கதைத்திரி-23

அத்தியாயம்  58

மறுநாளே வேலைகளை ஆரம்பிக்க , அந்த வாரம் சுறுசுறுப்பாக ஓடியது . விவேக் ஆபிஸ் வேலை , காவல் நிலையம் என்று பரபரப்பாக இருந்தான் .

கீத்து முடிந்தவரை சஞ்சுவோடு நேரம் செலவளித்தாள் .  அவளிடம் நிறைய பேசினாள் . அறிவுரை மாதிரி இல்லாமல் நாட்டின் நடக்கும் விசயங்களைப் பேசுவது போல் அவளுடைய சூழ்நிலைக்கு ஒத்துப்போகும்  செய்திகளைப்  பற்றிப் பேசிப்பேசி , அவளைத் தெளிவாக்க முயன்றாள் .

இதைவிட மோசமாக நடந்த பாலியல் முறைகேடுகள், துன்புறுத்தல்கள் ,  அப்பெண்கள் கடந்த வந்த பாதை , வழிமுறைகள் என்று பலவற்றைப் பேசினார்கள். சஞ்சுவிற்கு இதையெல்லாம் கேட்கும் பொழுது தனக்கு நடந்தது ஒன்றுமே இல்லை என்று தோன்றியது . 

இன்னும் சஞ்சு பெரிதாக வெளியே எல்லாம் செல்ல வில்லை . மருத்துவமனைக்கு மட்டும் சென்று வந்தாள். அங்கும் கவுன்சிலிங் தொடங்கியது . கீத்துவும் ஒன்றிரண்டு முறை சும்மா நடப்போம் , எங்கள் வீட்டுக்குப் போவோம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தாள் .  ஆனால் சஞ்சு சம்மதிக்கவில்லை .

ஒரு நாள் பொறுமை இழுந்த கீத்து , “என்ன காரணம்?” என்று சண்டைபிடிக்க ,

 “நம்ம குடியிருப்பில் , நான் தற்கொலைக்கு முயன்றதும் தெரியும் , அதன் காரணமும் தெரியுமில்லையா ?” என்று தடுமாற ,

“இது தான் உன் கவலையா?  போடி லூசு…! இங்கே அடுத்த வீட்டில் நடக்கும் விசயங்களைப் பார்க்க, யாருக்கு நேரமிருக்கு ?  பெரிதாக  யாருக்கும் தெரியாது, அப்படியே தெரிந்தாலும் , அது அவர்களுக்கு  அன்றைய ஒரு நாள் செய்தி மட்டுமே. வேகமாக ஓடும் இன்றைய உலகில் மறுநாளே அவர்களுக்கு வேறு செய்தி கிடைத்திருக்கும் . இதைப் போய் சுமந்து கொண்டிருக்கிறாயே சஞ்சு…?” என்று திட்டினாள் .

“உண்மைத் தெரிந்தவர்களை எப்படி அணுகுவது என்று குழப்பமாக உள்ளது…” என்று சஞ்சு தயங்க ,

“அப்பா ரொம்ப திட்டிவிட்டார் , அதனால் உணர்ச்சி வசப்பட்டுச் செய்து விட்டாள் என்று தான் சொல்லியுள்ளோம் . அப்படியே அதையே நீ கடை பிடி போதும்” என்றாள் சமாதானமாக.

சஞ்சு தயக்கமாகப் பார்க்க ,  

“வேறு காயங்களுக்கான” என்பதில் ஒரு அழுத்தத்துடன் , சஞ்சுவின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்து , “ எந்த காரணங்களும் வெளியே சொல்லப்படவில்லை” என்றாள்  கீத்து .

