கண்ணன் விசயத்தை அறிந்தவுடன் , மிகவும் மகிழ்ந்தார் . “ரொம்ப சந்தோஷம் ரமேஷ் , நல்ல ஜோடி, நன்றாக இருப்பார்கள்” என்று வாழ்த்தினார் . ராஜி சந்தோஷ மிகுதியில், ராதாவை கட்டிக் கொண்டார் .
“அடுத்து என்ன செய்யலாம்..? என்று பேசத்தான் , வந்தோம்.” என்று ரமேஷ் இழுக்க,
“விஜயன்….”
“அதே தான்…” என்றார் ராதா .
“நாம் விஜயனை எப்படி அணுகுவது?”
“நாம் கட்டாயம் போய் பேசத்தான் வேண்டும். அதற்கு விஜயன் பக்கம் என்ன எதிர்வினை வருகிறதோ? அதைக் கொண்டு அடுத்ததை முடிவு செய்யலாம்.”
“சரி , நாளை பசங்ககிட்ட பேசி விட்டு , வெள்ளியன்று , நாம் இரண்டு பேரும் போய் அவரிடம் பேசி விடுவோம்..” என்று ரமேஷ் சொல்ல ,கண்ணனும் அப்படியே செய்யலாம் என்று ஆமோதித்தார் .
மறுநாள் அனைவரும் விவேக் வீட்டில் கூட , இளைஞர் பட்டாளமும் இணைந்து கொள்ள , இருவரையும் ஓட்டித் தள்ளினர் . அனைவரிடமும் உற்சாகம் கரை புரண்டோடியது .
மெதுவாக கண்ணன் விவேக்கிடம் , “அப்பா….” என்று ஆரம்பிக்க ,
“ஏன் அங்கிள் , இந்த சந்தோஷ மனநிலையைக் கெடுக்க வேண்டும்?” என்று மனம் வெதும்ப சொன்னான்.
“இல்லை விவேக் , உன் அப்பாவிற்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நாங்கள் சரியாகச் செய்ய வேண்டும் .எல்லாவற்றையும் தெளிவாகப் பேசிவிட வேண்டும் , நாளை எந்த குழப்பமும் வரக் கூடாது.”
“சரி,என்ன விவரம்? சொல்லுங்கள் அங்கிள்…”
சஞ்சு அவள் முடிவைத் தெளிவாகச் சொல்லி விட்டாள். “உன் அபிப்பிராயம் என்ன ?”
“ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் என்பது பெரிய துணை , பெரும் பாதுகாப்பும் கூட, ஆனால் எங்களுக்கு…” என்றவாறு வறண்ட புன்னகையை சிந்தினான் .
“மனிதனைக் கொல்வது மட்டும் கொலையில்லை அங்கிள் , மனதைக் கொல்வதும் கொலைதான் . கடைசி வரை அம்மாவை மட்டம் தட்டி , அசிங்கப்படுத்தி , அவமானப்படுத்தி நொந்து வெந்து போக வைத்துவிட்டார் . எனக்குத் தெரிந்தவரை, அம்மா, தன் இஷ்டத்திற்கு ஒரு காரியம் கூட செய்தது கிடையாது . அவரைப் பொருத்தவரைக்கும் மனைவி என்பவளுக்குச் சுய சிந்தனையே இருக்கக் கூடாது . அவர் சொல்வதைச் செய்யும் அடிமை மட்டுமே . அவருடைய கோபத்திற்கும் , அகங்காரத்திற்கும் , என் அம்மா பலியான பின்பும் , இவர் வருந்தவில்லை , திருந்தவில்லை…
அதையும் தாண்டி , சஞ்சுவிற்குச் செய்த கொடுமைக்கு , அவரை மறக்கவும் , மன்னிக்கவும் முடியாது . அவர் கொட்டிய கொடுமையான வார்த்தைகளால் , சிறு பூவான சஞ்சுவை, மலர்வதற்குள் மொட்டிலே சுருக்கியிருப்பார் , தெய்வாதினமாகத் தப்பி விட்டாள் . அது போதாதென்று, அவள் வாழ்க்கையே கேள்வி குறியாகி , அவள் மனதளவில் ஒடுங்கி இருந்த சமயம் கூட, துணை நிற்க வில்லை…
“ஐந்தறிவு பறவைகள் கூட தன் குஞ்சுகளை , எப்படிப் பாதுகாக்கின்றன… ! ஆனால் இவர் சஞ்சுவிற்கு என்ன பாதுகாப்பு தந்தார்? எங்கே துணை நின்றார்?” என்று வருந்தினான் .
