அடுத்தடுத்து வந்த நாட்கள் அதன் போக்கில் சென்றுகொண்டிருந்தது. விழி விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்கு சென்றிருந்தாள். தேவியின் உடல் நலமும் தேறியிருந்தது. கதிரவனின் இறால் பண்ணை வேலை ஐம்பது சதவீத நிறைவு பெற்றிருந்தது.
இப்படியே நாட்கள் தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்க, கனல் விழியன் நெஞ்சில் கதிரவனின் மீதான காதல் பிறந்து தவழ்ந்து அசைக்க முடியாத ராஜ்ஜியம் போல அவளின் மனதில் வாழ்ந்துகொண்டிருந்தது.
ஆனால் இதைப் பற்றி எதுவுமே தெரியாமல், தொழிலில் மட்டுமே முழுக் கவனத்தையும் கதிரவன் வைத்திருந்தான். அந்தப் பஞ்சாயத்திற்குப் பிறகு அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது தன் வீட்டிற்குச் சென்றே பார்வதியை பார்த்து வர தொடங்கியிருந்தான்.
கூட்டத்தில் அவன் மறைமுகமாகத் தாக்கியத்திலிருந்து சற்றே மச்சக்காளை அடக்கி வாசிக்க, பாரிஜாதத்திடமும், “பாரிஜாத, அவசரப்படவேனா. கொஞ்சம் பார்த்துச் சூதானமா பண்ணனும். இல்லனா இலவ காத்த கிளியாகிடுவோ. அவசரப்பட்டு அவன்ட வாயக் கொடுத்து வாங்கிக் கட்டிடாத” எனக் கூறி வைத்திருக்க, கண்டு காணாமல் பாரிஜாதம் போக முயன்றாலும் அவர் வாய் சும்மா இருப்பதில்லை.
கதிரவனிடம் அவரின் வேலையைக் காட்டத்தான் சற்றே தயக்கம். ஆனால் அவன் சென்ற பிறகு தன்னுடைய வேலையைத் தங்கு தடை இல்லாமல் லிங்கத்திடமும் பார்வதியிடமும் செய்திடுவார்.
மாறன் இப்பொழுது கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தான். கதிரவனோடு அவ்வளவாக ஒட்டி பழகியிராதவன். இப்போது வீட்டிற்கு வருகின்ற சிறிது நாட்களாகவே கதிரவன் பேசும் விதம் அவனுக்குப் பிடித்தமாகத் தொடங்கியிருந்தது.
கதிரவன் இப்படிக் கதிரவன் அப்படி, அவன் திமிர் பிடித்தவன், வீடு என்ற பாசம் இல்லாதவன், தம்பியை வெறுப்பவன், பொறுப்பற்றவன் இப்படியாகக் கதிரவனைப் பற்றிய பாரிஜாதத்தின் வார்த்தைகள் மெல்ல மெல்ல மாறன் மனதினில் மாறத் தொடங்கியிருந்தது.
ஆனாலும் மாறனால் முழுவதுமாகக் கதிரவனோடு ஒன்ற முடியாமல் போகப் பார்வதி காரணமாகி போனார். எப்போதோ ஒருமுறை வருகின்ற மகனென்று அந்த நிமிடம் கதிரவனை ஓடி ஓடி கவனிக்க, அது மாறனுக்குப் பாரிஜாதத்தின் வார்த்தைகளை உண்மை என்று சொல்லியது. பார்வதியின் உபசரிப்புக் காரணம் அதுமட்டுமல்ல. அந்த வீட்டில் தன்னைவிட்டால் தன் மூத்த மகனை வாவென்று அழைக்கக் கூட யாருமில்லா காரணத்தினாலே சற்றே சிரத்தை கொண்டு அவன் வரும் சமயங்களில் கவனித்தார். அது மாறன் நெஞ்சில் இப்படி ஓர் எண்ணத்தை விதைக்கும் என்று அறியாதவராக இருந்தார்.
