தன் மகனின் கல்யாண வேலைகள் , தான் இல்லாமல், தன்னைக் கலக்காமல் நடப்பதை அறிந்து குமறினார் . எப்படியும் தன்னிடம் தான் வர வேண்டும் என்று இறுமாந்திருந்தவருக்கு , பெரிய அடியாக இருந்தது . இதை ஏற்க முடியாமல் தடுமாறினார் . தனக்குப் பெரிய அவமானத்தை பிள்ளைகள் தேடித் தந்தாக நினைத்து கொந்தளித்தார் .
விவேக்கிற்கு போன் செய்து , “உன்னிடம் பேச வேண்டும், வீட்டுக்கு வா” என்று மீண்டும் அழைத்தார்.
“திருமண விசயமென்றால், பேசுவதற்கு ஒன்றுமில்லை…” என்று விவேக் போனை வைக்க முயல,
“வரவில்லை என்றால், நீ மிகவும் வருத்தப்படுவாய்..” என்று எச்சரிக்க,
ஏற்கனவே அவர் கோபத்தின் உச்சியில் இருப்பார் , போகவில்லை என்றால் ஏதாவது ஏடாகூடம் செய்து விடக் கூடும் என்று யோசித்து , மாலை அவரை சந்திக்கச் சென்றான் .
வீட்டுக்குள் நுழைந்தவுடனே , “என்னடா ? திமிருத்தனம் செய்கிறாயா? உன் தங்கச்சி காற்று உனக்கும் அடித்து விட்டதா?” என்று எகிறினார் .
பின், “அப்பா இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள போகிறாயா? என்னை அவமானப்படுத்தவே இதையெல்லாம் செய்கிறாயா?” என்று கொதிக்க ,
விவேக் நிதானமாக , “நாங்கள் உங்களுக்கு உரிய மரியாதை கொடுத்தோம் . ஆனால் அதை நீங்கள் ஏற்கவில்லை . இப்போது என் மீது பாய்ந்தால் என்ன அர்த்தம்… ?”
“முதலில் தங்கை கல்யாணம் என்றாய் , பின்னர் உன் கல்யாணம் என்கிறாய்… ?” என்றார் ஏளனமாக .
“அதற்குத்தான் உரிய காரணம் கூறப்பட்டு விட்டதே..”
கோபத்தில் தன் நிலை மறந்து ,”திருமணத்திற்கு அலைகிறாயா? பெண்ணைக் காட்டி மயக்கிவிட்டார்களா?”
“அப்பா…” என்று கத்தினான் , “உங்களுக்கு என்னையும் கீத்துவையும் நன்றாகத் தெரியும் . தேவையில்லாமல் வார்த்தையை விடாதீர்கள் . இது வரை அப்பா என்று அழைத்துக் கொண்டிருக்கிறேன் . அதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்…” என்றான் கடுமையாக .
அதில் இருந்த உண்மையை உணர்ந்து , விஜயன் அமைதியானார்.
“இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றான் எரிச்சலுடன் விவேக்.
“உன் திருமணம் என் பொறுப்பு. ஆனால் இன்று வேறு யாரோ எடுத்துச் செய்கிறார்கள் . நான் விரும்புகிறேன், எனக்குத் திருமணம் செய்து வையுங்கள் என்று என்னிடம் தானே வந்து கேட்டிருக்க வேண்டும் . எனக்கு உரிய மரியாதை தந்திருக்க வேண்டும்..” என்றார் எரிச்சலாய் .
“உங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து , என் தங்கை திருமணம் பற்றி பேச வந்தேனே , அப்போது என்ன என்ன செய்தீர்கள்? திருமணத்தைப் பகடைக்காயாகப் பயன்படுத்த நினைத்தீர்களே?” என்றான் வலியுடன் .
பின், “சஞ்சு மீது இருக்கும் கோபத்தை , வன்மத்தை , அவள் திருமணத்தை கொண்டு , உங்களை எதிர்த்து சென்ற எங்களை, உங்கள் காலடியில் விழ வைக்க வேண்டும் என்று ஏதோ எதிராளி போல் சொந்த பிள்ளைகள் மீது வஞ்சம் தீர்க்க திட்டம் தீட்டினீர்கள் தானே , பழி தீர்க்க நினைத்தீர்கள் தானே…”. என்று இகழ்ச்சியாக கேட்டான் .