“இதையெல்லாம் விட்டால் கூட, போன வாரம் சஞ்சு திருமணம் பற்றி பேசப் போன போதும் , அப்பாவாக , அவர்தான் முதலில் திருமணப் பேச்சை ஆரம்பித்து இருக்க வேண்டும் . அதையும் செய்ய வில்லை , நான் கேட்ட பிறகாவது , கடமைக்காகவாவது செய்கிறேன் என்று முன் வந்திருக்கலாம்…அதையும் விடுத்து , நான் வேண்டாம் என்று போனீர்களே , இன்று என்ன….. வந்தீர்கள்?” என்று இறுமாப்புடன் பேசுகிறார் .
“அடுத்தவர்களைக் காயப்படுத்திகிறோம் என்ற பரிதவிப்பு கொஞ்சம் கூட இல்லை…. மேலும் அவர் கல்யாண விசயத்தை வைத்து , எங்களை கார்னர் செய்து , காலில் விழ வைத்து , அவர் ஈகோவை சமாதனப்படுத்தத்தான் நினைக்கிறார்…” என்று பெருமூச்சு விட்டான்.
“இந்தப் பிரிவு , அவர் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை . ஏன் இந்த பிரிவு?தன் தப்பென்ன?பிரிவை சரி செய்ய என்ன முயற்சி செய்யலாம்? என்றெல்லாம் நல்வழியில் யோசிக்காமல், தன்னை மீறி சென்றவர்களை எப்படி அடக்குவது? என்று மட்டுமே சிந்தித்துள்ளார்…”
அனைவரும் செய்வதறியாது, அமைதியாக இருக்க,
“வாழ்க்கையில் சிலர் இப்படித்தான் அங்கிள் , மாற்ற முடியாது . அவர் மாறக் கூடியவர் என்றால் இந்நேரம் எங்களுக்கு எல்லா உறவுகளும் இருந்திருக்குமே…” என்று ஒரு வெற்று சிரிப்பைச் சிந்தினான் .
“மேலும், அவர் நடந்து கொண்ட விதத்திற்கு , எனக்கு அப்பா மீது பெரிய அபிப்பிராயமோ , பாசமோ வரப் போவதில்லை. என்னைப் பெற்று , வளர்த்த கடமைக்கு , அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வேன் . அவ்வளவு தான்.”
“கடமை என்று எதை குறிக்கிறாய் ?”
“அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தயாராக உள்ளேன் . ஆனால் கல்யாணத்திற்குக் கூப்பிட்டு மரியாதை செய்யவதெல்லாம் இல்லை” என்றான் தீர்மானமாக .
“ஆனால், சஞ்சு திருமணத்திற்குப் போய் பேசினாயே…”
“என் கடைசி நம்பிக்கையாக , அவர் எங்கள் வாழ்வில் பங்கேற்க ஒரு வாய்ப்பாகவும் , உறவை சரி செய்து கொள்ளும் முயற்சியாகவும் நினைத்தேன் .ஆனால் அவர் என் நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்து விட்டார் . மீண்டும் பொய்த்து விட்டார்” என்றான் விரக்தியாக .
“அவர் எங்கள் மீதான கோபத்தையும் , வன்மத்தையும் மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறார்.”
“எனக்கு கிடைக்காத நிறைவான குடும்பச் சூழ்நிலையை என் குழந்தைகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறேன் . இவருடன் ஒட்டி உறவாடினால் , அது நடக்காது. அவருடன் விலகி நிற்கவே விரும்புகிறேன்” என்று தன் முடிவை தெளிவாக அறிவித்தான் .
பின் திரும்பித் தன் தங்கையை பார்க்க , அவளும் சரி என்பது போல் ஆமோதித்தாள் .
அத்தியாயம் 79
“நாங்கள் போய் பேசிப் பார்க்கவா? நாங்கள் எல்லா விசயத்தைமும் முறையாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்..” என்றார் ரமேஷ்.
“என்னைப் பொறுத்தவரை இது தேவையில்லாத வேலை , உங்களின் நல்லெண்ணத்தை அவர் புரிந்து கொள்ளப் போவதில்லை . மேலும் உங்களை அவமானப்படுத்தவும் நிறைய வாய்ப்பு உள்ளது…” என்றான் எச்சரிக்கையாக.
“புரிகிறது விவேக் , நாம் சரியாகச் செய்யவில்லை என்று யாரும் கை நீட்டி குற்றம் சொல்லி விடக்கூடாது என்று நினைக்கிறேன்” என்றார் ரமேஷ் .
“இதற்கு மேல் உங்கள் இஷ்டம் அங்கிள் . எந்த வகையிலும் இந்த விசயங்களில் , என் பங்கேற்பை எதிர்பார்க்காதீர்கள்” என்றான் தீர்க்கமாக .
