Advertisement

ஜெய் லேசாக உறங்குவதும், அவ்வபோது எழுந்து ஸ்ரீகாவின் நெற்றியை, கழுத்தைத் தொட்டுப் பார்ப்பதுமாக இருக்க, நடு இரவில் காய்ச்சல் லேசாக குறைந்திருந்தது.

 

                      ஜெய் அப்போதுதான் சற்றே நிம்மதியாக உணர்ந்தான். “டென்சன் பண்ணிட்டா..” என்று பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன், அறையிலிருந்த தொலைபேசியில் சூடாக ஒரு காஃபிக்கு சொல்லிவிட்டு, அவன் ஓய்வறைக்கு சென்று வர, அதற்குள் காஃபி வந்திருந்தது.

 

                     சோஃபாவில் அமர்ந்து காஃபியை பருகிக் கொண்டே அவளை பார்வையிட்டவன் தன் அலைபேசியை கையில் எடுக்க, கைகள் தானாக வாட்சப்பை ஆன் செய்தது. இவன் ஆன்லைனில் இருக்கும் நேரங்கள் மற்றவர்களுக்கும் காட்டாதபடி கைபேசியின் அமைப்புகளை மாற்றி வைத்திருக்க, நேரத்தைப் பற்றிய கவலையில்லை.

 

                     இவன் வந்திருந்த வாழ்த்துக்களையும், குறுஞ்சேதிகளையும் ஒவ்வொன்றாக படித்து கொண்டிருக்க, அறிவன் ஆன்லைனில் இருப்பதாக காட்டியது அலைபேசி. “தூங்காம என்ன பண்றான்..” என்று நினைத்தவன் எதையும் யோசிக்காமல் அவனிடம் கேட்டும் வைத்திருந்தான்.

 

                    “தூங்கலையா அறிவா..” என்று ஜெய் செய்தி அனுப்பிய மறுநிமிடம் அவனுக்கு அழைத்துவிட்டான் அறிவன். ஜெய் அழைப்பை ஏற்க “ஸ்ரீகா எப்படி இருக்கா மாமா… ஓகேவா..” என்று அவன் கேள்வியெழுப்ப

 

                     “ரொம்ப பன்றிங்கடா நீங்க..” என்று வெளிப்படையாக அலுத்துக் கொண்டான் மாமன்.

 

                     “என்ன மாமா.. “என்று அறிவனின் குரல் லேசாக குன்றிவிட

                  

                     “எங்கே இருக்க நீ..” என்றான் ஜெய்.

 

                      “இங்கே ஹோட்டல்ல தான் மாமா இருக்கோம்… நைட் லேட்டாகிடுச்சு.. வீட்டுக்கு போறது சேப் இல்ல ன்னு இங்கேயே படுத்துட்டோம்..” என்ற அவனின் பதிலில்

 

                       “ஏன்… ரோட்ல யாரும் கையை பிடிச்சு இழுப்பாங்களா உன்னை..” என்று ஜெய் சிரிக்காமல் கேட்க

 

                      “யோவ் மாமா..” என்று தன் வழக்கமான அழைப்பிற்கு தாவி இருந்தான் அறிவன்.

 

                        “பின்ன… சொல்றான் பாரு.. கம்பி கட்ற கதையை…”என்று ஜெய் மேலும் கலாய்க்க

 

                        “யோவ் என் தங்கச்சி எப்படிய்யா இருக்கா…” என்று அறிவன் பேச்சை மாற்ற

 

                        “அவளுக்கென்ன.. நல்லா தூங்கிட்டு இருக்கா..” என்று ஜெய் பெருமூச்சு விட

 

                         “என்ன மாமா.. ரொம்ப மூச்சு வாங்குது.. உங்களுக்கும் ஒரு டாக்டரைப் பார்ப்போமா..” என்று அறிவன் கேலி செய்ய

 

                         “டாக்டரைப் பார்க்கிறதுக்கு முன்னாடி உன்னை ரெண்டு நிமிஷம் பார்க்கணுமே.. ரூமுக்கு வர்றியா..” என்று ஜெய் நக்கலாக கேட்க

 

                         “நான் தூங்கிட்டு இருக்கேன் மாமா..” என்றான் அறிவன்..

