பூத்தது ஆனந்த முல்லை -8

அத்தியாயம் -8

முன் அறிவிப்பு இல்லாமல் அப்பா மற்றும் மகனுடன் சென்னைக்கு வந்து விட்டாள் தேன்முல்லை. விடியற்காலை என்பதால் ஆனந்த் வீட்டில்தான் இருப்பான் என நினைத்திருந்தாள். ஆனால் வீடு  வெளிப்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது

மாப்பிள்ளைக்கு அழைத்து விவரம் கேட்டார் தங்கப்பன். அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவதாக சொன்னான்

எங்கேயாம்ப்பா இந்த நேரத்துல?” எனக் கேட்டாள் தேன்

உன்னை அழைச்சிட்டு வந்திருக்கேன்னு சொல்லவுமே அவர் பர பரன்னு ஆகிட்டார்மா. நீ வரவே போறதில்லைனு பயத்துல இருந்திருப்பார் போல. நானும் அவர்கிட்ட மேல வேற ஏதும் கேட்டுக்கலமா, முதல்ல வீட்டுக்கு வரட்டுமேஎன அவர் சொல்ல, அவளும் சரியென விட்டாள்

சரியாக அரை மணி நேரத்தில் எல்லாம் வீடு வந்து விட்டான் ஆனந்த். இன்னும் அவனது பரபரப்பு குறையவில்லை

வாங்க மாமாஎன உற்சாகம் பொங்க அழைத்தவன் உறங்கிக் கொண்டிருக்கும் மகனை தோளில் போட்டுக் கொண்டு நின்றிருந்த மனைவியை விழிகளால் தழுவினான்

அவளோ அவனை பாராமல், “வீட்டை திறக்க சொல்லுங்க ப்பா, எவ்ளோ நேரம் வெளியிலேயே வெயிட் பண்றது?” என அப்பாவிடம் சொன்னாள்

வேகமாக வீட்டை திறந்து விட்டவன், மகனை தூக்க முற்பட, கணவனை தொட்டு விடாமல் வெகு ஜாக்கிரதையாக குழந்தையை கொடுத்தாள். மனைவியின் இந்த செயலில் அவனது முகம் ஒரு நொடி சுணங்கி பின் சரியானது.  

பார்த்திருந்தாலும் கண்டு கொள்ளாதவர் போல, இங்கு வந்தால் தான் தங்கும் அறைக்கு சென்று விட்டார் தங்கப்பன்

எப்படி இருக்க தேனு, ஆள் மெலிஞ்ச மாதிரி இருக்கியே? வேற தொந்தரவெல்லாம் இல்லையே, டாக்டர்கிட்ட காட்டிகிட்டியா?” என அவனிடமிருந்து அடுக்கடுக்கான அக்கறையான விசாரிப்புகள்

ம்ம்…” என்றவள் வீட்டை கண்களால் சுற்றினாள்

அவள் இல்லாத வீடு என்பதை மூலைக்கு மூலை படிந்திருந்த ஒட்டடையும் தளத்தின் பிசு பிசுப்பும் வார்த்தைகள் இல்லாமலே புகார் செய்தி வாசித்தது.  

மனைவியின் பார்வையை படித்தவன், “நீ ரெஸ்ட் எடு, அரை மணிக்குள்ள எல்லாம் க்ளீன் பண்ணிடுறேன்என்றான்

பயணக் களைப்பில் அவளாலும் உடனே சுத்தம் செய்ய முடியாது. வீட்டை இப்படி போட்டு வைத்திருக்கிறானே என கோவம் வேறு. மகனை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்று விட்டாள்

படுத்த பின்புதான் எங்கு சென்றிருந்தார் என கேட்கவே இல்லையே என நினைத்துக் கொண்டாள். இத்தனை நாட்கள் ஒரு வித மனப் போராட்டத்தில் இருந்தவளுக்கு மீண்டும் இங்கு வந்து விடவும் கவலைகளை தாண்டிய நிம்மதி ஏற்பட, மகனை அணைத்துக் கொண்டு உறங்கி விட்டாள்

அவன் வீட்டை சுத்தம் செய்து முடிக்கவும் தேன் விழிக்கவும் சரியாக இருந்தது. சமையலறை வந்து பார்த்தாள். குக்கரில் சாதம் இருக்க தண்ணீர் ஊற்றி வைத்திருந்தான். மளிகை சாமான்கள் வைக்கும் டப்பாக்கள் அத்தனையும் காலியாக இருந்தன

