Advertisement

நிம்மதியாக அவளின் தோள் வளைவில் கைபோட்டு அணைத்தவன் தன் பைக்கை நோக்கி அவளோடு மெதுவாக நடந்தவாறே,  “ம்ம் புருஷனையே மரமண்டை சொல்றியா? சரியான வாலு. எனக்கு இப்போதாண்டா ரிலாக்ஸா இருக்கு குட்டிம்மா. தனம் சித்தி முதல்ல கொஞ்சம் கோவப்படுவாங்கதான். ஆனாலும் இதை சொல்லாம தள்ளிப்போட மனசு வரலை…” என கூறியவனை பார்த்து மெலிதாக முறுவலித்தாள்.
“உங்களுக்கு என்ன தோணுதோ அதன் படியே செய்ங்க. எனக்கு சம்மதமே. போய்ட்டு சீக்கிரமா வாங்க. அப்பறம் அங்க…” என்று பிரசாத்தை நினைத்து கலக்கமுற்றவளாய் உதயாவை ஏறிட்டாள். அவளின் முகவாட்டத்திலேயே புரிந்துகொண்டவன்,
“ஒண்ணும் பயப்படாதே. நான் பார்த்துக்கறேன். சீக்கிரமே வந்திடறேன்.  சரியா?…” என கூறிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தவன்,
“உள்ளே போடா. பனி கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. உனக்கு இப்போ சேராதுல…” என அவளை உள்ளே அனுப்பியவன் நந்தினி செல்லும் வரைக்கும் இருந்து பார்த்துவிட்டு தான் கிளம்பினான்.
தெளிந்த மனதோடு பிரசாத்தின் வீட்டிற்கு வந்தான். அவனது திடீர் வருகையை எதிர்பார்க்காத தனம் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக நின்றார்.
“என்ன சித்தி உள்ளே வான்னு கூப்பிட மாட்டீங்களா?…” என கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தால் அங்கே பிரசாத் அமர்ந்திருந்தான்.
ஒரு கணம் துணுக்குற்றாலும் சமாளித்துக்கொண்டு தனத்தை பார்த்து இயல்பாகவே சிரித்தான். அதில் தனமும் சுதாரித்துவிட்டார்.
“வா பிரபா. வரேன்னு ஒண்ணுமே சொல்லலையே?…” என கூறிக்கொண்டே பிரசாத்தை பார்த்து வெளியே போகுமாறு சைகை செய்யவும் அதில் கடுப்பானவன் இன்னும் நன்றாக சாய்ந்து சட்டமாக அமர்ந்துகொண்டான்.
இவனை வைத்துக்கொண்டு உதயாவிடம் எப்படி பேச முடியும் என்று இருதலை கொல்லி எறும்பாக தவித்தார். அவரின் அவஸ்தையை புரிந்த உதயா அமைதி காக்க பிரசாத் நக்கலாக சிரித்தான்.
“உட்காருங்க சித்தி. நான் பேச வந்ததை பேசிட்டு கிளம்பனும். என் மனைவி எனக்காக காத்திருப்பா…” என்று அழுத்தமாக சொல்லி கொண்டே பிரசாத்தை பார்த்தான். அவனோ நீ என்னவேணும்னாலும் சொல்லிக்கோ என்பது போல கேட்டும் கேட்காத பாவனையில் மொபைலில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.
“இன்னொரு நாள் பேசிக்கலாமே பிரபா. இப்போ நீ கிளம்பேன்…” என்று தயக்கமாக சொல்லவும்,
“என்னைக்கா இருந்தாலும் பேச வேண்டியதை பேசிடலாமே? நீங்க இப்டி பக்கத்துல உட்காருங்க சித்தி…” என்று தன்னருகில் அமரவைத்து விட்டு பிரசாத்தை பார்த்தான்.
அவன் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை பூக்கள் பூத்திருந்தது. ஆனாலும் எதையும் வெளிக்காட்டாமல் அமர்ந்தவாக்கிலேயே அசையாமல் இருந்தான்.
“என்னை முதல்ல மன்னிச்சுகோங்க சித்தி…” என்றவனை புரியாமல் பார்த்தவர்,
“ஏன் பிரபா? நீ எதுக்காக மன்னிப்பு கேட்கற?…” என பதறிவிட்டார்.
