நண்பன் வீட்டில் பல யோசனைகளோடு அப்பாவிற்காக காத்திருந்தான் விவேக்.
நண்பன் வேலைக்குப் போயிருந்ததால் தனிமையில் அப்பாவுடன் பேசச் சரியாக இருக்கும் என்று இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான் . அவருடன் பொறுமையாகத் தான் பேச வேண்டும் என்று நினைத்திருந்தான் . ஆனால் அவரைக் கண்டவுடன் , ஆத்திரம் பொங்க , தடாலடியாக ஆரம்பித்தான் .
இந்த வார்த்தைகளை கேட்டவுடன் வழக்கம் போல் , விஜயனின் ஈகோ எழுந்து கொள்ள ,
“என்னடா ஓவராக பண்ணுகிறாய் ? சரி, நானும் வார்த்தைகளைக் கொஞ்சம் கூடுதலாக விட்டு விட்டோம் என்று பொறுமையாகப் போனால் ரொம்பத்தான் செய்கிறாய்…” என்ற அதட்ட ,
கடுப்பான விவேக் , “அப்பா , உங்கள் , “சோ கால்டு “ கூடுதல் வார்த்தை , அவளைச் சாவு முனைக்கே தள்ளி இருக்கிறது…”
“என் வார்த்தை மட்டும் காரணமில்லை , அந்தப் புகைப்படங்களும் தான் . பழியை என் மேல் போடப் பார்க்காதே…”
“எப்படி அப்பா ? நெஞ்சில் ஈரம் இல்லாமல் பேசுகிறீர்கள்? நீங்கள் பெத்த பெண் பிரச்சனையில் மாட்டியிருக்கும் போது அவளுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று தோன்றவில்லையா?”
“ பிரச்சனைகளை அவளே தான் இழுத்துக் கொண்டாள் , நான் சொன்ன மாதிரி படித்து, பொறியியல் கல்லூரிக்குப் போயிருந்தால் , கண்டிப்புடன் இருந்திருப்பார்கள் , இந்தத் தவறுகள் நடந்திருக்காது , எந்தக் கவலையும் இருந்திருக்காதே….”
“என்ன பேசினால் என்ன பேசுகிறார் ? ச்சீ…” என்று தோன்றியது,
மேலும், “இந்த சுற்றுலாவிற்குப் போக வேண்டாம் என்று சொன்னதைக் கேட்டீர்களா ? தேவையில்லாததை இழுத்துக் கொண்டு விட்டு , இப்ப குத்துதே , குடையுதே என்றால்…..” என்றார் விஜயன் வழக்கம் போல் .
முதலில் சஞ்சுவின் நிலையைப் பார்த்துப் பயந்திருந்தார் , அவளுக்கு ஆபத்து இல்லை தெரிந்தபிறகு , அவர் குற்ற உணர்வு குறைந்தது . மேலும் விவேக்கின் நடவடிக்கைகள் , அவரின் ஈகோவை உசுப்பேத்த , பழைய விஜயனாக மாறியிருந்தார் .
இதைக் கேட்ட பிறகு , சஞ்சுவிடம் எப்படி பேசியிருப்பார்? எப்படி வாட்டியிருப்பார்? என்று விவேக்கிற்கு நன்றாகப் புரிந்தது. உடனே, “இப்படிப் பேசிப் பேசித்தான் சஞ்சுவை இந்த நிலைமைக்கு ஆகியிருக்கிறீர்கள்…” என்றான் வேகமாக .
“என்னடா பேசுகிறாய்?”
“இன்றைய சஞ்சுவின் நிலைமைக்கு நீங்கள் காரணமில்லை , பிற புறக் காரணிகள் தான் இல்லையா? ஆனால் அம்மாவின் இறப்புக்கு மட்டும் சஞ்சுதான் காரணம் இல்லையா?” என்று பாயிண்ட்டாக கேட்டான்.
மேலும், “நீங்கள் கடைசி நேரம் வரை வேலையை முடிக்காமல் வைத்தது, அன்றே போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது, மறைமுகமாக அம்மாவை போகச் சொன்னது என்று எதுவும் உங்கள் தப்பு இல்லை , அப்படித்தானே?” என்றான் தீப்பார்வையோடு .