“உன்னைவிட அவளுக்கு அவ மூத்த மவன் தான் எப்பவும் உசத்தி” என்று ஓயாது பாரிஜாதம் உருபோட்டிருந்த விஷயம் வீண்போகாமல் மாறன் மனதில் ஒதுக்கத்தைத் தந்தது. ஆக, நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் ஒரு குழப்பமான நிலையில் மாறனின் மனம்.
அந்த மாறனின் மனதில் இருக்கின்ற குழப்பத்தை மறக்கடிக்கும் ஒருத்தியாய் வந்து சேர்ந்தாள் சாந்தினி. மச்சக்காளை பாரிஜாதத்தின் மகள்.
மச்சக்காளையின் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கம். ஏன் லிங்கமும் கூட. லிங்கத்தைத் துடிப்பான உழைக்கும் இளஞனாகப் பார்த்த பார்வதியின் தந்தை தனக்கு ஆண் வாரிசு இல்லாத குறையைப் போக்கவென்றே தன் மகளைக் கட்டிக்கொடுத்தார். பார்வதி வந்த பிறகே அவர் மூலமாக வந்த சொத்துப் பத்துக்களே தற்சமயம் லிங்கத்திடம் பல்கி பெருகி உள்ளது.
மச்சக்காளையின் தாய் தந்தை இரண்டு கிராமங்கள் தள்ளி வசிக்கின்றனர். புதுக்கோட்டைக்கு அருகே. மருமகள் தங்கள் வீட்டோடு இல்லாமல் தொழில் என்று கூறி தன் அண்ணன் வீட்டோடு தங்களது மகனை இருத்திக்கொண்டது அவர்களுக்குப் பிடித்தமில்லை.
ஆனால் பணம் பேசும்போது பாசத்தின் குரல் கொஞ்சம் மழுங்கடிக்கப்படுவது பல இடங்களில் நடக்கத்தான் செய்கின்றது. அப்படிதான் அவர்களின் பாசம் மச்சக்காளையை இழுக்க முடியவில்லை. பரந்து பரவி கிடந்த நஞ்சையும் புஞ்சையும் அவரது மனதை இழுத்துவிட்டிருந்தது. மகனையும் மருமகளையும் அவ்வப்போது அழைத்துக்கொண்டு இருக்க, லிங்கமும் சில சமயம் அவர்களுக்கு ஆதரவாக வர, அண்ணனை பிரிந்து சென்றால் சுகபோக வாழ்வு கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்ச தொடங்கிய வேளையில் தான் சாந்தினி பள்ளி செல்ல தொடங்கியிருந்தாள்.
மகள் மீது பாசம் இருந்தாலும், அவளை அரவணைத்து சீராட்டி பாராட்டி வளர்க்க நேரமும் விருப்பமும் பாரிஜாதத்திடம் இல்லாத காரணத்தினால் தங்களைத் தொடர்ந்து அழைத்துக்கொண்டிருந்த தன் மாமியாரிடம் பேத்தியை கொடுத்து வளர்க்கும் பொறுப்பை ஒப்படைக்க அதன் பிறகு அவர்களுக்குச் சாந்தினியே உலகமாகி போனாள்.
ஐந்தாம் வகுப்புவரை மட்டும் பாட்டிவீட்டிலிருந்து சென்று வந்தவள், அதன் பிறகு விடுதி வாசத்திற்கு மாற்றப்பட்டாள். விடுமுறை நாட்களில் பெருபாலான நாட்களைப் பாட்டி வீட்டிலும் ஓரிரு நாட்களைத் தன் தாய் தந்தையுடனும் செலவிட்டாள்.
