Advertisement

பனி சிந்தும் சூரியன்

 



அத்தியாயம் 33



இரவு தாமதமாக வந்ததால்… காலையும் எட்டு மணியாகியும் அபர்ணா எழுந்துகொள்ளாமல் உறங்கிக் கொண்டே இருக்க… ஏற்கனவே எழுந்து தன் வேலைகளை முடித்தவன், அவள் அருகில் படுத்து அவள் உறக்கத்தைக் கலைக்க ஆரம்பித்தான்.


“தூங்க விடுங்க.” என அபர்ணா திரும்பி படுக்க,


“மேடம், நாம ஹனிமூன்ல இருந்து திரும்பி வந்தாச்சு. இது வீடு நியாபகம் இருக்கா?” என அவன் கேட்டதும், எழுந்து அமர்ந்தாள்.


“நான் இன்னைக்கு ஆபீஸ் போகனும் அபர்ணா.”


ஒரு வராதிற்கும் மேல் ஒன்றாகவே இருந்துவிட்டு, இன்று அவன் ஆபீஸ் போகிறான் என்றதும், அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.
அவள் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி வர, “உனக்கு ஒன்னு காட்டுறேன். வா.” எனக் கீழே அழைத்துச் சென்றான்.


கீழே யாரும் இல்லை. முன் பக்கம் பெரிய புல்வெளியில் போடபட்டிருந்த இருக்கைக்கு அழைத்துச் சென்றான். அந்தப் பெஞ்சில் அமர்ந்ததும், அவன் விசில் அடிக்க, கன்றுக்குட்டி உயரத்திற்கு ஒரு நாய் ஓடி வந்தது.


அதன் உயரத்தையும் அதன் வேகத்தையும் பார்த்தவளுக்கு அடிவயிறு கலங்க, கால்களைத் தூக்கி மேலே வைத்து, அன்று போல் இன்றும் தன் கணவனைக் கட்டிக் கொண்டாள்.


“பயத்தை வெளிய காட்டாத, அவன் குஷி ஆகிடுவான். சாதாரணமா இரு.” அவன் சொன்னபடி, அபர்ணா கால்களை இறக்கி உட்கார…. அதற்குள் அந்த நாய் அவர்கள் அருகில் வந்திருந்தது.


வந்த வேகத்தில் கால் இரண்டையும் தூக்கி ராம்மின் தொடையில் வைத்து நின்றது. அதைப் பார்த்தே அபர்ணா அரண்டுவிட்டாள். அவள் எழுந்து ஓடி விடலாமா என நினைக்கும் போதே… அவள் என்னத்தை அறிந்தது போல், ராம் தன் இடது கையால், அவள் இடையில் கைகொடுத்து, தன்னோடு இறுக்கிக் கொண்டான்.


“டைகர்…” என அவன் மறுகையால் அவன் நாயை தடவிக் கொடுக்க, வெகு நாட்கள் கழித்து அவனைப் பார்த்ததால்… அது அவனிடம் கொஞ்சி விளையாடியது.


“டைகர் இங்க பாரு. நம்ம ப்ரண்ட்.” என அவன் நாயிடம் சொல்ல… பிறகே அபர்ணாவை பார்த்தது.


“ப்ரண்ட், ஷேக்கன் கொடு.” ராம் சொல்ல, இவளுக்கு எல்லம் கொடுக்க வேண்டுமா என்பது போல, டைகர் பார்த்து வைக்க,


“ஹே ரொம்பப் பெரிய ஆளா நீ… மூஞ்சியைப் பேத்திடுவேன்.” என அபர்ணா மெதுவாகத் திட்ட, ராமிற்கு அப்படியொரு சிரிப்பு.


“தைரியம் இருந்தா சத்தமா சொல்லேன்.” என்றான்.


“எனக்கு எல்லம் இதோட பிரண்ட்ஷிப் வேண்டாம்.”


“கோட்டை தாண்டி நீயும் வாராத, நானும் வர மாட்டேன்.” என டைகரை பார்த்து சொன்னவள், “வாங்க போகலாம்.” என ராம்மை இழுத்துக் கொண்டு செல்ல, டைகரும் அவர்களோடு வந்தது.

