மறுநாள் விவேக் ரமேஷைத் தேடிச் சென்றான் . “வாடா விவேக், யோசித்து விட்டாயா ? உன் விருப்பம் என்ன ?” என்றார் ஆர்வமாக .
சற்று தயங்கியவன் , ராதா ஆன்ட்டியையும் கூப்பிடுங்கள் அங்கிள்.”
ராதாவும் வர , ஒரு நிமிட அமைதிக்குப் பின் , “உங்களைப் போல அன்யோனியமான, அழகான ,அன்பான , அனுசரணையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசையாக இருக்கு அங்கிள் .”
இருவரும் அமைதியாக அவனையே பார்க்க,
“என் வாழ்க்கையில் கீத்து வந்தால் , இது நிச்சயமாக நிகழும் என்று மனது அடித்துச் சொல்கிறது. எனக்கு கீத்துவை பிடித்திருக்கு அங்கிள். அதனால் பிளீஸ் ஆன்ட்டி…” என்று ரமேஷில் ஆரம்பித்து ராதாவில் முடித்தான்.
ரமேஷ் ராதாவை ஒரு பார்வை பார்த்து விட்டு , “நன்றாக யோசித்து விட்டாயா? உறுதியாக இருக்கிறாயா?”
“நிச்சயமாக அங்கிள்”என்றான் தீர்க்கமாய் .
“நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை விவேக்…” என்றார் ரமேஷ்
“நானும் தான் அங்கிள் , நீங்கள் திருமணம் பற்றி பேசும் வரை எனக்கும் இந்த யோசனை வரவில்லை . ஆனால் எனக்குப் பிடித்த பெண் என யோசிக்கும் போது கீத்து தான் என் கண் முன்னால் வருகிறாள்.” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான் .
“ஓ….! ,சந்தோஷம் விவேக் . ஆனால் சில விசயங்களை நாம் பேசித் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ”
“கட்டாயமாக அங்கிள் , உங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை , நீங்கள் கேளுங்கள்..” என்றான் நிமிர்வுடன்
“கீத்து வந்தால் உனக்கும் உன் தங்கைக்கான உறவில் பின் நாட்களில் எந்தப் பிரச்சனையும் வராது என்று யோசிக்கிறாயா…?”
“இல்லை என்று சொல்ல மாட்டேன் அங்கிள் , ஆனால் அதையும் தாண்டி கீத்து மீது அன்பிருக்கிறது , பிடித்தமிருக்கிறது.”
“உன் குடும்பப் பிரச்சனைகள் தெரிந்தவர்கள் நாங்கள் , அதனால் கீத்துவோடு திருமணம் என்றால் குழப்பங்கள் இல்லாமல் திருமணம் சுலபமாக முடிந்து விடும் என்று நினைக்கிறாயா…?”
“நிச்சயமாக இல்லை அங்கிள் . சஞ்சுவின் நல்வாழ்விற்காகத் தான் இத்தனை நாள் நிறைய பொறுத்துப் போனேன் . இனி அவர் விசயம் , எனக்கு ஒரு பொருட்டில்லை…” என்றான் தீர்மானமாக,
“என்ன சொல்வதென்று தெரியவில்லை அங்கிள் , எனக்கு உதவி தேவைப்படும் பொழுது , நான் தத்தளிக்கும் பொழுது , நம்பிக்கை இழக்கும் பொழுதெல்லாம் எனக்கு உறுதுணையாக கீத்து இருந்திருக்கிறாள் . பல நேரம் இது எப்படி நிகழ்கிறது என்று ஆச்சரியப்பட்டுள்ளேன். கடந்த காலங்களில் கீத்து மட்டும் இல்லையென்றால் நான் சிரிப்பையே மறந்திருப்பேன் . எங்க அம்மா அனுப்பின தேவதை என்று தோன்றுகிறது அங்கிள். எனக்கு கீத்துவை கொடுத்து விடுங்கள் அங்கிள் ப்ளீஸ்…” என்று நெகிழ்ந்தான் .
அவனுடைய உணர்வுகளை சரியாக உள் வாங்கிக் கொண்டவர்கள் , தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டார்கள் . பின், “எங்களுக்கு விருப்பம் தான் விவேக் . கீத்துவிடம் பேசி விட்டு சொல்கிறேன் . நல்லதே நடக்கும்…”
“ரொம்ப நன்றி அங்கிள்…” என்று கட்டிக் கொண்டான் . பின், “ஒரு சின்ன வேண்டுகோள் , பதில் எதுவாக இருந்தாலும் எங்கள் நட்பில் எந்த விரிசலும் வராதபடி கையாளுங்கள் பிளீஸ்…. . எனக்கு கீத்துவின் நட்பு ரொம்ப முக்கியம் அங்கிள்…” என்று கிளம்பினான் .
