பரிமளா ரெசிடென்சி 3

அன்று காலையே ஷ்யாமளா தட்டு நிறைய பலகாரங்களோடு வந்தார். “என்ன ஆன்ட்டி ஸ்பெஷல்?” என ஆர்த்தி கேட்க, அவர்கள் வீட்டின் வெளியே நின்றிருந்த ஈஸ்வர், “இன்னைக்கு  ஷ்யமளாவோட பிறந்த நாள். போன வருஷமெல்லாம் பிறந்த நாளுக்கு ஒன்னும் செய்யலை… கஷ்ட்டப்பட்டு கோவிலுக்கு தான் கிளம்பி வந்தா…. இந்த வருஷம் நல்ல முன்னேற்றம் எல்லாம் உன்னால தான்.” என்றார்.

“உங்க சந்தோஷத்தை பார்த்ததும் நான் கூட உங்க மகன் தான் வந்திட்டாருன்னு நினைச்சேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள். இப்படியே சந்தோஷமா இருங்க.” என ஆர்த்தி வாழ்த்த…

“சரிதான் பெரிய மனுஷி. இதை எல்லாம் சாப்பிட்டு தான் ஆபீஸ் போகணும்.” என தான் கொண்டு வந்த பலகாரங்களை ஷ்யாமளா கொடுக்க…

“இது இன்னைக்கு நாள் பூரா நான் வச்சு சாப்பிடுவேன்.” என்றாள் ஆர்த்தியும் சிரிப்புடன். 

கோவில், ஹோட்டல், சினிமா என ஈஸ்வரும் ஷ்யமளாவும் மாலை வரை ஊர் சுற்றிவிட்டு வந்தனர். வெளியே சென்றுவிட்டு வந்ததே மனதுக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. 

ஈஸ்வரே மகனுக்கு இன்று அம்மாவின் பிறந்தநாள் என தகவல் அனுப்பி வைக்க…. அவனே இன்று அழைத்து விட்டான். ஷ்யமளா தான் எப்போதும் அழைப்பார். 

மகன் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியதும், ஷ்யமளாவுக்கு மகிழ்ச்சி தான்.

இன்று என்னென்ன செய்தோம் என்று சொன்னவர், “நீ வந்து ஒரு கல்யாணத்தை பண்ணி குடும்பத்தோட போய் வெளிநாட்டில் உட்கார்ந்துக்கோ…. எனக்கு உன்னை பத்தி கவலையாவது குறையும்.” என்றார்.

“இப்போ என்ன கல்யாணத்துக்கு அவசரம்? இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்.” என்றான்.

“உனக்கு இப்போ இருபத்தியேழு வயசு ஆகிடுச்சு. இப்போ பொண்ணு பார்க்க ஆரம்பிச்சா எப்போ முடியுமுன்னே தெரியாது.”

“நம்ம தீபா அவ பையனுக்கு இருபத்தியஞ்சு வயசுலையே பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டா… இப்போ பொண்ணுங்க போடுற கண்டிஷனுக்கு பொண்ணு கிடைக்கிறதே கஷ்ட்டம். அதனால தான் இப்போ இருந்தே பார்க்கிறேன்னு வேற சொன்னா….”

“முன்னாடி காலம் மாதிரி இந்த காலத்துல கல்யாணம் ஈஸியான விஷயம் இல்லை. அதுதான் சொல்றேன். இல்லைனா நீயே எதாவது பொண்ணு பார்த்து வச்சிருக்கியா? அப்படியிருந்தா சொல்லு அதையே பார்த்திடலாம்.”

“இதுக்குதான் உங்களுக்கு போன் பண்றதே இல்லை. எனக்கு வேலை இருக்கு வைங்க.” என வைத்து விட்டான்.

“இவனிடம் பேசினாலே மனநிலை சரியில்லாம போயிடுது. எதுக்காவது ஒத்து வந்தா பரவாயில்லை.” என ஷ்யமளாவால் புலம்பத்தான் முடிந்தது. 

“ஆர்த்தி சொன்னது போல… நீ கொஞ்சம் அவனை கண்டுக்காம விடு. நாம என்ன சொன்னாலும், அவன் செய்யுறது தான் செய்யப்போறான். நாம டென்ஷன் ஆகி மட்டும் என்ன ஆகப்போகுது.”