கதிரவனைச் சாந்தினி நினைவு தெரிந்து பார்த்தது இரண்டொரு முறை மட்டுமே. மாறனை விடுமுறைக்கு வரும் சமயங்களில் பார்த்திருக்கிறாள். ஆனால் எப்போதோ வருபவளிடம் சில வார்த்தைகளைச் சாதாரணமாகப் பேசி கடந்துவிடுவான். பாவாடை சட்டை எண்ணெய் வழிய வழிய ரிப்பன் வைத்து கட்டிய இரட்டை ஜடை என்று இதற்கு முன்னாள் வரை வந்து சென்றவள் உறவு பெண் என்ற ரீதியில் தான் பார்த்து வந்தான். அதுவும் அவள் கடைசியாக வந்தது பத்தாவது தேர்வு விடுமுறையில் நான்கு நாள் வந்து சென்றாள். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இன்றுதான் வருகிறாள்.
பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தைப் பதினோராம் வகுப்பு விடுமுறையில் சொல்லிக்கொடுக்க, விடுதி மாணவிகளுக்கு விடுமுறை இல்லாமல் போனது. இறுதியாக ஒரு வாரம் மட்டும் விடுமுறை அளிக்க, அதில் தாத்தா பாட்டியோடு இருந்துகொண்டாள். மச்சக்காளையும் பாரிஜாதமும் ஒரு நாள் சென்று பார்த்து விட்டு வந்தனர். ஆதலால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று தான் மாறன் அவளைச் சந்திக்கிறான்.
அதிலும் அவள் இன்று வந்திருந்த உடையோ பாவாடை தாவணி.
மடித்துக் கட்டப்பட்டிருக்கும் அவள் இரட்டை ஜடை ஒற்றைப் பின்னலுக்கு மாறியிருந்தது. பின்னலும் தளர்வாக இடப்பட்டு இடையைத் தாண்டி நீண்டிருந்தது. ஜாதி பிச்சி தோளின் இருபுறமும் சரிந்து பின்னலோடு போட்டி போட்டுக்கொண்டிருந்தது. கலையான சின்ன முகம், அதில் சிறிய வட்ட பொட்டு சாதாரண அலங்காரத்திலும் கூட அதிரூப சுந்தரியாகச் சாந்தினி தெரிந்தாள்.
“அத்தை…” என்ற அழைப்பு வந்த நொடிமுதல் அவளை ஆராயத் தொடங்கியிருந்தவன் தான் மாறன். அவள் முகத்தை விட்டு அவன் கண்களைப் பிரிக்க முடியாமல் தடுமாறினான்.
“வாமா சாந்தினி. நல்லா இருக்கியா ? எப்ப வந்த ? தனியாவா ?” எனக் கேள்விகளை அடுக்க, கதிரவனைக் கேள்வியாய் பார்த்த சாந்தினியோ, “இல்ல அத்த, அப்பா பின்னாடி வராங்க. நம்ம வாசலுக்குக் கொஞ்சமுன்னாடி யாரோ வந்து அப்பாட்ட பேசிட்டு இருக்காங்க. அத்த இது கதிர் மாமா தானே ?” எனப் பதில் கூறியபடியே கண்களை அகலவிரித்துக் கதிரவனைப் பார்த்து கேட்க, அதற்குக் கதிரவனின் குரல் வெளிவருவதற்கு முன்னால் மாறனின் குரல் வெளிவந்திருந்தது.
“அத்த… சாந்தினி வந்திருக்கா” எனப் பாரிஜாதத்திற்குக் குரல் கொடுத்தான். ஏனோ தன்னை விடுத்து அவள் கதிரவனுடன் பேசிவிடுவாளோ என்று பதட்டமாக உணர்ந்தான். ஆனால் அந்தப் பதட்டமெல்லாம் கதிரவனிடம் இல்லை.
