Advertisement

அழகான பொய்களில் 
கரையாத
உன் உள்ளத்தை,
அன்பான கோபத்தில் 
கலைத்து 
விட்டேன் பாரடி!!!
     கீர்த்தனாவின் அம்மாவிற்கு மணமக்கள் இருவரும் தனியே பேச சென்றது உள்ளுக்குள் சற்று உதறலாகவே இருந்தது. எங்கே கீர்த்தனா தன்னுடைய கனவுகளை பற்றி மாப்பிள்ளையிடம் பேசி, தன் பிரகாசமான எதிர்காலத்தை கெடுத்துக் கொள்வாளோ என்று அஞ்சினார். ஆதலால்  மற்றவர்கள் அறியாதபடி,  அவர்கள் இருக்கும் மன நிலையினை அறிந்து கொள்ளும் பொருட்டு, தூரத்தில் தெப்பத்து மீன்களுக்கு பொறியினை தூவி கொண்டிருந்த தனது மகனின் அருகில்  நகர்ந்து  வந்தார்.
     “டேய், இங்க வாயேன்…”
     “என்னம்மா?”
    ” அம்மா ஒரு சின்ன வேலை சொல்லுவேன், சரியா செய்வியாடா கண்ணா?”
    “செய்வேன்மா…” 
     ” நீ தண்ணி குடிக்க போறது மாதிரி அந்த பக்கமா போய், அக்காவும் மாமாவும் எங்க இருக்காங்க, எப்படி பேசுறாங்கன்னு பாத்துட்டு வர்றியாடா?”
     “சரிம்மா…”
     “டேய்… டேய்..  ஒரு நிமிஷம், யாருக்கும் தெரியாம போய் பாத்துட்டு வாடா…”
     “ஓகேம்மா…” என்று மெதுவாக மற்றவர் பார்வையில் இருந்து களன்று கொண்டான் அந்த சிறுவன்.
    சென்றவன் சில நிமிடங்கள் கழித்து திரும்பி வந்து, “அம்மா, அக்காவும் மாமாவும் முதல் பிரகார மூலையில இருக்கே அந்த அரச மரத்து பிள்ளையார், அது பக்கத்தில ஏதோ ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா பேசிட்டே நடந்துட்டு இருக்காங்கம்மா….” என்று அவரது காதினில் ரகசியமாக ஓதினான். 
     “ஹப்பாடா…” என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார் கீர்த்தனாவின் அம்மா.
     ஆனால் அந்த இன்ட்ரஸ்டிங்கான பேச்சு எதைப்பற்றி என்பதை சம்பந்தப்பட்ட அவ்விருவர் மட்டுமே அறிவார்கள். அரச மரத்தடியில் இருந்த பஞ்சமுக விநாயகரை வழிபட்டுவிட்டு இரண்டாம் பிரகாரத்தில் நுழைந்தனர் கீர்த்தனாவும் மணியும்.
    மணி, “உங்களுக்கு அறிவியல், கண்டுபிடிப்புகள் சம்மந்தமான விஷயம்னா ரொம்ப பிடிக்குமா?”
    “ஆமாங்க… ஏன் உங்களுக்கு புடிக்காதா?”
    “எங்கங்க? நான் எயிட்த் ஸ்டாண்டர்டு படிக்கும்போது கல்யாணின்னு ஒரு சயின்ஸ் டீச்சர் வந்தாங்க. அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் சின்ன சின்ன மிஸ்டேக்குக்கு எல்லாம் எங்கள அடி பின்னி எடுத்துடுவாங்க. அவங்க மேல இருந்த பயத்திலேயே எனக்கும் என் ஃப்ரெண்ட்ஸ்க்கும் சயின்ஸ்ஸ புடிக்காம போயிருச்சு… நீங்க ரொம்ப லக்கி, உங்களுக்கு ரொம்ப அன்பான டீச்சர் கிடைச்சிருப்பாங்க போல. அதான் சயின்ஸ்ல இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க, கரெக்டா?”
