இராஜ பவனி 11

இது எல்லாம் நல்லாவா இருக்கு..? என் தம்பி மானத்தை வாங்கிறதுக்கென கங்கணம் கட்டிட்டு இருக்கானா உன் மகன்..?”  இரவு மணி பத்தை நெருங்கியிருக்க, குருமூர்த்தியின் அக்கா பேச்சி குரலுயர்த்தி கொண்டிருந்தார்

வைதேகி அவரை கலக்கத்துடன் பார்த்திருக்க, தனா, குகன், சாரு ஓரிடத்தில் இருந்தனர். குருமூர்த்தி இன்னும் வீடு வரவில்லை. மறுநாள் தேரிற்கான ஏற்பாட்டில் இருப்பார்

பேச்சி தனாவை பார்த்தபடி, “உன் மகன் கோவில்ல  வச்சு அந்த பொண்ணை அந்த பார்வை பார்க்கிறானாம், பெத்த அப்பன் இருக்கான்னு கூட இல்லாம, ஊரெல்லாம் இதான் பேச்சா இருக்கு, போன திருவிழாக்கு தான் இந்த திருவிழாவுக்குமா..?”   பேச்சில் கார நெடியுடன் சத்தமாக பேசி கொண்டிருக்க, தனா அவரின் பக்கம் திரும்ப கூட இல்லை

அவரோ குருமூர்த்தியின் அக்கா ஆயிற்றே, “நாங்களும் இந்த வீட்ல பிறந்து வளர்ந்து கல்யாணம் பண்ணிட்டு போனவங்க தான், நானோ, என் தம்பியோ  இப்படியா பெத்தவங்க மான மரியாதையை ஊர் நடுவுல கொடி கட்டி பறக்க விட்டோம்..? பெத்தவங்க நெஞ்சை நிமித்திர மாதிரி  அவ்வளவு ஒழுக்கமா தான் இருந்தோம், இருக்கோம், இப்படியா உன் பிள்ளைகளை  போலவா..?” பேச்சு வார்த்தைகளை கூட்டினார்

வைதேகிக்கு அவரின் வார்த்தைகள் அடிநெஞ்சில் குத்த, கண்கள் கலங்கி போனது. அவரின் குறியும் அது தானே..? தனாவிற்கு புரிய, அத்தையை நேராக பார்த்தவன்,  “என்னை பத்தி மட்டும் பேசுங்கத்தை, சாருகிட்ட போக வேண்டாம்..” குரலில் அப்படி ஒரு அழுத்தம்

உன்னை பத்தி பேசினா மட்டும் போன என் தம்பி மானம் திரும்பி வந்திடுமா என்ன..? பண்றதையும் பண்ணிட்டு இப்படி தெனாவட்டா இருக்கிறது எல்லாம் எங்க ரத்தத்துல இல்லை, உங்க அம்மா வீட்டு ரத்தம் போல..” என, வைதேகி பொங்கும் கண்ணீரை துடைத்து நின்றார்

அதெப்படி தனா, போன வருஷம் தான் அவ்வளவு பெரிய பிரச்சனை பண்ணிட்டு, திரும்ப இந்த திருவிழாலும் அதையே செய்ற, அந்த பொண்ணு வேற ஆளுன்னு கூடவா உனக்கு தெரியாது, அந்த பொண்ணோட அப்பனும் என் தம்பிகிட்ட வம்பு பண்ணவன் தானே..?”

நியாயமா உன் அப்பனுக்கு மகனா நீ என்ன பண்ணயிருக்கணும்..? அந்த பொண்ணோட சகவாசத்தை எப்போவவோ தலை முழுகிக்கணும், அதைவிட்டு இதெல்லாம் என்ன..?  உண்மையை சொல்லு என் தம்பி மரியாதையை கெடுக்க ஏதும் செய்றியா என்ன..?”   பேச்சி கேட்டுவிட, தனாவிற்கு கோவம் உச்சிக்கு ஏறியது

அவன் வாய் திறக்கும் நேரம், “அப்படி கேளுங்கக்கா.. எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு..” என்று வந்தார் குருமூர்த்தி. அவரை பார்க்கவும் வைதேகி உடலில் அப்படி ஒரு நடுக்கம்