அவன் வெகு சாதாரணமாக, “பரவ இல்லையே… உன்னோட அம்மாமாதிரி இல்லாம மனுஷ மக்கனு நின்னு பேசுற. பரிட்சையெல்லாம் எப்படிப் பண்ணி இருக்க ? பன்னிரண்டாவது தான?” எனக் கேட்க, “ஆமா! நல்லா பண்ணியிருக்கேன். உங்களுக்கு எப்படித் தெரியும்” எனக் கண்களை ஆச்சர்யத்தில் விரிக்க, அதோடு நில்லாமல், “நான் வந்தது கேட்கனு நினைச்சே, நீங்க இங்க வந்துருக்கீங்க ? மாமா கூடப் பேசிட்டிங்களா ?” என வெள்ளந்தியாகக் கேட்டுவிட்டு நாக்கை கடிக்க, ஹா ஹா என்று பெரிதாகச் சிரித்தவன், “உனக்கு இவ்ளோ தெரியுமா ?” என்ற கேள்வியை மட்டும் எழுப்பிவிட்டு, “அதெல்லாம் யோசிக்காதமா… அடுத்து என்ன படிக்கலாம்னு யோசி” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கதிரவனும் சாந்தினியும் பேசிக்கொண்டிருக்க, அருகே பார்வதி நின்றிருக்க, பாரிஜாதத்திற்குள் அப்படியொரு வேகம்.
“ஏய்ய்…. என்னடி கண்டவன்கிட்ட பேச்சு வேண்டிக்கிடக்கு. வீட்டுக்கு வந்தா நேரா உள்ள வர தெரியாதோ?” எனத் திட்டியபடி, கைகளைப் பிடித்து இழுத்து செல்ல போக, மாறன் இடை புகுந்தான்.
“அத்த, இப்போ எதுக்குச் சாந்தினிய வையிர? யார்கிட்ட பேசுச்சு? அவுங்களும் இவளுக்கு மாமா முறைதான ? அவளே எப்பவோ ஒருமுறை தான் வரா ? வந்ததும் வராததுமா எதுக்கு இப்படித் திட்டுற ? இது போலப் பண்ணினா நாளபின்ன அதுக்கு எப்படி இங்க வரணும்னு தோணும் ?” என அவனே பாரிஜாதத்திற்கும் குரல் கொடுத்துவிட்டு அவனே வக்காலத்தும் வாங்கினான்.
ஏனோ அவள் திட்டுவாங்குவதைப் பார்க்க அவனுக்குப் பிடிக்கவில்லை. பாரிஜாதம் கைகளைப் பிடித்துத் தர தரவென்று இழுத்து செல்வதைப் பார்த்தவன், மாறனை கடந்து செல்லும் போதும் சாந்தினி அவனை ஒருமுறை பார்த்தாளோ என அவனுக்குத் தோன்றியது. ஆனால் ஒரு வினாடி தான்… அதற்குள் பாரிஜாதம் அவளை இழுத்துச் சென்றிருக்க, மாறனுக்கு அவள் அழுததைப் பார்க்க பிடிக்கவில்லை என்பதைவிட, தன்னால்தான் அவள் அழ நேர்ந்தது என்பதே அவன் நெஞ்சை உறுத்தியது. அதனாலே பாரிஜாதத்திடம் அப்படிப் பேசினான்.
அதே சமயம் கதிரவனைக் ‘கண்டவன்’ என்று சொன்னதும் பிடிக்கவில்லை, அதோடு கதிரவனை அண்ணன் என்று கூறவும் மனமில்லை. இவையெல்லாம் விட, சாந்தினி இப்படி அனைவரின் மத்தில் அழுதது பிடிக்கவே பிடிக்கவில்லை.
பாரிஜாதத்திடம் வேறு எவரேனும் இப்படிச் செய்திருந்தால் அவளின் ஆட்டம் பேயாட்டமாக இருந்திருக்கும். ஆனால், பேசியவன் அவர் தூக்கி வளர்த்தவன் ஆகிற்றே. பாசம் என்றெல்லாம் எதுவுமில்லை. பாரிஜாதத்தின் கைகளில் இருக்கும் இரண்டு பொம்மைகளில் ஒன்று அவனாகிற்றே. அதுனால் அவனைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.
