கதைத்திரி 31

அத்தியாயம் 78

கண்ணன் விசயத்தை அறிந்தவுடன் , மிகவும் மகிழ்ந்தார் . ரொம்ப சந்தோஷம் ரமேஷ் , நல்ல ஜோடி, நன்றாக இருப்பார்கள் என்று வாழ்த்தினார் . ராஜி சந்தோஷ மிகுதியில், ராதாவை கட்டிக் கொண்டார் .

அடுத்து என்ன செய்யலாம்..? என்று பேசத்தான் , வந்தோம் .” என்று ரமேஷ் இழுக்க,

விஜயன்….” 

அதே தான்…” என்றார் ராதா .

நாம் விஜயனை எப்படி அணுகுவது?”

நாம் கட்டாயம் போய் பேசத்தான் வேண்டும். அதற்கு விஜயன் பக்கம் என்ன எதிர்வினை வருகிறதோ? அதைக் கொண்டு அடுத்ததை முடிவு செய்யலாம்.”

சரி , நாளை பசங்ககிட்ட பேசி விட்டு , வெள்ளியன்று , நாம் இரண்டு பேரும் போய்  அவரிடம் பேசி விடுவோம்..” என்று ரமேஷ் சொல்ல , கண்ணனும்  அப்படியே செய்யலாம் என்று ஆமோதித்தார் .

மறுநாள் அனைவரும் விவேக் வீட்டில் கூட , இளைஞர் பட்டாளமும் இணைந்து கொள்ள , இருவரையும் ஓட்டித் தள்ளினர் . அனைவரிடமும் உற்சாகம் கரை புரண்டோடியது .

மெதுவாக கண்ணன் விவேக்கிடம் , அப்பா…. என்று ஆரம்பிக்க , 

ஏன் அங்கிள் , இந்த சந்தோஷ மனநிலையைக் கெடுக்க வேண்டும்?” என்று மனம் வெதும்ப சொன்னான்.

இல்லை விவேக் , உன் அப்பாவிற்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நாங்கள் சரியாகச் செய்ய வேண்டும் .எல்லாவற்றையும் தெளிவாகப் பேசிவிட வேண்டும் , நாளை எந்த குழப்பமும் வரக் கூடாது.”

சரி, என்ன விவரம்? சொல்லுங்கள் அங்கிள்…”

சஞ்சு அவள் முடிவைத் தெளிவாகச்  சொல்லி விட்டாள். உன் அபிப்பிராயம் என்ன ?

ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் என்பது பெரிய துணை , பெரும் பாதுகாப்பும் கூட,  ஆனால் எங்களுக்கு… என்றவாறு வறண்ட புன்னகையை சிந்தினான் . 

 மனிதனைக் கொல்வது மட்டும் கொலையில்லை அங்கிள் , மனதைக் கொல்வதும் கொலைதான் . கடைசி வரை அம்மாவை மட்டம் தட்டி , அசிங்கப்படுத்தி , அவமானப்படுத்தி  நொந்து வெந்து போக வைத்துவிட்டார் . எனக்குத் தெரிந்தவரை, அம்மா, தன் இஷ்டத்திற்கு ஒரு காரியம் கூட செய்தது கிடையாது . அவரைப் பொருத்தவரைக்கும் மனைவி என்பவளுக்குச் சுய சிந்தனையே இருக்கக் கூடாது .  அவர் சொல்வதைச் செய்யும் அடிமை மட்டுமே . அவருடைய  கோபத்திற்கும் , அகங்காரத்திற்கும் , என் அம்மா பலியான பின்பும் , இவர் வருந்தவில்லை , திருந்தவில்லை

