சஞ்சுவும் தொடர்ந்து நடைபயிற்சி வர ஆரம்பித்தாள் . ராஜி , ராதா மற்றும் கீத்து என்று யாராவது ஒருவர் மாற்றி மாற்றி துணைக்குச் சென்றனர் . ஒரு வாரம் இயல்பாகப் போக , அன்று அப்பா வீட்டிற்குக் கீழே இருக்கும் மாமியைப் பார்க்க , “என்ன சஞ்சனா ? இப்படிச் செய்துவிட்டாய்?”என்று கவலைப்பட,
சஞ்சு அமைதி காக்க , இதுதான் சாக்கு என்று மாமி தொடர்ந்தார் . “வீடு என்றால் நாலு பிரச்சனை இருக்கத்தான் செய்யும். அதற்காக இப்படியா செய்வாய்?தைரியமாக இருக்க வேண்டும்…” என்று அறிவுரையை அள்ளித் தெளித்தார் .
உள்ளே புகுந்த கீத்து , “நீங்கள் சொல்வது சரி ஆன்ட்டி , நாங்களும் அதையே தான் அறிவுறுத்துகிறோம் . ரொம்ப நன்றி ஆன்ட்டி..” என்று வேகமாக நகர்ந்தினாள் .
சஞ்சுவும் தப்பித்தாகி விட்டது என்று நடையில் வேகத்தைக் கூட்டினாள் . இரண்டு சுற்று போயிருக்க , கீத்துவிற்குப் போன் வர , அவள் சற்று ஒதுங்கினாள் .
நீ போ என்று சைகை காட்ட , சஞ்சு மறுத்து சற்று தள்ளி நின்றாள் . அப்போது அங்கே வந்த மாமி மீண்டும் பிடித்துக் கொண்டார் .
“ஏம்மா , வீடு என்றால் சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும் , அதற்காக இப்படி அப்பாவை விட்டு வருவீர்கள் . பெற்று வளர்த்த தந்தை மீது மரியாதை இல்லையா… ?” என்று அவர் பாட்டிற்கு குறைகளை அடுக்க ஆரம்பித்தார் .
சஞ்சு வெலவெலத்துப் போனாள் . போனில் பேசிக் கொண்டே சஞ்சு மீது கண் வைத்திருந்திருந்தவள் , சஞ்சுவின் நிலை கண்டு, உள்ளே புகுந்தாள் .
கீத்து வர , “நீ அறிவுரை சொல்லமாட்டாயா ? என்ன பிரச்சனை என்றாலும் குடும்பத்தோடு தான் இருக்க வேண்டும்” என்று மாமி தனக்கு ஆதரவு தேட,
“கட்டாயமாகச் சொல்கிறேன் மாமி…” என்றபடி,“நேற்று நடைபயிற்சியில் கிரிஜா அக்காவைப் பார்த்தோம். நம்ம குடியிருப்புக்கே வந்து விட்டார்கள் போல…” என்று தூண்டில் போட ,
“ஆமாம் டி பொண்ணே…” அவ மாமியார் ஒரே பிரச்சனை பண்ணிட்டா , எத்தனை நாளைக்குப் பிரச்சனையிலே உழல்வது? அதான் தனிக் குடித்தனம் வந்து விட்டாள்.” என்று நீட்டி முழக்கினார்.
“ஆமாம் மாமி… , எத்தனை நாள் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகப் பிரச்சனையிலே இருக்க முடியும்….?” என்று நக்கல் தோணியில் இழுக்க ,
“ஆமாம் டி பொண்ணே…” என்று ஆமோதிக்க வந்தவர் , கீத்து போட்டு வாங்கியதை உணர்ந்தவர் , சட்டென்று , “அச்சோ.. , மறந்தே போய்விட்டேன் , நான் கிளம்புகிறேன்…” என்று முக்கிய வேலை இருப்பது போல ஓடினார் .
“ஏன் சஞ்சு பயப்படுகிறாய்? நாம் ஒன்றும் தப்பு செய்யவில்லை. முதலில் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ளாதே . வெளியே இருந்து ஆளாளுக்கு என்ன அறிவுரை வேண்டுமானாலும் தரலாம் . உள்ளே இருப்பவர்களுக்குத் தான் வலியும் வேதனையும், புரியுதா ?”