அத்தியாயம் 77
“உனக்கு சந்தோஷம் தானே ராதா?” என்று ரமேஷ் கேட்க ,
“என் மஞ்சுவோட பையன், என் கண் முன்னாடி வளர்ந்த பையன். இதை விட வேறு நல்ல பையன் எங்கு கிடைப்பான் . எனக்கு டபுள் ஓ.கே.” என்றாள் ராதா உற்சாகமாய் .
“சரிம்மா , கீத்துவிற்குச் சம்மதம் என்றால் முடித்துவிடுவோம்..”
“விஜயன் கஷ்டம் தான். கீத்து விசயம் சமாளித்து விடலாம்.”
“எப்படி?”
“கீத்துவிடம் பேச்சை ஆரம்பிப்போம் , அவளின் ரியாக்க்ஷனை வைத்து , எப்படி கையாளவது என்று முடிவு செய்வோம் .இந்தத் திருமணப் பேச்சைக் கேட்டு, அவள் யோசித்தால் , நாமாக ஆரம்பிப்பது போல் பேசிவிடலாம் , அவளிடம் விருப்பம் தெரிந்தால் , உண்மையைச் சொல்லி விடலாம்…”
ராதா குழப்பமாகப் பார்க்க , “விவேக்கிடம் இருந்து விருப்பம் வந்தது என்ற உண்மையை அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்…” என்றார் விளக்கமாக .
ராதாவும் புரிந்து கொண்டு, சந்தோஷமாகப் புன்னகைத்தார் .
மாலை ரமேஷ், “விவேக்கை உனக்குப் பார்க்கலாம் என்று யோசிக்கிறோம் கீத்து…” என்று ஆரம்பிக்க, உடனே கீத்துவின் முகம் மலர்வதைக் கண்டனர் .
“என்ன அப்பா திடீரென்று ?”
கீத்துவின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட ராதா , “விவேக் பிரியப்படுகிறான் , உனக்குச் சம்மதமா… ?”
இதைக் கேட்டவுடன் கீத்துவின் முகம் ஆயிரம் பாதங்களைக் காட்ட,
“கீத்து…” என்று ராதா ஊக்க , சுய உணர்வு பெற்றவள் , “குரு கேட்டாரா அம்மா…?” என்று கண்கள் மின்ன கேட்டாள் .
“ஆம்” என்று தலையாட்டியவுடன், “எனக்கு பிடித்திருக்கு அப்பா , டபுள், டரிப்பிள் ஓ.கே. அம்மா” என்று ராதாவின் கன்னத்தில் முத்தம் வைத்தாள் .
“கீத்து , எங்கள் விருப்பம் கேட்க மாட்டாயா?” என்று வம்பு செய்ய ,
கீத்து சிரித்தபடி , “உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இந்தப் பேச்சே வந்திருக்காது அம்மா” என்று கண்ணடித்தாள் .
ராதா செல்லமாக அடி போட்டாள் . பின், “உனக்கு முதலிலேயே விருப்பமா? ஏன் சொல்லவில்லை…?” என்று அடுத்தடுத்து கேள்விகளை எழுப்ப,
“நீங்கள் திருமணப் பேச்சு ஆரம்பித்த பின் தான் குருவை பிடித்திருப்பது புரிந்தது . எந்தச் சிக்கலும் இல்லாமல் கையாள வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்…” என்று இழுக்க ,
தன் பெண்ணின் பொறுப்பையும், பொறுமையையும் நினைத்து மகிழ்ந்தார்கள் .
ரமேஷ் சிரித்துக் கொண்டே , “எங்களுக்கு முழு சம்மதம் . கண்ணன் அங்கிள்கிட்ட பேசி விட்டு , அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுப்போம்…”
கீத்துவும் சந்தோஷமாகத் தலையாட்டினாள் .
