Advertisement

நட்சத்திர விழிகள் – 2
“திடீர்னு வந்து கல்யாணத்தை நிறுத்துவான்னு நாங்க நினைச்சுகூட பார்க்கலை பிரசாத் சார்….” என கல்யாண மண்டபத்தில் உதயா ஆடிய ருத்ரதாண்டவத்தை பார்த்து அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோமென ஓடிவந்த மாப்பிளை குணா மற்றும் அவனோடு திருமணத்தில் கலந்துகொள்ள வந்த நான்கைந்து பேர் பிரசாத் முன் கூறிகொண்டிருந்தனர்.
“என்ன சார் நீங்க தானா வந்து பொண்ணை கட்டிக்க சொல்லிட்டு, இப்டி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?…”
குணா சரியான பணப்பேய். குணாவை பற்றிய தகவலை நண்பனிடமிருந்து அறிந்தவன் நந்தினியின் முகவரியையும் புகைப்படத்தையும் கொடுத்து தான் சொல்லியபடி அங்கே போய் பேசி பெண் கேட்க ஏற்பாடு செய்த பிரசாத் தன் காரியத்தை அவர்களின் மூலம் சாதித்துக்கொள்ள தீட்டிய திட்டம் தான் இந்த திருமண ஏற்பாடு.
பிரசாத்தின் வலையில் அழகாக சிக்கினர் நந்தினி குடும்பத்தார். மகளின் எதிர்கால வாழ்வை பற்றிய கவலையில் இருந்த ஏழுமலையிடம் பெண் கேட்டு நின்ற குணா அந்நேரத்தில் அவருக்கு இரட்சகனாகவே தெரிந்தால் அது மிகையல்ல.
படிப்பு, உத்தியோகத்தையும், வருமானத்தையும், பேசும் வார்த்தைகளையும் மட்டும் நம்பி பெண்ணை கட்டிகொடுக்க நினைக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரைக்கும் குணா போன்ற சுயநல பிசாசுகள் பணத்திற்காக ஏமாற்றத்தான் செய்வார்கள். 
ஏழுமலையை அதிகமாக யோசிக்கவே விடாமல் இருந்தது குணாவை சேர்ந்தவர்களின் நடவடிக்கைகள். அவர்களின் சாகசத்தில் உற்றாரின் பேச்சையும் கேளாமல் அவசரமாக மகளுக்கு திருமணம் அதுவும் நல்ல இடத்தில் தானே விரும்பி வந்து கேட்கின்றனரே என நினைத்து கண்ணைமூடிக்கொண்டு கிணத்தில் தள்ளிவிட காத்திருந்தார்.
அவரை பொருத்தவரைக்கும் வெளியூர் மாப்பிள்ளை, மகளுக்கு முன்பு நடந்த திருமணம் யாரின் மூலமும் குணாவிற்கு தெரிய வாய்ப்பில்லை என முழுமையாக நம்பினார்.
குணம் என்றால் என்னவென கேட்கும் குணாவை சேர்ந்தவர்களுக்கு அது சாதகமாகவும் சூழ்ச்சியில் சிக்கவிருந்த நந்தினிக்கு பாதகமாகவும் அமைந்தது.
அனைத்து கெட்ட பழக்கங்களை நிரந்தர உரிமையாக கொண்டிருந்தவனுக்கு தன்னை சேர்ந்தவர்கள் யாரும் பெண் தராத சூழ்நிலையில் பிரசாத்தின் அழைப்பால் தன் எண்ணங்கள் நிறைவேற போகிறதே என்ற இறுமாப்பில் பகல்கனவில் மிதந்துகொண்டிருந்த குணாவிற்கு உதயாவின் திடீர் வரவு அவனது கனவுக்கோட்டையை சுக்குநூறாக தகர்த்தெறிந்தது.
வரதட்சணை போனதுமில்லாமல் கூட வந்தவர்களின் முன் ஏற்பட்ட அவமானம் வேறு, இங்கே பிரசாத்தின் அலட்சியம் என அனைத்தும் சேர்ந்து குணாவின் தந்தையை கோபத்தில் கொந்தளிக்க செய்தது.
ஆனால் எந்த வித முகமாறுதலும் இல்லாமல் அவர்கள் பேசியதை கவனித்துகொண்டிருந்த பிரசாத் எழுந்து குணாவின் அருகில் வந்து கத்தை பணக்கட்டை அவனது கைகளில் திணித்து கேட்டை நோக்கி வெளியே செல்லுமாறு சைகை காமித்தான். 