கீத்துவிற்கு உண்மை  தெரிந்ததை உணர்ந்த சஞ்சு , அவள் கைப்பிடித்து , “ஸாரி கீத்து…” என்று சொல்ல ,

பதில் பேசாமல் கீத்து அமைதியாக இருக்க , 

“தப்புத்தான் கீத்து மன்னித்து விடு. மனசெல்லாம் ஒரே குழப்பம் , பயம்.. . அப்பாவே இப்படிச் சொல்லும் போது, மற்றவர்களும் இப்படித்தான் யோசிப்பார்களோ? என்ற இனம் புரியாத பயப்பந்து சுழன்று கொண்டே இருந்தது. யாருக்கும் தெரியக் கூடாது என்ற எண்ணமே வியாபித்திருந்தது .உன்னிடம் பேசியிருந்தால் , நீ  இந்த விசயத்தைத் தூசு மாதிரி பறக்கவிட்டிருப்பாய் என்று இப்போது தெரிகிறது” என்று சொல்லும் போதே குரல் கமற, 

இதைத் தாங்காத கீத்து , “சரி விடு…” என்று கட்டிக்கொண்டாள் . பின், “என் உயிர் தோழி என்னிடம் எல்லாமே  சொல்வாள் என்று ஒரு தலைக்கனம் இருந்தது . அது இப்போது நொறுங்கிவிட்டது…” 

“என் நிலைமையைப் புரிந்து கொள். இப்படியெல்லாம் பேசாதே , மனசுக்கு ரொம்ப கஷ்டமாகயிருக்கிறது கீத்து..”  என்று கெஞ்சும் பார்வையை வீச , 

“இல்லை சஞ்சு , கோபம் , வருத்தமெல்லாம் கிடையாது.  நண்பர்களென்றாலும் , கணவன் மனைவி என்றாலும் எல்லோருக்கும் ஒரு பெர்சனல் ஸ்பேஸ்  நிச்சயமாக இருக்கும் என்பதை  நச்சென்று உணர்த்தி விட்டாய்”

இப்படிக் கூட ஒரு விசயத்தை அணுக முடியுமா? என்று சஞ்சு ஆச்சரியமானாள் . “எப்படி கீத்து… ?” என்று வியக்க,

“வாழ்க்கையில் எல்லாமே அனுபவம்தான் சஞ்சு. நீயும் உனக்கு நடந்த விசயங்களை அனுபவமாக எடுத்துக் கொள் , அதிலிருந்து பாடம் கற்றுக்கொள் . மேலும் முன்னேறிப் போ , அதிலே தேங்காதே…” என்று நீண்ட உரையாற்றினாள் .

“கீத்து நீ கெத்து தான்” என்ற சஞ்சு பாராட்டுப் பத்திரம் வாசிக்க,

“ஒன்றும் கிடையாது. நான் வளர்ந்த சூழ்நிலையும் , என் பெற்றோர்கள் தான் காரணம் . அப்புறம் நிறைய நிறைய புத்தகங்கள்….” என்று சிரித்தாள் .

சற்று நேரம் வெளியே இருந்து இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த விவேக் , அப்போது தான்  உள்ளே வருவது போல் , 

“என்ன சஞ்சும்மா.., உன் தோழி பெரிய சொற்பொழிவே ஆற்றியிருப்பாள் போல…” என்றவன்,  “சோடா வேணுமா கீத்து?” என்று கேலியாகக் கேட்க,

“குரு…” என்று கீத்து எகிற , “அண்ணா…” என்று சஞ்சு சிணுங்க , சூழ்நிலை மாறியது . பின் சிறிது நேரம் பேசிவிட்டு கீர்த்தனா கிளம்பினாள் .

த்தியாயம் 59

இரவு உணவை முடித்து வந்தவன் , சஞ்சனா நல்ல மூடில் இருப்பதைக் கண்டவன் ,  மெதுவாக தனியாகப் போவதைச் சொல்ல, சஞ்சு அதிர்ந்தாள் .

“என்ன அண்ணா சொல்கிறாய் ?”

