கதைத்திரி33

அத்தியாயம் 81

அப்பாவுடனான வாதப் பிரதிவாதங்களால் விவேக் மிகவும் சோர்ந்திருந்தான். தளர்ந்த நடையுடன் கீழே இறங்க , அவன் போன் அடிக்க , யார்? என்று பார்க்க , கீத்து அழைத்திருந்தாள் .

கீத்து பெயரை கண்டவுடன் , இதுவரை இருந்த அனைத்துக் குழப்பங்களும் பின்னே போக , முகத்தில் புன்னகை அரும்பியது .

எப்படி கீத்து? என்று ஆச்சரியத்துடன் கேட்க ,

தெரியவில்லை குரு , திடீரென்று மனசு , குரு… குரு… என்று சொல்லுச்சு”  என்று   வி.டி.வி. கணேஷ் மாதிரி பேச , 

விவேக் வாய்விட்டு சிரித்தான் . பின், ஹஸ்கி வாய்ஸில், கீத்தும்மா , லவ் யூ..” என்று சொல்ல ,

பெண்ணவள் சிலிர்த்தாள் .  என்ன திடீரென்று ? என்று மென்மையாக கேட்க ,

நீ காமெடியாகப் பேசி, என் மனநிலையை மாற்ற முயலுகிறாய் என்று புரிகிறது. ஆனால் நான் அப்பாவை பார்க்க போகிறேன் என்றவுடன் எனக்காக கவலைப்பட ஆரம்பித்திருப்பாய், யோசிக்க ஆரம்பித்திருப்பாய் என்று புரிகிறது” என்றான் மென்மையாக  .

“நேரத்தைக் கணக்கிட்டு அழைத்திருக்கிறாய் என்பதும் புரிகிறது செல்லம். தேங்க் யூ, தேங்க் யூ, யூ ஆர் மை ஏஞ்சல்… லவ் யூ ஏஞ்சல்…” என்றான் ஆழ்ந்த குரலில்.

கீத்து அவன் குரலில், வார்த்தையில் தடுமாறி, “பக்கத்தில் இருக்கும் காபி ஸாப்பில் இருக்கிறேன் . வாருங்கள் என்று  வேகமாக போனை வைத்தாள் .

விவேக் வரும் வரை , அவன் சொல்லிய  ஐ லவ் யூ ஏஞ்சலே” காதில் ஒலித்துக் கொண்டிருக்க , மெய் மறந்து அமர்ந்திருந்தாள் .

விவேக் வந்து , இரண்டு முறை ‘கீத்து.., கீத்து..’ என்று அழைத்த பிறகே , சுய உணர்வு பெற்றாள் .அவன் குறும்பாக நோக்க , அவள் அசடு வழிந்தாள் .

விவேக்கின் மனநிலை முற்றிலுமாக மாறியது . அதே நேரம் சரியாக , அவனுக்குப் பிடித்த கேப்பச்சினோ  வர , கண்ணில் ஒரு மெச்சுதலுடன் , “உனக்கு?”

“அதெல்லாம் ஆச்சு…” என்றவுடன், கண் இமைக்காமல் , கீத்துவை பார்த்தபடி அருந்தத் தொடங்கினான்

கீத்து நடந்த விசயத்தைப் பற்றி எதுவும் கேட்காமல், , நீங்கள் வரும் வரை நான் எதுவும் வாங்காமல் இருந்திருந்தால் , வெய்ட்டர் கொலை காண்டாகியிருப்பார் என்று சிரித்தாள் . 

கீத்து அப்படியே ஒரு லாவா கேக் பார்சல்..” என்று சொல்ல,

“அதுவும் ஆச்சு..” என்று செல்லமாக முறைத்தாள்.

அவன் குடித்து முடித்து விட்டு , போகலாம் கீத்து , சஞ்சு காத்திருப்பாள்..”  என்று நகர , அவளும் இணைந்து கொண்டாள் .

வீட்டிற்குள் நுழைய , எதிர்பார்த்தபடியே சஞ்சு காத்திருந்தாள் .சஞ்சு இருவரையும் பார்த்து கள்ளச் சிரிப்பு சிரிக்க , கீத்து முகம் சிவக்க , விவேக் புன்னகைத்தான் .