மாறனின் பேச்சை கேட்டுவிட்டு, சாந்தினியின் கைகளைவிட்ட பாரிஜாதம் மாறனை பார்த்தபடி, “எங்க இப்படி நடந்துக்கணும்னு நீயே சொல்லிக்கொடு. பெத்த பொண்ணுக்கு தெரியல அம்மாக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு. ஆனா இந்த அத்தைய பத்தி உனக்குத்தான் தெரியுமே… நீயாச்சு அவளுக்கு எடுத்து சொல்லு” என்று கூறியபடி உள்ளே செல்ல, பின்னோடு மச்சக்காளை வர, மாறனிடம் பார்வையால் நன்றி சொல்லிவிட்டு மச்சக்காளையின் பின்னோடு சென்றாள்.
அவள் நன்றி கூறியதும் கண்களால் மட்டுமே… அந்த இமையின் மொழி, இப்போது லேசாக மாறனுக்குப் புரிவது போலத் தோன்றியது. அவன் மனமோ, “அப்படினா ?அவ என அப்போ பார்த்தது உதவி கேட்டா ? அப்படித்தானே தோணுச்சு…” என நினைத்தது. அவளின் இரண்டு பார்வைகள் புரிந்தாலும், ஆனால் அவள் ஏன் தன்னோடு பார்வையில் பேசுகிறாள் என்று புரியாமல் போனாலும், அவளின் பார்வை சில்லென்ற நதியை போல இருந்தது.
அந்த நதிக்குள் இவன் மூழ்கி நனைய தொடங்கினான். ஏன் அவள் கதிரவனோடு பேசக்கூடாது என்று நினைத்தான், ஏன் அவளைக் காப்பாற்றினான், ஏன் இப்படிப் பரவசப்படுகிறான் என்றெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இனம் புரியாத மகிழ்ச்சியில் இருந்தான் அந்த நிமிடம்.
அதே எண்ணம் தான் சாந்தினியிடமும். கதிரவனிடம் சகஜமாகப் பேசிவிட்டாள், அதுவும் இரொண்டொரு முறை பார்த்தவனிடம் எதுவும் தோன்றவில்லை. ஆனால் மாறனிடம் பேச மட்டும் அவளுக்குத் தடுமாற்றமாக இருந்தது. இத்தனைக்கு மாறனுடனே அவளுக்குப் பரிச்சயம். ஒரு சில வார்த்தைகள் அளவான பேச்சு அவ்வளவுதான் அவனுடன் நேரில் அவளுக்கான உறவு. ஆனால் மறைமுக உறவொன்று இருந்தது. அது பாரிஜாதத்தின் பேச்சு…. இவள் இங்கு வரும் சமயங்களில் தன் மகளை விட மாறனே தனக்கு உயர்வு என்று லிங்கத்திடம் நிரூபிக்க, எந்நேரமும் மாறனை பற்றியே பேச அவர் அறியாமலே மகளின் மனதில் மாறனை பற்றிய சிந்தனையைப் பலவருடங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைக்கத் தொடங்கியிருந்தாள்.
மாறனை பற்றிக் கேட்டு கேட்டே அவளே அறியாமல் அவளுள் ஓர் அபிமானம் உருவாகத் தொடங்கியிருந்தது. மாறனுக்கோ இத்தனை வருடங்கள் இல்லாமல், இன்று அவள் புதிதாகத் தெரிந்தாள். அவன் கல்லூரி நாட்களில் வேறு இருக்க, அந்த வயதிற்கே உரித்தான பார்வை பரிமாற்றம் இனம் புரியாத பிடித்தம் என்ற எண்ணங்கள் எழ ஆரம்பித்திருந்தது.
“அம்மோவ் என்ன உன்னோட சீமந்த புத்திரன் அவனோட வளர்ப்பு அம்மாவையே எதிர்த்து பேசிட்டான்…என்ன ஒருமுறை கில்லேன். நிசந்தானான்னு உறுதிப்படுத்திக்குவோ” எனக் கதிரவன் புன்னகையுடன் வினவ, “எனக்கும் அதுதான் கதிரூ ஒரே ஆச்சர்யம். இன்னைக்கு மட்டும் மானக்கருத்துச்சுனு வச்சுக்கோ அதுக்கு முழுக்க முழுக்க மாறன்தா காரணமா இருப்பான்” எனக் கூறி அதிசயப்பட்டுப்போனார்.