“குருகிட்ட பேசனும் அப்பா , வீட்டுக்குப் போய் பேசி விட்டு வரட்டுமா….?” என்று கண்களில் ஆசையை தேக்கிக் கொண்டு வேண்ட ,
“சரிம்மா , ஆனால் விவேக் பத்திரம் கீத்து , நீ செய்யப் போகிற கூத்தில் பயந்து விடப் போகிறான்….” என்று ராதா வம்பிழுக்க ,
“அம்மா…” என்று செல்லமாக முறைத்து விட்டு , சஞ்சு வீட்டுக்குச் சென்றாள்
வீட்டிற்குள் நுழைந்தவள் , ஹாலில் அமர்ந்திருந்தவனை பார்த்து , “என்ன குரு ? என்னவோ பேசியிருக்கீங்க…?” என்று கோபமாக கேட்க ,
விவேக் முதலில் அதிர்ந்தான் , “கீத்து…. “ என்று ஆரம்பித்த பொழுது , அவள் குரலில் இருந்த துள்ளலை , முகத்தில் இருந்த மலர்ச்சியைக் கவனித்தவன்,சற்று நேரம் அவள் ஆட்டத்தில் இணையலாம் என்று முடிவு செய்தவன் , “என்ன கீத்து?” என்று பரபரக்க ,
“அப்பா கிட்ட என்ன பேசினீர்கள் ?” என்றாள் மிடுக்காக,
“என்ன பேசினேன் ?” என்று அதையே திருப்பிக் கேட்க ,
“குரு…” என்று பல்லை கடித்தாள்.
“என்ன கீத்து… ?” என்று அவன் அதே பல்லவியை பாட ,
“வேண்டாம் குரு…” என்றாள் கடுப்பாய் .
அவளின் கடுகடுப்பில் கலகலத்தவன் , அவளை ஊடுருவிப் பார்த்தபடி “எனக்கு கீத்துவை பிடிச்சிருக்கு அங்கிள் . உங்கள் பொண்ணை எனக்கே , எனக்கென்று கொடுத்து விடுங்கள் . அவள் என் வாழ்க்கையில் வந்தால் , என் வாழ்க்கை வண்ணமயமாகும் , வசந்தமாகும் என்றேன்…” என்றான் ஆழ்ந்த குரலில் ,
“குரு…” என்று சிலிர்த்தாள் .
விவேக் கண்ணை திருப்பாது கீத்துவையே ஆழ்ந்து பார்க்க ,” குரு… “ என்று சிணுங்கினாள். பின் “எப்படி குரு?”என்று கேட்க ,
“என்ன? எப்படி?”என்று குரு திருப்பிக் கேட்க ,
“அஹான்…!” என்று வடிவேலு பாணியில் சொன்னாவள் , “குருநாதா எப்படி பல்பு எரிந்தது?” என்று கடுப்புடன் கேட்க,
“முதலிலெல்லாம் பெரிதாக யோசிக்கவில்லை , உனக்குத் திருமணம் என்ற பேச்சு அடிப்பட்டவுடன் மனதில் ஒரு படபடப்பை உணர்ந்தேன் . அப்புறம் நீ என்ன சொன்னாய்? என்று தெரிந்தே கொள்ள வேண்டும் என்ற ஆவல் வந்தது. நீ சரி சொன்னதை அறிந்தவுடன் , ஒரு இனம் புரியாத வெறுமை வந்தது. அதைத் தோழி தள்ளி போவதால்… என்று தான் முதலில் யோசித்தேன்…”
பின், “என் திருமண பேச்சு ஆரம்பித்து , உன் விருப்பம் என்ன? என்று கேட்ட போது ,
சட்டென்று என் மனசுக்குள் வந்து புன்னகைத்தாய், பின் என்னை விட உன்னை புரிந்தவர்கள் யாராவது இங்கே உண்டா? என்று கண்கள் விரிய கேட்டு , அப்படியே இந்தக் கண்களுக்குள் என்னை இழுத்துக் கொண்டாய்…” என்றான் மென்மையாக .
“முதலில் நீ என் மனைவியாக வந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று தோன்றியது , மேலும் யோசிக்க , யோசிக்க , நீ தான் , நீ மட்டும் வேண்டும் என்று மனம் அடம் பிடித்தது. அப்புறம் உன்னை தவிர வேறு யாரும் மனைவியாக வரவே முடியாது என்று தீர்மானமாகத் தோன்றியது” என்று மெல்ல சிரித்தான்.
