சாந்தினியின் சம்மதம் – 17
அடுத்து வந்த நாட்கள் பாரிஜாதத்தின் நரி தந்திரத்தில் காய்கள் நகர்த்தப்பட்டது. பணம் பத்தும் செய்யும் என்று சொல்லியது பொய்யில்லை என்பது போல, பணத்திற்காகப் பாரிஜாதம் பத்தாயிரம் கூடச் செய்யும் நிலையில் இருந்தார்.
மச்சக்காளை கதிரவனிடம் தொழிலில் சிறிது ஒதுங்கியதோடு இல்லாமல் முன்பை போல எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்ளாமல் இருந்தார். அவர் அடங்கிவிட்டார் என்று பாண்டியும் சக்கரையும் நினைக்கக் கதிரவன் மட்டும் பதுங்கி இருக்கிறாரோ எனச் சந்தேகம் கொண்டான். ஆனால் மேலும் அதில் எதுவும் துருவவில்லை.
அவர் செயல்களின் உச்சமாய், அவர்கள் பண்ணையில் சரக்கு இல்லையென்று, அவர்களுடைய வாடிக்கையாளர்களை நெய்தல் பண்ணைக்கே அனுப்ப, கதிரவன் புருவத்தை நெறித்து யோசனைக்கு உள்ளானான்.
பாண்டியோ, “மாப்பு, இலாட கட்டுனது பலமோ ?” எனச் சிரிப்புடன் கூறினான்.
வீட்டிலோ நிலைமை தலை கீழாக மாறியிருக்கத் தொடங்கியது. பாரிஜாதம் முன்னை போல இல்லாமல் பார்வதியிடம் சற்று அனுசரித்துப் போவதோடு, “அண்ணி ஏதாவது ஒத்தாசை வேணுமா ?” எனக் கேட்கவேறு செய்து பார்வதிக்கு பற்பல அதிர்ச்சிகளைத் தந்துகொண்டிருந்தார்.
இன்று திட்டம் தீட்டி நாளை நிறைவேற்ற இது ஒன்றும் சாதாரண விஷயமில்லையே. கதிரவன் சாந்தினியை மணக்க வேண்டும். பணத்திற்காகத்தான் என்றாலும், அவளின் வாழ்வு கதிரவனோடு சிறப்பாக அமைவதோடு தங்களது கை எப்போதும் ஓங்கியிருக்க வேண்டுமே. அதுக்காகத்தான் தங்களின் நாடகத்தை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் மாத கணக்கில் அரங்கேற்றிக்கொண்டிருந்தனர்.
“ஏங்க… இன்னும் எம்புட்டு நாளுங்க? அந்தப் பார்வதிய பாத்தாலே எனக்குப் பாவக்கா தின்னமாதி இருக்கு. அவளும் அவ மூஞ்சியும். அவகிட்ட போய் அண்ணி வெண்ணீனுகிட்டு. சீக்கிரம் திட்டத்தைச் சொல்லுங்க. நாம இழுத்தடிக்க இழுத்தடிக்க அந்த வக்கீலு எல்லாப் பொறுப்பையும் கதிரவன்கிட்ட ஒப்படைச்சிட போறாரு” எனப் பாரிஜாதம் கூற ,
“இல்ல அதெல்லாம் பண்ணமாட்டாரு. ஏனா உயில்படி அவனோட 25 -ஆவது வயசுலதான் அவன் கைக்குப் போய்ச் சேரும். அதுவரைக்கும் அவனுக்குமட்டுமில்ல, வேற யாருக்கும் தெரிய போறது இல்ல”
“அப்போ உங்ககிட்ட மட்டும் எப்படிச் சொன்னாங்க?”
“நேரடியா கேட்டா அந்த மனுஷ சொல்லிடுவாரா? அவரு நேர்மை நீதின்னு பொழைக்கத் தெரியாத ஆளு. போட்டு வாங்குற விதத்துல போட்டு வாங்குனே. அது ரொம்ப முக்கியமா? இந்த உண்மை கதிரவனுக்குத் தெரிய இன்னு நேர இருக்கு. கொறஞ்சது ஒரு வருசத்துக்கு மேல இருக்கு. நான் இன்னும் இரெண்டே மாசத்துல இவுங்க கல்யாணத்த முடுச்சிடுவே.
சொத்து அவன் கைக்கு வந்து சேருற நாளுக்குள்ள, கதிரவனை நான் என்னோட கைக்குள்ள கொண்டு வந்துடுவே. அதுக்குதான் எனக்கு வர வியாபாரத்தைக் கூட, வேணும்னே அவனுக்கு அனுப்பி நல்ல பேர சம்பாதிக்கிறே” எனக் கூற, பாரிஜாதமோ, “இன்னும் இரெண்டே மாசம்தானா ? ரொம்ப நல்லதா போச்சு. அப்புற சொல்ல மறந்துட்டே, இன்னைக்குச் சாந்தினி வருது. போய்க் கூட்டியாந்துருங்க” எனக் கூற, அவரும் சரியென்று புறப்பட்டார்.
வாசலுக்கு அவளை அழைத்துவர புறப்பட்டவரின் கண்கள் அதிர்ச்சியிலும் கோவத்திலும் சிவந்திருந்தது. காரணம் சாந்தினி மாறனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கியதே.
மச்சக்காளையின் பின்னோடு வந்த பாரிஜாதமும் இதைப் பார்த்துவிட, அவருக்கு அந்த இடத்திலே சாந்தினியை ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது. இருந்தும் இருவருமே தங்களைக் கட்டுப்படுத்தியபடி வீட்டின் உள்வாசலிலே நிற்க, இவர்கள் நிற்பது தெரியாமல், மாறனோ சாந்தினியின் கைகளைப் பிடித்துச் சிரித்தபடியும் ரசித்தபடியும் வம்பு செய்துகொண்டிருந்தான்.
“மாமா, கைய விடுங்க. யாராச்சும் பாத்துற போறாங்கா”
“கைய தான பிடிச்சேன்… இதுக்கு எதுக்கு இவ்ளோ பயப்படற? நான் உன்ன கட்டிக்கப் போறவ. எத்தன நாள் கழுச்சு பாத்துருக்கோம். இப்படிப் பண்றியே”
“இல்ல அத்த அம்மானு யாராச்சு பார்த்துட்டா?”
“பார்த்தா என்ன? நல்லதா போச்சு. கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிட வேண்டிதான். நான் அப்பாகிட்ட சாந்தினியை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிடுவே. அப்பா கட்டாயம் செய்வாரு. ஏன அவரோட அன்பு தங்கச்சி மகளைதான நான் காதலிக்கிறே” என வசனம் பேச, அதற்குமேல் அங்கு இருவரும் நில்லாமல் எதையும் பார்த்ததைப் போலக் காட்டிக்கொள்ளாமல் விறுவிறுவென்று தங்களின் அறைக்கே சென்றுவிட்டனர்.
