காதல் 18

உன்னை எண்ணி இன்பக் கவிதை
தான் எழுத ஆசைப்பட்டேன்…
ஆனால் இறுதி கவிதைக்கு
கரு கொடுத்துவிட்டாய் நீ…
என் வாழ்வின் முகவுரையும் நீதான்!
முகாரியும் நீதான்!! என் அன்பே!!!

ராதா பாடிய பாடலை கேட்டு அனைவரும் ராதாவை பாராட்ட அவளோ திரும்பிச் செல்லும் சேகரையே வலியுடன் பார்த்திருந்தாள். “அத்த.. அப்பா இந்த பாட்ட அடிக்கடி கேப்பாங்க. நீங்க அதே மாதிரி அழகா பாடுனீங்க” என சரத்கூட அவளை பாராட்ட அவள் யாருக்காக பாடினாளோ அவன் மட்டும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டான். சேகர் சென்றதையும் ராதா வருத்தத்துடன் அவனை பார்ப்பதையும் கண்ட கோகுல் சேகரிடம் சென்று “ஹாய்” என அவனும் சம்பிரதாயமாக “ஹாய்” என்றான்.

“உங்களுக்கு என்மேல பயங்கர கோபம் போல?” என கோகுல் கேலிபோல கேட்க அவனும் எந்த ஒளிவுமறைவுமின்றி “ஆமாம். பின்ன கோபம் வராதா? உங்க வீட்டு பொண்ணுக்கு இப்புடி ஒரு அநியாயம் நடந்திருந்தா எப்புடி இருந்திருக்கும்?” என கோபமாகவே சேகரும் பதிலுக்கு கேட்டான்.

“உண்மதான். வெட்டிப்போடுற அளவுக்கு கோபம் வரும். ஏன்? கொலைகூட பண்ணியிருந்திருப்பேன்” என்றவன் அவன்புறம் நன்றாக திரும்பி “ஆனா.. இன்னைக்கு உங்க முன்னாடி நிக்கிறது உங்க தங்கச்சி வாழ்க்கைய கெடுத்தவன் இல்ல.. உங்க தங்கச்சி புருஷன்” என

“ஹீம்…” என ஏளனமாக உதடுகளை வளைத்தவன் “இவனுக்குள்ள தான அவனும் இருக்கான்” என ஏளனமாகவே கேட்க

“நோ” என உறுதியாக கூறினான் கோகுல். அத்துடன் “அவன் முன்னாடி இருந்தான் இதே நீங்க சொன்னீங்களே உன்வீட்டு பொண்ணுக்கு நடந்திருந்தான்னு… அந்த கேள்விக்காக எங்கப்பாவவே தூக்கி எறிஞ்சு பேசுனவன் நான். இன்னைக்கு அந்த கேள்விய எனக்குள்ள நானே எத்தனமுறை கேட்டுருப்பேன்னு எனக்கே தெரியல” என்றான் வருத்தத்துடன்.

“நான் உங்க தங்கச்சிய கஷ்டப்படுத்துனேன்னுதான உங்களுக்கு என்மேல இவ்ளோ கோபம். அப்புடி பாத்தா இன்னைக்கு நீங்க அவள கஷ்டப்படுத்துறீங்க” என்றவன் அமைதியாகிவிட அனைவரும் ஹாலுக்கு வந்தனர். ராதா சேகரிடம் சென்று “ஒரு ஆம்பளைக்கு இவ்ளோ பிடிவாதம் இருக்கக்கூடாதுண்ணா.. பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவ” என்றவள் அவன் காலடியில் அமர்ந்து “சாரிணா” என கண்கலங்க கூறினாள்.

ராதா ஊருக்கு வந்தபின் சேகரை நேரில் சென்று பார்க்க நினைத்தபோதெல்லாம் வரக்கூடாது என தடைவிதித்திருந்தான் சேகர். ஏனெனில் அவளை பார்த்தபிறகு அவள்மேல் உள்ள கோபத்தை அவனால் பிடித்துவைத்திருக்க முடியாது. இன்று அவன் எண்ணியது போலவே அந்த கோபத்தை பிடித்து வைக்க இயலவில்லை.