மேற்கொண்டு அவரே தொடர்ந்து, “இப்போ அந்தப் பொண்ணு விஷயத்துல தப்புனு யோசுச்சவ என்னைக்காச்சும் உன்னையும் என்னையும் பத்தி யோசிப்பானா டா ? வெளிச்சமா இருக்குனு ஆசைப்பட்டுப் போய் விழுந்து சாகுற விட்டில் பூச்சிக்கனக்கா இருக்கானே இந்தப் புள்ள. காரிய ஒன்னு ஆகாதுன்னு தெரிஞ்சா இவன தூக்கியெறிய ஒத்த நிமிசமாகாது அந்தப் பாரிஜாதத்துக்கும் மச்சக்காளைக்கும். ஆனா இதெல்லாம் இவன் எப்ப புருஞ்சுப்பான் ? புருஞ்சுகிற காலம்னு ஒன்னு வருமா ?” என அவர் கூறிய வார்த்தைகளில் ஏக்கமும் எதிர்ப்பார்ப்பும் வலியுடன் போட்டிபோட்டன.
அவருடைய கைகளை ஆதரவாகப் பற்றியபடி, “அம்மா! எப்பவும் ஒருத்தன் ஏமாளியாவே இருக்க முடியாது. எப்பவுமே ஒருத்தங்க ஏமாத்தியே பொழைக்கவும் முடியாது. உண்மைங்கிறது மண்ணுக்குள்ளே கிடக்குற வையிரமாதிரி. ரொம்பகாலத்துக்கு நிலக்கரிகூட ஒண்ணுமண்ணா இருக்கலாம். ஆனா அது வெளிலவர நாள், அதுதான் ரொம்ப உசந்து நிக்கும். நீ விசனப்படாதமா. எல்லாமே மாரும். சரி பண்ணை தொறக்க போறே. உம்மவனுக்கு என்ன தர போற ?” எனத் தாயின் சிந்தனையை மாற்றும்பொருட்டு வேறு பேச்சிற்குத் தாவினான் கதிரவன்.
ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல், அதே நேரம் அவன் வேண்டாம் என்று ஒதுக்கியதை மறுபடியும் நாடியோ தேடியோ போகாமல், அவன் வழியில் ஒதுங்கி சென்றிடுவான். ஆனால் அவனை ஒதுக்க முற்பட்டால் அவனை இதற்குமுன் கண்டிராத வகையில் களத்தில் இறங்கி ஆடும் வழக்கமுள்ளவன்.
“உனக்கு என்ன வேணு கதிரவா… சொல்லுயா” எனப் பார்வதி கண்களைத் துடைத்தபடி வினவ, “எனக்கு எதுவும் வேணாமா, நீ வந்தா மட்டும் போதும்” எனப் புன்னைகையுடன் கூற, அவருக்கு ஒரே சமையத்தில் இன்பமாகவும் இருந்தது துன்பமாகவும் இருந்தது.
“அம்மாவ முன்ன நிறுத்தி பண்ற பிள்ளைங்க எத்தனை பேருக்கு கிடைக்கும் ? ஆனா கிடைச்சும் அத அனுபவிக்க முடியாத பாவப்பட்ட ஜென்ம ராசா நான்” எனக் கூறியவாறு கேள்வியாகப் பார்த்தான் நம் நாயகன்.
“நிசன்தான்யா சொல்றே. நீயும் நீ ஆரம்பிக்கப் போற தொழிலும் ஓகோன்னு வரணும். ஆனா நான் வந்தா அது அப்படி நடக்காது” எனக் கூறியவாறு இடைமறிக்கப்போன கதிரவனைத் தடுத்தவர் தானே மேற்கொண்டு பேசினார்.