“எப்படி குரு? தைரியமாக அப்பாவிடம் கேட்டீர்கள்…” என்றால் ஆவலாய்
“இதுவரை நம் நட்பிற்கு , நாம் நேர்மையாக இருந்திருக்கிறோம் . அதேபோல் நம்மை நம்பும் உன் பெற்றோர்களுக்கும் உண்மையாக இருந்திருக்கிறோம் . இனிமேலும் அப்படியே இருக்க வேண்டும் என்றும் தோன்றியது .அப்புறம் என்ன? உடனே அவர்களிடம் பேசி விடுவோம் என்று முடிவு செய்தேன் . ஆனால் என் தைரியத்திற்கு முக்கிய காரணம் , அவர்கள் சரியாக புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை தான் . இதுவே என் அப்பாவாக இருந்தால் நிச்சயமாக பேசியிருக்க மாட்டேன் , அவர் நம் நட்பையே அசிங்கப்படுத்தியிருப்பார்…” என்றான் ஒரு பெருமூச்சுடன் .
அவன் பேச்சைக் கேட்டு , தன் பெற்றோரை நினைத்துப் பெருமிதமானாள் .
“நானோ … , அவர்களோ …வேண்டாம் என்றிருந்தால்….” என்று இழுக்க ,
“கான்ஃபிடன்ட் தான் கீத்து , அக்மார்க் நல்ல பையனை வேண்டாம் என்று சொல்ல மனசு வருமா..?” என்று புன்னகை பூத்தான் .
“ரொம்பத்தான் . நான் உங்களை நண்பனாக தான் நினைத்தேன் என்று சொல்லியிருந்தால்…” என்று கேள்விக்கனையை தொடுக்க ,
“சமீபமாக உன் பார்வை மாறியதைக் கவனித்தேன் . என்னைக் கவனித்துப் பார்ப்பதும் , நான் பார்க்க முற்படும் போது , வேறு எங்கோ பார்ப்பதும்…” என்று அவன் சிரிக்க,
“குரு… “ என்று வெட்கப்பட்டாள் . “ஆனால் நான் உங்களில் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லையே…” என்று ஏக்கமாகச் சொல்ல ,
“முதலில் அதை பெரிதாக யோசிக்கவில்லை , பின் உன்னிடம் வேறு மாற்றங்களைக் காணும் போது , ஏதோ இருக்கிறது என்று உணர்ந்தேன் . ஆனால் என்னுடைய சூழ்நிலை …. , சஞ்சு…” என்று தயங்கியவன் , “என்னை ஆழமாக யோசிக்க விடவில்லை…”
“எனக்குத் திருமணம் என்று யோசிக்க ஆரம்பித்தவுடன் , பளிச்சென்று உன் பார்வைக்கான அர்த்தம் புரிந்தது” என்று காலரை தூக்க ,
“பல்பே லேட்டாதான் எரிந்திருக்கிறது , இதில் பெருமை வேறு…” என்று கீத்து கடுப்படிக்க ,
“நானாவது பல்பு எரிந்தவுடன் சொல்லி விட்டேன் , அங்கே..” என்று குறுகுறுவென பார்க்க ,
“வாழ்க்கை துணை என்று யோசித்தவுடன் , நீங்கள் தான் என் கண்ணுக்குள் வந்தீர்கள் . முதலில் பயந்து போனேன் . நம் குடும்பங்களுக்கிடையே இருக்கும் பிணைப்பு , நம் நட்பு என்று பல விசயங்கள் மனதில் வந்து பதட்டத்தைத் தந்தது . இதை எப்படி அணுக வேண்டும் என்ற குழப்பமும் , பயமும் இருந்தது . இது சரியா? தப்பா? என்ற எண்ணமும் ஓடியது .அப்படிபட்ட சூழ்நிலையில் தான் , என்னை அறியாமல் , உங்களை ஆழ்ந்து , நட்பு என்ற எல்லை கோட்டைத் தாண்டி கவனிக்க ஆரம்பித்தேன் , அப்படி கவனித்த போது….” என்று நிறுத்தினாள் .
விவேக்கிற்குச் சுவாரசியம் கூட , “கவனித்த போது…”
“இவனை தவிர நமக்கு ஏற்ற புன்னகை மன்னன் யாருமில்லை என்று தோன்றியது…” என்று கண் சிமிட்ட,
“புன்னகை மன்னன்…”
“இவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கக் கூடாது குருநாதா…” என்று செல்லமாக அழுத்தபடி,”புன்னகை மன்னன் என்றால்….? என்றபடி, சற்று தள்ளி அமர்ந்து “இளிச்சவாயன்” என்று குறும்பாகத் தலையை சாய்த்துச் சிரித்தாள் .