 

                        “ஏன்டா.. இங்கே ஒருத்தன் தூக்கம் வராம புலம்பிட்டு இருக்கேன்.. நீ தூங்கிட்டு இருக்கேன் ன்னு சொல்ற.. ” என்று ஜெய் அதிர்ச்சியை காட்ட

 

                          “உங்களுக்கு பர்ஸ்ட் நைட்.. நீங்க தூங்காம இருப்பிங்க.. நான் ஏன் தூங்காம இருக்கணும்..” என்று சிரித்தான் அறிவன்.

 

                           “டேய்..” என்று ஜெய் மிரட்ட

                             “ஹாப்பி பர்ஸ்ட் நைட் மாமா..” என்று மீண்டும் அவனை வெறுப்பேற்றி அழைப்பைத் துண்டித்தான் அறிவன்.

 

                              அவன் பேசி முடித்து திரும்ப, ஸ்ரீகா லேசாக அசைந்து கொண்டிருந்தாள் படுக்கையில். அவள் விழிப்பது தெரியவும், ஜெய் வரவேற்புக்கு அழைத்து, சூடான பால் கொண்டுவரும்படி கூறி வைக்க, மெல்ல உறக்கம் களைந்து எழுந்து அமர்ந்தது அவன் ஓவியம்.

 

                    அறையின் மெல்லிய வெளிச்சத்திற்கு கண்களை பழக்கி கொள்பவள் போல், கையால் கண்களை தேய்த்துக் கொண்டு, கட்டிலில் அவள் அருகில் இருந்த காலி இடத்தைப் பார்த்தாள் முதலில். பின் அறையைச் சுற்றி அவள் பார்வையை சுழற்ற, சற்றே முன்னால் சென்று, பின் மீண்டும் ஜெய் அமர்ந்திருந்த அந்த ஒற்றை சோஃபாவை தழுவிக் கொண்டது அவள் பார்வை.

 

                     ஜெய் அமைதியாக அவளைப் பார்த்திருக்க, இன்னும் உறக்கம் தெளியாதவளாக கைக்கொண்டு வாயை மறைத்து ஒரு கொட்டாவியை வெளியேற்றியவள் மீண்டும் நிம்மதியாக படுத்து கொண்டாள். ஜெய்க்கு அவளின் செயலில் புன்னகை பூக்க, சட்டென்று எழுந்தவன் சற்றே வேகத்துடன் அவளை நெருங்கி அவள் கன்னத்தை வலிக்கும்படி கிள்ளி வைத்தான்..

 

                        “ஆஆ…” என்று  அவன் கையை தட்டி விட்டவள் கன்னத்தை தேய்த்துவிட, அவள் அருகில் அமர்ந்தான் ஜெய்.

 

                       “தூக்கம் போச்சா..” என ஜெய் வினவ

 

                        “ம்ம்.. கொஞ்சமா போச்சு.. “என்று மீண்டும் அவள் ஜெய்யின் தோள் சாய, இடையோடு கைகொடுத்து அவளை தன்னோடு அணைத்து கொண்டான் ஜெய்.

 

                         ஸ்ரீகாவுக்கு அப்போதுதான் இடையில் உறுத்திக் கொண்டிருந்த ஒட்டியாணத்தின் நினைவு வர, சட்டென அவனிடம் இருந்து விலகினாள் அவள். தன் உடையை கழுத்து, கையை தடவிப் பார்த்து, அவள் ஜெய்யைப் பார்க்க, “என்ன..” என்று புருவம் உயர்த்தினான் அவன்.

 

                         என்ன கேட்பது என்று புரியாமல் அவள் விழிக்க, அவள் தாடையைப் பற்றி அவள் முகத்தை திருப்பி, கட்டிலுக்கு அருகில் இருந்த டீபாயை காட்டினான் அவன். அவளின் உடைகள், நகைகள் மொத்தமும் அதன்மீது அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க, மேலுதட்டில் வியர்த்தது பெண்ணுக்கு.

 

                         மெல்ல திரும்பியவள் “ராம்..” என்று திக்க, அவளை மீண்டும் அருகில் இழுத்து இடையோடு கட்டிக் கொண்டான் அவன். ஸ்ரீகா இன்னுமே விழித்தபடி இருக்க, அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் “என்னடா.. என்ன கேட்கணும்..” என்று ஊக்கினான்..