தனா நடக்க போவதற்கு தன்னை தயார்படுத்தி நின்றான். சாரு மெல்ல நகர்ந்து அம்மா  பக்கம் சென்று நிற்க, குகனும் வைதேகி பக்கம் தான் நின்றான். குருமூர்த்தியின் முதல் அடி அவர் மேல் அல்லவா இருக்கும்

அதற்கேற்றாற் போல, “என் தம்பிக்கு தண்ணீ ஏதும் கொடுக்கிறதில்லயா, வீட்ல  ஒன்னுக்கு இரண்டு பொம்பிளைங்க இருந்துகிட்டு இவ்வளவு நேரம் உழைச்சிட்டு வர மனுஷனுக்கு ஒரு சொம்பு  தண்ணீர்   கொடுக்க கூட முடியாதா உங்களால..?”  பேச்சியின் பேச்சு குருமூர்த்தியை தூண்டிவிட ஆரம்பித்தது

வைதேகி இரு கைகளும் நடுங்க தண்ணீர் சொம்பை இறுக்கமாக பிடித்தபடி கணவனுக்கு நீட்ட, குருமூர்த்தியின் கைகள் அந்த சொம்பை தட்டிவிட்டதோடு, “உன்னை பொளந்தா எல்லாம் சரியா வரும்டி..”   மனைவி மேல் கை ஓங்கி கொண்டு சென்றார்

வைதேகி உடல் நடுங்க பயத்தில் பின்னால்  செல்ல, இதை எதிர்பார்த்தே நின்ற தனாஅம்மாவை பின்னால் இழுத்து தான் முன் நின்றான். அவனை பார்த்ததும் குருமூர்த்திக்கு வெறி ஏற,

 “ஊர்ல அத்தனை பேர் பார்க்க என் மானத்தை வாங்கினதும் இல்லாம என்ன  தைரியம் இருந்தா என் முன்னாடி நெஞ்சை நிமித்திக்கிட்டு நிப்ப.. உன்னை..”   என்று  மகனை அடிக்க வலுவாக கை வீசினார்

தனாவோ முன் போல் அடி வாங்கி கொண்டு நிற்காமல், ஒரு அடி பின்னால் செல்ல, அவரின் கைகள் காற்றை தான் வீசி சென்றது. அதில் குருமூர்த்தியின் ஆங்காரம் கூடி போக,  “என்கிட்டயே  உன் வேலையை காட்டுறியா..?” என்று மேலும் அவன் மேல் ஏறி கொண்டு கை வீச, ஒரு அடி கூட தனா மேல் படவில்லை

மகன் வலு, வயது முன் தான் தோற்றதாக  குருமூர்த்தி ஆக்ரோஷம் கொண்டவர், மகனை வார்த்தைகளால் தாக்க ஆரம்பித்தார். “பார்த்தியாக்கா.. நான் போட்ட சோத்தை தின்னு வளர்ந்துட்டு எனக்கே ஆட்டம் காட்டுறதை, இவனுக்கு தெரியாதா இந்த ஆறடி உடம்புல ஓடுறது என் ரத்தம்ன்னு..”  மகனை குதற  ஆரம்பித்தார்

தனா வாய் திறக்காமல் நின்றான். “இது எப்படி இருக்கு பாருங்கக்கா, தப்பு பண்ணவன் நெஞ்சை நிமித்திட்டு  நிக்க, இப்படி ஒரு ஒழுக்கம் கெட்ட பிள்ளையை பெத்ததுக்கு நான் தான் தலையை தொங்க போட்டு வந்திருக்கேன்..”

நீ அந்த கருமத்தை பார்க்காம போயிட்டக்கா, அந்த பொண்ணை பார்த்ததும் சாருக்கு  ஹீரோன்னு நினைப்பு வந்திருச்சு போல, ஊர்ல  அத்தனை சனத்துக்கு  முன்னாடி இப்படி தான் நெஞ்சை நிமித்தி நிக்கிறான்க்கா, என் மானமே போயிடுச்சு, இவனுக்கு பின்னாடி ஒரு பொம்பிளை பிள்ளை இருக்கான்ற நினைப்பு கூட இல்லாம இவனுக்கு பொண்ணு தேடிகிட்டு இருக்கான், இதான் அவங்க அம்மா வளர்த்த லட்சணம்..” குருமூர்த்தி நஞ்சை கக்க ஆரம்பித்தார்