“என்னங்க இது ? நீங்க தான பொண்ணு பத்தி சொல்லி எங்களை இங்க வரவச்சீங்க? இப்போ இப்டி செய்யறதுல என்னங்க நியாயம்?…” என அநியாயத்துக்கு நியாயம் கேட்டவரை பார்த்து கேலி சிரிப்பொன்றை உதிர்த்தவன்,
“நியாயம் அநியாயத்தை பத்தி நீங்க பேசறீங்களா?….” என கேட்டதும் குணாவின் தகப்பனார் குதிகுதியென குதித்தார்.
“கல்யாணம்னு சொல்லி வரவழச்சு கேவலபடுத்திட்டீங்க, இதை சும்மா விடமாட்டேன், நாங்க யாரு எங்க கௌரவம் என்னனு தெரியுமா?…” என சகட்டுமேனிக்கு அளந்தவரை பார்த்த பிரசாத் நீயெல்லாம் எனக்கு ஒரு பொருட்டா என்பது போல பார்த்துவிட்டு அவரை கண்டுகொள்ளாமல்,
“இதோ பாரு குணா, நீ ஒண்ணும் பொண்ணு மேல ஆசைப்பட்டோ, இல்லை பரிதாபபட்டோ ஒண்ணும் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை. உன்னைபத்தி எனக்கு நல்லாவே ரொம்ப நல்லாவே தெரியும். உனக்கு ரெட்டை வருமானம்னு நினச்ச? அதனால நான் சொன்ன டீலுக்கு நீ ஒத்துவந்த. அவ்வளோதான்….”
“சார்!…” என இழுத்தவனிடம், “இன்னும் கொஞ்ச நேரத்தில பொண்ணும்  மாப்பிள்ளையும் இங்க வந்திருவாங்க, உங்க நியாயத்தை நீங்க அவன் கிட்டே கேளுங்க, நல்ல பதிலா சொல்லுவான்!…” என்றான் எச்சரிக்கை செய்யும் குரலில்.
“என்னங்க மிரட்டறீங்களா?…” என மீண்டும் குணாவின் தந்தை எகிறிய எகிறளில் பிரசாத்தின் பொறுமை புஸ்வாணமானது. ஓங்கி ஒரே ஒரு அறை விட்டான். குணாவை சேர்ந்த அனைவருக்கும் சப்தநாடியும் அடங்கியது.
“பணத்துக்காக வீட்டுக்கு வாழ வரப்போற பொண்ணை வியாபாரமா வருமானமா பார்க்கிற உனக்கெல்லாம் என் கிட்ட பேச தகுதி இல்லை. என் முன்னாலேயே சத்தமா வேற பேசற? சுத்தமா அழிச்சிடுவேன் ஜாக்கிரதை!…” என ஆக்ரோஷமாக கர்ஜித்தவன்,
“இங்க பாரு குணா நீ இதுக்குமேல என் பொறுமையை சோதிக்கிறது நல்லதில்லை. கிடச்ச பணத்தோட எல்லோரையும் கூட்டிட்டு ஊரு போய் சேரு. அந்த பிரபாகரன் கண்ணுல மாட்டினீங்க உசுரு தப்பாது. பாத்துகோங்க!…” என்றவன் அவர்களின் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக,
“என்ன உனக்கும் அதே நிலைமைன்னு நினைக்கிறீங்க போல?…. அவனால என்னை ஒண்ணுமே பண்ணமுடியாது, அவனுக்கு நல்லாவே தெரியும் இதுக்கு நான்தான் காரணம்னு, அதனால நீங்க எல்லோருமே யோசிக்கிறது வேஸ்ட். வேணும்னா இருந்து பார்த்துட்டு போங்க, சேதாரம் எனக்கா உங்களுக்கான்னு!…” என சொல்லிய நிமிடம் கிடைத்தவரைக்கும் லாபம் என அங்கிருந்து அகன்றனர்.
சோர்வாக அமர்ந்தவனின் அருகில் நிழலாட நிமிர்ந்து பார்த்தவன் தன் தாய் தனம் நிற்பதை கண்டு அவசரமாக எழுந்து நின்றான்.
“நீயெல்லாம் மனுஷனாடா?…” என கண்ணில் மிதக்கும் நீரோடு கேள்வி கேட்டவரிடம் மௌனத்தையே பதிலாக தந்தான்.