“பரவாயில்ல” என்றவன் அவளை எழுப்ப “அப்ப ஓ.கேவா?” என்றாள் ராதா சிரிப்புடன்.

“ஓ.கேவெல்லாம் இல்ல.. பரவாயில்ல அவ்ளோதான்” என சேகர் சொல்லவும்

“அடடா” என பழிப்பு காட்டிவிட்டு சென்றாள்.

“ஹீம்… சேந்துட்டீங்களா? இனி உங்க பாசமலர் தாங்காதே” என சலித்துக்கொண்டார் செல்வம்.

“பொறுக்காதே உங்களுக்கு” என சேகர் கேட்க “அதென்ன பாசமலர்?” என கண்ணன் கேட்டார்.

“அட.. உங்களுக்கு தெரியாதா சம்பந்தி. ராதா பிறக்குறதுக்கு ஒன்றறை மாசத்துக்கு முன்னாடிதான் இவங்க அம்மா அப்பா இறந்தாங்க.. இவனையும் இவுங்க அண்ணனையும் கூட்டிட்டு போய்ட்டோம் நாங்க. ராதா பிறந்ததும் இவன்தான் பேரே வச்சான். ‘கண்ணன் மேல தீராத காதலும் பக்தியும் வச்சுருந்த ராதா மாதிரியே இவளும் இருக்கனும். அதோட ராணி மாதிரி கம்பீரமா வாழனும்’ அப்புடின்னு ராதாராணின்னு பேர் வச்சான்.

ராதாவோட பதிமூனு வயசுவரைக்கும் ஒன்னாவேதான் சுத்துவாங்க.. அப்பறம்தான் இவங்கண்ணன் கல்யாணம் முடிஞ்சதும் திரும்ப இங்க வந்துட்டாங்க. ஆனாலும் அதுக்கப்பறமும் ரெண்டும் பாசத்த பொழியுங்க.. சாப்பிடும்போது பாருங்க” என்றார் செல்வம்.

அதேபோல சாப்பிடும்போது இருவரும் மற்றவருக்கு என்ன பிடிக்கும் என பார்த்து பார்த்து பரிமாற கூறினர். அதுமட்டுமின்றி சேகர் ராதாவிற்கு ஊட்டி வேறுவிட ராதாவை ஒரு முதிர்ந்த அறிவுடைய எதையும் சமாளிக்கும் பெண்ணாக பார்த்த கண்ணனின் குடும்பத்திற்கு புதியதொரு ராதாவை அறிமுகப்படுத்தியது அந்தப் பயணம்.

எல்லாம் நல்லபடியாக முடிய கண்ணனின் குடும்பம் அனைவரிடமும் விடைபெற்று மீண்டும் வீடு திரும்பினர். அவர்களுக்கு திருப்தி ஏற்பட அடுத்த கட்ட நடவடிக்கைகளை பேசிமுடித்துவிட்டனர். இருவீட்டினருக்கும் திருமணம் ஒன்றே குறியாக இருக்க கல்யாண நாளன்றே நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து தேதியை குறித்துவிட்டே வந்தனர். அடுத்த இருபத்து இரண்டாம் நாள் திருமணம்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல… திருமண வேலைகளும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. இடையில் ஒருநாள் தன் அலுவலகத்தின் முக்கிய சந்திப்பு காரணமாக வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தவன் அந்த சந்திப்பிற்காக தயார் செய்த கோப்பை காணாமல் தேடிக்கொண்டிருந்தான். “ராதா.. இங்க ஒரு ரெட் கலர் பைல் வச்சிருந்தேனே பார்த்தாயா?” என கோகுல் கேட்க “இல்லையே” என்றவள் படுக்கைவிரிப்பை சரிசெய்ய ஆரம்பிக்க அந்த கோப்பை தேடிக் கொண்டிருந்தான் கோகுல். அவன் தேடிக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து அவனுக்கு அழைப்புகள் வர அதை ஏற்று பதிலளித்தவன் “ராதா ப்ளீஸ் அந்த பைல கொஞ்சம் தேடி எடுத்துக்கொடேன்” என்றவன் அலைபேசியோடு பால்கனியில் சென்று பேச ஆரம்பித்துவிட்டான்.

