கதைத்திரி-29

அத்தியாயம் 74

மறுநாள் சஞ்சு வர , மெதுவாக விவேக் விசயத்தை ஆரம்பிக்க , சஞ்சு உடனே மறுத்தாள் . “ஒரு வருடம் போகட்டும் அண்ணா.”

“ஏன் வேண்டாம் என்கிறாய் சஞ்சும்மா ?”

“இப்போது தான் இத்துறையில் , நான்  வளர்ந்து வருகிறேன் . மேலும் எங்கள் டீமின் அடுத்த பிராஜெக்ட் ஒரு பீரியடு படம் , நிறைய கற்றுக் கொள்ளலாம் . பயங்கர சவால் நிறைந்ததாக இருக்கும். இதில் பணியாற்ற மிகவும் ஆவலாக இருக்கிறேன் . அதனால் இப்போதைக்கு கல்யாணம் என்ற கமிட்மென்டிற்குள் போக விரும்பவில்லை.”

“இது சரியான பதில் இல்லை டா , ஒன்று மாற்றி ஒன்று என்று புதிய  சவாலான , விருப்பமான பிராஜெக்ட்கள்  வந்து கொண்டே தான் இருக்கும் . வேலைகளையும் வாழ்க்கையும் குழப்பிக் கொள்ளக் கூடாது சஞ்சும்மா . இரண்டையும் சரியாகப் பேலன்ஸ் செய்ய வேண்டும்.”

“புரியுது அண்ணா , கட்டாயமாக இந்த பீரியட் படம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன்.”

“சரி சஞ்சு ,  மாலை அனைவரும் வீட்டுக்கு வருகிறேன் என்றார்கள் . அப்போது பேசுவோம்” என்று முடித்துக் கொண்டான் .

மாலை ராதா ஆன்ட்டி பேச்சை ஆரம்பிக்க , அண்ணனிடம் சொன்னதையே விவரித்தாள் .

“இல்லை  சஞ்சும்மா , நீ ஒரு வருடம் தள்ளுகிறாய் , அதற்கு அப்புறம் ஆரம்பித்து , நமக்கு பிடித்த மாதிரி வரன் வந்து முடிய மேலும் ஒரு வருடமாகும் . அதற்குப் பிறகு விவேக்கிற்குப் பார்த்து முடிக்க வேண்டும் என்றால் விவேக்கிற்கு வயது கூடி விடும்..” என்று  நிதர்சனத்தை கண்ணன்  சொல்ல,

“அதற்குத் தான் அங்கிள் , அண்ணாவிற்கு முதலில் பார்த்து முடியுங்கள்  என்கிறேன்.”

“இல்லைடா , அது சரியாக வராது .தங்கை இருக்கும் போது அண்ணனுக்குத் திருமணம் செய்தால் நன்றாக இருக்காது , அதில் பல சிக்கல்கள் இருக்குது சஞ்சும்மா…” என்று ரமேஷ் விளக்க ,

“நீங்கள் சொல்ல வருவது புரியுது அங்கிள் .  திருமணமானாலும் அண்ணா , அவனுடைய பொறுப்பில் இருந்து நழுவ மாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று உடைத்துப் பேசினாள் .

“நாங்கள் யாரும் விவேக்கை  சந்தேகப்படவில்லை , எங்களுக்கு அவன் மீது நூறு சதவீதம் நம்பிக்கை உள்ளது , நாங்கள் உனக்கு எதார்த்ததைத் தான் புரிய வைக்க முயலுகிறோம்” என்றார் ராஜி .

“திருமண வாழ்க்கை குறித்த புரிதல் எனக்கு இருக்கிறது” என்று சிரித்தவள், “நம்ம வீட்டில் தேவையான ப்ரைவசியும் இருக்கிறது.” என்று சிரிப்பை மேலும் விரித்தாள்.

“சஞ்சு…* என்று ராதா செல்லமாக அடி போட,

 “அண்ணாவிற்கு முதலில் திருமணம் செய்ய சொல்ல, வேறொரு  மிக முக்கிய காரணமும் இருக்கிறது…” என்று அனைவரையும் பார்த்தாள் . 

அனைவரும் அவளையே கூர்ந்து பார்க்க,

“என் திருமணத்தில் அப்பாவின் பங்கு எந்த வகையிலும் வேண்டாம் . என் திருமணத்தை அண்ணனும் , அண்ணியும் இணைந்து செய்ய வேண்டும் என்று பிரியப்படுகிறேன்” 

அனைவரும் அதிர்ந்து பார்க்க, 

“அப்பா செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும், ஏன் அதற்கு மேலேயும் அண்ணன் தான் செய்திருக்கிறான் . இனிமேலும் அவன் தான் செய்வான் . அப்புறம் அப்பா எதற்கு?” 