“பேச்சை மாற்றாதே விவேக், உன் திருமணத்தைப் பற்றி பேசு” என்றார் வேகமாக .
“ரமேஷ் மற்றும் கண்ணன் அங்கிள் வந்து, என் திருமணத்தைப் பற்றி பேசினார்களே..? உங்களுக்கான மரியாதையைத் தந்தார்களே? நீங்கள் அதைக் காலால் எட்டி உதைத்தீர்கள். அப்புறம் இப்போது மரியாதை, கௌரவம் என்றால்?” என்று இகழ்ச்சியாகச் சிரிக்க,
“உங்கள் வழிக்கே வருகிறேன், முதலில் பொறுப்பு பற்றி பேசினீர்களே… , சஞ்சுவின் படிப்பிற்கு உங்கள் பொறுப்பான பங்களிப்பென்ன? . ஏதோ ஆர்வத்தில் உங்களை மீறி படம் வரைந்து அனுப்பி விட்டாள் , அதற்கு ஏதோ கொலை குற்றம் செய்த மாதிரி, அவள் கல்லூரிக்கு விரலை கூட அசைக்கவில்லையே…. அப்போது உங்கள் பொறுப்பு எங்கே போனது?”
“அம்மாவின் இறப்பிற்குப் பின், குடும்பத் தலைவர் என்ற பொறுப்பை எடுத்துக் கொண்டீர்களா?ஜாலியாக எங்களிடம் தள்ளி விட்டு ஒதுங்கிக் கொண்டீர்களே…. அப்போது எங்கே போனது உங்கள் பொறுப்பு?”
“சரி, அதை விடுங்கள் . சஞ்சு பெரிய இக்கட்டில் சிக்கியிருந்த போது, நீங்கள் பொறுப்பான தந்தையாக என்ன செய்தீர்கள்…? அப்போது உங்கள் பொறுப்பு எங்கே போனது?”
“உங்கள் அகங்காரத்தால், சஞ்சு மனஅழுத்ததிற்கு ஆளானாள் என்று தெரிந்த பிறகு என்ன செய்தீர்கள்? அப்போது உங்கள் பொறுப்பு எங்கே போனது?”
“மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னாவது, உங்கள் ஒத்துழைப்பு இருந்ததா?”
விஜயன் முறைக்க,
“உங்களின் ஒத்துழைப்பு இல்லாததால் , வேறு வழியில்லாமல் நாங்கள் வெளியே போக வேண்டிய நிர்பந்தம் வந்தது. அப்போதாவது, பிள்ளைகள் பிரிந்து போகிறார்களே…? என்ற வருத்தம் உங்களுக்கு வந்தா?”
“இல்லையே…! , உங்களை அவமானப்படுத்தி விட்டோம் என்று தான் குதித்தீர்களே தவிர , அந்தப் பிரிவை நிறுத்த எந்த முயற்சியும் செய்ய வில்லையே? அப்போது எங்கே போனது உங்கள் பொறுப்பு?”
“அப்புறமும் கூட, இந்தப் பிரிவு தற்காலிகமானது என்று தான் நினைத்தோம். ஆனால் அதை நிரந்திரமாக்கியது யார்? ஆரம்பக் கட்டத்தில் , புரியாத கோபம் இருந்தாலும், பின்னர் உங்கள் தவறை சிந்திப்பீர்கள், சஞ்சுவின் சூழ்நிலை பற்றி சிந்திப்பீர்கள், சின்னப் பையன் எப்படிச் சமாளிப்பான் என்று உதவிக்கு வருவீர்கள்” என்று எதிர்பார்த்தேன் .ஆனால், நீங்கள் நல்லவேளை தொல்லை விட்டது என்று பொறுப்பைக் கை கழுவி விட்டீர்கள் .ஆனால் இப்போது வந்து பொறுப்பு பற்றி பேசுகிறீர்கள்…” என்றான் ஏளனமாக.