அப்படியும் ஆத்திரம் அடங்காமல் , “எப்படி அப்பா? பேசிப்பேசி அவளை மனநோய்க்குளேயே தள்ளி விட்டீர்கள்? நீங்கள் ஏற்படுத்திய வலியைத் தாங்க முடியாமல் தன்னையே காயப்படுத்தும் நிலைக்கு அவள் ஆளாகியிருக்கிறாள். நீங்கள் மனிதர் தானா?”
தன் குட்டு உடைந்ததில் அதிர்ச்சியானார் . பின் சமாளிக்கும் வகையில் , “இதெல்லாம் ஒரு கோபத்தில் சொல்வதுதான் , ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் பார்த்துக் கொண்டிருந்தால் , வாழ முடியாது” என்றார் தெனாவட்டாக .
“இப்ப கூட என்னடா காயம்? என்னடா பிரச்சனை? என்று கேட்கத் தோன்றவில்லை .உங்களை நல்லவர் என்று காட்டத்தான் முயலுகிறீர்கள் “ என்றான் வெறுப்பாக.
பின், “சரி , நான் உங்கள் வாதத்திற்கே வருகிறேன் . நீங்கள் கோபத்தில் விடும் வார்த்தைகளுக்கு அர்த்தம் எடுக்கக் கூடாது என்கிறீர்கள் , அப்படித்தானே? “
“ஆமாம்” என்று விஜயன் தலையாட்ட ,
“அப்ப நான் எனக்கு கோபம் வரும் பொழுது எல்லாம் , என் தங்கையைச் சாவின் விளிம்புக்குத் தள்ளியவர் என்று உங்களை சொல்லலாமா?” என்றான் காட்டமாய் .
“டேய்…!” என்று வேகமாகக் கையை ஓங்கிய விஜயன் , “பெரியவர்களுக்கு மரியாதை தரத் தெரியவில்லை, பணிவாகப் பேசத் தெரியவில்லை , உங்க அம்மா நல்லா…. வளர்த்திருக்கிறாள்…” என்று இழுக்க ,
“அம்மா பற்றி எதுவும் பேசாதீர்கள்…” என்றான் வேகமாக,
“நீ எதிர்த்துப் பேசுகிறாய் , சஞ்சு என்னவென்றால் தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்து வைக்கிறாள் . என்ன உன் அம்மாவின் வளர்ப்போ ?” என்று விஜயன் சலிக்க,
விவேக் தன் பொறுமை அனைத்தையும் தொலைத்தே விட்டான் , “என்ன மனிதர் நீங்கள் ? செய்த தப்பிற்கான வருத்தம் இல்லை, குற்ற உணர்ச்சி இல்லை, மாற்றத்திற்கான அறிகுறியில்லை .”என்றான் விரக்தியாக.
“என்னடா ? குரலை உயர்த்திப் பேசுகிறாய்? இதில் இருந்தே உங்க அம்மா வளர்த்தால் லட்சணம் தெரியவில்லை.. “ என்று அவரும் பதிலுக்கு எகிற,
“சபாஷ், இப்பவும் நீங்க தான் சரி , உங்கள் ஈகோ தான் பெரிசு. அதற்காக அழகாக அடுத்தவர் மீது எளிதாகப் பழியைப் போடுகிறீர்கள்.” என்று முறைத்தவன்,
“நானும் பேசக்கூடாது , நல்ல முறையில் இந்தப் பிரச்சனையைத் தீர்த்து விட வேண்டும் என்று நினைத்தேன் . ஆனால் நீங்கள் பேச வைக்கிறீர்கள்…” என்றான் கசப்புடன் .
“ஒரு முறை அவ்வார்த்தைகளை விட்டால் , அது கோபத்தின் வெளிப்பாடு , ஆனால் தெரிந்தே , காரியத்திற்காகப் பலமுறை பயன்படுத்தினால் , அதற்கு பெயர் அயோக்கியத்தனம் என்று தெரியாத முட்டாள் இல்லை நான்” என்றான் சினத்துடன்.