“உங்களுக்கு குடுத்த வாக்கை என்னால காப்பாத்த முடியாது. அதுக்காக தான் இந்த மன்னிப்பு…” என்று சிறு வேதனை கலந்த குரலில் கூறவும் அதிர்ந்த தனம்,
“அப்போ நடந்ததை எனக்கு சொல்ல மாட்டியா பிரபா?…” என்று சற்று கோபமாக கேட்டதும் இல்லை என்று தலையசைத்தான். அவனது மறுப்பில் அனைத்து கோவமும் பிரசாத்தின் மேல் பாய்ந்தது.
உதயாவின் பேச்சில் இனி தன் அன்னைக்கு அருவியூர் விஷயம் எதுவும் தெரியப்போவதில்லை என்ற நிம்மதி ஒரு நொடி தான் ஒரு நொடிக்கும் குறைவாக அவன் முகத்தில் வந்து சென்றதை இருவருமே கவனித்துவிட்டனர்.
“என்னடா பண்ணித்தொலச்ச? இப்படி பாவத்துக்கு மேல பாவம் பண்ணி என்னை ஒரேடியா சாகடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா?…” என அவனை பிடித்து உலுக்கியும் அவனிடமிருந்து எந்தவிதமான பிரதிபலிப்பும் இல்லை. உதயாதான் அவரை தடுத்தான்.
“ப்ளீஸ் சித்தி. அவனை விடுங்க. முடிஞ்சு போனதை பத்தி இனியும் பேசி பிரயோஜனமில்லை. இனியும் அதை பத்தி நினைக்காம இப்டியே விட்ருங்க. அந்த விஷயம் எங்களோடவே புதைஞ்சு போகட்டும். புரிஞ்சுக்கோங்க சித்தி…” என கைக்கூப்பி வணங்கியவனிடம் என்ன பேச முடியும் என்று தன்னை அடக்கிக்கொண்டார்.
“புரியுது பிரபா. நந்தினிக்காகதான் இதை நீ என்கிட்டே சொல்லாம மறைக்கிறன்னு எனக்கு நல்லாவே புரியுது. இனிமே எதுவுமே கேட்க மாட்டேன். நல்லா இருங்க. நீ கிளம்பு…” என சுரத்தில்லாத குரலில் கூறியவரை பார்த்து செய்வதறியாமல் நின்றான்.
அவனின் தயக்கத்தை உணர்ந்தவர் முகத்தை முந்தானையால் அழுந்த துடைத்துவிட்டு, “எனக்கு கோவமெல்லாம் எதுவுமே இல்லை பிரபா. அதனால நீ வருத்தபடாம போய்ட்டு வா. முடிஞ்சா நந்தினிக்கு விருப்பம் இருந்தா இங்க கூட்டிட்டு வா. ஒருநிமிஷம் இதோ வரேன்…” என்றவர் போன வேகத்தில் திரும்பி வந்தார் கைகளில் இரு பைகளோடு. அதை உதயாவின் கைகளில் திணித்தவர்,
“நீ போனதுமே வீட்ல என்ன விஷயம் எதுக்காக போனேன்னு கேட்பாங்க. நீ என்னனு பதில் சொல்லுவ? அதனால இதை வாங்க தான் நான் உன்னை வரசொன்னேன்னு சொல்லிடு. நந்தினிக்கு இதை நான் குடுத்ததா குடுத்துருப்பா. அப்புறம்…” என கூறிவிட்டு பிரசாத்தை பார்த்தவர் மீண்டும் உதயாவின் புறம் திரும்பி,
“அவளுக்கு என் மேல கோவமெல்லாம் இல்லயே? இவனை பெத்ததுக்கு. நந்தினிக்கிட்ட சொல்லுப்பா. பாவம் அந்த பொண்ணு இவனால என்னவெல்லாம் கஷ்டபட்டுச்சோ? என்னால முடிந்த ஒண்ணே ஒண்ணு. இந்த பாவிக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்…” என குறுகிப்போய் மன்னிப்பை கேட்டதும் உதயா உடைந்துவிட்டான்.
