கதைத்திரி 22

அத்தியாயம் 55

மறுநாள் தன் பெற்றோர்களிடம் கீத்து மேலோட்டமாக விவரங்களையும் கூற , இருவரும் மிகவும் மனம் வருந்தினர் .

“இந்தச் சின்ன வயதிலே இந்தப் பையனுக்கு எவ்வளவு கஷ்டம்…” என்று வாய்விட்டுப் புலம்பினார்கள் . பின் , “நாம் விவேக்கிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று முடிவு செய்தனர்.

மாலை கீத்து சஞ்சுவிற்குத் துணையாகப் போக , விவேக் கீத்து வீட்டுக்கு வந்தான் .

அங்கு ராஜி குடும்பமும் சேர்ந்தே இருந்தனர் . மெதுவாக சஞ்சுவின் நிலைமை மற்றும் வீட்டில் நடந்தவைகள் மற்றும்  டாக்டர் சொன்ன அனைத்து விவரங்களையும் விவேக் கூற , எல்லோரும் அதிர்ந்தனர் .

“நீ என்ன யோசித்திருக்கிறாய் ?” என்று ரமேஷ் கேட்க , 

விவேக் தயங்கித் தவிக்க , 

“எந்தத் தயக்கமும் உனக்கு வேண்டாம் விவேக் , எதையும் நாங்கள் தப்பாக நினைக்க மாட்டோம் . இது ஒரு  சிக்கலான சூழ்நிலை என்பது எங்களுக்கு நன்றாக புரிகிறது .  நீ வெளிப்படையாகப் பேசு , அதுதான் சரியானதாக இருக்கும்…” என்றார் கண்ணன்.

“ஆமாம் விவேக் , அங்கிள் சொல்வது தான் சரி , உனக்கு என்ன தோன்றுகிறது என்று சொல்லு , அதில் இருக்கும் ப்ளஸ் \மைனஸ்களைப் பேசி முடிவு செய்வோம்…” என்றார் ராதா.

“பெரியவங்க , நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்…?” என்று விவேக் கேட்க , 

“இதில் நாங்கள் முடிவு எடுப்பது சரி வராது , நாங்கள் உனக்கு உதவ  மட்டுமே வேண்டும்” என்று கண்ணன் தெளிவாகச் சொல்ல , 

அதனைத் தொடர்ந்து , “நாங்கள் உன்னை வழி  நடத்த மட்டுமே முடியும் , முடிவுகளை நீ தான் எடுக்க வேண்டும் விவேக்” என்று ரமேஷ் வழிமொழிய , அனைவரும் அதை ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தனர்,

“நானும் , சஞ்சுவும் வேற வீடு பார்த்து தனியாகப் போய் விடலாம் என்று நினைக்கிறேன் . கொஞ்ச நாள் அவள் அப்பா பயம் இல்லாமல் வீட்டில் சுதந்திரமாக உலா வரட்டும் என்று யோசித்திருக்கிறேன்.” என்று தன் முடிவைப் போட்டு உடைத்தான்  .

அனைவரும் அமைதியாகவே இருக்க , “நன்றாக யோசித்துக் கொண்டாயா விவேக் ? இந்த முடிவு என்பது கடைசி வரை சஞ்சு உன் பொறுப்பு தான் , புரிகிறதா? எந்த முடிவையும் உணர்ச்சி வசப்பட்டு எடுத்து விடாதே…” என்று கண்ணன் எச்சரிக்க ,

“இல்லை அங்கிள் , அப்பா நடந்து கொண்டமுறை , டாக்டர் பேசியது என்று எல்லாத்தையும் யோசித்து தான் இந்த முடிவை எடுத்தேன். மேலும்,  முழு பொறுப்பு …” என்று கசப்புடன் சிரித்தவன்.  “இப்போது மட்டும் யார் அங்கிள் பார்ப்பது? நான் மட்டும் தான் . அம்மாவின் விசயத்திலும் சரி இப்போதும் சரி அவர் ஒதுங்கித் தான் இருக்கிறார்…” என்றான் விரக்தியாக .

