அத்தியாயம் 72

காலம் வேகமாக ஓட , மூன்று வருடம் முடிந்தது. இந்த மூன்று வருடத்தில் ராஜி கண்ணன் தம்பதியர் , தங்கள் மகன் ரவிக்கு திருமணத்தை முடிக்க ,  குடும்ப வட்டத்தில் புதிய அங்கத்தினர் இணைய, மகிழ்ச்சி பெருகியது . இடைப்பட்ட காலத்தில் சஞ்சுவும் , கீத்துவும் அவர்கள் பணியில் வாகை சூடியிருந்தனர் . விவேக்கும் தன் வேலையில் பெரிய உயரங்களைத் தொட்டிருந்தான்.ஆனால் இத்தனை வருடத்தில் பிள்ளைகளுக்கும் விஜயனுக்கும் ஆன உறவில் மட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை . அவர் தன் அகங்காரத்தில் இருந்து இறங்கி வரவேயில்லை.

 விவேக்கும், சஞ்சனாவும் ராதா ராஜியின் குடும்ப அங்கத்தினர் போலானார்கள்.  இப்படியோரு நல்ல தோழிகளை தங்களுக்கு வழி நடத்த விட்டு சென்றதற்குப்  பலமுறை மனதார இருவரும் அம்மாவிற்கு நன்றி சொன்னார்கள்.

ஞாயிறுகளில் கிட்டி பார்ட்டி போல், ஒருவர் வீட்டில்  கூடுவதை வழக்கமாக்கியிருந்தனர் .இந்த வாரம் ராதா வீட்டில் அனைவரும் குழுமியிருக்க , சஞ்சு  மற்றும் கீத்து திருமணம் குறித்துப் பேசப்பட்டது. இருவரும் பணி நிமித்தமாக ஊரில் இல்லாதது வசதியாகப் போனது . 

“நம்ம கீத்துவிற்கு திருமணத்திற்கான வேலையை ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கிறோம்.  உங்களுக்கு தெரிந்த வட்டத்தில் நல்ல வரன் இருந்தால் சொல்லுங்கள்…” என்று ரமேஷ் முதலில் ஆரம்பிக்க , 

“நம்ம சஞ்சுவிற்கும் அப்படியே  ஆரம்பிக்கலாம்…” என்று கண்ணன் சொல்ல ,

“இது  தான் சரியான நேரம் , இப்ப சஞ்சுவிற்கு முடித்தால், அடுத்து விவேக்கிற்குப்  பார்க்க சரியாக இருக்கும்..” என்று ராதாவும் ஆமோதித்தார் .

இதை அப்பா ஆரம்பித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று மனதின் ஒரத்தில் தோன்றிய வலியை தள்ளி விட்டு ,  “சரி அங்கிள், அப்பாகிட்ட பேசிவிட்டுச் சொல்கிறேன்…” என்றான் விவேக் .

“அப்படியே சஞ்சுவிடமும் பேச வேண்டும் , அவளுடைய எதிர்பார்ப்பு , விருப்பம் என்று அனைத்தையும் கேட்க வேண்டும்” என்று ராஜி சொல்ல ,

“அப்பாகிட்ட இன்று மாலை பேசி விடுப்பா . அப்போது தான் நாளை ராஜமுந்தரி படப்பிடிப்பில் இருந்து வரும் சஞ்சுவுடன் பேசச் சரியாக இருக்கும் . இப்போது அவளை விட்டால் பிடிக்க முடியாது , வர வர பயங்கர பிஸியாகி விட்டாள்…” என்று பெருமையாக அழுத்துக் கொண்டார் கண்ணன் . 

“நீ முதலில் சஞ்சுவிடம் பேசு விவேக், மேற்கொண்டு பேசும் போது  நாங்கள் இணைந்து கொள்கிறோம்…” என்று முடித்தார் என்றார் ரமேஷ் .

சரி என்று தலை அசைத்தான் . பின் நெஞ்சில் ஏதோ குறுகுறுக்க , “கீத்து என்ன சொன்னாள் அங்கிள்?” என்று ஆர்வமாக வினவினான்.

“இன்றைய கிட்டி பார்ட்டி டாபிக் நீங்கள் தான் என்று சொன்னேன் . அப்படியே நீ என்ன சொல்கிறாய் என்றும் கேட்டேன் ?”

“ம்ம்…”

“அதற்கு அவள் போனில் வேண்டாம் அப்பா , நேரில்  விளாவரியாகப் பேசலாம் என்றாள்.” 

“ஓ….!” என்று  முடித்துக் கொண்டான் . மனதில் ஒரு பரபரப்பை , தவிப்பை உணர்ந்தான் . அவ் உணர்வை தள்ளி வைத்து விட்டு , பேச்சில் ஆழ்ந்தான்.