கீத்து கேக்கை தர , ஆர்வமாக பிரித்தபடி , எங்கே ? என்ன விசயம் அண்ணா? என்று கேட்க , 

உடனே வேகமாக கீத்து ஆஜராகி , “அதை வாங்கியது நான், என்னிடம் கேள் என்று சோகமாய் பெருமூச்சு விட ,

 என்ன விசயம் கீத்து ? என்று சஞ்சுவும் சுவாரசியமாக,

காபி ஷாப்பிற்கு கூப்பிட்டது நான் தான் ,  அவருக்கு பிடித்த கேப்பச்சினோ ஆர்டர் செய்தது நான் தான் , அதை நன்றாக மொக்கிவிட்டு , தங்கச்சிக்கு ஒரு லாவா கேக் பார்சல் என்றும் வாங்கிக் கொண்டார் . அதையும் என் சின்ன இதயம் தாங்கிக் கொண்டது . ஆனால் கடைசியில் , ஒரு மரியாதைக்குக் கூட நான் பணம் கொடுக்கவா? என்று கூட கேட்க வில்லை…” என்று ஏற்ற இறக்கத்துடன் சொல்ல ,

சஞ்சு பொங்கிய சிரிப்புடன் , ஏன் அண்ணா ? என்று கேட்க ,

அவள் தானே அழைத்தால் , அப்புறம் அவள் தானே கட்ட வேண்டும் என்று சிரிப்பை அடக்கியபடி விவேக் சொல்ல ,

அட ராமா! என்று கீத்து தலையில் கை வைத்தபடி , காதல் கிரிக்கெட்டில் முதல் பாலிலேயே , நீங்கள் டக் அவுட் குரு ..என்று குறும்பாய் இழுக்க ,

அவன் புரியாது பார்க்க , 

ரூல் நம்பர் ஒன்று . யார் கூப்பிட்டாலும் பசங்க தான் செலவளிக்க வேண்டும் அண்ணா..” என்று சஞ்சு எடுத்துக் கொடுக்க ,

இதெல்லாம் அநியாயம்…”  என்று விவேக் வம்பு செய்ய , 

இப்போது உங்கள் பாங்க் பாலென்ஸின்  ரகசியம் புரிந்து விட்டது என்று கீத்து அங்கலாய்க்க , அங்கே சிரிப்பலை பரவியது .

பின் மெதுவாக அப்பா அழைத்தது , அவர் பேசியது , அவன் பேசியது , என்று அனைத்து விபரங்களையும் வேதனையுடன் சொன்னான்.

பின், இத்தனை வருடங்களாக மனதில் தேக்கி வைத்திருந்த கோபம் , ஆற்றாமை , துக்கம் என்று அனைத்தையும் கொட்டிவிட்டேன் சஞ்சு..” 

கீத்து ஆதரவாகக் கைப்பிடித்துக் கொண்டாள்.

“எதிர்பார்த்தது தானே. விடு அண்ணா, உன்னுடைய கோபத்தை, ஆதங்கத்தையாவது கொட்ட முடிந்ததே… என்று சந்தோஷப்பட்டுக் கொள்.” என்று சமாதானப்படுத்த,

“ம்ம்…” என்று விவேக்கும் ஒத்துக் கொள்ள,

நல்லவேளை தப்பித்தேன்  ,  இருவரும் பேசி விட்டீர்கள். இல்லை இன்று இரவு , சங்கீத ஸ்வரங்கள் தான்…” என்று காதில் போனை வைத்திருப்பது போல் கீத்த செய்கை செய்ய,

விவேக் செல்லமாக முறைக்க , சஞ்சுவும் சிரிக்க , அனைவருக்கும் மனநிலை மாறியது .