பின், அவள் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு, தேர்ந்தெடுத்த படிப்பில் வெற்றி வாகை சூடிய போதாவது , “உங்கள் கோபத்தை விட்டு வந்தீர்களா? வாழ்த்தினீர்களா….? அப்போது எங்கே போனது உங்கள் பொறுப்பு?”
“இந்த நான்கு வருடத்தில், எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தது, அதில் எதையாவது பிடித்து, தந்தையாக பொறுப்பெடுத்து நாம் இணைய முயன்றீர்களா? உறவை சரி செய்ய முயன்றீர்களா….? இல்லையே…”
“எங்கள் இருவரின் திருமணத்திற்காக விரலையாவது அசைத்தீர்களா? இல்லையே…. இப்போது பொறுப்பு பற்றி பேச வந்துவிட்டீர்களே?” என்று விரக்தியாகச் சிரித்தான்.
பின், “உங்களுக்கு, உங்கள் கோபமும், அகங்காரமும் தான் முக்கியம். உங்கள் சொல் தான் இறுதி சொல்லாக இருக்க வேண்டும் . நீங்கள் சொல்வதும், செய்வதும் தான் சரி.” என்றான் ஆத்திரத்துடன்
“இப்போது கூட திருமணம் என் பொறுப்பு என்று சொல்வது கூட ஆசையால் , பாசத்தால் இல்லை…” என்று வெற்று சிரிப்பு சிரித்தவன் , “உங்கள் பெருமைக்காக , வறட்டு கௌரவத்திற்காகத் தான்.”
விவேக் தன்னை கண்டு கொண்டதை நினைத்து அமைதியானார் . பின்,“ஆமாம் அப்படி தான் . என் கௌரவம் எனக்கு முக்கியம் தான்” என்றார் ஆத்திரத்துடன்.
பின் “என்னடா , விட்டால் ஓவராகப் பேசுகிறாய்?, பொறுப்பை பற்றி வகுப்பு எடுக்கிறாய் ? அப்ப உங்களை நான் வளர்க்கவில்லை, படிக்க வைக்கவில்லை …..?” என்றார் காட்டமாய் ..
“ஆம்..! , செய்தீர்கள். ஆனால் அதைக் கடமையாகச் செய்தீர்கள் . ஒரு நாளாவது அன்பாய் , பாசமாய் பேசியிருப்பீர்களா? ஒரு வாய் சோறு ஊட்டி இருப்பீர்களா?“
விஜயன் முறைக்க,
“உங்களுக்கு மனைவி , மகன் ,மகள் எல்லாம் , உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் . ஜஸ்ட் எ ஸ்டேடஸ் சிம்பல் அவ்வளவு தான். ” என்றான் கசப்புடன்.
“நாங்கள் உயிருள்ள மனிதர்கள் , அவர்களுக்கும் ஒரு மனசிருக்கும் , அதில் ஆசையிருக்கும் , கனவிருக்கும் என்ற எந்த சிந்தனையும் கிடையாது . எங்கள் உணர்வுகளைப் பற்றி உங்களுக்கு எந்த கவலையும் கிடையாது.நீங்கள் சொல்வதைத் தான் செய்ய வேண்டும் இல்லையில்லை நீங்கள் நினைப்பதைத் தான் செய்யவேண்டும்” என்றான் வறண்ட குரலில் .
“இத்தனை நாள் உங்கள் அம்மா இருக்கவில்லை? ஏன் இப்படித்தானே நீங்களும் இருந்தீர்கள்…? இப்போது என்னடா புதிதாக வசனம் பேசுகிறாய் ?” என்றார் எடக்காய் .
“ஆம் , இருந்தோம். முதலில் அம்மா , தன் பெற்றோர்களுக்காக இருந்தார். பின், தன்னை நம்பி இந்த பூமியில் பிறந்த பிள்ளைகளுக்காக , நல்ல அம்மாவாக தன் பொறுப்பில் இருந்து விலகக் கூடாது என்பதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்தார்.” என்று வெற்றுச் சிரிப்பைச் சிந்தியவன்,
“ஊரில் யார் யாருக்கோ சிலை வைக்கிறார்கள் , குழந்தைகளுக்காக உங்களுக்கு அடிமை சாசனம் எழுதித் தந்த என் அம்மாவிற்குத் தான் வைக்க வேண்டும்”
“ரொம்ப பேசுகிறாய் விவேக்…”
“நீங்கள் தான் பேச வைக்கிறீர்கள். அம்மாவின் மறைவிற்குப் பின் , எனக்கு வேலை கிடைத்து விட்டது என்று பறந்து போகத் தெரியாதா…? பொறுப்பில் இருந்து நழுவல் தெரியாதா?”