ரமேஷ் தோளைத் தட்ட , 

“நீங்கள் எல்லோரும் ஒதுங்கியா இருக்கிறீர்கள் ?  ஆனால் அவர் வசதியாக ஒதுங்கிக் கொண்டார் . ஏன் என்று கேட்டால், நீ தான் இந்தப் பிரச்சனைக்குள் வர வேண்டாம் என்று சொன்னாய் என்று தான் சரி என்பதற்கு ஆயிரம் காரணம் கூறுவார்…” என்றான் வேதனையோடு

“அம்மாவின் விசயத்திலே மனதில் சுருக்கென்றது ,  ஆனால் நானே  கொரோனா என்று ஏதோ ஒரு காரணம் சொல்லி  சமாதானம் செய்து கொண்டேன் , இப்போது பெத்த அப்பாவிற்குத் துடிக்காதா? உங்கள் அனைவருக்கும் இருக்கும் வேதனையும் வருத்தமும் கூட அவரிடம் இல்லை.”

அப்போது ரமேஷ் , “இல்லை விவேக் , அவர் மருத்துவமனையில் பதைபதைத்துத் தான் இருந்தார்…” 

“அது அந்த திடீர் நிகழ்வுக்கான , அந்த நேர எதிர்வினை தான் தவிர வேறு ஒன்றும் இல்லை அங்கிள்.”

“நன்றாக யோசித்துக் கொண்டாயா? இந்தப் பொறுப்பு இந்தப் பிரச்சனையோடு  முடிவதில்லை, காலம் முழுமைக்கும் , நாளைக்கு  கல்யாணம் காட்சி என்று  எல்லாம் வரும்…” என்று ராஜி விளக்க முற்பட்டார் .

“இதுவரை அப்பா என்ன பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளார்? அம்மா இருக்கும் போது , பணத்தைக் கொடுப்பதுடன் தன் பொறுப்பு முடிந்தது என்று விலகி விடுவார் , அனைத்தையும் அம்மா தான் பார்த்துக் கொண்டார் . இந்த இரண்டு வருடத்திலே குடும்பப் பொறுப்பு அத்தனையையும் நாங்கள் தான் பார்த்துக் கொண்டோம்…” என்றான் கசப்புடன் .

“சஞ்சு செட்டில் ஆகும் வரை பொறுமையாக இருக்கக் கூடாதா…?” என்று ராதா கேட்க , 

“அப்படி யோசித்துத் தான் ஆன்ட்டி , நான் பொறுப்பு எடுத்துக் கொண்டது மட்டுமின்றி , சஞ்சுவையும் பொறுத்துப் போகச் சொன்னேன் , அவரோடு உரசும் விடயங்களைத் தவிர்க்க சொன்னேன் . வீட்டில் இருக்கும் நேரத்தைக் குறைக்க சொன்னேன் .

 இதில் அண்ணன் தனக்கு உறுதுணையாக இல்லை என்று சஞ்சுவிற்குக் கூட அதிக வருத்தம் . இதில் நான் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்று கீத்துவிற்குக் கூட கோபம் ,  சஞ்சுவின் எதிர்காலத்திற்காகவே பொறுமையாக இருந்தேன் . அவர்களை ஏதேதோ சொல்லிச் சமாதானப் படுத்தினேன் . ஆனால் இன்று, அவன் குரல் உடைய ,  “அவள் உயிருக்கே  ஆபத்து என்று வரும் நிலையில்….” என்று கண்கலங்கினான் .

ரமேஷ் வந்து அணைத்துக் கொண்டார் . அதுவரை கட்டுப்பாடுடன் இருந்த விவேக் உடைந்து அழுதான்.

