சஞ்சனா… கதைத்திரி-15

அத்தியாயம் 35

கீத்துவிற்கு விவேக் அலுவலகத்திலே இன்டென்சிப் கிடைக்க , இருவரும் காலையில் சேர்ந்தே கேப்பில் சென்றனர் . ஆனால் மாலையில் கீத்து சிக்கிரம் வந்து விடுவாள் . விவேக் வேலை முடிந்து, தாமதமாகவே வருவான்.

அலுவலகத்தில் விவேக் நல்லபடியாகப் பார்த்துக் கொண்டான்.  தனியாக வளர்ந்த கீத்துவிற்கு அவனுடைய பாதுகாப்பும் , அக்கறையும் பிடித்தது . அவர்களிடையே நட்பும் ,நெருக்கமும் கூடியது . நெருங்கிய நண்பர்களானார்கள் .

அலுவலகத்திலும் தன்  புத்திசாலிசனத்தால் நல்ல பெயர் வாங்கினாள் . மொத்தத்தில் இன்டன்சிப்பை மிகவும் ரசித்துச் செய்தாள் .

இன்னொரு புறம் சஞ்சனாவும் தெளிவானதால், அண்ணன் தங்கைக்கிடையே புரிதல் கூடியது . அன்னை இல்லாமல் பெருந் தடுமாற்றங்களைக் கண்டவர்களின் வண்டி இப்போது சீராகத் தொடங்கியது . எந்தக் குழப்பம் என்றாலும் பேசித் தீர்த்தனர் . ஆனாலும் அப்பா சொல்லும் அன்னையைக் கொன்று விட்டாய் என்ற குத்தல் வார்த்தைகளை மட்டும் விவேக்கிடம் சொல்லத் தயங்கினாள் பயந்தாள்.  

விஜயனும், பிள்ளைகளின் நெருக்கத்தையும் புரிதலையும் கவனித்தே வந்தார். சஞ்சு  விவேக்கிடம் , தான் பயன்படுத்திய வார்த்தைகளைச் சொல்லவில்லை என்பதை விஜயன் புரிந்து கொண்டார் .  அவனுக்குத் தெரிந்திருந்தால் நிச்சயமாக ஒரு பிரளயம் வெடித்திருக்கும் என்பதும் விஜயனுக்குப் புரிந்தது . அவரும் பின்னர் அதைப் பயன்படுத்தாமல் பிரமாஸ்திரம் போல் பாதுகாப்பாக வைத்துக் கொண்டார் .

விஜயனும் அந்த வார்த்தைகளைப் பேசவில்லை என்பதால் சஞ்சுவும் அவர் திட்டினால் , கடந்து போகக் கற்றுக் கொண்டாள் .

உன் படிப்பிற்குச் செய்வதே பெரிய விசயம் என்று விஜயன்  சொன்னபின் ,  சஞ்சு எதையும் அப்பாவிடம் கேட்பதில்லை , விவேக்கே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். விஜயனை எதற்கும் எதிர் பார்க்காமல் வாழ பழகிக் கொண்டனர் . விவேக் சஞ்சுவிற்குப் பாதுகாப்புக்  கேடயமானான் . 

 முதலில் பிள்ளைகளிடம் வேலைகளைத் தள்ளி விட்டு, சுகவாசியாக , அதிகாரத்தோடு இருப்பதாகத் தோன்றிய செயல் ,கொஞ்ச நாளான பின்,  விவேக் தன்னை ஒதுக்குவதும் , பெரும் முடிவுகளைத் தன்னைக் கலக்காமல் எடுப்பதும் , தன்னை அலட்சியப் படுத்துவதும்  புரிந்தது . விஜயனுக்குத் தான் ஒதுக்கப்படுவது  வன்மத்தை வளர்த்தது . தனக்கு அதிகாரம் இல்லை என்பது ஆங்காரத்தை உருவாக்கியது. மீண்டும் அதிகாரத்தைக் கைபற்ற , இரைக்காகக் காத்திருக்கும் புலி போல் இருந்தார் .