விஜயன் அதிர்ந்து பார்க்க,
“ஏன் போகவில்லை? என் அம்மாவின் வளர்ப்பு அப்படி” என்று பெருமிதமாகச் சொன்னான்.
பின், “குடும்பம் என்ற கூடு கலையக் கூடாது என்பதற்காக தானே அத்தனையும் பொறுத்துப் போனேன். ஆனால் நீங்கள் அத்தனை எல்லைகளையும் மீறி , உங்களுக்குக் கிடைத்த குடும்பம் என்ற வில்லை. உங்கள் விருப்பத்திற்கேற்ப வளைத்து வளைத்து , அது அதற்குமேல் வளைய முடியாமல் முறித்துவிட்ட பிறகு , இப்போது நான் தான் அப்பா , எனக்கு உரிய மரியாதை வேண்டும் , கௌரவம் வேண்டுமென்றால்…….எப்படி?” என்று வெற்றுப் புன்னகையை சிந்தினான் .
அவர் கோபம் பன்மடங்காக , “இப்போது என்ன தான் சொல்கிறாய்?”
“முறிந்துவிட்டது அப்பா…” என்றான் வலியுடன் .உங்களுக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவற விட்ட பின், இப்போது என்ன செய்யமுடியும்… ?”
“உங்கள் கோபத்தால் , அகங்காரத்தால் , உறவுகளை நண்பர்களை இழந்து, தனி மரமாக இருந்து, என்ன சாதிக்கப் போகிறீர்கள் ? . யோசியுங்கள் , மாறுங்கள் அப்பா…” என்று அவர் குறையை முகத்திற்கு நேராக சொன்னான் .
அவனுடைய பேச்சு சினத்தைத் தூண்ட,”உன்னிடம் அறிவுரை கேட்கவில்லை” என்று சீறினார் .
“உங்கள் குறைகளை உணர்ந்து, மாறத் தயார் என்றால் சொல்லுங்கள் . யோகா , கவுன்சிலிங் என்ற எந்த உதவியென்றாலும் , மகனாய் என் கடமையை , பொறுப்பை ( பொறுப்பு என்பதில் ஒரு அழுத்தத்துடன்) செய்ய தயாராக உள்ளேன் . மற்றபடி உங்கள் வறட்டு பிடிவாதத்திற்கும் , போலி கௌரவத்திற்கும், பொய்யாக எதுவும் செய்ய முடியாது” என்று நிதர்சனமாக மறுத்தான் .
“நீங்கள் அன்பான தந்தையாய் , பொறுப்பான குடும்பத் தலைவனாய் , இனி வரும் சொந்தங்களையும் பேணிக் காக்கும் எண்ணத்தோடு வாருங்கள் , உங்களை வாரி அணைத்துக் கொள்கிறோம் . மற்றபடி…” என்று விவேக் மறுப்பது போல் தலையை ஆட்ட ,
“நாளை சொத்துபத்து என்று எதையும் என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்” என்று தன் கடைசி ஆயுதத்தையும் இறக்கினார் .
அவரை இளக்காரமாக பார்த்தபடி , “நிச்சயமாக வேண்டாம் …” என்றவன், “ நீங்கள் உங்கள் கடமையைக் கூட சரியாக செய்யாவிட்டாலும் , மாற வில்லையென்றாலும் நாங்கள், எங்கள் கடமையையும் , பொறுப்பையும் சரியாகச் செய்வோம்” என்று அவரை ஆழ்ந்து பார்த்தான்.
பின்,” உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இனிமேல் நீங்கள் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறினான்.
அனைத்து அஸ்திரங்களும் தோற்ற பின் , விஜயன் செயலற்று அமர்ந்திருந்தார் .