விவேக்கின் பேச்சைக் கேட்டு , அவன் பட்டப் பாட்டை நினைத்து , ராதாவும் ராஜியும் கண்கலங்கி நின்றார்கள்,  கண்ணனும் வந்து தட்டிக் கொடுத்தார் . சற்று நேரம் அங்கே அமைதியே நிலவியது . ராதா தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க , அதைக் குடித்தவன் ஆசுவாசமானான் . 

பின், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?” என்று விவேக் வினவ,

“நீ மீண்டும் ஒருதடவை பொறுமையாக அப்பாவிடம் பேசிப் பார்க்கலாமே விவேக்…” என்று ரமேஷ் சொல்ல,

“ஏதாவது பயன் இருக்கும் என்று நினைக்கிறீர்களா அங்கிள்…?”

“இல்லை விவேக் , ஒரு வேளை பிரச்சனையின் தன்மை , வீரியம் புரியாமல் இருக்கலாம்….” என்றார் தன்மையாக .

“சரி அங்கிள் , உங்களுக்காகப் பேசுகிறேன் , எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை…”  என்று எழுந்தான் .

“சாப்பிட்டுப் போப்பா” என்றார் ரமேஷ் .

“இல்லை , சஞ்சு காத்திருப்பாள் . இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்…” என்று கிளம்பினான் .

மற்ற அனைவரும் இவர்களை நினைத்து கவலையடைந்தனர் .

தொடரும்….

கதைத்திரி-22

அத்தியாயம் 56

மறுநாள் காலை விஜயன் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்க , “இன்று மாலை வேலையை முடித்து விட்டு , அன்று சந்தித்த என் நண்பன் வீட்டுக்கு , வாங்க  அப்பா..”

“என்னடா , கட்டளையெல்லாம் பலமாக இருக்கு , நீ சொன்னால் நான் வர வேண்டுமா?”  என்றார் கோபமாக . 

“முக்கியமான விசயம் பேச வேண்டும் ,  வீட்டில் வைத்துப் பேச முடியாது” என்றான் அழுத்தமாக .

“என்ன அதிகாரம் தூள் பறக்கிறது ? வர முடியாது” என்றார் அவரும் வீம்பாக .

“அப்பா…” என்றான் பல்லைக் கடித்தபடி, “அப்புறம் நாளை என்னிடம் பேசாமல் முடிவெடுத்து விட்டான் என்று குற்றஞ்சாட்டாதீர்கள்”  என்றான் தீர்க்கமாக .

விவேக்கைக் கூர்ந்து பார்த்த விஜயன் , அவன் முகத்தில் இருந்த அழுத்தத்தை கவனித்தவர் , “சரி , வருகிறேன்…” என்று அலுவலகம் கிளம்பினார் .

வழக்கம் போல் மாலை கீத்து வர , இருவரும் கொரியன் சீரியலில் தலையைக் கொடுக்க , விவேக் கிளம்பினான் .

விஜயன் வர ,  அவருக்கும் தனக்கும் காபியை கலந்து கொண்டு வந்து அமர்ந்தான். காபியைப் பருகும் வரை அமைதியே நீடித்தது .

“என்ன சொல்ல வேண்டும் ?” என்று விஜயனே பேச்சை ஆரம்பிக்க ,

 “நானும்  , சஞ்சுவும் வேறு வீடு பார்த்துப் போகலாம் என்று நினைக்கிறேன் அப்பா”  என்றான் அழுத்தமாக .

கோபப்படாதீர்கள் அப்பா , பொறுமையாக இருங்கள் , சஞ்சுவிடம் அமைதியாகப் போங்கள் போன்ற பேச்சுக்களையே எதிர்பார்த்திருக்க , விவேக் அசால்ட்டாக குண்டைப் போட , விஜயன் அதிர்ந்து போனார் ,

“என்னடா உளருகிறாய்… ?” என்று அவர் குரல் உசந்தது.

“பொறுமையாகக் கேளுங்கள் அப்பா…” என்றான் தனிவாக .