குளிர் சாதனப் பெட்டியில் என்ன இருக்கிறது என பார்க்க, ஒரு காய் கூட இல்லை. ஒரே ஒரு பிரட் பாக்கெட் மட்டும் பிரிக்கப் பட்டு இருந்தது. கையில் எடுத்து காலாவதி தேதியை பார்க்க, அது நேற்றோடே முடிந்திருந்தது

கணவன் பக்கமாக திரும்ப அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் நீண்ட மூச்சோடு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்

எதையும் அவன் பகிராமலே ஏதோ அவளுக்கு புரிய, அவளின் கண்கள் கலங்கி விட்டன. பிரட் பாக்கெட்டை குப்பைத் தொட்டியில் போட்டவள் அறைக்கு சென்று விட்டாள்

அவனும் அவளை பின் தொடர்ந்து சென்றான். “என் ஒருத்தனுக்கு என்ன தேவைன்னுதான் எதுவும் வாங்கி வச்சுக்கல, நீ வரப் போறதும் தெரியாதே, இல்லைனா…” என்றவன் அவளின் சுள் என்ற பார்வையில் வாயை மூடிக் கொண்டான்

தன்னிடமிருந்த பணம் எடுத்து வந்து அவன் முன் நீட்டினாள்

வாங்காமல், “என்ன தேனு?” என்றான்

முதல்ல போய் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான் காய் எல்லாம் வாங்கிட்டு வாங்க. வீட்டுக்கு இந்த மாச வாடகை கொடுத்தாச்சா?” எனக் கேட்டாள்

ரெண்டு மாசம் கழிச்சு கொடுத்தா போதும், ஓனர்கிட்ட பேசிட்டேன்என்றான்

மகனது பெயரில் போட்டு வைத்திருந்த வைப்பு நிதியை ஆன்லைன் மூலமாகவே திரும்ப பெற்றிருந்தாள். தன் அலைபேசியை அவனிடம் கொடுத்தவள், “என் அக்கவுண்ட்ல பணம் இருக்கு, வாடகைய கொடுத்திட்டு, உங்க அக்கவுண்ட்க்கு மாத்திக்கோங்கஎன்றாள்

வேணாம் தேனு, நீ வச்சுக்க, உன் நகையவே…” என்றவனை முடிக்க விடாமல், “இதுவும் உங்க பணம்தான். இனியாவது நான் சொல்றத கேளுங்கஎன்றாள்

அரை மனதாக தலையாட்டினான். அவள் என்னென்ன வாங்க வேண்டும் என லிஸ்ட் போட்டுத் தரவும் கடைக்கு கிளம்பினான்

அவன் வெளியேறும் தருவாயில், “காலங் காத்தால எங்க போயிட்டீங்க?” எனக் கேட்டாள்

வேலைக்கு தேனு. இப்பதான் நாலு நாளா ஒரு பி பி சென்டர்ல வேலைக்கு போறேன்என்றான்

எடுத்த உடனே நைட் டியூட்டி போட்டுட்டாங்களா?”

அங்க எல்லா நாளுமே நைட் ஷிஃப்ட்தான்என சொல்லி வெளியேறி விட்டான்

தேனுக்கு என்ன நினைப்பது என்றே தெரியவில்லை. நல்ல நிறுவனத்தில் நல்ல பதவியில் பணி புரிந்தவன். வேலையில் பளு இருப்பதாக சொல்லியிருக்கிறானே தவிர இது சிரமம் அது சிரமம் என ஏதும் அவன் சொன்னதாக நினைவில்லை. அவளை பொறுத்தவரை கணவன் வேலையில் கெட்டிக்காரன்தான்

இப்போது படிப்புக்கும் இத்தனை வருட அனுபவத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு வேலை. கவலையாக இருந்தாலும் எப்படியோ வேலையே இல்லாமல் இருப்பதற்கு இது தேவலாம்தானே என நினைத்துக் கொண்டாள்

விரைவிலேயே தான் ஒரு வேலையை தேடிக் கொண்டு கணவனை இந்த வேலையை விட்டு விடச் சொல்லி அவன் தகுதிக்கேற்ப வேறு வேலை தேடிக் கொள்ள சொல்ல வேண்டுமெனவும் நினைத்துக்கொண்டாள்