உள்ளே சென்றுவிட்டு, மீண்டும் அப்போது தான் வெளியே வருவதைப் போல, “பாரிஜாதம்…” என உரக்க குரல் கொடுத்தபடி வெளியே வர, அவர் குரல் கொடுத்தவுடன் எதுவும் நடக்காததைப் போலச் சாந்தினியும் மாறனும் விலகி நின்றுகொண்டு, அப்போது தான் வந்தது போலப் பாசாங்கு செய்தனர்.
இதை எல்லாம் கண்டும் காணாமல் கவனித்துவிட்டு மச்சக்காளை, “சாந்தினி எப்படி வந்த ? உன்ன கூப்பிடத்தான் நான் புறப்பட்டுக்கிட்டு இருக்கே” எனக் கேள்வியோடு மாறனை பார்க்க,
“அதுவந்து மாமா, நான் வீட்டுக்கு வரப்ப பார்த்தேன். சரி நம்ம வீட்டு பொண்ணு ரோட்ல நிக்க வேணாமேன்னு நான்தான் கூட்டி வந்தே.” எனக் கூற, பதிலேதும் சொல்லாமல், “சாந்தி, உள்ள போ மா” எனக் கூறிவிட்டு அவர் வெளியே சென்றவர் தான். மறுபடியும் வீட்டிற்கு முழுதாக ஒருநாள் கழித்துதான் வந்து சேர்ந்தார். அவருடைய பண்ணையிலையே இரவை யோசித்து யோசித்துக் கழித்தார்.
மிகவும் ஜாக்கிரதையாகக் கையாளவேண்டிய விஷயம் இது என அவருடைய மனதில் ஓட தொடங்கியது.
மறுநாள் பாரிஜாதத்தின் முன் அமர்ந்தவர், “பாரிஜாதம். நாம ரொம்ப ஜாக்கிரதையா காய நகத்தனும். என்னனென்ன பண்ணனும்னு சொல்லுறே. அதே போலப் பண்றதுக்கான வேலைய பார்த்துடு” எனப் பீடிகையுடன் தொடங்கினார்.
“சரிங்க. என்னனு சொல்லுங்க?”
“முன்னாடி நாம நினச்சிதைவிட இப்ப திட்டம் ரொம்பச் சிக்கல். உன்னோட மகளைச் சரி கட்டுறதே பெரிய விஷயம். இதுல இந்த மாறன் பையன் வேற. லிங்கத்தோட ஆதரவு மாறனுக்குத் தான் இருக்கும். நம்ம மாத்தி பேசுனா இத்தன வருஷம் நம்ம போட்டு வஞ்சிருந்த வேஷமெல்லாம் களஞ்சிடும். அப்படியே லிங்கத்தை எதுத்து பேசுனாலும் கதிரவனும் நமக்கு ஆதரவு இல்ல. அதுனால எல்லாப்பக்கமும் நம்ம ஆடணும். ஆனா ஆடுறது நம்மதானு தெரியாம ஜெயிக்கணும்” எனக் கூற, பாரிஜாதமும் அவருடைய சதித்திட்டத்தைப் பாடம் கற்கும் மாணவியைப் போலக் கவனமுடன் கற்றுக்கொண்டார்.
“நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா மாறன் ? அவனை எப்படி என்ன சொல்லி சரிகட்டுறது ?” என மச்சக்காளையின் திட்டத்தைக் கேட்ட பாரிஜாதம் வினவ, “மாறனுக்கு வேற வழி இருக்கு. அது அவன் படிப்போட கடைசிவருஷத்துல இருக்கான். இன்னும் ரெண்டு நாளுல, அவன் எதோ படிப்புக்கு வேல செய்ற கம்பெனில போய் வேல கத்துக்கணுமாம். அதுனால பத்து நாள் மதுரைல இருக்க எதோ இடத்துக்குப் போறான். அவன் எங்க போன நமக்கு என்ன ? எங்குட்டோ போய்த் தொலையட்டும். அவன் கிளம்புனதும் நீ நைசா பேசி சாந்தினியை வர வச்சிடு. ஹாஸ்டெல்க்கு போன போட்டு எனக்கு உடம்பு முடிலனு சொல்லி வர வை. எங்க அம்மா அப்பாக்கு தெரிய வேணாம்னு சொல்லு. தெரிஞ்சா அவுங்களுக்கு முடியாம போகும்னு. அவுங்களும் இப்பவே வந்தா காரியத்தைக் கெடுத்துடுவாங்க.
அவ இங்க வந்தது நான் சொன்னமாதியே பேசு. அவகிட்ட போன் இல்லாம பாத்துக்க. அவ வந்து மூணு நாளுக்குள்ள கல்யாணத்த முடுச்சிடனும்.
பார்வதிக்கிட்ட பேச உனக்கு நான் சொல்லி தரவேண்டிய அவசியமில்லை. லிங்கத்துக்கிட்ட பேச வேண்டியதையும் நான் உன்கிட்ட சொல்லிட்டேன்.எதயு பிசுறு தட்டாம செஞ்சிடுவ தானே ? மாறன் இல்லாத இந்தச் சந்தர்ப்பத்தை நம்ம சரியா பயன்படுத்திக்கணும்.
எந்தக் காரணத்துக்கொண்டு சாந்தினி அந்த மாறன் பையன்கிட்ட கல்யாணம் முடியிற வரைக்கும் பேசாம பாத்துக்கணும். முடியுமா ?”
“கண்டிப்பாங்க, அவளையும் பார்வதியையும் நான் பாத்துக்கிறே” என உறுதி கொடுக்க, மச்சக்காளையும் பாரிஜாதமும் மாறன் கிளம்பும் நாளுக்காகக் காத்திருந்தனர். அதற்குள் சிலபல சூழ்ச்சிகளையும் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
மாறன் கிளம்பும் நாளும் வந்தது. அவன் கிளம்பி அரைப் பொழுது கூடக் கழியவில்லை. அதற்குள் வீட்டில் பூஜையென்று ஒரு பணிக்கர் வந்து நின்றார். லிங்கமும் பார்வதியும் யாரென்று பார்க்க, பாரிஜாதம் அவர்களிடம் தான்தான் வரவழைத்ததாகவும் வீட்டின் சுபிக்ஷத்திற்குப் பூஜை செய்யப் போவதாகவும், வந்திருப்பவர் இந்தப் பூஜை செய்வதில், ஜோதிடம் எதிர்காலம் கணிப்பதில் தலை சிறந்தவர் என்றும் கூற, எப்போதும் ராசி நக்ஷத்திரம் நேரம் காலம் சகுனம் என அனைத்திலும் நம்பிக்கை அதிகம் கொண்ட லிங்கம் வந்திருந்த பணிக்கரின் மீது மரியாதையான பார்வையைச் செலுத்தினார்.