மேலும் மனம் தாங்காது , “மாற்ற முடியாது , நிகழாது என்று தெரிந்த பின் , அதற்கான போராட்டங்கள் தேவையற்றது என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள், அது தான் சரி . இப்போது நன்றாகப் புரிகிறது , உங்களுக்குப் புரிய வைத்து விட முடியும் , மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நினைத்தது என் முட்டாள் தனம் தான்.
அம்மா இவ்வளவு சீக்கிரம் போய் விட்டார்களே என்று பல நாள் நான் வருத்தப்பட்டது உண்டு , இப்போது நினைக்கிறேன் , நல்லது. சிக்கிரம் போய்விட்டார்கள் . உங்களிடம் இருந்து துன்பப்படாமல் , உங்கள் ஈகோவிற்குத் தீனியாகாமல் போய்விட்டார்கள்… “ என்றான் மனவேதனையோடு .
“ரொம்பப் பேசுகிறாய் விவேக்” என்றார் கோபமாக .
“இப்பக் கூட பெண்ணுக்கு என்னவோ என்ற பதற்றம் இல்லை . உங்களை நம்பி என் தங்கையை எப்படி அந்த வீட்டில் விடுவது ?, நான் இல்லாத வேளையில் , அவளைக் காயப்படுத்த மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம் ?” என்று சீறினான் .
அவர் பதிலை கேட்டு வெறுத்தவன். “உங்களிடம் பேசிப் புரிய வைத்து விடலாம் என்று நினைத்த என் மடத்தனத்தை எதைக் கொண்டு வேண்டுமானாலும் அடிக்கலாம் . நீங்கள் வீட்டுக்குக் கிளம்பலாம்…” என்றான் விரக்தியாக .
விஜயன் முகமெல்லாம் கோபத்தில் சிவக்க , எழுந்து கதவை அடைய ,
“ஒரு நிமிடம் , இந்தக் கோபத்தைச் சஞ்சு மீது காட்டினீர்கள் என்றால் நான் பொல்லாதவனாகி விடுவேன்” என்று எச்சரித்தான் .
அவர் இவனைக் கோபத்தோடு முறைத்து விட்டுச் செல்ல , அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் , மூளை வேலை நிறுத்தம் செய்ய , அசைவற்று அமர்ந்திருந்தான் விவேக்.
கதைத்திரி21.0
அத்தியாயம் 53
அப்பா மீது நம்பிக்கையில்லாமல் உடனே அவனும் கிளம்பினான் . வண்டி அதுபாட்டிற்கு பழக்கத்தோஷத்தில் ஓட , மனம் அடுத்த என்ன செய்ய? என்ற சிந்தனை ஓட்டத்திலே இருந்தது . வீட்டை அடைந்தவன் , அப்பா அவர் அறையில் இருப்பதைக் கவனித்தவன் , சஞ்சுவைப் பார்க்க சென்றான் .
இவன் உள்ளே நுழைந்ததைக் கவனிக்காமல் , அங்கு கீத்துவும் , அவளும் வெகு கவனமாகக் கொரியன் சீரியல் பார்த்துக் கொண்டிருக்க , மெதுவாக அருகில் சென்று அமர்ந்தான் விவேக் ,
விவேக் பேச முயல , “அப்புறம்..” என்று கீத்து கை அசைத்தாள்.சுவாரசியமான விவேக் , திரையை பார்த்தான் , அதில் காதல் காட்சி ஓடிக் கொண்டிருக்க , “எனக்கு ஒரு சந்தேகம் ?” என்று சீரியஸாக கேட்க ,
கீத்து சலித்தபடி , “சொல்லுங்க குரு…”
“இதில் யார் ஹீரோ?” என்ற அதி முக்கியமான சந்தேகத்தை விவேக் கேட்க ,
கடுப்பான கீத்து , அவன் மீது தலையனையை தூக்கி அடித்தாள் . எதிர்பாராத தாக்குதலால் தலை கலைய , அதைச் சரி செய்தபடி , “என்னாச்சு ? , ஏன் இந்த கொலை வெறி?” என்று புரியாமல் கேட்க ,
“நிஜமா சஞ்சும்மா , நான் கலாய்க்கவெல்லாம் இல்லை , நிஜமாகவே யார் என்று தெரியவில்லை ? இரண்டு பேரும் லிப்ஸ்டிக் போட்டிருக்கிறார்கள் , தாடி ,மீசை எதையும் காணோம் , கிளீன் சேவ்வாக மொழு மொழுவென இருக்கிறான்…”
சஞ்சு வாய்விட்டு கலகலவென சிரிக்க , விவேக் கண் இமைக்காமல் தங்கையை பார்த்தான். அதுவரை மனதில் இருந்த தவிப்பு , கவலை எல்லாம் குறைவதை உணர்ந்தான் .