நீ உன் ஆட்டத்தை பிரபாவோட நிறுத்திக்க வேண்டியது தானே? அவன் நீ என்னதான் இடஞ்சல் குடுத்தாலும் எதிர்க்காம அமைதியா போறான்னு  உனக்கு திமிரு, எல்லா நாளும் அப்டியே போகாது பிரசாத். உன் கிட்ட இருந்து அந்த பிள்ளையை யாரு காப்பாத்த போறாங்களோ?…” என்றவரை பார்த்து,
“அவனை காப்பாத்ததான் நீங்க இருக்கீங்களே?…” என சூடாக பதில் கொடுத்தான் பிரசாத்.
“நான் அவனை மட்டும் காப்பாத்துறதுதான் உன் கண்ணுக்கு தெரியுதா? என் பிள்ளையை அவன் செய்ய இருக்கும் பாவத்திலிருந்தும் காப்பத்த போராடிட்டு இருக்கிறது உன் கண்ணுக்கு தெரியாம போச்சே?…”
“பொண்ணுங்க வாழ்க்கைனா உனக்கு இளக்காரமா போச்சா? நீ விளையாட, பழிவாங்க அந்த பொண்ணு எதிர்காலம் தான் கிடச்சதா? இன்னும் பிரபாகரனை என்னெல்லாம் பாடு படுத்த போற?…” என அவர் கேள்விகளை அடுக்கிகொண்டே போக இது பழகிப்போன ஒன்றுதானென இறுகிப்போய் கல்லாய் நின்றிருந்தான்.
தான் என்னதான் கோவமாக பேசினாலும் அவனிடமிருந்து எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை என்பதை உணர்ந்தவர் தன்மையான குரலில்,
“பிரசாத் இன்னும் எத்தனை நாளைக்குதான் பழசையே நினச்சிட்டு இருப்ப, அதையெல்லாம் கெட்ட கனவா நினச்சு மறந்திட்டு உன் எதிர்காலத்தை பத்தி கொஞ்சம் யோசியேன்!…” என மன்றாடும் குரலில் கேட்டவரை பார்த்தவன்,
“என்னை மட்டும் சொல்றீங்களே, நீங்க மறந்துடீங்களா? அப்போ சரிங்கம்மா வாங்க ஊருக்குள்ள இருக்கிற நம்ம வீட்டுக்கு போவோம், வருஷக்கணக்கா எதுக்காக நாம பண்ணை வீட்டில் வந்து தங்கியிருக்கணும்?…” என எதிர்கேள்வி கேட்கவும் வாயடைத்து போனார் தனம்.
இத்தனை வருடங்களில் கேட்காத ஒன்றை இன்று கேட்கவும் துக்கபந்து நெஞ்சடைக்க தன மகனின் வாழ்வு முழுமைக்கும் இப்படியே கழிந்துவிடுமோ என அஞ்சியவர்,
“பிரசாத் நீ கிருஷ்ணமூர்த்தி அண்ணனை புரிஞ்சிக்காததால வெறுக்கிறாயா? இல்லை வெறுக்கிறதால புரிஞ்சிக்காம இருக்கிறயான்னு எனக்கு தெரியலை, முதல்ல கோவத்தை ஒதுக்கிவச்சிட்டு யோசி. உனக்கு நான் சொல்றது புரியும். எனக்கு என் மகன் நல்லபடியா வாழனும் அதை தவிர உன் கிட்ட வேற எதையுமே கேட்கலை….” என்று உரைத்துவிட்டு தளர்ந்த நடையோடு வீட்டினுள் சென்றுவிட்டார்.
அவர் செல்லவும் நாற்காலியில் அமர்ந்தவன் சிந்தனை முழுவதும் தான் அடுத்து என்ன செய்யவேண்டுமென்பதில் தான் சுழன்றது. உதயா நந்தினியின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்க ஆயத்தமானான்.
———————————————————
ஒருமணிநேரம் கடந்திருக்கும் விழிகளை மெல்ல திறந்து பார்த்தவனது பார்வையில் உஷ்ணம் உச்சகட்டத்திற்கு எகிறியது. வரும் வழியெல்லாம் விழியிலிருந்து கண்ணீரை வாரி வழங்கிகொண்டிருப்பவளை என்ன செய்தால் தகும் என்பதுபோல முறைத்து முறைத்து பார்த்தான்.
“இப்போ நான் என்ன பண்ணிட்டேன் ன்னு இப்டி அழுவுறா? கழுத்துல கத்தியை வச்சா தாலி கட்டினேன்!” என்று நினைத்தவனை அவனது மனசாட்சி, “பின்ன நீ எப்படி தாலி கட்டினன்னு நினச்சு பாரு. அதை விட்டுட்டு மத்ததை நினைப்ப!” என்றுரைத்தது.