 

பயத்தில் அபர்ணா ராம்மோடு ஒண்டிக்கொண்டே நடக்க, அவனும் அவளை அணைத்தபடி கூட்டி வர, டைகருக்குப் புரிந்தது, அவள் தன் எஜமானருக்குச் சொந்தம் என்று… அதோடு அவர்களை விட்டு வேறுபுறம் சென்றது.


ராம் ஹாலில் அமர்ந்து பேப்பர் படிக்க, அபர்ணா சமையல் அறைக்குச் சென்று வேலையால் கலந்து கொடுத்த காபீயை கொண்டு வந்தாள்.


காபி குடிந்ததும் இருவரும் அறைக்குத் திரும்ப, ராம் குளிக்கச் செல்ல, அபர்ணா அறையை ஒழுங்கு செய்தாள். அவன் குளித்துவிட்டு வந்ததும், இவள் அவசரமாகக் குளிக்கச் செல்ல, ராம் அவள் கைபிடித்துத் தடுத்தான்.

 

“நான் கிளம்புற வரை என்னோட பேசிட்டு இரு. நான் அம்மாவை டிபன் எடுத்து வைக்கச் சொல்லி சாப்பிடுறேன். அவங்கதான் எப்பவும் வைப்பாங்க. நான் அவங்களோட பேசுற நேரமும் அப்போதுதான்.” என்றான்.


அவன் அம்மாவோடு செலவு செய்யும் நேரம், அதை மாற்றாதே என்கிறான். அது அவளுக்குப் புரிந்தது. என் கணவனுக்கு நானேதான் எல்லாம் செய்யவேண்டும் என அவளுக்கு எண்ணமும் இல்லை.


ராம் கிளம்பும் வரை அவனோடு பேசிக்கொண்டு இருந்தாள். ராம் கிளம்பியதும், “இது உன் வீடும்தான் அபர்ணா. அதனால ப்ரீயா இரு.” என்றவன், அவளை அனைத்து முத்தமிட்டே சென்றான்.


ராம் கீழே வந்தபோது ஸ்வர்ணா ஹாலில் இருந்தார். “எப்படி மா இருக்கீங்க?”


“நல்லா இருக்கேன்.”


நேற்று இரவு இவர்கள் வரும்போது, அவர் உறங்கி இருந்தார்.
“மாமா அத்தை எல்லாம் அன்னைக்கே கிளம்பிட்டாங்களா?”


“நீங்க போன அடுத்த நாள் கிளம்பினாங்க.”


ராம் மேலும் அவருடன் பேசிக்கொண்டே இருக்க, ஸ்வர்ணாவுக்குத் தெரியும், இது அவன் உணவு அருந்தும் நேரம் என்று. ஆனால் அபர்ணா வந்து எடுத்து வைப்பாள் என அவர் செய்யாமல் இருந்தார்.


“அம்மா, எனக்கு டைம் ஆச்சு. சாப்பாடு எடுத்து வைங்க.” சொல்லிக்கொண்டே ராம் எழுந்து உணவு மேஜைக்குச் செல்ல, ஏற்கனவே மேஜையில் தயாராக இருந்த உணவுகளை, ஸ்வர்ணா அவன் தட்டில் பரிமாறினார்.


அவரோடு பேசியபடியே சாப்பிட்டவன், சாப்பிட்டதும் அவன் லாப்டாப் பையை எடுத்துக் கொண்டு, அப்படியே அலுவலகத்திற்கும் கிளம்பிவிட்டான்.


அபர்ணா குளித்துவிட்டு, அறையின் ஜன்னல்களைத் திறந்துவிட்டாள். அவர்கள் அறை ஜன்னலில் இருந்து வெளி வாயிலை பார்க்க முடியும். ராம் காரில் செல்வது அவளுக்கு அங்கு இருந்து தெரிந்தது. அவள் கீழே வந்தபோது, அகிலாவும், கார்த்திக்கும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.