தங்கப்பன் உறங்கவில்லை என்ற போதும் மகளாக கூப்பிடும் வரை வெளியே செல்லக் கூடாது என்ற முடிவோடு குளித்து தயாராகி விட்ட போதும் அறையிலேயே இருந்தார். பிரிவுக்கு பின் சகஜமாக அவர்கள் பழகிக் கொள்ள, அவர்களுக்கு மட்டுமேயான தனிமை அவசியம் எனக் கருதியே அப்படி செய்தார்

தேனும் தன் அப்பா களைப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறார், நன்றாக ஓய்வெடுக்கட்டும் என விட்டு விட்டாள்

ஆனந்த் கடையிலிருந்து வரவுமே, “நான் சமைச்சிட்டு கூப்பிடுறேன், நீங்க போய் தூங்குங்கஎன்றாள்

அவன் போகாமல அவளுடனே நின்று கொண்டான்

போங்கன்னு சொன்னேன்என்றாள்

கொஞ்சம் தயக்கத்தோடு அவளை நெருங்கியவன் இன்னும் தயக்கமாக அவளை பார்த்தான். “என்ன?” என அவள் சலிப்பாக கேட்டாள்

அவளை அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பில் பொருந்திப் போய் நிற்க முடியவில்லை. சற்றே அசௌகர்யமாகத்தான் உணர்ந்தாள்

திரும்ப வந்ததுக்கு தேங்க்ஸ் தேனுஎன கமறிப் போன குரலில் சொன்னான்

அவனது அணைப்பு இறுகியும் கூட அவளது கைகள் இன்னும் அவனை அணைத்துக் கொள்ளவில்லை. அவனுடன் அவளால் ஒன்றவே முடியவில்லை. திருமண வாழ்வில் அனுபவித்து வந்த ஏமாற்றங்களும் அடைந்த அதிருப்திகளும் வரிசையாக நினைவுக்கு வந்தன

கூடவே இருந்த வரைக்கும் எதுவும் தெரியலை, நீ என் கூட இல்லைங்கவும்வேலை போனத கூட ஏத்துக்கிட்டேன் தேனு, எப்படியும் வேற தேடிடலாம்னு நம்பிக்கை இருந்தது, நீநீதான் ரொம்ப பயம் காட்டிட்டஎன சொல்லி அவளிடமிருந்து விலகினான்

இப்போதுதான் கண் தெரிந்தேனா என அவனை கடியவும் முடியவில்லை, பழையதை பேசி அவனை நோகடிக்கவும் மனம் வரவில்லை. இந்தளவில் அவன் மனம் திறந்து சொன்னதே பெரிய விஷயம் என்பதும் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது

போங்க, தூங்குங்கஎன சொல்லி, அவனை விட்டு அகன்று சென்றாள்

தேன் வந்ததே போதும், மெல்ல மெல்ல உறவில் விழுந்த விரிசலும் சரியாகி விடும் என்ற நம்பிக்கையோடு பழைய சாதத்தை வேறு பாத்திரத்துக்கு மாற்றி உணவு மேசைக்கு வந்தான்

அங்கு வந்தவள், “நான்தான் சமைக்கிறேன்னு சொன்னேனே?” எனக் கேட்டாள்

அது நீங்க சாப்பிடுங்க, இது வேஸ்ட் ஆகிடும். மார்னிங் சாப்பிடதான் நேத்து நைட்டே ரைஸ் வச்சு தண்ணி ஊத்திட்டு போனேன்என்றான்

இந்த மூன்று வருட வாழ்க்கையில் இப்படி பழையது சாப்பிட்டு அவள் கண்டதே இல்லை. அவன் வீட்டிலும் இப்படி பழக்கம் இல்லை. ஆகவே அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்

காலைல வந்து சமைக்க டயர்டா இருக்கும், அதை விட பெருசா என்ன சமைக்க வரும் எனக்கு? காஞ்சு போன பிரெட்க்கு இது அமிர்தமா இருக்கு. சென்னை வெயிலுக்கு இது நல்லாதான் இருக்கு. நாளையிலேருந்து நீ கொடுக்கிறதே சாப்பிட்டிக்குறேன்என்றவன் சாப்பிடுவதை தொடர்ந்தான்