“நீ பேசுகிற பேச்சைப் பொறுமையாக வேறு  கேட்கச் சொல்கிறாயா ?” என்று கத்த ,

“சஞ்சு மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.  உங்ளைப் பார்க்கவே பயப்படுகிறாள் , உங்கள் பேச்சை எடுத்தாலே நடுங்குகிறாள்…”  என்று விவேக் விளக்க முற்பட்டான் .

“அப்பாவிற்குப் பயப்படுவது என்ன ஊர் உலகத்தில் நடக்காததா?  அதற்காக எல்லோரும் தனியாகப் போய்விடுகிறார்களா?, எல்லாம் சம்பாதிக்கிற திமிர்” பொரிய தொடங்கினார் .

“தப்பு செய்தால் அப்பாவிற்குப் பயப்படலாம் , கண்டிப்பான அப்பாவிற்குப் பயப்படலாம் . ஆனால் காரணமே இல்லாமல் குற்றஞ்சாட்டும் அப்பாவிற்கு…..”

“என்னடா , சும்மா சும்மா , அதையே பேசுகிறாய் , எனக்குத் தோன்றியதைச் சொன்னேன் , இதில் என்ன தப்பு கண்டுபிடித்துவிட்டாய்?” என்று அவர் பேச்சிற்கு நியாயம் கற்பிக்க முயல , 

“இந்த வார்த்தைகள் எத்தனை வீரியம் மிக்கவை என்று உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறீர்களா ?”

விஜயன் அமைதி காக்க ,

“அப்ப நான், நீங்கள் தான்  அம்மாவை வங்கிக்குச் செல்ல உந்தியது , அதனால் இன்று அம்மா இல்லை என்று சொல்லட்டும்மா ?” என்றான் காட்டமாக.

கண்கள் சிவக்க , “டேய்…! தேவையற்றதைப்  பேசாதே…” என்று கர்ஜித்தார் .

“வலிக்குதா ?  அந்தச் சின்ன பெண்ணிற்கு வலிக்கும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை அப்பா . அவளை மலர்வதற்குள்  கருக்கி விட்டீர்களே ..?” என்றான் ஆதங்கத்துடன் .

மேலும், “அவள் வெளி உலகத்தைக் காணவே பயப்படுகிறாள் , அவளை எப்படிச் சரி செய்வேன் என்று நினைத்தாலே அடிவயிறு கலங்குகிறது…”

“அதற்குக் காரணம் புகைப்படப்  பிரச்சனை. தேவையில்லாமல் அதையும் இதையும் இணைக்காதே…” என்று விஜயன் வாதாட ,

“ஆமாம் ,  கடைசியாக கை அறுத்துக் கொண்டதற்கு அதான் காரணம். ஆனால் அதற்கு முன்பு நடந்ததற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?” என்று சாட்டையாக கேள்வியைச் சுழட்ட ,

விஜயன் பதிலற்று அமைதியாக நின்றார் .

 “சஞ்சுவிற்கு இதமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்கிறார் டாக்டர்  . அது உங்க கூட இருக்கும் போது  நிச்சயமாக நடக்காது . அதற்குத் தான் இந்த முடிவு” என்றான் தீர்க்கமாக .

“இதற்கு யார் சூத்தரதாரி ? என்று எனக்கு நன்றாகவே புரிகிறது…” என்றார் குதர்க்கமாக .

“தேவையில்லாமல் பேச்சை மாற்றாதீர்கள் அப்பா.”

 “என்னடா  தேவையில்லாதது?  இவை அனைத்திற்கும் கதை,  திரைக்கதை எழுதிக் கொடுத்தது , உங்கள் அம்மாவின் தோழிகள் தானே…” என்றார் இளக்காரமாய்

“தேவையில்லாததைப் பேசி  உங்களை கீழே இறக்கிக் கொள்ளாதீர்கள் அப்பா.”

“நான் சொல்வது உண்மை தானே..” என்றார் சூடாக .