வீட்டிலுள்ளவர்கள் கேட்கும் கேள்விக்கு தக்க பதிலை தேடிக்கொடுத்து சமயோசிதமாக செயல்பட்ட சித்தியை மெச்சிக்கொண்ட மனதை அடுத்த நொடி அவரது மன்னிப்பால் துடிக்க வைத்தார்.
“சித்தி…” என்ற கதறலோடு அணைத்துக்கொண்டவன், “ஏன் சித்தி இப்டியெல்லாம் பேசறீங்க? மன்னிப்பு கேட்டு வேதனைப்படுத்தாதீங்க சித்தி. ப்ளீஸ்…” எனவும் உதயாவின் கண்களை துடைத்தவர்,
“நீ கிளம்பு பிரபா…” என்று உறுதியான குரலில் கூறவும் வேறு வழியின்றி தலைகவிழ்ந்து அமர்ந்திருந்த பிரசாத்தை ஒரு முறை வலியோடு பார்த்துவிட்டு அங்கிருந்த புறப்பட்டான்.
உதயா கிளம்பியதும் பிரசாத்தை முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார் தனம். அவர் அவ்விடம் விட்டு அகன்றதும் அதுவரை இறுகிப்போய் அமர்ந்திருந்த பிரசாத் தன் தாயவள் சென்ற திசையை நிமிர்ந்து பார்த்தான். அவனின் சிவந்த விழிகளில் கண்ணீர் வடிந்தபடியே இருந்தது.
எல்லாம் தன்னால் தானே. பெற்றவள் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தானே தள்ளிவிட்டோமோ என்று நொறுங்கிப்போய்விட்டான்.
இனி இவ்வுலகில் தனக்கு என்ன இருக்கிறது என வெறுத்துப்போய் இருந்தவன் மூளை இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கிறதே, அதை நல்லபடியாக முடிக்க வேண்டுமே என உத்தரவிட தன்னை நிலைபடுத்தி கண்ணீரை துடைத்துகொண்டான். அவன் செய்ய வேண்டியதை நினைத்ததும் முகம் கல்லை விட கடினமாக மாறிவிட்டது.
தன் இல்லத்தை அடைந்த உதயா அப்பாவும், மாமாவும் வந்துவிட்டதை பார்த்தவன் ஹாலில் அவர்களோடே அமர்ந்துவிட்டான். நந்தினியை அழைத்து தனம் கொடுத்த கவரை கொடுத்தவன் சுதர்சனத்திடம் பேச ஆரம்பித்தான்.
அவனிடமிருந்து கவரை வாங்கிய நந்தினி நேராக பாக்கியத்திடம் காண்பிக்க சென்றாள். நாச்சியும் அங்கேயே இருக்க அனைவரிடமும் காண்பித்துவிட்டு தன் அறைக்கு அதை வைத்துவிட்டு வர மாடிக்கு சென்றாள்.
“ஏய் நில்லு…” என்ற அதட்டலான குரலில் திரும்பிய நந்தினி அங்கே வேணி நின்று கொண்டிருந்ததை ஒருவித அலட்சியத்துடன் பார்த்து விட்டு திரும்ப தன் அறையை நோக்கி சென்றாள்.
அவளின் பின்னாலே வேக நடையோடு சென்றவர் நந்தினி தன் அறையை எட்டுமுன்னே அவளை மறித்து நின்று, “ கூப்பிட்டா என்னனு கேட்கமாட்டியோ? எவ்வளோ திமிர் உனக்கு?…” என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க எகிறினார்.
கைகளிரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டவள் வேணியை முறைத்துக்கொண்டே, “என்ன?…” என்று கேட்டாள் ஒற்றை வார்த்தையில்.
“என்ன, என்ன? கொஞ்சமாவது மரியாதை இருக்கா உனக்கு? அதை விடு. கைல என்ன காண்பி. அதை பார்க்கணும்…” என அதிகாரமாக கேட்கவும் அதை கண்டுகொள்ளாமல் அவரை சுற்றிக்கொண்டு சென்றாள் நந்தினி.