கோகுல் கேட்ட கோப்பை தேடி ராதா ஒரு அலமாரியை திறக்க அதில்தான் இருந்தது அவன் கேட்ட அந்த சிவப்பு நிற கோப்பு. அதை எடுத்துவிட்டு கதவை மூடப்போனவளின் கண்கள் அதில் குப்புற திருப்பியபடி இருந்த ஒரு புகைப்பட சட்டத்தில் படிய அதை எடுத்து பார்த்தாள். அதில் ஒரு கவிதை கண்ணாடிக்குள் இருந்து அவளை பார்த்து சிரித்தது.

என் வாழ்வின் எல்லை வரை…
உன் நினைவுகளின் தடம் பதிக்க…
நீ எப்போது கனவில் இருந்து மீண்டு…
உயிர் பெற்று வருவாயடா…?
கண் இமை திறவாமல்
அழகு மயிலின் அசையா தவமாய்
நான் காத்திருக்கிறேன் கண்ணா…!
நீ உயிர் பெற்று வந்துதான்
என்னையும் உயிர்க்க செய்ய வேண்டும்!
வருவாயா என் மன்னா!!!
பேனாவினால் எழுதப்பட்ட அந்த கவிதையை சட்டத்திற்குள் அடைத்து பாதுகாத்திருந்தார்கள். அந்தக் கவிதையை படித்தவள் அதை மெல்ல வருட அப்பொழுது தான் தன் அலைபேசி அழைப்பை துண்டித்து உள்ளே வந்தவன் அதைப் பார்த்து வேகமாக வந்தவன் அவள் கையிலிருந்த சட்டத்தை பறித்து உள்ளே வைத்து மூடினான். அவன் திடீரென்று இப்படி பறிப்பான் என எண்ணாத ராதா அவனை அதிர்ந்து நோக்க அதை கணக்கெடுக்காமல் அவள் கையிலிருந்த கோப்பை வாங்கிக்கொண்டு “தேங்க்ஸ்” என்ற ஒற்றை வார்த்தையுடன் வேகமாக சென்றுவிட்டான். தன் முகத்தைக்கூட பார்க்காமல் கிளம்பிச் சென்றவனின் முதுகை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதா. காரில் ஏறி அலுவலகம் நோக்கி சென்றவன் மனம் முழுதும் தன் கடந்த காலத்தை நோக்கி பயணித்தது. எதைப்பற்றி யோசிக்கவே கூடாது என ஒதுக்கி வைத்திருந்தானோ இன்று மனம் அதை நினைத்து வெம்பியது.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு…

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கலந்துகொள்ள வேண்டி கேரளாவிற்கு சென்றவன் விபத்தில் சிக்கி பிழைத்து வந்தபோது அவனறையில் மாட்டியிருந்த இந்த கவிதை சட்டத்தை பார்த்தவனுக்கு அப்பொழுது அது யார் கொடுத்தது? எப்பொழுது கொடுத்தார்கள்? என்பதெல்லாம் தெரியவில்லை. ஏனெனில் அவன் விபத்தில் சிக்கிய காரணத்தால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேற்பட்ட அவனது நினைவுகளை அவனது மூளை மறந்துவிட்டிருந்தது. ஆனால் இன்று அதைக் கொடுத்தவளையும் அதில் இருக்கும் வார்த்தைகளையும் அவனால் ஒன்றுபடுத்தி காணமுடியவில்லை. அவன் காதுகளில் அவள் கடைசியாக கூறிச்சென்ற வார்த்தைகள் ரீங்காரமிட்டபடி இருந்தது.