“எனக்கு அறிவே இல்லை என்று நினைத்து விட்டீர்களா?” என்று அவனும் பதில் கொடுக்க ,

“ஒருவேளை மூளையைக் கடன் கொடுத்திருந்தால்….” என்றார்  விஜயன் எடக்காக .

விவேக்கிற்குக் கோபம் அதிகமாக ,  “நீங்கள் சரியான சுயநலவாதி அப்பா , உங்களுக்குத் தேவையான பொழுது அவர்களிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்டு , உங்களுக்கு அவர்களால் பிரச்சனை வரும் என்று நினைக்கும் பொழுது ஓரு நிமிடம் கூட யோசிக்காமல் அவர்களைப் பற்றித் தவறாகப் பேசுகிறீர்கள்.”

“அவர்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்லியாகி விட்டது.” 

“அது எப்படி அப்பா ?  அம்மா இறந்த முதல் பதினைந்து நாட்களை அவர்கள் இல்லாமல் எப்படி கடந்திருப்போம்?  ஏன் போன வாரம் மட்டும் அவர்கள் உதவி இல்லையென்றால் நம்ம நிலைமை என்னவாகியிருக்கும்? இதைப்பற்றி சிறு உறுத்தல் கூட இல்லாமல் உங்களால் எப்படி பேச முடிகிறது..?” என்றான் ஆங்காரமாய் . 

“நான் செய்வது சரியா , தப்பா என்று உங்களிடம் பேசும் முன் கூட மனதில் சிறு ஊசாலாட்டம் இருந்தது. இப்போது மிகுவும் தெளிவாகிவிட்டேன். மிக்க நன்றி” என்றான் எள்ளல் சிரிப்போடு .

“விவேக்…” என்று விஜயன்  ஏதோ பேச முயல , “நீங்கள் பேசியதெல்லாம் போதும் , நான் முடிவெடுத்து விட்டேன் . அப்புறம் முக்கியமான விசயம் , அவங்களிடம் இதைப் போய் பேசிச் சண்டை போட்டீர்களென்றால் தற்காலிகமான இந்தப் பிரிவு , நிரந்திரமாகிவிடும்”  என்று கடும் எச்சரிக்கை விடுத்தான்.

பின், “வாங்க போகலாம்…” என்று நடந்தான் . விஜயன் பேச்சற்று , அவனைப்  பின் தொடர்ந்தார் .

அத்தியாம் 57

மறுநாள் வீட்டுக்கு வந்த விவேக் நடந்த விவரங்களைக் கூற , அனைவரும் மிகவும் வருந்தினர் . 

“உன் அப்பா புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைத்தோமே ? பிரிவு இல்லாமல் குடும்பமாக  சஞ்சுவிற்கு உறுதுணையாக நின்றால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம் . ஆனால் இப்படி ஆகிவிட்டதே… “ என்று ரமேஷ் வருந்த , 

நான் எதிர்பார்த்திருந்தேன் என்பது போல் விவேக் விரக்திச் சிரிப்பைச் சிந்த ,

“சரி , நம்மால் ஆன முயற்சிகளை அனைத்தையும் செய்துவிட்டோம் . அவர் ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் என்ன செய்வது?  அடுத்து என்ன செய்வது என்று பார்ப்போம்..” என்று ராஜி அடுத்த கட்ட நகர்வுகளைத் தொடங்க,

“எங்களைத் தவிர வேறு யாருடனும்  அறிவுரை கேட்க வேண்டுமானாலும் கேள் விவேக் ,  பல விதமான கோணங்களில் பிரச்சனையை அணுகுவது நல்லது தான்..” என்று கண்ணன்  தூண்ட ,

“என்  அப்பாவின் குணத்தால் , சொந்தக்காரர்கள் எல்லாம் எட்ட நின்றுவிட்டார்கள்  . சொந்த சித்தப்பா , மாமா எல்லாம் எங்களுக்கு அந்நியர்கள் தான் .  ஏதோ அம்மாவின் உபயத்தால்  , நீங்கள் எல்லோரும் கிடைத்தீர்கள் இல்லையெனில் எங்களின் நிலைமை , நினைக்கவே முடியவில்லை…” என்று பெருமூச்சு விட்டான்.