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அனைவரும் மௌனமாக இருக்க, 

 “சந்தோஷமாகத் துள்ளித் திரிய வேண்டிய வயதில் , ஆசைப்பட்ட இடத்திற்குப் போய் , நினைத்த மாதிரியெல்லாம் கவலையற்று இருக்க வேண்டியவன் , ஆசைப்பட்ட படிப்பைக் கூட படிக்க முடியாமல், தன் வேலைக்கான முன்னேற்றத்தை விடுத்து , குடும்பப் பொறுப்பைச் சுமந்த என் அண்ணன் தான் எனக்கு அப்பா ,அவன் இல்லையென்றால் இன்று நான் இல்லை, அண்ணா தான் எனக்கு அப்பா….” என்று தேம்பினாள் .

விவேக் வேகமாக வந்து அணைத்துக் கொண்டான் . 

அனைவருக்கும் அவளின் நியாயமும், கோபமும் புரிந்தது.

 “சரி டா,   உங்கள் அண்ணனுக்கே  முதலில் முடிக்கலாம்” என்று ஆரம்பிக்க,

விவேக் வேகமாகப் பேச வர , 

விவேக்கைத் தடுத்து விட்டு , “ நீ சொல்வது , நூறு சதவீதம் சரி தான் , அண்ணனுக்கு மரியாதையை  தர வேண்டும் என்று நினைப்பதுவும் சரி தான் ,  ஆனால் அப்பா வேண்டாம்  என்பதெல்லாம் பெரிய முடிவு சஞ்சும்மா…” என்றார் ராதா .

“இதைக் கேட்டு , கடகடவென சிரித்த சஞ்சு , அம்மாவின் மறைவே அவரை மாற்றாத போது , என் வாழ்வே நிலைகுலைந்து இருந்த போதும் மாறாதவர்… இன்று  நாம் போய் கல்யாணத்தைப் பற்றி பேசினால் , அப்படியே சந்தோஷமாக முன்னெடுத்து செய்வார் என்று நினைக்கிறீர்களா ?”

எல்லோரும் பதில் பேச முடியாமல் அமைதியாக,

“அவர் சுயநலவாதி ஆன்ட்டி , அவருக்கு தான் நினைத்தது நடக்க வேண்டும் . அவர் பேச்சு தான் குடும்பத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் . அவர் சொல்வதையே அனைவரும் கேட்க வேண்டும்.    நீங்கள் கல்யாண பேச்சயெடுத்தால் , அவர் இதை வைத்து என்ன காரியம் சாதிக்கலாம் என்று தான் பார்ப்பார்.  இந்தச் சந்தர்ப்பத்தை நினைத்துப் பல கணக்குகள் போட்டு வைத்திருப்பார்” என்றாள் தெளிவாக.

தங்கையின் புரிதல் கண்டு அதிர்ந்தான் .

இடைபுகுந்த ராஜி, “பேசிப் பார்க்கலாமே?” என்று இழுக்க 

“எனக்காக என் அண்ணா ஒன்றும் அவர் காலில் போய்  விழத் தேவையில்லை . என்னால் அவனுக்கு இனி பெருமையும் , மகிழ்ச்சியும் மட்டுமே கிடைக்க வேண்டும் . என் வாழ்க்கையை சீரழிவுக்குள் தள்ள இருந்தவரை ,  என்னை பெற்றவர் என்ற ஒரே காரணத்திற்காக மன்னிக்கவும் , மறக்கவும் தயாராக இல்லை. அவருக்கு மரியாதை தரவும் விரும்ப வில்லை. அவருடைய பங்கு என் வாழ்வில் என்றும் வேண்டாம் . அன்றே என் பட்டமளிப்பு விழாவிலே நான் தெளிவாகச் சொல்லி விட்டேனே , நீங்கள் எல்லோரும் தான் என் குடும்பம் . இந்தக் குடும்பத்தை ஏற்க தயாராக இருக்கிற மாப்பிள்ளை எனக்கு போதும்” என்றாள் தீர்மானமாக .

பக்குவமில்லாமல் குழந்தைத்தனமாக அடம்பிடித்து , பயந்த சுபாவமாக  கீத்துவை  சார்ந்திருந்து , மனதளவில் நம்பிக்கை குன்றி தற்கொலைக்கு முயன்று , வீட்டை விட்டு வெளியே வரவே பயந்து , வெளி மனிதர்களை சந்திக்க அஞ்சிய  சஞ்சு… , இன்று இத்தனை தெளிவாக , தீர்மானமாக முடிவெடுக்கும் நிலையில் பார்த்த பின் அனைவரும் வியந்தனர் . விவேக் பேசற்று நின்றான் .