குடும்பத் தலைவனும் தலைவியும் பூஜையில் அமரும்படி கூற, பாரிஜாதமே பார்வதியை அழைத்தது பார்வதிக்கு நம்ப முடியாத ஆச்சர்யம்தான். ஆனாலும் அவர் அதற்குமேல் யோசிக்கவில்லை. லிங்கத்துடன் பூஜையில் அமர, அவர்களின் ஜாதகத்தையும் கொண்டு வரும்படி வந்திருந்தவர் கூற, ஏற்கெனவே எடுத்து வைத்தார் போலப் பாரிஜாதம் உடனடியாகக் கொண்டு வந்து கொடுத்தார்.
ஒரு சில பூஜைகளைச் செய்தவர், லிங்கத்தின் ஜாதகத்தைப் பார்த்துப் புருவங்கள் சுருங்கிட யோசித்து மீண்டும் மீண்டும் எதையோ எழுதியும் அழித்தும் திருத்தியும் பார்த்துக்கொண்டே இருந்தார். கடைசிவரை அந்தப் பணிக்கரின் முகத்தில் திருப்தி இல்ல்லவே இல்லை.
அவருடைய முகப் பாவங்களைப் பார்த்துக்கொண்டிருந்த, பார்வதி சற்றே உள்ளூர கலக்கம் கொண்டார்.
“என்னாச்சு பணிகரே? ஒன்னும் பிரச்சனை இல்லைல ?” எனத் தயங்கியபடியே பார்வதி கேட்க,
“பிரச்சனை இல்லனு சொல்ல முடியாது. இருக்கு. அதுவும் இந்தக் குடும்பத் தலைவனுக்கு” எனப் பெரிய பீடிகையுடன் ஆரம்பித்தார் வந்திருந்தவர்.
“அய்யயோ என்ன சொல்லுறீங்க?” என ஆளுக்கு முதலாவதாக அலறிக்கொண்டு பாரிஜாதம் கேட்க, பாரிஜாதத்தை அடக்கிய மச்சக்காளை, “பாரிஜாதம் செத்த சத்தம் போடாம இரு. அவரைப் பேசவிடு” எனக் கூற, பார்வதியும் கைகளைப் பிசைந்தபடி கலவரமான முகத்துடன் அமர்ந்திருந்தார்.
“சொல்லுறே! இந்த வீடு அதாவது இந்த வீட்டை காலம் காலமா கட்டி ஆண்ட சந்ததியோட மூத்த வாரிசு இப்ப இங்க வாசம் பண்ணல. நான் சொல்லுறது சரிதானே ?” என அனைவரையும் பார்த்துக் கேள்வி கேட்க, ஆம் என்பதாய் தலை அசைத்தனர்.
“அந்த மூத்த வாரிசு இந்த வீட்ல இல்லாம வெளில இருக்குறது, இங்க இருக்க முன்னோருக்கு இஷ்டமில்லை. அவுங்களோட சாபம் இந்தக் குடும்பத் தலைவனுக்கு ஏற்பட்டிருக்கு.
எப்பவும் முன்னோர்கள் சாபம் பலமடங்கு சக்தி வாய்ந்ததா இருக்கும். அந்தச் சாபம் தான் இந்தக் குடும்பத்தோட ஆணிவேருக்கு பெரும் ஆபத்தைக் கொண்டு வந்திருக்கு. எண்ணி பதினோரு நாளுல இருந்து இவருக்கான கெட்ட காலம் பொறக்கப் போகுது” என்ற இடியை பார்வதி தலையில் அவசரமில்லாமல் அமானுஷ்ய குரலில் இறக்கினார்.
லிங்கமும் பணிக்கரின் வார்த்தைகளில் ஆடித்தான் போனார். அதை மறுப்பதற்கில்லை. அதிலும் அவருக்கு இது போன்ற விஷயங்களில் அதீத நம்பிக்கை. அந்த நம்பிக்கையைப் பயன்படுத்திதான் இத்தனை காலமாய்ப் பாரிஜாதம் அந்த வீட்டில் இருப்பது.
பார்வதி செய்யும் சிறு சிறு வேலைகளையும் ஏதாவது இடையூறுகளைச் செய்து, லிங்கம் புறப்படும் தருவாயில் அபசகுனம் ஏற்படுத்தி அந்தப் பழியை அழகாகப் பார்வதி மீது போட்டுவிடுவதில் பாரிஜாதம் மிகவும் கை தேர்ந்தவர்.
ஒரு நாள் பூஜையறையில் பார்வதி விளக்கேற்ற, ஜன்னலை திறந்து அந்த விளக்கை அனையவைத்து, அன்று லிங்கம் போன காரியத்தை மச்சக்காளையின் ஆட்கள் தடை செய்ய, பழி என்னவோ பார்வதி மீதே. இதே போலச் சின்னச் சிறு விஷயங்களை வைத்து பெரிய பெரிய காரியங்களைச் சாதித்த பாரிஜாதம் இறுதியாகப் பார்வதிக்கு புதியதொரு பேரையும் சூட்டி அழகு பார்த்தார். அந்தப் பெயர், “ராசி இல்லாதவ”.
லிங்கமும் அதன் பிறகு முக்கியமான வேலையாக வெளியே கிளம்பப் பாரிஜாதத்தை முன்னிலை படுத்த மெல்ல மெல்ல பார்வதி பிறந்து வளர்ந்த வீட்டில் பாரிஜாதத்தின் கை ஓங்க தொடங்கியிருந்தது.
இங்கே ஏமாற்றுபவர்களை நாம் குறை கூறுவதைவிட, ஏமாறுபவர்களையும் தன்னுடைய உரிமைக்காகப் போராடாதவர்களையுமே குறை சொல்ல வேண்டும். அந்த வகையில் லிங்கமும் பார்வதியுமே இதில் குற்றம் செய்தவர்கள்.
“என்ன சாமி? இப்படிக் குண்ட தூக்கி போடுறீரு ? எங்க அண்ணேதே என்னோட உசுரே. இதுல இருந்து தப்புரதுக்கு ஏதாவது வழி இருக்கானு கொஞ்ச பார்த்துச் சொல்லுங்களே ?” என முதலை கண்ணீரோடு பாரிஜாதம் கேட்க, அவரோ வீட்டிலிருக்கும் அனைவரின் ஜாதகத்தையும் தரும்படியாகக் கேட்டார்.