அவருக்கான வாய்ப்பும் வந்தது . வேலைக்குச் சென்று இரண்டு வருடங்கள் முடிந்திருக்க, விவேக்கிற்கு ஆன்சைட் ஆப்பர் வந்தது . பிராஜக்ட்டிற்காக  நெதர்லாந்திற்கு நான்கு மாதங்கள் செல்ல வேண்டியிருந்தது .

சஞ்சுவை அப்பாவிடம் விட்டுப் போக மிகவும் யோசிக்க, “அண்ணா, உன் கேரியருக்கு, உன் முன்னேற்றத்திற்கு, இது மிகவும் முக்கியம். வாய்ப்பு வரும்போது விடாதே…”

“இல்லைடா…” என்று  விவேக் தயங்க,

“எனக்கு இப்போது நெளிவு சுழிவுகள் புரிந்து விட்டது அண்ணா.நான் சமாளித்துக் கொள்வேன்.நான் என்னைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று சஞ்சுவும்  நம்பிக்கையூட்டினாள்.

 மேலும், கீத்து மற்றும் ராதா , ராஜி ஆன்ட்டி என்று அனைவரும், “நான்கு மாதம் தானே..!, நாங்கள் இருக்கிறோம் பார்த்துக் கொள்கிறோம்” என்று தைரியமூட்டி பேசி அனுப்பி வைத்தனர் . விவேக் மிகுந்த தயக்கத்துடன் சஞ்சுவிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிக் கிளம்பினான் .

சஞ்சு முடிந்த வரை விஜயனிடம் மாட்டினால் , சொன்ன வேலையைச் செய்வது , அமைதியாகவே பணிந்து போவது என்று தன்மையாகவே நடந்து கொண்டாள் .

“ஏன் சஞ்சு ? எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்கிறாய் , மாட்டேன் என்று சொல்” என்று கீத்து கூட கோவப்பட ,

“இல்லை கீத்து , எப்படியோ மூன்று மாதங்கள் ஓட்டியாகிவிட்டது , இன்னும் ஒரு மாதம் தான்  அண்ணன் நிம்மதியாக வேலையை முடித்து வரவேண்டும்…” என்று பெருமூச்சு விட்டாள் . மேலும், “அம்மா தனிந்து போன போதெல்லாம் , நிமிர்ந்து நில்லுங்கள் என்று நானும், அண்ணனும் சண்டை போடுவோம் , ஆனால் இன்று புரிகிறது , சூழ்நிலையை மோசமாக்காமல் இருக்கவே முயன்றிருக்கிறார்”  

“நீ ரொம்ப மாறிவிட்டாய் சஞ்சு  , உன் விளையாட்டுத்தனமெல்லாம் காணாமல் போய்விட்டது…”என்று கீத்து வருத்தப்பட , 

“ விளையாட்டுத் தனத்தால் நான் பட்ட பாடு , அப்பப்பா…..  போதும் கீத்து. வாழ்க்கை தான் சிறந்த ஆசான்” என்று வெற்றுப் புன்னகையைச் சிந்தியவள், “அம்மாவின் இழப்பு என்னைச் சிக்கிரமாகப் பக்குவப்படுத்தி விட்டது கீத்து” 

“உடனே கீத்து, உன் காலைக் காமி சஞ்சு…” 

 என்னவென்று புரியாமல்,  சஞ்சு காலை நீட்ட , 

அதைத் தொட்டுக் கும்பிடுவது போல் செய்து , “இன்று முதல் சஞ்சானந்தா என்று அழைக்கப்படுவாய்….”  என்று கேலி செய்ய , 

சஞ்சு துரத்த , கீத்து ஓட , அங்கே கலகலப்பு கூடியது .

அத்தியாயம் 36

சஞ்சு கல்லூரியில் ஹைதராபாத்திற்குச்  சுற்றுலா  ஏற்பாடு செய்ய ,  மிகவும் ஆர்வமானாள் .