அதையும் தாண்டி , சஞ்சுவிற்குச் செய்த கொடுமைக்கு , அவரை மறக்கவும் , மன்னிக்கவும் முடியாது . அவர் கொட்டிய  கொடுமையான வார்த்தைகளால் , சிறு பூவான சஞ்சுவை, மலர்வதற்குள் மொட்டிலே சுருக்கியிருப்பார் , தெய்வாதினமாகத் தப்பி விட்டாள் . அது போதாதென்று, அவள் வாழ்க்கையே கேள்வி குறியாகி , அவள் மனதளவில் ஒடுங்கி இருந்த சமயம் கூட, துணை நிற்க வில்லை

ஐந்தறிவு பறவைகள் கூட தன்  குஞ்சுகளை , எப்படிப் பாதுகாக்கின்றன… !  ஆனால் இவர் சஞ்சுவிற்கு என்ன பாதுகாப்பு தந்தார்? எங்கே துணை நின்றார்?” என்று வருந்தினான் . 

இதையெல்லாம் விட்டால் கூட, போன வாரம் சஞ்சு திருமணம் பற்றி பேசப் போன போதும் , அப்பாவாக , அவர்தான்  முதலில் திருமணப் பேச்சை ஆரம்பித்து இருக்க வேண்டும் . அதையும்  செய்ய வில்லை , நான் கேட்ட பிறகாவது , கடமைக்காகவாவது செய்கிறேன் என்று முன் வந்திருக்கலாம்அதையும் விடுத்து ,  நான் வேண்டாம் என்று போனீர்களே , இன்று என்ன….. வந்தீர்கள்?” என்று இறுமாப்புடன் பேசுகிறார் . 

அடுத்தவர்களைக் காயப்படுத்திகிறோம் என்ற பரிதவிப்பு கொஞ்சம் கூட இல்லை…. மேலும் அவர் கல்யாண விசயத்தை வைத்து , எங்களை  கார்னர் செய்து ,  காலில் விழ வைத்து , அவர் ஈகோவை சமாதனப்படுத்தத்தான் நினைக்கிறார்…” என்று பெருமூச்சு விட்டான்.

இந்தப் பிரிவு , அவர் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை . ஏன் இந்த பிரிவு?தன் தப்பென்ன? பிரிவை சரி செய்ய  என்ன  முயற்சி செய்யலாம்? என்றெல்லாம் நல்வழியில் யோசிக்காமல், தன்னை மீறி சென்றவர்களை  எப்படி அடக்குவது? என்று மட்டுமே சிந்தித்துள்ளார்…”

அனைவரும் செய்வதறியாது, அமைதியாக இருக்க, 

வாழ்க்கையில் சிலர் இப்படித்தான் அங்கிள் , மாற்ற முடியாது . அவர் மாறக் கூடியவர் என்றால் இந்நேரம் எங்களுக்கு எல்லா உறவுகளும் இருந்திருக்குமே…என்று ஒரு வெற்று சிரிப்பைச் சிந்தினான் .  

மேலும், அவர் நடந்து கொண்ட விதத்திற்கு , எனக்கு அப்பா மீது பெரிய அபிப்பிராயமோ , பாசமோ வரப் போவதில்லை. என்னைப் பெற்று , வளர்த்த கடமைக்கு , அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச்  செய்வேன் . அவ்வளவு தான்.”

கடமை என்று எதை குறிக்கிறாய் ?

 அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தயாராக உள்ளேன் . ஆனால் கல்யாணத்திற்குக் கூப்பிட்டு மரியாதை செய்யவதெல்லாம் இல்லை என்றான் தீர்மானமாக .

ஆனால், சஞ்சு திருமணத்திற்குப் போய் பேசினாயே…

என் கடைசி நம்பிக்கையாக , அவர் எங்கள் வாழ்வில் பங்கேற்க ஒரு வாய்ப்பாகவும் , உறவை சரி செய்து கொள்ளும் முயற்சியாகவும் நினைத்தேன் .ஆனால் அவர் என் நம்பிக்கையை  சுக்கு நூறாக உடைத்து விட்டார் . மீண்டும் பொய்த்து விட்டார் என்றான் விரக்தியாக .

அவர் எங்கள் மீதான கோபத்தையும் , வன்மத்தையும் மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறார்.”