இடைபுகுந்த ராதா , “நாங்கள் உன்னைக் கைக்குள் வைத்துக் கொண்டு குடும்பத்தைப் பிரிக்க முயலுகிறோம் என்றும் பிரிவினையைத் தூண்டுகிறோம் என்றும்  எங்களைப் பற்றி நாளைக்கு நான்கு பேர் நான்கு விதமாகப் உன்னிடம் பேசுவார்கள் விவேக்…”

விவேக் அவர்களின் பேச்சை ஆழ்ந்து கேட்க,

“அதைக் கேட்டு விட்டு, நாளை எங்கள் பேச்சைக் கேட்டுத் தப்பான முடிவு எடுத்து விட்டோமோ என்ற யோசனை வராதில்லையா? உறுதியாக இருக்கிறாய் தானே ? நீ தெளிவாக இருக்கிறாய் அல்லவா?  எங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது தானே?”

“உங்களை நம்பவில்லையென்றால்  நான் இங்கே வந்தே இருக்க மாட்டேன் ஆன்ட்டி…” என்றான் தெளிவாக .

“சந்தோஷம் விவேக் , இந்த நம்பிக்கையை நாங்கள் என்றும் காப்பாற்றுவோம்.” என்றார் ரமேஷ் .

இடைபுகுந்த கண்ணன் , “நீ இதற்குத் தயாராக இருக்கிறாயா ? என்று தெரிந்த கொள்ளத்தான் இத்தனை கேள்விகள். நீ தெளிவாக இருக்கிறாய் , இனி அடுத்து செய்வதை முடிவெடுக்கலாம்.”

“தனி வீடு தவிர வேறு வழி இருப்பதாக எங்களுக்கும் தெரியவில்லை…”  என்று கண்ணன் சொல்ல, அனைவரும் ஆமோதித்தனர் .

“அடுத்து என்ன செய்யலாம் அங்கிள்?” 

“எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு , வாடகைக்கு வருகிறது , நீங்க அங்கே வந்து விடுங்கள்”  என்றார் ரமேஷ் .

“ஆமாம், நானும் ராஜியும்  பார்த்துக் கொள்வோம்  . இது எங்களுக்கு மிகவும் வசதி” என்று ராதா முன் வந்தார் .

“உனக்கு ஓ,கே.வா? என்று கண்ணன் கேட்க ,

“டபுள் ஓ.கே. அங்கிள் , உங்கள் அருகே இருப்பது பல விதத்தில் வசதி..” 

“சரிப்பா , நாங்கள் இங்கே உரிமையாளரிடம் பேசி வாடகை , அட்வான்ஸ் எல்லாம் முடிவு செய்து விடுகிறோம் . வீடு பால் காய்ச்சிய பிறகு , வேண்டிய சாமான்களை நீ வாங்கினாலும் சரி இல்லை ஆன்ட்டிகள் வாங்கித் தருவார்கள்.” 

“சரி அங்கிள் , எல்லாவற்றையும் இந்த வாரத்தில் முடித்து விடலாம் . அப்புறம் இதைச் சஞ்சுவிடமும் , அப்பாவிடமும் தெரிவித்துக் கொள்ளலாம்.”

“இனி நாம் அனைவரும் ஒரே குடும்பம் , கட்டாயமாக இந்தச் சிக்கலை கடந்து விடுவோம் . தைரியமாக இரு விவேக். அப்புறம் காவல் நிலையத்திற்குத் தனியாக அலையாதே, நாங்கள் யாராவது  உன்கூட இணைந்து கொள்கிறோம்” என்றார்  ரமேஷ் .

“சரி அங்கிள்…”  என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.

தொடரும்….