சுற்றுலாவிற்கு அண்ணனிடம் அனுமதி கேட்க , “கட்டாயம் போய் வா , கல்லூரி வாழ்க்கையை அனுபவி , இவையெல்லாம் வாழ்வில் மறக்க முடியாத பொக்கிஷங்கள் , என்ஜாய்” 

அப்படியே, “உனக்கு எவ்வளவு வேண்டும் ? , சுற்றுலாவிற்கு எவ்வளவு வேண்டும்?” என்று கணக்குப் போட்டுச் சொல், அனுப்பி வைக்கிறேன்  .

“அப்பா….” என்று சஞ்சு இழுக்க , 

“நீ முதலில் பேசு , எப்படியும் மறுப்பார் , அப்புறம் நான் பேசுகிறேன் , அப்போது தான் காரியம் முடியும்” 

சஞ்சு தயங்கித் தயங்கி விசயத்தைச் சொல்ல , 

“எனக்கு இதில் விருப்பமில்லை , ஒழுங்காகப் படிக்கிற வேலையை மட்டும் பார் .”

“பிளீஸ் அப்பா , இந்த ஒரு தடவை மட்டும் , நான் எந்த வெளியூருக்கும் போனதே இல்லை…” என்று கெஞ்ச ,

“இந்த மாதிரி ஆட்டத்திற்கெல்லாம் செலவளிக்க முடியாது  , ஒழுங்காக வீட்டில் இரு…”

“பிளீஸ் அப்பா…” என்று மீண்டும் கெஞ்ச , எப்போதும் போல் பேச்சு முடிந்தது என்பது போல் இடத்தை விட்டு நகர்ந்தார்.

“என்ன சஞ்சு , கேட்டாயா ?” 

“அப்பா முடியாது என்று சொல்லி விட்டார்” என்று வருத்தப்பட, 

“எதிர்பார்த்ததுதானே.. கவலையை விடு , நான் பேசிக் கொள்கிறேன்” என்று முடித்தான் 

“பயமாகயிருக்கு அண்ணா , வேண்டாம் விட்டு விடுவோம்…” 

“நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று போனை வைத்தான்

தந்தைக்குப் போன் செய்ய,”வேண்டாம் , இது எல்லாம் தேவையில்லாத வேலை , நான் பணம் தர மாட்டேன்” என்றார் கறாராகப் பேசிப் போனை வைத்தார் .

பின், விஜயன் நேராக சஞ்சுவிடம் வந்து , “ஆட்டம் அதிகமாக இருக்கிறது , அண்ணனிடம் சொல்லி காய் நகர்த்துகிறாயா?” என்று கத்த , 

“இல்லை அப்பா , அண்ணாவிடம் சுற்றுலா பற்றி சொல்லியிருந்தேன். அதான்…”  என்று இழுக்க , 

“அதெல்லாம் தெரியாது  , நீ போகக் கூடாது” என்றார் கண்டிப்புடன் .

விவேக் மீண்டும் அப்பாவிற்குப் போன் செய்து , “நான் தான் கல்லூரியில் சுற்றுலா என்று எதுவும் போகவில்லை , சஞ்சுவாவது போகட்டும்”  என்றான் குத்தலாக , 

உங்களுக்குப் பயந்து வேண்டாம் என்கிறாள் . நீங்கள் பணம் கட்ட வேண்டாம் , நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கவனமாகக் காயை நகர்த்தினான , 

பணம் கட்ட வேண்டாம் என்பதும் , சஞ்சு பயப்படுகிறாள் என்பதும் , அவரின் ஈகோவைச் சாந்தப்படுத்த , மேலும் முரண்டு பிடித்தால் , தன்னைத் தாண்டிச் செல்வார்கள் என்பதும் புரிய , “என்னமோ செய்யுங்க , எனக்கு விருப்பமில்லை” என்று முடித்துக் கொண்டார் .