எனக்கு கிடைக்காத நிறைவான குடும்பச் சூழ்நிலையை என் குழந்தைகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறேன் . இவருடன் ஒட்டி உறவாடினால் , அது நடக்காது. அவருடன் விலகி நிற்கவே விரும்புகிறேன் என்று தன் முடிவை தெளிவாக அறிவித்தான் .

பின் திரும்பித் தன் தங்கையை பார்க்க , அவளும் சரி என்பது போல் ஆமோதித்தாள் .

அத்தியாயம் 79

நாங்கள் போய் பேசிப் பார்க்கவா?  நாங்கள் எல்லா விசயத்தைமும் முறையாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்..” என்றார் ரமேஷ்.

என்னைப் பொறுத்தவரை இது தேவையில்லாத வேலை , உங்களின் நல்லெண்ணத்தை அவர் புரிந்து கொள்ளப் போவதில்லை . மேலும் உங்களை அவமானப்படுத்தவும்  நிறைய வாய்ப்பு உள்ளது…” என்றான் எச்சரிக்கையாக.

புரிகிறது விவேக் , நாம் சரியாகச் செய்யவில்லை என்று யாரும் கை நீட்டி குற்றம் சொல்லி விடக்கூடாது என்று நினைக்கிறேன் என்றார் ரமேஷ் . 

இதற்கு மேல்  உங்கள் இஷ்டம் அங்கிள் . எந்த வகையிலும் இந்த விசயங்களில் , என் பங்கேற்பை எதிர்பார்க்காதீர்கள்  என்றான் தீர்க்கமாக .

 ஒரு வேளை  விஜயன் நான் முன்னின்று செய்கிறேன் என்றால்…..” 

நடக்கவே நடக்காத விசயம்..” என்று கசந்த முறுவலை சிந்தினான் .

நம்பிக்கையாகப் பேசு விவேக் என்றார் கண்ணன்.

நீங்கள் நினைப்பது போல் நடந்தால் , பூமி தன் சுழற்சியை நிறுத்தி விடும் என்றான் நக்கலாக .

“பரவாயில்லை விடு ,  நாளை நானும் , கண்ணனும் ,  உன் அப்பாவிடம் பேசி விட்டு , அவருடைய முடிவைத் தெரிந்து கொண்டு வருகிறோம் . பின் அதற்கேற்ப அடுத்த காரியங்களைத் தொடங்கலாம்…” என்றார் ரமேஷ் .

மறுநாள்  விஜயன் வீட்டுக்குச்  சென்றனர் .  வாசலில் மணி அழுத்தி காத்திருக்க ,  கதவை திறந்தவர் , இவர்களை கண்டதும் , கண்ணில் ஒரு ஏளனம் கூடியேற , உள்ளே வர அனுமதிப்பது போல் பாதையில் இருந்து விலகி நின்றார் . 

என்ன? சஞ்சு கல்யாணத்திற்காக , உங்களை  தூது அனுப்பியிருக்கிறானா  விவேக் ? என்றார் எகத்தாளமாக.

இல்லை , விவேக் கல்யாணத்திற்காக வந்திருக்கிறோம்…” என்று சொல்ல, குழப்பத்துடன் விஜயன் அவர்களை ஏறிட , 

மற்ற விவரங்களை தவிர்த்து , சஞ்சு  இப்போது முக்கியமான படத்தில் இருப்பதால் , இப்போது திருமணம் வேண்டாம் என்று மறுக்கிறாள் . மேலும். முதலில் அண்ணனுக்கு கல்யாணம் முடிப்போம் என்கிறாள் ..”

அவளெல்லாம் ஒரு ஆளு , அவள் சொல்கிறாள் என்று பேச வந்து விட்டீர்கள்  . வாயில் ஒரு போடு போட்டு , பெண் பிள்ளையாகச்  சொல் பேச்சைக் கேள் என்று சொல்லாமல்…” என்றார் கோபமாய்.