அத்தியாயம் 82

அனைவரும் எதிர்பார்த்த  திருமண நாளும் வர,  கண்ணன் மற்றும் ரமேஷ் குடும்பம்  சூழ ,  திருமணம் நல்லபடியாக , கோலகலமாக நடந்தேறியது . ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க , விவேக் தன் அன்னையை மனதில் நினைத்துக் கொண்டு முதல் இரண்டு முடிச்சுகளைப் போட , சஞ்சனா கண்ணீர் வழிய , நாத்தனார்  முடிச்சைப் போட்டாள். இனிதே திருமணம் முடிந்தது .

 விவேக்கும் , கீத்துவும் , தங்கள் வாழ்வில் அடுத்த அத்தியாயத்திற்குள் சந்தோஷமாக அடி எடுத்து வைத்தனர் . மனம் ஒத்த தம்பதிகளாக வாழ உறுதி கொண்டனர் .

கல்யாணம் முடிந்து ,அனைவரும் ஓய்வாக பேசிக் கொண்டிருக்க , ராதாவும் , ராஜியும் மஞ்சுவை நினைத்து கண்கலங்கினர் . இன்று மஞ்சு இருந்திருந்தால் சஞ்சுவும், விவேக்கும் வைரமாக ஜொலிப்பதைக் கண்டு பூரித்திருப்பாள் என்று தன் தோழியின் இழப்பை நினைத்து ஏங்கினர் .சஞ்சுவின் உயரத்தைப் பார்க்க , மஞ்சு இல்லையே என்று வருத்தப்பட்டனர் .

அப்போது ரமேஷ், “விஜயன் எதார்த்ததைப் புரிந்து , தன் ஈகோவை விட்டு,  இறங்கி வந்திருந்தால் , இன்னும் நன்றாக இருந்திருக்குமே…” என்று  வருந்த , 

ஆண்டவன் சித்தம் எதுவோ அதுதான் நடக்கும் என்று கண்ணன் தேற்றினார் .

விஜயன் திருமணத்தன்று காலை வரை , தன்னை வந்து எப்படியும் அழைப்பார்கள் என்று நினைத்திருக்க, அவர்கள் யாரும் வராதது கண்டு அதிர்ந்து போனார் விஜயன் .   தன் கணக்கு தப்பாகிப் போனது பெரும் அதிர்ச்சியைத் தந்தது . எப்படியும் மகன் வருவான் என்ற அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை தூள் தூளானது . விவேக் சொன்ன மாதிரி வளைக்கிறோம் என்று முறித்து விட்டோமோ என்ற கவலை பிறந்தது…?

முதன்முறையாக எதிர் காலத்தை நினைத்து பயம் தோன்றியது . பிள்ளைகள் தனியாகப் போன போது கூட , எப்படியும் ஒரு நாள் நம்மிடம் தான் வர வேண்டும் என்ற இறுமாப்பு இருந்தது . ஆனால் இன்று தன் மகன் வாழ்க்கையில் தான் இல்லாமல் நடந்த பெரும் நிகழ்வு , அவரை யோசிக்க வைத்தது . நிராகரிப்பு பெரும் வேதனையைத் தந்தது .

மஞ்சு இருந்திருந்தால் , இதெல்லாம் நடந்திருக்காதோ? தனக்கும்  பிள்ளைகளுக்கும் இணைப்புச் சங்கிலியாக, பாலமாக இருந்திருப்பாளோ?  என்று மனைவியின் இழப்பை நினைக்க வைத்தது .மஞ்சு  இல்லையே என்று வேதனைப்படவும் வைத்தது.”

சிலருக்கு காலம் கடந்த பின் தான் ஞானதோயம் வரும் , விஜயனும் அந்த வகை தான் . இப்பொழுதுதான் பிரிவை, உறவை பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்.

அத்தியாயம் 83

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 

சஞ்சு தன் துறையில் தன்னுடன் பயணிக்கும் அனிருத்திடம் நட்பாக, பின் அது காதலாக மலர்ந்தது. இருவருக்கும் நல்ல புரிதலும், பரஸ்பர மரியாதையும், அடுத்தவர் திறமை மேல் மதிப்பும் இருந்தது.

சஞ்சு தன் காதலை விவேக்கிடம் தெரிவிக்க, இரு வீட்டார் சம்மதத்துடன், இன்று திருமணம் வரை வந்திருக்கிறது.