வாடகைப் பணத்தை ஓனருக்கு அனுப்ப சொல்லி நினைவு படுத்தியவள் சமைக்க சென்று விட்டாள். ஆனந்த் சாப்பிட்டு முடிக்கவும் தருண் எழுந்து கொண்டான். தத்தி தந்தி நடக்கும் மகனை ஆசையாக பார்த்தான். இங்கிருந்து செல்லும் போது நடக்க ஆரம்பித்திருக்கவில்லை குழந்தை

அப்பாவை கண்டதும் ஓடி வந்து, கால் தடுக்கி குப்புற விழுந்து விட்டு சத்தமாக அழுதான். மகனை அள்ளி வாரி அணைத்துக் கொண்டவன் கண்களில் கண்ணீர். வேகமாக ஓடி வந்த தேனும் அவனது நிலை கண்டு விட்டு ஒரு நொடி அதிர்ந்தாள்

பின், “போதும் அழற புள்ளைய சமாதானம் செய்யாம என்ன செய்றீங்கஅவ்ளோ பாசம்னா இவனை நினைவு வச்சுகிட்டாவது ஒழுங்கா இருந்திருக்கணும். இப்போ இவனுக்கும் சேர்ந்துதான் கஷ்டம்என்றாள் தேன்

மனைவியை பாவமாக பார்த்தவன் மகனோடு அறைக்கு சென்று விட்டான்

சமையல் முடித்து நேரமாகி விட்டதால் அப்பாவை அழைத்தாள். அவரும் வந்து விட்டார். ஆனந்த் உறங்கியிருக்கவில்லை. தருணோடு நேரம் செலவிட்டு கொண்டிருந்தான்

மகள் மூலமாக ஆனந்த் வேலைக்கு செல்வதை அவரும் அறிந்து கொண்டார்

தருண் கூட இருந்தா அவரால தூங்கவே முடியாதும்மா, போ அவனை தூக்கிட்டு வந்து என்கிட்ட விடுஎன அவர் சொல்ல, அவளும் அப்படியே செய்தாள்

மாமனாரிடம் வந்து மரியாதையாக இரண்டு நிமிடங்கள் பேசிய ஆனந்த், உறங்க செல்வதாக சொல்லி சென்று விட்டான்

மதியம் மூன்றாகியும் ஆனந்த் எழுந்து கொள்ளவில்லை. மகளின் கவலையான முகத்தை கண்ட தங்கப்பன், “நைட் ஷிஃப்ட்னா அப்படித்தான் இருக்கும்மாஎன்றார்

என்னவோப்பா, எங்களுக்கு ஏன் இப்படிலாம் நடக்குதுன்னு தெரியலைப்பா. கடவுள் ரொம்பவும் சோதிக்கிறார்லப்பாஎன்றாள் தேன்

எப்ப எத கொடுக்கணும்னு சாமிக்கு நல்லாவே தெரியும்மா. ஒரு கதவ மூடினார்னா இன்னொரு ஜன்னலை திறந்து விடுவார். மூடின கதவையே பார்த்து கவலை பட்டுக்கிட்டு நின்னா ஜன்னல் திறந்திருக்கிறது கவனத்துக்கு வராமலேயே போயிடும். பணம் காசுதானே போச்சு, சம்பாதிச்சுக்கலாம். என்ன வயசு உங்களுக்கு? இன்னும் எவ்வளவோ காலம் நீண்டு போய் கெடக்குகவலைய விட்டுட்டு அடுத்து என்ன செய்யலாம்னு மட்டும்தான் யோசிக்கணும் நீங்கஎன்றார்

சோர்ந்து போகும் காலங்களில் பொருளுதவியை விட அதி முக்கியம் இப்படியான நம்பிக்கை தரும் வார்த்தைகள்தான். தேனுக்கும் அவளின் அப்பா பேசியது மிகவும் தெம்பாக இருந்தது.