மேலும் கூத்தாடி பிழைப்பிற்குப் பந்தா வேறு , கூத்தாடி வேலை தேவையா? பெண் பிள்ளையாக ஒரு கம்பெனி வேலைக்கு போனோமா? என்று இல்லாமல்…” என்று சலித்தவர், “இதையெல்லாம் நீங்கள் கேட்கமாட்டீர்களா? நீங்கள் எல்லோரும் தானே , அவள் குடும்பம் என்றார் காண்டாய் .

நாங்கள் மற்றவர்கள் உரிமையில் , சுதந்திரத்தில் தலையிட மாட்டோம் . சஞ்சு தன் ஆசையை சொன்னாள் , அதில் இருக்கும் சாதக பாதகங்களை விளக்கி , முடிவை அவள் கையில் விட்டு விட்டோம் என்றார் ரமேஷ் .

உங்களுக்கு என்ன வந்தது ? அடுத்த வீட்டு பெண் தானே…., அதனால் வசதியாக, நாசுக்காக ஒதுங்கிக் கொண்டீர்கள் என்றார் ஏளனமாய்.

கடுப்பான கண்ணன் , நீங்கள் ஏன் அடுத்தவர்கள் உள்ளே வர வாய்ப்பு அளித்தீர்கள்.”

எல்லாம் என் பொண்டாட்டி வளர்த்த லட்சணம் …… ,  அப்பன் பேச்சை மதிக்காமல் ஆடுகிறார்கள் என்றார் சினத்துடன் .

மஞ்சுவை பற்றி பேசியது வருத்தத்தைத் தர , பேச்சை மாற்றியவாறு , விவேக் திருமணத்தைப் பற்றி பேசலாம்…” என்று ஆரம்பிக்க , 

ஏன் துரை வரமாட்டாரோ…?” என்றார் எகத்தாளமாய் .

விவேக்கிற்கு கீத்துவை பேசலாம் என்று நினைக்கிறோம்…” என்று ரமேஷ் சொல்ல ,

அதானே , சோழியன் குடுமியும் சும்மா ஆடுமா? , ஏதோ உதவி செய்வது போல் உள்ளே நுழைந்து, நன்றாக சம்பாதிக்கிற என் மகனைப் பிடித்துக் கொண்டு விட்டீர்கள் என்றார் காட்டமாய் .

என் பெண்ணும் நன்றாக சம்பாதிக்கிறாள் என்றார் ரோஷமாக .

யார் இல்லை என்றது, ஆனால், உங்கள் பெண் மட்டும் இந்த ஊரில் நன்றாக சம்பாதிக்கிறாளா? நாங்கள் எத்தனையோ சாய்ஸ் பார்த்திருப்போம்…” என்றார் எள்ளலாக .

அதே மாதிரி எங்களுக்கும் ஆயிரம் பசங்க கிடைப்பார்கள்…” எனறார் ரமேஷ்  .

அப்புறம் ஏன் என் மகன் ? என்றார் திமிராய் .

பொறுமையை வரவழைத்து கொண்ட ரமேஷ் , பிள்ளைகள் விருப்பப்படுகிறார்கள் என்று உண்மையைச் சொல்ல ,

உங்கள் பெண், தானே மாப்பிள்ளை பிடித்து விட்டாள என்று சொல்லுங்கள்…” என்றார் நக்கலாக .

கோபம் கொண்ட கண்ணன் , ஏன் உங்கள் பையன், தானே பெண் பார்த்து விட்டான் என்று சொல்லமாட்டீர்களா?

