் வேண்டாமென்று சொல்ல மாட்டோம்…” என்று பெருந்தன்மையாக கூறவும் நெகிழ்ச்சியோடு அவரது கையை பற்றிகொண்டார் ஏழுமலை. நேசமணிக்கும் பரம திருப்தியாகிவிட்டது அவர்களது குணநலன்கள்.
கிருஷ்ணமூர்த்தி சொன்னதில் தனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்பதுபோல அமைதியாக புன்னகையோடே இருந்தான் உதயா.
விஜிக்குத்தான் கோவம் பொத்துக்கொண்டு வந்தது. வரும் வழியில் அங்கே என் பொண்ணு எப்படி இருக்கிறாள் என்று பார்த்து அது தனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே சீர்வரிசை கொடுப்பேன். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று தாம்தூம் என்று குதித்துக்கொண்டே வந்தவர் இங்கே பேசியதை பார்த்தும் செம கடுப்பாகிவிட்டான்.
பழைய விஷயங்கள் எதுவும் பேசாமல் தங்களை பற்றியும் பொதுவான சில விஷயங்கள் பற்றியும் பேசிகொண்டவர்கள் கௌரியின் கல்யாணத்தில் வந்து முடித்தனர். அனைவரும் பேச்சு மும்மரத்தில் சாப்பாட்டை மறந்திருக்க கௌரிதான் அனைவரையும் சாப்பிட அழைத்துவந்தாள்.
விஷ்ணுவை தவிர அனைவரும் வந்தமர்ந்துவிட அவனை காணமல் கௌரியால் சாப்பிட முடியவில்லை. இது என்ன வகையான அவஸ்த்தை என புரியாமல் தவித்தாள். இதுவரைக்கும் இப்படி தான் தவித்ததில்லையே என்று குழம்பினாள்.
அவளை அதிகம் காக்க வைக்காமல் வந்த விஷ்ணுவை பார்த்ததும் கௌரிக்கு முகம் தெளிந்தது. விஷ்ணு வரும் போதே கௌரியை பார்த்துக்கொண்டே தான் வந்தான்.
முதலில் அவளது குழம்பிய முகமும் பின் தன்னை கண்ட நொடியில் ஒளிர்ந்ததை எண்ணி, “ஆஹா!!!, சவுரிக்கு பலப் எரிஞ்சிடுச்சு போல…” என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டான். அவனது பார்வையை கண்டவள் தலையை சாப்பாட்டு இலைக்குள் புதைத்துகொண்டாள்.
கௌரிக்கு இது தன் அண்ணனுக்காக ஒத்துக்கொண்ட கல்யாணம் என்ற நினைப்பு மாறி விஷ்ணுவை பிடித்ததனால் தான் தான் ஒத்துக்கொண்டிருக்கிறோமோ என்ற சிந்தனை வந்து ஒட்டிக்கொண்டது. அந்த எண்ணம் அவளுக்கு ஒரு வகையில் சந்தோஷத்தை அளித்தது.
திடுமென ஏற்பாடு செய்த திருமணத்தால் வீட்டில் சம்மதம் சொல்லிவிட்டாலும் அதுவரை அலைபாய்ந்து கொண்டிருந்த விஷ்ணுவின் இதயம் அவனுக்கான கௌரியின் தேடலில் அவளிடத்தில் நிலையாக நின்றது.
அனைவரும் விருந்துண்டு முடித்து ஆசுவாசமாக வந்தமர்ந்தனர். பெண்கள் ஒருபுறமும் ஆண்கள் ஒருபுறமுமாக பிரிந்தமர்ந்தனர்.
ஏழுமலைக்கு தன் மகள் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பது பெரும் உவகை தந்தாலும் ஏனோ உதயாவிடம் பேச மனம் முரண்டியது. மற்றவர்களிடம் நிறைவாக மகிழ்வோடு பேசியவர் தன் மருமகனிடத்தில் பேச மட்டும் சுணக்கம் காட்டினார்.
அதை சம்பந்தி வீட்டினர் பெரிதுபடுத்தாமல் இருந்ததே பெரியவிஷயமாக பட்டது. அதற்காக வேணும் சீக்கிரம் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.
கோசலையோடு பேசிகொண்டிருந்த நந்தினியின் பார்வை  அவ்வப்போது உதயாவை தொட்டு தொட்டு மீண்டது. அவளது பார்வையை உணர்ந்தவன் அங்கிருந்து நழுவி நந்தினியின் கண்களை விட்டு மறைந்தான்.
அவனை காணாது தேடிய நந்தினி கோசலையின் பேச்சை கவனிக்கவே இல்லை. தன் பேச்சில் கவனமில்லாமல் இருந்த நந்தினியின் அலைபாயும் கண்களை கண்டவர்,
“யேய் மித்து, நான் பேசறதை கூட கண்டுக்காம உனக்கு என்ன அங்க பார்வை?….” என அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினார்.