அவளின் கையை பிடித்து நிறுத்தியவர், “நான் கேட்டும் காண்பிக்காம போற உன்னை…” என பல்லைக்கடிக்க,
“இப்போ என்ன? அதை நீங்க பார்த்தே ஆகணுமா? என்னால காட்ட முடியாது. உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க…” என்று வெடுவெடுத்தவள்,
“திரும்ப எனக்கிட்ட பிரச்சனை பண்ணனும்னு நினச்சீங்க, விளைவு விபரீதமா இருக்கும். பார்த்து நடந்துக்கோங்க…” என எச்சரித்தாள்.
“ஏய்!!! புள்ளப்பூச்சி, உன்னால என்ன பண்ண முடியும் என்னை?…” எங்கே உதயா வந்துவிடுவானோ என உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியில் காட்டிகொள்ளாமல் வீம்பாகவே கேட்டார்.
கேவலமான ஒரு பார்வையை பார்த்து விட்டு, “சொல்லிட்டு செஞ்சா அதுல த்ரில் இருக்காது. இனிமே சொல்லாம தான் செய்வேன் தினம் ஒண்ணா. வெய்ட் பண்ணுங்க…” என கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தவள் தடாரென கதவை அடைத்தாள். அது வேணியின் முகத்தில் அறைந்தது போல ஆனதும் அவர் கொதித்துப்போய் விட்டார்.
ஆளாளுக்கு ஏற்படுத்திய உதாசீனம் வேணியின் நிதானத்தை இழக்கச்செய்தது. பிரசாத் சொன்னது போல கெளரி கல்யாணம் முடியட்டும். அதன் பின்னால் யாரோட துணையும் தனக்கு தேவையில்லை. என்று முடிவெடுத்து மூடிய கதவை வெறித்து பார்த்துவிட்டு சென்றார்.
அறைக்குள் நுழைந்த நந்தினி, “நல்லா வேணும் என் உதயை கஷ்டபடுத்தி இந்த குடும்பத்தை வேதனை படுத்தினாங்கள்ள. நல்லா வேணும் அவங்களுக்கு. இனி தினமும் நான் என்ன செய்வேனோனு பதறட்டும். அதான் சரியான தண்டனை…” என சந்தோஷமாக எண்ணிக்கொண்டாள்.
அவளின் ஆயுளுக்கும் மறக்கமுடியாத ஒன்றை வேணி செய்ய போகிறார் என்று அப்போது தெரியாமல் போய்விட்டது. அவரது கண்களில் தெரிந்த வெறுப்பை மட்டுமே பார்த்தவள் அந்த வெறுப்பின் பின்னால் உறைந்திருந்த குரூரத்தையும், கொலைவெறியையும் கவனிக்க தவறிவிட்டாள்.
அதை அவள் அனுபவிக்கும் போது காப்பாற்ற யாரும் இருக்க போவதில்லையே. தன் கணவனின் காதல் கூட காப்பாற்ற வராமல் தான் துடிதுடிக்க போவதை உணராமல் நிரந்தரமில்லா தற்காலிக சந்தோஷத்தில் திளைத்திருந்தாள்.
சாப்பிட அழைக்க கெளரி வர அவளோடு வாயாடியபடி கீழே செல்லவும் அனைவருமே மேஜையில் நந்தினிக்காக காத்திருந்தனர். கிருஷ்ண மூர்த்தியும், சுதர்சனமும் நலம் விசாரித்துவிட்டு தைரியமாக இருக்க அறிவுரை வேறு செய்தனர்.
உதயாவுக்கோ, “இவ ஊருக்கே சொல்லுவா. இவளுக்கு இப்டி மாத்தி மாத்தி தைரியம் சொல்லுறாங்களே? ஒருத்தராச்சும் எனக்கு சொல்றாங்களா? உன் பொண்டாட்டிக்கிட்ட தைரியமா இருன்னு. உதயா நீ குடுத்து வச்சது அவ்வளோ தாண்டா…” என பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.
அனைவரோடும் அமர்ந்து சாப்பிட்டவள் கௌரியோடு சிறிது நேரம் செலவிட்டுவிட்டு அதன் பின் தங்கள் அறைக்கு சென்றாள்.
விஷ்ணுவோடு போனில் கம்பெனி விஷயமாக பேசிகொண்டிருந்தவன் நந்தினியின் வருகையை கண்டதும் அவளை தூங்க சொல்லிவிட்டு லேப்டாப்போடு சோபாவில் அமர்ந்துவிட்டான்.