மகளை ஓய்வெடுக்க சொன்னவர் பேரனை தூக்கிக் கொண்டு பூங்கா சென்று விட்டார்

நேரம் தவறி சாப்பிட்டால் ஆனந்துக்கு சரி வராது, வயிற்றுத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விடும். ஆகவே அவன் கோபமடைந்தாலும் பரவாயில்லை என அவனை எழுப்பி விட்டாள்

கோவமாக பேசா விட்டாலும் இன்னும் சற்று நேரம் உறங்கியிருப்பேன், இனி சாப்பிட்டு படுத்தாலும் உறக்கம் வராது, ஏன் எழுப்பினாய் என சொல்லிக் கொண்டேதான் எழுந்தான்

இந்த வேலை எப்பவுமே நைட் தானா?” எனக் கேட்டாள். அவன் ஆமாம் என சொல்ல, சம்பளம் எவ்வளவு என விசாரித்தாள். முன்பு அவன் வாங்கிய சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு. திகைத்து போய் விட்டாள்

ஒண்ணுமே இல்லாதத்துக்கு இது பரவாயில்லையேஎன்றான்

அந்த கம்பெனிய விட்டா சென்னைல வேற இடமே இல்லையா? வேற வேலைக்கு மெனெக்கெடுறீங்களா இல்லையா?” 

நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை கொடுத்து செட்டில் செய்தால்தான் முறைப்படி அங்கிருந்து விலகுவதற்கான சான்றுகளும் அவன் வேலையில் சேர்ந்த போது சமர்ப்பித்த அசல் சான்றிதழ்களும் திரும்பக் கிடைக்கும். அதெல்லாம் கையில் இருந்தால்தானே வேறு வேலை தேட முடியும்? அத்தோடு இப்போதெல்லாம் புதிதாக சேரும் நிறுவனத்தில் பழைய நிறுவனத்திற்கு அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நடத்தை பற்றியும் விசாரித்துக் கொள்கிறார்கள்.

ஆனந்த் விளக்கம் சொல்ல, “ஏன் உங்களை பத்தி தப்பா சொல்லி கொடுத்திடுவாங்களா?” என பயத்தோடு கேட்டாள்

இல்லை தேனு, அது நான் பேசி சரி பண்ணிட்டேன். பணத்த கட்டினா மட்டும் போதும்”  என அவன் சொல்லவும் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என கேட்டாள்

அவன் தயக்கமும் சங்கடமுமாக பார்த்தான்

அதானே, நீங்க இத சொன்னாதான் நான் ஆச்சர்ய படணும்இடக்காக சொல்லி அங்கிருந்து அகன்று செல்ல நடந்தாள்

நில்லு தேனுஎன்றவன் சின்ன குரலில் தொகையை சொன்னான்

அனிச்சையாக நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தாள். இன்றைய சூழலில் அவனுக்கு மிகப் பெரும் சுமை. எப்படி முடியும் என்பது போல பார்த்தாள்

என்ன செய்ய போறேன்னு தெரியலை தேனு. ஆனா நீ என்கிட்ட வந்ததும் புது நம்பிக்கை வந்திருக்கு. இவ்ளோ நடந்தும் எம்மேல ஏதோ நம்பிக்கை வச்சுத்தானே வந்திருப்ப? அத காப்பாத்தியே ஆகணும்னு தோணுதுஎன்றான்

அவள் பயம் நிறைந்த பார்வையோடு ஏதோ சொல்லப் போனாள். அவளுக்கு முன் முந்தியவன், “நீ நினைக்கிற மாதிரி வேற எந்த சிக்கலும் இழுத்து விட்டுக்க மாட்டேன்எது செய்தாலும் உனக்கு தெரிஞ்சுதான் செய்வேன்என்றான்

என்ன செய்ய போறீங்க?” என அவள் கேட்டதற்கு, தெரியவில்லை என்பது போல கைகளை விரித்து, தோள்களை குலுக்கினான்

சோர்ந்து தெரிந்தவனை சாப்பிட வைத்தாள். இனி உறக்கம் வராது என அவன் சொன்ன போதும் விடவில்லை. வெறுமனே கண்களை மூடிக் கொண்டாவது படுத்திருங்கள் என சொல்லி விட்டாள். அவனும் அவள் சொல்படியே கேட்டான்

மனம் திறந்து எதையுமே சொல்லாதவன் சமாளிக்க முடியாத கஷ்டம் என வருகின்ற போதுதான் வெளிப்படையாக பேசுகிறான் என எதிர்மறையாக நினைக்காமல், இனி மெல்ல மெல்ல மாறி விடுவான் என நேர்மறையாகவே நினைத்தாள் தேன்முல்லை

அடுத்து இந்த பொருளாதார சிக்கலை சமாளிக்க தன்னால் என்ன பங்களிப்பை கொடுக்க முடியும் என சிந்திக்க ஆரம்பித்து விட்டாள்