“ஹாய் புதுப் பொண்ணு.” கார்த்திக் அவளைப் பார்த்ததும் உற்சாகமாகக் குரல் கொடுக்க…


“ஹாய் கார்த்திக் பையா?” என்றபடி அவன் எதிரில் அமர்ந்தாள். அவள் சொன்னதைக் கேட்டு அகிலாவுக்குச் சிரிப்பு.


“அப்புறம் எப்படி இருந்தது உங்க ஹனிமூன்?” கார்த்திக் கேட்க, அவனுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டவள், அதை மட்டும் கேட்காதே என்றாள்.


அகிலா, “நீயும் சாப்பிடு அபர்ணா.” என்றதும், “அத்தை சாப்பிட்டாங்களா?” என அவள் கேட்க, அகிலா இன்னும் இல்லை என்று சொல்ல, “அப்ப நான் அவங்க சாப்பாடும் போது சாப்பிட்டுகிறேன்.” என்றாள்.


சாப்பிட்டு கார்த்திக்கும் அகிலாவும் ஒன்றாகவே அலுவலகத்திற்குக் கிளம்பி விட, ஸ்வர்ணாவோடு சேர்ந்து அபர்ணா காலை உணவு சாப்பிட்டாள். ஒன்றாக இருவரும் சாப்பிட்டாலும், அவரும் எதுவும் பேசவில்லை… இவளும் பேசவில்லை.


ஸ்வர்ணாவுக்கு எதோ தடுத்தது. அபர்ணா அதை உணர்ந்து அவளும் அமைதியாக இருந்தாள். ஸ்வர்ணா அபர்ணாவை ராம்மின் மனைவியாகப் பார்த்தார்… அவரின் மருமகளாகப் பார்க்க தவறினார்.


வீட்டின் மற்ற வேலைகள் பார்க்கும் பெண்கள் வந்தனர். ஒருவர் தூசி தட்டி வீட்டை பெருக்கி துடைக்க, இன்னொரு பெண் துணி துவைத்து விட்டு, கீழே இருந்த அறையில் உட்கார்ந்து முன் தினம் துவைத்த துணிகளுக்கு இஸ்த்திரி போட்டு மடித்து வைத்தாள். ஸ்வர்ணா ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டு

இருந்தார்.


சமையல் அறையில் சமையல்காரர் சமைக்க, அவருக்கு இன்னொரு பெண்மணி காய் நறுக்கி உதவினார். அவர்தான் பத்திரம் கழுவது, மற்றும் ஸ்வர்ணா சொல்லும் மற்ற எடுபிடி வேலைகளைச் செய்வது. காலையில் வந்தால், இரவுதான் செல்வார். சமையல்காரர் சமையல் மட்டும்தான் செய்வார்.


மதியம் பன்னிரண்டு மணிக்குள் சமைத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பி விடுவார். திரும்ப மாலை ஏழு மணிக்கு வந்து இரவுக்குச் சமைத்து விட்டு செல்வார். இதுதவிர வாயில் காவலாளிகள். ஒருவர் பகலுக்கு இன்னொருவர் இரவுக்கு.


அபர்ணா ஹாலில் உட்கார்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு அங்கே செய்ய ஒன்றுமே இல்லை. வீட்டு வேலைக்கே மாதம் அறை லட்சதிற்கும் மேல் சம்பளம் கொடுப்பார்கள் போல என நினைத்துக் கொண்டாள்.


ஸ்வர்ணா டிவியில் நாடகம் பார்க்க, அபர்ணாவும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ரொம்பவும் கொடுமையாக இருப்பது போல உணர்ந்தாள். ஒரு கதையிலும் லாஜிக் என்பதே இல்லை. இதைப் போய் எப்படிப் பார்கிறார்கள் என இருந்தது.


மதியம் ஸ்வர்ணாவோடு சாப்பிட்டாள். அவர் மதிய உறக்கத்திற்குச் சென்றுவிட… இவளுக்கு ரொம்பவும் போர் அடித்தது. ராமிற்குப் போன் செய்தாள்.


“என்ன டா?”


“என்ன பண்றீங்க?”


“ஒரு கிளைன்ட் மீட்டிங்.”


“நான் போய் அம்மாவை பார்த்திட்டு வரட்டா?”