“ஆமாடா , கொஞ்ச நாள்  தள்ளியிருப்போம் , நீ கொஞ்ச நாள் ஃபீரியாக  இரு , அப்பா என்ன சொல்வாரோ? என்ற கவலை , பயம் இல்லாமல் நீயும் நிம்மதியாக இரு…”

சஞ்சுவிற்கு மனதில் சின்ன சந்தோஷம் வந்து ஒட்டிக் கொண்ட போதும் , ஏதோ பயமும், தயக்கமும் சேர்ந்து வந்தது. “வேண்டாம் அண்ணா, நான் சமாளித்துக் கொள்கிறேன்…”

“என்ன சமாளித்துக் கொள்வாய் ?  உன் சமாளிப்பைப் பார்த்தேனே? அதன் விளைவை நினைத்தால் இப்போது கூட மனம் பதறுகிறது…” என்றான் கோபமாக .

“அண்ணா….” என்று இழுக்க , 

“ரொம்ப யோசிக்காதே சஞ்சும்மா , கொஞ்ச நாள் தனியாக இருப்போம் . நீயும் இந்தப் பிரச்னைகளில் இருந்து வெளியே வா . நீ தைரியமாகிவிட்டாய் எனறால் திரும்ப வந்துவிடுவோம்” என்றான் ஆறுதலாக.

“அண்ணா…” என்று மேலும் தயங்க , 

“என் கூட வேலைகளைப் பகிர்ந்து கொள்வாய் தானே..” என்று கேலியாகப் பேச்சை மாற்றும் விதமாக கேட்க ,

“அண்ணா..” என்று சிணுங்கினாள் .

பின் விவேக் தான் செய்த ஏற்பாடுகளைக் கூற , சஞ்சு அசந்து போனாள் . அண்ணா தனக்காக யோசித்ததுச் செய்ததை நினைத்துப் பூரித்துப் போனாள் .

“இது சரியாக வருமா அண்ணா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்க , 

“ஒரு முயற்சி தான்.  சரியாக வரும் என்று நம்புகிறேன் , பார்க்கலாம்…  அப்படியே  தப்பானாலும் அன்றைய சூழ்நிலை  பொறுத்து முடிவு எடுத்துக் கொள்ளலாம். நீ எனக்கு உறுதுனையாக இருப்பாய் அல்லவா..?”

“கட்டாயம் அண்ணா , நீ இவை அனைத்தையும் எனக்காகத் தான் செய்கிறாய் என்பது எனக்குப் புரியாமல் இல்லை . நான் உனக்கு நல்ல ஒத்துழைப்பு தருவேன்” என்றாள் உறுதியாக .

“சந்தோஷம் சஞ்சும்மா , நீ சீக்கிரம் இந்த விசயத்தில் இருந்து வெளியே வந்து அம்மா ஆசைப்பட்ட மாதிரி வாழ்க்கையில் பெரிய உயரத்திற்குப் போக வேண்டும். அது தான் என்னுடைய , ஏன் எல்லோருடைய ஆசையும்..” என்றாவாறு அவள் அருகில் வந்து தலையை தடவினான்.

“நன்றி அண்ணா” என்று கட்டிக் கொண்டாள் . பின் சட்டென்று தலையை உயர்த்தி , “அப்பா…” என்று பயப்பட , 

“எல்லாம் பேசி விட்டேன் . நாம் அடுத்த புதன் புது வீட்டுக்குப் போகிறோம்..” என்று  முடித்தான் . பின், “ரொம்ப நேரமாகிவிட்டது , நீ நிம்மதியாகத் தூங்கு சஞ்சும்மா..” என்று அவனும் படுக்கச் சென்றான் .

விஜயன் ஒரு வாரமாக அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார் . அவருக்கும் அரசல்புரசலாக எல்லா செய்திகளும் வந்து சேர்ந்தது .  மீண்டும் மகனுடன் பேச அவர் ஈகோ இடம் கொடுக்கவில்லை . விவேக்கை முறைத்தபடி வீட்டில் வலம் வந்தார் .