“பொறு ஐய்யா, நான் பேசிமுடுச்சிடறே. நான் இத என்னோட அதிர்ஷ்டத்தை வச்சு சொல்லல. நம்ம குடும்பத்துல இருக்க அரசியலை வச்சு சொல்லுறே.
நானு வரணும்னு ஆசைதா, ஆனா அப்படி நான் வந்தா அத கெடுக்குறதுக்குனே உங்க அப்பாவோட தங்கச்சி ஏதாவது வேலைபண்ணும். அதையும் அவரு கையாலவே பண்ண வைக்கிற சதிகாரி அவ.
நல்ல நாளு அதுவுமா எந்த ஒரு அபசகுனமும் நடக்கக் கூடாது கதிரூ. அது மட்டும்தான் என்னோட மனசுல இருக்கு. அம்மா எங்க இருந்தா என்ன? எங்க இருந்தாலும் என்னோட உசுரும் மனசும் உனக்காகதாப்பா வேண்டிக்கிட்டு கிடக்கும். நீ சொல்லலாம், எல்லாத்தையும் நீ பார்த்துகிறேன்னு. நீ பார்த்துக்கவும் செய்வ. அந்தத் தெம்பு எம்மவண்ட இருக்குதா…
ஆனாலும் சிறுசா கெட்டதுனாலு எம்மனசு கிடந்தது அடிச்சுக்கும். அதுனால என வற்புறுத்தாத ராசா. நீ தொழிலை பாரு கதிரவா. அம்மாவோட ஆசிர்வாதம் ஒரு பரிசா உன்ட வந்து கண்டிப்பா சேரும். நான் மறுநாள் வாறே. அம்மா சொன்ன கேட்பதான அய்யா” எனத் தான் கூற வேண்டியதை கூறிமுடித்தபின் கதிரவனின் பதிலுக்காக அவனின் முகம் பார்க்க, அவனுக்கு இதில் சம்மதம் இல்லையென்றாலும், தனக்காகத் தன் அம்மா இத்தனை தெளிவாய் பேசியத்து மனதில் புதுவித உற்சாகத்தைத் தர, சரி என்பதாய் தலை அசைத்துவிட்டு எழுந்து சென்றான்.
இறால் பண்ணை திறப்புவிழாவிற்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன . விழா என்றால் பெரிதாகவோ ஆடம்பரமாகவோ எதுவுமில்லை. பாண்டி சக்கரையின் குடும்பு, முருகேசன் இன்னும் தொழில் சம்மந்தப்பட்ட ஒரு சில பெரிய மனிதர்கள். அவ்வளவே. ஆனால் கதிரவன் திருப்தியாக உணர்ந்தான். அவனுக்கென்று சொந்தமாக ஆரம்பித்திருக்கும் தொழில். அவனுடைய தாத்தா படிப்புச் செலவிற்கெனப் போட்டுவைத்திருந்த பணத்தில், செலவு போக மீதி பணத்தையும் அதோடு அவன் வங்கியில் கடன்வாங்கியுமே தொடங்கி இருந்தான். அதோடு கடந்த ஒரு வருடமாக அவன் உழைத்துச் சம்பாதித்திருந்த பணம்.
தன்னுடைய பணத்தில் ஒரு சிறு துரும்பை வாங்குவது கூட மனதிற்கு அலாதியான இன்பத்தைத் தரும். கதிரவனுக்கோ இன்பத்தோடு சேர்த்து நிம்மதியையும் மேலும் வாங்கிக் கடனை உரிய நாளில் அடைக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும் அளித்திருந்தது.
இவ்வாறு பரபரப்பாக அவன் சுற்றிக்கொண்டிருக்க, அதற்குச் சற்றும் குறையாமல் கனல்விழியும் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தாள். பரபரப்புடன் பரவசமும் அவளிடம் இருந்தது. வீட்டிற்கு வந்திருந்தவள் மீண்டும் விடுதி செல்ல பரபரப்பு என்றால், கதிரவன் ஆரம்பிக்கப் போகும் தொழில் குறித்துப் பரவசம்.