“ம்ம்… நீங்க சொல்றதும் சரிதான். நாம ரெண்டு பேரும் எங்காவது டூர் போயிட்டு வரலாமா?” ஷ்யமளா ஆர்வமாக கேட்க,

“சொந்த வீட்ல இருந்திட்டு வாடகை வீட்டுக்கு வர்றதான்னு யோசிச்சிட்டு இருந்த…இங்க வந்த பிறகு நல்ல முன்னேற்றம் தான்.”

“இங்க வந்த பிறகு நாலு மனுஷங்க, மக்கான்னு பழக நல்லத்தான் இருக்கு.”

“அடுத்த மாசம் மும்பையில உன் அண்ணன் பையன் கல்யாணம் இருக்கு இல்ல… அங்க போயிட்டு அப்படியே நாம அங்க பக்கத்தில இருக்க இடம் எல்லாம் பார்த்திட்டு, ஷீரடிக்கும் போயிட்டு வரலாம்.” என ஈஸ்வர் சொன்னதும், ஷ்யாமளா அப்போதே ஊருக்கு போவதற்கு திட்டமிட ஆரம்பித்தார்.

மகனை சுற்றி மட்டுமே ஷ்யமளாவின் உலகம் இருக்கும். அவனுக்கு நினைத்த நேரம் கைபேசியில் அழைத்தபடி இருப்பார். அவன் ஒழுங்காக சாப்பிட்டானா, உறங்கினானா, வெளியே சென்றால் பத்திரமாக இருப்பானா போன்ற கவலையிலேயே நாட்கள் செல்லும். 

இப்போது தான் அதிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து கொண்டிருக்கிறார். வேறு விஷயங்கள், சிந்தனைகள் என மனம் இப்போது தான் எண்ணத் துவங்கி இருந்தது.

சில நாட்கள் சென்றிருந்த நிலையில், ஒருநாள் ஆர்த்தி இரவு வேலை முடிந்து வந்த போது, சரத் வீட்டிலிருந்து அதிக சத்தம். அவன் கத்,த அவன் அம்மா பதிலுக்கு கத்த என இருவருக்கும் இடையே பெரிய வாக்கு வாதம். அக்கம் பக்கம் வீட்டினர் வெளியே வந்து எட்டி பார்ப்பதும் உள்ளே செல்வதுமாக இருந்தனர். 

சிறிது நேரம் பொறுத்த ஆர்த்தி, பிறகு நேராக சென்று அவர்கள் வீட்டின் அழைப்பு மணியை அடித்தே விட்டாள். 

கோமதி வந்து கதவை திறக்க…. “சரத் இல்லையா?” என்றதும், 

சரத் இருந்த இடத்தில் இருந்தே எட்டி பார்க்க…

“வா உன்கிட்ட பேசணும்.” என்றவள், அவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

இருவரும் படி வழியாகவே கீழே இறங்கி அவர்கள் அபார்ட்மென்ட் விட்டு வெளியே வந்ததும்,

“என்ன பிரச்சனை உனக்கு?” என்றாள் நேரடியாக. 

“அதெல்லாம் சொல்ல முடியாது.” 

“என்னவா வேணா இருக்கட்டும். அப்படியா கத்துவ… உன் அப்பாவை வேற திட்ற… ஆனா அவர் பாவம் பேசக் கூட இல்லை.”

“அவர் ரொம்ப பாவம் தான். உனக்கு ரொம்ப தெரியும் பாரு. எல்லாத்துக்கும் காரணம் அவர்தான்.”

“அவருக்கு குடி பழக்கம். அதனால இருந்த வேலையும் போய் கடனும் வாங்கி வச்சிருக்கார். கடன்காரங்களுக்கு வட்டி கட்டி, வட்டி கட்டியே… என் மொத்த வாழ்க்கையும் முடிஞ்சிடும் போல….”

“இது இப்போ வந்த பிரச்சனை இல்லையே…. முன்னாடியே இருக்கு தானே… இப்போ ஏன் இவ்வளவு டென்ஷன்.”

“என் அக்காகிட்ட கொஞ்சம் பணம் தர சொல்லி கேட்டிருந்தேன். அதுல இருந்து என் அக்கா வீட்டுக்கே வர்றது இல்லை. வீட்டுக்கு வந்தாலும் பெண்ணை கூட்டிட்டு வாசலோட போயிடுறா. இதுக்கு என் அம்மாவும் சப்போர்ட்.”