சிறிது நேரத்தை விரட்டி தள்ளியவள் மெல்ல எழுந்து உதயாவின் அருகில் வந்து அமர்ந்தாள். அவளின் அருகாமையிலும் கூட தன் காரியத்தில் கண்ணாக இருந்தான் அவள் கணவன்.
“கொஞ்சமாவது என்னனு கேட்கிறானா பாரு…” என நொடித்து கொண்டவள், “கொஞ்சம் பேசணும்…” என அவனை திசைதிருப்ப,
“ஒரு அரைமணி நேரம்டா. இதை முடிச்சுட்டு வரேன். நாளையில இருந்து ஆபிஸ் போகணும்ல…” என கூறிவிட்டு தன் தலையை மடிக்கணினியில் புதைத்துக்கொண்டான்.
அரைமணிநேரம் முடியும் முன்னரே வேலையை முடித்துவிட்டு அவளை பார்த்தால் பேப்பரில் எதையோ வரைந்து கொண்டிருந்தாள். ஒருகணம் அதை யோசனையோடு பார்த்தவன் கட்டிலில் வந்து அமர்ந்தான்.
“பேசலாமாடா?…” என கேட்டதும் அதை அப்படியே வைத்துவிட்டு தானும் எழுந்து வந்து அவனருகில் அமர்ந்துகொண்டாள். பேச ஆரம்பிக்கும் முன்,
“நானே சொல்றேனே?…” என அவளை தடுத்து விட்டு பிரசாத் வீட்டில் நடந்தது அனைத்தையும் கூறி முடித்தான்.
“அவங்க மன்னிப்பு கேட்கும் போது கூட தடுத்து ஒரு வார்த்தை கூடவா பேசாம இருந்தான் அந்த ராஸ்கல்?…”  என்று கோவமாக கேட்டாள்.
இல்லை என்று தலையசைக்கவும் கோவத்தில் மேலும் எதுவும் பேசிவிடுவோமோ என்று அமைதிக்காத்தாள். தனத்தின் மீது உள்ள கோவம் முற்றிலும் வடிந்தது போல இருந்தது நந்தினிக்கு.
சிறிதுநேரம் அந்த அறையே நிசப்தமாக இருந்தது. அவரவர் நினைவில் சுழன்றவர்களில் உதயா தான் முதலில் சுதாரித்தான்.
தனக்கு தேவையான டேப்லேட்ஸ் எடுத்து கொடுத்து போட வைத்தவனை பார்த்துக்கொண்டே இருந்தவள்,
“நான் உங்க ஒன்னு கேட்கணும்…”
“கேளேன், என்ன பர்மிஷன் எல்லாம்?…” எனவும்,
“எனக்கு…….. எனக்கு அருவியூர்ல எடுத்த போட்டோவை பார்க்கணும்…” என கேட்டவளை சிறு அதிர்வோடு நோக்கினான்.
“இப்போ எதுக்கு அதெல்லாம்?. டேப்லெட் போட்டாச்சுல தூங்கு காலையில பேசிக்கலாம்…” என சொல்லவுமே கோவத்தில் வெடித்தாள்.
“ஏன் நீ மட்டும் அதை எடுத்துவச்சு நினச்ச நேரம் பார்த்துக்கலாம், நான் பார்க்க கூடாதா?…” என்று பொரிந்தவள்,
“நேத்து சரியாவே பார்க்கலை. அதான் இப்போ பார்க்க தோணுது. ஏன் காண்பிக்க மாட்டீங்களோ?…” என முறைத்துக்கொண்டே முடித்தாள்.
“மாட்டேன்னு சொன்னா மட்டும் கேட்டுடவா போற?…” என முணங்கிவிட்டு லேப்டாப்பை எடுத்து வந்து ஆன் செய்து போட்டோவை காண்பித்தான்.