“அச்சோ!! அத்தை கிள்ளாத, சும்மா தான் பார்த்தேன், பேச விஷயம் கிடைக்காம நீதான் சொன்னதயே திருப்பி சொல்ற…” என கூறவும்,
“அடிப்பாவி, நான் சொன்னதை சொல்றேனா? என்ன சேட்டை? உனக்கு உதை வேணுமா?..” என்றவரிடம்,
“ம்ம்… உதய் தான் வேணும்…” என தன் கணவனை கண்களால் தேடிக்கொண்டே தன்னையறியாமல் சொல்ல,
“ஐயாம் ஆல்வேய்ஸ் யுவர்ஸ் ஒன்லி நந்துக்குட்டி…” என்றான் உதயா நந்தினியின் பின்னால் இருந்து. அவனது குரலை கேட்டவள் பதறி எழுந்தாள். அவளை நகர விடாமல் கோசலை கைபிடித்து அமர்த்திக்கொண்டார் பலத்த சிரிப்போடு.
கோசலை மட்டுமல்ல அங்கிருந்த பெண்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். சற்று தள்ளியிருந்த ஆண்களுக்கும் என்னவென விஷயம் புரியாமல் இருந்தாலும் அந்த சிரிப்பினில் தாங்களும் பங்கெடுத்துக்கொண்டனர்.
நந்தினிக்கு வெட்கமாகிவிட்டது. இப்படி அனைவரின் முன்னால் மாட்டிக்கொண்டோமே என்று.
மெல்ல விழி உயர்த்தி உதயாவை நோக்க இன்று புதிதாக அவன் கண்கள் பேசிய ஜாலத்தில் அவள் நாணத்தோடு மனம் மயங்கினாள் என்றால் இவன் மனைவியின் நாணத்திலேயே மயங்கினான்.
விஷ்ணு, “இவன் எப்போ அந்த பக்கம் போனான், சின்ன கேப் கூட விடமாட்டிக்கிறானே. இவனை…” என கடுப்போடு அவனை அழைக்க செல்ல கெளரி பின்புறம் செல்வதை பார்த்தவன் தாமதிக்காமல் தலைதெறிக்க அவள் பின் ஓடினான். இன்றைக்கு எப்படியும் பேசிவிடவேண்டுமென்று.
தன் பின்னால் யாரோ ஓடிவரும் அரவம் சட்டென கேட்டு திரும்ப அவள் திரும்புவதை எதிர்பார்க்காத விஷ்ணு ஓடிவந்த வேகத்தில் அவளை முட்டிக்கொண்டு நின்றான்.
எதிர்பாராத இந்த நிகழ்வில் அதிர்ச்சியான கெளரி அவனை பிடித்து தள்ள பிடிமானமில்லாமல் கீழே விழுந்தவன்,
“யே சவுரி!,,, புருஷனை இப்படிதான் தூக்கிப்போட்டு மிதிக்கனும்னு அதுக்குள்ளே யாராச்சும் சொல்லி குடுத்துட்டாங்களா உனக்கு?…” என வழக்கம் போல வம்பாக கேட்டுவிட்டு கையை நீட்டினான்.
அவனது இயல்பான பேச்சில் தானும் “ஏன் நீங்களா எழுந்துக்க மாட்டீங்களோ?..” என்று கேட்கவும்,
“நீதானே தள்ளிவிட்ட. அப்போ நீயே கை குடுத்து தூக்கிவிடு. இல்லைனா யார் வந்து சொன்னாலும் எழுந்துக்கவே மாட்டேன்….” என படுத்தவாறே கால்மேல் கால் போட்டு அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் கைபிடித்து தூக்கிவிட்டாள்.
“விஷ்ணு டக்குன்னு ஒரு ரொமான்ஸ் லுக் விட்டு தொலை. மூஞ்சியை இப்படி வச்சுக்காதே…” என்று உடனடியாக அவனது மனம் மூளைக்கு செய்தியனுப்பியது. அதை செயல்படுத்துவதற்கு முன்,
“எதுக்காக பின்னால இப்படி வந்தீங்க?…” என கௌரியிடமிருந்து கேள்வி வரவும், “இங்க பாரு சவுரி…” இப்போது அவன் கூப்பிட்ட சவுரியில் கௌரிக்கு கோவமே எழும்பவில்லை.
“எனக்கு லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கனும்னு ஆசை. அதுமட்டுமில்லை அந்த மேரேஜ் கூட ஓடிப்போய் பண்ணிக்கணும். ஆனா உன் அண்ணா என்னடான்னா அந்த ஆசையில பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டான். அதனால…” என இழுக்கவும் எங்கே விஷ்ணுவிற்கு தன்னை பிடிக்குதா பிடிக்கலையா என்ற மெல்லிய சந்தேகம் உருவானதும் கண்களில் கண்ணீர் கரை கட்டியது.
“கல்யாணத்துக்கு முன்னால நாம லவ் பண்ணலாமா?…” எனவும் கௌரிக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றாள்.
அதை பயன்படுத்தி அங்கிருந்த செம்பருத்தி பூவொன்றை பறித்தவன் அவள் முன் மண்டியிட்டு,
“சவுரி ஐ லவ் யூ…” என்றான்.

Advertisement