“ஒரு வேளை விஜயன் நான் முன்னின்று செய்கிறேன் என்றால்…..”
“நடக்கவே நடக்காத விசயம்..” என்று கசந்த முறுவலை சிந்தினான் .
“நம்பிக்கையாகப் பேசு விவேக்” என்றார் கண்ணன்.
“நீங்கள் நினைப்பது போல் நடந்தால் , பூமி தன் சுழற்சியை நிறுத்தி விடும்” என்றான் நக்கலாக .
“பரவாயில்லை விடு , நாளை நானும் , கண்ணனும் , உன் அப்பாவிடம் பேசி விட்டு , அவருடைய முடிவைத் தெரிந்து கொண்டு வருகிறோம் . பின் அதற்கேற்ப அடுத்த காரியங்களைத் தொடங்கலாம்…” என்றார் ரமேஷ் .
மறுநாள் விஜயன் வீட்டுக்குச் சென்றனர் . வாசலில் மணி அழுத்தி காத்திருக்க , கதவை திறந்தவர் , இவர்களை கண்டதும் , கண்ணில் ஒரு ஏளனம் கூடியேற , உள்ளே வர அனுமதிப்பது போல் பாதையில் இருந்து விலகி நின்றார் .
மற்ற விவரங்களை தவிர்த்து , “சஞ்சு இப்போது முக்கியமான படத்தில் இருப்பதால் , இப்போது திருமணம் வேண்டாம் என்று மறுக்கிறாள் . மேலும். முதலில் அண்ணனுக்கு கல்யாணம் முடிப்போம் என்கிறாள் ..”
“அவளெல்லாம் ஒரு ஆளு , அவள் சொல்கிறாள் என்று பேச வந்து விட்டீர்கள் . வாயில் ஒரு போடு போட்டு , பெண் பிள்ளையாகச் சொல் பேச்சைக் கேள் என்று சொல்லாமல்…” என்றார் கோபமாய்.
மேலும் கூத்தாடி பிழைப்பிற்குப் பந்தா வேறு , கூத்தாடி வேலை தேவையா? பெண் பிள்ளையாக ஒரு கம்பெனி வேலைக்கு போனோமா? என்று இல்லாமல்…” என்று சலித்தவர், “இதையெல்லாம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?நீங்கள் எல்லோரும் தானே , அவள் குடும்பம்” என்றார் காண்டாய் .
“நாங்கள் மற்றவர்கள் உரிமையில் , சுதந்திரத்தில் தலையிட மாட்டோம் . சஞ்சு தன் ஆசையை சொன்னாள் , அதில் இருக்கும் சாதக பாதகங்களை விளக்கி , முடிவை அவள் கையில் விட்டு விட்டோம்” என்றார் ரமேஷ் .
“உங்களுக்கு என்ன வந்தது ? அடுத்த வீட்டு பெண் தானே…., அதனால் வசதியாக, நாசுக்காக ஒதுங்கிக் கொண்டீர்கள்” என்றார் ஏளனமாய்.
கடுப்பான கண்ணன் , “நீங்கள் ஏன் அடுத்தவர்கள் உள்ளே வர வாய்ப்பு அளித்தீர்கள்.”
மஞ்சுவை பற்றி பேசியது வருத்தத்தைத் தர , பேச்சை மாற்றியவாறு , “விவேக் திருமணத்தைப் பற்றி பேசலாம்…” என்று ஆரம்பிக்க ,
“ஏன் துரை வரமாட்டாரோ…?” என்றார் எகத்தாளமாய் .
“விவேக்கிற்கு கீத்துவை பேசலாம் என்று நினைக்கிறோம்…” என்று ரமேஷ் சொல்ல ,
“அதானே , சோழியன் குடுமியும் சும்மா ஆடுமா? , ஏதோ உதவி செய்வது போல் உள்ளே நுழைந்து, நன்றாக சம்பாதிக்கிற என் மகனைப் பிடித்துக் கொண்டு விட்டீர்கள்” என்றார் காட்டமாய் .
“என் பெண்ணும் நன்றாக சம்பாதிக்கிறாள்” என்றார் ரோஷமாக .
“யார் இல்லை என்றது, ஆனால், உங்கள் பெண் மட்டும் இந்த ஊரில் நன்றாக சம்பாதிக்கிறாளா? நாங்கள் எத்தனையோ சாய்ஸ் பார்த்திருப்போம்…” என்றார் எள்ளலாக .
“அதே மாதிரி எங்களுக்கும் ஆயிரம் பசங்க கிடைப்பார்கள்…” எனறார் ரமேஷ் .
“அப்புறம் ஏன் என் மகன் ?” என்றார் திமிராய் .