கோபம் கரையுடைக்க, “இப்போ என்ன நடந்துபோச்சுன்னு நீ இப்படி ஒப்பாரி வைக்காத குறையா ஊரை கூட்டுற?” என்றான்.
அவன் கோபத்தை பார்த்து மிரண்டவள் அவனது குற்றச்சாட்டில் மேலும் அழுது கரைந்தாள்.
“நான் ஒன்னும் சத்தமா அழுவலை!” என்று நியாயம் பேசியவளை சலனமில்லாமல் பார்த்து அடுத்த கேள்வியையும் கேட்டான்.
“செய்றதெல்லாம் செஞ்சுட்டு அழுகுறது, கேட்டா அதுக்கு வியாக்யானமா பதில் வேற சொல்றது?” என்று சாடினான்.
அழுது அழுது சோர்ந்திருந்தவளை பார்க்க பாவமாக வேறு இருந்தது. ஆனாலும் நிற்காமல் கரகரவென்று கண்களிலிருந்து கொட்டிய கண்ணீரை பார்க்க பார்க்க கோவம் மட்டுப்படுவேனா என்றது.
மேலும் வாயை திறந்து திட்டுவதற்குள் மதிவாணன் காப்பாற்றினான்.
“அண்ணா ரெண்டுபேரும் சாப்ட்டிருக்க மாட்டீங்க தானே? பாருங்க மணி ஆச்சு வாங்க போய் சாப்பிடலாம்!” என்றான்.
“ம்ம் காப்பாத்தி விடறீங்கலாக்கும்?  என்னடா இது? எப்போ இருந்து?” என்று மெலிதாக புன்னகைத்தபடி மதிவாணனை கேட்டான்.
“சரி, வரலைனா நீங்க கார்லயே இருங்க. எனக்கு பசிக்குதுப்பா, இந்த ரெஸ்ட்டாரென்ட்ல சாப்பாடு சூப்பரா இருக்கும். நான் போய் சாப்ட்டு வரேன்!” என்று விட்டு கிளம்பியே விட்டான்.
இதுக்கும் மேல சும்மா இருந்தா சரியில்லை என்று காரிலிருந்து இறங்கி அவளையும் இறங்க சொன்னான்.
“வா சாப்பிடலாம்!” அதோடு நிறுத்தாமல், “அழுகவாச்சும் தெம்பு வேணும்ல, இருக்கிற எனர்ஜி எல்லாம் அழுகையில கண்ணீரா போயிட்டு இருக்கு பார். சாப்ட்டு வந்து அழு!” என்றானே பார்க்கலாம்.
“எனக்கு பசிக்கலை!” சாப்பிட கூப்பிடுற லட்சணத்தை பார் என்று மனதினுள் எண்ணி பல்லை கடித்தவாறே.
“அதனால?”
“நீங்க போய் சாப்பிடுங்க!” என்றால் தலையை கவிழ்ந்தவாறே.
பதில் ஒன்றும் வராமலிருக்க நிமிர்ந்து பார்த்தவள் அவன் அங்கேயே லேசா குனிந்தவாறே அவளையே பார்த்துகொண்டிருந்தான்.
“ஏன் இப்டி பார்க்கறீங்க?..” என கேட்கவும், “நீ சாப்பிட வரலைனா இப்டி உன்னை பார்த்துட்டே தான் இருப்பேன், உனக்கு ஓகே தானே?…” என கேட்கவும் அவனது மனமோ, “அடடா இதுவும் நல்லாத்தான்யா இருக்கு பார்த்துட்டே இருந்தா எப்டி இருக்கும்?..” என்ற சிந்தனைக்கு கடிவாளமிட்டு அவளை வித்தகன் வாங்காமல் தீவிரமாக பார்க்க ஆரம்பிக்கவும் நந்தினி அரண்டுவிட்டாள்.
இது வேலைக்காகாது என நினைத்தவள் வேறு வழியில்லாமல் இறங்கி அவனுடன் உள்ளே சென்றாள். இவளை மணகோலத்தில் கண்ட அனைவரும் தங்களுக்குள்ளேயே தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டனர்.
அதை கண்டு நின்ற இடத்திலேயே நந்தினியின் அழுகையானது அவள் மேல் கருணை கொண்டு நான் கண்ணுக்குள்ள வரவா? என்று அனுமதி கேட்டுகொண்டிருக்கும் போதே உதய் பிரபாகரன் வந்தான்.
அழுகை அலறியடித்துகொண்டு ஓடியே விட்டது. இவன் இருக்கும் இடத்தில நானா? என்று.
“என்ன இங்கயே நின்னுட்டு இருக்க? வா” என்றவனை பின்தொடர்ந்து சென்றாள்.