“சரி போய்ட்டு வா.”


“எதுல போக?”


“டிரைவர் இருப்பார் பாரு. அவரோடகார்ல போ…”


“நானே ஓடிட்டு போகவா.”


“நோ… இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். அவரோட போ… நான் வந்து நைட் கூப்பிடுகிறேன்.”


அவன் வந்து அழைக்கிறேன் என்றதும், மகிழ்ச்சியாகச் சரி என்றாள். ஸ்வர்ணாவிடம் சென்று சொல்லிவிட்டு, உடனே கிளம்பி விட்டாள்.


இவள் திடிரென்று வந்து நின்றதும், சுகன்யாவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மகளைப் பாசமாக வரவேற்றார். இருவரும் ஹாலில் உட்கார்ந்து கதை பேசினர்.


“அங்க ரொம்பப் போர் அடிக்குது மா… நான் பேசாம அகிலா ஆபீஸ்க்கு போகப்போறேன். இங்க சும்மா இருக்கிறதுக்கு, அங்க போனாலாவது எதாவது பண்ணலாம்.”


“இரு அவசரப்படாத கல்யாணம் ஆகி கொஞ்சநாள்தான் ஆகுது. அவர்தான் நிற்க நேரமில்லாமல் இருக்காருன்னா… நீயும் அப்படியே இருப்பியா… உனக்குக் கண்டிப்பா வீட்ல செய்றதுக்கு எதாவது இருக்கும், அதை நீதான் கண்டுபிடிக்கணும்.”


தன் அம்மா சொன்னது போல, அப்படி அந்த வீட்டில் என்ன வேலை செய்வது என யோசிக்கத் தொடங்கினாள்.


“இப்ப எதுவும் குழந்தை வேண்டாம்ன்னு இருக்கீங்களா?” சுகன்யா மெல்ல கேட்க, அபர்ணா இல்லை என்று தலையாட்டினாள். அதைக் கேட்டு முகம் மலர்ந்தவர், “குழந்தையெல்லாம் வந்திட்டா… உனக்குத் தானா டைம் போயிடும்.”


“உனக்கு வேலைக்குப் போகணும்ன்னு அவசியம் இல்லை. உன் குடும்பத்தை நல்லா பார்த்துக்கோ.” என்றார்.


சுகன்யா சொல்வதும் சரிதான். அதே சமயம் தான் வேலைக்குச் சென்றுவிட்டால், ஸ்வர்ணா தன்னோடு ஒட்டாமலே இருந்துவிடுவாரோ என அந்தப் பயமும் அவளுக்கு இருந்தது.


மகள் வந்திருப்பது தெரிந்து, ஸ்ரீகாந்த அன்று சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட, அருணும் கல்லூரியில் இருந்து வந்ததும், குடும்பமாக உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர்.


இரவு உணவுக்கு மாப்பிள்ளை வருவதால்.. சுகன்யா ஒரு மினி விருந்து தயார் செய்ய… அபர்ணா சென்று அவருக்கு உதவினாள். இருவரும் பேசிக்கொண்டே வேலை செய்தனர்.


இரவு ஏழு மணி போல் ராம்மும் வந்துவிட, அவனைப் பார்த்ததும் அபர்ணா முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. இங்கே அவனது உடைகள் இருப்பதால்… குளித்துவிட்டே சாப்பிட அமர்ந்தான்.


“அருண் அன்னைக்குக் கல்யாண மண்டபத்தில எதுக்கு அழுத, உங்க அக்கா போறதை நினைச்சு அழுதியா… இல்லைனா என்னை நினைச்சு அழுதியா?” என ராம் வேண்டுமென்றே அபர்ணாவை சீண்ட,


“உங்களை நினைச்சு தான் அழுதேன் சொல்லு டா.” என்றாள் அபர்ணா கெத்தாக. ராம் சிரித்தான்.


மட்டன் கீமாவில் செய்த ஸ்டஃப்ட் பரோட்டா, வெகு சுவையாக இருக்க…

 

“ரொம்ப நல்லா இருக்கு அத்தை.” என்றான்.