    மெல்லமாய் சிரித்தவள், “அப்டியெல்லாம் இல்லங்க, ஸ்கூல் படிக்கிற வரைக்கும் எனக்கு எங்க அம்மா தான் வீட்டு பாடம்  சொல்லி தருவாங்க. பாடம் படிக்கும் போதே அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் அத்தனையும் டீட்டீயிலா ஆதாரத்தோட  சொல்லி கொடுத்துடுவாங்க. அப்டி அவங்க சொல்லி தெரிஞ்சுகிட்ட விஷயங்கள் மூலமாத்தான் தான் எனக்கு சயின்ஸ்ல ஆர்வம் வந்துச்சு.”
     “நான் உங்கள ஒன்னு  கேட்டா  தப்பா நினைச்சுக்க  மாட்டீங்களே….”  
      “மாட்டேன்….  கேளுங்க….”
     “எங்க வீட்டு ஆளுங்க, ‘உனக்கு பொண்ணு  பார்த்து வச்சிருக்கோம் உடனே சென்னையில இருந்து கிளம்பி வாடா’ன்னு  சொன்னதும்  நல்ல  பையனா  தலையாட்டிட்டு கிளம்பி  வந்துட்டேன்.  வீட்டுக்கு வந்ததும்  உங்க போட்டோவ பாக்கணும்னு  கேட்டதுக்கு  தலையில இருந்து வால் வரைக்கும்,  ‘வந்ததும் வராததுமா  பொண்ண  பார்க்கணுமா உனக்கு? நல்ல நேரம் பார்த்து நாங்களே குடுக்க மாட்டோமா? அதுக்குள்ள அவ்வளவு அவசரமா துரைக்கி? ‘  அப்படின்னு  ஓட்டி  தள்ளிட்டாங்க. சாதாரணமா உங்களப்பத்தி வேற ஏதாவது தகவல்  கேட்டாக்கூட சின்ன பைன்னு பாக்காம ஓவரா கலாய்ச்சாங்க. அதனால உங்கள பத்தி  எனக்கு அவ்வளவா  எதுவும் தெரியாது. சாரி டூ ஆஸ்க் திஸ், நீங்க என்ன படிக்கிறீங்க?”
     “பிஎஸ்ஸி பிசிக்ஸ்”
     “என் லைஃபு பிச்சுகிச்சு….”
     “என்னங்க? என்ன சொன்னீங்க?”
     “ஹான்.. ஒண்ணுமில்லங்க.. உங்கள பிரில்லியண்ட்னு சொன்னேன்.”
     “அப்படியா என் காதில நீங்க வேற ஏதோ சொன்ன மாதிரி விழுந்துச்சு…”
     ‘விழுந்திடுச்சா? ஓ… மை காட்… ஆரம்பமே அபசகுணமா இருக்குதே…’ என்று நினைத்தவன் அவள் மனதினை டைவர்ட் செய்யும் விதமாக, “ஆமா நீங்க யாரோ டெஸ்லாங்கிறவர பத்தி சொல்ல ஆரம்பிச்சிங்கள்ல…”
     கீர்த்தனா, “டெஸ்லாங்கிறவரு 1900ல வாழ்ந்த ஒரு மிகப்பெரிய சயின்டிஸ்ட்ங்க. இப்ப நம்ம யூஸ் பண்ணிட்டு இருக்கிற லேப்டாப், டிரான்ஸ்பார்மர், எக்ஸ்ரே, ரேடார், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் உட்பட அத்தனைக்கும் விதை போட்டவரு எங்களோட டெஸ்லாதான். ரேடியோவ முதல்ல கண்டுபிடிச்சதும் டெஸ்லா தான், ஆனா அந்த மார்க்கோனி நடுவுல புகுந்து டெஸ்லாவோட கண்டுபிடிப்புல சின்ன சின்ன கரெக்ஷன் பண்ணி மார்க் வாங்கிட்டு போயிட்டாரு.”
     மணி, “ஏங்க, இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு? விட்டா எல்லா கண்டுபிடிப்புகளுமே டெஸ்லாக்குத்தான் சொந்தம்னு சொல்லிடுவீங்க போல….”
     “கிட்டத்தட்ட…. நான் சொல்றதுல நம்பிக்க இல்லைனா கூகுள்ல போய் டெஸ்லாவை பத்தி படிச்சு பாருங்க, அப்ப தெரியும் அவர் எவ்வளவு பெரிய சைன்டிஸ்ட்னு”
    “சரி, அவ்ளோ பெரிய சைன்டிஸ்ட் ஏன் எங்க எடிசன் அளவுக்கு பாப்புலர் ஆகாம போனாரு?”