ஆடர் செய்த உணவு வகைகள் வரிசைகட்டி வரவும் அவளுக்கும் பரிமாறி தனக்கும் வைத்துகொண்டான்.
“எப்படி சாப்பாட்டை பார்வையிலேயே சாப்ட்டு முடிச்சிடலாம்னு ப்ளானா? சாப்பிடு முதல்ல!”
“ம்ம்!”
“ம்ம் சொன்னா மட்டும் சாப்பாட்டுல கையை வைக்கிறியா? இல்லை ஊட்டிவிடனும்னு நினைக்கிறியா?”
“இல்லை இல்லை நானே சாப்ட்டுப்பேன்!” என்று வேக வேகமாக சாப்பிட தொடங்கினாள்.
“ம்ம் அது!” என்று தன்னை மெச்சிகொண்டான் கெத்தாக.
சுற்றிளும் பார்வையை ஓடவிட்டவளை கவனித்து, “ என்ன தேடுற?” என்றான்
“இல்லை அவங்களை காணோம்?”
“இவங்களை?”
“நம்ம கூட வந்தாங்களே? கார்ல?”
“ட்ரைவர்!” என்றவளை முறைத்து
“அவன் ட்ரைவர் இல்லை உனக்கு அண்ணா போல, புரியுதா?” என்றான்.
“ம்ம், அண்ணா காணோமே?”
“அவன் சாப்ட்டுட்டு இருப்பான். நீ முதல்ல சாப்பிடு!” அதோடு முடித்துகொண்டான்.
காரில் ஏறி அமர்ந்ததும், “என்னடா மதி? வேலை முடிஞ்சதா?” என்றான் நக்கலாக.
“என்னண்ணே இப்படி கேட்டுட்டீங்க? முடியாம இருக்குமா? அதெல்லாம் எப்போவோ முடிஞ்சாச்சு!” என்றான் வாய்க்கொள்ளா சிரிப்போடு.
“அதானே நீ யாரு?” என்றான் உதயா கடுப்போடு.
“உங்களுக்கு தெரியாதாண்ணே?” என்றான் மதி சிரிப்போடு.
ஏதோ சொல்ல வாயெடுக்கும் பொழுதில் மொபைலின் சத்தம் உதயாவை திசைதிருப்பியது.  “அய்யோ!..” என அலறிய மனதை அடக்கி பேச ஆயத்தமானான்.
“சொல்லு நாச்சி!”
“ராசா, எங்கயா போய்ட்ட? நேத்துல இருந்து காணுமே?” என்றார் நாச்சி.
“ம்ம், பார்லிமென்ட்டுக்கு!” என்றான்.
“அப்படியா? போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா ராசா?”
“நாச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?????????””” என்று பல்லை கடித்தான்.
“என்னையா பல்லுகில்லு வலிக்கிதாயா?, இந்த கடி கடிக்கிற?” என்றார் நாச்சி கிளுக்கி சிரித்தபடி.
“என்ன கிண்டலா?…”
“என்னைய்யா ராசா அப்டி கேட்டுப்புட்ட?…..”
“வேற எப்படி கேட்க?”
“நீ என்ன கேட்க நினைக்கிறியோ அதை கேளுயா உடனே சொல்றேன்!…..”
“நான் ஒண்ணுமே நினைக்கலை!……”
“நீயா கேட்குற வரைக்கும் சொல்லமாட்டேனே?…”
“நீ சொல்லவே வேண்டாம்!….”
“ஹம்ம், சொல்லிடலாம்னு பார்த்தேன்? நீதான் கேட்கவே மாட்டேன்னு சொல்றியே?….”
“இப்போ உனக்கு என்னதான் வேணும்? அதான் தேவையானது தெரிஞ்சிருச்சுல போனை வை அங்கதான வந்திட்டு இருக்கோம். அதுக்குள்ளே என்னவாம்? திருப்பி கூப்பிட்ட அப்புறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது?” கடுப்புடன் போனை அணைத்துவிட்டு பெருமூச்சோடு திரும்பி நந்தினியை பார்த்தான்.
திறந்தவாய் மூடாமல் அவனையே பார்த்துகொண்டிருந்தவளை புருவங்களை உயர்த்தி என்னவென்றான் பார்வையிலேயே!……..
“ஒண்ணுமில்லை!” என்பதுபோல  தலையாட்டியவளை பார்த்து தோளை குலுக்கி விட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
 சிறிது நேரத்தி அவள் புறம் திரும்பியவன், “ஆமா நான் அப்போவே கேட்கனும்னு நினச்சேன்?” – கேள்விகளை கேட்க ஆரம்பித்தான் அவளை சகஜமாக்கும் பொருட்டு.