“நான் மட்டும் ஏன் என் அப்பா வாங்கின கடனை கட்டணும்னு கேட்கிறேன். நானும் என்னை மட்டும் பார்த்திட்டு எங்கையாவது போயிடலாம் தானே…. கடன் வாங்கினவரே கட்டட்டும்.”

“நீ அப்படியெல்லாம் போகமாட்ட….” என்றாள் ஆர்த்தி.

“நான் அவ்வளவு இளிச்சவாயன்னு சொல்றியா?” சரத் கேட்க….

“கடமையையும் பொறுப்பையும் எல்லாராலையும் உதறி தள்ள முடியாது. அதோட உன் அப்பா சொத்து வச்சிருந்தா அதுல எப்படி உனக்கு உரிமை இருக்கோ… அது போலத்தானே கடனுக்கும். நீயும் அந்த கடனுக்கு பொறுப்பு தானே….”

“இதையே தான் நானும் கேட்கிறேன். இப்போ என் அப்பா சொத்து வச்சிருந்தா… என் அக்கா பங்குக்கு வர மாட்டாளா? ஆனா கடனை கட்டுற பொறுப்பு மட்டும் அவளுக்கு இல்லையாம். இத்தனைக்கும் இருந்த ஒன்னிரண்டு சொத்தை வித்து தான் அவளுக்கு கல்யாணம் பண்ணோம். எங்க அப்பா அவளையும் நல்லாதான் படிக்க வச்சார். அதனால தான வேலைக்கும் போறா… அவகிட்ட பணம் கேட்டதே குத்தம்னுன்னு சொன்னா எனக்கு புரியலையே….”

“நீ சொல்றது எல்லாம் சரி டா…. நீ கேட்டதும் தப்பு இல்லை.”

அதுவரையில் உலையாக கொதித்துக் கொண்டிருந்தவன், சற்று தணிந்தான். 

கல்யாணம் ஆகிவிட்ட மகளிடம் பணம் கேட்டது தப்பு என கோமதி சொல்லி இருந்தார். “வெளியே வட்டி கட்டி முடியவில்லை. அதனால் கடனை அடைக்க வேறு வழியில்லாமல் தான் பணம் கேட்டான். அதுவும் திருப்பி தருவதாக சொல்லித்தான் கேட்டான்.

“உங்க அக்காகிட்ட இருந்து வாங்கினா வட்டி இல்லாம கொடுக்கலாம்னு நினைச்சிருப்ப…. சரியா? நான் வேணா பணம் கொடுகட்டா?”

ஆர்த்தி சொன்னதை கேட்டதும் சரத்திற்கு சிரிப்பு தான் வந்தது.

“உன்கிட்ட அவ்வளவு பணம் இருக்கா?”

“ஏன் அப்படி கேட்கிற? நான் ரொம்ப செலவு பண்ணுவேன் தான். ஆனாலும் என்கிட்ட பணம் இருக்கு. நீ இப்போ வாங்கிக்கோ… அப்புறமா திருப்பிக் கொடு.”

“ம்ம்….”

“என்ன பணம் வாங்கிப்ப தானே…”

“நீ கேட்டதே போதும். கடனை வாங்கி நம்ம ரெண்டு பேரோட நட்பை கெடுத்துக்க நான் விரும்பலை. அதனால இதை இதோட விடு.” என்றான்.

“என்கிட்டே பணம் இருக்கு. எப்போ தேவையோ அப்போ வாங்கிக்கோ.” என்றவள், சாப்பிட்டு போகலாமா என்றதும், இருவரும் அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்று இரவு உணவு அருந்தினர்.

“உனக்கு வேற யாரும் ப்ரண்ட்ஸ் இல்லையா?” என ஆர்த்தி உணவருந்தி கொண்டே கேட்க…

“இருந்தாங்க, இது மாதிரி தான். ஒருத்தன் கிட்ட பணம் வாங்கினேன். நானும் கொடுக்க லேட் பண்ணினேன் தான். அவனும் ஒழுங்கா கேட்டு இருக்கலாம். ஒரு மாதிரி பேசிட்டான். அதுல இருந்து யார் கூடவும் ரொம்ப வச்சுக்கிறது இல்ல….”

“நான் எதுக்கும் அசைப்படலை. எனக்கு கடன் இல்லாத வாழ்க்கை வாழனும் அவ்வளவு தான். அதுக்கு எவ்வளவு நாள் ஆகுமுன்னு தான் தெரியலை.”