அன்றைய தினம், கதிரவனுக்கு மிகப் பெரிய தினம். அது தனக்கே உரித்தான தினம் போல எண்ணியவள், அவனை விட இவள் பல மடங்கு மகிழ்ச்சியுடன் வளைய வந்தாள். கதிரவனைக் கடைசியாகப் பார்த்தது ஆறு மாதத்திற்கு முன்னால், பேருந்திலிருந்து எட்டி எட்டி பார்த்து அவனுடைய புன்னகை முகத்தை இமை பெட்டகத்தில் நிரப்பிக்கொண்டு சென்றவள்தான். அதன் பின் இரண்டு முறைதான் விடுமுறையில் வந்திருந்தாள். அதுவும் மூன்று நாளுக்கு மட்டும். ஆதலால், முல்லைவீட்டிற்கெல்லாம் அவள் அன்னை அனுப்பவில்லை. கந்தசாமியும் தேவியும் தன்னுடனே அவளை இருத்திக்கொண்டனர்.
ஆகையால் இடைப்பட்ட நாட்களில் அவள் கதிரவனைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை. அவனைப் பார்க்காது போனாலும், அவளுக்கு அவனின் செய்திகள் எல்லாம் அத்துப்படி. அதற்குத் தான் பாண்டியும் சக்கரையும் இருக்கின்றனரே.
“என்னடி சந்தோசமா தெரியிறவ?” எனத் தேவி கேட்ட கேள்விக்கு, அவரைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தமொன்றை வைத்தவள், “என்னோட செல்ல அம்மா” எனக் கொஞ்சிவிட்டுப் பதில் பேசாமல் செல்ல, “இன்னும் குழந்தையாவே இருக்கா எம்பொண்ணு” எனச் சந்தோசமாகச் சொல்லிக்கொண்டார் கந்தசாமி.
ஏனென்றால் அவர்கள் இருவரும் அறிவர். சிறு வயது முதலே எதற்காகவாது அவள் சந்தோசமாக இருந்தால் உடனே தேவியைப் பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டு சொல்லுவாள். சில சமயங்களில் எதையாவது கேட்டு அடம்பிடித்திருப்பாள். அதற்குத் தேவி அடி விலாசியிருப்பார். ஆனாலும் இவளுக்குத் தான் அழுவது பிடிக்காதே…. அதனால் கண்களில் துளிர்த்த நீரை வெளியேற்றவிடாமல் பிடிவாதமாக இருக்க, கந்தசாமி மனம் கேளாமல் மகளின் ஆசையை நிறைவேற்றுவார்.
“என்னோட பொண்ண பாரேன்…. பிடிவாதக்காரி…அப்பகூட இந்த அப்பனோட சொல்லுக்காங்க ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தல. என்னோட சிங்க குட்டி எம்மவள் தான்” எனப் பெருமைவேறு பேசுவார். மகளின் சிரித்த முகமே ஒவ்வொரு தந்தையின் ஜீவ நாடி. கந்தசாமிக்கும் அப்படியே.
மகளின் சந்தோசம் இப்படியே நிலைக்கவேண்டும் என்று கந்தசாமியும் தேவியும் நினைத்துக்கொண்டனர். அவர்கள் வேண்டுதல் பலிக்குமா என்பது காலத்தின் கைகளிலும் கதிரவனின் கைகளிலும் தான் இருந்தது. இப்போது கனல்விழி உயிராய் நினைப்பது கதிரவனைத்தானே.
ஆனால் அந்தக் கதிரவனுக்கோ அவள் ஒரு பொய்க்காரி. வாழ்க்கை அவ்விருவருக்கும் வைத்திருந்த ஆடுபுலி ஆட்டத்தை அறியாமல் இருவரும் இருந்தனர்.