“அதை நான் பண்ணலை, அபர்ணாதான் பண்ணா.” எனச் சுகன்யா சொல்ல, தன் மனைவியிடம், “உனக்கு இதெல்லாம் செய்யத் தெரியுமா?” என்றான் ராம் ஆச்சர்யமாக.


“மூட் இருந்தா செய்வேன்.” என்றாள் அபர்ணா அலட்டிக்கொள்ளாமல்.


சிறிது நேரம் சென்று இருவரும் வீடு திரும்ப, அங்கே அகிலா கார்த்திக் சாப்பிட்டுவிட்டு ஹாலில் அமர்ந்து இருந்தனர். ஸ்வர்ணாவும் உட்கார்ந்து இருந்தார். ராம் அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என விசாரித்தான்.


“டேய் ! ஹனிமூன் போக உனக்கு வேற இடமே கிடைக்கலையா?” கார்த்திக் ஆரம்பிக்க,


“நல்லா கேளுங்க.” என்றாள் அபர்ணா சடவாக.


“ஏன் அந்த இடத்துக்கு என்ன குறை? அபர்ணா, திரும்பவும் இன்னொரு முறை போவோமா.” ராம் கேட்க, “நீங்க ஒரு ஆணியும்…” எனச் சொல்லிவிட்டு ஸ்வர்ண இருந்ததால்… மேலும் தொடராமல் விட்டாள்.


அவள் சொல்ல வந்தது புரிந்து ராம்மும் கார்த்திக்கும் சிரித்தனர்.
எல்லோருமாகச் சேர்ந்து பேசிக் கொண்டு இருந்துவிட்டு, படுக்கச் சென்றனர்.


மறுநாள் காலை அலுவலகம் செல்வதற்கு முன், இன்னைக்கு நம்ம கல்யாணத்துக்காக, ஆசரமம் ஒன்னுக்கு மதிய சாப்பாடு கொடுக்கிறோம். அதனால நாமும் போகணும்.” என்றான்.


அபர்ணாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி, வீட்டில் சும்மா இருப்பதற்கு அங்காவது செல்லலாமே என்று இருந்தது. “அத்தையும் கூடக் கூடிட்டு போகலாமா… அவங்களும் சும்மா தானே இருக்காங்க.”


அபர்ணா சொன்னதை யோசித்துப் பார்த்த ராம், ஸ்வர்ணாவிடம் சென்று சொல்லவும், முதலில் வரவில்லை என்றவர், அவன் வற்புறுத்தவும், சரி என்றார்.


ராம் தான் அங்கே நேராக வந்துவிடுவதாகச் சொல்ல, பன்னிரெண்டு மணியானதும், மாமியாரும், மருமகளும் வீட்டில் இருந்து காரில் கிளம்பி சென்றனர். அபர்ணா ஆடம்பரமாக உடை அணியாமல், காட்டன் சேலை அணிந்து வந்தாள்.


ஆசரமத்தில் ராம் இவர்களுடன் சேர்ந்து கொண்டான். அது வெறும் அநாதை ஆசரமம் மட்டும் அல்ல… வசதி இல்லாதவர்களுக்கான முதியோர் இல்லமும் தான்.


அந்த இல்லத்தை நடத்தும் பெண்மணிக்கு நடுத்தர வயதுதான் இருக்கும். ரொம்பக் கனிவாக இருந்தார். இவர்களை வரவேற்று அழைத்துச் சென்று, எல்லாக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைச் சேர்ந்து, இவர்கள் திருமணதிற்கு வாழ்த்து தெரிவிக்க வைத்தார்.


பிறகு எல்லோருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. சைவம் அசைவம் இரண்டுமே இருந்தது. அதோடு கடைசியில் எல்லோருக்கும் ஐஸ்கிரீம் வேறு. ராம் அபர்ணா இருவருமே தாங்களும் பணியாளர்களுடன் சேர்ந்து பரிமாறினர்.


ஐஸ்கிரீம் கொடுப்பவனிடம், “எவ்வளவு கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம கொடு.” என்றான் ராம். அவர்கள் அனைவரும் வயிறார சாப்பிட்டார்கள் என்பதை, அவன் நேரடியாகப் பார்த்தே திருப்தியுற்றான்.