 

                        “நீங்க சேஞ்ச் பண்ணிங்களா…” என்று அவள் மெல்லிய குரலில் கேட்க

 

                       “எவிடென்ஸ் ஏதாவது வேணுமா..” என்றான் அவன்.

 

                        “ராம்..” என்று அவள் அவள் வாயைப் பிளக்க

 

                         திறந்திருந்த அவள் வாயின்மீது தன் இதழ்களை புதைத்து, புரண்டு எழுந்தவன் “கொல்றடி நீ..” என்றான்  தாபத்துடன்.

 

                          ஸ்ரீகா சிவந்த முகத்துடன் அவனை ஏறிட, “எவிடென்ஸ் வேண்டாமா..” என்றான்  அமைச்சன்.

 

                         ஸ்ரீகா புரியாதவளாக “என்ன.. என்ன எவிடென்ஸ்..” என்று கேட்டுவிட, அவளை இழுத்து மடிமீது அமர்த்திக் கொண்டான் ஜெய். அவனின் நெருக்கத்தில் ஸ்ரீகாவுக்கு வார்த்தைகள் தடைபட, பேச்சு வரவில்லை. அவள் நிலை உணர்ந்தவன் “நிறைய நிறைய பேசுமே.. இந்த செப்பு வாய்..இன்னிக்கு என்ன..” என்று மீண்டும் அவள் வாயை சோதித்து, அங்கொன்றும், இங்கொன்றுமாக சில முத்தங்கள் பதித்து விலக, மூச்சு வாந்தியது அவளுக்கு.

 

                          ஜெய் மீண்டும் ஏதோ பேச வர, அதற்குள் அறையில் இருந்த அழைப்புமணி ஒலித்தது. “நமக்கு மட்டும் சரியா நடக்குது பாரேன்..” என்று ஜெய் அலுத்துக் கொண்டே எழுந்து செல்ல, பால் வந்திருந்தது.

 

                            ஸ்ரீகா இன்னும் அசையாமல் அவன் விட்டுச் சென்ற இடத்திலேயே அமர்ந்திருக்க, நிதானமாக பாலை டேபிள் மீது வைத்து மீண்டும் அவள் இடையில் கைகொடுத்து அவளை தூக்கி தன் மடிமீது இருத்திக் கொண்டான்.

 

                           ஸ்ரீ இன்னும் அமைதியாக இருக்க, “எவிடென்ஸ் வேண்டாமா..” என்று மீண்டும் அவன் தொடர

 

                          வழக்கமான ஸ்ரீகா வெளிப்பட்டாள். “என்ன எவிடென்ஸ்..சும்மா அதையே சொல்றிங்க..” என்று அவள் குரல் லேசாக உயர

 

                            அவள் வலது தோள்பட்டையில் இரவு உடையின் லேஸ் மீது அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தான் கள்வன். “இங்கே ஒன்னு..” என்றது அவன் குரல்.

 

                           அடுத்து அவளின் முதுகின் இறக்கத்தில் முத்தம் வைத்தவன் “இரண்டு…”என்று கிசுகிசுக்க, ஸ்ரீகாவுக்கு மூச்சடைத்தது.

 

                             அங்கிருந்து முகம் நிமிர்த்தியவன்  அவளை தன்பக்கம் திருப்பி, மெல்ல அவள் கழுத்துக்கு கீழே தன் பார்வையை செலுத்த, ஸ்ரீகா என்ன ஏதென்று உணரும்முன்பே நெருங்கியிருந்தான் அவளை. சட்டென தோன்றிய வெட்கத்தில் அவனை தள்ளி விட்டவள், அவன் மடியில் இருந்து எழுந்து கொள்ள, அவளை இழுத்துக் கொண்டே கட்டிலில் விழுந்திருந்தான் ஜெய்.

 

                              அவன் நெஞ்சின் மீது வந்து விழுந்தவளை அழுத்தமாக அணைத்துக் கொண்டான் ஜெய். மீண்டும் “எவிடென்ஸ் வேணுமா…” என்றவன் கைகள் அவள் உடலில் சுதந்திரமாக உலா வர, “ராம்..” என்று அவன் வாயைப் பொத்தினாள் ஸ்ரீகா.