“எங்க குட்டி சஞ்சுவா இது? உன்னை இப்படிப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்குதுடா…” என்றார் ரமேஷ் .

 “நீங்கள்  எல்லோரும் என் கைப்பிடித்து  வழி நடத்தியதால் மட்டுமே சாத்தியமாயிற்று  அங்கிள்” என்று கண்கலங்கினாள் .

கண்ணன் சுதாரித்து , “சரிம்மா , பழசை பேச வேண்டாம் ,  நீ சொல்கிற மாதிரியே விவேக்கிற்கே முதலில் முடிப்போம்”  என்றவர், “சொல்லு விவேக் , உனக்கு எந்த மாதிரி பெண் வேண்டும்?” 

“நான் இதுவரை அப்படியெல்லாம்  யோசித்தது இல்லை அங்கிள். சஞ்சு நன்றாக வேண்டும். அம்மா ஆசைப்பட்ட மாதிரி ஜெயித்து , சுயமாக அவள் காலில் நிற்க வேண்டும் , பின் அவள் மனதிற்குப் பிடித்த மாதிரி நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தர வேண்டும் என்று மட்டுமே என் எண்ண ஓட்டமிருந்தது . இனிமேல் தான் யோசிக்க வேண்டும்..” என்று மெதுவாக சொல்ல , 

சஞ்சு அனைவரையும் அர்த்தமுள்ள பார்வை பார்க்க, தாங்கள் இதைக் கவனிக்க தவறியதை நினைத்து வருந்தினர் .

சூழ்நிலையின் கனத்தை உடைக்கும் பொருட்டு , “உனக்கு இரண்டு நாள் டைம் , உன் கனவு தேவதையை யோசித்துச் சொல் விவேக்…” என்று கண்ணன் கேலியாகப் பேச , அனைவரும் சிரித்தனர் .

அத்தியாயம் 75

மறு நாள் விசயமறிந்து கீத்து , சஞ்சுவை வந்து கட்டிக் கொண்டாள் . “நேற்று நீ கலக்கிட்ட போல , நான் தான் இல்லாமல் போய்விட்டேன்…” என்று வருந்தினாள் .

“ஏன் நீ மட்டும் தான் குருவிற்காக யோசிப்பாயா? நாங்களும் எங்க அண்ணனைப் பார்த்துக் கொள்வோம்” என்று கெத்துக் காட்டினாள் சஞ்சு.

“சந்தரமுகி…” என்று கீத்து  கலகலக்க , அங்கே சிரிப்பலை பரவியது.

“சரி, எங்கள் கதையை விடு ,  நீ சொல் , உன் கண்ணாளன் எப்படி இருக்க வேண்டும் ?”

 ஒரு கண்னை மூடி கீத்து குறும்பாக யோசிப்பது போல் பேச்சைத் தவிர்க்க,,

“என் அண்ணன் மாதிரி இருந்தால் ஓ.கே.யா?” என்று சஞ்சு கண்ணடிக்க ,

கீத்து ஆச்சரியமாகப் பார்த்து , “எப்படி சஞ்சு?”

“நான் உன் தோழியாக்கும்…” என்று சஞ்சு காலரை தூக்க , கீத்து லேசாக அசடு வழிந்தாள் .

“முடியலை கீத்து , வழியுது…” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க , 

“சஞ்சு…” என்று கீத்து சிணுங்க , 

சஞ்சு நெஞ்சைப் பிடிக்க , கடுப்பான கீத்து இரண்டு அடி போட்டாள் .  

“சொல் கீத்து , எப்போ?  எப்படி நிகழ்ந்தது ?” என்று ஆர்வமுடன் கேட்க , 

“தெரியவில்லை  , குருவோடு பழகும் போது இப்படியெல்லாம் யோசித்தது கிடையாது . சமீபத்தில் வீட்டில் கல்யாண பேச்சு ஆரம்பித்தவுடன் , நமக்கான பீஸ் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்த போது, குருநாதர் முகம் தான் பளிச்சென்று மனதில் தோன்றியது .  என்னடா  வம்பாக போச்சே? என்று உட்கார்ந்து உட்கார்ந்து யோசிக்க….. ,”

“என்னாச்சு?” என்று சஞ்சு ஆர்வமுடன் கேட்க,

 “ குரு தான் நமக்கான பீஸ் என்று உறுதியாகத் தெரிந்து விட்டது” என்று கலகலத்தாள் . 