     “எப்டி ஆவாரு? டெஸ்லாவோட எல்லா ஐடியாலயும் மண்ணை அள்ளிப்போட்ட பெருமை உங்க எடிசனுக்குத்தான் சேரும்.”
     “அது எப்டிங்க, எடிசன் அடுத்தவன் கண்டுபிடிப்ப ஒண்ணும் இல்லாம செய்ய முடியும்? எடிசனுக்கு  வேற  வேலை வெட்டி  இல்லையா  இல்ல அப்டி செஞ்சா டெஸ்லாவும் மத்த சயின்ட்டிஸ்ட்களும் அத பாத்துக்கிட்டு சும்மா இருந்திருப்பாங்களா?
     “டெஸ்லா, எடிசனோட கம்பெனில வேலை பாக்குற ஒரு  சாதாரண  எம்ப்ளாயியா  இருந்தா, எடிசனால தன் வேலைக்காரன் மேல எத வேணும்னாலும் செய்ய முடியும்ல? கம்பெனிக்கும் எம்ப்ளாயிக்கும் பிரச்சனைனா மத்த சயின்டிஸ்ட்  தலையீடு  இல்லாமலும் போகும்ல…”
     “ம்…. ஆனா எடிசன பொறுத்தவரைக்கும் இப்டி வர்ற கண்டுபிடிப்புகள் எல்லாமே அவரோட  கம்பெனிக்கும்  அவருக்கும்  பெருமை சேர்க்கும் தான?  அப்புறம்  எதுக்காக எடிசன்  வர்ற  லாபத்தை  வேண்டாம்  சொல்ல  போறாரு?” 
    “அது அப்டி இல்லங்க, பிரபலமா இல்லாத ஒரு வேலைக்காரனோட கண்டுபிடிப்பு, உலக அளவுல பேரு வாங்கின தனக்கு எதிரா இருந்தா அவரு எப்டி ஏத்துக்குவாரு?”
    “என்னங்க நீங்க ஒரு பெரிய கம்பெனியவே ரன் பண்ற புத்திசாலி முதலாளிய விட, அங்க வேலை பாக்குற ஒரு சாதாரண வேலைக்காரன பெஸ்ட்டுனு சொல்ல வர்றீங்களா? இதெல்லாம் கற்பனையிலதான் நடக்கும்ங்க….”
     “அறிவுக்கும் அன்புக்கும் முதலாளி தொழிலாளி, ஏழை பணக்காரன், ஆண் பெண்ணுன்ற எந்த வித்யாசமும் கிடையாதுங்க….”
     “எடிசனவிட பெருசா அப்டி என்னத்த கண்டுபிடிச்சாரு டெஸ்லா?” 
     “என்னத்த கண்டுபுடிச்சாரா? இன்னிக்கி தேதிக்கி பெரிய கம்பெனிஸ், பேக்டரிஸ், ஸ்டார் ஹோட்டல், ஷாப்பிங் மால், ஹாஸ்பிடல்னு அத்தனைக்கும் ரொம்ப ரொம்ப யூஸ்புல்லா இருத்குற டிசி கரண்ட்ட கண்டுபுடிச்சாரு…..”
      ‘ஐயயோ…  இந்த வார்த்தையை எங்கேயோ கேள்விப் பட்ட மாதிரி  இருக்குது, ஆனா எங்கன்னு தெரியலையே…  இப்போ இவ கிட்ட டிசி  கரண்ட்னா  என்னன்னு கேட்டா, ‘ஒரு  மெக்கானிக்கல் ஸ்டூடண்ட்டா இருந்துக்கிட்டு  டிசி கரெண்ட்னா என்னன்னு கேக்குறீங்களே… காலேஜ்ல என்னதான் படிச்சு கிழிச்சீங்க?’ன்னு கேட்டுட்டா என்  மானம்  கப்பல் ஏறிடுமே. படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்கலன்னா எங்கெல்லாம் அவமான பட வேண்டி இருக்கு ஆண்டவா?’ என மனதிற்குள் குமுறிக்கொண்டிருக்க கீர்த்தனாவோ, அவன் முகத்தை பார்த்தே அவன் நிலையினை புரிந்து கொண்டு டெஸ்லாவையும் டிசி கரெண்டையும் பற்றிய தன் சொற்பொழிவினை ஆரம்பித்துவிட்டாள்.