போட்டோவை பார்த்ததும் லேப்டாப்பை தன் மடியில் வாங்கி வைத்து கொண்டவள் விழியகலாமல் அதையே பார்த்து கொண்டிருந்தாள். சட்டென அவன் புறம் திரும்பி,
“நம்ம முதல் சந்திப்பு ஏண்டா இப்படி ஆகிடுச்சு? நீயும் நானும் முதல்முதல்ல நல்லவிதமா பிரச்சனையோடு இல்லாம பார்த்திருந்தா இந்த கஷ்டம் நமக்கு தேவையா? ரெண்டு தடவை கல்யாணம் நடந்தும் ஒன்னு கூட எல்லோரும் நினச்சு ரசிச்சு சந்தோஷப்படுற மாதிரி ஏன் இல்லாம போச்சு?…” என கூறிவிட்டு அதற்கு மேல் தாங்கமாட்டாமல் விம்மி வெடித்தழுதாள்.
அவளை தன்னோடு தாங்கியவனின் எண்ணமும் அவ்வாறே சிந்தித்தது போல அவனது கண்களும் கண்ணீரை சிந்தியது.
“யார் குடுத்த சாபமோ தெரியவில்லை. இப்படி தங்கள் வாழ்க்கையை அலைகழிக்கிறதே. இன்னும் அதை நினைத்து எத்தனை நாள் வேதனை பட்டு கண்ணீர் சிந்த போகிறோமோ?…” என்றஞ்சினான்.
இருவரது நினைவும் வலியோடு தங்கள் முதல் சந்திப்பை நோக்கி ஒரேசேர பயணப்பட்டது.
—————————————————-
“வாங்க ஏழுமலை, எப்படி இருக்கீங்க? போன வருஷம் கும்பாபிஷேகத்திற்கு வந்தவங்க அடுத்து திருவிழாவுக்கு தான் வருவீங்கன்னு பார்த்தேன். அதுக்குள்ளே இடையில வந்திருக்கீங்களே?…” என்று ஏழுமலையை நன்கு அறிந்த அந்த கோவில் பூசாரி நலம் விசாரித்தார்.
முதல் நாள் இரவே அவருக்கு தொடர்பு கொண்டு குடும்பத்தோடு அனைவரும் வரும் தகவலை போனில் ஏழுமலை தெரிவித்ததால் விடியற்காலையிலேயே வந்து கோவிலை கழுவி சுத்தம் செய்து பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார் பூசாரி.
அந்த விடியற்காலையில் ஏழுமலையின் குடும்பம் மட்டுமல்லாது கூடவே நேசமணி குடும்பமும், கோசலையும் உடன் வந்திருந்தனர் குலதெய்வத்தை தரிசிக்க.
“அது ஒன்னுமில்லைங்க சாமி, என் பொண்ணு மித்ரா. ப்ளஸ் டூ பாஸ் பண்ணிருக்கா. அதுவும் நல்ல மார்க். அதான் குலதெய்வம் கோவிலுக்கு வந்து பூஜை போட்டுட்டு போகலாம்னு வீட்டம்மா பிரியப்படாங்க…” என்றவர்,
“அதுமட்டுமில்லாம என் பொண்ணு நினச்ச படியே நல்ல காலேஜ்ல விருப்பப்பட்ட பாட பிரிவுல சீட் கிடைக்கனும்னு அவ கையாலையே பொங்கல் வச்சு வேண்டிக்கலாம்னு சொல்லிருந்தா. அதனால இன்னைக்கு நல்லநாளுன்றதால தள்ளிப்போட வேண்டாமேன்னு எல்லோரும் கிளம்பி வந்துட்டோம்…” என கூறியவர் பொங்கல் வைப்பதற்கான வேலையை ஏற்பாடுகளை செய்தார்.
அனைவரும் சேர்ந்து பொங்கல் வைத்து படையலிட்டு முடிக்கவும் நந்தினியின் பெயரில் பூஜை நடத்தி திருப்தியாக சாமி கும்பிட்டு விட்டு காலை நேர உணவையும் எடுத்து வந்திருந்ததால் அங்கேயே உண்டுவிட்டு கிளம்ப ஆயத்தமாகினர்.
பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துகொண்டிருந்தவர்களை நெருங்கிய பூசாரி, “அப்புறம் ஏழுமலை, நானும் கிளம்பறேன்…” எனவும்,
“என்ன சாமி அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க? மணி எட்டரை தானே ஆகுது?…” என்று கேட்டார்.