“ம்ம் புரியுது.” என்றவள், உண்டு முடித்து வீடு வந்த பிறகு, அவளது நண்பனை அழைத்து, “பிரவீன், சரத்துக்கு வேலைக்கு கேட்டிருந்தேனே என்ன ஆச்சு?” என்றதும், 

“மறந்திட்டேன் ஆர்த்தி. இந்த வாரம் கண்டிப்பா ஆபீஸ்ல பேசுறேன்.” என்றான்.

ஈஸ்வரும் ஷ்யமளாவும் ஒரு வாரம் மும்பையிலிருந்து ஊர் எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு நேற்று தான் ஊர் திரும்பி இருந்தனர்.

ஷ்யமளா ஆர்த்திக்கு நிறைய பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். ஆடை ஆபரணங்கள் என்று…. அன்று பார்த்து ஆர்த்தியும் சரத்தும் ஒன்றாக வர… இருவரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்தார். 

இருவருக்கும் உண்ண பலகாரங்கள் கொடுத்தவர், ஆர்த்திக்கு வாங்கி வந்த பொருட்களை எடுத்து வந்து கடை விரித்து, “நீ இதெல்லாம் போடுவ தான…. நீ போடுற மாதிரி தான் வாங்கி இருக்கேன்.” என்றார்.

“நல்லா இருக்கு.” என்றாள் ஆர்த்தி. 

“உங்க பையனுக்கு கூட இவ்வளவு வாங்கி இருக்க மாட்டீங்க போலிருக்கே…” சரத் சொல்ல… 

“அவன் பிடிக்கலைனா தொடவே மாட்டான் டா…. அதனால அவனுக்கு ஒன்னு ரெண்டு தான் வாங்கினோம்.” என்றார்.

“ஸ்வீட்டிக்கு சாப்பாடு கொடுத்திட்டு வரேன்.” என ஆர்த்தி சென்றுவிட….

“ஆர்த்தி மட்டும் என்ன உங்களுக்கு அவ்வளவு ஸ்பெஷல். உங்க பையனுக்கு பார்க்கிறீங்களா என்ன?” சரத் விளையாட்டு போலவே கேட்க, 

“எனக்கு ஓகே தான். ஆனா என் பையனை பத்தி எனக்கு தெரியும்கிறதுனால எனக்கு அப்படி ஒரு ஆசையும் இல்லை. ஆனா உனக்கும் அவளுக்கும் பொருத்தம் நல்லா இருக்கு. நீங்க நிஜமா லவ் பண்ணலையா?” என ஷ்யமளா ஆர்வமாக கேட்க….

“நீங்க என்ன எங்க அம்மாவை மாதிரியே இருக்கீங்க. அவங்களுக்கும் இதே சந்தேகம் தான். ஒரு பையனும் பெண்ணும்  பேசினா காதலா என்ன? அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. ஆர்த்திக்கு நிஜமாவே நல்ல பையனா கிடைக்கட்டும்.”

“நீயும் நல்ல பையன் தான் டா….” என ஷ்யமளா விட்டுக் கொடுக்காமல் சொல்ல…

“வெறும் நல்ல பையனா மட்டும் இருந்து ஒன்னும் பண்ண முடியாது, டப்பு, துட்டு, மணி இருக்கணும்.”

“அப்படி ஆர்த்தி சொன்னாளா… அவ அந்த மாதிரி கிடையாது.”

“ஐயையோ… நீங்க இதை விடமாட்டீங்களா. உங்க பையன்கிட்ட வேணா கேளுங்க.” என சரத் சொல்லும் போதே ஆர்த்தி வந்து விட்டாள். 

“ஆன்ட்டிக்கு இப்போ உனக்கு கல்யாணம் பண்ணியே ஆகணுமாம் நீயே கேளு.” என்றுவிட்டு சரத் சென்றுவிட்டான்.

ஆர்த்தி ஷ்யமளாவை பார்க்க, “சும்மா பேசிட்டு இருந்தேன்.” என்றவர், அவளுக்கு வாங்கி வந்த பொருட்களை கொடுக்க…. ஆர்த்தியும் மறுக்காமல் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாள்.