    “டெஸ்லாவோட டிசி கரென்ட் ரொம்ப தூரத்துக்கு சீரான வேகத்துல கரெண்ட்ட பாஸ் பண்ணும், இது எடிசனோட ஏசி கரண்ட்க்கு பெரிய எதிரியா இருந்துச்சுங்க. அதுனாலயே அந்த டிசி கரெண்ட்ட எக்ஸ்பரிமென்ட்ன்ற பேர்ல ஒரு யானை மேல செலுத்துனாரு எடிசன், முழு வேகத்தில வந்த கரெண்ட்டோட பவர தாங்க முடியாம அந்த யானை ஸ்பாட்லயே செத்துப் போச்சு. இத பொதுமக்கள்  தங்களோட வீடுகள்ல பயன்படுத்துறது  ரொம்ப ரொம்ப டேன்ஜரானதுங்கிற மாதிரி உலகத்துக்கு முன்னாடி சீன் காட்டிட்டாரு தெரியுமா? பட் அதே விஷயத்தை ஜெனரேட்டர் உதவியோட நாம நூறு வருஷம் கழிச்சு யூஸ் பண்ணிட்டு இருக்குறோம், இதுல எடிசனுக்கு நாங்க ஃபேன்ஸ்னு வேற சொல்லிக்கிறீங்க…”
     “அப்போ டெஸ்லா தன்னோடது சரியானதுன்னு நிரூபிச்சு இருக்கலாமே, இல்ல அதவிட பெட்டரா வேற ஒண்ண எடிசன் கண்டுபிடிச்சு இருக்கலாமே….”
     “அந்த டைம்ல டெஸ்லாக்கு உதவி பண்ற மாதிரி பெரிய கம்பெனியோ பணக்கார மனுஷங்களோ யாருமே இல்ல, அதுவும் போக எடிசன் ஒரு பக்கா கார்ப்பரேட் கிரிமினல்ங்க. அவருக்கு அறிவியல்ல இருந்த போதைய விட பணம், புகழ் இது இரண்டு மேலேயும்தான் அளவுக்கதிகமான போதை இருந்துச்சு. அவரோட கண்டுபிடிப்பு எல்லாத்தையும் அப்போதைக்கு இருந்த மிகப்பெரிய கம்பெனிகளோட டை அப் பண்ணி இருந்தாரு. அப்படிப்பட்ட லெஜன்ட் தன்னவிட பெட்டரா ஒருத்தன் இலவசமா கண்டுபிடிப்ப குடுத்து, அறிவியல்ல புரட்சி பண்றத பொறுத்துக்குவாரா?”
      “என்ன அறிவியல்ல புரட்சியா?”
      “ம்… புரட்சின்ற வார்த்தை போராளிகளுக்கு மட்டும்தான் சொந்தம்னு யாரு சொன்னது? அது எல்லா துறையிலுமே இருக்குங்க, நமக்குத்தான் தெரியல…”
     “அப்படின்னா நீங்க, எடிசனுக்கு ஒண்ணும் தெரியாது, அவரு  மத்தவங்க கண்டுபிடிப்ப  காசாக்கி பேரும் புகழும் வாங்கிட்டாருன்னு சொல்ல வர்றீங்களா?”