அனைத்தையும் பாரிஜாதம் வந்து கொடுக்க, ஒரு மணி நேர அலசலுக்குப் பிறகு அந்தப் பரிகாரத்தைக் கூற தொடங்கினார்.
“இதோ பாருங்க! நான் சொல்லுற பரிகாரத்தை எண்ணி ஏழு நாளுல எந்தவொரு தங்கு தடையும் இல்லாம நிறைவேத்திட்டா இந்தக் குடுப்பதோட தலைவி தாலிக்கு எந்தப் பங்கமும் உறுதியா வராது. ஒருவேளை நான் சொல்லுற விஷயங்களைக் குறிப்பிட்ட நேரத்துல முடிக்காம போனா, நடக்க போற விபரீதங்கள் ஏராளம்.
இந்த வீட்டோட அஸ்திவார ஆட்டம் காண போறத யாராலயும் தடுக்க முடியாது” எனப் பரிகாரத்தோடு பயத்தையும் அவர்களுக்குக் குறைவின்றிக் கொண்டு சேர்க்க முயன்றார்.
“சொல்லுங்க என்ன சொன்னாலும் தப்பாம பண்ணுறோம்” எனப் பார்வதி பயபக்தியுடன் கேட்டார். பாரிஜாதமும் மச்சக்காளையும் ஒருவரை ஒருவர் பிறர் அறியாமல் பார்த்து புன்னகை செய்துக்கொண்டனர்.
எதிர்காலத்தைக் கணிக்கும், ஜோசியம் ஜாதகம், கட்டங்கள், கிரகப் பலன்கள் இவை யாவும் ஓர் அற்புதமான விஷயங்கள்.  அதை மறுப்பதற்கில்லை. அஃது ஓர் உன்னதக் கலை மட்டுமல்லாமல் ஒரு தெய்வீக கலையும் கூட. அதைப் பூஜித்து மனதார செய்பவர்கள் ஏராளம் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் ஒரு சில பொய் வேடதாரிகளும் இருப்பதை மறுப்பதற்கு வழியில்லை. மக்கள் அவர்களை நம்புகின்றனர். அந்த நம்பிக்கையைப் பெருபாலானோர் காப்பாற்றும் உன்னத வழியைப் பின்பற்றினாலும் ஒரு சிலர் தங்களின் வியாபாரத்திற்கு ஏற்ப, இப்படிப் பொய்யும் மெய்யும் கலந்து கூறுவதும் உண்டு.
லிங்கம் இதில் கொண்ட அதீத நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாக்கி கொண்ட பாரிஜாதம் பொய்யான பணிக்கரை வைத்து காய் நகர்த்த தொடங்கியிருந்தார். ஆனால் ஆண்டவன் உருவாக்கிய கட்டங்கள் இவைக்கெல்லாம் கட்டுப்படுமா என்ன ?
உலக மேடையில் எத்தனை மக்கள் எத்தனை விதமாக வேடம் கட்டினாலும், இறுதியில் வெல்வது இறைவனின் முடிவே ஆகும். அதற்காக இறைவன் விட்ட வழி என்று நாம் வெறுமனே இருப்பதை அந்தக் கடவுள் கூட மன்னிக்கமாட்டார். எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று, எதிர் நோக்கி வரும் ஆபத்திலிருந்தும், பின்னப்படும் சதி வலையிலிருந்தும் தப்பிக்கும் அனுகூலத்தைச் சிந்தித்துச் செயல்படவே அறிவு என்ற ஒன்றை ஆணடவன் அளித்துள்ளான். அதைப் பெருபாலான சமயங்களில் சிலர் உபயோகிக்கத் தவறி, காண்பதையும் கேட்பதையும் மெய்யென்று நம்பி தங்கள் வாழ்வை மட்டும் இல்லாது மற்றவர்களின் வாழ்க்கையையும் நரகமாக்கிவிடுகின்றனர்.
ஒரு சிலரின் பேராசைக்கு மற்றவர்களின் அன்பும் காதலும் நம்பிக்கையும் பலியாவதை தடுக்க முடியாமல் போகின்றது. அப்படிப்பட்ட சூழலை தான் சாமர்த்தியமாக மச்சக்காளையும் பாரிஜாதமும் மெல்ல மெல்ல உருவாக்கி கொண்டிருந்தனர்.
இந்தப் பொய் நாடகத்தை லிங்கமும் பார்வதியும் அறிந்துகொள்வாரா ? இல்லை லிங்கம் தங்கை மீது கொண்ட நம்பிக்கையாலும், பார்வதி லிங்கத்தின் மீது கொண்ட அன்பாலும், பாரிஜாதத்தின் பேராசைக்கு, சாந்தினி, கனல் விழி, மாறன் காதலை பலியாக்குவார்களா ? என்பதை விதியோ மதியோ எது இந்தச் சதியை முறியடிக்கும் என்பதைக் காலத்தின் கைகளில் தான் விடவேண்டும்.
“இந்தச் சாபம் நீங்கணும்னா, இந்த வீட்டோட மூத்த வாரிசுக்கு அஃதாவது இப்போ இங்க இல்லாம வெளில வாசம் பண்ணுற உயிருக்குத் திருமணம் நடக்கணும். அது மட்டுமில்லாம திருமணத்துக்குப் பிறகு, அந்த உசுரு இங்கேயே வந்து வசிக்கணும்.
இந்தத் திருமணம் எண்ணி ஏழுநாள்ல முடியனும். வீட்ல இருக்குற ஜாதகத்தை அலசி ஆராய்ஞ்சதுல ஒரு விஷயம் தெளிவா தெருஞ்சுது. இந்தச் சாந்தினிங்கிற பொண்ணு யாரு ? அந்தப் பொண்ணு ஜாதகப்படி இந்தக் குடும்பத் தலைவருக்கு ஏற்றம்தான். மேற்கொண்டு அந்தப் பொண்ணு இவருக்கு யாருனு விவரம் சொன்னீங்கன்னா, மேற்கொண்டு நான் சொல்ல ஏதுவா இருக்கும்” என நிறுத்த மச்சக்காளை, “அவள் என்னோட ஒரே மகள். எம்மகளுக்கு இவரு தாய் மாமன் உறவு” என விளக்கம் கூற, பணிக்கரோ முகத்தில் சிறு நிம்மதியை காட்டி, “கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்துருக்குனு தான் சொல்லணும். விஷயம் என்னனா ? இந்தப் பொண்ணோட ஜாதகம் அதிர்ஷ்டமான ஜாதகம். இந்தப் பொண்ணோட கட்டங்கள் படி , இவளுக்கு வரபோற மாமனாருக்கு ஆயிஷு கெட்டி.
