பூத்தது ஆனந்த முல்லை -6

அத்தியாயம் -6

மருத்துவமனையின் பக்கத்திலிருந்த தேநீர் கடையில் ஆனந்தை கண்ட தங்கப்பனுக்கு பகீர் என்றானது. பயணக் களைப்பிலும் வருத்தம் தேங்கிய விழிகளுமாக தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். 

தங்கப்பன் இரவிலேயே வீட்டுக்கு சென்றிருந்தவர் காலை உணவு எடுத்துக் கொண்டு வந்திருந்தார். மாப்பிள்ளையின் செயல்களில் அவருக்கு ஏக மன வருத்தம், பெருத்த கோவம் என்ற போதும் வயதுக்கே உரிய பக்குவமும் அனுபவமும் அவரை நிதானமாக செயல்பட வைத்தது. 

“வாங்க, எப்போ வந்தீங்க?” எனக் கேட்டுக் கொண்டே ஆனந்தை நோக்கி  சென்றார். 

கோவ முகம் காட்டாத மாமனார் அப்போதைக்கு அவனுக்கு பெரிய ஆறுதல்தான். 

“நாலு மணி போல வந்தேன் மாமா. தேனு எப்படி இருக்கா? நல்லாகிட்டாதானே?” என பரிதவிப்போடு கேட்டான்.

 “இப்ப நல்லாருக்கா, ஊசிலேயே சரி ஆகிடும்னு சொன்னாங்க, வீட்டுக்கு கூட்டிட்டு போகவும் சொல்லிட்டாங்க, திடீர்னு அம்முக்கு மயக்கம், அப்புறம் அட்மிட் பண்ண சொல்லிட்டாங்க. இன்னிக்கு வீட்டுக்கு அனுப்பிடுவாங்களா இருக்கும். இதுல சரி ஆகலைனா ஆபரேஷன் பண்ற மாதிரி இருக்குமாம்” என விவரம் சொன்னார் தங்கப்பன். 

“டாக்டர் எப்ப வருவாங்க மாமா, சிசேரியன் ஆன இடத்துலேயே இன்னும் வலி இருக்குன்னு சொல்வா, இன்ஜெக்ஷன்லேயே சரி பண்ண சொல்லி கேட்கலாம்” என்றான் ஆனந்த். 

பத்து மணிக்கு மேல்தான் மருத்துவர் வருவார் என்ற தங்கப்பன், “வாங்க, தேனை பார்த்திட்டு வீட்டுக்கு போய் குளிச்சிட்டு கிளம்பி வரலாம்” என்றார். 

“தருண் வீட்ல இருக்கானா மாமா, தேனு கூட இல்லாம அழாம இருந்துகிட்டானா?” என விசாரித்தான். 

“திவ்யா கூட நல்லா ஒட்டிக்கிட்டான். இப்பவே டைம் எட்டாக போகுது, நாலு மணிக்கு வந்த நீங்க இன்னுமா தேனை பார்க்க போகலை?” என கேட்டார். 

பதில் தராத அவனது முகம் இறுகிப் போனது. 

அவரின் மனம் நெருட, “என்னாச்சு மாப்ள?” எனக் கேட்டார். 

“விடுங்க மாமா, எனக்கு தேனை பார்க்கணும், அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க, அப்படியே இங்க ஹாஸ்பிடல் செலவு என்னாச்சுன்னு சொல்லுங்க, நான் கட்டிடுறேன்” என்றான். 

எதுவோ நடந்திருக்கிறது என புரிய, “நடந்து என்னன்னு சொல்லுங்க மாப்ள” என்றார். 

“எனக்கு தேனை பார்க்கணும் மாமா” என அழுத்தமாக சொன்னான். 

தேன் இருந்த அறைக்கு அவனை அழைத்து சென்றார். ராஜ்குமாரும் கலைவாணியும் ஆனந்தை கோவமாக பார்த்தனர். 