“என் கூட பேசினது யாருன்னு கேட்க மாட்டியா?.” என்றான் அவளை குறுகுறுவென பார்வையிட்டபடி.
“எப்படி கேட்க?….” என்று நினைத்தவளால் கேட்கத்தான் முடியவில்லை.
அவனோ விடாமல்” கேட்க தோணலையா?..” என்றான்.
‘சரி கேட்டுத்தான் பார்ப்போம்’, என்று கேட்க ஆயத்தமானவளை, “யார்ன்னு ஊருக்கு போனதும் நீயே தெரிஞ்சுப்ப!..”என்றான்.
ஒரு நிமிடம் ங்கே என விழித்தவள் கடுப்போடு தலையை ஜன்னல் பக்கம் திருப்பிகொண்டாள்.
அவளது முகத்தை பார்த்து எண்ணத்தை அறிந்தவன் வாய்க்குள்ளேயே சிரிப்பை அடக்கிக்கொண்டு,
“நந்தினி!…”
“என்ன?” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“ஏன்? ஒரு வார்த்தைக்கு மேல பேசமாட்டியோ?” லேசாக எட்டிப்பார்த்த கேலியுடன்.
“அப்படியெல்லாம் இல்லைங்க!”
“ம்ம். கோர்ஸ் முடிச்சுட்டியா?”
“ஓ! முடிச்சுட்டேன்!”
“ஆமா, எதுக்காக ப்யுடிஷியன் கோர்ஸ் எடுத்த?”
“தெரியலை தோணுச்சு அதான்!”
“வேற என்ன தெரியும் உனக்கு?”
“படம் வரைவேன் ஓரளவுக்கு, அவ்வளோதான்!” என்று முடித்தவளை விடாமல், “அப்போ இன்னைக்கு உனக்கு நீயேதான் மேக்கப் போட்டுகிட்டயா?” என்றான் வம்பாக.
“இல்லியே, மாப்பிள்ளை வீட்டாளுங்க தான் கூட்டிட்டு வந்தவங்க தான் போட்டுவிட்டாங்க!” என்றாள் எதார்த்தமான குரலில் மிக சாதாரணமாக.
ஆனால் அதை கேட்டவனுக்கோ அப்படியில்லை என்பது அவனது முகத்தை வைத்தே தெரிந்துவிட்டது.
நந்தினிக்கோ, “இப்போ இதை சொல்லியிருக்க கூடாதோ!” ன்னு கையை பிசைந்தபடி அமைதியாகிவிட்டாள்.
அதுவரை இருந்த சுமூகமான சூழ்நிலை சூனியத்தை சூடிகொண்டது போல இருண்டு விட்டது.
ஊரை நெருங்க இன்னும் ஒருமணிநேரமே அவகாசமென்னும் நிலையில் அமைதியை கலைக்கும் பொருட்டு மதிவாணன் பேச்சை ஆரம்பித்தான்.
“அண்ணி!” என்றழைத்தவனை பார்த்து  “சொல்லுங்க அண்ணா!” என்றாள்.
உதய்க்கோ தலையில் அடித்துகொள்ளலாம் போல ஆகிட்டது.
“அவன்தான் அண்ணின்னு சொல்றான், நீ என்னடான்னா திரும்ப அண்ணான்னு சொல்லிவைக்கற. உங்களை என்னதான் செய்ய?” என்றான்.
“இல்லைங்க நான் அண்ணான்னே கூப்பிடறேன். என்னை விட பெரியவங்க தானே?” என்று அதோடு முடித்துவிடும் நோக்கில்.
அவனோ விட்டால் தானே, “நீ என்னடா சொல்ற?” என்றான் மதியை நோக்கி.
“அதான் சொல்லிட்டாங்களே பெரியவங்கன்னு அதுக்கு மேல நான் என்ன சொல்ல?” என்றான் பெருமூச்சுடன் வார்த்தைகளில் இருந்த சுணக்கம் முகத்தில் இல்லாமல் சந்தோசம் மட்டுமே.
“தங்கச்சி”……
“சொல்லுங்கண்ணா”…… என்றாள்.
“இப்படி அமைதியா வராம ஏதாச்சும் பேசிட்டே வாங்க. இல்லைனா தூக்கம் வரும், தூங்கிட்டா காரை எங்கேயும் விட்டுடுவேன் தூக்கத்துல, அதனால  பேசிட்டே வாங்க!”… என்றான் அவளை பேசவைக்க.