ஒரே வீட்லயே பொன்னும் பையனும் இருக்காங்க. ஏழு நாளுல திருமணம் ரொம்பச் சிரமமான விஷயம்தான். அதுலயும் இந்தப் பொண்ணோட ஜாதகம் இந்த வீட்ல இருக்கிற எல்லாருக்குமே நல்ல அனுகூலத்தையே தர கூடியது.
கதிரவன் சாந்தினி ஜாதகத்திற்குப் பத்து பொருத்தங்களும் இருக்கு. இந்தத் திருமணம் நடந்தால் இதுக்கப்புறம் ராஜ வாழ்க்கைனு சொல்லுவாங்களே, அத கண்ணார இந்தக் குடுப்பதோட தலைவன் காணலாம். அனுபவிக்கலாம்.
இன்னையிலிருந்து மூணாவது நாள் ரொம்பச் சிறப்பான நாள். அன்னைக்குச் சுப முகூர்த்தத்துல இந்தத் திருமணம் நடந்தால் இனி ஏற்றம் மட்டும்தான். நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனி ஆகவேண்டியத நீங்க தான் பார்க்கணும்” எனக் கூறி முடிக்க, லிங்கத்தின் முகம் தீவிர யோசனைக்கு மாறியது.
பார்வதியோ பரிதவித்துக்கொண்டிருந்தார். ஒரு புறம் தன் கணவனின் நலன், மறுபுறம் தன் மகனின் விருப்பம்.
“கதிரவனுக்கு இந்தப் பாரிஜாதத்தைச் சின்ன வயசுல இருந்தே பிடிக்காது. பெத்த அம்மா கூடவே இருக்கவிடாம பிரிச்சவங்க. இவுங்க பொண்ணு ரொம்பத் தங்கமான பொண்ணுதான். ஆனா இந்தக் குடும்பத்துல பொண்ணு எடுக்க, கதிரவன் சம்மதிப்பானா? முதல்ல, கல்யாணத்துக்கே சம்மதம் சொல்லுவானானு தெரியலையே?
அந்தப் பொண்ணுக்கும் இந்தக் கல்யாணம் பிடிக்குமா பிடிக்காதான்னு தெரியல. எனக்குத் தெருஞ்சு சாந்தினி கதிரவன்கிட்ட பேசுனதே ரொம்ப ரொம்பக் கம்மி. அப்படியிருக்க அந்தப் பொண்ணு மனசுலயும் கதிரவன் போலவே பிடிப்பு இல்லாம இருந்தால், நான் ரெண்டு பேரோட வாழ்க்கையை வீணாக்கிடுவேனே. அதுக்குமேல இந்தப் பாரிஜாதமும் மச்சக்காளையும் தம் பொண்ண அவனுக்குக் கட்டிக்கொடுக்கத் தல கீழா நின்னாலும் ஒத்துக்க மாட்டாங்க. இப்பதான் ஏதோ கொஞ்சம் நஞ்சம் பேசுறாங்க. அவுங்க சரினு சொன்னாலும் கதிரவன் ? அவனை எப்படிச் சமாளிப்பேன் ? இத்தனை சிக்கலான விஷயங்களோட இவரோட உசுரு சம்மந்தப்பட்டிருக்கே. இதுக்கு வேற ஏதாவது வழி இருக்கா ?” எனத் தனக்குள் கேட்டுக்கொண்டனர், அதையே பணிக்கரிடமும் கேட்க, அவரோ பார்வதியை விசித்திரமாகப் பார்த்து, “ஏங்கமா? உங்க தாலிக்கு ஆபத்துனு ஒரு பரிகாரம் சொல்லியிருக்கே. நீங்க என்னடானா வேற எதாவது பண்ணலாம்ணு கேக்குறீங்க?” எனக் கேட்டுவைத்து கைதேர்ந்த நடிகராகத் தன்னைப் பாரிஜாதத்தின் முன்பாகக் காட்ட முனைந்தார்.
“இல்ல சாமி! நீங்க சொல்லிடீங்க. ஆனா இத செயல் படுத்த முடியாது. என்னோட நாத்துனருக்கும் அவரோட வீட்டுகாருக்கும் தன்னோட பொண்ண கட்டி கொடுக்க விருப்பம் இருக்காது. அதான்…. ” என முதல் காரணமாக அவர்களை இழுக்க, பணிக்கரோ, “என்ன அண்ணனுக்காகத் தங்கச்சி இத கூடச் செய்யமாட்டாங்களா ? சரி அஃது உங்க குடும்ப விஷயம். எனக்குத் தெருஞ்சு வேற மாற்றுப் பரிகாரம் கிடையவே கிடையாது. மீறி வேற யார்கிட்டையாவது வற்புறுத்தி கேட்டு பண்ணினாலும், அவுங்க வேறு பரிகாரம் சொன்னாலும் நிச்சயமா அது பலன் அளிக்காது. நான் சொல்லாததுக்குக் காரணம், வீணான பொய் நம்பிக்கையை நான் கொடுக்கிறது இல்ல. அப்போ நான் புறப்படுறேன்” என விருட்டென்று எழுந்திருக்க, வேகமாக மச்சக்காளை தட்சணையைக் கொடுத்து வாசல்வரை சென்று வழி அனுப்பிவைத்தார்.
யோசனை படிந்த முகத்துடன் மச்சக்காளை வர, லிங்கத்தை வைத்துக்கொண்டே தன் கணவனிடம் நாடகத்தை அரங்கேற்ற தொடங்கினார்.
“இத பாருங்க, எனக்குப் புருஷன் பொண்ணு எல்லாரும் முக்கியம்தான். எல்லாருமேலயும் நான் பாச வச்சுருக்கேதான். ஆனா எல்லாத்தைவிடவும், எங்க அண்ணே மேல ஒரு படி மேல பாசத்தை வச்சுருக்கே. அதுக்கு ஒரு சங்கடம்னா அஃது எனக்கும் தான். என்னால அதுல இருந்து எங்க அண்ணே வெளிலவர உதவ முடியிறப்ப, நான் பாட்டுக்க, எனக்கென்னனு போக முடியாது.
நீங்க பணிக்கர் சொன்னதைக் கேட்டீங்கதானே? இதுல உங்க முடிவு எதுனாலும் சரி, ஆனா என்னோட முடிவு சாந்தினியை கதிரவனுக்குக் கட்டிவைக்கிறது தான். எனக்குக் கதிரவனைப் பிடிக்கிது பிடிக்காம போகுது. அதெல்லாம் இப்ப முக்கியமில்லை. எத தின்னா பித்த தெளியும்னு நான் இருக்கே.
இதுவரைக்கும் எங்க அண்ணனை சிங்கம் மாதிரி தான் பாத்துருக்கே. ஆனா இப்போ இவரு சொன்னதெல்லாம் கேட்டா என்னோட ஈரகொலையே நடுங்குது.