இவ்வளவு நேரம் நானும் அதை தான் தம்பி கேட்டுகிட்டு இருக்கேன், இவங்க எல்லாம் ஒன்னு போல, நீ தான் இந்த வீட்ல தனி போலவும் இருக்கு தம்பி, நீ எதுக்கும் இவங்ககிட்ட  உஷாரா இருந்துக்கோ தம்பி, உன்னை நினைச்சா தான் எனக்கு கவலையா இருக்கு..”  பேச்சி கண்களை துடைக்க

நீ ஏன்கா என்னை நினைச்சு கவலைபடுற..? இவங்களால என்னை என்ன கிழிக்க முடியும்..? நானும் ஏதோ வளர்ந்த பையன், குடும்பம் கெட்டு போயிட கூடாதுன்னு தான்  இவ்வளவு நாள் பொறுத்துகிட்டு இருந்தேன், இனியும் இந்த ஆம்பிளை அடிக்கிற கூத்தை எல்லாம் என்னால பார்க்க முடியாது.. முதல்ல என் பொண்ணுக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டு, இவனா..? நானான்னு ஒரு கை  பார்க்கிறேன்..”  என்றார் மகனை வெறி கொண்டு பார்த்தபடி

தனா வாயே திறக்காமல்  தன்னை மிகவும் கட்டுப்படுத்தி நிற்க, அவனின் அந்த அழுத்தத்தில் குருமூர்த்திக்கு கோவம் ஏற, அவனின் பின்னால் இருக்கும் மனைவியிடம்,   “ஏய் வெளியே வாடி, போன திருவிழாக்கே இவன் செஞ்ச வேலைக்கு ஒரு முடிவு கட்டியிருந்தா இன்னைக்கு திரும்ப ஆரம்பிப்பானா இவன், எல்லாத்துக்கும் நீ தான் காரணம், வெளியே வாடி, இப்போ வரல அவ்வளவு தான், என்னமோ இப்போ தான் மகன் பின்னாடி ஒளிஞ்சுட்டு நிக்கிற, இங்க நிக்கிறது யாரோ ஒரு ஆம்பிளை இல்லைஉன் புருஷன் தான்..”   என்றுவிட

என்ன பேசுறீங்க, வார்த்தையை பார்த்து விடுங்க..” அதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாமல் தனா அவரை எச்சரித்தான்

வாடா.. வாடா.. பார்த்தியக்கா என்னையே  மிரட்டுறதை, என்னடா உன் திமிரை என்கிட்டேயே காட்டுறியா..? மகன்னு கூட பார்க்க மாட்டேன்.. மண்ணோடு மண்ணா புதைச்சிறுவேன்..” விரல் நீட்டி கடுமையாக எச்சரிக்க

ஐயோ.. என்னங்க பேசுறீங்க..”  வைதேகி கண்ணீரோடு பதற, சாருவின்  உடல் நடுங்கி போககுகன் அவள் பக்கத்தில் துணையாக நின்றான்.

தனாவிற்கோ அவரின் வார்த்தையில் முழு கசப்பே. அவர் செய்ய கூடிய மனிதர் என்பதும் அவனுக்கு தெரியுமே..? அவனுடைய கவலையும் அவனை பற்றி அல்லவே, அவனை நம்பியிருக்கும் மூன்று பெண்கள் பற்றி தான். அதிலும் அனு தான் அதிகம்

வைதேகி, சாருவை கூட குகன் பார்த்துக்கொள்வான். அவளுக்கு, அவளுக்கு  யார்..? அவளின் மனதை கலைக்காதவரை கூட சரி, இப்போது அவளும் இவனுக்கு குறையாத உறுதியில் அல்லவா நிற்கிறாள்..? அவளை நினைக்கவும் தனாவிற்கு எப்போதும் போல தொண்டை குழி அடைத்தது

சும்மா பார்த்தத்துக்கே ஏன் இவ்வளவு அமர்க்களம் பண்றாங்க..?  போதும் இனியும் எதையும் தாங்கிகிற நிலையில நானும் இல்லை, என் குடும்பமும் இல்லை, அனுவும் இல்லை. முடிவெடுத்தாச்சு.. செய்யணும்..”