    “இல்லங்க… டெஸ்லா, எடிசன் ரெண்டு பேருமே ரொம்ப பெரிய அறிவியல் மேதைகள். டெஸ்லா புதுசு புதுசான விஷயங்கள கண்டுபிடிக்கவும் அதை பொதுமக்களுக்கு இலவசமா கொடுக்குறதுக்கும் விரும்பினாரு. ஆனா எடிசன்  ஒரு விஷயத்தை  ஊருக்கு முன்னாடி தான்   முதன் முதலா  கண்டுபிடிக்கிறதிலையும்,  தன்னோட கண்டுபிடிப்புகள்  மக்களுக்கு உபயோகமா இருக்கிறத  விட கார்ப்பரேட்  கம்பெனிகளுக்கு  ஆதாயத்தோட  விக்கிறதுலயும் தான்  முழு கவனத்தையும் வச்சிருந்தாரு. அப்போ இருந்த கார்ப்பரேட் கம்பெனியோட நடைமுறை வியாபாரச் சுரண்டலுக்கு  டெஸ்லாவோட இலவசம்ங்கிற கான்செப்ட் ஒத்துவரல. ஒருபக்கம் எடிசன் பிஸினஸ் ரிலேட்டடா தன்னோட திறமைய விலைக்கி விக்கிறது கார்ப்பரேட் கம்பெனிஸ்க்கு மிகப்பெரிய அட்வான்டேஜ் ஆக, எடிசனையே எல்லாரும் தூக்கி நிறுத்துனாங்க. இன்னொரு பக்கம் டெஸ்லாவோட கண்டுபிடிப்பு இலவசம்ங்கிறதால ஈசியா திருட்டு போக ஆரம்பிச்சது.”
     “இந்த அளவுக்கு ஒருத்தரால சுயநலம் இல்லாமல் இருக்க முடியுமா?”
    “இருக்க முடியும்னு வாழ்ந்து காட்டினவர் எங்க டெஸ்லா. அவரு சாகுறதுக்கு முன்னாடி கூட, ‘என்னோட கண்டுபிடிப்புகள் எல்லாம் திருட்டு போனதில வருத்தமில்ல. ஆனால் திருடுனவங்க அதுக்கு மேல அதை டெவலப் பண்ணறதுக்கு எந்த வழியையும் யோசிக்காம, அங்கேயே நின்னு போயிட்டாங்களேனுதான் வருத்தமா இருக்கு’ன்னு சொன்னாராம்.”
      “ப்பா…. செமங்க உங்க டெஸ்லா.”
     “ஆமாங்க… அவர மாதிரி வேற எந்த சயின்டிஸ்ட்டாலயும் இருக்கவே முடியாது.”
     “வேற எந்தெந்த சயின்டிஸ்ட் பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியும்?”
     “நிறையபேர் தெரியும்… ஆனா அவங்க எல்லாரும், தன்னோட கனவுகளையும் கண்டுபிடிப்புகளையும் பொதுவுடமை ஆக்கின எங்க டெஸ்லா பக்கத்துல நிக்கக்கூட முடியாது. ஒருத்தர் தன்னோட கனவ, எந்த பிரதிபலனும் இல்லாம இன்னொருத்தருக்கு விட்டு கொடுக்கிறது எவ்வளவு பெரிய வலி தெரியுமா?”  என்றவளின் விழிகளில் அவளுடைய அனுமதி இன்றி நீர் தேங்க கண்டான் மணி.
     “கீர்த்தனா, உங்களுக்கும் ஏதாவது கனவிருந்துச்சா?”
     “ம் இருந்துச்சு, ஆனா…” என்றவள் சட்டென்று சுதாரித்து மணியின் முகம் பார்க்க, அவனது விழிகளிரண்டும் அவள் முகத்திலேயே நிலைகுத்தி நின்றிருந்தது.
     “ஹலோ மிஸ்டர், என்ன?… பேசிப்பேசியே ஏத்திவிட்டு என் மனச ஆழம் பாக்குறீங்களா?”
     “சே.. சே.. உங்க டெஸ்லாவோட அப்டியே உங்கள பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமேன்னு நினைச்சேன், அவ்ளோதான்ங்க…”
     “போதும் நிறுத்துங்க… முன்ன பின்ன தெரியாத பொண்ணு கிட்ட மேனர்ஸ் இல்லாம இப்படித்தான் உங்க வாய் வித்தைய காட்டுவீங்களா?”