என்னோட முடிவை சொல்லிட்டேன். அண்ணி நீங்க ஒன்னு வருத்தப்படாதீங்க. இந்த விஷயத்துல- நான் பொண்ணு தர வேணாம்னு சொல்லிடுவேனோனு நீங்க கலக்கமாகாதீங்க, இது நடக்கணும். கட்டாயம் நடந்தே ஆகணும்” எனப் பலவாறு நடித்து மச்சக்காளையவே அசரவைத்துக்கொண்டிருந்தார்.
பார்வதியோ, “நிசந்தானா? பாரிஜாதம் தன்னோட அண்ணனுக்காகக் கதிரவனுக்குச் சாந்தினியை கட்டி வைக்க ஒத்துக்கிட்டாங்களா ? ஆமா இருக்கும். அவுங்களுக்கு என்னைத் தானே பிடிக்காது. அவுங்க அண்ணனா பாசமாதானே இருக்கும்.
ஆனா கதிரவன் ? அவனை எப்படிச் சமாளிப்பேன். அப்புறம் அந்தப் பொண்ணு சாந்தினி ? அவளோட மனசுல என்னை இருக்குதோ ?” எனப் பலவாறு சிந்தனையை ஓடவிட்டார்.
மறுபுறமோ லிங்கம் திருமணம் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால் அதே சமயம் அதை எண்ணாமல் இருக்கவில்லை. அவருடைய மனது கலங்கி இருந்தது. அதை மேலும் குழப்பிக் குட்டையில் மீன் பிடிக்கப் பாரிஜாதமும் மச்சக்காளையும் திட்டம் தீட்டி நடித்துக்கொண்டிருந்தனர். லிங்கத்திற்கோ தன்னுடைய தங்கையை நினைத்து மனதில் சொல்லமுடியாத பூரிப்பு. எவனைக் கண்டாலே ஆகாதோ, எவனை அடியோடு வெறுப்பாளோ, அவனையே தனக்காகத் தன் தங்கை மருமகனாக்கி கொள்வேன் என்று கூறுகிறாள் ? தன் மீது இத்தனை அன்பா ? என எண்ணி எண்ணி பூரித்துக்கொண்டார்.
“நீங்க சொல்றத கேட்க எனக்குச் சந்தோசமா இருக்கு அண்ணி” எனப் பாரிஜாதத்திடம் மெல்ல கூறியவர், சிறு தடுமாற்றத்துடன், “பணிக்கர்கிட்ட அப்படிக் கேட்டுட்டேன்னு தப்பா நினைக்காதீங்க. அவரு என்ன பரிகாரம் சொல்லிருந்தாலும் நான் யோசிக்காம செஞ்சிருப்பே. என்னோட உசுர கொடுத்தா தான் ஆகும்னா அதையும் செஞ்சிருப்பே. ஏனா என்ன விட எனக்கு அவருதான் முக்கியம். ஆனா அவரு சொன்னது கல்யாணம். நாம இவரு மேல உள்ள பாசத்துல எதுவேணுனாலும் பண்ணலாம். ஆனா சாந்தினியும் கதிரவனும் சம்மதிப்பாங்களா ? சம்மதிச்சாலும் கல்யாணத்துக்கு அப்புற சந்தோசமா சேர்ந்து வாழுவங்களா ? இதெல்லாமே யோசனையா இருக்கு.
அந்தச் சின்னச் சிறுசுங்கள கஷ்டப்படுத்தாம, என்னோட தாலிக்குப் பங்கம் வராம ஏதாவது அதிசயத்தை நான் தினமும் கும்புடற அந்த ஈசன் தான் பண்ணி தரணும்” எனப் பயந்து பயந்து அதே சமயம் உண்மையான அக்கறையோடும் பரிதவிப்போடும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, பண்ணையில் பால் பீச்சும் சின்னதாய் தயங்கி தயங்கி உள்ளே வந்தாள்.
வந்தவள் சட்டென்று பின்வாங்க, அவளைப் பார்த்துவிட்ட பார்வதி, “என்ன சின்னத்தாயி? எதுவும் வேணுமா ? மாடு கண்ணுக்கு ஒண்ணுமில்லையே ?” எனக் கேட்க, அவள் பயந்த முகத்துடன், “அது…அது வந்து, ஒன்னு சொல்ல வந்தே. ஆனா…அது இப்ப வேணாம்” என இழுக்க,
“என்னனு சொல்லு?” எனப் பாரிஜாதம் அதட்ட,
“இல்ல இல்ல நான் சொல்லல. நான் எதுவும் சொல்லவும் வரல” என உளறியபடி வெளியேற போக, சட்டென்று லிங்கம் ஓர் அதட்டல் போட்டார்.
“என்னனு கேக்குறீங்களா? சொல்ல வந்தத சொல்லிட்டு போய் சோலிய பாரு” என அவருடைய கர்ஜனை குரலில் கூற,
சிறு நடுக்கத்துடன் மற்ற மூவரையும் பார்க்க துணிவில்லாமல் பார்வதியை அண்டிக்கொண்டு, “அஃது…..அதுவந்து பார்வதி அம்மா நம்ம தம்பிய, அதான் உங்க மகன சாந்தினி பொண்ணு விரும்புது போல. அன்னைக்குத் தனியா நின்னு அதுவா பேசுச்சு, சிருச்சு அப்புறம் இன்னு ஒரு சில நாளும் இப்படி நடந்துச்சு. அன்னைக்குக் கூடக் கதிரவன் தம்பி வீட்டுக்கு வந்துருந்துச்சே. அப்ப கூட நான் பார்த்தேன் தனியா பேசிக்கிட்டாங்க” எனக் கூறிவிட்டு வேக வேகமாகச் சின்னதாய் ஓடிவிட, மச்சக்காளையும் பாரிஜாதமும் சட்டென்று பதற்றம் ஆனார்கள்.
“என்னங்க இஃது? புதுத் திருப்பமா இருக்குது ? மாறனும் சாந்தினியும் காதலிக்கிறது யாருக்கும் தெரியாது, தெரியாமலே இந்தச் சங்கதியை முடிச்சிடலாம்னு பார்த்தா இந்தச் சின்னத்தாயி வேற வந்து புதுசா குட்டையா குழப்பிட்டு போறா?
இப்ப என்னங்க பண்றது ?” எனப் பாரிஜாதம் மச்சக்காளையின் காதை கடிக்க, மச்சக்காளையும் இதை எதிர்பார்க்காததால் சில நிமிடங்கள் ஒன்றும் தோன்றாதவராய் நின்றுவிட்டிருந்தார்.
லிங்கமோ பார்வதியை என்ன இதெல்லாம் ? என்பதாய் பார்க்க, பார்வதியோ வேறு சிந்தனையில் இலயித்திருந்தார்.
