இராஜ பவனி 9

“என்னடி செய்ற..? எதிர்ல வண்டி வருது, நீ எனக்கென்னன்னு தலையை வெளியே விடுற.. அப்படி என்ன பார்க்கணும் உனக்கு..?”  சித்ரா பதட்டமாகி தங்கையை திட்ட, அனுவிற்கோ கண்ணில் அடைத்து நிற்கும் கண்ணீரை சமாளிக்க முடியவில்லை

அனு.. உன்னை தான் கேட்கிறேன்..” சித்ரா அவளின் கை பிடித்து கேட்க, கார் ஹோட்டல் முன் நின்றது. அனு முதல் ஆளாக  இறங்கி ரெஸ்ட் ரூம் செல்ல, அன்பழகன் முறைப்புடன் மகளை பார்த்து நின்றார்

என்னம்மா ஆச்சு இவளுக்கு..?” சித்ரா இறங்க கை கொடுத்த அம்மாவிடம் கேட்டாள் மகள்

சுஜாதா திரும்பி கணவர் எங்கு என்று பார்த்தவர்,  “அது அந்த பையன் போன வண்டின்னு நினைக்கிறேன் சித்ரா, அவன் வச்சிருக்கிறதும் இது போல வண்டி தான்..” என்றார் மெல்ல

ஓஹ்.. அதுக்காக இப்படியா செய்வா..?”  சித்ரா ஆதங்கத்துடன் கேட்க

இதுக்கு இல்லன்னா வேறெதுக்கு சித்து..? இது தாண்டி காதல், இதெல்லாம் உனக்கு  புரியாது விடு..”  சஞ்சய் கிண்டலாக  மனைவி காதில் சொன்னான்

அம்மா முன் நடக்க, தன் கை பிடித்து நடந்து கொண்டிருந்த கணவன் கையில் நறுக்கென கிள்ளிய சித்ரா, “இதுவும் காதல் தான்.. இன்னும் வேணுமா..?” நக்கலாக கேட்டாள்

ஸ்ஸ்.. போதும், போதும், இதுவும் காதல் தான், நீ பொறுமையா நடடி, உள்ள என் பேபி இருக்கா..” எட்டு  மாத நிறைந்த வயிறுடன் வேகமாக நடக்கும் மனைவியை மெல்ல நடக்க வைத்தான்

நான் போய் அவளை கூட்டி வரேன்..” சுஜாதா சொல்ல

நான் போறேன்மா.. நீங்க அப்பாகிட்ட போங்க, உர்ரென்னு நிக்கிறார்..”  என்று சித்ரா உள்ளே சென்றாள். அனு இன்னும் வெளியே வரவில்லை. சில நொடிகள் பொறுத்தவள், “அனு..”  என்றாள்

.. வரேன்க்கா..”  குரலை தொடர்ந்து, வெளியே வந்தவள், வாஷ் பேசனில் முகம் கழுவினாள். சித்ரா டிஸ்யூ எடுத்து கொடுக்க, வாங்கி முகம் துடைத்த  அனு, “போலாம்க்கா..” என்றாள் நமநம குரலில்

கண் எல்லாம் எப்படி சிவந்திருக்கு பாரு, அந்த பையனை பார்க்காததுக்கு இவ்வளவு அழுகையாடி..?”  சித்ரா தங்கை கை பிடித்து கடிந்து கொண்டாள்

அனு அவளின் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல், “நீ ரெஸ்ட் ரூம் போறியாக்கா..?” கேட்டாள்

இங்க வரவும் போகணும் போல தான் இருக்கு அனு..”  என்றவள் சென்று வர, அனு அக்காவின் கை பிடித்து உஷாராக கூட்டி சென்றாள்

அதற்குள் சஞ்சய் மாமனார், மாமியாரை டேபிளில் உட்கார வைத்திருந்தவன்இவர்கள் வரவும்  டேபிளுக்கு கூட்டி சென்றான். அன்பழகன் சின்ன மகளை தீர்க்கமாக பார்க்க, அனு அவர் பக்கமே பார்வை திருப்பாமல், மெனு கார்டை சித்ராவிடம் கொடுத்து கொண்டிருந்தாள்