“யு ஆர் நாட் பிட் ஃபார் எ செக்சுவல் லைப் கோகுல். உன்னால ஒரு பொண்ண எப்பவுமே திருப்த்தி படுத்த முடியாது. சோ பெட்டர் யுஸ்டே அலோன். ஊன்கூட வாழ்ந்து என் வாழ்க்கையை பாழாக்கிக்க நான் தயாரா இல்லை. குட் பை” அந்த வார்த்தைகள் மீண்டும் அவன் காதுகளில் ஒலிக்க “ஆ….” என கத்தியவன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டியரிங் வீலில் ஓங்கி குத்திக்கொண்டான். “உன்னால தான்டி இன்னைக்கு என் வாழ்க்கையை நான் வாழமுடியாம இருக்கேன். இந்த வார்த்தைகள் தான் என்ன அத்தனை தவறுகளை செய்ய தூண்டிச்சு” என்றவன் அப்படியே சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் செல்வமும் சுகந்தியும் கண்ணனின் வீட்டிற்கு வருகை தந்திருந்தனர். அவர்களை வரவேற்று அமர வைத்த சிவகாமி அவர்களை கண்ணனிடம் உரையாடவிட்டு ராதாவை அழைக்கச் சென்றார். கோகுலும் அப்போதுதான் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தபடியால் இருவரும் இணைந்து ராதாவின் பெற்றோரை காணச் சென்றனர். அனைவரும் வந்தபிறகு வழக்கமான நலன்விசாரிப்புகள் நடைபெற்றது.

“கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது சம்பந்தி” என செல்வம் கேட்க

“ம்.. எல்லாம் ஓரளவு முடிஞ்சது சம்பந்தி. இன்னும் மண்டபத்துல போயி டேரக்டா பாக்க வேண்டிய வேலைகள் மட்டும்தான்” என பதிலளித்தார் கண்ணன்.

“அப்புறம் கல்யாணத்துல லலிதா போட்டுக்கறதுக்கு நகையெல்லாம் இதுல இருக்கு” என்று சிவகாமியிடம் ஒரு பெட்டியை நீட்டினார் சுகந்தி. “அதோட.. ராதா கல்யாணத்துக்கு நாங்க எதுவும் செய்யல. அதனால இத வாங்கிக்கோங்க” என மற்றொரு பெட்டியையும் கொடுக்க

“இப்போ எதுக்கு இதெல்லாம்?” என தயங்கியவரிடம்

“நாங்க செய்ய வேண்டியத செஞ்சுடுறோமே.. எங்க மனத் திருப்திக்காக” என்றவர் அதையும் சுகந்தி சிவகாமியிடம் கொடுக்க இரண்டு பெட்டிகளையுமே ராதாவிடம் கொடுத்து “நீயே வச்சுரும்மா.. லலிதாவுக்கு அலங்காரம் பண்ணும்போது இத போட்டுவிடு” என கூறினார் சிவகாமி.

அந்த பெட்டிகளை எடுத்துக்கொண்டு மேலே தனதறைக்கு செல்ல படியேறியவளிடம் “கொடும்மா.. நான் ஹெல்ப் பண்றேன்” என ஒரு பெட்டியை வாங்கியபடி தன் மகளுடன் மாடியேறினார் சுகந்தி. அறைக்குள் சென்று லாக்கரில் நகைகளை பத்திரப்படுத்தியவள் தன் தாயிடம் திரும்ப “ராதா..” என அவள் கையைப் பற்றிக் கொண்டவர் மேலே பேச முடியாமல் தடுமாற

“என்னாச்சும்மா..?” என்றாள் ராதா பதற்றத்துடன்.