சின்னதாய் நடுக்கத்துடன் மாறன் சாந்தினி காதலிக்கிறார்கள் என்றும், கதிரவன் வந்து சென்ற அன்றுகூட இவர்கள் இருவரும் பேசிக்கொண்டார்கள் என்றும், தான் பார்த்ததைக் கூற, அதை வேறு கோணத்தில் பார்வதி புரிந்துகொண்டார்.
“ஓ அப்ப பண்ணை திறப்புக்குச் சாந்தினிதான் அவனுக்குச் சட்ட எடுத்து கொடுத்துச்சு போல. சக்கரக் கூட ஏதோ சொல்ல வந்தானே. அப்போ சாந்தினிதான் சொல்ல வந்தான் போல. ஆனா கதிரவனுக்குத் தெரியாம இல்ல சொல்ல வந்தான் ? அப்போ சாந்தினி விஷய கதிரவனுக்குத் தெரியாதா ? கண்டிப்பா சாந்தினிதான் எடுத்துக் கொடுத்திருக்கும். அன்னைக்கு அந்தச் சட்டையைப் போலத்தானே விளம்பரத்துல காட்டுச்சு.
இல்ல கதிரவனுக்குச் சாந்தினி மேல பிடிப்பு இருக்கா? ஆனா சாந்தினிக்குப் பிடிச்சிருக்கு. எவ்ளோ அன்பு வச்சிருந்தா சட்ட வாங்கிக் கொடுத்துருப்பா. என்னாலதான் என்னோட மகன் கூடவே இருந்து அன்பு காட்ட முடியல. ஏதோ விருந்தாளி போல அப்ப அப்ப பார்த்துட்டுப் போறான்.
அவனை இந்த அளவு நேசிக்கிற பொண்ணு இருக்கறப்ப, அது யாரோட மகளா இருந்தா என்ன ? கதிரவனை நேசிக்கிற ஒருத்தினாலதான் அவனுக்குச் சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும். எதுக்கும் முடிவு பண்ணுறதுக்கு முன்னாடி சாந்தினிகிட்ட உறுதி பண்ணிப்போம்.
சின்னதாய் சொல்றத வச்சு முடிவெடுக்க வேணாம்” என மத்திற்குள் நினைத்தவர்,
அனைவரிடமும் அதையே கூற, மச்சக்காளையும் பாரிஜாதமும் பதட்டமானார்கள். அவர்கள் இருவரும் மழுப்பலாகத் தொடர்பு கொள்ளவிடாமல் தடுக்கப் பார்க்க, லிங்கத்திற்கோ, “இந்தப் பையன் என்னோட தங்கச்சி பொண்ணு மனசையே கலைச்சிருக்கானா ?” என்பதாகத்தான் அப்போதும் கோவம் வந்தது கதிரவன் மீது.
ஓர் அளவுக்கு மேல் மறுக்கப் பாரிஜாதத்திடம் சரியான காரணம் இல்லாததால், அதுவும் பிடிவாதம் என்றால் என்னவென்றே அறியாத பார்வதி அத்தனை உறுதியாக இருக்க, பாரிஜாததால் அதைத் தடுக்க முடியாமல் போனது.
கல்லூரி விடுதிக்கு அழைத்து, விடுதி காவலரை அழைத்து, சாந்தினியை அழைத்துவருமாறு மச்சக்காளையே கூறவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.
காரணம், லிங்கம் தான் அழைக்கச் சொன்னதே. அவருக்கு உண்மை தெரிந்தாக வேண்டி இருந்தது.
மச்சக்காளை அழைக்கும் போதே இடை புகுத்த பார்வதி, “அண்ணே என்ட கொடுங்க. நான் பேசுறேன், அப்படியே கொஞ்சம் பெருசா சத்தம் வச்சு கொடுங்க” எனத் துணிச்சலாக மச்சக்காளையிடம் வந்து தானாகவே ஒரு விஷயத்தைக் கூற, இப்போது லிங்கம் கூடப் பார்வதியின் இந்த வித்தியாசமான செய்யலை கவனிக்கவே செய்தார்.
தன்னைச் சுற்றி நிற்கும் மூவரும் தன் மீது வித்தியாசமான பார்வையை வைப்பதை உணர்ந்தாலும், அதைப் பற்றியெல்லாம் பார்வதி கொஞ்சமும் கவலையோ கருத்தோ கொள்ளவில்லை. பார்வதி அறிவார், இது தன்னுடைய சுபாவம் இல்லையென்று. அவர் அறிவார் இரெண்டு ஆண்கள் முன்னிலையில் தன்னால் இப்படி வந்து பேசமுடியாது என்று. பாரிஜாதம் எப்போதும் அப்படிதான் என்றாலும், பார்வதி எப்போதுமே அப்படி இல்லையென்றாலும் இன்று அவர் இதில் பேசவேண்டியதும் தெரிந்துகொள்ளவேண்டியதும் அவசியம்.
அதனால்தான் முன்னெப்போதும் இல்லாததைப் போல இப்போது நடந்துகொண்டிருந்தார்.
தன் கணவனின் உயிரும் முக்கியம் தன் மகனின் திருமணப் பந்தமும் முக்கியம்….. ஒரு சில நிமிடங்கள் முன்னால் வரையிலும் கூட, மகனின் நலனை முன்னிட்டு வேறு பரிகாரத்தைத் தேட முயன்றவர், இப்போது சாந்தினிக்கு கதிரவன் மீது நேசம் இருக்குறெந்தென்றால் நிச்சயம் கதிரவனின் வாழ்வு நலமாகவே இருக்குமென்று தோன்றவே, அதைச் சரியாக அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முயற்சி எடுத்தார்.
“ஹெலோ அப்பா…” எனச் சாந்தினியின் குரல் கேட்க,
வேகமாக முந்திக்கொண்டு பாரிஜாதம், “சாந்தினி, நீ அண்ணியோட மகனை காதலிக்கிறியா ?” என அதட்டல் போல முந்திக்கொண்டு எடுத்தயெடுப்பிளையே கேட்க, சாந்தினி சட்டென்று மௌனம் ஆனாள். ஆனால் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் பாரிஜாதம் அதட்டல் எல்லாம் போடவில்லை. மாறன் கதிரவன் என்ற பெயரை கவனமாகத் தவிர்க்கவே அண்ணியின் மகனை என்று பொதுப்படையாக இழுத்து ஆரம்பித்திருந்தார்.