விவேக் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்திருந்தான். திருமணத்தைப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தான். மண்டபமே கலை கட்டியது. எங்கும் சந்தோஷம் வியாபித்திருந்தது.

சுற்றமும் நட்பும் சூழ, சஞ்சனா ஆசைப்பட்டது போல் விவேக்கும் கீர்த்தனாவும் கன்னிகாதானம் செய்ய, அனிருத் சஞ்சுவின் கழுத்தில் பொன்தாலி பூட்டினான். அந்த நொடி சஞ்சு கண்கலங்கி, அண்ணனைப் பார்க்க, அவன் கண்களும் பனித்தே இருந்தது. இதைக் கவனித்த கீத்து, விவேக் கையை ஆறுதலாகப் பற்றினாள். கிட்டத்தட்ட ராஜி மற்றும் ராதா குடும்பத்தினரும் நெகிழ்ந்து தான் இருந்தார்கள்.

அதேவேளை, அனிருத், சஞ்சுவின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, நான் இருக்கிறேன் என்பது போல் அவள் கண்களை ஊடுருவி ,”ஐ லவ் யூ கண்ணம்மா” என்றான்.

சஞ்சு புன்னகைக்க, அந்தப் புன்னகை அனைவரையும் தொற்ற, அங்கு சூழ்ந்திருந்த அனைவரும் “ஏய்…” என்றபடி கைதட்ட, சூழ்நிலை மாறியது.

இக்காட்சிகள் அனைத்தையும் நான்காவது வரிசையில் யாரோ ஒருவர் போல் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார் விஜயன். அப்படியே அவர் மனம் பத்து நாட்களுக்குப் பின்னால் சென்றது.

விவேக்கும், கீத்துவும் வந்து சஞ்சுவின் திருமணத்திற்கு கடமையாக அழைக்க, பத்திரிக்கையை அமைதியாகப் பெற்றுக் கொண்டார். பின் சில நிமிடங்களில் இருவரும் கிளம்ப, கண்களில் ஏக்கத்துடன் அவர்களைப் பார்த்தபடியே நின்றிருந்தார்.

இந்த இடைப்பட்ட காலம் விஜயனிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. விவேக்கின் திருமணம், தன்னிடம் அவர்கள் வந்து தானே ஆக வேண்டும் என்றிருந்த விஜயனின் இறுமாப்பைச் சுக்கு நூறாக உடைந்திருந்தது. தான் அவர்களுக்குத்  தேவையில்லை என்பதையும் பட்டவர்த்தனமாக உணர்த்தியிருந்தது.

மேலும் மஞ்சுவின் மறைவிற்குப் பிறகு, பிள்ளைகளின் மீது ஒரு கோபத்தை வளர்த்துக் கொண்டு, அவர்களை அடிபணிய வைக்க வேண்டும் என்ற வன்மத்தில் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை ஓட்டம், விவேக்கின் திருமணத்துடன் முற்றுப் பெற, அடுத்து என்ன செய்ய? என்று தெரியாமல் நட்டநடு ரோட்டில் நிற்பது போல் உணர்ந்தார். வாழ்க்கைக்கான பிடிப்பே கேள்விக்குறியானது. 

அதே வேளையில் பணி ஓய்வு பெற்ற பின், அவர் அலுவலகத்தில் வேலை பார்த்த ப்யூன் கூட மதிக்காதது, முதன்முறையாக அவரை சுயஅலசலில் ஈடுபட வைத்தது. தான் வாழ்க்கையில் சாதித்தது என்ன? என்ற கேள்வியை எழுப்பியது. வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன? என்று தேடலை துவங்கி இருந்தது. நண்பர்கள், பிள்ளைகள் என்று தனக்கு யாருமில்லை என்ற உண்மையை உறுத்தியது. வலித்தது. விவேக் சொன்ன ‘தனி மரம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தது. 