“எதுக்குப்பா இந்தாள இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என இரைந்தான் ராஜ்குமார். 

“ஆளு கீளுன்னு என்னடா பேச்சு இது?” என அதட்டிய தங்கப்பன், மகனை அங்கிருந்து வெளியே அனுப்பி வைத்தார். முறைத்த மனைவியையும் கையோடு  அழைத்து சென்று விட்டார். 

குளியலறையில் இருந்து வெளிவந்தாள் தேன்முல்லை. 

“தேனு…” என அழைத்தான். 

கணவனை எதிர்பார்த்திராதவள் அதிர்ந்து, பின் சில நொடிகளிலேயே தெளிந்து, அவனிடம் எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள். 

“இப்போ பரவாயில்லையா தேனு?” எனக் கேட்டான். அவள் பதில் பேசவே இல்லை. அவளது கையை தொட்டான், உதறி விட்டாள். 

“நான் செஞ்சது தப்புதான், இப்படிலாம் ஆகும்னு நினைக்கவே இல்லை தேனு, ஆன்சைட் போனா  எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்னு நினைச்சேன். எல்லாம் போய் உனக்கும் முடியாம போய்… ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குதுன்னே தெரியலை தேனு” என்றான். 

“தெரியாது எப்படி தெரியும்? எல்லாத்திலேயும் சரியா இருக்குற உங்களுக்கு ஏன் இப்படிலாம் நடக்குதுன்னு காரணம் தெரியாதுதான். இப்ப எதுக்காக வந்திருக்கீங்க, என் நிம்மதிய குலைக்கவா?” என சத்தமிடாமல் கோவப்பட்டாள். 

என்ன தேனு, இப்ப உன்னை பார்க்காம எப்படி இருக்க முடியும் என்னால? ஒரு தப்பு நடந்து போச்சுங்கிறதால இந்த அளவுக்கு வெறுப்ப காட்டணுமா? உன் நகை அத்தனையையும் கண்டிப்பா உன்கிட்ட கொடுத்திடுவேன், வேற வேலையும் வாங்கிடுவேன்” என்றான். 

ஏமாற்றம் சுமந்த விழிகளோடு அவனை பார்த்தாள். “நகையும் வேலையும் மட்டும்தான் தெரியுதுல உங்களுக்கு? நான் யாருங்க உங்களுக்கு? எவ்ளோ எவ்ளோ பெரிய விஷயத்தை எல்லாம் என்கிட்டருந்து மறைச்சிருக்கீங்க?” என வேதனையோடு கேட்டாள். 

“சொல்லி என்னாக போகுது தேனு? நீயும் சேர்ந்து கஷ்ட படணும், இல்லைனா என் வீட்டு ஆளுங்கள இன்னும் பேசுவ. எப்படியும் சரி பண்ணிடலாம்னு நம்பிக்கையா இருந்திட்டேன், எனக்கு நேரம் சரியில்லை. என்ன கஷ்டம்னாலும் உன்னையும் தருணையும் நல்லாத்தானே வச்சுக்கிட்டேன்?” 

“வேளா வேளைக்கு சோறு தண்ணி கொடுத்து ட்ரெஸ் வாங்கி கொடுத்திட்டா நல்லா வச்சிருக்கிறதா நினைப்பா உங்களுக்கு? கூடவே இருந்திருக்கேன், உங்கள ஒட்டிக்கிட்டு படுத்து தூங்கியிருக்கேன். உங்க ரகசியங்கள் எதுவுமே தெரிஞ்சுக்காம… ம்ஹூம்ம்… அதெப்படிங்க நமக்குள்ள ரகசியம் இருக்கலாம்?” என அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான். 