“ஐயோ அண்ணி நீங்க என்ன பண்றீங்க? பச்சை புள்ளைய ஏன் மிரட்டுறீங்க. நான் இதுக்குதான் எல்லாருக்குக் கேக்குறது போலச் சத்தம் வைக்கச் சொன்னேன். நான் பேசுறேன். வேற யாரும் பேசவேணாம்” எனக் கூறியவர், மச்சக்காளையின் கைகளிலிருந்து கைபேசியை வாங்கி,
“இதோ பாருமா சாந்தினி. நீ பயப்படாத. உன்ன வையிரதுக்காகக் கேட்கல. உன்னோட மனசுல ஆசை இருந்துச்சுன்னா மேற்கொண்டு உங்க கல்யாணத்த பேசலாம்னுதான்.
நீ என்னோட மகன்…” எனப் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கதிரவனின் பெயரை பார்வதி சொல்வதற்கு முன்னதாக, பதற்றமான பாரிஜாதம் மீண்டும் இடை புகுந்து, “சரி அண்ணி, நான் கோபப்படல. பொறுமையாவே கேட்குறே. அடியே சாந்தினி, நீ அண்ணியோட மகனை கட்டிக்க ஆசைப்படறன்னு கேள்விப்பட்டோம்.
அதோட எங்க அண்ணனே கட்டிவைக்கச் சம்மதம் சொல்லிட்டாரு. இருந்தாலும் உங்க அத்த மட்டும் உனக்குப் பிடிச்சிருக்குனு சொன்னாதான் கல்யாணம்னு சொல்லிட்டாங்க. உன்ன திட்டவோ அடிக்கவோ கேட்கல. அதுனால மறைக்காம உண்மைய சொல்லு. பயப்படாதா டி ” எனக் கதிரவன் தான் மாப்பிள்ளை என்பதை மறைத்து, அதே நேரம் லிங்கத்தின் பெயரையும் இந்தப் பேச்சில் உள்ளிலித்து, சாந்தினியின் பார்வைக்கு லிங்கம் பாசம் வைத்திருக்கும் மாறனின் சிந்தனை வரும்படியாகப் பேசினார்.
ஆனாலும் அவருக்கும் மனதில் உச்சகட்ட பதற்றமே. எங்கேயேனும் கதிரவனின் பெயரோ மாறனின் பெயரோ அடிப்பட்டிடுமோ என மனதில் நெருடலோடே இலாவகமாகப் பேசிக்கொண்டிருக்க, அந்தச் சமயம் அவருக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.
மச்சக்காளை பாரிஜாதத்தின் திட்டத்திற்கு விதியும் சாதகமாய்ச் சாந்தினியின் வார்த்தைகளில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியது. சாந்தினி மனம் முழுக்க மாறனை நினைத்தபடி சிறு தடுமாற்றத்துடன், “ஆமா அத்த. எனக்கு மாமாவ பிடிச்சிருக்கு” எனக் கூற, மச்சக்காளையும் பாரிஜாதமும் இழுத்து வைத்திருந்த மூச்சை இலேசாக வெளியிட்டனர்.
“அப்போ கல்யாணம் பேசிடலாம்ல மா?” எனப் பார்வதி கேட்க,
“ஹ்ம்ம் அத்த” என்ற மெல்லிய சப்த்தம் மட்டும்.
“ஏமா எம்மகனும் உன்ன விரும்புறானா?” எனப் பார்வதி ஊர்ஜித படுத்தும் விதமாகக் கேட்க,
சாந்தினியோ லிங்கமும் அருகில் இருக்கிறார் என்பதை அறிந்து, மாறனை காப்பாற்றுவதற்கு நினைத்து தங்களின் காதலுக்குத் தானே முடிவுக்கட்டும் வார்த்தையைக் கூறினாள்.
“இல்ல இல்ல, மாமாக்குத் தெரியாது. நான் சொல்லல. எனக்குப் பிடிக்கும், வரப்ப எல்லாம் பேசிட்டு இருப்பேன். ஆனா இதுவரைக்கும் சொன்னது இல்ல. லிங்கம் மாமாக்கு இதெல்லாம் பிடிக்காதுல. அதுனால நான் இப்படிப் பேச்சு எடுத்தாக்கூடப் பேசாம போய்டுவாரோன்னு நான் என்னோட மனசுல இருக்குறத சொல்லவே இல்ல” என மாறனை காப்பாற்றுவதாய் நினைத்துக்கொண்டு கூறினாள்.
லிங்கத்திற்குச் செல்ல மகன் மாறன்தான் என்றாலும் லிங்கத்திடம் கண்டிப்பு அதிகம். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது லிங்கத்தின் குரல் கேட்டாலே தலை தெறிக்க ஓடி ஒளிவதை பார்த்திருந்தவள் அவனைக் காப்பாற்ற இப்படிக் கூற, லிங்கமோ, “இந்தக் கதிரவனுக்குப் பயம் இருக்கணும். என்னோட தங்கச்சி மகளை அவன் காதலிச்சானு தெரிஞ்சிருந்தது ஜோசியமாவது மண்ணாவது அவனை ஒரு கை பாத்துருப்பே” என மனதில் நினைக்க, பார்வதியோ, “அதானே பார்த்தே. இவனாச்சும் காதலிக்கிறதாச்சும்… இப்ப கூடப் பாரிஜாதத்தோட பொண்ணுன்னு சொன்ன கட்டமாட்டான். ஆனா இவன காதலிக்கிற பொண்ண கட்டிவச்சா நிச்சயம் இவன நல்லா பார்த்துப்பா.
தாரமாவும் தாயாவும்.
அதோட பாரிஜாதமும் தன்னோட மாப்பிளைனு ஆனதுக்கப்பறம் இவன என்கிட்ட இருந்தோ இந்த வீட்ல இருந்தோ பிறக்கமாட்டா. இவருக்கும் எந்தப் பிரச்சனையும் வராது. எல்லாத்துக்கும் ஒரே தீர்வு இது தான்.
இப்ப சாந்தினி எல்லாத்தையும் சொல்லிட்டா…கதிரவன்கிட்ட பொண்ணு இது தாணு சொல்லாம கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்கணும்” என மனதில் நினைத்துக்கொண்டார்.
சாந்தினி கூறிய பதிலில் அனைவர்க்கும் நிம்மதி. பாரிஜாதமும் மச்சக்காளையும் ஒருசேர வன்மம் கலந்த வெற்றி புன்னகையைப் பூத்துக்கொண்டனர். லிங்கம் ஏதோ செய்யுங்கள் என்பதாய்க் கிளம்பிவிட்டார். பார்வதிக்கு நிம்மதியும் யோசனையும்.
“கதிரவனை சம்மதிக்க வைக்க, நாம சக்கரையைக் கூப்ட்டுக்குவோம். மொதல்ல அவனைப் பார்த்து பேசுவோம்” என நினைத்துக்கொண்டு தோப்புவீட்டிற்குப் புறப்பட்டார்.