மாமா.. உங்களுக்கு என்ன சொல்லட்டும்..?” சஞ்சய் மாமனாரிடம் கேட்க

எனக்கு இரண்டு இட்லி மட்டும் போதும் மாப்பிள்ளை..” என்றார். சுஜாதாவும் கணவர் கோவ முகத்தில், இட்லி மட்டும் போதும் என்றுவிட, சஞ்சய், சித்ரா இருவரும் முகம் பார்த்து கொண்டனர்

இன்று சஞ்சயின் பிறந்த நாள், அதற்காக தான் ஹோட்டல் வந்திருந்தனர். ஆனால்  இப்போது அந்த சூழ்நிலையே மாறிவிட, அனுவிற்கு வருத்தமாகி போனது. அவளால் தான் இப்படி என்று  புரியாமல் இல்லையே

என்ன மாமா நீங்க..? இட்லி மட்டும் எப்படி போதும்..? நானே சொல்றேன் விடுங்க..” சஞ்சய் அவனே மெனு கொடுத்தவன், அவர்களை சாப்பிடவும் வைத்தான். அன்பழகனுக்கு ஓர் அளவுக்கு மேல் மறுக்க முடியவில்லை. மாப்பிள்ளை, அதுவும் மிகவும் பிடித்த மாப்பிள்ளை, அவனுக்காக சாப்பிட்டவர், இறுதியில் ஸ்வீட்டையும் எடுத்து கொண்டார்

அதில் அனுவிற்கு தான் நிம்மதி. “எப்போவும் போல மாமா சமாளிச்சுட்டார், ம்ம்.. ஒரு வருஷத்துக்கு முன்னவும் அவர் தானே ஹெல்ப் பண்ணார்..” அனுவிற்கு அக்கா கணவன் மேல் பாசம் என்பதை தாண்டி அளப்பறியா மரியாதை.  

ஒரு வருடத்திற்கு முன்பு, பெரிய மகளின் திருமணம் முடிந்த சில நாட்களிலே அன்பழகன்  சின்ன மகளுக்கு வரன் கொண்டு வந்துவிட்டார். இப்படி என்று விஷயம் தெரியவும் அனு மறுக்க, வீட்டில் பிரச்சனை வெடிக்கமீண்டும் ஒரு போராட்டம்

அனுகல்யாணம் வேண்டாம், மாஸ்டர் படிக்கிறேன்..” என்று போராட

நீ எதுக்கு படிக்கிறேன் சொல்றேன்னு எனக்கு தெரியும், அந்தளவு நான் இங்க இளிச்சவாயனா இல்லை, உன்னை இனி நான் வீட்ல வைக்கிறதாவே இல்ல.. இத்தனை நாள் நான் பொறுத்துகிட்டதே சித்ராவுக்கு நல்லது நடக்க தான், இனி முடியாது..” என்று அன்பழகன் அவர் முடிவில் நின்றார்

அனு அம்மாவிடம் சென்றால், அவர்  கணவர் சொல்வதை போல செய் என்று இளைய மகளை வாட்ட, ஆத்ரஷ்ஷிற்கோ அப்பா சொல்வது சரி தானே என்ற எண்ணம். அவனும் அமைதி காக்கசித்ரா தான் தங்கைக்காக கிளம்பி வந்தவள், அப்பாவிடம் பேச, அவரோ எதையும் கேட்கும் நிலையில் இல்லை

பெண் பார்க்கும் வரை கொண்டு வந்துவிட்டார். அனுவிற்கு பயம் தொற்றி கொள்ளசாப்பிடாமல், யாரிடமும் பேசாமல், அழுதது அழுததாகவே இருந்தாள். அப்போதும் அன்பழகன் இறங்கி வரவில்லை

நீ இப்படியே சாப்பிடாம  மயக்கம் போட்டு விழுந்தாலும் எனக்கு கவலை இல்லை. உன்னை தூக்கிட்டு போய்  ஹாஸ்பிடல் வச்சே கல்யாணத்தை முடிக்க எனக்கு தெரியும்..” என்றார் மகளிடம். அனுவிற்கு இன்னும் பயம். அப்படி எதாவது நடந்துவிட்டால் என்ன செய்ய என்று  அடுத்த நொடியே உணவை எடுத்து கொண்டாள் பெண்

இப்படி என்று பூமிகா மூலம் தனாவிடம் சொல்லாமல் என்றால் அவளையும் அருகில் விடவில்லை. வேறு வழியில் எப்படியாவது தனாவுடம் சொல்லிவிடலாம், அவனும் வந்துவிடுவான் தான்ஆனால் அங்கேயும் சாரு இருக்காளே, அவளுக்கும் இப்போ வரன் பார்த்துட்டு இருக்கிறதா சொன்னாங்களே, என்னால அங்கேயும் வம்பா.. சோர்ந்து போனாள்.  