“எதையுமே சொல்லாத உங்களை நினைச்சா பயமா வருது, ஆமாம் பயமாதான் வருது. என்ன நடந்தாலும் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ பொய் சொல்றாரோன்னு பயந்து பயந்து என் நிம்மதியே போக போகுது. மூணு வருஷ வாழ்க்கைல மனசளவுல உங்களை நான் நெருங்கவே இல்லை, அந்நியோன்யம் இல்லை நமக்குள்ள, எதையும் என்கிட்ட சொல்லலாம்னு எம்மேல துளி நம்பிக்கை கூட வரலை உங்களுக்கு”

“நீயா ஏதாவது பேசாத தேனு. என் கஷ்டத்தையெல்லாம் உங்கிட்ட சொல்லி எதுக்கு உன்னை வருத்த படுத்தணும்னுதான்…”

“நிறுத்துங்க, இப்ப நகை வீட்டு பத்திரம் விஷயத்துல மட்டும்தான்னா பரவாயில்லைங்க, நீங்க எப்பவுமே அப்படித்தான். ஏன் உங்க வீட்டாளுங்க பத்தி உங்களுக்கு மனசுல எந்த குறையுமே இல்லையா? எம்மேல குறையா எதுவுமே தோணியிருக்காதா? வேலைல கஷ்டங்கள் பிரச்சனைகள் இருந்திருக்காதா, எத சொல்கியிருக்கீங்க என்கிட்ட? வறுமை இல்லை பிரச்சனை, கூலி வேலை செய்றவன் கூட எல்லாத்தையும் அவன் பொண்டாட்டிகிட்ட சொல்லுவான், கஷ்ட பட்டாலும் சேர்ந்து கஷ்ட படுவாங்க. நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அந்த கூலிகாரன் பொண்டாட்டி வாழ்க்கை எவ்வளவோ தேவலாம்” தேனு ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே சிஸ்டர் வந்தார். 

இரத்த அழுத்தம் பரிசோதத்து விட்டு, “நேத்து லோ ப்ரஷரா இருந்தது, இப்போ இவ்ளோ கூடிப் போயிருக்கு” எனக் கேட்டார். 

தேன் எதுவும் சொல்லாமல் இருக்க, “கொஞ்சம் எமோஷானல் ஆகிட்டா சிஸ்டர், அதான்…” என்றான் ஆனந்த். 

“மனச அமைதியா வச்சுக்கோங்கமா” என சொல்லி வெளியேறி விட்டார் சிஸ்டர். 

“நாம அப்புறம் பேசலாம், நான் தருண் பார்த்திட்டு ஊருக்கு கிளம்புறேன். உடம்பு சரியானதும் உன்னையும் அழைச்சிட்டு போறேன்” என்றவன் அவளை நெருங்கி அவளின் தோளை மென்மையாக பிடித்து, “எதுவும் யோசிக்காத, எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன். உனக்கு இப்படி ஆகிடுச்சேன்னும் வருத்த படாத, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கால் பண்ணி பேசு  உடம்ப பார்த்துக்க” என்றான். 

தோளை குலுக்கி அவனது கையை அகற்றி விட்டாள். 

அவன் அறையை விட்டு வெளியேறிய பின் கலைவாணி மகளுக்கு உணவு கொடுத்தார். 

ராஜ்குமார் ஆனந்தை கேவலமாக பேசியது மட்டும்தான் தங்கப்பனுக்கு தெரியவில்லை, மற்றவற்றை மனைவி மூலமாக  அறிந்திருந்தார். அவருக்கு சங்கடமாகி போனது. 

இனி தான் பார்த்துக் கொள்வதாக கூறி மகனை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். 