 

                              ஜெய் அவளை கேலியாகப் பார்க்க, “நான் தூங்கினா இப்படி பண்ணுவிங்களா..” என்று ஸ்ரீகா முறைத்தாள்.

                               அவள் கைகளில் முத்தமிட்டு, தன் வாயின் மீதிருந்து விலக்கி “எப்படியும் நீ என்னை பட்டினி போடா மாட்ட ன்னு ஒரு நம்பிக்கை ஸ்ரீகுட்டி.. அதான் முன்னெச்சரிக்கையா நான் தயாரா இருந்தேன்… இப்போ பாரு.. நீ தூங்கி எழுந்துட்ட.. இப்போ அதெல்லாம் கழட்டிட்டு இருக்க முடியுமா.. வேஸ்ட் ஆப் டைம் தானே ஸ்ரீகுட்டி…” என்று மேலும் பேசினான் அவன்.

 

                               அவன் பேச்சில் வெட்கம் வந்தாலும், “கண்டிப்பா நீங்க இன்னைக்கு பட்டினிதான்.. போங்க..” என்று அவனை விலக்கி ஸ்ரீகா எழுந்து கொள்ள முற்பட, சட்டென்று புரண்டு அவளை தனக்கு கீழே கொண்டு வந்திருந்தான் ஜெய்.

 

                           ஸ்ரீ பயந்தவளாக முழிக்க, ஜெய் கண்ணடித்து வைத்ததில் கடுப்பாகி அவன் கன்னத்தில் ஒன்று வைக்க, மறுகன்னத்தையும் காட்டினான் அவன்.

 

                            “அடிக்கிறேன் ராம்..”

 

                             “இதுக்கெல்லாம் நான் சேர்த்து வசூல் பண்ணிடறேன் ஸ்ரீகுட்டி..” என்றான் மீண்டும்.

 

                         “அதென்ன புதுசா ஸ்ரீகுட்டி..”

 

                          “அப்படித்தானே உன் வீட்ல கொஞ்சுறாங்க உன்னை…” என்றான் கடுப்பாக

 

                          “அதுல உங்களுக்கு என்ன இவ்ளோ வருத்தம்..”

 

                          “அதனால தானே என்கூட வர்றது இவ்ளோ கஷ்டமா இருக்கு உனக்கு..” என்று சண்டைக்கு நின்றான் அவன்.

 

                          “அப்படி யார் சொன்னது.. நீங்க இல்லாமலும் என்னால இருக்க முடியாது தான். “

 

                          “நாலு வருஷம் இருந்தடி..” என்று அவள் கையை அழுத்தமாக பற்றியவன் விரல்களை நெறிக்க

 

                          “கை வலிக்குது…” என்றாள்.

 

                           “வலிக்கட்டும்…” என்று ஜெய் முறைக்க

 

                           “திரும்பவும் அழுவேன்.. அப்புறம் திரும்பவும் டாக்டரை கூப்பிடனும்.. டைம் வேஸ்ட்..” என்றாள் ஸ்ரீ.

                                           அவளை முறைத்தபடி, அவள் இரு கைகளையும் மெத்தையோடு பிடித்து அழுத்தியவன் அவள் முகத்தை நெருங்க, அசராமல் அவனைப் பார்த்திருந்தாள் ஸ்ரீகா.

 

             அவளின் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்தவன் “எனக்கு என் எவிடென்ஸ் எல்லாம் சரியா இருக்கா ன்னு செக் பண்ணனும்..” என்று கூறிக் கொண்டே மீண்டும் அவள் உடையில் கையை வைக்க, அவள் கையைத் தட்டி விடவும், அதையே சாக்கிட்டு முழுதாக அவள் மீது படர்ந்து கொண்டான் அவன்.

 

                 அவளின் வளைவு, நெளிவுகளில் அழகாக பயணித்து, தன் ஆதாரங்களை மீண்டும் ஒருமுறை மீட்டெடுத்து சரிபார்த்து, தன் நாட்டியக்காரியை சிரிக்க வைத்து, சிணுங்க வைத்து, சிவக்க வைத்து வேடிக்கைப் பார்த்தவன் ஓய்ந்த நேரம் நிலா ஓடியிருந்தது.

Advertisement