ஞாயிறு காலை விவேக் வந்து விஜயனை கோவிலுக்கு அழைத்தான் .  வழக்கம் போல் கீத்து வீட்டுக்கு வர , இருவரும் கிளம்பினர் .

“உங்களுக்கு எல்லா விவரங்களும் தெரிந்திருக்கும் இருந்தாலும் நான் சொல்வது தானே முறை” என்று அனைத்து விவரங்களைக் கூறினான் . 

 “எனக்கு இதெல்லாம்  பிடிக்கவில்லை ,  என்னை அவமானப்படுத்தவே இதையெல்லாம் செய்கிறாயா..?” என்றார்  விஜயன் கோபமாக .

“நான் சஞ்சுவிற்காகத் தான் இதைச் செய்கிறேன் , இதை அன்றே உங்களுக்குத் தெளிவாகவே விளக்கினேன். இதில் உங்களை அவமானப்படுத்தும் எந்த நோக்கமும் இல்லை அப்பா” என்றான் நிதானமாக .

“போறதுதான் போகிறாய் வேறு எங்காவது போக வேண்டியதுதானே , ஒரே குடியிருப்பில், ச்சா..” என்று சலிக்க ,

“இதுதான் எனக்கு வசதி, ஆன்ட்டி , அங்கிள் எல்லோரும் இங்க தான் இருக்கிறார்கள்…” என்றான் கடுப்பாய் .

“அவங்கெல்லாம் பெரிய மனுசனுங்க…? உனக்கு அறிவுரை சொல்லாமல் , உன்னுடன் சேர்ந்து கும்மியடிக்கிறார்கள் . குடும்பத்தைப் பிரிக்கிறார்கள்…” என்றார் ஏளனமாய் .

 “இதுவே கடைசிமுறை அப்பா , தேவையில்லாமல் அவர்களைப் பற்றி பேசாதீர்கள்” என்றான் கண்டிப்புடன்.

 அவனை முறைத்தபடி , “நான் பெத்தது சரியில்லாத போது , அவங்களைச்  சொல்லி என்ன பிரயோஜனம்?  எல்லாம் உங்க அம்மாவை சொல்ல வேண்டும், பிள்ளைகளை  நல்லா  வளர்த்திருக்காள்…” என்று நல்லாவில் ஒரு அழுத்தத்தைத் கொடுத்தார் .

“அம்மாவைப் பற்றி பேசாதீர்கள்” என்றான் கோபமாக .

 உடனே வெகுண்ட விஜயன் ,  “என் மானத்தை  வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாய் , அப்புறம் என்ன?  நடத்து நடத்து.. . எங்கே போகப் போகிறாய்? கடைசியில் என்கிட்ட தானே வருவாய், அப்போது வைத்துக் கொள்கிறேன்…” என்றார்  வன்மத்துடன் . 

“நிச்சயமாக, அப்படி ஒரு நிலை வர விடமாட்டேன்” என்றான் தீர்க்கமாக . 

பின், “இப்போது கூட  உங்கள் பக்கம் இருக்கும் தவறுகளை யோசிக்கவே மாட்டீர்களா அப்பா?  இந்தப் பிரிவைத் தடுக்க முயற்சி எடுக்கவே மாட்டீர்களா அப்பா…?” என்றான் வேதனையுடன்.

விஜயன் வீம்பாக நிற்க ,

 விவேக் மன வேதனையுடன் , “மாட்டீர்கள்… ஆனால் வசதியாக  எங்களை , அம்மாவை , அம்மாவின் தோழிகளைத் தான் குறை சொல்வீர்கள் . நீங்கள் சரியான சுயநலவாதி  அப்பா..” என்றான் எரிச்சலுடன் .

அதற்குப் பதில் அளிக்காமல் , கண்கள் சிவக்க விவேக்கை முறைத்தபடி நின்றார் .