“என்னதூஊஊஊஊஊ???????” நெஞ்சில் கையை வைத்துகொண்டு என்று அலறியே விட்டாள்.
“டேய் நீ அடிதான் வாங்க போற, பேசாம வா. எதுக்கு இப்டி பயம் காட்டுற?” எனவும் நக்கலான சிரிப்பை கண்ணாடி மூலம் உதய்க்கு சிந்தியவன் அவனது ஒற்றை விரல் மிரட்டலை அசால்டாக அந்தபுரம் தள்ளினான்.
“நான் பேசலைனா நீங்க பேசுங்க, இல்லைனா இப்டிதான்!” என்றான் வாயை மட்டும் அசைத்து. 
தண்ணீர் எடுத்துகொடுத்து, “குடி. அவன் விளையாட்டுக்குத்தான் சொன்னான். நீ பயப்படாத!” என்று தைரியமூட்டினான்.
அந்த கனிவில் மீண்டு பெற்றோர் ஞாபகம் தலைதூக்க அமைதியாக கண்ணை மூடியபடி வந்தவளை ஜன்னல் வழியாக வந்த தென்றல் நித்திரையில் தள்ளியது.
————————————————————————————
உதய் பிரபாகரனின் ஊருக்கு போவதற்குள் மித்ராவை பற்றி……………….
மித்ரா நந்தினி மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஏழுமலை சந்திரா தம்பதிகளின் மகள். மிகச்சிறிய அளவில் சொந்தமாக காய்கறி தோட்டம் ஏழுமலைக்கு. தரமான காய்கறிகளை இயற்கையான முறையில் விளைவித்து மொத்த விலைக்கு வியாபாரம் செய்துவருபவர். இருப்பது கிராமமாதலால் மகளை கல்லூரிக்கு படிக்க வைக்காமல் இதுவே போதுமென்னும் எண்ணத்தில் இருந்துவிட்டவர். சந்திரா அமைதியான சுபாவம் கொண்டவர். மகளை பாசமாக வளர்த்தாலும் அதே நேரம் மிகுந்த கண்டிப்போடும் வளர்த்தனர்.
தனது மகளது வாழ்வு அவளது மனம் போல மட்டுமல்லாது தங்களது விருப்பமாகவும் இருக்க வேண்டும் என்று அனுதினமும் பிராத்தித்து கொண்டிருந்த ஏழுமலை அவளது திருமணம் இருமுறை நடந்த போதும் செய்வதறியாத சூழ்நிலையில் தன்னை நிறுத்திய கடவுளை இப்போது நிந்தித்துகொண்டிருக்கின்றார்.
ஊரை நெருங்க நெருங்க உதயின் மனமோ, “அங்கே என்ன காத்திருக்குமோ?..” என்று சிந்தித்தபடியே வந்தது.
அவளையறியாமல் உறங்கியவளை பார்க்க பார்க்க இரக்கம் மட்டுமே சுரந்தது. ஆம்  வெறும் இரக்கமே.
இந்த வயதில் அவளது வயதுக்கு மீறிய அதிர்ச்சிகளையும் சங்கடங்களையும் கொடுத்த ஆண்டவனை சபித்தபடியே இனி அடுத்து செய்யவேண்டியதையும் யோசிக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க கவலையோடு வெளியே வெறிக்க ஆரம்பித்தான்.
“இந்த பொண்ணை என்ன பண்ண?, எப்படி இவளுக்கான நல்ல எதிர்காலத்தை அமைத்துகொடுக்க?..” என்று இவனது நினைப்பு மொத்தமும் அவளுக்கான வருங்காலத்தை பற்றிய மட்டுமே.
எத்தனை யோசித்தும் அவன் போக வேண்டிய பாதைக்கான எந்த வெளிச்சமும் கிட்டவில்லை.
இது அவனுக்கு அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா? 
“இப்போதைக்கு ஒன்னும் யோசிக்கவேண்டாம், நடக்கிறது நடக்கட்டும்!.” என்று முடிவை காலத்தின் கையில் திணித்துவிட்டு யோசிப்பதை கைவிட்டான்.
கைகடிகாரத்தை பார்க்க அது மாலை 4 மணி என காட்டியது. ஊரை நெருங்க இன்னும் அரைமணிநேரமே இருக்க,
“மதி!…”
“சொல்லுங்கண்ணே சொல்லுங்க!…” என்றான் நகைத்துக்கொண்டே.
“போதும்டா, ஓவரா பண்ணாத!…” என்றான் உள்ளுக்குள் புகைந்துகொண்டே. 