மாலை விஜயனை சந்தித்து விவரத்தைச் சொல்ல , “எல்லாம் நானே பார்த்துக்  கொள்வேன் என்றாயே , இப்போது ஏன்டா என் முன்வந்து நிற்கிறாய்?” என்று ஆணவமாகக் கொக்கரித்தார் .

“பெற்ற தந்தையாக , நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய விசயம்  , நான் ஆரம்பித்த பிறகும் , இப்படி பொறுப்பில்லாமல் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்…” என்று கடிந்தான் .

“என் பொறுப்பைப் பற்றி  நீ பாடம் எடுக்காதே ,  என்ன ஆட்டம் ஆடினீர்கள் ?கடைசியில் என்ன ஆச்சு ? என் தயவு வேண்டி தானே நிற்கிறீர்கள்…” என்று ஆணவத்துடன் சிரித்தார்.

பின், “என் வாழ்க்கையில் முடிவு எடுப்பதற்கு நீங்கள் யார்? என்றாளே , இப்போது மூஞ்சியை  எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வாள்…” என்றார் எகத்தாளமாக.

“அப்பா….” என்றான் கடுமையாக .

“சினிமாக்காரிக்கெல்லாம் நான் வரன் பார்த்து என்னை அசிங்கப்படுத்திக் கொள்ள முடியாது . நான் சொன்ன மாதிரி ஒழுங்காகப் படித்து வேலைக்கு போயிருந்தாலோ இல்லை இந்தப் படிப்புக்கே சினிமா இல்லாது வேறு வேலை பார்த்திருந்தாலோ , யோசித்திருப்பேன்…” என்று நக்கலாக இழுக்க ,

“காலம் உங்களை எங்களோடு இணைக்க இருந்த கடைசி வாய்ப்பையும் இழந்து விட்டீர்கள் அப்பா. வயது ஏற ஏற , பொறுமையும்  , பக்குவமும் வரும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால்  உங்களிடம் மட்டும் ஏன் எந்த மாற்றமும் ஏற்படவில்லை ? உங்கள் கர்வம் , ஆத்திரம் , அகங்காரம் தான் , உங்களுக்கு பிரதானம் இல்லையா?” என்று கசந்து கேட்டான் .

விஜயன் திமிராகவே பார்க்க, 

அந்தப் பார்வையைக் கவனித்தவன், “அன்பு , பாசம் , பிரியம் , நேசம் , காதல், நன்றி  போன்ற உணர்வுகளுக்கு , உங்கள் அகராதியில் என்ன அர்த்தம் அப்பா ? அம்மாவை சவக்குழியில் தள்ளி விட்டீர்கள் , என் தங்கையை சாவின் விளிம்பு வரை கூட்டிச் சென்றீர்கள் . பிறகும் உங்கள் அகங்காரமும் , சுய நலமும் அடங்கவில்லை .ச்ச… நீங்கள் ஜெயிக்க வேண்டும் , நீங்கள் நினைத்தது தான் நடக்க வேண்டும் .  என்ன ஒரு ஆணவம்? “

“தேவையில்லாமல் பேசாதே…”

நீங்கள் தான் பேச வைக்கிறீர்கள். ச்சே… , முடியாதற்காகப் போராடாதே என்று அம்மா அன்றே சொன்னார்கள் . சஞ்சுவும் இதைத் தெளிவாகப் புரிந்து விட்டாள் . நான் தான் மடையன் மாதிரி உங்களிடம் ஈரத்தை எதிர்பார்த்தேன். செருப்பால் அடித்த மாதிரி புரிய வைத்து விட்டீர்கள் . மிக்க நன்றி…” என்று விறுவிறுவென வெளியேறினான்.

தங்கையின் நல்வாழ்விற்காகக் கெஞ்சுவான் , அவளையும் காலில் விழ வைத்து விடலாமென கணக்கு போட்டிருந்தவர் , திகைத்தார் . மனதிற்குள் இனம் புரியா பயம் வந்து ஒட்டிக் கொண்டது .

பின் அவரது இயல்பு குணம் தலை தூக்க , எங்கே போக முடியும் , தன்னிடம் தானே வரவேண்டும் என்று அகங்காரத்தடன் நினைத்துக் கொண்டார் .

அத்தியாயம் 73

ஈகோவின் மொத்த உருவமாக இருக்கும் தன் அப்பாவை நினைத்து அருவருத்தான் . மிகுந்த மனச் சோர்விற்கு உள்ளானான் விவேக் .  என்ன தான் கோபம் என்றாலும் கத்துவார் , பின்பு செயலில் இறங்கி விடுவார் என்று நினைத்திருக்க ,

 அவரோ தங்கையை சினிமாக்காரி என்று கேவலமாகப் பேசியது மட்டுமில்லாமல் சொந்த மகளையே பகையாளி போல் எண்ணி பேசியதைத் தாங்க முடியாமல்  தவித்தான். அடுத்து என்ன செய்வது…?” என்று புரியாமல் திணறினான்.