“இனி பேசி பயன் இல்லை , புதன் காலை எட்டு மணிக்கு வந்து விடுங்கள் . வாங்க , இப்போ போகலாம்…” என்று நடக்கத் தொடங்கினான் .

“நீ போ , எனக்கு வரத் தெரியும்” என்று சட்டமாக உட்கார்ந்து கொண்டார் .  விவேக் ஒரு விரக்திப் பார்வையைச் செலுத்தி விட்டு , கிளம்பினான் .

அத்தியாயம் 60

புதன் காலை நல்லபடியாக பால் காய்ச்சும் வைபகம் நடந்து முடிந்தது . விஜயன் வரவில்லை . அதுகூட ஒரு விதத்தில் நல்லதாகவே அமைந்தது  ஏனெனில் அங்கு இருந்த  நல்ல மனநிலையை நிச்சயம்  கெடுத்திருப்பார் .

பின் வீட்டில் இருந்து பொருட்களை இடமாற்றம் செய்தார்கள் . விஜயன் அறையிலே இருந்து கொண்டார்.

வேலை முடிய மாலையானது  . கிளம்பும் வேளையில் விவேக் அப்பாவின் அறையை தட்ட , உள்ளே இருந்து பதில் வரவில்லை .  பின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற விவேக் , “போய் வருகிறேன்…” என்று விடை பெற முயல , விஜயன் பார்வை அவனைத் தாண்டிச் சென்றது , அங்கு சஞ்சு தயங்கியபடி நின்றிருந்தாள் .

சஞ்சுவைப் பார்த்தவுடன் காலையில் இருந்து   அடக்கப்பட்டிருந்த கோபம் , வெடித்தது . “இப்போ சந்தோஷமா? குடும்பத்தைப் பிரித்துவிட்டாய்…”  என்று கோபத்துடன் குற்றச்சாட்ட ,

“ச்சே… , நீங்கள் மாறவே மாட்டீர்கள் , ஒரு சதவீதமாவது  திரும்பி வர இருந்த வாய்ப்பைக்  கூட அழித்து விட்டீர்கள் . எங்களை எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாக , உங்களைத் தனியாக விட்டுச் செல்கிறோம் என்று எந்த குற்ற உணர்ச்சியில்லாமல்  வழி அனுப்பவதற்கு மிக்க நன்றி அப்பா” என்றான் விவேக்

கண்கலங்கி நின்ற சஞ்சவின் கை பிடித்து அழைத்துச் சென்றான் .நேராக அவளை தன் அறைக்கு இழுத்துச் சென்றவன் , “அப்பா சொன்ன எதையும் மனசில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே , அவருடைய சுயநலத்திற்கும் , ஈகோவிற்கும் உன்னைப் பழியாக்கப் பார்க்கிறார் . என்னையும் இதை விட மோசமாகப் பேசினார் சஞ்சும்மா  . நான் அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்பதால் ஆயுதத்தை உன் மேல் திருப்புகிறார் . தூசி மாதிரி தட்டிவிட்டுக் கொண்டு , உன் கனவை நோக்கிப் போய் கொண்டே இரு…” என்றான் ஆவேசத்துடன் .

“நான் குடும்பத்தைப் பிரிக்கிறேனா அண்ணா…?”  என்று பரிதவிக்க ,

“ஒரு சுயநலவாதிக்காக காலம் முழுவதும் விட்டுக் கொடுக்க இருந்தேன் , நல்லவேளை என் வாழ்க்கையை வாழ வழி வகுத்தாய் , நல்ல சூழ்நிலைக்கு  என்னைக் கூட்டிச் செல்கிறாய் , புது ஒளி ஏற்றுகிறாய் . அதற்கு உனக்கு என்  கோடி நன்றிகள்.”