அதற்கு முன்  இந்த நொடி அவளுக்கு அங்க என்ன நிலை என்று  தெரியவில்லை. குருமூர்த்தி அடங்கினால் தான் அவன் அவளை பார்க்க முடியும், விசாரிக்க முடியும், அன்பழகன் குருமூர்த்தி அளவு இல்லை என்றாலும், அவ்வளவு சாதாரணமாகவும் விட மாட்டார்கள்

போன  முறையே அவ்வளவு அடி வாங்கியவள் ஆயிற்றே. இப்போதும்..?? முன் போல இப்போதும் சித்ரா பார்த்து கொள்வார், பார்த்து கொள்ள வேண்டுமே.. அவளுக்காக தவித்து நிற்க, இங்கு குருமூர்த்தி இன்னும் ஆடி கொண்டு இருந்தார்

“க்கா.. நீ ஏன் டென்சன் எடுத்துகிற, நீ அந்த வரனை வரச்சொல்லு, நாளை தேரோட்டம் முடியட்டும், அடுத்த நாளே பொண்ணு பார்த்து, உறுதி பண்ணிடுவோம்..” என்று சொல்லி கொண்டிருந்தார்

தனா யாருக்கு என்று புரியாமல் ஓர் நொடி அதிர்ந்து தான் போனான். குகனை கேள்வியாக பார்க்க, அவன் சாருவை கண் காட்டினான். ம்ப்ச்.. இப்போது பேசவும் முடியாது.. தனா அமைதியாக யோசித்து நிற்க

சாரு கல்யாணம் மட்டும் முடியட்டும்க்கா, இவங்களை ஒரு கை பார்த்துடுறேன்.. யாருகிட்ட..” குருமூர்த்தி சூளுரைத்து செல்ல, தனா ஓய்ந்து தான் போனான்

இல்லை.. இதெல்லாம் தெரிஞ்சது தானே, என்ன எல்லாம் சீக்கிரம் முடிவுக்கு வர போகுது, அவ்வளவு தான், நாளைக்கு தேரோட்டம் முடியட்டும், பேசிட வேண்டியது தான்..” தனக்கே தானே தைரியம் ஊக்கம் அளித்து கொண்டவன், அம்மா, தங்கை, குகனை சாப்பிட வைத்தான்

அடடா.. நல்லா இருக்கு வைதேகி, ரொம்ப நல்லா இருக்குஅங்க என் தம்பி தண்ணீர் கூட குடிக்காம தூங்க போயிட்டான், நீங்க இங்க வட்டமா உட்கார்ந்து கொட்டிக்கிட்டு இருக்கீங்க..”  பேச்சி  பேச

அப்போ நீங்களும் சாப்பிட்டிருக்க கூடாதுத்தை, உங்க தம்பி வந்ததுக்கு அப்புறம் போட்டுட்டு சாப்பிட்டிருக்கணும்..” என்றுவிட்டான் தனா. நான் ஒன்னும்.. பேச்சி வேகமாக ஆரம்பிக்க

அத்தை.. போதும், இவ்வளவு நேரம் நான் அமைதியா இருந்தது உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து தான், உங்களுக்கும் உங்க தம்பிக்கும் பயந்து இல்லை, இந்த மரியாதையும் நீங்க சொன்னது போல எங்க அம்மா வீட்டு ரத்தம் என் உடம்புல ஓடுறதால தான்..”

இதுவே உங்க ரத்தம்ன்னாஇது எங்க குடும்ப விஷயம், நீங்க உங்க வேலையை பாருங்கன்னு சொல்லியிருப்பேன், சொல்லவும் வைச்சுடாதீங்க, போங்க, போங்கத்தை..” தனா அவரை பேசவே விடாமல் அனுப்பிவிட, அவர் முணுமுணுத்து கொண்டே தான் சென்றார்

அவங்க எல்லாம் அடங்கமாட்டாங்கண்ணா.. நீ சாப்பிடு..”   சாரு அண்ணனுக்கு உணவு வைக்க போனாள்

இல்லை சாரு.. நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன், ம்மா.. நீ சாரு ரூம்லே படுத்துக்கோ, குகன் நீ போகும் போது எல்லாம் பார்த்துட்டு போ..” என்றவன் வேகமாக வண்டி எடுத்து கொண்டு செல்ல

இந்நேரத்துக்கு எங்க போறான்..?” வைதேகி கேட்டார்

அந்த பொண்ணை பத்தி தெரிஞ்சுக்க போவான்த்தை, பூவம்மா அவங்க வீட்ல தானே வீட்டு வேலை பார்க்கிறாங்க, அவங்கிட்ட கேட்க போவான்..”  என்றான் குகன்.