விவேக் பெரிதாக விவரம் சொல்லாமல் , “அனுமதி கிடைத்து விட்டது , அவருடன் பேச்சு வைத்துக் கொள்ளாதே , சொல்லி விட்டு கிளம்பி விடு” என்று முடித்துக் கொண்டான் .

சஞ்சு சந்தோஷமாகக் கிளம்பிச் சென்றாள் .

மூன்று நாட்கள் சந்தோஷமாகக் கொண்டாடி விட்டுத் திரும்பி வந்தாள் .

அத்தியாயம் 37

விவேக் சென்னைக்கு வர நான்கு நாட்களே இருக்க , அந்த மோசமான நாளும் விடிந்தது .

சஞ்சு காலை எழுந்தவுடன் சோம்பலாகப் போனை நோண்ட , வாட்ஸ்ப்பில் விழுந்தக் காட்சிகளைக் கண்டு அதிர்ந்து போனாள் .கைகள் நடுங்க , போனைக் கீழே போட்டாள் . கண்ணீர் வழிய , அப்படியே அமர்ந்தாள் . 

வொண்டர் லா பொழுதுபோக்குப் பூங்காவில் , தண்ணீர் விளையாட்டுகளில் ஆடிய போது , மேலாடை விலகிய போஸ்கள் , தொடைக்குச் சற்று  மேலே ஏறிய ஆடை, நீரில் ஒட்டிய உடையை ஆபாசக் கோணத்தில்  என்று பல கோணங்களில் , பல புகைப்படங்கள் வந்திருந்தன . 

யார் என்று பார்க்க முயன்ற போது தெரியாத நம்பராக இருந்தது .எதற்காக எடுத்திருக்கிறார்கள்  , என்ன நோக்கம்? என்று எதுவும் புரியாமல் குழம்பித் தவித்தாள்.அடுத்து என்ன செய்வது என்று ஓடாமல் , போனை வெறித்தபடியே அமர்ந்திருந்தாள் .தனக்குள்ளே மறுகித் தவித்தாள் 

இதற்கிடையில் விஜயன் பலமுறை சஞ்சனாவை அழைக்க , அதை உணராது அறையிலே இருந்தாள் .அவர் கோபத்தில் கதவை மடாரெனத் திறந்து கொண்டு உள்ளே வர , சஞ்சனாவின் தோற்றத்தைக் கண்டு திகைத்தார் .

சஞ்சுவும் அப்பா வந்தவுடன் வேகமாகப் போனை மறைத்தாள் .

சஞ்சுவின் அதிர்ந்த தோற்றத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவர் , என்னவென்று விசாரிக்க ? 

“சாரி அப்பா , ஏதோ யோசனை?” என்று மழுப்பினாள் .பின்,மணியை பார்த்தவள் , “சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று நகர முற்பட , கையைப் பிடித்துத் தடுத்தவர் , “போனைக் கொடு”  என்று கர்ஜிக்க , 

சஞ்சனாவிற்குப் பயத்தில் உடல் நடுங்க ,கண்களில் கண்ணீர் வழிய நின்றாள் .

புகைப்படங்களைப் பார்த்து விஜயன்  அதிர்ந்தார் . அடுத்த நிமிடம் இடியென கன்னத்தில் அடி இறங்கியது .

“அப்பா, எனக்குத் தெரியாது , யார் என்னவென்று ஒன்றும் புரியவில்லை?” என்று அழ , 

“அறிவில்லை , சுத்தி என்ன நடக்கிறது என்று பார்க்க மாட்டாயா ,? இல்லை நீயே  போஸ் கொடுத்தாயா ?” என்று கத்த ,

“இல்லை அப்பா, நான் ஒன்றும் செய்ய வில்லை..” என்று மடிந்து உட்கார்ந்து அழதாள் . 

விஜயனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை , பயமும் அவமானமும் ஆட்டிப் படைக்க , நிதானமிழந்தார் .