“என்னை மாதிரி உன்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லையென்றால் , தவிர்த்து விட்டு நகரப் பார் . அதுவும் முடியவில்லை என்றால் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடு , அதை மனதில் கொண்டு போய் , உன்னை வருத்திக்காதே…”
சரி என்று சஞ்சு யோசனையோடு தலையை ஆட்ட , மீண்டும் நடையைத் தொடர்ந்தனர் .
ராதாவும் ராஜியும் கடைக்கு , கோவிலுக்கு என்று எங்காவது கூட்டிச் சென்றனர் . இளைய தலைமுறை சினிமா , ஸாப்பிங் மால் என்று சஞ்சவுடன் சென்று வந்தனர் . பெரிதாக தன் பெற்றோருடன் வெளியே போகாத சஞ்விற்கு , இவை அனைத்தும் ஓரு புதிய அனுபவமாக இருந்தது . புத்துணர்வாகவும் உணர்ந்தாள். தன்னைத் தப்பாகப் பார்க்கிறார்களோ என்ற பயம் மெல்ல மெல்ல அகல ஆரம்பித்திருந்தது .
ஒரு நாள் ராதா , சஞ்சுவைத் தான் போகும் சிறப்புப் பள்ளிக்கு அழைத்துச் சென்றாள். அந்தக் குழந்தைகளைக் கண்டு சஞ்சு அதிர்ந்தாள் . ராதா கதை சொல்ல , அதைக் கேட்டபடி குழந்தைகளைக் கவனித்தாள் . நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்ற நிதர்சனம் முகத்தில் அடித்தது . தன்னுடைய பிரச்சனை எத்தனை சிறியது என்பதும் புரிந்தது . மெல்ல தெளிவாக ஆரம்பித்தாள் .ஆக மொத்தம் எல்லோரும் சஞ்சுவின் மனநல முன்னேற்றதிற்குத் தங்கள் பங்களிப்பைச் செய்தனர் .
அண்ணன் தந்த சுதந்திரம், சமைப்பது , வரைவது, கீத்துவுடன் கொரியன் சீரியல் , நடைபயிற்சி , ஆன்ட்டிஸோடு அரட்டை , குடும்பத்துடன் வெளியே செல்வது என்று அவள் பொழுதுகள் நல்லபடியாகப் போனது . நின்றால் குத்தம் உட்கார்ந்தால் குத்தம் என்று பயந்து பயந்து நகர்ந்த நாட்கள் காணமாலே போயின. சுதந்திர காற்று அவளைத் தாலாட்டியது . வாழ்க்கைக்குரித்தான பார்வை மாற துவங்கியது .
அத்தியாயம் 66
அன்று அலுவலகம் சென்று வந்த விவேக் சந்தோஷமாக வந்து சஞ்சுவைக் கட்டிக் கொண்டான் . “என்ன அண்ணா? இவ்வளவு சந்தோஷம்..” என்று சஞ்சு வினவ ,
“அந்த ராஸ்கலை போலீஸ் அரஸ்ட் செய்து விட்டது . எல்லா புகைப்படங்களையும் கைப்பற்றி அழித்து விட்டார்கள்” என்றான் சந்தோஷமாக . சஞ்சு மகிழ்ச்சியில் வெடித்து அழுதாள் .
“சஞ்சும்மா” என்று தேற்ற, அவனைக் கட்டிக் கொண்டாள் . சரியாக அந்நேரம் உள்ளே வந்த கீத்து , இருவரின் கண்களில் கண்ணீரைக் கண்டவள் , அரண்டு போனாள் .
“என்னாச்சு? என்னாச்சு?” என்று பதற, சஞ்சு அண்ணனை விடுத்து , கீத்துவைக் கட்டிக் கொண்டு அழுதாள் . கீத்து படபடப்பாக விவேக்கைப் பார்க்க , அவன் புன்னகைக்க , நிம்மதியானாள் .
“என்ன குரு? ஒரே பாசமலர் காட்சி ஓடுது?” என்று கேலி செய்ய, சஞ்சு முதுகில் இரண்டு அடி போட்டாள்.
“இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது குருநாதா “ என்று வடிவேலு பாணியில் கேட்க ,
“ சஞ்சு ம்மா , சொல்வோமா? வேண்டாமா?” என்று விவேக் வம்பிழுக்க ,
கடுப்பான கீத்து , “டேய்…” என்று கீழே குனிந்து , அடிக்கப் பொருள் தேட , இருவரும் கலகலத்தனர் .
“மீ பாவம்….” என்று முகத்தைக் கீத்து பாவமாக வைக்க,
“சொல்லிவிடுவோமா தங்கச்சி….” என்று விவேக் இழுக்க,
“தங்கைக்கொரு கீதம் , என் தங்கச்சி கல்யாணி என்று உங்க டி.ஆர் படத் தலைப்பெல்லாம் நிறுத்தி விட்டு , விசயத்திற்கு வாங்க…” என்றாள் கடுப்பாக .
விவரத்தைச் சொல்லாமல் , “அதிமுக்கியமாக உனக்கு எப்படி டி.ஆர் படமெல்லாம் தெரியும்?” என்று விவேக் சந்தேகத்தைக் கிளப்ப ,
“நான் டி.ஆர். ரசிகை , என் ஸ்பாடிஃவை பிளேலிஸ்டில் இந்த படமெல்லாம் உண்டு” என்றாள் பெருமிதமாக .
உடனே சஞ்சு , “டண்டணக்க… என்று டி.ஆர் ஸ்டைலில் சொல்லி தலையைச் சிலுப்ப , கீத்து ஆவென வாயைப் பிளந்தாள் . பின் சஞ்சுவைக் கிள்ள , சஞ்சு அலறினாள்.
“அப்ப இது கனவு இல்லை…” என்று இழுக்க ,
“எருமை மாடு “என்று சஞ்சு அடி போட்டாள்.
விளையாட்டு போதும் என்று நினைத்தவன் , “குற்றவாளி பிடிபட்டு விட்டான் கீத்து”
“ஏய்…” என்று கத்தியவள் , சந்தோஷ மிகுதியில் திளைத்தாள் .
“எப்படி? எங்கே? “என்று கேள்விக்கனைகளைத் தொடக்க ஆரம்பித்தாள்.
“இவள் கல்லூரி சீனியர் தான் , பெயர் மாதேஷ்”
கீத்து சஞ்சுவைப் பார்த்தாள் , அவள் முகத்தில் ஆளைத் தெரியும் என்பதற்கான, எந்த அறிகுறியும் தெரியவில்லை . “தெரியாதா?” என்று கேட்க ,
“இல்லை” என்று தலை ஆட்டினாள் .
“சரி , நீங்கள் மேலே சொல்லுங்கள் குரு…” என்று ஊக்கினாள் .
“இன்று மதியம் கஞ்சா கேஸில் கைது செய்துள்ளார்கள்…”
“கஞ்சா கேஸ்….” என்று மற்ற இருவரும் திகைக்க ,
“முக்கியமாக இந்த விஷயம் வெளியே கல்லூரி பெயர் கெட்டு விடும் , பின், அடுத்த வருடம் கல்லூரி சேர்க்கையில் அது பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். மேலும் இது அரசு கல்லூரி வேறு , மீடியாவிற்கு விசயம் போனால், இப்போது இருக்கும் ஆட்சியர்களுக்கு அது கெட்ட பெயரையும் , தேவையில்லாத அழுத்தத்தையும் கொடுத்து விடும் என்பதால் பெரிய இடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்து, வீட்டில் இருந்து கஞ்சா எடுத்ததாகஇதைக் கஞ்சா கேஸாக மாற்றி விட்டார்கள்.”
“ஓ…!”
“அவன் இந்த மாதிரி வேலைகளுக்காக , தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறான். அதைப் பயன்படுத்தி கஞ்சா கேஸாக மாற்றி விட்டார்கள். அவன் வெளியே வருவதற்குச் சில வருடங்களாவது ஆகும்.”
“ஓ…!’