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அம்முவோட வாழ்க்கைய கெடுக்க பார்க்குறீங்க. இப்ப ஹாஸ்பிடல் செலவு பண்ணுங்கன்னு அவர்கிட்ட கேட்ருக்கியே, தலை பிரசவத்துக்கு ஆனதையே அவர் கொடுத்தார்தானே, அப்புறமும் தருணுக்கு தடுப்பூசி வரை அவர்கிட்ட பணம் கேட்டு வாங்க சொன்னதானே? அடுத்த வார்த்தை பேசாம கொடுத்தார்தானே? இப்பவும் என்ன செலவோ நான் பணம் கொடுக்கிறேன்னுதான் சொல்றார். எனக்கு மட்டும் கோவம் இல்லையா? அதுக்காக இப்படியா மரியாதை குறைவா பேசுவாங்க நடப்பாங்க?” என மனைவியை கண்டித்தார் தங்கப்பன். 

“இன்னும் மரியாதை கொடுத்து திருச்சிக்கே ராஜா ஆக்குங்க அவரை, யார் வேணாம்னது?” என இடக்காக பேசி விட்டு அகன்றிருந்தார் கலைவாணி.

யாருடனும் பேசாமல் வெளி வராண்டாவில்  ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான் ஆனந்த். வீட்டுக்கு போய் குளித்து வேறு ஆடை மாற்றி வாருங்கள் என எவ்வளவோ தங்கப்பன் சொல்லியும் மறுத்து விட்டான். 

மருத்துவர் வந்ததும் அவரிடம் பேசினான்.  நான்கைந்து நாட்களில் சோதனை செய்து பார்த்தால் அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என சொல்லி விடலாம், பெரும்பாலும் இதிலேயே சரியாகி விடும், இனி பயப்பட தேவையில்லை என்றார் மருத்துவர். 

மாமனாரிடம் இரண்டு கட்டு பணத்தை எடுத்துக் கொடுத்தான். 

“எவ்ளோ செலவாச்சுன்னு தெரியல மாமா, முப்பதாயிரம் இருக்கு, இதுக்கும் மேல ஆச்சுன்னா சொல்லுங்க” என்றான். 

“அவங்க ஏதோ பேசிட்டாங்கன்னு இப்படி செய்யாதீங்க மாப்ள, முதல்ல அங்க உள்ள பிரச்சனை எல்லாத்தையும் சரி பண்ணுங்க. தேனு கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருக்கட்டும். வேற வேலை கிடைச்சதும் அனுப்பி வைக்கிறேன், பணத்த நீங்களே வச்சுக்கோங்க” என சொல்லி பணத்தை திருப்பி தர முயன்றார் தங்கப்பன். 

அவன் வாங்கிக் கொள்ள மாட்டேன் என உறுதியாக இருந்து விட்டான். 

“இது நீங்க வாங்கிக்கிட்டீங்கன்னா இப்போதைக்கு என் மனசு எவ்வளவோ நிம்மதி ஆகும் மாமா, ப்ளீஸ் மாமா” என்றான் அவன். 

“இவ்ளோ செலவு ஆகல மாப்ள, பத்தாயிரம் போதும்” எனவும் சொல்லிப் பார்த்தார். 

“இருக்கட்டும் மாமா, இனியும் ஹாஸ்பிடல் வரணும்தானே, தேவைப்படும்” என அவன் சொல்ல, மனமே இல்லாமல் பணத்தை பெற்றுக் கொண்டார் தங்கப்பன். 

மாப்பிள்ளையிடம் நிறைய பேச வேண்டும், எடுத்து சொல்ல வேண்டும், அறிவுரை வழங்க வேண்டும், மகளின் வாழ்க்கை விஷயத்தில் சில உத்திரவாதங்கள் பெற்றுக் கொண்டுதான் மகளை அனுப்புவது பற்றி சிந்திக்க வேண்டும் என அவரிடம் நிறைய திட்டங்கள் இருந்ததுதான். இன்றைய நிலையில் அவனது அயர்ந்து விட்ட தோற்றத்திலும் தன் குடும்பத்தினர் அவமதித்து விட்டதில் ஏற்பட்ட பச்சாதாபத்திலும் வேறு எதுவுமே பேசவில்லை அவர். 