இவர்களும் அந்த ஆசாரம தலைவியுடன் சாப்பிட்டு விட்டு, வீடு திரும்பினர். இவர்கள் வந்த காரை அனுப்பிவிட்டு, ராம் தன்னுடைய காரில் இருவரையும் அழைத்துச் சென்றான்.


அவன் நினைத்து இருந்தால்… காசை கொடுத்துவிட்டு இருந்திருக்கலாம். தாங்கள் கொடுப்பது அவர்களுக்கு உண்மையில் கிடைத்ததா… அவர்கள் வாயிறாற சாப்பிட்டார்களா எனத் தன் நேரத்தை செலவழித்து, அவன் நேரில் வந்து பார்க்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை.


அவனுடைய அந்தச் செயல் அபர்ணாவை மிகவும் கவர்ந்தது. எத்தனை பேர் மற்றவர்களுக்காக யோசிக்கிறார்கள்.


அபர்ணா தன்னவனையே காதலாகப் பார்த்துக் கொண்டு வர… தன் அம்மாவை வைத்துக் கொண்டு, பதில் பார்வை பார்க்க முடியாமல் ராம்தான் திணறி விட்டான்.


வீட்டிற்கு வந்ததும் ஸ்வர்ணா ஓய்வு எடுக்கச் சென்று விட… அவர் செல்லும் வரை ஹாலில் இருந்தவன், அவர் சென்றதும் தங்கள் அறைக்கு விரைந்தான்.


அபர்ணா அப்போதுதான் புடவையைக் கழட்டிக் கொண்டு இருந்தாள். அவளை அப்படியே அள்ளிக் கட்டிக் கொண்டவன், “ஹே… ஏன் டி என்ன அப்படிப் பார்த்த?” என்றான்.


“எப்படிப் பார்த்தேன்?”


“என்னை முழுங்கிற மாதிரி?”


அப்படியா பார்த்து தொலைச்சோம் என அபர்ணாவுக்கு முகம் சிவக்க…. “நீ ரொம்ப நல்லவன் டா…” என்றாள்.


காதலாக அனைத்துக், அதை கூடலில் முடித்து, இருவரும் களைப்பில் உறங்கியும் விட்டனர். மாலை அலுவலகத்தில் இருந்து போன் வந்ததும், தலைதெறிக்கக் கிளம்பினான்.


“உன் கூட இருந்தா, நான் எல்லாத்தையும் மறக்கிறேன். இனிமே பகல்ல வீட்டுக்கே வரக் கூடாது.” என அவன் சொல்லிவிட்டு செல்ல, அபர்ணா சிரித்துக் கொண்டாள்.


இருவருக்கும் இடையில் சண்டைகளும் வராமல் இல்லை. அவன் சில நாட்கள் இரவு தொடர்ந்து தாமதமாகவே வர…


“நீ இப்ப எல்லாம் என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிற.” என அபர்ணா குற்றம் சொல்ல…


“எப்பவும் உன்னைக் கொஞ்சிட்டே இருக்க முடியாது டி.” என அவனும் பதிலுக்குப் பேச… என அவ்வபோது இப்படிச் சின்னச் சண்டைகளும் வந்தது.


அந்த வார இறுதியில், தொழில்துறை நண்பர் கொடுத்த விருந்துக்கு, ராம் அபர்ணாவையும் அழைத்துச் சென்றான். அவள் நன்றாக உடை அணிந்து வந்தாள். இவர்கள் செல்லும்போது ஆதித்யாவும் வர, அவன் இவர்களைப் பார்த்து பார்க்காதது போலச் சென்றான்.


இருவரும் எப்போதுமே விழுந்து பழகமாட்டார்கள். ஆனால் எங்காவது பார்த்தால்… ஹாய் ஹலோ சொல்லிக் கொள்வார்கள். இன்று அவன் பதறி அடித்துச் செல்வது போல ராமிற்குத் தோன்றியது. இவன் வீட்டினர் பத்திரிகை கொடுத்தும், ஆதித்யா இவர்கள் வரவேற்புக்கும் வரவில்லை.