“நமக்கும் நல்லதாகப் போய்விட்டது .புகைப்பட மார்ப்பிங் கேஸ் போட்டால் , தேவையில்லாமல் சஞ்சு பெயரோடு மற்ற கல்லூரியில் பெண்களின் பெயர்கள் வெளியே தெரிய நேரிடும் . மீடியா பேய்கள் அவர்களைச் சுற்றி நாறடித்து விடுவார்கள் . அதுவும் இப்போது ஷோசியல் மீடியா வந்து விட்டு , எந்தக் கட்டுபாடும் கிடையாது . நினைத்ததையெல்லாம் பேசுகிறார்கள் . வாய் கூசாமல் சேற்றை இறைக்கிறார்கள் . இயல்பாக இந்தப் புகைப்படத்திற்கும் கிடைக்கும் கவனத்தை விட பலமடங்கு அதிகமாக இந்த கேஸ் பெற்று விடும் . அது தான் போலீஸுக்குப் போன போது இருந்த பயம் . ஆனால் நம் கேஸை டீல் செய்த அதிகாரி தான் , நீங்கள் பயப்படாதீர்கள் , வேறு மாதிரி இதை முடித்து விடலாம் என்று நம்பிக்கை கொடுத்தார் . அதே மாதிரி நல்ல படியாக முடிந்தது.”
“ஏன் இதைச் சொல்லவில்லை..? என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்க , “சஞ்சு இருந்த நிலையில் இதைப் பற்றி பேசவே முடியாது . பின் உங்கள் யாரையுமே வருத்தப்படுத்த வேண்டாம் என்று தவிர்த்து விட்டோம்.”
“தவிர்த்து விட்டோம்…” என்றால் கொக்கிப் போட ,
“அங்கிள்ஸ்க்கு தெரியும்.”
“ஆஹா…! இப்படியொரு கூட்டணி உருவாவது சரியில்லையே ? முதலில் இதைப் பெண்கள் சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்…” என்று கீத்து பொங்க ,
“போலீஸ் என்னதான் நம்பிக்கை தந்தாலும் மனதிற்குள் பயப்பந்து சுழன்றுக் கொண்டேதான் இருந்தது . யாருக்கும் நம்பிக்கை கொடுக்க தைரியம் இல்லை . எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற வேண்டுதல் ஓடிக் கொண்டே இருந்தது”” என்ற யதார்த்ததை விளக்கினான் .
“அண்ணா” என்று மீண்டும் கட்டிக்கொண்டாள். கீத்தும் கண்கள் பனிக்க , விவேக்கைப் பார்த்தபடி நின்றாள் .
பின் கீத்து , “ஏன் இத்தனை நாள் ? சீக்கிரமே இந்த கேஸை முடித்திருக்கலாமே ?” என்று தன் சந்தேகத்தைக் கேட்க ,
“இதே கேள்வியை நானும் அதிகாரியிடம் கேட்டேன் . வேறு கேஸாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருந்தாலும் அதைச் சரியாக , பலமாக எந்தவிதத்திலும் சட்டத்தின் ஓட்டையில் இருந்து தப்ப முடியாது ரெடி செய்ய வேண்டும் . மேலும் பல சின்னப் பெண்களின் வாழ்க்கை அடங்கி இருக்கிறது , எந்த தப்பும் நடந்து விடக்கூடாது என்ற அதிக கவனமும் இருந்தது . முக்கியமாகப் புகைப்படங்களைக் கைப்பற்ற வேண்டும் , வேறு யாருக்கும் பகிரபட்டிருந்தால் அந்த தடையங்களை பிடிக்க வேண்டும் , அழிக்க வேண்டும் என்று பொறுமையாக , அவர்களுக்கு இருக்கும் சிரமங்களை விளக்கினார்.”
“ஓ…! , அவர்களுக்கும் எத்தனை பிரச்சனைகள் இருக்கிறது பாருங்கள் , ஆனால் நாம் ஈஸியாக போலீஸை சினிமாவில் , வெளியிடங்களில் சிறுமைப்படுத்திப் பேசிவிடுகிறோம்” என்று கீத்து வருந்தினாள் .
“எல்லா இடத்திலும் கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன , அதையும் தாண்டித் தான் ஒவ்வொரு அரசு நிறுவனங்களும் செயல்படுகின்றன..” என்று முடித்தான் .