தனிமை கொடுமையாக இருக்க, மனம் மஞ்சுவை மிகவும் நாடியது. கிட்டத்தட்ட மன அழுத்தத்திற்கு ஆளானார். மகன் சொன்ன வார்த்தை, எங்கோ பின்னால் இருந்து ஒலிக்க, இப்போது கவுன்சிலிங் போய் கொண்டிருக்கிறார். மனிதர்களைப் பார்க்கும் பார்வை மாறத் தொடங்கியிருக்கிறது.

பத்திரிக்கையைப் பார்த்தபடி போவோமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தவர், இறுதியாக, முதல்படியாக, தன் ஈகோவை விட்டு இறங்கி சஞ்சுவின் திருமணத்திற்குப் போவது என்று முடிவு செய்தார். 

ஆயிரம் தயக்கங்களுடன் திருமணத்திற்கு வந்த போதும், அனைவரும் மரியாதையோடு வரவேற்றார்கள். முதல் வரிசையில் உட்காரச் சொல்ல, இவர் தான் தயங்கிப் பின்னே அமர்ந்தார்.

விவேக்கும் கீத்துவும் சம்பிரதாயமாக வரவேற்று விட்டு, மேடைக்குப் போய் விட்டார்கள். அவர்கள் பட்ட காயங்கள், வலிகள், அவரை எளிதில் மன்னிக்க விடாமல், இயல்பாக இருக்க விடாமல் செய்ய, அவர் வரவை குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருந்து கொண்டார்கள். சஞ்சு கவனிக்காத மாதிரி இருந்து கொண்டாள்.

திடீரென மண்டபம் பரபரப்பாக, இந்தியாவிலேயே புகழ் பெற்ற இயக்குனர் மட்டும் கலை இயக்குனர் வந்து வாழ்த்தினர். அவரைத் தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் வரத் தொடங்கினர். சினிமா பிரபலங்களில் வருகையே, சஞ்சுவின் வெற்றியை, சாதனையைக் கூற, தன்னையே நினைத்து வெட்கப்பட்டார். பின் மெதுவாக, யாரும் அறியாதவாறு எழுந்து வெளியே வந்தார் விஜயன். 

மேடையில் இருந்த ரமேஷ் கண்ணில் இது பட, விஜயனை அழைக்க நகர, அவரைத் தடுத்து நிறுத்திய கண்ணன், “காலம் எல்லா காயங்களையும் ஆற்றும். எதையும் வலிய திணிக்க வேண்டாம் ரமேஷ்..”

ரமேஷிற்கும் சரியென பட, அங்கேயே நின்று கொண்டார்.

மண்டபத்தில் நீண்ட வரிசையில் பரிசு கொடுக்கும் படலமும், வாழ்த்துப் படலமும் நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டு விவேக் நிற்க, 

அப்போது “ராஜா….” என்று யாரோ அழைப்பது போல்  உணர, வேகமாகப் திரும்பினான், மணமகள் அறை வாயிலில் கண்ணில் பெருமிதத்தோடு, முகம் கொள்ளா புன்னகையோடு மஞ்சு நிற்க,

விவேக் கண் இமைக்க மறந்து அங்கேயே பார்த்திருக்க, “குரு….” என்று கீத்து வந்து தோளைத் தொட, விவேக் திரும்ப,

“நான் கூப்பிட்டது கேட்க வில்லையா? இங்கே தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களை அனிருத் வீட்டில் தேடுகிறார்கள்…   வாங்க…” என்று இழுக்க,

“வருகிறேன்…” என்றவன், மீண்டும் திரும்பிப் பார்க்க, அந்த இடம் காலியாக இருந்தது.

“அம்மா….” என்று ஆரம்பிக்க,

“நிச்சயமாக இங்கே தான் எங்கேயாவது நின்று உங்கள் இருவரையும் வாழ்த்திக் கொண்டிருப்பார்கள்” என்று கீத்து சமாதானப்படுத்த,

“ஆமாம் கீத்து…” என்று அவள் கையை இறுக்கிப் பற்ற, அவன் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவள், மற்றொரு கையால் இறுக்கிய கைகளைத் தட்டிக் கொடுத்தாள்.

விவேக் ஆனந்தக் கண்ணீர் சிந்தித்தான்.

   ‌‌         

               முற்றும்