ராம் அபர்ணாவிடம், “உங்க ரெண்டு பேருக்கும் என்னதான் பிரச்சனை.” என்றான்.


“நான் சொல்ல மாட்டேன். என்னால சொல்ல முடியாது.” என்றாள் அபர்ணா. அவள் முகம் அப்படிக் கருத்து, சிறுத்து விட்டது.


உணவு முடிந்து கிளம்பும் சமயம், ஆதித்யா தனியாகப் பின்புறம் செல்வதைக் கவனித்த ராம், அபர்ணாவிடம், “ஒரு நிமிஷம் வந்திடுறேன்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.


ஆதித்யா ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வர, ராம் அவன் சட்டையைப் பிடித்து, “அபர்ணாவை என்ன டா பண்ண?” என ஆக்ரோஷமாகக் கேட்க, ராம்மின் கையை விலக்கியவன், முன்பு நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.


“உன்னோட நான் எப்பவும் போட்டி போடுவேன். அது உனக்கே தெரியும். நான், நீ அபர்ணாவை லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிப்பேன்னு எல்லாம் நினைக்கலை.”


“உனக்கு முன்னாடி அவளை என்னோட கேர்ள் ப்ரண்ட் ஆக்கிகனும்ன்னு நினைச்சேன்.”


“அவ என்கிட்டே பிரண்டா தான் பழகிட்டு இருந்தா. நான்தான் அவளைப் போர்ஸ் பண்ணி வெளிய கூப்பிடுவேன். ஆனா அவ சாமான்யமா ஒத்துக்க மாட்டா. எப்பவாவது தான் வருவா.”


“என்னை அவ பின்னாடி சுத்த வைக்கத்தான் அப்படிப் பண்றான்னு நினைச்சேன்.”


“ஒருநாள் அவ வேலை முடிஞ்சு போகும்போது, வரியா கோவா வரை ட்ரிப் போகலாம்ன்னு கேட்டேன்.”


“அவளுக்கு அப்பவும் புரியலை. யாரெல்லாம் வராங்கன்னு கேட்டா.”


“நீயும் நானும்தான், வரியா ஜாலியா போய் நாலுநாள் இருந்திட்டு வரலாம்ன்னு கேட்டேன்.”


“அன்னைக்கு அவ என்னைப் பார்த்தா பாரு ஒரு பார்வை, நான் செத்தே போயிட்டேன். நீயா இப்படின்னு என்னைக் கேவலமா பார்த்தா.. அவ என்னைத் திட்டலை, அடிக்கலை, ஆனாலும் நான் அசிங்கபட்டேன்.”


“நீ என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கிறேன்னா, நான் எதோ வகையில அதுக்குக் காரணமா இருந்திருக்கணும்ன்னு….” அவளைத்தான் குத்தம் சொல்லிகிட்டா.


“நீ என்னை ஒருநாளும் தப்பா எல்லாம் பார்த்தது இல்லையே. ஆனாலும் ஏன் இப்படிக் கேட்டேன்னு கேட்டுட்டு. நான் பதில் சொல்றதுக்குள்ள போயிட்டா.”


“நான் நீலீமாவை வச்சு, அபர்ணாவையும் எடை போட்டேன். எப்பவுமே உங்க அப்பாவையும் நீலீமாவையும் நான் குறைச்சுத்தான் பார்ப்பேன். அவங்க சொந்தம் தானே இவளும், எப்படி இருப்பன்னு… நானே தப்பா நினைச்சிட்டேன்.”


“அன்னைக்கு நைட் என்னால தூங்கவே முடியலை. என்னோட கள்ளம் கபடம் தெரியாம பழகின பொண்ணைப் போய், இப்படித் தப்பா கேட்டோமேன்னு, ரொம்ப நொந்து போயிட்டேன்.”


“நான் செஞ்ச தப்ப, நானே சரி செய்ய நினைச்சேன். ஆனா அதுக்குள்ள அபர்ணா பெங்களூர் போயிட்டா. நான் அவளைத் தேடி பெங்களூர் போய்ப் பார்த்து பேசினேன்.”