     “ஹலோ… நான் ஒண்ணும் ரோட்ல போற பொண்ணுகிட்ட வழிஞ்சுகிட்டு நிக்கல. அங்க உங்களுக்கும் எனக்கும் கல்யாண ஏற்பாடு நடந்துட்டு இருக்குது, ஆயிசு முழுக்க சேர்ந்து வாழப்போற வாழ்க்கை துணை நீங்க, உங்களபத்தி தெரிஞ்சுக்க நான் ஆசைப்பட கூடாதா? நேரடியா ஒருத்தன் வந்து, ‘உங்களுக்கு என்ன புடிக்குமா?’ன்னு கேட்டா எந்த பொண்ணாவது ‘ஆமா… இல்ல…’ன்னு ஒத்த வார்த்தையில ஒழுங்கா பதில் சொல்லி இருக்கீங்களா? வாய் வார்த்தையா சொல்லாம ஆம்பளைங்க தானாவே உங்க  மனச  புரிஞ்சுக்கனும்னு நினைச்சீங்கன்னா அதுக்கு அந்த கடவுள் கூட சரிப்பட்டு வரமாட்டாரு… அதனாலதான் உங்களுக்கு புடிச்ச டாபிக்ல நைசா பேசி கரெக்ட் பண்ண…” என்று முடிக்கும் முன் அவனுடைய மனசாட்சி, ‘உளறிட்டேயேடா மணி….’ என்று உரக்கச் சொல்லியது.
     “இடியட்….” என்று திட்டியவள்,  மணியை விட்டுவிட்டு வேக வேகமாக எதிர் மூலையிலிருந்த முருகன் சன்னதியை நோக்கி தனியாக நடக்கத் தொடங்கினாள்.
     “ஓகே…. மேட்டர் ஓவர்… நாம இனன்னிக்கி நைட்டே மெட்ராஸ்க்கு வண்டிய கட்டிட்டு,  நம்ம வேலைய பாக்க போக வேண்டியதுதான்…”
     விருவிருவென்று முன்னால் போன கீர்த்தனா, கல்யாண கோலத்தில் இருந்த அப்பன் முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அப்படியே ஓரமாக அமர்ந்தாள். அவள் போன பிறகு பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து, காலையில் இருந்து விடுபட்ட முக்கிய வேலையான பேஸ்புக் மீம்களை படித்துக்கொண்டே ஆர அமர அன்ன நடை நடந்து  வந்தான் மணி.
      அவன் முருகன் சந்நிதிக்குள் நுழையும் பொழுது  பச்சை நிற  பட்டுப்பாவடை அணிந்திருந்த ஒரு நான்கு வயது பெண் குழந்தை, முருகனின் முன்னால் பீடத்திலிருக்கும் பெரிய மயிலின் காதை எட்டி பிடிக்க முயன்று மேலும் கீழுமாக குதித்து கொண்டிருந்தாள். ஆனால் என்ன முயன்றும் அவளால் அந்த மயிலின் கழுத்து வரையில்தான் போக முடிந்தது.
     இரண்டடி இடைவெளியில் லேசாக வயிறு வீங்கிய நிலையில் வயிற்று பிள்ளைத்தாய்ச்சியாய் அமர்ந்திருந்த அவளின் அம்மா, “பாப்பா போதும்மா…  எவ்வளவு நேரம் இப்டி குதிச்சிக்கிட்டே இருக்க போறடி?…. நீ என் செல்ல பாப்பா இல்ல… அம்மாட்ட வாடா… பொறந்த நாள் அதுவுமா கீழ மேல விழுந்திடாதடி.. அப்பாவுக்கு தெரிஞ்சா நம்ம ரெண்டு பேரையும்  அடி பிச்சிடுவாரு…” என்று இடை விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தார்.
     மணி, “ஓய் பட்டுபாவாடை ஏஞ்சல், மே ஐ ஹெல்ப் யூ?”
     குழந்தை தன் நெற்றி முடி ஒதுக்கி, “எஸ்…” என்றாள்.
    மணி குழந்தையை மயிலின் காதுவரை தூக்கியதும், “மேத்ஸ் டேபிள் மிஸ்டேக் இல்லாம எழுதனும், அம்மாக்கு குட்டி தம்பி பொறக்கனும், அப்பா நிறைய சாக்லேட் வாங்கி தரணும், கம்மிங் சன்டே அனு மாதிரியே நானும் தீம் பார்க் போகனும்…” என்று ஒருடஜன் கோரிக்கைகளை மயிலின் காதினில் போட்டுவிட்டு கீழே இறங்கினாள்.