“உன்னை நம்ப முடியாது , நீ பன்னிரெண்டாம் வகுப்பிலே, அலுக்கிக் குலுக்கி ஆட்டம் போட்டு ,    ரீல்ஸ் போட்டாயே..” என்று காய்ந்தார் .

“அது வெறும் காமெடி ரீல்ஸ் அப்பா , விவரம் தெரியாமல் ஒரு ஆர்வத்தில் செய்தது . வீட்டில் எடுத்துச் சொன்ன பிறகு , நீங்கள் திட்டிய பிறகு செய்ய வில்லையே “என்று அழுதபடி பேச ,

“வாயை மூடு , போக வேண்டாம் என்று சொன்னேனே கேட்டாயா ? உன் அண்ணனை ஏற்றி விட்டு கிளம்பினாயே , என்னவாயிற்று பார் .இப்படித் தான் உன் அம்மா , உனக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு  வங்கிக்குச் சென்றாள் , இன்று அவளே இல்லாமல் போனாள் .இன்று உன் அண்ணன் வக்காலத்து வாங்கினான் , அவனுக்கு  அவமானத்தையும் அசிங்கத்தையும் தேடித் தந்து விட்டாய் , ரொம்ப சந்தோஷம் .உன்னிடம் தள்ளி நிற்பதால் தான் என் பொழப்பு ஓடுகிறது போல , எல்லோரையும் தூக்கி முழுங்கிவிட்டு நன்றாக இரு , கொலைகாரி…” என்று கத்த , 

சஞ்சனா வெலவெலத்துப் போனாள் , “அப்பா, எனக்கு ஒன்றும் தெரியாது” என்று மீண்டும் சொல்ல , 

“என்றைக்கு வீட்டுக்கு அடங்கவில்லையோ , எல்லா கேடும் வந்து சேரும் .இந்த அசிங்கத்தோடு எப்படி தான் , அப்பா முன்னாடி நிற்க முடிகிறதோ , நீயெல்லாம் உயிரோடு  இருப்பதே பூமிக்குப் பாரம் , ச்சே… , உன்னைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது . உன்னால் என்ன என்ன அசிங்கத்தையும் அவமானத்தையும் படப் போகிறேனோ?” என்றபடி, “உனக்காகப் பேசினானே , அவனிடம் பேசி விட்டு வருகிறேன்” என்று போனை எடுக்க , அவர் அறைக்குச் சென்றார்.

அப்பாவின் வார்த்தைகளே மீண்டும் ஒலிக்க , தன்னால் அண்ணனுக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைத்து வருந்தினாள் .மேலும், இதற்கு மேல் அப்பா எப்படி நடந்து கொள்வாரோ என்ற பயமும் வியாபிக்க , மனம் பாரமாக , தன்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று மூளை  தப்பாக யோசிக்க , 

வேதனைப் பொறுக்க முடியாமல் , “ஏன் அம்மா ? என்னைத் தனியே விட்டுச்  சென்றீர்கள் , இந்த வலியை என்னால் தாங்க முடியவில்லையே , நானும் உங்களிடம் வந்து விடுகிறேன்” என்றாள் ஆவேசமாக .

பின், “சாரி அண்ணா , நான் எந்த தப்பும் செய்யவில்லை…” என்று எழுதி வைத்து விட்டு , கை நாடியை அறுத்துக் கொண்டாள் .

இங்கே விஜயன் , விவேக்கிடம் பேசத் திரும்பத் திரும்ப முயல , தொடர்பு எல்லைக்கு  அப்பால் உள்ளார் என்றே வர , மிகவும் டென்ஷன் ஆனார் .

அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை , அவருக்கும் பயமும் நடுக்கமும் வர , இதை எப்படி எதிர் கொள்வது என்று புரியாமல் தவித்தார் .அவரது இயலாமை கோபத்தை அதிகரிக்க , மீண்டும் சஞ்சுவைத் தேடிச் சென்றார் .

தொடரும்….