சஞ்சு நன்றியோடு பார்க்க , 

“இந்த சென்டிமென்ட் ஸீனே வேண்டாம் . அவர் மூக்கை உடைப்பது போல் நாம் அவர் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் .  இந்த வீட்டோடு பழைய குப்பைகளை விட்டு விடு என்றான் ஒரு வித நிமிர்வுடன் .

“கண்டிப்பாக அண்ணா ,  நம் வாழ்வின் மகிழ்ச்சியான அத்தியாயங்களை புது வீட்டில்  எழுதுவோம்” என்று அவனின் கைபிடித்து முன்னே நடந்தாள் . விவேக் மிகுந்த மகிழ்சியுடன் தங்கையைப் பின் தொடர்ந்தான்.

அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த போது, வீடே அமைதியில் சூழ்ந்திருந்தது .  எப்போதும் வீடு அமைதியாகத் தான் இருக்கும்  ஆயினும் இன்றைய அமைதி  விஜயனுக்கு ஒரு திகிலை ஏற்படுத்தியது . பின் எப்போதும் போல் தலை சிலுப்பிக்கொண்டு , வீட்டைப் பூட்டி விட்டு உள்ளே சென்றார் .

புது வீட்டிற்குள் விவேக்கும் , சஞ்சுவும் உள்ளே நுழைய , ‘ ஸர்பரைஸ்  ‘ அனைவரும் கையைத் தட்டி வரவேற்றார்கள் . 

என்ன தான் தெளிவாக முடிவு எடுத்த போதும் வீட்டை விட்டு வெளியேறிய போதும் ஒரு பரிதவிப்பும் , பயமும், குழப்பமும் இருக்கத்தானே செய்யும் , அதை உணர்ந்தே சின்ன விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர் .வீட்டில் இருந்து உணவைச் சமைத்து எடுத்து வந்திருந்தார்கள் . அனைவரும் தங்களுக்குள் கலகலத்தபடி , பரிமாறிக் கொண்டார்கள் . இருவருக்கும் இனிய இரவாக அமைந்தது . இருவருக்கும் மனநிலை மாறியது .

“இரண்டு நாளைக்கு நாங்கள் சாப்பாடு அனுப்பிவிடுகிறோம் , நீங்கள்  வீட்டை ஒதுங்க வைத்துவிடுங்கள்” என்று ராஜி சொல்ல , 

“இல்லை ஆன்ட்டி , நான் மெஸ்ஸில் சொல்லியுள்ளேன்” என்று மறுத்தான் .

“என்னப்பா இப்படி?” என்று ராதா குறைபட ,

“பரவாயில்லை ஆன்ட்டி , இந்த வாரம் எனக்கு நிறைய மீட்டிங் இருக்கிறது , அதனால் பொருட்கள் வாங்க என்னால் அலைய முடியாது . நீங்க சஞ்சுவைக் கூட்டிக்கொண்டு போய் முதற்கட்டமாக வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி விடுங்கள்”என்று என்று  சஞ்சுவை  கோர்த்து விட்டான் .

ரமேஷ் மெச்சுதல் பார்வை பார்க்க , விவேக் மெலிதாகப் புன்னகைத்தான் .

சரிப்பா என்ற ராதா , சஞ்சுவைப் பார்த்து, முதலில் லிஸ்டை தயார் செய்வோம்  , அப்புறம் ஸாப்பிங் பட்டையைக் கிளப்பி விடுவோம் 

நானும் வருவேன் என்று கீத்து கொடிபிடிக்க , சனிக்கிழமை போகலாம் என்று முடிவானது . 

பின் கீத்து வேகமாக , உங்க அன்லிமிட்டடு கிரேடிட் கார்டைக் கொடுத்து விடுங்கள் குரு . கொஞ்சம் வசதியாக இருக்கும் என்று வம்பு செய்தாள் . 

அந்த இடமே சிரிப்பலையில் நிறைந்தது . அனைவரும் கிளம்ப ,  அன்று இருவரும் நிம்மதியாக  உறங்கினர் .

தொடரும்….