கடுப்பான கீத்து , மீண்டும் தலையனையை தூக்கி ஏறிய , சரியாகக் கேட்ச் செய்தவன் , “உண்மையைத் தானே சொன்னேன்….” என்று கண்ணடித்து வம்பு செய்ய ,
“கொரியன் ஸீரியல் ரசிகர் மன்றத் தலைவி சும்மா இருப்பாளா ? உங்க அனிமே கருமத்திற்கு இது எவ்வளவோ பராவாயில்லை , எல்லா காரெக்டரும் ஒரே மாதிரி இருக்கிறது , ஒரே ரத்தம்…” என்று கொரியன் சிரியலுக்குக் கொடிப்பிடிக்க ,
“அதைப் பற்றிப் பேசாதே , அதற்கெல்லாம் ஒரு தனி ரசனை வேண்டும்…” என்று விவேக் பொங்க ,
சஞ்சு சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தாள் .
உடனே கீத்து , சஞ்சுவிடம் பஞ்சாயத்துக்குப் போனாள். “சஞ்சு, நீ தான் ஜட்ஜ் , கொரியன் ஸீரியல் தானே சூப்பர் என்று சொல்..” என்று கண்ஜாடை செய்ய ,
“அண்ணா..” என்று சஞ்சு ஆரம்பிக்க ,
“இரும்மா சஞ்சு , நீ அனிமே சீரியல் பார்த்திருக்கிறாயா…?”
“இல்லை அண்ணா…”
“அப்புறம் எப்படி ஜட்ஜ் செய்வாய்?”
சஞ்சு திருதிருக்க , “ஒன்று செய்யலாம் , உனக்கு ஒரு வாரம் டைம் , நான் சொல்லும் சீரியலை பார், கீத்து சொல்வதையும் பார் , அப்புறம் ஜட்ஜமென்ட்டை சொல்….”
“டீல் ?” என்று புருவத்தை உயர்த்தி கிண்டலாக கீத்துவிடம் கேட்க ,
“டீல் குரு” என்று கீத்து ஆஜராக ,
சஞ்சுவும் ஓ.கே. சொல்ல , அவளை என்கேஜ் செய்து விட்டோம் என்று மனதில் நிம்மதி பெருமூச்சு விட்டான். பின் சிறிது நேரம் வேறு விசயங்களைக் கலகலத்து விட்டு , கீத்து கிளம்பிச் சென்றாள் .
விஜயன் அறையில் இருக்க , சஞ்சுவை விவேக் சாப்பிட கூப்பிட , “வேண்டாம் அண்ணா , இங்கே…” என்று தயங்க ,
“அப்பா சாப்பிட்டு அறைக்குப் போய்விட்டார் , வா , நாம் சாப்பிடுவோம்” என்று கைப்பிடித்துக் கூட்டிச் சென்றான் .
அத்தியாயம் 54
இரவு உணவிற்குப் பின் சஞ்சு மாத்திரை போட்டு தூங்கிவிட , விவேக் சஞ்சுவின் பிரச்சனைகள் , அதன் தன்மைப் பற்றி கூகுளில் தேடிக் கொண்டிருந்தான்.
அப்போது, “ஆர் யூ ஃபிரி ?” என்று கீத்துவிடமிருந்து பதிவு வர,போனை எடுத்துக் கொண்டு அவன் அறைக்குச் சென்றான் . பின் கீத்துவை அழைத்தான் .