சரியாக கீத்து அழைக்க , மனதில் நிம்மதி பரவியது . பரபரப்பாக கைபேசியை எடுத்தான் ,

“குரு…” என்று கீத்து ஏதோ சொல்ல ஆரம்பிக்க , அவன் அதைக் கவனிக்காது , “எப்படி கீத்து ? நான் பிரச்சனையில் இருக்கும் போது சரியாக போன் அடிக்கிறாய்? உனக்கு ஏதாவது உள்ளுணர்வு வேலை செய்கிறதா..?” என்றவன் , கடகடவென அவளிடம் அனைத்தையும் கொட்டினான் .

அனைத்தையும்  பொறுமையாக கேட்டவள் , “தெரிந்தது தானே குரு ?”

“தெரியும் கீத்து , ஆனால் இவ்வளவு கேவலமாக , கீழ்த்தரமாக… , முடியவில்லை கீத்து … . அதுவும் சஞ்சுவின் வாழ்க்கையில் முக்கியமான தருணத்தில்..” என்று புலம்ப,

“ ரொம்ப யோசிக்காதீர்கள் , ஃப்ரீயாக விடுங்கள் குரு , எல்லாம் சரியாகி விடும்.”

“எப்படி கீத்து ? மனசே ஆறவில்லை . மகள் என்று துடிக்காதா?  அவர் இரத்தம் தானே? ஏன் இந்த வன்மம்? அப்படி என்ன பெரிய தப்பு செய்து விட்டாள்? சின்ன பெண் தானே , விளையாட்டுதனமாக ஒன்றிரெண்டு தவறுகள் செய்தாள் தான் , ஆனால் இதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றங்களா?  எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறாள் என்றெல்லாம் யோசனை வராதா? மனம் பதைபதைக்காதா ?”

“குரு….”

அப்படி என்ன ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறி ? அவரை மீறி வெளியேறி வந்ததற்கு யார் காரணம்?  அவர் தானே? குடும்பம் என்ற கூடு சிதைந்து விடக்கூடாது என்பதற்காக எவ்வளவு பாடுபட்டேன், எவ்வளவு விட்டுக் கொடுத்தேன். எல்லாவற்றையும் போட்டு உடைத்து விட்டு , நாங்கள் அவரை மீறி போனதாகப் பேசுகிறார். வெளியே இருந்த போதும் , அவருக்கு உதவி என்றால் போய் நிற்கவில்லையா?  அப்போது எங்கே போச்சு அவர் கோபம், ரோஷம் எல்லாம்?  சஞ்சு செய்ததைக் கொட்டிக்கவில்லையா…..?” என்றான் கடுப்பாய் .

“விடுங்க, பார்த்துக்கலாம் குரு…”

“பக்கா சுயநலவாதி , அம்மா மாதிரி நாங்களும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார்” என்று மனம் தாளாது ஏதேதோ புலம்பினான் .

“நல்ல வேளை அம்மா  இந்த ஆள் தொல்லையில் இருந்து  தப்பி விட்டார்கள் .  ஏன் அம்மாவை பறித்துக் கொண்டாய் என்று பலநாட்கள் கடவுளுடன் சண்டை போட்டிருக்கேன் . ஆனால் இன்று தோன்றுகிறது , இந்த ஆள் இடமிருந்து கஷ்டப்படாமல் போய்விட்டார்…” என்றான் ஆற்றாமையுடன். 

“குரு…” என்றாள் தன்மையாக 

“அடுத்து என்ன செய்வது ? என்றே புரியவில்லை கீத்து…”

“நல்லதே நடக்கும் குரு . தைரியமாக இருங்க .  வீட்டில் பேசுவோம்  , நல்ல முடிவு கிடைக்கும் . இதை விட பெரிய விசயங்களையே கடந்து விட்டோம்  . இதெல்லாம் ஜுஜிப்பி மேட்டர் . என்னை கேட்டால் , இப்ப இருக்கிற சஞ்சு , இதை அசால்டாக லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்து விடுவாள்…” என்று நம்பிக்கையூட்டினாள் .

“நிஜமாகவா கீத்து?”

“அவள் சந்திரமுகியாக மாறி பல வருஷமாச்சு குரு…” என்று கீத்து சொல்ல , இதைக் கேட்டு அவன் முகத்தில் சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது .  

அவளிடம் பேசிய பிறகு சற்று சமாதானமானான் விவேக். போனை  வைத்த பின் கீத்து ஏதோ பேச முனைந்தது போல் தோன்ற , கட்டாயமாக நாளை பேச வேண்டும் என்று எண்ணியபடி கண் அயர்ந்தான் .

 

தொடரும்….