வீட்டிற்கு வந்தும் ஆர்த்திக்கு ஒரே யோசனை தான். கடந்த முறை ஊருக்கு சென்றிருந்த போது, அவளது அப்பா சிவராமனும் அதைதான் சொல்லி இருந்தார். 

“உனக்கு பிடிச்ச யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ டா…. உனக்கும் வயசாகுது அப்பாவுக்கும் வயசாகுது இல்ல…” என சொல்லி இருந்தார்.

அப்பாவிடம் நீங்களே பாருங்கப்பா என சொல்லிவிடலாமா என்று கூட நினைத்திருந்தாள். ஆனால் அப்படி சொல்லிய பிறகு வருந்தக் கூடாது. அதுதான் எதுவும் சொல்லாமல் வந்திருந்தாள். 

ஒரே தலை வலியாக இருந்தது. 

அபார்ட்மென்டில் அவர்கள் தளத்திலேயே இருந்த ஒரு வீட்டில் விசேஷம். அதனால் ஆர்த்தியையும் அழைத்து இருந்தனர். அவள் ஷ்யமளாவோடு சென்றிருந்தாள். 

மாடியில் இருந்த பொதுவான ஹாலில் தான் உணவு பரிமாறினர். இவர்கள் உண்ணும் போது பிருந்தாவையும் அவரோடு வந்தவரையும் ஷ்யமளாவும் மற்றவர்களும் அவர்களையே குறுகுறுவென பார்க்க… ஏன் அவர்களை மட்டும் இப்படி பார்க்கிறார்கள் என ஆர்த்திக்கு புரியவில்லை. பிறகே அவர்கள் லிவிங் டு கெதரில் இருப்பது பற்றி ஷ்யாமளா சொன்னார். 

எல்லோரும் உண்டு முடித்து கிளம்ப, சிலர் மட்டும் இருந்தனர். அப்போது அந்த பெண்ணை ஏன் கூப்பிடீங்க என வத்சலா கடிந்துகொள்ள… எல்லாரையும் கூப்டிட்டு அவங்களை மட்டும் விட வேண்டாம்னு என் பையன் சொன்னான் என்றார் அந்த வீட்டின் பெண்மணி.

“இந்த காலத்து பசங்களுக்கு எல்லாமே சாதாரணம் தான்.” என்ற வத்சலா ஆர்த்தியை ஒரு மாதிரி பார்க்க…. 

“நீ இந்த காலத்து ஆளு. அதனால உன்னை கேட்கிறேன். நீ என்ன நினைக்கிற இதை பத்தி.” என ஷ்யமளா கேட்க….

“எனக்கு நினைக்க ஒன்னும் இல்லை. அவங்க ரெண்டு பேர்குள்ள எதோ நம்பிக்கை இருக்கிறதுனால தான் இப்படி சேர்ந்து இருக்க நினைச்சிருக்கலாம். கல்யாணத்தோட அடிப்படையும் நம்பிக்கை தான…. அது கல்யாணம் பண்ணாமலும் வரலாம்.”

“அப்படியே ஒருத்தரோட இருந்திட்டா தான் பரவாயில்லையே… மாறிட்டே இருந்தா அதுக்கு பேர் என்ன? இதை பார்த்து இன்னும் நாலு பேர் கெட்டு போறதுக்கா?” என வத்சலா மீண்டும் பொரிய….

“தப்பா போறதையும் அந்த நாலு பேர் பார்த்திட்டு தான இருப்பாங்க.” என ஆர்த்தி நறுக்கென திருப்பி கேட்டவள், 

“இப்போ சில பேர் குழந்தை பெத்துக்க மாட்டோம்னு கூட சொல்லிட்டு இருக்காங்க. அதை பார்த்து சில பேர் சரின்னு கூட நினைக்கலாம். ஆனா இதெல்லாம் மாறிட்டே இருக்க விஷயம். ஒத்து வரலைன்னு தெரிஞ்சா மாத்திக்க தான் போறாங்க.” 

“அதோட இது தனிப்பட்ட நபர்களோட விருப்பம். தப்பா போனா பாதிக்கப்படப் போறதும் அவங்க தான். அதனால இதை பார்த்து எல்லோரும் இப்படி ஆகிடுவாங்கன்னு எல்லாம் நினைக்க வேண்டாம். இது என்னோட கருத்து.” 