என்ன செய்ய என்றே தெரியாத நிலை. “எல்லாம் கை மீறிட்டா செத்து தான் போகணுமா நான்..?” நினைக்க, உடனே ஒரு தீவிரமான மறுப்பு அவளுள்ளே

நோ.. நான் மாட்டேன், நான் ஏன் சாகனும், இல்லை.. இல்லை.. நான் போயிட்டா அதுக்கும் அவரை தான் பேசுவாங்க, அந்த பழி அவருக்கு தான், என்னை பார்த்ததுக்கு அவருக்கு ஏன் இவ்வளவு பெரிய பேச்சு, அப்படி ஒரு தப்பும் நாங்க பண்ணலையே, இவங்களால முடிஞ்சா எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கட்டும், இல்லை நாங்க இப்படியே இருந்துகிறோம்..” அவளுக்குள் உறுதி, ஒரு கோவம், வீம்பு, தைரியம் வர, அப்பாவிடம் மல்லுக்கு நின்றுவிட்டாள் பெண்

சில நிமிடங்களில் வர இருக்கும் மாப்பிள்ளை வீட்டினர் முன் பெண் பார்க்க நிற்க மாட்டேன்.. என்று விட்டாள். சுஜாதா கோவப்பட்டு, கெஞ்சி, மிரட்டி ம்ஹூம்  எதற்கும் அசையவே இல்லை, கிளம்பவும் இல்லை.  

பண்றதையும் பண்ணிட்டு இன்னும் என் மானத்தை வாங்கிற நீ..?”  அன்பழகன் கை அன்று மகள் கன்னத்தில் வலுவாக  இறங்கியது. அனு வலி தாங்காமல், அடித்த வேகத்தில் கீழே விழ, இன்னும் நிலைமை மோசமாகி போனது வீட்டில்

சித்ரா கணவனிடம் போன் செய்து அழுகவே செய்துவிட்டாள். உள்ளூரில் அவன் வீட்டில் இருந்த  சஞ்சய் உடனே கிளம்பி வந்தவன், “அனுவை எங்களோட கூட்டிட்டு போறேன்..” என்றான்

அவ மாஸ்டர் படிக்கட்டும், அவளோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு, என்னை நம்பி அனுப்பி வைங்க, உங்க பொண்ணு  உங்க பொண்ணாவே உங்ககிட்ட வருவா..” அன்பழகனிடம் கேட்டான்

அவர் மறுத்தவர்,   எல்லா அப்பாக்களை போல, அவரும், “நீ ஒத்துக்கலைன்னா நான் சாகத்தான் வேணும்..”  என்று மகளை  மிரட்டவே செய்தார்

அனுவோ மிகவும் அமைதியாக,  “நானே இதை எனக்கு யோசிச்சேன்ப்பா, ஆனா என்னால அவருக்கு பழி சொல் வர கூடாதுன்னு தான் விட்டுட்டேன்.. நான் உங்களை எனக்கு அவர்கூட கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்கல, இல்லை உங்களை ஏமாத்திட்டு அவர் கூட நான் ஓடி போகவும் மாட்டேன், சத்தியமான சத்தியம்ப்பா இது..”