     குழுந்தையின் அம்மா, “ரொம்ப தேங்க்ஸ் தம்பி, கோவிலுக்கு வந்ததுல இருந்து, சிவனோட நந்தி, புள்ளையாரோட எலி, முருகனோட மயிலுனு, கல்தூண்ல இருக்குற சிலை வரைக்கும் பாரபட்சம் இல்லாம எல்லா சாமிட்டயும் இதையே கேட்டுட்டு இருக்கா…” என்றார்.
     மணி, “இருக்கட்டும்க்கா குழந்தைதான…”
     “குட்டிம்மா, அங்கிள் உன்ன தூக்கினாங்கள்ல, அவங்களுக்கு தேங்க்யூ சொல்லு…” 
     முத்துப்பல் தெரிய “தேங்க்யூ அங்கிள்…” என்றது குழந்தை.
     “அங்கிள்னு எல்லாம் கூப்பிட வேணாம், அழகா தேங்க்யூ மாமான்னு சொல்லு பாக்கலாம்…”
    பெரிய மனுஷி போல தலையில் கை வைத்துக் கொண்ட குழந்தை, “ஷப்பா… ஏன் எல்லா பாய்ஸ்ஸூம் என்ன மாமான்னே கூப்பிட சொல்றீங்க?” என்றாள்.
     “எல்லாருமா கேக்குறாங்க?”
     “ம்… எங்க ராமு அங்கிளும் இப்டித்தான் பண்றாரு. அடுத்து என்ன? நீங்களும் எங்கிட்ட அவர மாதிரியே, ‘மாமாவுக்கு ஒரு கிஸ் குடுடி பட்டுக்குட்டி…’ ன்னு கேக்க போறீங்களா?” 
      குழந்தையின்  அம்மா,  “அடியே!  அதிகப்பிரசங்கி… அமைதியா இருடி…”  என்று அடக்கிவிட்டு  மணியை பார்த்து,  “தம்பி  நீங்க  தப்பா  நெனச்சுக்காதீங்க. ராமு  என்னோட  கூடப்பிறந்த  தம்பி,  அவன் தான்  எப்ப பாத்தாலும்  இவகிட்ட முத்தம் கேட்டு இவள இப்படி கோபக்காரியா ஆக்கி வச்சிருக்கான்….”
    மணி, “ஓகோ… இதுதான் உங்க பிரச்சனையா ஏஞ்சல்?  பயப்படாதீங்க நான் பாப்பாட்ட கிஸ் கேட்க மாட்டேன். அதுக்கு பதிலா வேற  ஒன்னு  கேட்கிறேன் செய்வீங்களா?” 
     “ம்….  ஆனா  ஒரு கண்டிஷன். எங்க  மம்மி மாதிரி டாய்ஸ்ஸ எடுத்து வை, க்ரேயான்ஸ எடுத்து வைனு கஷ்டமா எதுவும் கேக்கக்கூடாது, ஈசியானதா செய்யச் சொல்லணும்.”
     “சே… சே… அவ்ளோ கஷ்டமா கேக்க மாட்டேன், ஈசிதான். நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?”
     “சீ.. இடியட்… அம்மா இங்க பாரும்மா இந்த பாய் எங்கிட்ட கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க.. அங்கிள் பேட் பாய் நீங்க… போங்க நான் உங்க கூட டூ…” என்றுவிட்டு  தன் அம்மாவின் அருகே ஓடிவிட்டாள்.  குழந்தையின் அம்மாவும் கீர்த்தனா வையும்  மணியையும் மாறி மாறிப் பார்த்தபடி வயிற்றைப் பிடித்து க்கொண்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்.
     “அரையடில இருந்தாலும் சரி அஞ்சடில இருந்தாலும் சரி, பசங்கள மண்ட காய விடுறதுல பொண்ணுங்க எல்லாரும் ஒரே மாதிரி போல…. அது எப்டி திட்றதுல கூட நீங்கள்லாம் இப்டி ஒரே டிசைனா இருக்கீங்க?”
     இது நேரம் வரையில் கீர்த்தனா அவனுடைய குறும்புத்தனங்களை கண்டும்  காணாதது போல், தலை கவிழ்ந்து, வாய் மூடி அடக்கி வைத்திருந்த சிரிப்பு, மணியின் கடைசி வார்த்தைகளை கேட்டதும் பொத்துக் கொண்டு வெளியே வந்த விழுந்தது.

Advertisement