“ஆர்த்தி சொல்றது சரிதான். எனக்கே கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் தான் குழந்தை இல்லை. அதுக்குள்ள என்னை கேட்காதவங்க இல்லை. எனக்கு குழந்தை பிறக்காதோன்னு எனக்கே பயம் வர வச்சிட்டாங்க. ஆனா இப்போ பாரு. சில பேர் குழந்தையே வேண்டாம். அது ஒரு பொறுப்பு, கடமைன்னு நினைக்கிறாங்க. நம்ம வாழ்க்கையை நம்ம வாழணும்னு நினைக்கிறாங்க. குழந்தை அதுக்கு தடையா இருக்குமுன்னு நினைக்கிறாங்க.” என்றார் ரேவதி. 

“இந்த வயசுக்குள்ள கல்யாணம் பண்ணனும், கல்யாணம் பண்ணிட்டா உடனே குழந்தை பெத்துக்கணும் இப்படி நிறைய அழுத்தம் இந்த சமுகத்துல இருந்திருக்கு. ஆனா அது இனி வர்ற காலங்கள்ல கண்டிப்பா மாறும்.”

“முன்னாடி மாதிரி எப்போ கல்யாணம்? எப்போ குழந்தைன்னு? எல்லாம் யாரையும் கேட்க முடியாது.” ஆர்த்தி சொல்ல…

“உன்னை யாரும் அப்படி கேட்க கூடாதுன்னு சொல்றியா?” என கோமதி கேட்க,

இப்படி கேட்டால் என்ன சொல்வது. “நான் கிளம்புறேன்.” என்றவள் வெளியில் வர… அங்கே சரத் நின்றிருந்தான்.

“என்ன மூஞ்சே ஒரு மாதிரி இருக்கு? என்ன ஆச்சு?” என்றதும்,

“கொஞ்ச நேரம் எதிலேயோ மாட்டிகிட்ட மாதிரி ஒரு பீலிங் டா…. முதல்ல இங்க இருந்து போகலாம் வா…” என்றவள், அவனையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றாள். 

“ஒருத்தர் அப்படி இருந்தா எல்லோரும் அப்படித்தான் இருப்பாங்களா என்ன?” என்றவள், மேலும் விவரம் சொல்ல…

“விடு விடு…. இதெல்லாம் தட்டி விட்டுட்டு போயிட்டே இருக்கணும். எதாவது சொன்னா உடனே எங்க காலமுன்னு ஆரம்பிச்சிடுவாங்க. இவங்க காலத்துல எல்லாம் ஒழுங்கா இருந்த மாதிரி. அப்போ எல்லாம் ஜெயிலே கிடையாது தெரியுமா… எல்லாமே போதி மரம் தான்.” என்றதும், ஆர்த்திக்கு சிரிப்பு வந்துவிட்டது. 

“ஹே அவங்களுக்கும் எல்லாம் புரிஞ்சு தான் இருக்கு. சில பேர் தான் அப்படி இருக்காங்க.”

“அதுல எங்க அம்மாவும் ஒரு ஆள் அப்படித்தானே. எங்க அம்மா ஹா ஊன்னா நாங்க எல்லாம் எங்க அப்பா அம்மா பேச்சை எப்படி கேட்போம் தெரியுமான்னு ஆரம்பிச்சிடுவாங்க. அவங்க அப்பா அம்மா இல்லைன்னு தைரியம்.” என்றவன், மேலும் மேலும் கிண்டலடித்து பேச…. ஆர்த்திக்கு சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது.

“இன்னைக்கு இதோட போதும் டா… ஸ்வீட்டி ரொம்ப நேரமா தனியா இருக்கு. நான் போகணும்.” என்றாள்.

அருணுக்கு சில நாட்களாகவே உறுத்திக் கொண்டே இருந்தது. அம்மா முன்பு மாதிரி அழைப்பது இல்லை. இவனே அழைத்தாலும், எப்படி இருக்க? சாப்பிட்டியா? என கேட்டு விட்டு, பத்திரமா இரு என  வைத்து விடுவார். 

இது நம்ம அம்மா இல்லையே… ஒரு புலம்பலும் காணோமே என நினைத்தவன், ஒருவேளை அப்பாவுக்கு உடம்பு எதுவும் சரியில்லையோ… தன்னிடம் எதையாவது மறைக்கிறாரோ என நினைத்தவன், நாமும் ஊருக்கு சென்று நாட்கள் ஆகிவிட்டது என ஊருக்கு செல்லும் முடிவை எடுத்தான்.