ப்ளீஸ்ப்பா.. என்னை இப்படியே விட்டுடுங்க, நான் படிக்கிறேன், இங்க வேண்டாம்ன்னா அக்கா கூட போறேன், ஆனா கல்யாணம் மட்டும் முடியாதுப்பா.. அது எந்த சூழ்நிலையிலும் முடியாதுப்பா..”   அழுகையில் குரல் நடுங்க, அப்பாவின் முன் கை குவித்து வேண்டி நின்றவள், அதற்கு மேலும் தாங்க முடியாமல் அவரின் கால் அருகில் மண்டியிட்டு கைகளில் முகம் புதைத்து கதறி விட்டாள்

அவளின் கதறலில் அன்பழகன்  தடுமாறி போனார். அவரால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை. அதுவரை தள்ளி நின்றிருந்த சித்ரா, சுஜாதா இருவரும் அனுவை தூக்கி அணைத்து தாங்களும் கண்ணீர் வடித்தனர். அன்பழகன் கதறும் மகளை தான் பார்த்திருந்தார்

அவரின் அடியில் கன்னம் வீங்கி, ஆள்  ஒடுங்கி பார்க்கவே பரிதாபமாக வேண்டி நிற்கும் மகளை பார்க்க பார்க்க தந்தைக்கும் மனதில் முள் குத்தியது. வலித்தது. தொண்டை அடைத்தது. அன்பழகனால் இதுக்கு மேலேயும் பிடிவாதம் பிடிக்க முடியவில்லை.  

மகளை தண்டிக்கவும் முடியவில்லை. அவர் குணமும் இதுவல்லவே. அவருக்கும் கண்கள் கலங்கிவிட்டது. சித்ராவும் அப்பாவின் கை பிடித்து கெஞ்ச, சுஜாதாவிற்கு சின்ன மகளின் தீவிரம் கண்டு கொள்ள முடிந்தது

நீங்க என்ன பண்ணாலும் அவ கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கஅந்த பையன் மேல தான் அவ நினைப்பு  பூரா இருக்கு, அப்படியே கை கால் கட்டி பண்ணி வச்சாலும் கண்டிப்பா வாழ மாட்டா, கொஞ்ச நாள் விட்டு பிடிப்போம், அவ இஷ்டப்படி படிக்கட்டும், அதுக்குள்ள ஏதாவது செய்யலாம்..”  கணவருக்கு சொன்னார்

அன்பழகனுக்கும் மகளின் உறுதியில், திருமண எண்ணத்தை கை விட வேண்டிய நிலை தான். கல்யாணம் இல்லை என்றுவிட்டால் தனா இருக்கும் ஊரிலே மகளை  வைத்து என்ன செய்வது என்று யோசித்தவருக்கு சித்ராவுடன் அனுப்புவது தான் சரியாகவும் இருந்தது. ஒத்து கொண்டார். 

“உங்க மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்துவீங்கன்னு நம்பி தான் அனுப்புறேன், ஒரு முறை நடுத்தெருவில வச்சு என் தலையில கல்லை தூக்கி போட்டதே போதும்..”   சின்ன மகளை பார்த்து சொல்லி சென்றார். அனுவிற்கு அவர் ஒத்து கொண்டதில் மகிழ்ச்சி என்றாலும், அவரின் வார்த்தைகள் அதிகம் வலித்தது

சித்ராவிற்கோ அவர் ஒத்து கொண்டதே போதும் என்றிருக்க, அடுத்த இரு தினங்களுக்குள் தங்கையை தன்னுடன் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள். அங்கேயே மாஸ்டரும் சேர்ந்தாள். விடுமுறைக்கு தான் ஊருக்கு வருவாள். இன்று வரை தனாவை பார்க்க முடியவில்லை

ஆனால் இந்த முறை பார்க்கும் நம்பிக்கை உள்ளது. சித்திரை திருவிழா வருகிறதே. அதோடு அவளும் ஒரு மாதத்திற்கு இங்கு தானே இருக்க போகிறாள். “அக்கா அங்க இருந்தாலும் அப்பா என்னை அனுப்பியிருப்பார், இப்போ தான் அக்காவும் பிரசவத்துக்கு இங்க வந்துட்டாளே, இத்தனை நாள் இருக்கே, பார்த்துடுவேன்..”  நம்பிக்கை வர, கொஞ்சம் தெளிந்த முகத்துடன் குடும்பத்துடன் வீடு கிளம்பினாள்

**************

மறுநாள் காலை, குகன் எப்போதும் போல சீக்கிரமே வந்து கணக்கு பார்த்து கொண்டிருக்க, சாரு கோவ நடையுடன் அவன் முன் வந்து நின்றாள்