“கீத்து…” என்று அவனும் சிரிப்பில் இணைந்தான் .பின்,“சிரியஸாக பேசுடா…” என்று விவேக் தூண்ட ,
“உங்களை ஏற்கனவே பிடிக்கும் , உங்களை ஆழ்ந்து கவனித்த பின் , இந்த நல்லவனை மிகவும் பிடித்து விட்டது.”
“ஏன் சொல்லவில்லை.. ?”
“உங்களிடம் நான் எந்த பிரதிபலிப்பையும் பார்க்க வில்லை என்பது முக்கிய காரணம் . அடுத்தது நம் குடும்பங்களுக்கிடையே இருக்கும் பிணைப்பினால் , எதையும் தப்பாக செயல்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணமும் , சட்டென்று சொல்லவிடவில்லை . ஆனால் சீக்கிரமாகவே சொல்லியிருப்பேன் , அதற்குள் இந்த ட்ரைனிங் வர , இதை முடித்து விட்டு வந்து நிதானமாகப் பேசுவோம் என்று முடிவு செய்து பெங்களூர் கிளம்பிவிட்டேன் .
ஆனால், அப்படியும் உங்களிடம் சொல்லாமல் இருப்பது , ஏதோ ஒரு தவிப்பைத் தர , அங்கிருந்து அழைத்தேன் . அன்று தான் உங்கள் அப்பா “சம்பவம்” செய்திருந்தார் . நீங்கள் எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை என்பதை புரிந்து கொண்டேன் . நேரில் பேசுவோம் என்ற எண்ணத்தில் , உங்களை ஆறுதல் படுத்தி விட்டு , போனை வைத்து விட்டேன்.”
“சாரி கீத்து , உன்னுடைய உணர்வுகளை , எண்ணங்களை புரிந்து கொள்ள முயலாமல் , என்னுடைய தவிப்புகளை மட்டுமே புலம்பியுள்ளேன்…” என்று வருத்தபட ,
“விடு மச்சி , அதற்குத் தானே நண்பன்…” என்று சிரிக்க ,
“தாங்கஸ் கீத்து “என்று கை பற்றினான் .
கைகளை காட்டி , கீத்து புருவங்களை தூக்கி வினவ ,
“இதுக்கு இப்ப ரைட்ஸ் உண்டு” என்றான் கெத்தாக .
கீத்துவும் முகம் மலர சிரித்தாள் . விவேக் ஆசையாகப் பார்த்தான் .
விவேக்கின் பார்வை மாற்றத்தால் வெட்கம் வர , கீத்து அமைதியானாள் .
கீத்துவை தன் பக்கம் இழுத்து , கைகளில் அழுத்தம் கூட்டி , கண்களை ஆழ்ந்து பார்த்து , “நிறைய காதலுடன் , நல்ல புரிதலுடன் , பரஸ்பர மரியாதையுடன் திகட்டதிகட்ட வாழ வேண்டும் என்று ஆசையாக இருக்கு கீத்து..” என்றான் மென்மையாக .
“நிச்சயமாக குரு” என்றாள் உறுதியுடன்.
“இதுவரை நீ தான் என்னைக் கவனித்துக் கொண்டாய் , எனக்குப் பார்த்துப் பார்த்து செய்தாய் , அதற்கும் சேர்த்து வருங்காலங்களில் உன்னைப் பார்த்துக் கொள்வேன்..” என்றான் ஆத்மார்த்தமாய் .
அவனைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் , கீத்து மெல்ல புன்னகைக்க,அப்போது சஞ்சு உள்ளே வர , சட்டென்று விலகி அமர்ந்தனர் .
அவர்களின் முகப் பொலிவையும் , அவர்களின் தடுமாற்றத்தையும் கண்டு கொண்டவள் , அவர்களுக்கு எதிரே அமர்ந்து , “என்னடா நடக்குதிங்கே ?” என்று வடிவேல் டயலாக்கை அள்ளி விட ,
விவேக் வெட்கப்பட்டு சிரிக்க , அதைக் கண்ட சஞ்சு , “அண்ணா….” என்று மேலும் சிரிக்க ,
“அடங்குடி…” என்று கீத்து வாயைப் பொத்த , வேகமாக கையை விலக்கிய சஞ்சு , “ஆல் டிடைலஸ் , ஐ வான்ட் நௌ” என்று விசாரனையைத் துவங்க ,
விவேக்கிற்குப் போன் வர , “ஒரு நிமிடம்…” என்றவாறு தப்பித்தோம் என்று எழுந்து போனான் ,