“என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டேன். அதை நான் விரும்பிதான் கேட்டேன். ஆனா அவ மறுத்துட்டா.”


அதுக்கு அப்புறம் எனக்கு அகிலா கல்யாணத்துக்கு வரும்போதுதான், நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போற விஷயம் தெரிஞ்சது.”

 

ஆதித்யா சொன்னதை கேட்ட ராமிற்கு, இதெல்லாம் தான் அவளை மறுத்து, தன் அம்மாவை பெண் பார்க்க சொன்னபிறகு நடந்ததுதான் என புரிந்தது. அபர்ணா நினைத்து இருந்தால்…. அதித்யாவை திருமணம் செய்து கொண்டு சென்று இருக்கலாம். இப்படிப்பட்டவளை தான் எவ்வளவு வருத்தினோம் என அவனுக்கு கஷ்டமாக இருந்தது.


ஆதித்யா செய்த தப்பை நினைத்து அவனே வருந்துகிறான், அதைச் சரி செய்யவும் பார்த்து இருக்கிறான். அவனிடம் போய்க் கோபப்பட்டால், அது செத்த பாம்பை அடிப்பதற்குச் சமம்.


“அபர்ணாவை இனிமே அவ இவன்னு எல்லாம் சொல்லாத. அவ என்னோட பொண்டாட்டி. புரிஞ்சுதா?” என்ற ராம்மிடம், “நீ ரொம்ப லக்கி.” என்றான் ஆதித்யா. இருவரும் ஒன்றாகவே திரும்ப…. அவர்கள் இருவரையும் பார்த்து அபர்ணா முறைத்தாள்.


காரில் திரும்பும் போது அவள் அமைதியாக வர… “அவன் எதோ அப்பாவையும் நீலீமாவையும் மனசுல வச்சு, உன்கிட்ட அப்படிக் கேட்டிருக்கான். அவனே ரொம்பப் பீல் பண்றான். இனி உன் விஷயத்துல வரமாட்டான்.” என ராம் அபர்ணாவுக்குச் சமாதானம் சொல்ல…


“அவன் மட்டும் தான் என்னை அப்படி நினைச்சானா…நீங்க என்னைப் பத்தி ரொம்ப நல்லா நினைச்சீங்களா? நீங்களும் தானே என்னைப் பத்தி கேவலமா நினைச்சீங்க. என்கிட்டையே நீங்க கேட்கலை… உன் குடும்பமே இப்படித் தான் இருப்பீங்களான்னு.” அபர்ணா தன் மீது பாய்வாள் என ராம் எதிர்ப்பார்க்கவே இல்லை.


‘இதுதான் எங்கையோ போற மாரியாத்தா, என் மேல வந்து ஏறு ஆத்தான்னு சொல்வாங்களா…” என நினைத்தவன்,


“அபர்ணா, என் மனசால சொல்றேன். உன்னை நான் எப்பவும் தப்பா நினைச்சதே இல்லை. உன்னை நான் கோபப்படுத்த மட்டும்தான் அப்படிப் பேசினேன். உன்னைப் பத்தி தப்பா நினைச்சா… நான் உன்னைக் கல்யாணம் பண்ணி இருப்பேனா?” ராம் தன் மனதின் ஆழத்தில் இருந்து சொல்ல,


“எனக்கே தெரியலை… எதைப் பார்த்து நான் உன்னைக் காதலிச்சேன், எதுக்காக உன்னைக் கல்யாணம் பண்ணேன்னு. ஆனா இனிமேல் என்னைக்காவது நீ என்னைப் தப்பா பேசினேன்னு வை… அன்னைக்கு உன்னை விட்டு நான் போயிட்டே இருப்பேன்.” என்றாள்.


“ஏன் டா செல்லம் இப்படி எல்லாம் பேசுற? அப்படி எல்லாம் எதுவும் நடக்காது.” என்றவனுக்கு, உள்ளுக்குள் கொஞ்சம் பயம் வந்தது என்னவோ உண்மை.


மகனே ! கோபத்தில கூட எக்குத் தப்பா பேசி வச்சிடாத டா ! என அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.

 

Advertisement