“என்ன குரு ? டல்லாக இருந்தீங்க ? அப்பப்ப யோசனை வேறு எங்கோ போச்சு ? குரல் வேறு சரியில்லை , டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கீத்து கேட்க ,
தன்னை இவ்வளவு கவனிக்கிறாளா?தன்னை இவ்வளவு புரிந்து கொள்கிறாளா? என்று விவேக் அசந்து போனான் . மேலும் ஓடி ஓடி கலைத்திருந்த மனதிற்கு , கீத்துவின் கவனிப்பு ஆறுதலாக இருந்தது .
“குரு…, குரு..” என்று அழைக்க ,
உணர்வு பெற்றவன் , “சொல்லு கீத்து”
“என்னாச்சு குரு ?”
விவேக் அனைத்து விவரத்தையும் கூற , கீத்து அதிர்ந்தாள் .
புகைப்பட விடயத்தை கூட, சமூகத்தில் இருக்கும் வல்லூறுகளால் நிகழும் கொடூரம் என்று கீத்துவால் ஏற்க முடிந்தது . ஆனால் சொந்த அப்பாவே , தன் பெண்ணின் நலனைக் கருதாமல் , தன்னை முன்னிருத்தி , நான் தான் என்ற எண்ணத்தோடு, மென்மையான சஞ்சுவைக் கசக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தாள் . கடுங்கோபம் கொண்டாள் .
“என்ன குரு ? எப்படி குரு இப்படி…?” என்று கோபத்தில் வார்த்தை வராமல் தடுமாறினாள்.
“என்ன செய்ய கீத்து ? கேட்டதிலிருந்து என் அப்பாவை நினைத்தால் அசிங்கமாகவும் அருவருப்பாவும் உள்ளது. சொல்ல முடியாத அளவிற்கு கோபம் கனன்று கொண்டிருக்கிறது , எங்கே அவரை மாதிரி வார்த்தைகளை விட்டு விடுவோமோ? என்று அடக்கிக் கொண்டிருக்கிறேன்.”
“என்ன சொல்வது ?” என்று தெரியாமல் கீத்து அமைதி காக்க ,
“இவ்வளவு பெரிய விசயங்கள் நடந்த பிறகும் அப்பா வருந்தவில்லை , திருந்தவில்லை என்று தன் ஆற்றாமையைக் கொட்டினான் . தன் பெண்ணுக்கு இருக்கும் பிரச்சனையை நினைத்து எந்த பரிதிவிப்பும் இல்லை . அடுத்த நகர்வை எப்படி எடுத்துச் செல்வது ? என்றே புரியவில்லை கீத்து…” என்று புலம்பினான் .
“நான் சொல்கிறேன் என்று தப்பா நினைக்காதீர்கள் , விசயம் மிகவும் பெரிசு குரு , தனியாகச் சமாளிப்பது மிகவும் கடினம் , பெரிய முடிவுகளை எடுக்க வேண்டியது வரும் என்று நினைக்கிறேன்…”
“எப்படிச் சொல்கிறாய்?”
“முதலில் அவள் அறையை விட்டு வெளியே வர வேண்டும் , அதற்கான சூழ்நிலை வீட்டில் இருக்க வேண்டும் . அப்புறம் தானே வெளி உலகிற்கு…..” என்று இழுத்தாள் .
மேலும், “அங்கிள் பற்றி நம்ம எல்லோருக்கும் தெரியும் . பொறுமை கம்மி ,சற்றும் யோசிக்காமல் வார்த்தையை விட்டு விடுவார் . அப்புறம் அதுவரை நாம் செய்த முயற்சியெல்லாம் பலனற்று போய் விடும் . திரும்பி முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் . முக்கியமாக மனநலம் சம்மந்தப்பட்ட சிகிச்சைகளுக்கு அதீத பொறுமையும் , அதிக நேரமும் ஆகும்…” என்று உடைத்துப் பேச ,
“உனக்கு எப்படித் தெரியும் கீத்து ?”
“அப்பா கல்லூரியில் கவுன்சிலிங் டீமில் இருக்கிறார் அம்மாவும் சிறப்புப் பள்ளி போய் வருகிறார்கள் இல்லையா? அங்கு நடக்கும் பல பிரச்சனைகளை வீட்டில் பேசுவார்கள் . எங்கே தப்பு நடந்தது , எப்படி தவிர்த்திருக்கலாம் , அதே போல் இளைய தலைமுறையான என்னுடைய பார்வை , இந்த விசயங்களில் எப்படி இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொள்வார்கள் . மொத்தத்தில் நிறைய கலந்துரையாடல் நடக்கும் .”