மாலை போல மகனை வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பூங்காவுக்கு அழைத்து வந்து காட்டும் படி கேட்டுக் கொண்டான். அவனது மனநிலை புரிந்தவராக மறுப்பு சொல்லாமல் ஒப்புக் கொண்டார் தங்கப்பன். 

மதியம் போலவே வீடு வந்து விட்டாள் தேன்முல்லை. ஆனந்த் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்த காத்திருப்போர் ஹாலில் படுத்துக் கொண்டான். அங்கேயே குளித்து அதே ஆடையை அணிந்து கொண்டவன் மகனை பார்க்க கிளம்பினான். 

பிறந்தநாள் பரிசாக மகனுக்கு எதுவுமே கொடுக்கவில்லையே, வாங்கிய டெடி கூட சென்னை வீட்டில் இருந்தது. கடைக்கு சென்றவன் பிடித்ததாக பொம்மைகள் கையில்  எடுத்து விட்டு அதன் விலையை கண்டு மீண்டும் வைத்து விட்டான். 

பார்த்து பார்த்து செலவு செய்யாததன் விளைவாக இன்று பிள்ளைக்கு நல்லதாக பொம்மை வாங்க கூட எத்தனை யோசிக்க வேண்டியிருக்கிறது என மனம் நொந்து கொண்டான். 

இடையிடையே மனைவி பேசியது வேறு நெருடலை கொடுத்தது. 

கனத்த மனதுடனே விலை குறைவாக பொம்மை வாங்கியவன், மகனுக்கு பிடித்த இனிப்பு வகைகளும் வாங்கிக் கொண்டு பூங்காவுக்கு சென்றான். 

வீட்டினரிடம் எதுவும் சொல்லாமலே பேரனை தூக்கிக் கொண்டு வந்திருந்தார் தங்கப்பன். மகனை இறுக அணைத்து உச்சி முகர்ந்து ஆசையாக கொஞ்சினான். 

ஒரு மணி நேரம் மகனுடன்தான் நேரம் செலவிட்டான். மன பாரத்துக்கு அருமருந்தாகி போனான் தருண். 

கிளம்பப் போகும் தருணத்தில் தருண் அப்பாவை கட்டிக் கொண்டு தாத்தாவிடம் செல்ல மறுத்தான். ஆனந்துக்கும் மனம் கலங்கிப் போனது. 

“வேடிக்கை காட்டினா அஞ்சு நிமிஷத்துல நார்மல் ஆகிடுவான், கொடுத்திட்டு கிளம்புங்க மாப்ள” என தங்கப்பன் சொன்னார். 

நகை மற்றும் வேலை பற்றி அவரிடம் விளக்கம் சொல்ல நினைக்கிறான், வார்த்தைகள் ஏதும் வர மறுக்கிறது. குற்ற உணர்வும் வேதனையுமாக அவரை பார்த்தான். 

அவருக்கு இன்னும் சங்கடமாகி போனது. 

“இனி நடக்கிறதையாவது சரியா செய்யுங்க மாப்ள, ஊருக்கு போய் சேர்ந்ததும் கால் பண்ணுங்க” என சொல்லி பேரனை வாங்கிக் கொண்டார். 

ஆனந்த் புறப்பட்டு விட்டான். 

பள்ளிக்கால தோழன் ஒருவனிடமிருந்து கடனாக பெற்றுதான் மனைவியின் சிகிச்சைக்கான செலவை கொடுத்திருந்தான். 

“அடுத்த மாதம் கண்டிப்பாக கொடுத்து விடுடா” என அந்த நண்பனிடமிருந்து குறுந்தகவல் வந்தது.

சரி என டைப் செய்யும் போதே, ஒரு மாத கால கெடுவில் எப்படி திருப்பிக் கொடுப்பது என்கிற கவலையும் அவனை சேர்ந்து கொண்டது. 

வலிக்க வலிக்க வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தான் ஆனந்த்.