“அது.. ராதா” என்றவர் மேலும் தயங்க

“எதுவானாலும் சொல்லுங்கம்மா” என தன் தாயின் கரத்தை ஆறுதலாக பற்றி ஊக்கம் கொடுக்க

“ராதா.. ஜானகியம்மா சேகருக்கு உன் நாத்தனாரதான் கல்யாணம் பண்ணப்போறோம்ன்னு தெரிஞ்சதும் வீட்ல வந்து பெரிய பிரச்சனை பண்ணிட்டாங்க” என ராதாவிற்கு பிரச்சனை என்னவென்று புரிந்தது. ராதாவின் தமக்கை சவிதாவின் மாமியார் ஜானகி தன் மகளை சேகருக்கு மணமுடிக்க எண்ணியிருந்தார். ஏகப்பட்ட சொத்துக்கு ஒரே வாரிசு. மாமனார், மாமியார் பிக்கல் பிடுங்கல் இல்லை. என்ன? அந்த பையன் சரத் மட்டும்தான். அவனும் தான் இருந்தால் என்ன? திருமணமான சிறிது நாட்களில் சேகரை கைக்குள் போட்டுக்கொண்டு அவனை எங்கேயாவது விடுதியில் முடிந்தால் அநாதை ஆசிரமத்தில் கொண்டுவிட்டால் ஆகாதா? தாய் தகப்பன் இல்லாத பிள்ளைக்கு அதை செய்வதே பேருபகாரம் அல்லவா? குடும்ப கௌரவத்தை குழியிலிட்டு கொழுத்திய இந்த ராதா அப்படியே தொலைந்துவிட்டாள். மீண்டும் வரமாட்டாள் என எண்ணியிருக்க அதுமாறி இப்போது ராதாவின் நாத்தனாரை சேகருக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியது அவருக்கு அவ்வளவு உவப்பான செய்தியாக இருக்கவில்லை.

“என்னாச்சும்மா.. என்ன பண்ணாங்க?” என ராதா கேட்க

“உன்னப்பத்தி தான்ம்மா.. யார் கூடவோ ஒடிப்போய் குடும்ப மானத்த சந்தி சிரிக்க வச்சவளோட நாத்தனார கட்டிவைச்சு இப்ப சேகரோட வாழ்க்கையையும் நாங்க எல்லோருமா சேர்ந்து கெடுக்கறோம்ன்னு ரொம்ப தரக்குறைவா பேசிட்டாங்கம்மா” என சுகந்தி வருத்தத்துடன் பகிர

ராதாவிற்கு முகம் இறுகினாலும் அமைதியாகவே “எப்படி அவங்கள சரிக்கட்டினீங்க?” என கேட்டாள்.

“சேகர் தான் எனக்கு அந்த பொண்ணதான் பிடிச்சிருக்கு. நான் அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னதால சித்தப்பாவும் சித்தியும் எனக்காகதான் போய் பொண்ணு கேட்டாங்கன்னு சொல்ல.. அதுக்கும் அந்தம்மா மொத்த குடும்பமும் இப்படித்தான் இருப்பீங்களா? காதலாம்.. கண்ணராவியாம்ன்னு திட்டிட்டு கிளம்பி போய்ட்டாங்க” என

“அதான் போய்ட்டாங்களே.. அப்புறம் என்ன?”

“இப்ப போய்ட்டாங்க.. ஆனா கல்யாணத்துல?” என பதற்றத்துடன் சொன்ன சுகந்தியை அடக்கியவள் “அத அப்போ பாப்;போம்மா” என அமைதிபடுத்தி அனுப்பி வைத்தாள். சுகந்தியை அனுப்பி வைத்தவளின் மனம் மிகவும் சோர்ந்துவிட்டது. ஏனெனில் அவளுக்கு தெரியும் ஜானகியம்மாவின் வார்த்தை எவ்வளவு விஷம் நிறைந்ததென்று. அவளை அவர் எவ்வளவு தரக்குறைவாக பேசினாலும் அவள் கவலைப்பட போவதில்லை. ஆனால் அவர் தன் குடும்பத்தை பற்றி பேசினால்? அதுவும் திருமணத்தன்று பேசினால்? அதை நினைத்துப் பார்த்தவளின் தலை சுற்றியது.