இங்கே இருந்திருந்திருந்தால் , இது நடந்திருக்குமா ? பஞ்சையும்  நெருப்பையும் பக்கத்தில் வைத்தால்… இப்படித் தான் ஆகும். .உங்கள் வீட்டுற்கு அருகே தனிக்குடித்தனம் வந்த போதே பெரியவர்களாய் , அறிவுரை சொல்லி அனுப்பி இருக்க வேண்டும் . அதை விடுத்து…,”

 வெளியே தள்ளியதே நீங்கள் தானே , பரிதவித்து நின்ற பிள்ளைகளுக்கு ஆதரவு மட்டும் தான் நாங்கள்  கொடுத்தோம்.. “ என்றார் ரமேஷ்

இந்த நான்கு வருடத்தில் எத்தனையோ நல்ல சந்தர்ப்பங்கள் வந்தன , நீங்கள் கொஞ்சம் எதார்த்ததைப் புரிந்து கொண்டு , பிள்ளைகளை அரவணைத்திருந்தால்…. . நீங்கள் சொல்லும் பஞ்சு , நெருப்பு எல்லாம் இல்லாமல் போயிருக்கும்..” என்றார் கண்ணன் நக்கலாக .

விஜயன் முகம் சிறுக்க , இப்போது எதற்கு வந்தீர்கள் ? , தகவல் தெரிவிக்கவா? என்றார் குதர்க்கமாக .

அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் . நாங்கள் முறையாக மாப்பிள்ளை வீட்டில் பேச வந்திருக்கிறோம்” என்றார் கண்ணன் .

ரமேஷ் தன்மையாக , நம் பிள்ளைகளின் விசேஷம் , இரண்டு குடும்பமும் சந்தோஷமாக செய்ய வேண்டும் என்று பிரியப்படுகிறோம்.”

உங்கள் பிரியத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை .  நான் அவனுடன் பேசிக் கொள்கிறேன் , நீங்கள் கிளம்பலாம்..” என்று வாசலை காண்பித்தார் .

இது நீங்கள், உங்கள் பிள்ளைகளோடு இணைய நல்ல வாய்ப்பு , யோசியுங்கள்..” என்று சொல்லி விட்டு கண்ணன் நகர்ந்தார் .

பின் ரமேஷிடம், “நாம் செய்ய வேண்டியதைச் செய்து விட்டோம். இனி கல்யாணத்திற்கு வருவதும் வராததும் அவர் விருப்பம். நாம் கல்யாண வேளைகளைப் பார்க்கலாம்” என்றார் கண்ணன். 

விஜயன் விவேக்கை போனில் அழைக்க , அப்போது அனைவரும் ரமேஷ் , கண்ணனை எதிர்பார்த்து விவேக் வீட்டில் குழுமியிருந்தனர் .

விவேக் போனை எடுத்தவுடன் கத்தத் தொடங்கினார் , என்னடா , புதுசு பதுசா கதை வருது? கொழுப்பு கூடி விட்டதா ? எவனெவனோ வந்து எனக்கு அறிவுரை சொல்கிறான்…. தங்கச்சி இருக்கும் போது , உனக்கே கல்யாணம்? என்ன ***? என்று சொல்ல கூடாத வார்த்தைகளை சொல்ல , விவேக் அதிர்ந்தான் . அருவருத்தான் .

பின் தன்னை ஒரு நிமிடம் நிதானப்படுத்திக் கொண்டு , உங்களிடம் என் திருமண விசயத்தைப் பேச விரும்பவில்லை , வேறு ஏதாவது பேச வேண்டுமா? என்று கேட்க ,

விஜயன் கண்கள் சிவக்க , மேல்மூச்சு , கீழ் முச்சு வாங்க, டேய்….! என்று கத்த , விவேக் போனை வைத்து விட்டான் . 

அப்போது உள்ளே நுழைந்த அங்கிள்களை  , இது தேவையா? என்பது போல் பார்த்தான் .

நம் பக்கத்தில் நாம் சரியாக செய்து விட்டோம் . இனி அவர் விருப்பம் . நாம் கல்யாண வேலையை தொடங்குவோம் என்றார் கண்ணன்  ஆணித்தரமாக. 

அனைவரும் ஆமோதிக்க ,கல்யாண வேலைகள் வேகமெடுத்தது . 

தொடரும்….