கடுப்பான சஞ்சு, “ஜோக்ஸ் அப்பார்ட் , ஒழுங்காகச் சொல்லு கீத்து…” என்று கோபப்பட,

“திருமணம் என்று பேச்சு வந்தவுடன் , குழுவோடு நினைப்புத்தான் முதலில் வந்தது. அவரோடு என் வாழ்க்கை இணைந்தால் நன்றாக  இருக்கும் என்று தோன்றியது  சஞ்சு . அவ்வளவு தான்.”

“அண்ணா கிட்ட ஏன் சொல்ல வில்லை…?” 

 “நான் இந்த விசயமாகப் பேசி , நம் குடும்பத்திற்குள் சிக்கல் எதுவும் வந்து விடக்கூடாது என்ற கவலையும் வந்தது . நிதானமாக யோசித்து செயல்படுவோம் என்று இருந்தேன் .”

“சரி , அப்ப எப்போது சொல்வதாக அபிப்பிராயம்?”

“அதான். இதை ரொம்ப நாள் மனதிற்குள் போட்டு பூட்டி வைத்துக் கொள்ளவும் முடியவில்லை. அதேநேரம் இந்த யோசனையை சொல்லாமல்   வளர்ப்பதுவும் சரியில்லை என்று தோன்றியது..”

“சரி..”

“அதான் உன் அண்ணனுக்கு,  ஊரில்  இருந்து போன் செய்தேன்…”

சஞ்சு கண்களை அகலமாக விரித்து, ”அப்புறம்?”

“உன் திருமணம் பற்றி , அதில் இருக்கும் சிக்கல்களைப் பற்றி பேசத் துவங்கி விட்டார் ,  குரு உன்னை தவிர வேறு எதுவும் யோசிக்கும் மனநிலையில் இல்லை என்று தெரிந்தது .” 

“அவருக்குத் தான் என்னைத் தவிர வேறு எதையும் யோசிக்கத் தெரியாதே…” என்று வருந்தினாள் சஞ்சு .

“அதனால் தான் நேரில் பேசிக் கொள்ளலாம்  என்று விட்டு விட்டேன்… ஆனால் எப்படி கண்டுபிடித்தாய் சஞ்சு..?”

“அதெல்லாம் சொல்லால் முடியாது” என்று சஞ்சு பந்தா காட்ட,

கீத்து கொலை வெறியானாள். சஞ்சுவை பார்வையாலே எரிக்க,

“சரி சரி சொல்லுகிறேன்” என்றவள், குறும்பாகச் சிரித்தபடி,”சமீபகாலமாக உன் பார்வை மாறிவிட்டது..” 

“அவ்வளவு அப்பட்டமாகவா ….தெரிந்தது?” என்று வடிவேல் பாணியில் கீத்து கேட்க ,

“அம்மம்மா…. , நீ அடித்த சைட்டுக்கு…” என்று சஞ்சு கலகலக்க ,

“க்கும் .., உனக்குப் புரிந்து என்ன பிரயோஜனம்?  உங்க ணொண்னுக்குப் புரியவில்லையே…” 

“அடிங்க , எங்க அண்ணன் தங்கம்…”  என்று வக்காலத்து வாங்க ,

“அதான் உரசிப் பார்க்கலாம் என்று யோசித்தேன் . ஆனால் உங்க அண்ணன் அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்…” என்று கீத்து கையை ஆட்ட,

சஞ்சு வேகமாக வந்து மொத்தினாள் .

பின், “நான் வேண்டுமானால் , என் விருப்பம் என்று பேசட்டுமா?” என்று சஞ்சு ஆவலாக கேட்க , 

“உன் அண்ணனுடைய விருப்பம் என்னவென்று கேட்டிருக்காரர்களே ? பார்ப்போம் . அப்புறம் முடிவு செய்யலாம்…”

“ஏன் அண்ணன் வேறு யோசிப்பார் என்று நினைக்கிறாயா?” என்றாள் சஞ்சு கவலையுடன்.

“அப்படி இல்லை கீத்து , எனக்கு விருப்பம் இருக்கு . அவருக்கு வேறு எண்ணம் இருக்கலாமில்லையா ? அவர் விருப்பத்திற்கு நாம் மதிப்பு  கொடுக்க வேண்டும் அல்லவா… ?”

“நீ தான் பேசலாம் என்று இருந்தாயே…”  என்று சஞ்சு இழுக்க , 

“இப்ப சீனே மாறிவிட்டது சஞ்சு . அப்போது என் திருமணம் பற்றி பேசப்பட்டது , அதனால் என் விருப்பத்தைத் தெரிவிப்போம்…” என்று நினைத்தேன் .

இப்போது நீ பேசினால் அவர்  விருப்பம் தெரியாமல் போய்விடும். எனக்கு குருவின் சந்தோஷம் முக்கியம் சஞ்சு” 

சஞ்சு எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் .

தொடரும்…