சுகந்தி வெளியேறி சென்ற சிறிது நேரத்தில் கோகுல் உள்ளே நுழைந்தான். வந்தவன் ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு பேசாமல் சென்றுவிட வந்தவன் முகம் சரியாக இல்லை என கவனித்தவள் என்னவென கேட்குமுன்னே அவளை திரும்பிப்பாராமல் சென்றுவிட்டான். ராதாவிற்கு ஆயாசமாக வந்தது ‘இப்ப இவருக்கு என்ன பிரச்சனைன்னு தெரியலையே?’ என நினைத்தவள் அப்படியே அமர்ந்துவிட லலிதா வந்து அவளை கடைத்தெருவிற்கு அழைத்துச் சென்றாள்.

அன்று இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த கோகுலின் முகம் அப்பொழுதும் தெளிவடையாமல் இருப்பதைக் கண்ட ராதா அவனிடம் சென்று என்னவென்று கேட்க அவனோ “ஒன்னுமில்ல.. நீ போய் படு” எனக் கூற அதைக் கேட்டவள் எதுவும் பேசாமல் அசையாமல் அவன் முகத்தை பார்த்தபடியே நின்றாள். அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவளின் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்து அவள் மடியில் படுத்துக் கொள்ள அவனின் திடீர் செய்கையில் பதறி எழ முயன்றாள் ராதா. “ப்ளீஸ்.. கொஞ்ச நேரம்” என்றவன் தன் தலையை அவள் மடியில் அழுத்தவும் அமைதியாக பழைய நிலையிலேயே அமர்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் வரை அமைதியாக இருந்தவள் அவன் வாய் திறக்காது போகவும் “என்னாச்சு?” என மீண்டும் கேட்க

“உங்கம்மா காலையில உன்கூட பேசிக்கிட்டு இருந்தத கேட்டேன். உங்கக்கா மாமியார் உன்னப்பத்தி தப்பு தப்பா பேசுனதா சொன்னாங்க. நாளைக்கு கல்யாணத்துல உங்க சொந்தக்காரங்க எல்லாரும் உன்ன அப்புடிதான பேசுவாங்க” என வருத்தத்துடன் கேட்க

அதைக் கேட்டவளுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. ‘இப்போ எந்த பூதம் கிளம்புச்சோ?’ என கவலையில் இருந்தவளுக்கு அவன் சொன்னதைக் கேட்டபின் தான் நிம்மதியாயிற்று. “ப்பூ.. இவ்வளவுதானா?” என்றவள் “இங்க பாருங்க.. எல்லாருக்கும் வேலை நிறைய இருக்கும். அவங்கவங்க அவங்க வேலையை பாக்குறதுக்கே சரியா இருக்கும். இதுல நம்மப்பத்தி யாரு பேசப்போறா? சவிதா மாமியார் மாதிரி சில பேர் தங்களோட வாய்ல எதப் போட்டு மெல்றதுன்னு தெரியாம நம்மள பத்தி பேசுனாலும் பேசிட்டு போகட்டுமே. கல்யாணத்தன்னைக்கு பேசுவாங்களா? அப்புறம்.. மறுநாளே மறந்துடுவாங்க. இதுக்குப் போயா இவ்வளவு யோசிக்கிறீங்க” என ஆறுதலாக பேச அவளை நிமிர்ந்து பார்த்தவன் “உனக்கு வருத்தம் இல்லையா?” என கேட்டான்.

“ஹ_ம்.. இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா முடியுமா? மூணு வருஷமா தனியா பிள்ளையோட வாழ்ந்திருக்கேனே. அப்ப கேட்க்காததையா இப்ப கேட்கப் போறேன்” என இயல்பாக கூறியவள் “பேசாம வந்து படுங்க” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட அவள் சொன்னதை கேட்டவனுக்கு தான் மேலும் மனதில் ரணம் கூடிப் போயிற்று. அவள் எதார்த்தமாக தான் கூறினாள். அவனை ஆறுதல் படுத்தத்தான் கூறினாள். ஆனால் அவள் கூறிச் சென்ற வார்த்தைகளின் பின்னே இருந்த அவளின் வலியும் வேதனையும் அவனை தூக்கமின்றி தவிக்கச் செய்தது.

தொடரும்…