“நானா?,,,, என்னண்ணா பண்ணினேன்?…” என்றான் அப்பாவியாக.
“ஸ்யப்பா, கொஞ்சம் காரை ஏதாச்சும் கடையில நிறுத்து காபி குடிச்சிட்டு போலாம்!…”
“ஓ, இப்போவே நிறுத்தறேன்!…” என்றபடி வரும் வழியில் ஒரு கடையின் முன்பு நிறுத்தி இறங்கியவனை,
“நான் இங்கயே இருக்கேன். நீ போய் வாங்கிவா!…” என்று பணித்துவிட்டு நந்தினியை எழுப்பினான். 
அவளோ, “ம்ஹூம், அசைவேனா….” என்று அடித்துபோட்டதுபோல நல்ல தூக்கத்தில் இருந்தவளை பாவமாக பார்த்துவிட்டு தூங்கட்டுமென விட்டுவிட்டான்.
மதி கொண்டு வந்த காபியை இருவரும் குடித்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர்.
“யாரிடம் என்ன பேசணும்?, என ஒத்திகை பார்த்துகொண்டிருந்தவனது கவனத்தை ஒலிபெருக்கியின் மூலம் வந்த பாடல் திசை திருப்பியது.
அவனது ஊரின் எல்லைக்குள் நுழையவும், “அப்படியும் இருக்குமோ?…” என புருவ மத்தியில் முடிச்சுகள் விழ பாதையின் இருமருங்கிலும் கவனிக்கலானான்.
அவனது பார்வை வட்டத்துக்குள் விழுந்ததை கண்டு “சரிதான்!..” என்று தலையை பிடித்துகொண்டு கடுப்போடு மதியை பார்த்தவனது விழியில் விழுந்ததென்னவோ அடக்கமுடியா சிரிப்பை அடக்கி வாயை விட்டு வெளியே வராமல் தடுக்க பிரம்மப்ரயத்தனம் செய்துகொண்டிருந்தான்.
ஆனால் தப்பி தவறி கூட மதி உதய் பிரபாகரனை ஏறிட்டு பார்க்க முயலவில்லை.
காதை கிழிக்கும் சத்தத்தில் துயிலெழுந்தவள் இருபக்கங்களிலும் மைக்செட் பாடிகொண்டிருக்க தோரணங்கள் சீரியல் பல்புகள் என அலங்காரத்துடன் காணப்பட்ட ஊரை கண்டு,
“இதுதான் உங்க ஊரா?…” என்றாள்.
ஆமாம் என்ற தலையசைப்பை மட்டுமே அவனிடமிருந்து பதிலாக வாங்கிகொண்டவள் அதோடு விடாமல்,
“உங்க ஊர்ல ஏதும் விசேஷமா? திருவிழாவா?..” என்றாள் மறுபடியும்.
அவளை பார்த்து என்னத்தை சொல்லவென விழித்தான்.
“இந்த ஊர் பேரென்ன?…” மீண்டும்.
“ஏன் உங்கப்பா உன்கிட்ட சொல்லலையா?…” என்றான்.
தலையை குனிந்தவாறு இல்லையென சொன்னவளிடம்,
“குறிஞ்சியூர்!….”
“ஓ!…” என திரும்பி ஜன்னல் புறம் வேடிக்கை பார்த்தவாறு வந்தவளை கவலையோடு நோக்கினான்.
“இந்த பொண்ணு எப்படி தான் சமாளிக்க போகுதோ?…” என.
அவளோ கிராமமும் அல்லாத நகரத்தோடும் ஒப்பிட முடியாத ஊரினை மெலிதான நடுக்கத்தோடு அளந்தபடி இருந்தாள்.
உதய் பிரபாகரனின் வீட்டில் என்ன நடக்குமோ என பயந்தபடி வந்தவளை கனிவுடன் நோக்கி,
“ஏன் பயப்படற? நான் தான் இருக்கேன்ல, அப்புறம் என்ன?…” என்றான்.
ஆனாலும் ஏதோ ஒரு புரியாத உணர்வின் பிடியில் சிக்கிகொண்டதுபோல தவித்தவளை  “என்ன சொல்லி சமாதானப்படுத்துவது? …” என புரியாமல் அமைதிகாத்தான்.
“அண்ணா வீடு வந்தாச்சு!…” என்றபடி மதி உதய் பிரபாகரனின் வீட்டு கேட்டிற்குள் காரை நுழைக்கவுமே பயத்தில் வேர்க்க விறுவிறுக்க கண்ணை இறுக மூடிகொண்டாள் நந்தினி.

Advertisement