“இங்க பக்கத்துல அருவியூர்னு ஒரு சின்ன கிராமம் இருக்கு. இன்னைக்கு ஊர் திருவிழா. பூஜைக்கு அங்க வர சொல்லிருக்காங்க.  நீங்க வர போறதா நேத்து நைட் போன் பண்ணி சொன்னதால தான் பையனை அங்கே அனுப்பிட்டு  நான் இங்க வந்தேன். இல்லைன்னா காலையிலயே நேர அங்க போய்ருப்பேன்…”
“ஓ அப்டியா?…” என்றவரை சிறிது யோசனையாக பார்த்த பூசாரி,
“உங்களுக்கு நேரமிருந்தா நீங்களும் வேணும்னா வாங்களேன். நல்ல சக்தி வாய்ந்த சாமி. அங்க வந்து வேண்டினா நினச்சது நடக்கும்னு ஒரு ஐதீகம். உங்க பொண்ணுக்காக அங்க வேண்டுங்க. இன்னொரு முறை நீங்க இதுக்குன்னு எடுத்தேறியா வர போறீங்க?…” என்று கேட்கவும் நந்தினியும், விஜியும் போகவேண்டுமென பிடிவாதம் பிடித்தனர்.
சந்திராவும், “அதான் பிள்ளைங்க ஆசைபடறாங்களே? நாமளும் போயிட்டுத்தான் வருவோமே?. அடுத்து நமக்கு இப்டி ஒண்ணா வர எப்போ வாய்ப்பு கிடைக்குமோ?…” எனவும் மற்றவர்களும் அதை ஆமோதிப்பது போல பார்த்தனர் ஏழுமலையை.
ஒரு நிமிடம் சிந்தித்தவர், “சரி போகலாம். சாமி நீங்களும் எங்க கூடவே வேன்ல வந்திருங்களேன். ஒண்ணா போய்டலாம், எங்களுக்கும் வழி தெரியாதுல…” என்று அவரிடம் கேட்டார்.
“ரொம்ப நன்றி ஏழுமலை. அதுக்கென்ன தாராளமா வரேன். இங்க இருந்து முக்கால் மணி நேரம் தான். பஸ் பிடிச்சு போகணுமேன்னு நினச்சேன். நல்லதா போச்சு…” என கூறிவிட்டு வேனில் ஏறி அமர்ந்தார்.
அனைவரும் ஏற ஏழுமலை நந்தினியை அழைத்து, “இங்க பாரு மித்ரா, அங்க போய் கையை காலை வச்சிட்டு ஒரு இடத்துல அடங்கி நடக்கணும். ஓவரா ஆடின அவ்வளோ தான் புரிஞ்சதா?…” என மிரட்டவும்,
“ம்ம். எங்கயும் ஓட மாட்டேன்ப்பா. நீங்க சொல்றதை கேட்டு விஜி கூடவே இருப்பேன்…” என்று அப்பாவியாக அவனையும் கோர்த்து விட்டாள். அப்போதானே அவனையும் இழுத்துகொண்டு சுத்தலாம். கேட்டால் விஜிதான் கூட்டிட்டு போனான்ன்னு அவனை மாட்டிவிடலாம் என எண்ணிக்கொண்டே.
அவள் நினைத்ததை போலவே ஏழுமலை அடுத்து விஜியை அழைத்தார். “இங்க பாரு விஜி. அந்த ஊர் நமக்கு புதுசு. இவளை கண்காணிக்க வேண்டியது உன்னோட பொறுப்பு புரியுதா?…” என அவனிடமும் அழுந்த கூறிவிட்டு,
“ம்ம் உள்ளே ஏறுங்க…” என்று விஜிக்கு நந்தினியை முறைக்க கூட அவகாசம் கொடுக்காமல் வேனிற்குள் தள்ளினார் இருவரையும். விஜியோ நந்தினியை மனதிற்குள் கருவிக்கொண்டே கோவமாக வந்தான்.
அனைவரையும் சுமந்த அந்த வேன் அருவியூரை நோக்கி சென்றது. அங்கே விதி அவர்களுக்காக காத்திருப்பதை அறியாமல்….

Advertisement