“ஒ…! ரொம்ப சந்தோஷம் கீத்து , உன்னைக் கைப்பிடித்துக் கூட்டிச் செல்ல நல்ல பெற்றோர்கள் இருக்கிறார்கள்”
“அவர்கள் உங்களுக்கும் உதவுவார்கள் , வழி காட்டுவார்கள் குரு” என்றாள் தன்மையாக .
“முடியவில்லை கீத்து , எத்தனையை சமாளிக்க? ஒரு பக்கம் கயிறு மேல் நடப்பது போல் சஞ்சுவிடம் நடந்து கொள்ள வேண்டும் , மறுபக்கம் அப்பா எந்த குழப்பமும் செய்து விடக் கூடாது என்று கண்காணிக்க வேண்டும் .போலீஸ் கேஸைப் பார்க்க வேண்டும் , இதில் நெதர்லாந்தில் முடித்த பிராஜக்ட்டை , நான் தான் இங்கு டீம் ஹெட்டாக இருந்து வழி நடத்த வேண்டும் என்று ஆயிரம் விசயங்கள் மண்டையில் ஓடுது…”
“ஏதோ கெட்ட நேரம் , எல்லாம் சரியாகிவிடும் , ஊரில் எங்கள் பாட்டியிடம் , நிறைய பேர் வந்து , கடவுள் ஏன் தான் இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்தாரோ என்று புலம்புவார்கள் குரு .”
அதற்கு அவர் , “கஷ்டத்தைக் கொடுத்த கடவுள் , அதற்கான தைரியத்தையும் , வழியையும் , வலிமையையும் கண்டிப்பாகக் கொடுப்பார் என்று தைரியம் சொல்வார் . எனக்கு இப்போது அது தான் ஞாபகத்திற்கு வருகிறது . நிச்சயமாக வழி செய்வார் குரு , தைரியமாக இருங்கள் .”
“அனைத்திற்கும் மேல் , மஞ்சு ஆன்ட்டி உங்கள் கூட இருப்பார்கள். அவங்க ஆசிர்வாதம் உங்க கூடவே இருக்கும். இந்தக் கஷ்ட காலத்தை நிச்சயமாக , நீங்கள் வெற்றிகரமாகக் கடப்பீர்கள்” என்று ஆறுதல்படுத்தினாள்
“அம்மாவை மனசு ரொம்ப தேடுது கீத்து , அவங்க இருந்தால் இதெல்லாம் நடந்து இருக்காதில்லையா? . சஞ்சுவை பொத்திப் பாதுகாத்திருப்பார்கள்…” என்று வருந்த ,
“என்ன நடக்க வேண்டும் என்று எழுதியிருக்கோ , அது நடந்தே தீரும் குரு. இப்படி இருந்தால் , அப்படி இருந்தால் என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள் . நல்லதே நடக்கும்.”
கீத்து பேசப்பேச , அவனுக்குள் பலம் வருவதை உணர்ந்தான் . சாய தோள் கிடைத்த நிம்மதியில் , “ரொம்ப நன்றி கீத்து” என்றான் உளமாற .
“என்ன குரு ?” என்று கண்டிக்க ,
“நிஜமாக சொல்கிறேன் கீத்து , உன் நட்பு எனக்கு கிடைத்த வரம் . நான் சோர்ந்து , இடிந்து போகும் போது , நீ தான் கைக் கொடுக்கிறாய்” என்றான் நெகிழ்வுடன் .
“விடுங்க குரு , பார்த்துக்கலாம் . நாளை அப்பா , அம்மாவிடம் பேசுங்கள். நிச்சயமாக தெளிவு கிடைக்கும் . அடுத்து செய்வதைச் சேர்ந்தே செய்வோம் இப்போது நிம்மதியாகத் தூங்குங்கள் . குட் நைட்…” என்று போனை வைத்தாள்.