பொறுமையை வரவழைத்து கொண்ட ரமேஷ் , “பிள்ளைகள் விருப்பப்படுகிறார்கள்” என்று உண்மையைச் சொல்ல ,
“உங்கள் பெண், தானே மாப்பிள்ளை பிடித்து விட்டாள் என்று சொல்லுங்கள்…” என்றார் நக்கலாக .
கோபம் கொண்ட கண்ணன் , “ஏன் உங்கள் பையன், தானே பெண் பார்த்து விட்டான் என்று சொல்லமாட்டீர்களா?”
“இங்கே இருந்திருந்திருந்தால் , இது நடந்திருக்குமா ? பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால்… இப்படித் தான் ஆகும். .உங்கள் வீட்டுற்கு அருகே தனிக்குடித்தனம் வந்த போதே பெரியவர்களாய் , அறிவுரை சொல்லி அனுப்பி இருக்க வேண்டும் . அதை விடுத்து…,”
“வெளியே தள்ளியதே நீங்கள் தானே , பரிதவித்து நின்ற பிள்ளைகளுக்கு ஆதரவு மட்டும் தான் நாங்கள் கொடுத்தோம்.. “ என்றார் ரமேஷ்
“இந்த நான்கு வருடத்தில் எத்தனையோ நல்ல சந்தர்ப்பங்கள் வந்தன , நீங்கள் கொஞ்சம் எதார்த்ததைப் புரிந்து கொண்டு , பிள்ளைகளை அரவணைத்திருந்தால்…. . நீங்கள் சொல்லும் பஞ்சு , நெருப்பு எல்லாம் இல்லாமல் போயிருக்கும்..” என்றார் கண்ணன் நக்கலாக .
விஜயன் முகம் சிறுக்க , “இப்போது எதற்கு வந்தீர்கள் ? , தகவல் தெரிவிக்கவா?” என்றார் குதர்க்கமாக .
“அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் . நாங்கள் முறையாக மாப்பிள்ளை வீட்டில் பேச வந்திருக்கிறோம்” என்றார் கண்ணன் .
ரமேஷ் தன்மையாக , “நம் பிள்ளைகளின் விசேஷம் , இரண்டு குடும்பமும் சந்தோஷமாக செய்ய வேண்டும் என்று பிரியப்படுகிறோம்.”
“உங்கள் பிரியத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை . நான் அவனுடன் பேசிக் கொள்கிறேன் , நீங்கள் கிளம்பலாம்..” என்று வாசலை காண்பித்தார் .
“இது நீங்கள், உங்கள் பிள்ளைகளோடு இணைய நல்ல வாய்ப்பு , யோசியுங்கள்..” என்று சொல்லி விட்டு கண்ணன் நகர்ந்தார் .
பின் ரமேஷிடம், “நாம் செய்ய வேண்டியதைச் செய்து விட்டோம். இனி கல்யாணத்திற்கு வருவதும் வராததும் அவர் விருப்பம். நாம் கல்யாண வேளைகளைப் பார்க்கலாம்” என்றார் கண்ணன்.
விஜயன் விவேக்கை போனில் அழைக்க , அப்போது அனைவரும் ரமேஷ் , கண்ணனை எதிர்பார்த்து விவேக் வீட்டில் குழுமியிருந்தனர் .
விவேக் போனை எடுத்தவுடன் கத்தத் தொடங்கினார் , “என்னடா , புதுசு பதுசா கதை வருது? கொழுப்பு கூடி விட்டதா ? எவனெவனோ வந்து எனக்கு அறிவுரை சொல்கிறான்…. தங்கச்சி இருக்கும் போது , உனக்கே கல்யாணம்? என்ன ***? என்று சொல்ல கூடாத வார்த்தைகளை சொல்ல , விவேக் அதிர்ந்தான் . அருவருத்தான் .
பின் தன்னை ஒரு நிமிடம் நிதானப்படுத்திக் கொண்டு , “உங்களிடம் என் திருமண விசயத்தைப் பேச விரும்பவில்லை , வேறு ஏதாவது பேச வேண்டுமா?” என்று கேட்க ,
விஜயன் கண்கள் சிவக்க , மேல்மூச்சு , கீழ் முச்சு வாங்க, “டேய்….! என்று கத்த , விவேக் போனை வைத்து விட்டான் .
அப்போது உள்ளே நுழைந்த அங்கிள்களை , இது தேவையா? என்பது போல் பார்த்தான் .
“நம் பக்கத்தில் நாம் சரியாக செய்து விட்டோம் . இனி அவர் விருப்பம் . நாம் கல்யாண வேலையை தொடங்குவோம்” என்றார் கண்ணன் ஆணித்தரமாக.